Friday, October 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32
31

'இந்தப் பாட்டுல வர்ற கடைசி வரிக்கு பொதுவா எல்லாரும் சொல்ற அர்த்தம் ஒண்ணு இருக்கு. அதுக்கு இன்னொரு அர்த்தமும் சொல்லலாம். அதான் இதுல ரொம்ப முக்கியம்' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.


'எனக்கும் அதைக் கேழ்க்கணும்னுதான் ஆசை' எனக் கூடச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'அப்படி என்ன அந்தக் கடைசி வரியில் இருக்கு' என நானும், நாயரும் ஆவலானோம்!


'பாட்டைப் படி' என்றதும் வேகமாகப் படித்து முடிக்கவும், மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னவுடன், அந்தக் கடைசி வரி கொஞ்சம் 'ஒரு மாதிரியாகத்தான்' இருந்தது.

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யெனவென் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


'அந்த வரிக்கு அப்பால வரலாம். இப்ப மொதல்லேர்ந்து பாப்பம்' என்ற மன்னார்,

"பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே"

'முருகனைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கணும்னு தோணுது அருணகிரியாருக்கு.


அது இன்னான்றத அடுத்தாப்பல பாக்கலாம். அதுக்கும் முன்னாடி, எதுக்காவ அப்பிடிக் கேக்கணும்னு இவுருக்குப் படுது?
பொறந்ததுலேர்ந்து இந்த நாள் வரைக்கும் தான் பட்ட அவஸ்தையையெல்லாம் நெனைச்சுப் பாக்கறாரு ஒவ்வொண்ணா !!


இதுதான் சதம், இல்லலயில்ல, இதான் நெலையானது; அட, இத்த மறந்துட்டேனே, இதுல்ல எங்கூடவே வரப்போவுதுன்னு, இன்னான்னாத்துக்கும் பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு, எல்லாம் கொஞ்ச நாளைக்கு நெசம் மாரித் தெரிஞ்சு, 'சட்'டுன்னு, ஒரு காரணமுமில்லாமியே, இல்லாங்காட்டிக்கு, வேற ஏதோ ஒண்ணு கெடைச்சுதுன்னு வெலகிப்போன, இந்தப் பாளா[ழா]ப்போன வாள்[ழ்]க்கையை நெனைக்கறாரு.


'ஒரு அரை நிமிஷ நேரங்கூட மெய்யான ஒன்னிய நெனைக்கமுடியாம, ரொம்ப, ரொம்ப மோசமான மாயைவலையில விளு[ழு]ந்து பொரளுடான்னு என்னியத் தள்ளிவுட்டியே நீ முருகா'ன்னு முருகன் மேல ஒரு கோவம் கொஞ்சம் வருது அருணையாருக்கு. அதான் 'படு மாயை'ன்னு போட்டுத் தாக்கறாரு.


நான் இன்னா தப்புத்தண்டா பண்ணினேன்னு இப்பிடி ஒரு விதிய எனக்குக் குடுத்தே நீ முருகான்னு அடுத்த வரியுல ஒரு கேள்வி கேக்கறாரு.

"தாழ்வானவை செய்தன தாம் உளவோ"ன்னு இந்த வரி பேசுது. அதுக்குள்ள ஒரு சின்ன சூட்சுமம் க்கீது! அது புரிஞ்சுட்டா, அடுத்த வரியை எப்பிடி சொல்லலாம்ன்றது சுளுவாயிரும்!


'எந்தா ஆ சூட்சுமம்?' என அவசரமாகக் கேட்டான் நாயர்.


'அவசரப்படாதே! சொல்றேன்.... எனக்குப் பட்டத!' எனத் தொடர்ந்தான் மன்னார்.


பொதுவா, இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்றவங்க அல்லாருமே,ரெண்டு, ஒண்ணு, ஒண்ணுன்னு இந்த நாலு வரியையும் பிரிச்சுப் பார்த்து,..... மொத ரெண்டு வரியுல தன்னைப் பத்திப் பொலம்பறதாவும், அடுத்த வரியுல, அப்பிடி நான் இன்னா தப்பு பண்ணினேன்னு சொல்லுன்னு கேக்கறதாவும், நாலாவது வரியுல, 'நீ நல்லா இருப்பா... எனக்கு இப்பிடிப் பண்ணினதுக்கு அப்பாலியும்'னு சொல்றதாத்தான் வியாக்கானம் பண்ணுவாங்க.


ஆனாக்காண்டிக்கு, மொத ரெண்டு வரியுல, தனக்கு நடந்ததச் சொல்லி வருத்தப்பட்டவரு, இந்த ரெண்டு வரியுலியும் முருகனோட பெருமையைச் சொல்றதாத்தான் நான் பாக்கறேன்.


'எனக்கு இதும்மாரி ஒரு மாயா வாள்[ழ்]க்கையைக் கொடுத்தியேன்னு நான் கொஞ்சம் வேகப்பட்டாலுங்கூட,..முருகா... ஒடனே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் மனசுல படுது!
எப்பவாச்சும் நீ தப்பானதுன்னு எதுனாச்சும் பண்ணியிருக்கியா? நீ பண்ணினதெல்லாமே..... ஒன்னோட மட்டுமில்ல.... ஒன்னைத் திட்டினவங்களைக்கூட நீ வாள[ழ]வைச்சிருக்கே! அதுவும் எப்பிடி? நெனைச்ச ஒடனியே வேகமாப் பறந்துவர்ற மயில்மேல குந்திக்கினு வந்து காப்பாத்தற கடவுள் நீ! …… அதான் இந்த....” தாழ்வானவை செய்தன தாம் உளவோ?”

இப்போ, இந்தக் கடைசி வரி... “வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!”

அப்பிடியாப்பட்ட நீ இனிமே என்னோட வாள்[ழ்]வாவே ஆனபின்னாடி, எனக்கு ஒரு கவலையுமில்லை முருகா!'ன்னு அருணகிரியாரு சொல்றதாத்தான் எனக்குப் படுது!

எனக்கு இன்னாமாரி கஸ்டம்லாம் நீ குடுத்திருக்கேன்னு நெனைக்கறத வுட்டுட்டு, இப்ப நீயே வந்து எனக்கு அருள் பண்ணிட்டதால, என்னோட வாள்[ழ்]வே நீதான்னு ஆயிருச்சு முருகா! இனி எனக்கு இன்னா குறை இருக்கப் போவுது'ன்னு அருணையாரு சொல்றதாத்தான் நெனைக்கறேன்.

இந்த அர்த்தத்துல இப்ப அந்த ரெண்டு வரியையும் படிச்சுப் பாரு' என்றான் மயிலை மன்னார்! '

""தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ',.... மயில் வாகனனே"

மன்னார் சொன்னதும் பொருந்தி வருவதாகத்தான் எனக்கும் பட்டது!

'ஓம் சரவணபவ மயில்வாகனா' என நாயர் சொல்லிக் கொண்டிருந்தான்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, October 14, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31
30.

'நேத்திக்கு இப்பிடித்தான்! மாமி ஒரு சாம்பார் வைச்சா! ரொம்ப திவ்யமா இருந்துது!

'என்னன்னா! எப்பிடி இருக்குன்னு சொல்ல மாட்டேங்கறேளே'ன்னா !

'அதெப்பிடிறீ சொல்றது?'ன்னு சொல்லிப் பாத்தேன்! விடலை அவ! தொடர்ந்து கேட்டுண்டே இருந்தா! எனக்குக் கோவம் வந்துடுத்து!

'இவ்ளோ நன்னாப் பண்ணிட்டு எப்பிடி இருக்குன்னு கேக்கறியே! இது நோக்கே ந்யாயமா இருக்கான்னு கத்திட்டேன்! அப்பிடியும் விடாம நச்சரிச்சா! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை!

'அதை எப்பிடிறீ என் வாயால சொல்லுவேன்! அதையெல்லாம் அவாஅவா ரசிச்சு, ருசிச்சுப் பாத்தான்னா தெரியும்! நான் சொல்லிப் புரியவைக்க முடியுமோ'ன்னு பொலம்பிட்டேன்' என ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாஸ்திரிகள் பேசினார்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

'இப்ப அதுக்கும், அநுபூதிக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப வந்து சொல்றீங்க?' எனக் கேட்டுவிட்டு,
'இப்ப அருணகிரியார் தான் அனுபவிச்சது என்னன்னு சொல்லப்போறாரா, இல்லையா, அதைச் சொல்லு மன்னார்' என்றேன் ஆவலாக!

'ஞானும் அதே சோதிச்சு!' என்றான் நாயர்!

சாஸ்திரிகளைப் பார்த்துச் சிரித்தான் மயிலை மன்னார்!

ஐயர் சொன்னது புரியலியா ஒனக்கு ? அவரும் அதையேதான் இன்னொருவிதமா சொல்லிக் காமிச்சாரு! நீ பாட்டைப் படி' என்றான் சிரித்தபடியே!

நானும் படிக்கலானேன்!

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதா
னவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப்பதுவே

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்தது தான்"

காலைக் கருக்கல்லியும், சாயங்காலத்துல மேக்கே விளறப்பவும் சூரியனைப் பாத்திருக்கியா நீ? செக்கச் செவேல்னு மானம் முச்சூடும் செவப்பை வாரி எறைச்சமாரி இருக்கும்!

கோபுரத்து மேலேர்ந்து இவுரு குதிச்சப்ப , கீளே தாங்கிப் பிடிச்சது அந்த முருகன்!

இன்னும் சாவலியான்னு கண்ணை முளி[ழி] ச்சுப் பாத்தவர்க்கு ஒரே ஆச்சரியம்!

செவ்வானம் போல செவப்பா ஒரு உருவம் இவரைத் தாங்கிக்கினு க்கீது!

ஆர்ரான்னு பாத்தா நம்ம முருகன்!

நெருப்புலேர்ந்து வந்தவர்தானே முருகன்!

அதும்மட்டுமா? இவரோட அப்பா ஆரு? நம்ம கபாலி! அவுரு இன்னா நெறம்? அவரும் செவப்புத்தான்! நேரா அவரோட நெத்திக் கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவர்தானே நம்ம கந்தன்!

அதுனால , இவரும் செவப்புக் கலர்ல ஜொலிக்கறாரு!

கையுல ஒரு வேலு!... ஞானவேலு! சக்தி வேலு! ….அதுவும் செவப்பு!

ஆகக்கூடி, மொத்தமா, அந்திவானச் செவப்பு மாரி க்கீறாராம் முருகன்!

அந்த வேலவன் இவுருக்கு ஒரு ஞானத்த சொல்லிக் குடுக்கறாரு!

இதுக்கு ஈடு இணையே கிடையாதுன்ற மாதிரி... இது எத்தோடயும் ஈடு கட்ட முடியாதுன்னு சொல்லாம சொல்லி, இவருக்கு புரிய வைக்கறாரு!

இதுவரைக்கும் இப்பிடி ஒரு சந்தோசத்தை ஒ[உ]ணர்ந்ததே இல்லைன்னு மட்டும் இவுருக்குப் புரியுது! ஆனா சொல்லத் தெரியல! .... நம்ம ஐயரு சாப்ட்ட சாம்பாருமாரி!' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

சரி, இப்ப அடுத்த வரியைப் படிப்போம்!

"அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே"

'கந்தரநுபூதி'ன்னு பேரு வைச்சிட்டோமே! இந்த அநுபூதியப் பத்தி எப்பிடியாச்சும் சொல்லணும்னு பாடிக்கினே வராரு அருணகிரி! ஆனா இன்னும் அவரால அத்தச் சொல்ல முடியல! இன்னான்னாமோ பண்ணிப் பாக்கறாரு! ம்ஹூம்.... இன்னும் ஒரு வரிகூட அவரால தெளிவா சொல்ல முடியல!

இப்ப இன்னா பண்ணலாம்னு யோசிக்கறாரு!

சரி, வுடு! இத்த வாயாலெல்லாம் சொல்லவே முடியாது! அப்பிடி சொல்றதுன்றது ஆராலியுமே ஆவாத காரியம்! இத்தயெல்லாம், அவங்கவங்களா அனுபவிச்சுப் புரிஞ்சுக்கணுமே தவர, வாயால பலான பலானதுன்னு சொல்லிக் காட்டவே முடியாது போ'ன்னு கொஞ்சம் வெறுத்துப் போயிடறாரு அருணையாரு!

இதெல்லாம் உள்ளுக்குள்ளாற ஊறிக்கினே இருக்கும்! இன்னாமோ சந்தோசமா க்கீறமாரி ஒரு ஃபீலிங் இருக்கும்! ஆனா, அத்த இது இப்பிடித்தான்னு புட்டுப் புட்டு வைக்க முடியாதுப்பான்னு சொல்லி நிப்பாட்றாரு' என்றான் மயிலை மன்னார்! '

அதேதாண்டா! பட்டினத்தார் கூட இதை ரொம்ப அழகாச் சொல்லுவார்!

"சொல்லாலே சொல்லுதற்கு சொல்லவா யில்லையடி
எல்லோருங் கண்டிருந்து இப்போ தறியார்கள்'னு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

‘எந்தா ஐயர்சாமி! ஆ சாம்பாரைப் பத்தி கொறச்சு பறையணும் நீங்க' எனச் சீண்டினான் நாயர்!

அதையெல்லாம் கொறைச்சே சொல்ல முடியாதுரா! ரொம்ப திவ்யமா இருந்துது! அவ்ளோதான் சொல்ல முடியும்; போ! வேணும்னா ஒனக்கும் தரச் சொல்றேன். சாப்ட்டுட்டு நீயே சொல்லு பார்க்கலாம்!!' என பதிலுக்கு சாம்பு சாஸ்திரிகளும் சீண்ட ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!

கந்தர் சஷ்டிப் பொழுது இன்பமாக முருகன் பெருமையில் நிறைந்து கொண்டிருந்தது!
>>>>>>
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, October 10, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- 30:

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 30
29.

'இப்பிடி ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குதேன்னு பொலம்பினதும் லேசாக் கோவம் வருது அருணகிரியாருக்கு' எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

'எதுக்குக் கோபம் வரணும்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன் மன்னார்' என்றேன் நான்.

'சொல்றேன், சொல்றேன்! அதுக்கு முன்னே நீ பாட்டைப் படி' என்றான்.

29.
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ
பொல்லே னறியா மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே


இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

ம், ... இப்ப சொல்லு. ஏன் கோபம் வருது அருணையாருக்கு? என்றேன் ஆவலுடன்!

"நீயே நெனைச்சுப் பாரு. ஒரு நல்ல அனுபவத்தைக் காமிச்சாரு கந்தன். இப்பபாட்டைப் பத்திச் சொல்லலாம்னா, சுத்தமா ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குது. இதுக்கு இன்னா காரணம்னு யோசிக்கறாரு. நெனைப்பு, மறப்பு, நல்லது, கெட்டது, மெய்யி, பொய்யின்னு பலானாது பலானதுல்லாம் ஒரு நாடகம் போல நெறைஞ்சு கெடக்கற இந்த வாள்[-ழ்]க்கையுல சிக்கிக்கிட்டு க்கீறதாலதானே, இப்பிடியில்லாம் எனக்கு நடக்குதுன்னு புரியுது அவுருக்கு!

இத்தப் பண்ணினது ஆருன்னா ... தோ.... மாருல மாலையைப் போட்டுக்கினு சிரிச்சுக்கினு க்கீறானே.... இந்த முருகந்தான்னு தெரிய வருது!

பண்றதெல்லாம் பண்ணிட்டு, கள்ளமா சிரிக்கறான் பாருன்னு ஒரு கோவம் வருது! அதே கோவத்துல இந்தப் பாட்டு வருது!' என்றான் மன்னார்.

'இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே'

இந்த 'இல்'லுன்ற வார்த்தையை ரெண்டு விதமாப் பாக்கலாம்.

இல்லை'ன்ற பொய்யான வாள்[ழ்]க்கைன்னு சொல்லலாம். இப்பிடி ஒரு மாயையுல என்னிய தூக்கிக் கடாசிட்டியே முருகா! சரி, பண்ணினதுதான் பண்ணினே, அதியும் நீதானே செஞ்சே...... அப்ப, நான் பண்ற அயு[ழு]ம்புக்குல்லாம் நீதானே காரணம்! பின்ன, எதுக்காவ என்னியத் தண்டிக்கறே முருகா? இது இன்னா நாயம்? நாந்தான் அறியாதவன்னு தெரியுமில்ல? அத்தக் கொஞ்சங்கூட நெனைப்புல வைச்சுக்காம, இன்னாமோ அல்லாமே நாந்தான் செஞ்சேன்றமாரி, எனக்கு தண்டனை குடுக்கறியே முருகா!'ன்னு சொல்றதா வைச்சுக்கலாம்.

இன்னோரு வாட்டி அந்த 'இல்'லைப் பாத்தின்னா, வீடு, பொண்ஜாதின்னும் ஒரு அர்த்தம் வரும். நாம்பாட்டுக்கு சும்மா 'தேமே'ன்னு கெடந்தவனைப் பிடிச்சு இட்டாந்து இப்பிடி ஒரு மாயாவலையுல சிக்கவைச்சுட்டு, இப்ப அதுல நான் ஏதோ அறியாம பண்ற தப்புங்களுக்கெல்லாம் என்னிய கோவிச்சுக்கறியே, பொறுத்துக்க மாட்டேன்றியே முருகா'ன்னு கேக்கறமாரியும் புரிஞ்சுக்கலாம்.

அதான் இவரோட சொல் விளையாட்டோட மகிமை! இப்ப அடுத்த வரிக்கும் இதுக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பமா?

" மல்லே புரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே"

இதுல இன்னா சொல்லிருக்காரு?

சும்மா மல்யுத்தத்துக்குப் போற ஆளோடதுமாரி க்கீற ஒன்னோட பன்னண்டு தோளுலியும் என்னோட இந்தப் பாட்டுக்களை வைச்சுப் பண்ணின பாமாலையை போட்டுகிட்டு அள[ழ]கு பாக்கற ஜோதிமாரி ஜொலிக்கற வேலவனேன்னு சொல்றாரு!

இது எப்பிடி மேலே சொன்னதோட பொருந்தும்னு யோசி!' என்று நிறுத்தினான்.

'இது தனக்கில்லை; இவனுக்கு வைச்ச பரிட்சைதான்'என்னும் சந்தோஷத்துடன், நாயரும், சாஸ்திரிகளும் என் முகத்தை ஒரு பார்வை பார்த்தார்கள்!

அவர்களது எண்ணத்தைச் சிறிதும் பொய்யாக்க விரும்பாத நான், சட்டென்று, 'அதுல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னைத் தொந்தரவு பண்ணப்போறேன் மன்னார்!' எனப் பரிதாபமாகச் சொன்னேன்!

ஒரு பெரிய சிரிப்பலை அங்கே எழுந்தது!

ஆதரவுடன் என் தோளைத் தட்டிக் கொடுத்தபடி மன்னார் தொடர்ந்தான்.
'மேலாக்கப் பார்த்தா, இது வெறும் ஒரு அலங்கார வார்த்தையாத்தான் தெரியும்.

ஆனாக்காண்டிக்கு , இது ஏதோ வரியை ரொப்பறதுக்காவப் போட்டதில்லை. இதுக்குள்ளாரையும் ஒரு அர்த்தம் இருக்கு.
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இது இப்பிடித்தான்னு சொல்லலை. ஆனா, இப்பிடியும் பாக்கலாம்னுதான்....... கேளு'

'முருகா! ஒன்னோட தோளைப் பாத்தியா? மல்லுச்சண்டை, குஸ்தியுல ஜெயிக்கற பெரிய வீரன்மாரி சும்மா 'திண்'ணுனு க்கீது! ஒனக்கு எத்தினி மாலை போட்டாலும் அது தாங்கும்போல!

ஒன்னோட அருளால, ... நீ கொடுத்த வரத்தால... நீ அடியெடுத்துக் கொடுத்துத்தான் நான் இத்தினி பாட்டுங்களை ஒம்மேல பாடித் தள்ளிக்கினு க்கீறேன். அல்லாமே நீ குடுத்த பெருமை! அத்த வைச்சுக்கினு நானும் இன்னான்னாமோ பாடறேன். அதுல்லாம் சரியா, தப்பான்னு கூடப் பாக்காம, நான் பாடுற பாட்டுங்களையெல்லாம், இன்னாமோ பெரிய மாலைங்கமாரி நீ சந்தோசமா வாங்கிக்கினு, அல்லாத்தியுமே ஒன்னோட இந்தக் கட்டுமஸ்த்தான தோளுங்க...... ஒண்ணா, ரெண்டா, பன்னண்டு தோளுங்க... மேல சிரிச்சுக்கினே வாங்கிப் போட்டுக்கறே! குத்தம், கொறை எதுவுமே பாக்காம!

அப்பிடிப் பண்ணற நீ, ஏம்ப்பா இதும்மாரி இந்த மாயையுல என்னை நீயே சிக்கவைச்சு, அதுல நான் பண்ணற குத்தத்துக்காவ, தண்டனையும் குடுக்கறே! ? இது நாயமாப் படுதா ஒனக்கு? ஞானவேலைக் கையுல 'ஜம்'முன்னு வைச்சுக்கினுக்கீறியே,' ன்னு செல்லமா ஒரு சண்டை போடறாரோன்னு படுது' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

சற்று முன்னர் சிரித்த அனைவரும் மௌனமாகி, இதன் பொருளை உணர்ந்ததுபோல், தலை கவிழ்த்து, 'ஓம் சரவணபவ' என முணுமுணுக்கத் தொடங்கினர்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP