Wednesday, April 08, 2009

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"
குடமுழுக்கில் குளிர்கின்றாய்! - அங்கே
எரிதணலில் சாகின்றார்
இதுவுனக்கு முறையாமோ - இன்னும்
ஏனிந்த மௌனனமம்மா?

சுதந்திரமே கேட்டிருந்தார் - பல
கொடுமைகளைத் தாங்கிநின்றார்
இன்றங்கே மடிகின்றார் - இன்னும்
பாராமுகம் ஏனம்மா?

கோபுரங்கள் நீ காண - அவரோ
இடமின்றித் துடிக்கின்றார்
கொடுமையிதைக் கண்டபின்னும் - உனக்கு
கோபமிங்கு ஏனம்மா?

நீயங்கு சிரித்திருக்க - அடியே
யாமிங்கு வேகின்றோம்
அடுதுயரை நீக்காமல் - அடியுனக்கு
எம்மேல் ஏனித்தனை வெறுப்போ?

புதுவண்ணப் பூச்சுடனே நின்
கோவிலிங்கே மிளிர்ந்திருக்க
எதுவென்று தெரியாமல் - அங்கே
தவிப்பவரைப் பாரம்மா!

அழகான மணவாளன் -உடன்
அறிவான பிள்ளைரெண்டு
ஆனந்தமாய் நீயிருக்க - நாங்கள்
அழுவதுவும் கேட்கிலையோ?

நின்வண்ணம் கண்டிடத்தான் - இங்குனக்கு
எத்தனைபேர் பாதுகாப்பு
நாதியின்றிச் சாவோரை - நீயின்னும்
பாராததும் ஏனம்மா?

அலங்கரம் கொண்டிங்கு - நீயின்று
அழகாக ஜொலிக்கின்றாய்
அகம்பாவம் கொண்டவரால் - உன்மக்கள்
அழிகின்றார் பாரம்மா!

கதியில்லை வழியில்லை - இனியிங்கு
கடைத்தேறக் களமில்லை
எனவிங்கு ஓயமாட்டோம் - நீ
வாராமல் விடமாட்டோம்!

கொண்டாட்டம் போதுமடி - இப்போதே
எழுந்திங்கு வந்திடடி
இப்படிக்கு நீயிருந்தால் - அடியே!
இனியுன்னை விடமாட்டோம்!

குளித்தது போதுமடி - தாயே!
அழித்துவிடு பகைவர்களை
களித்தது போதுமடி - எழுந்துநீ
எம்வாழ்வில் மலர்ச்சி கொடு!

அடிமைகளாய் வாழ்ந்திடவோ - அடியே
நீயெம்மைப் பிறப்பித்தாய்
இதுவுந்தன் திருவுளமோ - மீனாளே!
சொல்லடி நீ சிவசக்தி!

எமதுரிமை எமக்குவேண்டும் - அது
இன்றே நீ தரவேண்டும்
இனிமேலும் மௌனித்தால் - என் தாயே
உனை யாம் அங்கு வந்து பார்க்கின்றோம்!:(((

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP