Friday, September 19, 2008

"விநாயகர் அகவல்" -- 6

"விநாயகர் அகவல்" -- 6




[முந்தைய பதிவு]

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் [28]



இன்பம் என்பது இன்னது என்று

தன்னையுணரா மாந்தர் இங்கு

இன்பம் என்பது புலனில் என்று

நின்னை மறந்து தன்னை அழிப்பர்

கண்டதைக் கண்டு காமம் கொண்டு

கருத்தொழிபட்டு மதியை இழந்து

புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து

பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்

சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்

ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்

தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து

செயல்வழி மறந்து சிந்தை குலைவர்

இதனைவிடுத்து சிவனில் இழைந்து

அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து

நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து

அருளொளி படர பிறவிருள் அகல

கணபதி தானே தன்னுள் வந்து

மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி

இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட

புலனை அடக்கும் வழிகளைக் காட்டி



கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]


தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்

உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்

இறையருள் கூடி குருவருள் நாடி

ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்

ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து

ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க

எல்லையில்லா இன்பம் பிறக்கும்!


ஆம்!


எல்லா விளக்கும் அணைந்தபின்னே


எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!

நல்வினை தீவினை இரண்டின் பயனால்

இன்பம் துன்பம் என்பன நிகழும்

இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க

ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்

திருவருள் கூடிய பேரின்பநிலையில்

அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்

அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்

பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து



தலமொரு நான்கும் தந்தெனக் கருளி [31]


இறைவனை அடைய நால்வழி உண்டு

பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி

என்பன இவற்றின் வகைகள் ஆகும்!

சரியை கிரியை யோகம் ஞானம்

என்னும் பெயரும் இவற்றுக்குண்டு


இறைபணி செய்து அடியரைப் பணிந்து

முதல்வழிமூலம் அடைவது சாலோகம்


இறையிடம் அமைத்து அவரை வழிபடல்

திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்

மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்


பொறிகளையடக்கி புலனை அடக்கல்

அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்

யோக வழியினில் பெறுவது சாரூபம்


தன்னையிழந்து தன்னை மறந்து

இறையில் கலந்து தானே இறையும்

என்றே கசிந்து காதல் மல்கிட

கனிவது காதல் வழியெனச் சொல்வர்

கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்


இவ்வழி நான்கும் எனக்கென அருளி


ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து

அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்


ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்

மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்


ஈசன் வடிவினையே தானும் அடைந்து

ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்


ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து

ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.


மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]


உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்

ஆணவம் கன்மம் மாயை என்னும்

மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்

இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்

என்றும் அண்டாமல் அடியோடகற்றி
************************************
[தொடரும்]


அடுத்த பதிவு

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP