Sunday, October 28, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 26

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 26

முந்தைய பதிவு இங்கே!







அத்தியாயம் 24.


"பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்


கண்ணோட்டம் இல்லாத கண். [573]


நினைக்க, நினைக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது கந்தனுக்கு!

சின்னப் பெண்ணா இவள்!

மலைஜாதிப் பெண்ணா இவள்!

விவரம் தெரியாத இளம்பெண் என நினைத்தேனே!

எவ்வளவு தெளிவா, உணர்வில் தைக்கற மாதிரி பேசிவிட்டுப் போய்விட்டாள்!
மகிழ்வுடன் சென்று குளித்துவிட்டு, சாப்பிடப் போனான்.

காத்தான் எங்கோ வெளியில் சென்றிருந்தான்.

சிறுவன் மட்டும் தான் இருந்தான்.

'அக்கா உங்களை உக்காரச் சொல்லிச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு ஆயிருமாம். இப்பிடி உக்காருங்க. நா இதோ வந்திர்றேன்'
எனச் சொல்லி எங்கோ ஓடினான் சிறுவன்.

மலர்ந்த முகத்துடன் பொன்னி சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.

உணவு பரிமாறிக்கொண்டே அவனைப் பார்த்து சொன்னாள், 'எங்க மலைசாதி ஆம்பளைங்கள்லாம் மலைக்குள்ளே போனாங்கன்னா, திரும்பி வர
எவ்வளவு நாளாகும்னு யாராலேயும் சொல்ல முடியாது. எங்களைப் போல பொம்பளைங்களுக்கெல்லாம் இது பளகிப்போன ஒரு விசயம். போனவங்க
எல்லாருமே திரும்பி வருவாங்கன்னு சொல்ல முடியாது. இங்கே இருக்கற மரமாவோ, பாறையாவோ, இல்லை, ஓடையாவோ, அருவியாவோ
இருக்காங்கன்னு நம்பிருவோம். இந்த காட்டோட ஆத்மாவோட, காத்தோட காத்தா ஆயிருவாங்களாம்.
தெய்வாதீனமா, திரும்பி வர்றவங்களைப் பாத்து, நம்ம ஆளும் இதுபோலவே ஒருநாளைக்கி வந்திருவார்னு மத்த பொம்பளைங்கள்லாம் காத்திருப்பாங்க. அதேமாரி, நானும் இருந்திட்டுப் போறேன்.... உனக்காக. சீக்கிரமா கிளம்பி உன் லட்சியத்தைத் தேடிப் பொறப்படு. அதான் நல்லது. இன்னும் கொஞ்சம் பழம்
சாப்பிடு.'
எனச் சொல்லி குடிக்கத் தண்ணீரும் வைத்தாள் பொன்னி.

'கண்டிப்பா திரும்பி வருவேன் பொன்னி! நம்பிக்கையோட காத்திரு.' எனச் சொல்லி அவளை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தன்
குடிசைக்கு வந்தான் கந்தன்.
********************


ராபர்ட் கந்தனைப் பார்த்து, அசடு வழியச் சிரித்தான்! அவனெதிரில் ஒரு அடுப்பு மூட்டியிருந்தது! அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள் ஏதேதோ பச்சிலைகளைப் போட்டுக் காய்ச்சிக் கொண்டிருந்தான்!

'எங்கேய்யா போனே? உன்னைக் காணும்னு எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?' எனக் கோபத்துடன் கேட்டான் கந்தன்.

'அதில்லேப்பா. சித்தரைப் பார்த்தேன் தெரியுமா?' எனச் சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்.

'சித்தரைப் பார்த்தியா? என்ன சொன்னாரு? எப்படி இருந்தாரு? சொல்லு சொல்லு!' என கோபமெல்லாம் மறைந்த ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'நீ படிச்சதை முதல்ல பரிசோதிச்சுப் பாரு. புரியலைன்னா நான் வருவேன்' னு சொல்லிட்டுப் போயிட்டாரு.அப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது.
இதோட செய்முறையெல்லாம் நான் எவ்வளவோ தரம் படிச்சிருக்கேன். ஆனா, ஒரு பயத்துனால, இதுவரைக்கும் இதைப் பண்ணிப் பார்க்கணும்னு தோணவே இல்லை. இப்ப ஆரம்பிச்சுட்டேன்! ஒரு பத்து வருஷத்துக்கு
முன்னாடியே இதைச் செஞ்சிருக்கனும். அதை எனக்குக் காட்டிக்கொடுத்த அவர் நிஜமாவே சித்தர்தான்!' என ஒருவிதப் பரவசத்துடன் தான்
மூட்டிய அடுப்பில் இன்னுமொரு சுள்ளியைப் போட்டான் ராபர்ட்.

'சரிதான், இவனுக்கும் ஒரு வழி கிடைத்து விட்டது போலிருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான். இனி நாம் நம் வழியில் செல்லலாம்' என
முடிவு செய்த கந்தன், சற்று தூரம் நடந்து அங்கிருந்த ஒரு பாறையின் மீது சென்றமர்ந்தான்.

பொன்னியின் முகம் அவன் மனக்கண்ணில் வந்தது. கூடவே ஒரு சொந்தமும் தெரிந்தது.

காதல் வந்தாலே, இப்படி ஒரு உரிமையும் தானே வருமோ என எண்ணினான். சிரிப்பு வந்தது.

திடீரென ஏதோ ஒன்று தன்னைச் சுற்றி நிகழ்வதாக உணர்ந்தான். தலையை நிமிர்த்தி மேலே பார்த்தான்.

இரு கழுகுகள் உயரத்தில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று தொடர்வதாகவும் தெரியவில்லை; அதே சமயம் ஒன்றை விட்டு
ஒன்று பிரிவதாகவும் தெரியவில்லை.

இப்பறவைகள் எதையேனும் எனக்கு உணர்த்துகிறதோ என சிந்தித்தான். சொந்தம் பாராட்டாமல் அன்பு செலுத்துவது எப்படி எனக் காட்டுகிறதோ என
அவைகளையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

இரு பறவைகளில் ஒன்று சட்டென கீழ் நோக்கிப் பாய்ந்து இன்னொரு பறவையைத் தாக்குவது போல் வந்தது. அதே சமயம், ஆயுதங்கள் ஏந்திய
ஒரு கூட்டம் வருவது போல ஒரு காட்சியும் தோன்றி மறைந்தது.
ஒரு கணம் தான் அக்காட்சி தெரிந்தது. ஆனால் மனத்தில் அழுத்தமாகப்
பதிந்துவிட்டது அவனுக்கு.

'இது ஏதோ, நடக்கப் போவதின் அறிகுறி' என நிச்சயமாகப் பட்டது .

'சகுனங்களைக் கவனி' பெரியவரின் குரல் மனதுக்குள் கேட்டது.

தான் கண்டதை எவரிடமாவது சொல்லிவிட வேண்டும் என ஒரு வேகம் பிறந்தது.

விடை பெற்று வந்தபின், மீண்டும் பொன்னியைப் பர்க்க அவன் மனம் துணியவில்லை.

மலைக்கோவிலை நோக்கி நடந்தான்.

[தொடரும்]
****************************


அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP