Monday, May 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16
15.
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ எண்குண பஞ்சரனே.

ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டு! மேலாக்கப் பார்த்தா, இது ஒண்ணுமே இல்லாதமாரி இருக்கும்!
ஆனா, கொஞ்சம் உள்ளே பூந்து பார்த்தியானா, இதுக்குள்ள எத்தினி சங்கிதி சொல்லியிருக்காருன்னு புரிஞ்சு, அப்பிடியே மலைச்சுப் பூடுவே!
"தேவருக்கும் குருவான முருகா, குமரா, குகா, ஒன்னிய நெனைச்சு நெனைச்சு உருகற உணர்வை என்னிக்குப்பா எனக்குத் தரப் போறே, எட்டு கொணமும் ஒனக்குள்ளியே வைச்சிருக்கற என்னோட முருகா!"ன்றதுதான் இதோட அர்த்தம்.
இத்தப் படிச்சாலே போறும்! மனசெல்லாம் உருகிப் போயிரும்!
இதுக்கும் மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு தோணும்!
ஆனாக்காண்டிக்கு, இன்னும் கொஞ்சம் ஆள[ழ]மாப் பார்த்தியானா, ஒனக்கு ரொம்ப விசயம் புரியும்!
என்ன அள[ழ]கா இந்தப் பாட்டை குடுத்திருக்காருன்னு பாரு!

முருகுன்னா, அள[ழ]கு, இளமைன்னு அல்லாருக்குமே தெரியும்.
குமரன்னா, சிவனோட புள்ளைன்னு புரியும்
குகன்னா, மனசுன்ற குகைக்குள்ல இருக்கறவன்!
இப்பிடியாப்பட்ட முருகனை நெனைச்சு உருகற நெலை எப்பப்பா தருவேன்னு சொல்லிட்டு,
அடுத்த ரெண்டு வரியுல,
சம்பந்தமே இல்லாம, 'சண்டை போடற தேவருங்களுக்கும், எல்லா ஒலகத்துக்கும் எல்லாப் பொருளையும் உணரச் செய்யும், குருவே, எட்டு கொணத்தியும் உள்ளே வைச்சிருக்கற தலைவனே'ன்னு அடுத்த ரெண்டு வரியுல சொன்னதுக்கு இன்னா அர்த்தம்?' என நிறுத்தினான் மயிலை மன்னார்.
'நான் சொல்லட்டுமா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!
'சொல்லுங்க சாமி! நீங்க எப்போ வருவீங்கன்னுதான் காத்திருந்தேன்!' என்றான் மன்னார்.


'நீ சொல்றமாதிரியெல்ல்லாம் என்னால சொல்ல முடியாதுறா மன்னார்! ஆனாலும், இப்ப சொல்லணும்னு தோணறது. அதுனால சொல்றேன்.
'இது ரொம்ப தத்வமான பாடல்!
கடைசி ரெண்டு வரியைப் பார்த்தியானா,
அதுல ஒரு எட்டு குணத்தைப் பத்தி சிலாக்கியமாச் சொல்றார்.
அதென்ன எட்டு குணம்னு கேழ்க்கிறியா?
1.அடியார்களைக் கை கொடுத்து தூக்கறது
2.கருணையோட பார்க்கறது
3.அன்புக்குக்குள்ள அகப்படறது
4.அடியார்களோட இஷ்டத்துக்கெல்லாம் ஆடறது
5.மனசுக்குள்ளே லீலைகள் செஞ்சு ஆனந்தப்பட வைக்கறது
6.நீ என்ன தப்பு பண்ணினாலும் பொறுமையா இருக்கறது
7.நீ பாக்கற எல்லாத்துலியும் தன்னைக் காட்டிக்கறது
8.ஒன்னோட சுக துக்கம் எல்லாத்துலியும் தன்னைப் பிணைச்சிண்டு, நீ படற அத்தனையுலியும் தானும் இருக்கறது
இது புரியுறது கொஞ்சம் கஷ்டம்.
இப்போ, நீ ஒரு வேதனையை அனுபவிக்கறேன்னு வைய்யி! இல்லை, ஒரு சுகத்தை அனுபவிச்சாலும், அவனும் ஒரு கொழந்தையாட்டமா, தன்னையும் இணைச்சுண்டு, தானும் அதை அனுபவிப்பான்.
இது ஒரு மஹா தத்வம்!
அப்படி அவனை அனுபவிக்க நீ விடலாமோ?
கொஞ்சம் புரிஞ்சுண்டியானா, அவன் உனக்காக எவ்வளவு கீழே இறங்கி வரான்னு தெரியும்!
அப்போ, அவனுக்காகவது நீ சரியாப் பண்ண ஆரம்பிப்பே!

இந்த எட்டு குணத்தியும் வைச்சிண்டு இருக்கறவன் தான் குரு!
அவனாலதான் தேவர்களையும் காக்க முடியும்! பூமியையும் ஆள முடியும்!
அவன் தான் முருகன்!
என்னைக்கும் இளமையா இருக்கறவன்
அவன் தான் குமரன்!
அப்பாவான சிவனோட அஞ்சு முகத்தோட கூட, ஒரு ஆறாவது முகத்தையும் கொண்டவன்!
அவன் தான் குகன்!
ஒன்னோட மனசையும் அடக்கி ஆள்றவன்!
ஆக மொத்தம் எட்டாச்சா?
இளமையான முருகன் ஒண்ணு
ஆறுமுகன் ஆறு
மனசை அடக்கற குகன் ஒண்ணு
மொத்தம் எட்டு!
இந்த எட்டையும் ஒரு கூட்டுக்குள்ளே, ஒரு பஞ்சரத்துக்குள்ளே வைச்சு அடக்க ஆள்றவனை, அந்த முருகனை, குமரனை, குகனை அன்போட சொல்லி அனவரதமும் அவனோட திருப்பெயரைச் சொல்லி என்னோட மனசு உருக சொல்ற தன்மையை எப்போப்பா எனக்கு நீ தரப் போறேன்னு கதர்றார் அருணகிரியார்! இதான் இந்தப் பாட்டு சொல்றது' எனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!
நாங்களும்.
************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, May 04, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15

14.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம்
ஐவாய் வழிச்செல் லுமவா வினையே .


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே .


இந்தப் பாட்டு க்கீதே.... ரொம்பவே சுளுவான பாட்டு. படிக்கறதுக்கும் சரி, கேக்கறதுக்கும் சரி; புரிஞ்சுக்கறதுக்குங்கூட ஈஸியான பாட்டு.
ஒரு பச்சப்புள்ளைக்குகூடப் புரியுறமாரி, இதுல தெளிவா சொல்லிடுறாரு அருணகிரியாரு.


போன பாட்டுல விட்ட எடத்துலேர்ந்து இந்தப் பாட்டைத் தொடங்கறாரு.
போன பாட்டுல இன்னா சொன்னாரு?


குருவா அந்த முருகனே வந்தாலொளி[ழி]ய, இந்த அனுபூதி சமாச்சாரமெல்லாம் புரியவே புரியாதுன்னு பயங்காட்டினாரா?.... இப்ப அதுக்கு இன்னா வளி[ழி]ன்னு காட்டுறாரு.

"கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய்"

முருகனோட காலைப் போயிக் கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, ஒனக்கு கெதிமோட்சம்னு சொல்றாரு.
நீயாப் போயிப் பிடிச்சுக்கறதுன்றது அவ்ளோ சாதாரணமான சமாச்சாரம் இல்ல. அது நடக்கவே நடக்காது.
அவரா குருவா வந்தாத்தான் உண்டுன்னு போன பாட்டுல சொன்னதுமாரி, அவரா வந்து தன்னோட காலைக் காமிச்சு, 'இந்தா, கெட்டியா பிடிச்சுக்கோ'ன்னு சொல்லணும்! அப்பத்தான் இது நடக்கும்.

அதென்ன கைவாய் கதிர்வேல் முருகன்?
முருகன் தெரியும்!
கதிர்வேல் முருகனைக் கூட ஒருமாரி 'குன்ஸா' தெரியும்னு சொல்லலாம். சூரியனோட கதிருமாரி வர்ற வேலுன்னு!
ஆனா, 'கைவாய்'னா?
கையுலதான் முருகன் அந்த கதிர்வேலை வைச்சிருப்பாரு. வாய் எங்கேருந்து வந்திச்சு, இந்த எடத்துலன்னு ஒரு டவுட்டு வரும்.

இந்த எடத்துலதான் அருணகிரியாரு கொஞ்சம் தமிளோ[ழோ]ட வெள்ளாடறாரு.
அடுத்த மூணு வரிங்கள்லியும், உய்வாய், மெய்வாய், ஐவாய்னு போட்டதால, இந்த எடத்துல கொஞ்சம் இலக்கணத்தைச் சேர்த்து, 'கைவாய்'னு போட்டிருக்காரு.

'வாய்'னா இந்த எடத்துல நாம சாப்புடற வாயி இல்லை. பொருந்தறதுன்னு ஒரு அர்த்தம் க்கீது. கையுல பொருந்தி நிக்கற கதிர்வேலுன்னு சொல்றாரு.
சின்ன வயசுல நம்ம வாத்தியாரு நம்மளையெல்லாம் முட்டிபோட வைச்சு எலக்கனம்லா சொல்லிக் குடுத்தாரே... நெனைப்பு க்கீதா? ஒனக்கு எங்கே இருக்கப் போவுது? ஒனக்குத்தான் அது எப்பவுமே தகராறாச்சே' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!


'சரி, சரி, இப்ப எதுக்கு அதெல்லாம் சொல்லிக்கிட்டு? நீ மேலே சொல்லு' என்றேன் அவசர அவசரமாக. நாயர் என்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

'ஆமாண்டா! இவனைப் பத்தித்தான் நன்னாவே தெரியுமே. நீ மேல சொல்லு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

அதுக்கில்ல சாமி. இந்த ஏளா[ழா]ம் வேத்துமைன்னு சொல்லுவாங்களே, இன்னாது அது?.... 'இல், இடம், கண்'ணுன்னு. அதோட இந்த வாயும் பொருந்தும். அதுக்குத்தான் சொல்லவந்தேன்'

'அட! இதுலியும் 'வாய்' 'பொருந்துதே' என அவனது சிலேடையை ரசித்தார் சாஸ்திரிகள்.

'அப்ப, 'கைவாய்'னா, கையுல பொருந்தி க்கீற வேலுன்னு அர்த்தம், சரியா?' என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

'கையுல வேலைப் பிடிச்சுக்கினு வந்து ஒன்னெதுத்தாப்புல வந்து நிக்கறப்ப, 'டபக்'குன்னு அவரோட காலைப் பிடிச்சுக்கோ! அதான் நீ பொளை[ழை]க்கறதுக்கான வளி[ழி]'ன்னு மொத ரெண்டு வரியுல சொன்னவரு, எப்ப, எத்தப் பண்ணினா இந்தமாரி நடக்கும்னு மேல சொல்றாரு.

"மனனே ஒழிவாய் மெய்வாய் விழிநாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே ஒழிவாய்"

மொதக் காரியமா இந்த மனசைத் தொலைக்கணும்னு சொல்லிட்டு, அது எப்பிடித் தொலைக்கறதுன்னு பின்னாடியே சொல்லிட்றாரு.
மனசை ஒளி[ழி]க்கறதுன்றது சாமான்யப்பட்ட வேலை இல்ல. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, இல்லை, தொன்னைக்கு நெய்யி ஆதாரமான்றமாரி, இந்த மனசும், நம்மளோட அஞ்சு பொறிங்களும்....கண்ணு, வாயி, மூக்கு, காது, ஒடம்புன்ற அஞ்சும்.... மொதல்ல தொலையணும். இந்த அஞ்சும் சேர்த்துப் படுத்துற பாடு க்கீதே, தாங்க முடியாது! மனசுதான் இதுங்களைத் தூண்டி விடுதா? இல்லைன்னா, இந்த அஞ்சாலியுந்தான் மனசு கெடந்து அல்லாடுதான்னு ஆருக்கும் தெரியாது.


'நாம்பாட்டுக்கு சும்மாத்தான் கெடந்தேன், இந்தக் கண்ணுதான் பாத்துச்சு, காதுதான் கேட்டுச்சுன்னு மனசு பொலம்பும்.
எங்களுக்குன்னு எது தெரியும்? அல்லாம் இந்த மனசுதான் தூண்டி விட்டுச்சுன்னு இதுங்கள்லாம் பிராது குடுக்கும்!


பார்த்தாரு அருணகிரியாரு!
ஒங்க சண்டையைத் தீர்த்துவைக்கறது என்னோட வேலை இல்லை. உங்க ரெண்டு பேரையுமே தொலைச்சாத்தான் நிம்மதி. அப்பத்தான் என்னோட முருகன் எனக்கெதுத்தாப்புல வந்து நிப்பாரு. அப்பத்தான் காலைப் பிடிச்சுக்க முடியும்னு சொல்லிக் குடுக்கறாரு. அதுக்குங்கூட முருகனோட அருள் இருந்தாத்தான் நடக்கும். 'பொறிவாயில் ஐந்தவித்தான்'னு நம்ம ஐயன் சொல்லுவாரே, அந்தாளுதான் வந்து சரிபண்ண முடியும்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.


'அட! இவ்விடயும் ஒரு வாயா?' என வாயைப் பிளந்தான் நாயர்.

' ஓ! அதுக்குத்தான் ரெண்டு தடவை 'ஒழிவாய்'னு சொல்றாரா? எனக் கேட்டேன்.

சிலபேருங்க மனசைப் பார்த்துத்தான் சொல்றாருன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கென்னமோ, இப்பிடித்தான் படுது' என்ற மன்னார், 'சரி, இனி அடுத்த பாட்டு!' என ஜரூரானான்!
**********
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP