Wednesday, October 15, 2008

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"



அன்புள்ள கலைஞர் அவர்களே!

வணக்கம்.


வருபவர் வரட்டும்; வராதவர் பற்றிக் கவலை இல்லை; நம் நோக்கமும், அதன் அவசரமுமே முக்கியம் எனக் கருதி, நீங்கள் கூட்டிய
அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து மகிழ்கிறேன்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என உங்கள் தலைவர் அறிஞர் அண்ணா சொன்னதுபோலச்
செய்து காட்டியிருக்கிறீர்கள்.
அதற்காக என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.க.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன; செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

பலம் பொருந்திய ஒரு அண்டைநாடு, அங்குள்ளவர் நலனில் அக்கறையும் கொண்ட நாடு என்ற முறையில் இந்த முடிவுகளைத்தான் நம்மால் சொல்ல முடியும்.

இவை நிறைவேற்றப் பட்டாலே, ஒரு சுமுகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் வரமுடியும்.

தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல், இவை செயல்பட,உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லல்படும் நம் தமிழர் வாழ்வை மலரச் செய்யுங்கள்.

கூட்டத்திற்கு வராதவர் குறித்த உங்கள் கருத்துகள் உங்கள் அரசியல் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

எவர் இதை எப்படி விமரிசித்தாலும், தங்களுக்கு வெற்றி என சிலர் நினைத்தாலும், இது போதாது என எதிர்க்கட்சிகள் சொன்னாலும், இது அல்லற்படும் தமிழர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக அமையவேண்டும் என விரும்புகிறேன்.



அடுத்த இரு வாரங்களுக்கு, ஒட்டுமொத்தத் தமிழினமே உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும்.

உங்களை மட்டுமல்ல!

இந்த முடிவுகளை ஏற்று, மத்திய அரசு என்ன முடிவுகள் எடுக்கப் போகின்றன என்பதையும் கூடத்தான்!

பிரதமர் இன்று சொல்லியிருக்கும் கருத்துகள் சற்று நம்பிக்கையை வரவழைக்குமாறு இருக்கிறது.


இருப்பினும், கூடவே வந்த மற்ற கருத்துகள் ஏமாற்றத்தை உண்டுபண்ணியது.
நல்லது நடக்கும்.... விரைவில்..... அதுவும் தங்களது ஆட்சிக் காலத்திலேயே என உறுதியாக நம்புகிறேன்.

நீங்களும் உறுதியாக இதை நடத்திக் காட்டுங்கள்!


காலம் கடந்து இது நிகழ்ந்தாலும், இப்போதாவது நிகழ்கிறதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

அவர்கள் கனவைத் தகர்த்துவிடாதீர்கள்!


நன்றி. வணக்கம்.
*************************
[கடிதங்கள் தொடரும்!...... இரு வாரங்களுக்குப் பின்!!]

அது வரையில்.........
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP