Thursday, December 28, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]" இரண்டாம் பகுதி

அடுத்த திருவெம்பாவைப் பாடல் எழுதி முடித்தாலும், இந்த 13-ம் பாடலை விட்டு மனம் இன்னும் அகல மறுக்கிறது!

என்னவொரு கவி நயம், இலக்கியநயம், தமிழ்மணம்!

உங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளாமல் அடுத்த பாடலுக்கு செல்லப் போவதில்லை!

தமிழறிந்த நல்லோர் இங்கிருக்கும் வேளையில், இதையும் கொஞ்சம் கேட்டு, எனக்கும் விடையளித்து...... ஆம்... இதற்கு நீங்கள்தான் முதலில் சொல்ல வேண்டும்!... பிறகு 14-ம் பாடலுக்கு நாளை செல்லுவோம்! சரியா!

பாடலை முதலில் மீண்டும் ஒரு முறை பார்ப்போம்!

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எங்கோனும், போன்று இசைந்த

பொங்குமடு"
வில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


முதல் 5 வரிகளில்தான் இந்த விளையாட்டை மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்!

அவற்றைக் கீழே தருகிறேன்.

ஒவ்வொருவரும் வந்து கருத்து சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

1. பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

2. செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு.

3. அங்கு அம் குருகு இனத்தால் பொங்குமடு.

4. அங்கம் குருகினத்தால் எங்கள் பிரட்டி போன்று இசைந்த பொங்குமடு.

5. அங்கு அங்கு உருகு இனத்தால், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

6. அங்கு அம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

7. பின்னும் அரவத்தால், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.


8. அங்கு அம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் பொங்குமடு.

9. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

10. தம் கண்மலம் கழுவுவார், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

[இவற்றை விளக்குவதுதான் உங்கள் வேலை! எத்தனை கற்பனைகள் விரிகின்றன எனப் பார்த்து மகிழலாம்!]

இவை அனைத்தாலும் பொங்குகின்ற பொங்கு மடுவில், இப்பெண்களும் பாய்வதால், இவர்களின், சங்குகளாலும், சிலம்புகளாலும், கொங்கைகளாலும் மேலும் இந்தப் பொங்குமடு பொங்க, அதனால் இப்புனல் பொங்க, இப்பங்கயப் பூம்புனலில் பாய்ந்தாடும் காட்சியினை சற்று கண்களை மூடிய வண்ணம் எண்ணிப்பாருங்கள்!

ஆகா! தமிழே! நீ வாழி!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP