Wednesday, February 02, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

"கந்தர் அனுபூதி" -- 4

வானோ புனல்பார் கனன்மா ருதமோ
ஞானோ தயமோ நவினான் மறையோ
யானோ மனமோ வெனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ?
பொருள் ஆவது சண்முகனே!?!?!?

போன பாட்டுல நெறையச் சொல்லிட்டதால, நொந்துபோயி ஆருமே வரலைன்னு சொன்னே!
அத்தப் பத்திக் கவலைப்படாதே!
இது ஆருக்குப் போவணுமோ, அவங்களைப் போயிச் சேரும்!
அதுக்காவ, நான் சொல்ல வந்ததச் சொல்லாம் வுடவும் மாட்டேன்!

நீ மட்டும் இதுல கவனம் வைச்சு இத்த மட்டுமே கவுனி! சரியா?' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'வரலைன்றதை மட்டுந்தான் சொன்னேனே தவிர, அதனால எனக்கு வருத்தம்னு சொல்லவே இல்லியே, மன்னார்! நீ மேலே சொல்லு ! நான் கேட்கிறேன்!' என்றேன் நான்!
'ஞானும் உண்டு' என்றான் நாயர்!
'நீ சொல்லுடா! நான் கேழ்க்கறேன்!' என்றார் சாஸ்திரிகள்!

அன்புடன் எங்க எல்லாரையும் பார்த்தவாறே மன்னார் தொடர்ந்தான்!

'இந்தப் பாட்டை முந்தின பாட்டோடையும், அடுத்த பாட்டோடையும் சேர்த்துப் படிச்சுப் பொருள் வெளங்கிக்கணும்!

சரி, இதுல இன்னா சொல்லிருக்காருன்னு பாப்பம்!

'எல்லாம் மற என்னை இழந்த நலம் சொல்லுப்பா'ன்னு போன பாட்டுல கிளிமாரி கொஞ்சிக் கேட்டாரு அருணகிரிநாதரு!
இப்ப, இந்தப் பாட்டுல, அந்த நலம் இன்னான்னு சொல்ல வராரு!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
அது ஆகாசமா? ... இல்லை!
தண்ணியா?.... அதுவுமில்ல!
அப்ப, ... இந்த பூமியா... ம்ஹூம்.. சான்ஸே இல்லை
இதுல்லாம் இல்லேன்னா,?... ஒருவேளை நெருப்பா இருக்குமோ?.... இல்லவே இல்லை!
அப்ப... நிச்சயமா அது காத்தாத்தான் இருக்கணும்! என்ன? அதுவுமில்லியா?

இப்பிடி ஒண்ணொண்ணா பஞ்ச பூதம் அஞ்சையும் இதில்ல, இதில்லன்னு தள்ளிகிட்டே பார்த்தா, ..........ஒண்ணு புரியுது எனக்கு! இந்தப் பஞ்ச பூதத்தையும் கைக்குள்ள வைச்சிருக்கறதே நீதானே! அப்போ, எப்பிடி, நீ இதுல ஒண்னுதான்னு சொல்லி ஒன்னியக் கொறைச்சுப் பேசறதுன்னு!

அப்ப, பஞ்ச பூதத்துக்கும் மேலான நீ இதுல ஒண்ணா இருக்கறதுக்குச் சான்ஸே இல்லை!

ஞானோ தயமோ நவினான் மறையோ

அப்பிடீன்னா, .... இன்னாமோ இதையெல்லாம் தாண்டின ஞானம்னு சொல்றாங்களே அதுவான்னா, ... அதுவும் இல்லை! ஏன்னா, அத்தயெல்லாந்தான் நாலு வேதமும் சொல்லுதுன்னு சொல்றாங்களே!

அப்ப,....இந்த ஞானத்தையெல்லாம் சொல்ற வேதமான்னா, அதும் இல்லியாம்! வேதத்துக்கே பொருளைச் சொன்னவன் நீன்னு தான் ஒனக்கு 'தகப்பன் சாமி'ன்னே ஒரு கதையும், பேரும் இருக்கு! அதுனால நீ அந்த வேதமும் இல்லை!

ஆஹா! இதென்னடா,' மதுரைக்கு வந்த சோதனை'ன்றமாரி கலங்கறாரு அருணையாரு!

'ஏன் இதெல்லாம் வருது? இந்த நான்ற நெனைப்பு இருக்கறதாலத்தானே? அந்த நானுன்றதுதான் இதுவோ'ன்னு ஒரு சந்தேகம் வருது! பொட்டுல அடிச்சாமாரி, அதுவும் இல்லைடான்னு ஒரு கொரலு உள்ளேர்ந்து வருது!

ஆரது கொரல் குடுக்கறதுன்னு பார்க்கறாரு!

இதுவரைக்கும் சொன்ன இத்தெல்லாம் இல்லைன்னா, ஒருவேளை இத்தயெல்லாம் நெனைக்கற இந்த மனசான்னு ஒரு கேள்வி கேக்கறாரு! அதுவும் இல்லைன்னு புரியுது! அதான் போன பாட்டுலியே சொல்ட்டாரே! இந்த மனசையெல்லாம் இள[ழ]ந்த நலத்தை எனக்குச் சொல்லுப்பான்னு கேட்டாரே... அப்ப எப்பிடி இந்த மனசான்னு நெனக்கமுடியும்னு செவுட்டுல அறைஞ்சமாரி, புரியுது!

அப்போ....... இந்த மனசும் இல்லை!

அப்ப......... எதான் இது?

இந்த 'எனை ஆண்ட இடம்'?

கோபுரத்துலேர்ந்து குதிச்சப்பக் காப்பாத்தினாரே..... ரெண்டு கையுலியும் வாங்கிக்கினு?

அதுவா? அந்த நிமிசமா?

பொம்பளை சொகமே பிரதானமின்னு திரிஞ்சவரை, 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு சொன்னாரே!... அந்த நேரமா?

இந்த எடம்ன்றதுலதன் சூட்சுமம் இருக்கு!

அதைத்தான் 'பொருளாவது'ன்னு சொல்லிக் குதிக்கறாரு இங்க!

என்னை இழந்த நலம்னு போன பாட்டுல சொன்னதோட பொருளு இதான்!

எந்த நேரத்துல, எந்த நொடியில, எந்த எடத்துல இந்த பொருளு அவருக்கு வெளங்கிச்சோ, அதான் அந்த எடம்! .... அந்த நலம்!!

இது வரைக்குமா இருந்த ஒரு சாதாரணமான ஆளு,....... 'என்னியே எடுத்துக்கோடா'ன்னு தன்னோட அக்காவே மாராப்பை விரிச்சுப்போட்டுக் சொல்ற அளவுக்குப் பொம்பளைப் பித்து புடிச்சு அலைஞ்சோமேன்னு மனசு வெறுத்துப்போயி, 'இனிமே உசுரோட இருந்து இன்னா பிரயோசனம்'னு நெனைச்சு கோவுரத்து உச்சிலேர்ந்து வுளுந்தவனை...... ரெண்டு கையால தாங்கிப் புடிச்சுக் காப்பாத்தி, 'முத்தைத்தரு'ன்னு ஒரு சொல்லையும் சொல்லி, 'இனிமே என்னியப் பத்தி மட்டும் பாடு!'ன்னு சொன்ன ஒரு அன்பான சாமியை நல்லாப் புரிஞ்சுகிட்ட அந்த நொடிதான்..'அவரை ஆண்ட எடம்'!!!!! அல்லாத்தியும் எளந்த நலம்!

அதுக்குத்தான் இந்த ரெண்டுபாட்டையுமே சேர்த்துப் படிக்கணும்னு சொன்னேன்!

அது மட்டுமில்ல!

அந்தக் கடைசி வார்த்தையுல கூட ஒரு குசும்பு பண்ணி வைச்சிருக்காரு!


சண்முகனேன்னு சொல்லி முடிக்குறாரு!

இந்த வார்த்தைய......., நேரம், நொடி, காலம் பொருளுல்லாம் எதுவுமே இல்ல! அல்லாமே நீதான் சண்முகா.....ன்னும் புரிஞ்சுக்கலாம்!

இல்லாங்காட்டிக்கு,... வானோ, புனலோ, பாரோ, கனலோ, மாருதமோ, ஞானோதயமோ, சொல்ற நாலு வேதமோ, நானோ, மனசோ..... இல்லைன்னா.... இத்தெல்லாம் இல்லாம என்னிய நீ கண்டுகிட்ட எடமோ, இதான் பொருளா ஆச்சா ஆறுமுகா?ன்னு முருகனையே கேக்கறாருன்னும் புரிஞ்சுக்கலாம்!

அடுத்த பாட்டையும் சேர்த்துப் பார்த்தியானா, எதுக்கு இப்பிடிச் சொன்னாரு.... இல்லைன்னா.... கேட்டாருன்னு புரியவரும்!' என ஒரு சஸ்பென்ஸோடு முடித்தான் மயிலை மன்னார்!

'சும்மா இதைப் படிச்சிருக்கேண்டா! ஆனா, நீ சொல்லச் சொல்ல, இதுக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கான்னு மலைச்சுப் போய் நிக்கறேன் மன்னார்!' எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

எதுவுமே சொல்லத் தெரியாமல் நானும் நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!
**********
[தொடரும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP