Wednesday, March 04, 2009

”உந்தீ பற!” -- 27

”உந்தீ பற!” -- 27

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

இருக்கு மியற்கையா லீசசீ வர்க
ளொருபொரு ளேயாவ ருந்தீபற
வுபாதி யுணர்வே றுந்தீபற. [24]

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள்
ஒரு பொருளே ஆவர் உந்தீ பற
உபாதி உணர்வே வேறு உந்தீ பற.


ஈசனின் அருளால் உயிர்த்திடும் உயிர்கள்
உடலதன் மயக்கம் உணர்ந்திடும் போது

தனியென உணரும் நிலையிங்கு வரலாம்
தான் பிறர் எனவே மயக்கம் கொளலாம்

ஒருபொருள் அனைத்த்திலும் விரவியிருக்கும்
ஒருநிலை அறிந்திடின் மயக்கம் விலகும்

உணர்வின் உபாதி பிரித்தெமைக் காட்டும்
ஆயினும் இங்கே அனைவரும் ஈசரே.


நிலையான உண்மை தனியொரு நிலையில் தன்னைக் காட்டிக் கொளும்போது ஜீவன் ஆகிறது.
பொதுவில் தன்னைக் காட்டுகையில் இயற்கை/ஈசன் என ஆகிறது.

எட்டாவது பாடலில், தன்னையும், பரம்பொருளையும் பிரித்துப் பார்க்காமல் பக்தி செய்வது பற்றிச் சொல்லியிருக்கிறது.
எப்படி இரு நிலைகளுக்கிடையில், ஒற்றுமையும், அதே சமயம் வேறுபாடுகளும் இருக்க முடியும்?
இதனை இப்பாடல் விளக்கி சொல்கிறது.

தனித்தனியே இந்த உலக நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்யும் போது, ஜீவனுக்கும், ஈசனுக்கும் இடையே வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், உண்மை நிலையில் வைத்துப் பார்க்கும்போது இவை இரண்டுமே ஒன்றெனப் புரியத் துவங்கும்.

என்னதான் வலுவாக இருந்தலும், இந்த தூல உடம்புக்கு ஒரு முடிவு உண்டு. இப்படி, இந்த உடலுடன் சம்பந்தப்படும் ஜீவன், இதையே நிலையெனக் கருதி, இவ்வுடலால் கிடைக்கும் பயனை ஐம்புலன்களின் வழியே பெறத் தொடங்கி, சற்று ஆணவமும் அடைகிறது.

இயற்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல்,உலகியலோடு ஒன்ற இதற்குத் தெரியாமல், வேற்றுமைகள், ஒற்றுமைகள், பிரிவினைகள், விருப்பு வெறுப்புகள் எனப் பலவற்றாலும் அலைக்கழிக்கப்பட்டு அல்லலுறுகிறது ஜீவன்.
இதையும் தாண்டி ஒரு சில ஜீவன்கள் தம் அறிவைக் கொண்டு இதனுடன் ஒன்றும் போதும், இந்த உலகளாவிய பார்வையை அடைய முடியாமல் போகிறது.

இந்த இரு நிலைகளிலுமே, அழியக்கூடிய ஒன்றினோடு இணைத்துக் கொள்வதால் இவ்வளவுதான் முடிகிறது ஜீவனால்!

இயற்கையின்/ஈசனின் துணையுடனேதானே நாம் இயங்குகிறோம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் இவற்றைப் பெறுவது இந்த இயற்கையிடமிருந்தே!
இதை அதிகம் விளக்கத் தேவையிருக்காது என நினைக்கிறேன்.

இதன்படிப் பார்த்தால், இந்த முழுவுலகின் ஒரு துளியே தான் நாமெல்லாரும் என்பது புரியவரும்.

முன்னர் சொல்லியபடி, முழுமையான ஒரு சமுத்திரத்திலிருந்தே, அலைகள் எழும்பி, தவழ்ந்து பின்னர் மடங்குகின்றன.
ஒவ்வொரு அலைக்கும் ஒரு குறிப்பிட்ட வலு, வேகம் எல்லாம் இருந்தாலும், இந்த அலைகளின் ஆதார சுருதி சமுத்திரமே!

அப்படித்தான், நீர் என்கிற ஒன்று அனைத்துக்குமே ஆதாரமாகிறது.

இதுவே துளியாகிறது, அலையாகிறது, சமுத்திரமாகவும் ஆகிறது.
இதனையொட்டியே 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என வள்ளுவனும் பெருமை பாடிச் சென்றான்.

ஒவ்வொன்றின் தன்மையுடனும் இது சேர்கையில், துளி, அலை, கடல், சமுத்திரம் எனப் பல பெயர்களைப் பெற்றாலும், எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் இதன் ஆதாரம்.

இதுதான் ஜீவன், ஈசன்/இயற்கை என நிறுத்தப் படுகிறது.

அமெரிக்கத் தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட ஒபாமாவுக்கு இருந்தது மற்றவரைப் போலவே ஒரே ஓட்டுதான்!
தேர்தலில் பெற்ற வெற்றியின் விளைவாக, இப்போது அவர் அதிபர் ஆகிவிட்டார்!
ஒரு குடிமகனாக அரசால் ஆளப்பட்டவர், இப்போது அனைவரையும் ஆளும் அதிபர்!
இதுதான் தனியான ஒன்றுக்கும், பொதுவான் முழுமைக்கும் ஆன உதாரணம்!

ஆனால், அதிபருக்கோ...... அனைவரும் ஒன்றே!!!

இந்த நிலையில் கிடைப்பது..... இறைவனின் தரிசனம்!!
நாளை!

“தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே!”
**********************************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP