Wednesday, March 07, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!

[இன்னும் வரும்!]

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

8 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Wednesday, March 07, 2007 11:34:00 PM  

எஸ்கே ஐயா,

ஒரு முழுமையான அருணையாரின் மனிபவள நடை முருகன் பாடலும்,

அதற்கு உங்கள் எளிய தமிழ் நடையும் சிறப்பாக இருக்கிறது.

VSK Wednesday, March 07, 2007 11:50:00 PM  

ஆமாம் கோவியாரே!
மூன்று மாதமாய் திருப்புகழ் போடாமல் மூச்சு முட்டுவது போல் ஆகிவிட்டது!

இப்போதுதான் மனம் நிம்மதியாய் இருக்கிறது.

மிக்க நன்றி[பதிவிட்டதற்கு]

இலவசக்கொத்தனார் Thursday, March 08, 2007 12:20:00 AM  

ஆஹா ரொம்ப நாளா ஆளையே காணுமே ஆத்திகத்தில் அப்படின்னு நினைச்சேன்.

இன்னைக்குப் பாடலும் விளக்கமும் கொஞ்சம் பெருசு. (விளக்கம் எழுதியவரைப் பற்றி ஒண்ணும் சொல்லலைங்க. கோபம் வேண்டாம்.)அதனால நிதானம படிச்சிட்டு வரேன். :)

G.Ragavan Thursday, March 08, 2007 3:56:00 AM  

மீண்டும் திருப்புகழ். மெத்த மகிழ்ச்சி. இது எந்தத் தலத்திற்கான திருப்புகழ்? படித்த நினைவே இல்லையே. அது சரி...எனக்குத் தெரிஞ்சதே கொஞ்சந்தான்.

இந்தப் பாடலில் முழுக்க முழுக்க மணிபவழ நடை பயின்று வந்துள்ளது.

சததளம் என்ற சொல்லை இன்னொரு இடத்தில் அருணகிரி சொல்லியே கேள்விப்பட்டிருக்கிறேன். சததள முகுளித தாமாங்குசமென்றிடும் தாளாந்தர அம்பிகை.

VSK Thursday, March 08, 2007 10:30:00 AM  

அதான் வந்துட்டோம்ல!

படித்துவிட்டு மீண்டும் வாங்க கொத்தனாரே!

:)

VSK Thursday, March 08, 2007 10:37:00 AM  

கேட்டவர்க்கு கேட்டதெல்லாம் வழங்கிடும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைக் குறித்துப் பாடிய திருப்புகழ் இது, ஜி.ரா.

மூன்று மாதம் கழித்து மீண்டும் துவங்குகையில், பிள்ளையாரைத் தொட்டு தொடங்கலாமே எனத்தான்!

அடுத்த பகுதியில் மீதி வரும்!

ஓகை Thursday, March 08, 2007 11:09:00 AM  

அருமையான விளக்கம்!

விளக்கத்தின் முற்பகுதியில் அகவலோசை துள்ளி விளையாடுகிறது.

VSK Thursday, March 08, 2007 12:39:00 PM  

அதை அறிந்தவர் சொல்கையில் அகமின்னும் மகிழ்கிறது!
நன்றி, ஓகையாரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP