Sunday, February 08, 2009

"உந்தீ பற!” - 14

"உந்தீ பற!” - 14


"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை
விடுக்கவே யோர்வழி யுந்தீபற
வீயு மதனுரு வுந்தீபற. [14]

ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர்வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீ பற.


உள்வழி இழுத்து மூச்சுக் காற்றினை
உள்ளே ஒடுக்கிட உள்ளம் ஒடுங்கும்

அலைந்திடும் உளத்தை வெளியில் விடாது
வளியெனும் காற்றினை உள்ளில் ஒடுக்கி

உளத்தை ஒடுக்கிட எண்ணம் அழியும்
இதனைப் பயின்று முறையொடு செய்யின்

உள்ளம் என்பதின் உருவம் அழியும்
உருவெதுமில்லா உளமது ஒளிரும்.

முந்தைய சில பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தையும், அதனால் விளையக்கூடிய பயனையும் பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.

பிராணயாமம் என்னும் மூச்சுக் காற்றினை உள்ளடக்கிச் செய்யப்படும் பயிற்சி, ஒரு வலையில் சிக்கி அடைபடும் பறவைகள்போல இருவிதச் செயல்களைச் செய்யும் மனத்தை, ஒடுக்கியும், அழித்தும் உதவி செய்கிறது எனப் பார்த்தோம்.

பிராணாயாமம் சாதகனின் மனத்தை அமைதிப் படுத்துகிறது.
இவ்வாறு அமைதியான மனது பரம்பொருளை நினைக்கத் துவங்குகிறது.
அப்போது ‘அறியாமை’ மெதுவாக விலகத் தொடங்குகிறது.

இந்தப் ‘பரம்பொருள்’ என்பது நாம் நினைக்கும் ஒரு ”உரு” அல்ல!

‘உரு’ மீதான அன்பு, ஈடுபாடு, விருப்பு, வெறுப்புகளை உள்ளில் உண்டாக்கி மனத்தை அலை பாயச் செய்கிறது.
என்னுடையதே சிறந்தது, மற்றது அதைவிடவும் தாழ்ந்தது என நினத்து, நினைவுகளை ஒருதலையாக மாற்றுகிறது.

”உண்மைப் பரம்பொருள்” என்பது ஒன்றே! அது இரண்டாக மாறுவதில்லை. இதுவே எல்லாவற்றினுள்ளும் இருக்கிறது என்பதாலேயே, எந்த ஒரு உருவும் நிலை பெறுகிறது என்பதை ‘அமைதி அடைந்த மனம்’ அறிய இந்த பயிற்சி உதவுகிறது.

நாம் வளர,வளர, நம் எண்ணங்களும் மாறுபடுகின்றன.
நேற்று உண்மை என நம்பியதை இன்று அதே மனம் ஏற்க மறுக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கே உணர்ந்திருக்கிறோம்.
ஏற்க மறுக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் சில கேள்விகளாவது வந்திருக்கும்!

இப்படி மனம் மாறிக் கொண்டிருந்தாலும், இதையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருப்பது ‘நான்’என்னும் ஒன்றுதான் என்பதை நாம் புரிய,அறிய மறுக்கிறோம்.

ஏனென்றால், இதை ‘புரிய’, ‘அறிய’ முடியாமல் நாம் எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருப்பதாலேயே!

முறையான குருவின் துணையுடன் இந்த ‘பிராணாயாமம்’ என்னும் மூச்சை உள்ளடக்கலை, அல்லது கவனித்தலைச் செய்யத் துவங்கும் சாதகன் இப்படி அலை பாய்வதில்லை.

‘நான்’ என்கிற ஒன்றில்லாமல் இதெல்லாம் நிகழ்வதில்லை என்பது புரிய வருகிறது அவருக்கு!

‘எல்லாவற்றையும் கடந்த “நான்”’ என்பதே எல்லா அறியாமையையும், எண்ண அலைகளையும் அழிக்கிறது என்பது இப்போது அவருக்குப் புரிய, அறிய வருகிறது.

“உரு” அழிகிறது!
‘உண்மை” புரிகிறது!
”பரம்பொருள்” எதுவென ஒருவாறாகத் தெரிய வருகிறது.

[முன்னமே சொல்லியபடி, இனி வரும் பாடல்கள் சற்று ஆழமாகச் செல்வதினால், இது பற்றிய விளக்கங்களும் அதிகமாவதைத் தவிர்க்க இயலவில்லை. நான் சொல்வதில், அல்லது சொல்ல வந்ததில் ஏதேனும் குறைகள் இருக்கக் கூடும். நான் புரிந்துகொண்ட அளவிலேயே இவற்றைச் சொல்ல முனைந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் சொல்ல
விழைகிறேன்.நன்றி.]


“தெளிவு குருவின் திருமேனி காண்டல்”
**************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP