Wednesday, October 11, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 7 "விருந்தோம்பல்"

"அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று சொன்னதால் சற்று அதிகமான ஆர்வத்துடனேயே மன்னாரின் இடம் நோக்கி விரைந்தேன்.

"தெர்யுமே! கரீட்டா வந்துருவேன்னு! அண்ணாத்தையிப் பத்தின்னு சொன்னதும் பறந்தடிச்சுகினு வந்த்ருவேன்னு இப்பத்தான் கபாலி கையில சொல்லிக்கினே இருந்தேன். சொல்லி வாய் மூடல. நீ வந்து குதிக்கறே" என்று சொல்லி பெரிதாக சிரித்தான் மயிலை மன்னார்.

"ஆமாம் மன்னார்! ஒரு வாரம் போனதே தெரியலை. அண்ணி வேற ஊருக்கு போயிருந்தாங்க. அதனால நானும் என் அண்ணாவும் மட்டும்தான். ரொம்ப ஜாலியா இருந்தது. அண்ணியும் இருந்திருந்தா இன்னும் நல்லாவே இருந்திருக்கும். ஆனா, இது போல எங்க அண்ணனை எனக்கு எனக்கே மட்டும்னு கிடைச்சது ஒரு மறக்க முடியாத அனுபவம். ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றேன் நான்.

"இப்ப நீ சந்தோசமா இருக்கேன்ற. சரி, அது எதுனால? நீ போன நேரத்துல உங்கூட மூஞ்சி காட்டாம, இல்ல, சண்டை போட்டுக்கினு இருந்தாரு ஒங்க அண்ணாத்தைன்னு வையி. ஒனக்கு இம்மாம் சந்தோசம் வந்திருக்குமோ? நீ விருந்தாளியாப் போயிருக்கே. ஒன்னை எப்படி ஒபசரிக்கணும்னு ஒங்க அண்ணாத்தைக்குத் தெரிந்சிருக்கு. அதான் சரியான ரூட்டு. இத்தப் பத்தி, இதுமாரி, வந்தவங்களை ஒபசரிக்கறது இம்மாம் முக்கியம்னு நம்ம ஐயன் சொல்லியிருக்காரு. இன்னிக்கு அதான் பாடம். எளுதிக்கோ!" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 9. "விருந்தோம்பல்"

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. " [81]

இப்ப நீ கண்ணாலம் கட்டிக்கினு, பொண்டாட்டி புள்ளைங்களோட சம்பாரிச்சு சொத்து சேத்துக்கினு, குடியும் குடுத்தனமா இருக்கேன்னா அது எதுக்காவ? இன்னும் நாலு நகை வாங்கிப் பொட்டில வெச்சுப் பூட்றதுக்கா? இல்லை ஃபாஷனா ரெண்டு காரு வாங்கி ஊரு சுத்தறதுக்கா? அத்தெல்லாம் வோணான்ல நானு. அத்த வுட முக்கியமா நீ இன்னா பண்ணணும்னா, ஒன்னை மதிச்சு, ஒன் வூடு தேடி வர்றாங்க பாரு விருந்தாளிங்க, அவுங்களை நல்லபடியா கெவனிச்சு, வேண்டியத்தப் பண்ணி அவுங்களை சந்தோசமா பாத்துக்கறதுக்குத்தான் இதெல்லாம்.
இதுல முக்கியமா கெவனிக்க வேண்டியது ஒண்ணு இருக்கு. ரொம்ப கில்லாடியா "இல் வாள்வது எல்லாம்"னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு. நீ ஒர்த்தன் பண்ணா மட்டும் போறாது. மொத்தக் குடும்பமும் இதுல ஒனக்கு ஒதவியா இருக்கணும். அப்போதான் இது சொகப்படும். நீ மட்டும் நல்லா கவனிச்சுகினு , ஒன் பொண்டாட்டி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கினு இல்ல ஒன் புள்ளைங்க மாடிய வுட்டு கீளேயே எறங்கி வராம அவங்களோட பேச்சு கொடுக்காம இருந்துச்சுன்னு வையி, மவனே, அத்தினியும் ஃபணால்தான். அல்லாருமா சேர்ந்து இதுல ஒத்துளைக்கணும்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று." [82]

வந்திருக்கற விருந்தாளி ஹால்ல ஒக்காந்து டீ.வீ பாத்துக்கினு இருக்காங்க. அப்போ உள்ளேர்ந்து ஒரு கொரலு. 'என்னாங்க! ஒங்களத்தானே! ஒரு நிமிசம் இங்க உள்ளே வந்துட்டுப் போங்க'ன்னு ஒன் பொஞ்சாதி கூப்புடுது. நீ இன்னான்னு உள்ளே போறே. 'சூடா கொஞ்சம் கேசரி கெளறியிருக்கேன். ஒங்களுக்கும் பசங்களுக்கும் மட்டும். இங்கியே சாப்புட்டுட்டு போங்க. அவுகளுக்கெல்லம் பத்தாது'ன்றாங்க. நீ இன்னா பண்ணுவே! 'என் செல்லம்! ஒன்னியப் போல ஆரு என்னை கவனிப்பாங்கன்னு' கொஞ்சிட்டு அப்பிடியே லபக்குன்னு முளுங்கிட்டு பூனை மாரி டீவீ பாக்க போயிருவியா? கூடாது. விருந்தாளியா வந்தவங்க வெளில காத்துருக்கையில, நீ மட்டும் துண்றது அது தேவலோவத்து அமிர்தமே ஆனாலும் சாப்டாதே. அத்தவுட நாத்தம் புடிச்ச வேலை வேற ஒண்ணும் இல்லை.

"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. " [83]

இப்பிடி அன்னாடம் ஒங்கிட்ட வர்ற விருந்தாளிங்களை நல்லபடியா கவனிச்சேன்னா, ஒன்னோட வாள்க்கை என்னிக்கும் கெடாம இருக்கும். ஒரு கஸ்டமும் வரது ஒனக்கு. தர்மத்தோட பெருமை அது.

"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்." [84]

சந்தோசமா சிரிச்சுக்கினு வர்ற விருந்தாளியை 'வாங்க வாங்க'ன்னு கூப்ட்டு ஒபசரிக்கறவன் வூட்ல லெச்சுமி சாமி வாயெல்லாம் பல்லா சிரிச்சுக்கினு வந்து ஒக்கார்ந்துருவாளாம். ' செய்யாள்'னா தாமரை மேல இருக்கற லெச்சுமி. நம்ம ஐயன் ஒரு நாத்திகன், சாமி பூதம்லாம் கெடையதுன்னு சொல்றங்களே , அவுங்களுக்கெல்லாம் நான் எடுத்து வுடற பாட்டூ இத்தான். இன்னும் சிலது இருக்கு அத்த அப்பால பாக்கலாம். சரியா. அந்த லெச்சுமி ஒண்ணும் சும்மா உம்முன்னு வராதாம். நல்லா சிரிச்சு, மனசெல்லாம் சந்தோசமா வந்து குந்திக்குவாளாம்!

"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். " [85]

மிச்சில்னா, மீந்ததுலன்னு அர்த்தம். மிசையறதுன்னா சாப்டறது. வந்தவங்களை நல்லா வயிறார சாப்பிடப் பண்ணி, அவுங்கள்லாம் சாப்ட்டு முடிச்சபறம், மீந்ததை ஒரு குடும்பம் சாப்ட்டுச்சுன்னா, அவன் நெலத்துல வெதை போடாமலே பயிர்லாம் விளையுமாம்.
இது கொஞ்சம் அறிவுக்கு பொருந்தாத மாரித்தான், ஓவராத்தான் தோணும். அல்லாம் ஒண்ணுக்கு பத்தா மொளைக்கும்னு வெச்சுக்கணும் நாம. ஒண்ணுமே போடலேன்னாலும் மொளைக்கும்னா, ஒண்ணு போட்டேன்னா? பத்தா மொளைக்கும். ஒனக்கு ஒண்ணு போறுமா? பத்து வோணுமா? மூளை இருந்தா புரிஞ்சுக்கோ!

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு." [86]

வந்தவங்களையெல்லாம் நல்ல ஒபசரிச்சிட்டு, அவுங்கள்லாம் போனதும், கதவ அடைச்சு தாப்பா போட்டுட்டு, ரெஸ்டு எடுக்கப் போவாம, அடுத்தப்பல ஆராச்சும் வர்றாங்களன்னு காத்திருக்கறவனை பாத்து மேலே இருக்கற சாமிங்க எல்லாம் சந்தோசப்படும். ஒன் நேரம் முடிஞ்சு நீ அங்கே போறப்ப, வாய்யா நல்ல மனுசான்னு ஒனக்கு கம்பளம் விரிச்சு வரவேப்பாங்க.
தோ! இப்ப நீ இங்க வந்துருக்கே. எங்கூட பேசிக்கிட்டே 4 மசால்வடையும் டீயும்...... அத்தாம்ப்பா இங்க கெடைக்கும்,....... அத்த துண்ற! அப்பால போயிருவே. சரி இங்கனே நின்னா நமக்கு காசு பூடும்னு, நான் நவுர மாட்டேன். அட்தாப்ல, சிங்காரம் வருவான். அவனும் துண்ணுட்டுப் பூடுவான். என்னிக்காவது காசு கொடுங்கடா பாவிங்களான்னு ஒரு நா கேட்ருப்பேனா? ஒடனே பாக்கெட்டைத் தடவாதே ! ஒன் துட்டை நீயே வெச்சுக்கோ. இப்படித்தானே ஒங்க அண்ணாத்தை கெவனிச்சுக்கிட்டாரு? உண்டா இல்லையா சொல்லு? உண்டா! சரி, சரி அட்த்ததுக்கு போலாம்.

"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்." [87]

இத்த, 'இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை'ன்னு பதம் பிரிக்கணும். அப்ப்டீன்னா இன்ன அர்த்தம்? இதுக்கு இன்னா அளவு பலன் கிடைக்கும்னு சொல்ல ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு பொருளு.
இன்னா சொல்றார்னா, நீ ஒர்த்தருக்கு இன்னா அளவுக்கு பண்றியோ, அத்தப் பொருத்துத்தான் அததோட பலன் ஆயிப் போவும்.சுமாரா கெவனிச்சியா, அதுக்கு ஒரு மாரி, நல்லா கெவனிக்கறியா அதுக்கு இன்னோரு மாரியா புண்ணியம் சேரும்.

"பரிந்தோம்பிப் பற்றேற்றம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தவர். " [88]

வந்து போற விருந்தாளிகளைல்லாம் ஏனோதானோன்னு ஒபசரிச்ச்சு அனுப்பிட்டு, பொட்டியில பணத்தைப் பூட்டி வெச்சு இன்னா ஆவப்போவுது? கட்சீக்காலத்துல, இம்மாம் பணமும் ஒன்னியப் பாத்து சிரிக்கும். இன்னாடா பிரயோசனம் என்னாலன்னு. ஐயோ, இவ்னுக்கு இது செஞ்சிருக்கலாமே அவனை அங்க கூட்டிக்கினு போயிருக்கலாமேன்னு வருத்தப் படறதுதான் மிஞ்சும்.

"உடைமையும் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. " [89]

பணத்தை வெச்சுக்கிட்டு விருந்தாளிங்களுக்கு ஒண்ணும் செய்யாதவன் தான் ஒலகத்துலியே பெரிய ஏளைன்றாரு ஐயன். இது எவன் பண்ற வேலை? புத்தியில்லதவந்தான் பண்ணுவான். இப்பிடி ஒர்த்த்னைப் பார்த்தேன்னா, அவன் ஏளை மட்டுமில்ல, முட்டாளும் கூடன்னு புரிஞ்சுக்கோ.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. " [90]

அனிச்சம்பூன்னு ஒண்ணு இருக்காம். நீயோ நானோ பாத்தது கூட இல்லை. இந்த டயனோசரஸ் மாரி காணாமப் பூடுச்சுன்னு நெனைக்கிறேன். ஐயன் பார்த்திருக்காரு. சொல்றாரு. அந்தப் பூவை மோந்து பார்த்தாலே வாடிப் பூடுமாம்.
அத்தப் போல, உனக்குப் புடிக்கலேங்க்றதுக்காவ, வந்துருக்கற விருந்தாளியப் பார்த்து கேலியா ஒரு லுக்கு வுட்டேன்னு வையி; ஒடனே அவன் மூஞ்சில்லாம் சுருங்கி, ஒடம்பு குன்னிப் பூடுவான்.
அதனால சிரிச்ச மூஞ்சியா அவனை வரவேற்கணும்.

"அவ்ளோதான். இப்ப இதுமாரி ஒனக்கு ஒங்க அண்ணாத்தை வூட்லியும் ஒங்க ராசா, கீதாப்பொண்ணு வூட்லியும் நடக்கக் கொண்டித்தானே இப்ப சிரிச்சுக்கினு இருக்கே நீயி ! அதான்யா பெர்ய மன்சனுக்கு அளகு! ஒரு தேங்ஸ் சொல்லிட்டேல்ல நீ அவங்களுக்கெல்லாம்?" என உரிமையுடன் கேட்டு விட்டு,

"சரி, சரி, நான் மேல 86-ல சொன்னேன்றதுக்காவ ரோஷமா போயிறாத. நாயர்ட சொல்லியாச்சு" என்றவாறு சிரித்தான் மயிலை மன்னார்.

நானும்தான்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP