Thursday, August 25, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25"
24

'இந்த தமாஷ் இன்னும் தொடருதா மன்னார்?' என வினவினேன்.


'முருகனோட பேசற பாணியை மாத்தலை! ஆனா, அதைக் கொஞ்சம் வேற விதமாச் சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


போன பாட்டுல கொஞ்சம் ஜாஸ்தியாவே முருகனைச் சீண்டிட்டோமோன்னு பதைக்கறாரு .
'நான் இன்னா யோக்கியம்னு முருகனைப் பத்தி அப்படி சொல்லப்போச்சு? அவுரு செய்யறதும் நான் செய்யறதும் ஒண்ணாயிருமா'ன்னு ஒரு அச்சம் வருது இவுருக்கு.


ஆத்தரத்துல இன்னால்லாம் சொல்லிட்டோம்னு நடுங்கறாரு. சொன்னது தப்புன்னு புரியுது! அதுல வந்ததுதான் இப்ப வரப்போற பாட்டு.' என மன்னார் என்னைப் பார்க்க நானும் பாடலைப் படித்துக் காட்டினேன்.


கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே
சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ
சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
போர்வே ல புரந் தரபூ பதியே.



கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே

"கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ"

'ஒன்னியப் போயி வள்ளி காலுலியே விளு[ழு]ந்து கெடக்கறியேன்னு சொன்னேனே! என்னோட யோக்கியதை இன்னான்னு தெரியுமா?


எப்பப் பாரு, பொம்பளைங்க பின்னாடியே அலைஞ்சு அவங்களோட மாருலியே வுளு[ழு]ந்து கெடக்கற நாதாறி நானு! அவங்களோட கூரான வேலு மாரி க்கீற கண்ணுங்களைப் பார்த்ததுமே அப்பிடியே மாருல சரிஞ்சிடறேன். இன்னாத்த சொல்றது?


நீ அந்த இச்சா சக்தியோட காலுல கெடந்தாலும் ஒன்னோட பக்தருங்களுக்கு அருள் பண்ண மறக்கறதே இல்லை!


ஆனா, நானு?.............
ஒன்னோட அருளு வோணும்னு நெனக்கறதுகூட இல்லை!


இதுல நான் ஒன்னோட என்னை 'கம்ப்பேர்' பண்ணி பேசிட்டேனே!ன்னு இவுருக்கு மனசுல உறுத்துது!


ஒன்னோட அருளை நெனைக்காம எப்பவும் பொண்ணுங்க பின்னாடியே சுத்தற நானும், இன்னா பண்ணினாலும் தன்னோட அடியாருங்களை மறக்காத நீயும் எப்பிடி ஒண்ணாயிற முடியும்? ஒன்னியப் போயி இன்னான்னமோ சொல்ட்டேனேன்னு இந்த வரியுல சொல்லாம சொல்றாரு!

"சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல புரந்தர பூபதியே"

வேற ஆரோட 'கம்ப்பேர்' பண்ணலாம்னு யோசிக்கறாரு. ஒடனே, இப்பிடி பொண்ணுங்களோட கண்ணுங்களை வேலுன்னு சொன்னதுமே அவுருக்கு இன்னொண்ணு ஞாபகத்துக்கு வருது!


சூரனோட கொலத்தையே பூண்டோட அறுத்த முருகனோட வேலு!


ஒரு நாளா, ரெண்டு நாளா?
பத்து நாளைக்கு ஒரு பெரிய சண்டை தொடர்ந்து போட்டு, ஒர்த்தொர்த்தரா... தாரகன், சிங்கமுகன், பானுகோபன், சூரன்னு அல்லாரையும் சேர்த்து முருகனோட வேலு அந்தச் சூரனோட கொலத்தையே அளி[ழி]ச்சுது!
ஆருக்காகன்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணையாரு!


அந்தப் புரந்தர பூபதிக்காவ, ,,.... தேவேந்திரனுக்காக, அவனைக் காப்பத்தறதுக்காவத்தான் இத்தினியும் பண்ணினாருன்னு புரியுது அவுருக்கு!


புரந்தரன்னா இந்திரன்!


மனசுல கொஞ்சம் தெம்பு வருது!


இந்திரன் பண்ணாத அட்டூளி[ழி]யமா? அவன் பாக்காத பொண்ணுங்களா?
அப்பிடி இருந்தாலுங்கூட, அவனுக்கும் அருள் பண்ணறதுக்காவ, தன்னோட வேலை வைச்சு ஒரு நீண்ட சண்டை போட்டுக் காப்பாத்தின குகன், ஏதோ ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க பின்னாடி சுத்தினதுக்காவ, நம்மளை கைவுட்டுருவாரா, இன்னான்னு ஒரு தெகிரியம் பொறக்குது!


முருகனோட தன்னை வைச்சுப் பாக்கறது தப்பு! நம்ம நெலைமைக்கு நம்மளை இப்போதைக்கு இந்திரனோட வைச்சுப் பாக்கறதுதான் சரின்னு வெளங்குது அருணையாருக்கு!


இப்பிடில்லாம் ஒண்ணை நெனைச்சு, அதைப் பாட்டுலியும் சொல்றதுக்கு இவுரை வுட்டா வேற ஆரால முடியும் சொல்லு!' என மௌனமானான் மயிலை மன்னார்!


ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்து மார்போடு அணைத்துக் கொண்டேன்!
********
[தொடரும்]

Read more...

Wednesday, August 17, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24


23.

அடுத்தாப்பல வரப்போற பாட்டு கொஞ்சம் வித்தியாசமானது! வேடிக்கையாவும் இருக்கும் பாரு!


இப்ப, ஒரு கொள[குழ]ந்தை க்கீது. அதுக்கு ஒண்ணு வோணும்னு இருக்கு! ஆனா கெடைக்கலைன்னு வைச்சுக்கோ?
அது .இன்னா பண்ணும்?


கெஞ்சிக் கேட்டுப் பாக்கும்.
கெடைக்கலைன்னா, கொஞ்சம் அளுது மொரண்டு பண்ணும்.
அப்பவும் இல்லைன்னா, ஒடனே ஆத்தரம் வரும்.
'போ! போ! நீ மட்டும் இன்னா ஒயு[ழு[ங்கோ? நீ கூட அப்பிடித்தானே பண்ணினே'ன்னு நக்கலாக் கேக்கும். இல்லியா?
அதும்மாரி, இந்தப் பாட்டுலியும் கொஞ்சம் முருகனை சீண்டிப் பாக்கறாரு!
எப்பிடின்றத பாட்டைப் படிச்சதும் சொல்றேன்' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


பாட்டைப் படித்துக் காட்டினேன். அதை கிட்டத்தட்ட அப்படியே பதம் பிரித்து என்னாலேயே திருப்பிச் சொல்லவும் முடிந்தது.

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா! குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா! குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே  [23]

'பரவாயில்லியே' என்பதுபோல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மன்னார் தொடரலானான்.


"அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ"

போன பாட்டுல சொன்ன சங்கதியேதான் இதுலியும்! ஆனா, கொஞ்சம் வேறவிதமா சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


முருகன் தன்னோட பாதத்தை இவுருக்குக் காமிச்சுட்டாரு.
பார்த்திட்டாரே தவர, இன்னும் அதைச் சரியா, கெட்டியா புடிச்சுக்கற புத்தி இன்னும் வரலியாம் இவுருக்கு!
இப்பிடி புத்திகெட்டு சீரளி[ழி]யறேனே! இது ஒனக்கே சரியா க்கீதா?ன்னு மொதல்ல கெஞ்சிப்பாக்கறாரு., அளு[ழு]தும் பாக்கறாரு.
ஒண்ணும் நடக்கலை.
இவ்ளோ அருமையா தனக்கு கெடைச்ச திருவடி காணாமலியே பூடுமோன்னு இவுருக்கு ஒரே ஆத்தாமையா வருது!


கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீகூட படிச்சுக் காமிச்சியே, 'நீயே வரினும் காணவும் நாணுவனே'ன்னு ஒரு பாட்டு.......

[நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. (எண்ணப்பதிகம் - திருவாசகம்)]

......அதாம்ப்பா,  அவுரு எளுதினதுதான்!.........

அதுல வர்றமாரி, கண்ணெதுருல கெடைச்ச திருவடியை புடிச்சுவைச்சுக்காம பூட்டோமேன்னு குமுற்ராரு!


பாட்டு வரிய நல்லாக் கெவனி.
முடியக் கெடவோன்னு ஒரு கெஞ்சல்,
மொறையோ இதுன்னு ஒரு அளுகை
அப்பால, இன்னோரு தபா, மொறையோன்னு ஆத்தரமாக் கேக்கறாரு!


அதுக்காக, இன்னாத்த சொல்லி முருகனைக் குத்திக் காமிக்கறாருன்னு பாரு.!

"வடி விக்ரம வேல் மகிபா! குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"

ஆத்தரம் கண்ணை மறைக்கறப்ப, இன்னான்னால்லாம் வாயுல வருதுன்னு பாரு.


மேலோட்டமாப் பாத்தேன்னா, இந்த வரி அப்பிடியே முருகனை உச்சாணிக்கொம்புல தூக்கிவைச்சுப் பாடறமாரி இருக்கும்.
ஆனாக்காண்டியும், அதுக்குள்ளாற, ஒரு லேசான கிண்டலும் கூடவே கீது!


'வடிவிக்ரம வேல் மகிபா'ன்றாரு.
வடிவேலுன்னா, கூர்ப்பான வேலுன்னு அர்த்தம்
விக்ரம வேல்னா வெற்றிவேல்னு அர்த்தம்
'மகி'ன்னா இந்த பூமி
மகிபன்னா பூமியை காப்பத்தற தலைவன்னு பொருளு.
கூர்ப்பான வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு இந்த ஒலகத்தையெல்லாம் காப்பாத்தற தலைவான்னு மொதல்ல சொல்றரு!


ஆச்சா?


இப்ப அடுத்தாப்புல, "குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"ன்னு வருது!


கொ[கு]றக்கொலத்துல பொறந்த மின்னல்கொடிபோல இடுப்பு க்கீற வள்ளியைக் கட்டிப்புடிச்சுக்கறவனேன்னு சொல்லலாம்.
இல்லாட்டி, கொறக்கொலத்தைக் காப்பாத்தறதுக்கின்னு அங்க கொடி போல வந்து பொறந்த வள்ளின்னும் சொல்லலாம்.


இப்பிடி சொல்லிட்டு குணபூதரனேன்னு முடிக்கறாரு.
பூ'ன்னாலும் பூமிதான், இந்த ஒலகந்தான்!
தரன்னா, காப்பாத்தற தலைவன்னு அர்த்தம்.
இப்ப கங்கையைக் காப்பாத்தி தன்னோட தலையுலியே வைச்சுக்கினு க்கீற சிவனை, கங்காதரன்னு சொல்றோமில்ல, அதும்மாரி!
அப்போ, பூதரன்னா, பூமியைக் காப்பாத்தற தலைவனேன்னு ஆவுதுல்லியா?
பூதரம்னா மலைன்னும் ஒரு பொருளு க்கீது! அதுவும் இங்க வைச்சுக்கலாம்


அப்பிடிக் கேக்கறப்ப, குண பூதரனேன்னு சொல்றாரு.
நம்மளைப் பொருத்தவரைக்குந்தான் இந்த நல்ல கொணம், கெட்ட கொணம்னு பிரிச்சுப் பாக்கறதெல்லாம்!
சாமின்னு..... கந்தசாமின்னு.... வண்ட்டா, கொணம்னு ஒண்ணு இல்லாததுதான் அவரோட கொணமே~!


அதுனால, குணபூதரன்னா, ஒரு பெரிய மலைபோல அல்லாக் கொணங்களையும் வைச்சுக்கினுக்கீற ராசாவேன்னு சொல்லலாம்.


அதான், மகிபான்னு சொல்லிட்டாரே! இன்னொரு தடவையும் பூதரனேன்னு எதுக்கு சொல்லணும்? என நான் கேட்டேன்!


தன்னோட அறிவுக்கெட்டத்தனத்தால கெடைக்காமப் போயிறுமோன்ற அச்சத்துல,
இம்மாம் பெரிய ஒலகத்தியே காப்பாத்தற நீயே, .....பெரிய வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற நீயே, .......வள்ளியம்மா காலுல வுளுந்து கெடக்கறேதானே, .....அப்ப, இந்த புத்திகெட்டவனுக்கும் கொஞ்சம் கருணை காட்டினா இன்னா கொறைஞ்சா பூடுவே'ன்னு செல்லமா சீண்டுறாரு!


இதான் இந்தப் பாட்டுக்குள்ளாற க்கீற டமாஷான சமாச்சாரம்' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

'கிட்டத்தட்ட இப்ப நீ சொல்லிண்டு வர்ற பாட்டுல்லாம் என்னமோ முருகனும், அருணகிரியாரும் நேரடியா பேசிக்கறமாதிரியே இருக்குடா மன்னார்!' எனச் சிலாகித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'ஞான் பறய நெனைச்சு! ஆசானும் அதே பறஞ்சு!' என்றான் நாயர்!


ஒன்றும் பேசாமல், பாட்டின் நயத்திலேயே ஆழ்ந்தேன் நான்!
****************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Friday, August 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 23

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 23



22

ஆர்வமிகுதியால் நானே படித்தேன். அதற்கு மயிலை மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

காளைக் குமரே சனெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே

காளைக் குமரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.

இது ஒரு விசேசமான பாட்டு! ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்லுவாங்க! அப்பிடிக் குள[ழ]ப்பியிருக்காரு!


ஒரு வகையுல பாத்தியானா, ஒரே ஒரு சமாச்சாரத்தை மட்டுமே நாலு வரியுல சொல்லியிருக்கறமாரித் தோணும்!


முருகன் வள்ளிக்காக உருகி, அதைப் பத்தி சிலாகிச்சு அருணகிரியாரு சொன்னதா இது படலாம்!


ஆனா, கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தீன்னா, இதுவரைக்கும் அப்பிடிச் சொல்லாதவரு இப்ப ஏன் இப்பிடி சொல்லணும்னும் தோணும்!


அந்த வகையுல நான் இப்ப சொல்லப் போறேன்!


எனக்கென்னவோ, எப்பவும் போலவே மொத ரெண்டு வரியுல ஒரு விசயம், அடுத்த ரெண்டு வரியுல அதுக்குப் பொருத்தமா ஒரு சமாச்சாரம்னு சொன்னதுமாரித்தான் படுது!


எப்பிடீன்னு சொல்றேன் கேளு!

"காளைக் குமரேசன் எனக்கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா"

இனிமே உசிரோட இருந்து இன்னா பிரயோசனம்னு கோபுரத்தும் மேலேர்ந்து குதிக்கறாரு இவுரு!

கீளே[ழே] விள[ழ]றப்ப இவுரு முருகனோட கையுல!

அவன் இன்னாமோ சின்னப் பையன்னே இவுருக்கு நெனைப்பு இதுவரைக்கும்!

ஆனா, இப்பத்தான் புரியுது..... அவன் ஒரு காளைன்னு!

காளை மாரி ஒரு கட்டான துடிப்பான வெடலைப்பையன்!


'சொல்லற! சும்மா இரு"ன்னு ஒரு உபதேசமும் குடுக்கறாரு.

இவுரா... 'டபால்'னு அவுரு காலுல விள[ழ]றாரு.


இப்பிடி ஒரு தவப்பயனை எனக்குக் குடுத்த அதிசயத்தை இன்னான்னு சொல்லன்னு மலைச்சுப்போயி நிக்கறாரு!


நான் முன்னாடியே பல எடத்துல சொல்லிக் காமிச்சிருக்கேனே.. இந்த 'ஆ'ன்னு வந்தா அது ஒரு ஆச்சரியக்குறின்னு... அதும்மாரித்தான் இதுல வர்ற 'ஆ'வும்.


என்னியப் பிடிச்சவன், எனக்கு தன்னோட காலைக் காமிச்சுக் கும்பிடுன்னு சொன்னவனைப் பாக்கறதுக்கு நான் இன்னா தவம் பண்ணியிருக்கணும்னு அருணகிரியாரு ஆச்சரியப்படறாரு!

சரி, இப்ப இதுக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்?

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே"

ஆரு இந்த ஆளு?
சுர பூபதி!
இந்த ஒலகத்துக்கே சக்கரவர்த்தி!

அதுவும் இன்னாமாரி ஆளு?
மேருவையே!
ஒலகத்துலியே பெரிய மலையான மேருமலைக்கு நிகரான ஆளு!

அதும் மட்டுமா?
அவுரு 'வேளு'!
'வேள்'னா ஒலகத்துலியே பெரிய ஆளுன்னு அர்த்தம்!

அவுரு இன்னா பண்ணினாரு?
'பாளைக் குழல் வள்ளி பாதம் பணியும்'


ஒரு பொம்பளை காலுல போயி விளு[ழு]ந்து கெடக்கறாராம்!

ஆரு அந்தப் பொண்ணு?
இவுருதான் எனக்கு வோணும்னு தவங்கெடந்த பொண்ணு
வள்ளி!

பாளைக்குழல் வள்ளி!
குழல்னா தலைமயிரு.
அது தென்னம்பாளைமாரி சுருள் சுருளா வளைஞ்சு கெடக்குதாம்!


வள்ளி ஆரு!
இச்சா சக்தி!
நம்மளோட ஆசையெல்லாம் இப்பிடித்தான் சுருள் சுருளா நெறைஞ்சு கெடக்குது!

அந்த இச்சையையெல்லாம் அடக்கறதுக்காக, அதோட காலைப் பிடிச்சுக் காப்பாத்தற கடவுள்தான் கந்தன்!

மலைபோல க்கீற பெரிய சக்கரவர்த்தி, தானே எறங்கிவந்து, ஆசையை அடக்கறதுக்காவ, அதோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்காறாருன்னு இந்த வரி சொல்லுது!


அதும்மாரி, கெட்ட ஆசையோடவே திரிஞ்ச என்னைக் காப்பாத்தி, ஒன்னோட காலையும் குடுத்த அதிசயத்தை இன்னான்னு நான் சொல்றதுன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கதறுராரு அருணகிரியாரு.

'என்னத்தை நான் சொல்றது? இப்படி ஒரு அர்த்தத்தைச் சொன்னியேடா மன்னார்! ' என வியந்தார் சாஸ்திரிகள்!

நாயரிடமிருந்து 'ஓம் சரவணபவ' ஓங்கி ஒலித்தது!

கபாலி கோயில் மணியோசை தூரத்திலிருந்து கேட்டது!
*****************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP