Wednesday, February 25, 2009

"ரஹமான் சொல்லத் தவறினார்!”

"ரஹமான் சொல்லத் தவறினார்!”



தமிழனுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக, இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று நம் நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

விருதுகளை வாங்கும்போது, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனச் சொல்லித் தமிழையும் உலக அரங்கில் ஒலிக்கச் செய்தது எமக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது.


அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அதே சமயம், நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சொல் அவரிடமிருந்து வராததில் எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என இங்கே பதிய விழைகிறேன்.


கோடானுகோடி மக்கள் உலகெங்கிலும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணங்களில், ஒரு தமிழன் என்கிற முறையில் அவர் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் எனக் கருதுகிறேன்.

இது போன்ற உலகக் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில் துணிச்சலோடு தமது கருத்துகளைச் சொன்ன நிகழ்வுகள், ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி பல அரங்குகளில் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படி ஒரு வாய்ப்பு தமிழரான ரஹமானுக்கு வாய்த்தபோது, அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்!


எனது மனவருத்தத்தை அவரே இசையமைத்த ‘உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்துவிடு’ என்னும் மெட்டில் ஒரு பாடலாக இங்கு அளிக்கிறேன்.

நன்றி.


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

தமிழ்நாட்டில் பிறந்தாய் தமிழாலே வளர்ந்தாய்
தமிழிசைக்குப் புகழ் சேர்த்தாய்

தமிழ்நாடு தாண்டியும் புகழ்பெருகச் செய்தாய்
உலகுன்னை வாழ்த்துதின்று

நீ ஒரு வார்த்தை தமிழ்கூறி உலகோரைக் கவர்ந்தாய்
அதற்காகப் பாராட்டுவேன்

உலக அரங்கத்தில் தமிழ்மொழியின் இனிமை
உலகோரும் அறியச் செய்தாய்

ஆனால்.... ஆனால்.... நீ ஒரு வார்த்தை சொல்லமறந்தாய்
[தமிழே! இசையே!]


"எம்தமிழரங்கே விதிசெய்த சதியால்
தினந்தோறும் சாகின்றார்

உணவில்லை நீரில்லை உடுத்திடவும் உடையில்லை
இருப்பதற்கோர் இடமுமில்லை

இவர் துயர்தீர உலகோரே குரல்கொடுப்பீர்!" என்று
ஒருவார்த்தை சொல்லி யிருந்தால்

வரும் எதிர்காலம் உன்புகழை தினம் பாடும் அன்றோ
இதுவேனோ புரியவில்லை

அடடா! அடடா! நீ உன் கடமை செய்யமறந்தாய்!


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

வாழ்த்துகள் திரு ரஹமான்! மேன்மேலும் விருதுகள் உங்களை வந்து சேரட்டும்!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP