Friday, September 22, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து" 10 [2]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [2]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.
நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!
முதல் பகுதி படித்து இங்கு வந்தால் நலமாயிருக்கும்!
இது இரண்டாம் பாகம்.
[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!
*************************************************************

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

.****************************************************************

.................பொருள்.....................[இரண்டாம் பகுதி]

"அயனையும் புடைத்துச் சினந்து"

வெள்ளிமலையாம் கயிலயங்கிரியில்
விளையாடல் முடித்த குமரன்
இலக்கத்தொன்பான் படை புடைசூழ
ஒளிபொங்க வீற்றிக்குங்காலை ஓர்-நாள்

ஆயிரமாயிரம் தேவர் கூட்டம்
அடிபணிந்து பின்னே வர
படைப்புக் கடவுளாம் பிரமனும்
சிவனை வணங்குதற் பொருட்டு வந்தனர்

யான் எனும் செருக்கின்றி வந்த அனைவரும்
சிவனை வணங்கியபின் சுற்றிவரும் வேளையில்
ஆங்கே வருள்பொழியும் குமரனை வணங்கிச் செல்ல
"இவன் இளைஞனன்றோ"வென செருக்குற்ற பிரமன் மட்டும்

இறுமாந்து தாண்டிச் செல்ல, குமரனும் அவரது
அறியாமைச் செருக்கடக்கி, சிவனும் முருகனும் ஒன்றெனும்
உண்மையினை, அவர்க்குப் புகட்டவெண்ணி, தருக்குடன் செல்லும்
பிரமனைத் தன்பக்கல் வரச் சொல்லவும்,


இன்னும் செருக்கடங்கா பிரமரும் அலட்சியமாய் வந்து
பாவனையாய் வணங்கி நிற்க, கந்தனும் "யாவன்" என வினவ
"படைத்தலினால் யான் பிரமன்" என அச்சங்கொண்ட பிரமரும்
பதிலிறுக்க, "அங்ஙனமாயின் வேதம்வருமோ?" எனக் கேட்க,

"வேதம் பிறந்தது நம்மிடத்தில், எமக்கு வரும்" எனப்
பணிவுடன் தெரிவிக்கலும், "நன்று! அப்படியாயின் முதல் வேதமாம்
இருக்கு வேதம் பகருக" எனப் பணிக்கலும்,"ஓம்" என பிரமன் தொடங்க
இளம் பூரணனாம் எம்பிரான் நகைத்து, திருக்கரமமைத்து,

"பிரமனே! நிற்றி; நிற்றி! முதலிற் கூறிய ஓம் எனும்
பிரணவத்தின் பொருள் கூறி மேலே தொடங்கலாம்"
என்னலும், பிரம்மதேவரும் திகைத்து, கண்கள் சுழன்று
தான் எனும் ஆணவம் அடங்கி, குமரனைப் பணிந்து,

"ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளுணரேன் யான்!" என வணங்க,
"இம்முதலெழுத்தின் பொருள் அறியா நீவிர் எங்ஙனம்
படைப்புதொழிலினைச் செவ்வனே செய்திடல்ஆகும்?" எனப்பகர்ந்து
நான்குதலைகளும் குலுங்குமாறு ஓங்கி குட்டினார்!

அகம் அழியவென அங்கத்தில் தன் திருவடியால்
ஓர் உதையும் கொடுத்தனர்! பிரமனும் மூர்ச்சையாகி
நிலத்தில் வீழ்ந்து பட கருணைக் கடவுளும் தம்
பரிவாரம் அழைத்து அவரைச் சிறையினிலும் இட்டனர்!"

"உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே."

படைப்புக் கடவுள் இல்லாமையால்
உலகினில் சிருட்டித்தல் நின்றுவிட,
அதனையும் தானே செய்திடத் திருவுளம்
கொண்டு பரிவுடன் பரங்குன்றில் அமர்ந்து
"காத்தும் படைத்தும் கரந்தும்" செயல் புரிந்த
குமரன் எனும் பெயர் கொண்ட பெருமையுடையோனே!



[இதன் தொடர் நாளை வரும்!!]" [2]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP