Sunday, August 19, 2007

"இயலாமை எனக்கில்லை"


"இயலாமை எனக்கில்லை"

உலகமெனும் மேடை இதில்
ஒவ்வொருநாளும் நடிப்பதே
வாழ்வெனப்போனபின்னர்
நான் நானென்பதை மறந்து
என் பாத்திரம் எதுவெனவுணராமல்
என்னை மட்டுமே நினைத்து
நடிக்கத் தொடங்கினால்
வழுக்கி மட்டும் போக மாட்டேன்
கல்லெறியும் கூடவே கிடைக்கும்

நேற்றைய நாடகத்தில் நானே ராஜா
கைப்பற்றிய ராணி தவிரவும்
எனைப்பற்றிய பெண்டிரும் அங்கிருந்தார்
இன்றோ எனக்குப் பிச்சைக்காரன் வேடம்
நேற்றைய நினைப்பில் நான் நடித்தால்
இன்றும் கல்லெறி நிச்சயமே.

பிரபஞ்சமெனும் ஒரு கோட்டில்
பலகோளுக்கு நடுவே நானும்
ஒரு புள்ளியாய் பால்வெளியில்
மிதக்கின்ற வேளையினில்
பரமன் ஆட்டிவிட்ட பம்பரம்போல்
புள்ளிகளில் புள்ளியாய்
சுவாசத்தில் சுவாசமாய்
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
வயதான ஓநாயாய் என் நினைவுகள்
இன்னமும் சென்றதையே எண்ணி இன்றும்
புண்ணாகிப் போன புண்ணாக்கு நிகழ்வுகளை
எண்ணியே இன்று இன்றைய சுகங்களைத்
தொலைத்தலைந்து புலம்புகிறேன்

எனைத் தாங்க எவர் வருவார் என நானும்
உனைக் கேட்டே வாழ்கின்றேன்
எனை நானே நம்பாத போது
எனைக்காக்க நீ வருவாயென
உனை நினைத்து நான் வாழுவதும்
கனியிருப்பக் காய் கவருவது போலவேயென
இன்னும் எனக்குப் புரியாததேனோ!

எனது முட்கள் நானே ஏற்றவை
நானே சூடிக் கொண்டவை
பிடித்தோ பிடிக்காமலோ
விரும்பியோ விரும்பாமலோ
சம்மதமின்றியோ சம்மதித்தோ
அந்தரங்கங்களே அந்தரத்தில் இன்று
தொந்தரவாய் ஆடுது என் முன்னே
இதிலே சுயமென்ன அசலென்ன

பிறக்குமுன்னமேயே சொல்லிவிட்டான்
ஆழ்கடலில் நீந்தித்தான் வெளிவருவாயென
தாயின் கருவில் ஒருகடலில் இருந்தேன்
வாயின் வழியே வந்தவுடன் ஓர் புதுக்கடல்
எவராலும் ஆளப்பட்ட இளமைக்காலம் ஒரு கடல்
இடையிலே சிலகாலம் காதலெனும் தீவினிலே
மீண்டும் என் வாழ்வை முடிவெடுக்க படிப்புக் கடலில்
சம்சார சாகரத்தில் மூழ்கி பல கடமைகள் ஆற்றி
இக்கடலினின்று மீண்டு பேரின்பக் கடல் நோக்கி
இப்போது செய்கின்றேன் என் பயணம்

இதற்கிடையில், என் இதயம்
நிற்கும் போது நிற்கட்டும்
என்றும் தொடரும் என் பயணம்
மூச்சிருப்பதும் நிற்பதுவும்
என்கையில் இருக்குதடா
உன்னைக் கேட்டா முடிவெடுப்பேன்
எனக்கில்லை இயலாமை!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP