Saturday, March 07, 2009

”உந்தீ பற!” - 29

”உந்தீ பற!” - 29

”பகவான் ரமணரின் திருவுந்தியார்”

[முந்தைய பதிவு]

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்! [ஆனால், நீளமான பதிவுதான்!:)]

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:

1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!

2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.

3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.

4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.

5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.

6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.

8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].
அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

9. அன்னிய, அன[ன்]னிய பாவம் இரண்டும் இல்லாத சத்பாவத்தில், நானும் இறையும் ஒன்று என்னும் பாவத்தில் திளைத்திருத்தலே பரபத்தி தத்துவம் எனப்படும்.

10. கன்மத்தில் தொடங்கி, பக்தி வயப்பட்டு, யோகநிலையில் ஆழ்ந்து, எல்லாம் நானே என்னும் ஞானம் வருகின்ற பரபத்தி நிலையே யோகஞானம் என்பதாம்.

இந்த இடத்தில், ஒரு மேல்விளக்கமாக, பதஞ்சலி முனிவர் அருளிய 'அஷ்டாங்க யோகம்' என்பதன் நிலைகள் சொல்லப்படுகின்றன.
யமம், நியமம், ஆஸனம்,ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகள் ஒரு சாதகன் பயிலுவான்.

11. பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றினை அடக்கும் முறையை ஒரு குருவின் துணையால் முறையாகக் கற்ற சாதகன், வலையில் சிக்கும் பறவைகள் போல தன் மனத்தையும் இதன் மூலம் ஒடுக்குவான்.

12. சக்தி [இறை, இயற்கை] என்னும் மூலத்திலிருந்து பிரிகின்ற இரு கிளைகளாக, உள்ளத்தால் உணரப்படும் அறிவும், உயிர் எனப்படும் பிராணன் வழியாகச் செய்யப்படும் செயலும் விளங்குகின்றன.

13. மனத்தின் செயல்கள் இரண்டு. உணரப்பட்ட அறிவு, உணர்ச்சிகளினால் விளையும் செயல்பாடு. மூனது ஒடுங்கி [லயம்] மீண்டும் எழும். பின்னது அழிந்துபோகும் [நாசம்].... முறையான பயிற்சிகள் செய்யும் சாதகனுக்கு.

14. பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை முறையாகச் செய்வதன் மூல, உள்ளம் ஒடுங்கி, உள்ளில் இருக்கும் எண்ணங்கள் மறைந்து, உருவம் எதுவுமில்லா ஒரு ஒளி தெரிய வரும்.

15. இப்படிச் செய்யப்பட்ட பயிற்சியின் விளைவாக உள்ளில் இருக்கும் உரு அழிந்த யோகி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

16. எண்ணங்கள் எழுப்பும் மலை போன்ற எண்ண விகாரங்கள் அனைத்தையும் விலக்கி வைத்துப் பார்க்கத் துவங்கும் யோகிக்கு உண்மையின் காட்சி உள்லில் மலரத் துவங்குகிறது.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம் முதல் சமாதி வரை முறையான ஒரு குருவின் துணையுடன் பயிலும் சாதகன்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ண ஓட்டங்களை அமிழ்த்தி, உண்மைப் பொருளை உணரச் செய்து, இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால், செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி, இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே 'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் இப்போது காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

17. மனத்தை மறக்க, அதில் எழுகின்ற உணர்வுகளைத் தாங்கும் மனம் என்ற ஒன்றே இல்லை என உணரும் யோகி தெளிவு பெறுகிறார்.

18.அது எப்படி என்றால், மனம் என ஒன்று தனியாக இல்லை; நமக்குள் எழும் எண்ணங்களே மனம் என ஒன்றாக நான் உணருகிறேன் என்பதே என அறிய வருகிறார்.

19. இது ஒரு புத்தகம்.நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்.நான் உணர்கிறேன்.இந்த உணர்வு மனம் சார்ந்தது. எனவே, நான் என்பது, இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

20. 'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து உள்ளில் தேடி அதனை அழித்திட உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய் அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

21. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்கின்ற மனம் நான் இல்லை என அறிந்து ஞானத் தேடல் இன்னமும் அதிகமாகிறது. எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைத் தேய்த்தவுடன் ஒளி பெறுவது போல! இவ்வுலகில் எனது என நினைக்கும் எதுவுமே நான் இல்லை என்னும் தெளிவு வரும்போது, நான் தெரிய ஆரம்பிக்கிறது.

22. உடல், புலன்களால் வருவதெல்லாம் ’அசத்து’ என்னும் நிலையாத ஒன்றினைக் குறிக்கும். இது ‘சத்து’ என்கின்ற உண்மைப் பொருள் இல்லை.

23. நிலையான ‘சத்’தை அறியும் போது, ‘சித்’ என்னும் தெளிவு பிறக்கிறது. இவை இரண்டும் ஒன்றே என உணர்பவர் யோகிகள்!

24. அனைத்திலும் விரவியிருப்பது ஒன்றே என உணரும் போது அனைவரும் ஈசனே என்னும் தெளிவு பிறக்கிறது.

25. இந்த உணர்வினால், உடலால் வருகின்ற உபாதிகளைத் தொலைக்கும் யோகி இப்போது தானே ஈசன் என உணர்கிறார்! “நான் கடவுள்!” “அஹம் ப்ரஹ்மாஸ்மி!”



விரிவான விளக்கங்களுக்கு பதிவுகளை மீண்டும் படித்துப் பார்க்கலாம். அல்லது, தகுந்த குருவின் அருளால் நிகழும்!
******************
“மானஸ பஜரே குரு சரணம்!”
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP