Tuesday, October 16, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

முந்தைய பதிவு இங்கே!




15.


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]


ராபர்ட் பஸ்ஸில் இருந்த அனைவரையும் ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.

'நான் எப்படி! இங்கே! இந்த ஊரில்!

எங்கோ, இங்கிலாந்தில் பிறந்த நான் இப்போது இங்கே!

இந்தியாவில் பணி புரிந்து திரும்பிய என் தந்தை.

சென்னை என்னும் ஊரைப் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்.

யாரோ சித்தர்களாம்.

எல்லாம் தெரியுமாம் அவங்களுக்கு.

யாரோ ஒரு சித்தர், சிவன்மலைன்னு ஒரு ஊருலேர்ந்து வந்தாராம்.

அப்பாவைப் பார்த்ததும், திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.

'நீ எங்க ஆளு! உன் ஆத்மா எங்களுது! ஆனா உடம்பு அந்நியமாயிடுச்சு! நீ போயிடுவே! ஆனா, உன் பையன் இங்கே வருவான்,...
என்னைத் தேடி' அப்படீன்னாராம்.


டாடிக்கு ஒரே ஆச்சரியம்.

ஏன்னா, அப்போ அவருக்கு கல்யாணமே ஆவலை!

3 வருஷம் கழிச்சி இங்கிலாந்து திரும்பினதும்தான் என் மம்மி ஸ்டெல்லாவோட மேரெஜ் ஆச்சு.

அப்புறம்தான் நான் பொறந்தேன்.

கெமிஸ்ட்ரி மேஜர்.

ஆனா, படிப்புல நாட்டமே இல்லை.

கீழைநாட்டு சிந்தனைகள் பற்றி எப்படியோ ஒரு நாட்டம் பிறந்தது.

சகுனம்.... அப்படீன்னு ஒண்ணு என்னை ரொம்பவே பாதிச்சுது.

இந்த உலகத்துக்குன்னு ஒரு பொது மொழி இருக்குன்னு என் மனசு சொல்லிச்சு.

இதைத் தெரிஞ்சு பேசறவங்க இந்தியாவுல, தமிழ்நாட்டுல,
அதுவும் குறிப்பா ஏதோ ஒரு மலைல இருக்கறதா, உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்துது.

ஒரு சித்தரை எப்படியாசும் பாக்கணும்னு ஒரு உந்தல்!

எதையும் தங்கமாக்கலாமாமே அவரால!'

கிளம்பிட்டான்!

சென்னையிலே தங்கி, தமிழ் கத்துகிட்டு, சில பேர்கிட்ட ஏமாந்துபோயி, பல புத்தகங்களை வாங்கிப் படிச்சு, அப்புறம், மதுரை வந்து, அங்கே கொஞ்ச காலம் திரிஞ்சு, அலைஞ்சு, கோவிலில் பார்த்த ஒருவர் 'நீ இப்படிப் போ' என அடையாளம் சொல்ல,இப்போ இந்த பஸ்ஸுல!
----------

எத்தனை தடவை படிச்சாலும், இந்தக் கதை புரியவே மாட்டேங்குது!' சலிப்புடன் உரக்கச் சொன்னான் கந்தன்.

பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் இதைக் கேட்டான்.

'என்ன புரியல?'

'ஒண்ணுமில்ல! இந்தப் புஸ்தகத்தைச் சொன்னேன்'

சொல்லிக் கொண்டே, பையிலிருந்து இரு கற்களை எடுத்து கையில் உருட்டினான்.

ராபர்ட் துள்ளிக் குதித்தான்.... அவைகளைப் பார்த்ததும்!

'கருப்பு வெள்ளைக் கல்லுங்க!!'

கந்தன் சட்டென அவைகளை மீண்டு பைக்குள் போட்டான்.

'ஒரு ராசா எனக்கு அதைக் கொடுத்தாரு!' சற்று வீராப்பாகச் சொன்னான்.

ராபர்ட், சிரித்தபடியே தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்து கையை விரித்தான்.

அவன் கையிலும் இரண்டு கற்கள்.... ஒன்று கருப்பு, ஒன்று வெள்ளை!

'யாருன்னு சொன்னே? ராசா... யூ மீன் கிங்?' என்றான் ராபர்ட்.

'ஒரு ஆடு மேய்க்கறவனுக்கு ராசா வந்து இதைக் கொடுத்தாரான்னு நினைக்கறேல்ல நீ?'

'சேச்சே! அப்படில்லாம் இல்ல! ஆடு மேய்ச்ச ஒருத்தர்தானே பெரிய சித்தரா திருமூலர்னு வந்தாரு.
ஏன், உங்க கண்ணனே ஒரு ஆடு மேய்ச்ச இடையன் தானே!
உன்கிட்ட அவர் பேசினாருன்றதை நான் நம்பறேன்'

ஆச்சரியம் கலந்த குதூகலத்துடன் கந்தன் ராபர்ட்டைப் பார்த்தான்.

'இன்னொண்ணு கூட எனக்குத் தெரியும். உங்க ஊருல சாமி சிலை செய்யணும்னா, ஒண்ணா கருங்கல்லுல, இல்லேன்னா,
சலவைக்கல்லுலதான் செய்வீங்க! கருப்பு இல்லேன்னா வெள்ளைக் கல்லு! அதைத்தான், இந்தப் பெரியவரு ஒரு அடையாளமாச்
சொல்லிருக்காரு.' என்றான் ராபர்ட்.

'இவன் என் பக்கத்துல வந்து உக்காந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என நினைத்தான் கந்தன்.

'இப்ப நீ என் பக்கத்துல உக்காந்திருக்கறது கூட ஒரு நல்ல சகுனம் தான்!' எனக் கூவினான் ராபர்ட்!

'ஐயோ! இதையும் சொல்லிட்டானே!' என களிப்பானான் கந்தன்!

'ஆரு சொன்னாங்க உனக்கு சகுனத்தைப் பத்தி?' என ஆவலுடன் கேட்டான்.

'ஆரு சொல்லணும்? உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான். இந்த உலகத்துக்குன்னே ஒரு பொது மொழி இருக்கு. ஆனா,
எல்லாரும் அதை மறந்திட்டாங்க!
அதைத் தேடத்தான் நான் இங்கே வந்திருக்கேன். உங்க ஊருல இருக்கற சித்தருங்களுக்குத்தான் அது தெரியுமாம்.
அப்படி ஒரு ஆளைத் தேடித்தான் நான் வந்திருக்கேன்.'

'நான் ஒரு புதையலைத் தேடிகிட்டு போயிட்டு இருக்கேன்' சொன்னவுடன் அவசரப்பட்டு உளறிட்டோமே என நாக்கைக் கடித்துக் கொண்டான்.

ராபர்ட் அதைக் கவனித்தாற்போல் காட்டிக் கொள்ளாமல், தலையை நிமிர்த்தி, ஏதோ கனவுலகில் மிதந்தவாறே சொன்னான்!

'ஒரு வகையில பார்த்தா, நானும்தான்!' என்றான்.

'சித்தர்னா யாரு?' கந்தன் வினவினான்.

[தொடரும்]
***********************************




அடுத்த அத்தியாயம்

Read more...

Sunday, October 14, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 16

முந்தைய பதிவு இங்கே!

14.


"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி


மாசறு காட்சி யவர்க்கு." [352]







எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என ஒரு கணம் நினைத்தான்.

அதற்குள் அந்த ஆள் இவனைக் கடந்து சென்றான்.

சிறிது தூரம் சென்றவன், சட்டென ஒரு பொறி தட்டினாற்போல் திரும்பினான்!

இவன் மீது மோதியவன் தூரத்தில் இருந்து இவனைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தபடியே மறைந்தான்.

'அவனேதான்!' அன்று இவன் பணத்தை ரெயில்வே ஸ்டேஷனில் பறித்துச் சென்ற அதே இளைஞன்!

சட்டென கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்!

கற்கள் தட்டுப் பட்டன!

'இது ஒரு சகுனம்!

எனக்கு இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்னவெனச் சுட்டிக்காட்டும் தருணம்!

இல்லையென்றால், இத்தனை நாளாய் இல்லாமல், இன்று அவன் என் கண்ணில் படுவானேன்?

எந்த ஒரு கனவைத் தொடர்ந்து நான் இங்கே வந்தேனோ, அந்தக் கனவு கனவாகவே இதுவரை போனதற்குக் காரணமானவன்!

இன்று, அதைவிட, அதிகமாகப் பணம் என்னிடம் இருப்பதற்கு இவனே காரணம்!

அன்னிக்கு எனக்கு ஒலகம் தெரியாது.

ஆனா, இன்னிக்கு, அண்ணாச்சி தயவால, கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிஞ்சிருக்கு!

எதையும் சமாளிக்கலாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.

ஒருவேளை இதெல்லாம் வரணும்னுதான் அன்னிக்கு இவன் பணத்தை அடிச்சுகிட்டுப் போனானோ?

அப்படீன்னா இவனும் எனக்கு உதவிதான் பண்ணியிருக்கான்.

அப்படிப் பார்த்தா, நான் திரும்பவும் ஊருக்குத் போய், ஆடு மேய்க்கப் போறதுல என்ன லாபம்?

ஒன்னோட கனவை நீ தொடருன்னு சொல்றதுக்காகவே இப்ப இவன் வந்து எம்மேல மோதிட்டுப் போறானோ?'


திடீரென ஒரு புத்துணர்ச்சி பிறந்தது கந்தனுக்குள்!

மனசு சந்தோஷமாகி, லேசாத் துள்ளியது!

'நான் எப்ப வேணும்னாலும் திரும்பவும் ஆடு மேய்க்கப் போலாம். இல்லேன்னா ஒரு ஓட்டல் கூட நடத்த முடியும்! ஆனாக்க,
என்னியப் பர்த்து ஒரு ராசா, மார்ல தங்க மாலை போட்ட ராசா, உனக்குப் புதையல் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு.
இது எல்லாருக்கும் நடக்கற ஒண்ணு இல்லை. எனக்கு நடந்திருக்கு. இப்ப நான், அத்த வுட்டுட்டு, திரும்பவும் ஊரைப் பாக்கப்
போனேன்னா, இதுக்கெல்லம் அர்த்தமே இல்லாமப் போயிரும்.'

ஒரு புது வேகத்துடன் கந்தன் நடை போட்டான்.

'மஹாபலிபுரம் போவணும்.

அதுக்கு முன்னாடி, வாத்தியார் சொன்ன மாரி, பார்க்க வேண்டிய ஊரையெல்லாம் பார்க்கணும்.

இப்பக் கிடைச்ச மாரி, இன்னும் எத்தினியோ அனுபவம் எனக்குக் கிடைக்கும்.

இனிமே அதான் நான் செய்ய வேண்டியது'
என முடிவு செய்தான்.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்!

கண்ணில் பட்ட முதல் பேருந்தில் ஏறினான்.

'தம்பிக்கு எந்த ஊருக்கு டிக்கட்டு?' கண்டக்டர் கேட்டார்.

இந்த பஸ்ஸு எங்கே போவுதோ, அங்கே!' என்றான்.

அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே, சேலத்துக்கு ஒரு டிக்கட் கிழித்தார்.

ஜன்னல் வழியே,' அண்ணே, அண்ணே! எட்டு பிஞ்சு 2 ரூவாண்ணே! வாங்கிக்கங்கண்ணே!' எனக் கூவினான் ஒரு சிறுவன்!


'இவனுக்கு என்ன கனவோ? எதை சாதிக்க வேண்டி, இப்படியெல்லாம் கூவி விற்கிறானோ?' என ஒரு நினைப்பு மனதில் ஓட,
ரெண்டு கட்டு வாங்கிக் கொண்டு ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்து, 'மிச்சத்த நீயே வெச்சுக்கோ' என்றான்.

சிறுவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.

'நீங்க நல்லா இருக்கணும்ண்ணே!' என வாழ்த்தினான்.

பஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக ஒரு வெள்ளைக்காரன் ஏறினான்.

முதுகில் மாட்டியிருந்த தன் பையை மேலே வைத்துவிட்டு, இவன் அருகில் உட்கார்ந்தான்.

'சேலம்தானே போவுது?' என அரைகுறைத் தமிழில் வினவினான்.

கந்தன் அவனை அதிசயமாகப் பார்த்தபடியே, 'ஆம்!' என்றான்.

பஸ் புறப்பட்டது.

[தொடரும்]
*****************************



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 15



முந்தைய பதிவு இங்கே!


13.



"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]



இரண்டு மாதம் போனது.

"மீனாட்சி பவன்" என்ற இரண்டு மாடி ஓட்டல் ஜங்ஷனுக்குப் பக்கத்தில் புதிதாக எழுந்தது.

மேல்மாடி ஏ/சி செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.

பெட்டிக்கடை இப்போது பெரிதாக விரிவாக்கப் பட்டு, தினசரிப் பத்திரிக்கைகள், கல்கி, குமுதம், விகடன் குங்குமம் என வாரப்பத்திரிக்கைகள்,
எனப் பெரிதாகியது.

ஓட்டலில் எப்போதும் அலை மோதும் கூட்டம்.

இப்படியே தொடர்ந்தால், இன்னும் ஆறு மாதத்தில் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு, ஊர் திரும்பலாம் என கந்தன் முடிவு செய்தான்.

"உனக்கு என்ன வேண்டுமோ, அது எப்போதும் உனக்குத் தெரிய வேண்டும்" பெரியவரின் வாக்கு கேட்டது!

'இங்கு வந்து ஒரு ஆண்டாகியும் இந்தக் கல்லுங்களைக் கேட்க வேண்டிய நிலைமையே வரலை! ஒருவேளை, ஒத்தைக்காசு செலவில்லாம, நாம்
ஒண்ணுமே பண்ணாம, என்கிட்ட இருந்ததைவிட, ரெட்டைப்பங்கு பணக்காரனா ஊரு திரும்பி, முன்னே இருந்ததைவிட அதிகமா ஆடு மாடுங்களை
வாங்கணும்னுதான் விதி இருந்திருக்கோ என்னமோ!' கந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

'ஏங்க! கோவில்ல அம்மனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஒரு பிரார்த்தனை. ஆரைப் பாக்கணும் அதுக்கு?' பதட்டத்துடன் ஒரு யாத்ரீகர் கேட்டார்.

'அதுக்கென்ன! செஞ்சிருலாம்!' எனக் கந்தன் சொன்னான்.

கடை ஆள் ஒருவனை அழைத்தான். ' ஐயாவைக் கூட்டிகிட்டுப் போயி, அவருக்கு வேணும்ன்றதைச் செஞ்சு கொடு' என அனுப்பிவைத்தான்.

அவர் சந்தோஷமாகத் திரும்பி வந்து கந்தன் கையில் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து, அவனைப் பாராட்டிச் சென்றார்.

'இங்க வர்றவங்களுக்கு நாம் தேவையான வசதி செஞ்சு கொடுக்கணும்.'நம்ம லாட்ஜுக்கு வர்றவங்களுக்கு, திரும்பிப் போறவரைக்கும் எல்லா
வசதியும் செஞ்சு கொடுக்கணும்.' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

2 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை! கந்தன் கண் விழித்தான்.

பெட்டியில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்!

'அம்பது ஆடு வாங்கலாம். பத்து எருமை மாடுகூட வாங்கலாம். அவ்ளோ பணம் சேர்ந்திருக்கு.' என நினைத்தான்.

அண்ணாச்சி எழுந்து வந்து ஒரு பீடி பத்த வைத்தார்.

இவனைப் பார்த்தார்.

'என்ன இன்னிக்கு வெள்ளனவே எளுந்தாச்சு போல! எதுனாச்சும் வேலையா?' என்றார் அன்பாக.

'இன்னிக்கு நான் கிளம்பறேன். ஆடு மாடு வாங்கத் தேவையான பணம் சேந்திருச்சு. நீங்களும் எப்ப வேணும்னாலும் காசிக்குப் போவலாம்.
மாணிக்கம் இப்ப நல்லாவே தேறிட்டான். கடையப் பாத்துக்குவான்' என்றான் கந்தன்.

அண்ணாச்சி ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தார்.

'எனக்கு ஆசி சொல்லி அனுப்புங்க! நீங்க இல்லேன்னா, நான் என்ன பண்ணியிருப்பேன்னே தெரியாது!' எனக் கலங்கினான் கந்தன்.

'நாந்தேன் உனக்கு நன்றி சொல்லணும். என்னையே எனக்குப் புரிய வெச்சவன் நீ! ஒனக்கே தெரியும்... நா காசிக்கெல்லாம்
போவப் போறதில்லன்னு! என் காலம் இங்கியே இந்த மதுரைலதான்! அதேமாரி, நீயும் ஆடு மாடெல்லாம் வாங்கப் போறதில்லைன்னும்
எனக்குத் தெரியும்'
என்றார் அண்ணாச்சி!

'ஆரு சொன்னாங்க உங்களுக்கு?' என ஆச்சரியத்துடன் வினவினான்.

'ம்ம்ம்!...ஒரு ராசா கனவுல வந்து சொன்னாரு' எனச் சிரித்தார் அண்ணாச்சி!

தன் கண்கள் கலங்குவதைக் கந்தன் பாராத வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்!
***********

கந்தன் தன் துணிமணிகளை ஒரு பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

ஒரு மூலையில் கிடந்த பழைய துணிப்பை அவன் கண்களில் பட்டது!

ஆவலோடு அதை எடுத்துப் பிரித்தான்.

உள்ளே ஒரு பழைய வேட்டியும்.... ஒரு கசங்கிய துண்டில் சுற்றி வைத்திருந்த இரண்டு கற்களும்!!!

பெரியவர் கொடுத்த கருப்பு வெள்ளைக் கற்கள்!

இத்தனை நாட்களாய் மறந்தே போயிருந்தான் இந்தக் கற்களை!

'உன் கனவை ஒரு நாளும் மறக்காதே' பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'கனவா? எல்லாம் கனவாவேப் போச்சு! எங்கேருந்து வந்தேனோ, அங்கியே திரும்பவும் போகப் போறேன். இந்தக் கல்லுங்களை
தெருவுல ஆருக்காச்சும் கொடுத்திறணும்' என முடிவெடுத்து மீண்டும் அவைகளை ஒரு முறை பார்த்தான்.

......"நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."....... கிழவர் சொன்னது காதில் கேட்டது.


'ஆமா! உன் ஆடுங்களை வித்து வர்ற பணத்தை ஒர்த்தன் திருடிட்டு போயிருவான். சோறு போட ஒர்த்தன் வருவான். அவனோட சேர்ந்து
நீ பெரிய ஆளா வருவே! முன்னே இருந்த ஆடுங்களை விட இன்னும் அதிகமா வாங்கற அளவுக்குப்
பணம் கிடைக்கும்னு கூடத்தான் அவரு சொல்லலை!' என்று முணுமுணுத்தான்!

'எல்லாம் மாயை! நாமதான் நமக்கு உதவி!' என்றபடியே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

அண்ணாச்சியைப் பார்த்தான்.

யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருந்தார்!

அவரைப் பார்த்ததும், ஏனோ பெரியவரின் நினைவு வந்தது கந்தனுக்கு!

........"அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.
அவனுக்கா ஒரே கோவம்!
வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.
சிப்பி உடைஞ்சுது.
உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!
இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!
இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றர் கிழவரின் சொற்கள் மனதில் கேட்டது!

அண்ணாச்சியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியில் வந்தான்.

இன்னுமொரு முறை பார்த்தால், அழுது விடுவொமெனத் தோன்றியது அவனுக்கு.

திரும்பி, மீனாட்சி பவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்!

இதையெல்லாம் விட்டுப் போகிறோமே எனத் துக்கமாக வந்தது!

'இப்ப எங்கே போகப் போறேன்? நான் பொறந்து வளர்ந்த எடத்துக்குத்தானே! மறுபடியும் ஆடு மாடுங்களை மேய்ச்சுகிட்டு!'
ஒரு தீர்மானத்துடன் நடந்தான்.

ஆனால், மனதில் ஒரு திருப்தி இல்லை!

'எதுக்காவ வந்தேனோ, அது நடக்கலை. அண்ணாச்சி காசிக்குப் போகப் போறதில்லைன்ற மாரி, நானும் புதையலைப் பாக்கப் போறதுஇல்லை!'

யோசித்துக் கொண்டே நடந்தவன் மீது எவனோ மோதினான்!!



[தொடரும்]
*******************************


அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, October 10, 2007

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்" -- 14

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 14


முந்தைய பதிவு இங்கே!



12.


"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்." [611]


கிட்டத்தட்ட 15 நாள் ஆகிவிட்டது கந்தன் அங்கு வேலை செய்ய ஆரம்பித்து.

வேலை ஒன்றும் அவ்வளவு கடுமையாயில்லை.

அதேசமயம் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாகவும் இல்லை எனப் பட்டது கந்தனுக்கு.

கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களைத் தவிர, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இங்கு வருவதில்லை என்பதைக் கவனித்தான்.

உள்ளே ஸ்டோர் ரூமில் கிடந்த கரும்பலகையைத் தூசி தட்டி, "இன்றைய ஸ்பெஷல்; டிபன் ரெடி, அளவு சாப்பாடு 10 ரூபாய் மட்டுமே" என
கவர்ச்சிகரமாக எழுதி வெளிவாசலில் போவோர், வருவோர் கண்ணில் படும்படி வைத்தான்.

கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது.

சரக்கு மாஸ்டரிடம் போய், அவருக்கு சில தெக்கத்தி உணவுவகைகளை ருசிகரமாகச் செய்வது எப்படி என தான் தன் தாயிடமிருந்து
கற்றுக் கொண்டு, ஆனால், செய்யமுடியாமல் போன, சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தான்.

"வாசலில் ஒரு சின்ன பெட்டிக்கடை போட்டு, கூல்ட்ரிங்ஸ், மிட்டாய் வகைகள், வாழைப்பழம், பீடி சிகரட், வெத்தலை பாக்கு புகையிலை,
என வைத்து வியாபார செய்தால் கூட்டம் அதிகமா வருமே!" அண்ணாச்சியிடம்.... ஓட்டல்காரரை இப்போதெல்லாம் அப்படித்தான்
அழைக்கிறான் கந்தன்!.....ஒருநாள் இரவு கடை அடைத்துவிட்டு சாப்பிடுகையில் சொன்னான்.

"ரொம்ப செலவளியும் கந்தா அதுக்கெல்லாம். பார்த்துக்க வேற ஆளு போடணும்! இருக்கற நிலைமையில அதெல்லாம் தேவையா?" எனத்
தயங்கினார் அண்ணாச்சி.

'நான் ஆடு மேய்க்க கோயிலாண்டை போகச் சொல்ல, எதுனாச்சும் பாம்பு கடிச்சு சில சமயம் ஆடுங்க ஏதோ ஒண்ணு செத்துக் கூடப் போயிருக்கலாம்
அதுக்காவ, அங்க போகாம இருக்க முடியுமா?. கொஞ்சம் துணிஞ்சுதான் எறங்கணும். ஊர்ல உங்க அக்கா மகன் ஒருத்தன் இருக்கான்.
அவனுக்கு ஒரு வளி பண்ணனும்னு ஆர்கிட்டயோ போனவாரம் சொல்லிகிட்டு இருந்தீங்களே. காதுல விழுந்திச்சு. அவரைக் கொண்டாந்து
வைக்கலாமே'

"அதுக்கில்லப்பா. இப்போ பிசினஸ் கூட கொஞ்சம் பரவாயில்லைதான். இதுவே போறுமோன்னு நினைக்கறேன். இப்படியே ஓடட்டுமே. நீகூட
சீக்கிரமே ஒனக்குத் தேவையான பணத்தை சேர்த்திரலாம். எதுக்கு அதிகமா ஆசைப்படணும்?" என்றார் அண்ணாச்சி.

நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டியதைச் செஞ்சிறணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்காரு! நாம் புதுசா ஒண்னு
செய்யறப்ப, நம்ம வாழ்க்கையும் நமக்கு உதவுமாம்"

கந்தனை வியப்புடன் பார்த்தார் அண்ணாச்சி! 'இவன் சொல்றதுல கூட விசயம் இருக்கு போலிருக்கே!
காத்துள்ளபோதே தூத்திக்கோன்னு
ஆத்தாகூட அடிக்கடி சொல்றது இதான் போல.
இப்ப இவன் வந்தது கூட ஒரு நல்ல சகுனந்தானே. இப்பத்தானே யாவாரம் கொஞ்சம் சூடு
பிடிச்சிருக்கு' என எண்ணியபடியே, அவனைப் பார்த்து,

"ஆமா, நீ எதுக்காவ சென்னைக்குப் போவணும்னு இருந்தே? ஆரு இருக்கா அங்க?" என வினவினார்.

"சும்மாத்தான். சுத்திப் பாக்கலாமேன்னுதான்!" இல்லாத புதையலைத் தேடி, இருந்த ஆடுகளையும், கைப்பணத்தையும் இழந்த அந்த நினைவை
மறக்க வேண்டி, உண்மையைச் சொல்வதைத் தவிர்த்தான் கந்தன்.

'அப்பச்சரி! ரொம்பப் பேருங்க அப்பிடித்தான் சொல்லிகிட்டு போறானுவ' என்று சிரித்தார் அண்ணாச்சி.

'நா ஒண்ணும் அந்த சோமு அண்ணாச்சி மாரி பெரிய மொதலாளி இல்லே! இருக்கற கொஞ்சநஞ்ச காசையும் பொட்டிக்கடைல போட்டு,
நட்டமாகிப் போச்சுன்னா, என்ன பண்றதுன்னுதான் யோசிக்கறேன். இப்ப ஏன் இவ்ளோ குறியா இருக்கே நீ இதுல?' என்றார்.

" எவ்வளவு சீக்கிரமா கொஞ்சம் ஆடு வாங்க பணம் கிடைக்குதோ, அதை நம்ம நேரம் நல்லா இருக்கறப்பவே சேத்துறணும்னு நினைக்கறேன்."

அண்ணாச்சி சற்று நேரம் மௌனமாயிருந்தார். தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"ஆறு வயசுல இந்த ஊருக்கு வந்தேன் நான். கையில காலணா காசு கிடையாது.என்னென்னமோ வேலைல்லாம் செஞ்சு, ஒரு ஓட்டல்ல சேந்து,
அங்கேயே தொழில் கத்துகிட்டு, 20 வருசத்துக்கு முந்தி இந்த ஓட்டலை ஆரம்பிச்சேன். மீனாட்சி அருளால ஏதோ பொளப்பு ஒடிகிட்டிருக்கு.
அவளைக் கேக்காம, அவகிட்ட சொல்லாம நான் எதுவும் செய்யறதில்ல. அவதான் எம்மேல இரக்கப்பட்டு, ஒன்னிய இங்க அனுப்பி
வெச்சிருக்கான்னு நினைக்கறேன். ஏன்னா, ஆரும் இதுக்கு முந்தி இதுமாரி எனக்கு சொன்னதில்லை. எனக்கு கூட ஆசை இருக்கு!
ஒருதரம் காசிக்கு போவணும்னு. எங்க பரம்பரைல ஒருத்தரு அங்கே போயி மடமெல்லாம் கட்டிருக்காராம். அதை ஒருதரம் போயிப் பாக்கணும்னு
எங்க அப்பாரு சொல்லிகிட்டே இருப்பாரு. அவரு சொல்லச் சொல்லி,எனக்கும் மனசுல அந்த ஆசை இருக்கு. ஆனா போக முடியல. கடைய
ஆரு பாத்துப்பாங்க நான் போனா? போனவன்லாம் வந்து சொல்லுவான்...'சுந்தரம், உங்க மடத்துக்கும் போயிட்டு வந்தேன். நல்லா நம்ம
ஊரு சாப்பாடு போட்டாங்க புண்ணியவானுங்கன்னு! கேக்கறப்ப மனசு துடிக்கும். எல்லாம் கனவாவே முடிஞ்சிரும்னு நெனக்கிறேன்.
நானாவது... அங்க போவப் போறதாவுது! அதெல்லாம் ஆவற காரியம்னு தோணல. ஆனா நீ... வாளவேண்டிய புள்ள. நாலு எடம்
பாக்கணும் நீ! என்னிய மாரி இருந்திடக் கூடாது! சரி, சரி! மீனாட்சி சொல்லிட்ட! கடை போட்டுறலாம்! போய்ப் படு" என்றபடியே எழுந்தார்.

சொன்னபடியே பத்து நாளில் ஒரு சின்ன பெட்டிக்கடை வாசலை அலங்கரித்தது.

ஊரில் இருந்து அக்கா மகன் வந்து பெட்டிக்கடையைப் பார்த்துக் கொண்டான்.

ஒரு 10 பேரு எப்பவும் நின்னு, பார்த்துவிட்டு, கடையில் எதையாவது வாங்கினார்கள்.

அப்படியே வாசம் பிடித்து, உள்ளேயும் வந்து சாப்பிட்டார்கள்!

இந்த கடையை இத்தினி நாளு விட்டுட்டோமேன்னு சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

சென்றவர்கள் அடுத்தவருக்கும் சொன்னார்கள்.

அவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டே சந்தோஷமாகச் சென்றார்கள்.

கோவில் பார்க்க வருபவர்களும் கூட்டம் அதிகமா இருக்கே என இந்தக் கடைக்கு வர ஆரம்பித்தார்கள்!

வியாபாரம் சூடு பிடித்தது.

அண்ணாச்சிக்கு கவனிக்கக் கூட நேரமில்லாமல் போனது!

கூட 3 ஆட்களை வேலைக்குச் செர்த்தார்.

'எலே! அண்ணாச்சியக் கவனி! ஐயாவுக்கு என்ன வேணும்? ஏய்! பராக்கு பாத்துகிட்டு நிக்காத! டேபிளை தொடை!'

அதிகாரம் பண்ணவே நேரம் சரியாக இருந்தது.

கந்தனும் அயராது வேலை செய்தான்.

அண்ணாச்சிக்கு பக்கபலமாக இருந்து கடையின் பெரும்பாலான பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டான்.

பெரியவர் கொடுத்த கற்களை மறந்தே போனான்!

புதையல் ஒரு கனவாகவே போனபின்னர், இனி அதற்கு என்ன வேலை இருக்கு எனவோ, என்னவோ!

"கடைக்கு கூட்டம் ஜாஸ்தியா வருது இப்பல்லாம். எடம் பத்தலை. பக்கத்து கடை மூடறாங்களாம். அதையும் வாங்கிப் போட்டு,
நம்ம கடையை கொஞ்சம் பெருசாக்கினா, நெறயப் பேரு வருவாங்க"
மெதுவாக ஒரு நாள், அண்ணாச்சியிடம் ஆரம்பித்தான்.

அவன் வந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது!

"வாங்கலாந்தான்! எடம் பெருசானா அதுக்கேத்த மாரி, நிர்வாகம் பண்ணனும். செலவு இன்னமும் அதிகமாவும். ஆளுங்களும் கூட
வேலைக்கு வைக்கணும். 20-22 வருசமா இப்பிடியே ஓட்டிப் பளகிட்டேன். இப்பம் போயி, இத்தெல்லாம் செய்யணுமான்னு யோசிக்கறன்."

"நல்லதுதானே! காலம் மாற்ரப்ப, நாமளும் மாறலாமே!"

"நான் பாத்துகிட்டு இருக்கறப்பவே எதுத்த கடை சோமு பெரிய ஆளா கிடுகிடுன்னு வளந்து, இன்னிக்கு சோமு அண்ணாச்சி ஆயிட்டான்.
இதேமாரி, இன்னும் எத்தினியோ பேரு. நாந்தேன், நமக்கு எதுக்கு இதெல்லாம்னு பயந்து, பயந்தே, ஒண்ணும் பண்ணாம இருந்திட்டேன்.
இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சலே வந்திருக்கு. அன்னிக்கு ஒன்னிய அந்தக் கேடிப்பய கூட்டிகிட்டு போறப்பவும் அப்பிடித்தேன்.
நமக்கு எதுக்கு வம்புன்னு சும்மா இருந்திட்டேன். ஆனா, அதுகூட எனக்கு நல்லதாத்தான் ஆயிருக்கு... ஒருவகையில! ஒண்ணு மட்டும் நிச்சயம்.
நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்! இருக்கறது போதும்னு இதுவரைக்கும் இருந்திட்டேன்.
இல்லேடா!இதுக்கு மேலியும் ஒனக்கு நான் கொடுக்கப் போறேன்னு அம்மன் சொல்லுறா... ஒன் ரூபத்துல வந்து! இதையும் ஒதுக்கினேன்னா,
நாந்தேன் பெரிய முட்டாள் இந்த ஒலகத்துல. தேடிப் போக வேணாம்னாலும், வர்றத விடறது முட்டாத்தனம்தான்னு எனக்கு நீ புரிய வைக்கற"

அண்ணாச்சி பேசிக் கொண்டே போக, 'நல்லவேளை நான் பேசாததும் நல்லதுக்குத்தான்' என மனதில் நினைத்துக் கொண்டான் கந்தன்.

"வைகைல வர்ற வெள்ளத்த, எவனாலேயும் தடுத்து நிறுத்த முடியாது"ன்னு எங்க அப்பச்சி சொல்லுவாரு. எல்லாம் விதிப்படி நடக்கட்டும்'
என்றவாறு சந்தோஷமாகச் சிரித்தார்.



[தொடரும்]
****************************



அடுத்த அத்தியாயம்

Read more...

Tuesday, October 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 13

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 13

முந்தைய பதிவு இங்கே!






11.
"ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்


ஒருவந்தம் கைத்துடை யார். [593]


காலையில் பார்த்த அதே ஓட்டல்காரர்!

அவரைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது.

'அது... வந்து.... வந்து..இல்ல..வண்டி...' என இழுத்தான்.

சட்டென்று, முகத்தை உயர்த்தி, அவரைப் பார்த்து, 'இங்கே எதுனாச்சும் வேலை இருக்குமா? காசு வேணாம். கூலியா சாப்பாடு கொடுத்தீங்கன்னா போதும்' என்றான்.

ஓட்டல்காரர் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.

முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது.

'மொகத்தைப் பாத்தா, அந்த 2 இட்டலிக்கு அப்புறம், வேற ஒண்ணும் சாப்ட்ட மாரித் தெரியலியே. மொதல்ல வாங்க. வந்து சாப்பிடுங்க. பொறவால மத்தக்கதை பேசிக்கலாம்' என்றார்.

இவரைப் போய் தப்பா நினைச்சோமே என துக்கமாயும் அவமானமாகவும் இருந்தது கந்தனுக்கு.

'இல்லீங்க! பசிக்கலை இப்ப. நா எதுனாச்சும் வேலை செய்யறன் முதல்ல' என்றபடியே தன் பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அதில் இருந்த துண்டை எடுத்து, டேபிளைத் துடைக்க அரம்பித்தான்.

'பய சின்னவனா இருந்தாலும், சுயமாரியாதைக்கார பயலாத்தேன் இருக்கேன். சரி, பார்க்கலாம்' என்று நினைத்தபடியே, தனக்குள் சிரித்துக் கொண்டார்.

மீசையை நீவி விட்டபடியே, அவன் வேலை செய்யும் நேர்த்தியைக் கவனித்தார்.

கந்தன், வரிசையாக எல்லா டேபிளையும் துடைத்தான்.

நாற்காலிகளை ஒழுங்காக சரிபடுத்தினான்.

ஓரத்தில் இருந்த விளக்குமாறை எடுத்து, தரையைக் கூட்டினான்.

பின்பக்கம் சென்று, தண்ணீர் எடுத்து வந்து, ட்ரம்மில் நிரப்பினான்.

இலைகளை எடுத்து, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, தட்டுகளைக் கழுவி, ஈரம் போக ஒரு சுத்தமான துணியால் துடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தான்.

'பரவாயில்லை! பையன் துடியாத்தேன் இருக்கேன்' என மனதிற்குள் சிலாகித்துக் கொண்டார்.

'நீ செஞ்சதெல்லாம் போறும். வா. கைகால் களுவிட்டு, வந்து சாப்பிடு'' என்று அவர் ஒருமையில் அழைக்க ஆரம்பித்தது, கந்தனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

நல்ல பசி இப்போது வயிற்றைக் கிள்ளியது.

ஒரு தட்டில் அரிசிச்சோறு வைத்து, நடுவில் குழம்பு விட்டு, ஒரு அப்பளம் வைத்து அவன் முன்னே வைத்தார்.

கந்தன் அவசர அவசரமாக அள்ளித் தின்னத் துவங்கினான்.

'நா அப்பதே சொன்னேன். நீதான் கேக்காம அவன் பின்னாடி போயிட்டே! அவ்ளோ பணத்தை அவங்கிட்ட பொசுக்குனு எடுத்துக் காமிச்சதுமே திக்குனு ஆயிருச்சு எனக்கு. அவன் மூஞ்சியைப் பார்த்ததுமே தெரிஞ்சுது, இவன் நல்லவனில்லேன்னு. இதெல்லாம் இங்கன வெச்சுக்காதேன்னு கண்டிசனா வார்ன் பண்ணினேன். அந்தப் பாவிப்பய என்ன சொன்னானோ, ஏது சொன்னானோ.. நீயும் பொட்டிப்பாம்பா அவன் பின்னாடியே விசுக்குனு போயிட்டே! இப்ப அல்லாத்தியும் தொலைச்சிட்டு வந்து நிக்கறேன்னு நினைக்கறேன். சரிதானே!' என்றார்.




கந்தன் பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினான்.



' ஒன்னியப் பாக்க பாவமா இருக்கு! அது கிடக்கட்டும். என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் பொறவு. அப்போ, இங்கே வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா நீ?' என்ற ஓட்டல்காரரின் கேள்வி அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

வாய் நிறைய சோறு இருந்ததால், தலையை வேகமா 'இல்லை, இல்லை' என்பது போல் ஆட்டினான்.

அவசர அவசராமக ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு, 'நாளைக்கி வரைக்கும் என்ன வேலைனாலும் குடுங்க செய்யறேன். ரா முளுக்க வேணும்னாலும் செய்யறேன்.
நாளை சாயந்தர வண்டிக்கு சென்னைக்கு போவ துட்டும், கைச் செலவுக்கு பணமும் மட்டும் தந்தா போறும்' என்றான் தீவிரமாக.

மீசைக்காரர் சிரித்தார்.

'ராவா பகலா ஒரு ஆறு மாசம் வேலை செஞ்சியானாத்தான், அவ்ளோ பணம் சேக்க முடியும் ஒன்னால!'

கையில் எடுத்த சோறு அப்படியே தட்டில் அவனையறியாமல் விழுந்தது.

இந்த உலகமே அவன் தலையில் விழுந்தது போல ஒரு உணர்வு!

ஜங்ஷனின் ஆரவாரமெல்லாம் அப்படியே நிசப்தமாகியது.

நம்பிக்கைகள், கனவுகள் எல்லாம் அப்படியே நொறுங்கிப் போய், இந்த விநாடியே செத்துப் போயிட மாட்டோமான்னு இருந்தது.

ஓட்டல்காரர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தார்.

காலையில் உற்சாகமாகக் கடையினுள் நுழைந்த அந்தப் பையன், இப்போது எல்லாம் தொலைந்து போன ஒருவனாகத் தன் எதிரில் இருப்பதை உணர்ந்தார்.

'ஒன் சொந்த ஊருக்குப்போறதுக்கு வேணா, ஒரு லாரில அனுப்பி வைக்கறேன் ஒன்னை' எனக் கரிசனத்துடன் சொன்னார்.

கந்தன் எழுந்தான். கற்கள் இருந்த பையை ஒருமுறை தொட்டுப் பார்த்தான்.
ஓட்டல்காரரைப் பார்த்து, உறுதியான குரலில் சொன்னான்.

'இல்லீங்க! ஊருக்கு போவறதா இல்லை! சரி, ஆறு மாசம் இங்கே வேலை பாக்கறேன்!'

பெரியவர் சொன்னது போல, கற்களிடம் கேட்காமல், தானே ஒரு முடிவு எடுத்ததை எண்ணினான்.

பெருமிதம் கலந்த ஒரு புன்னகை தவழ்ந்தது அவன் முகத்தில்.

சற்றுப் பொறுத்து மெதுவாகச் சொன்னான்....

"வெறுமனே ஊருக்குப் போயி புண்ணியம் இல்லை. பத்துப் பதினைஞ்சு ஆடு வாங்கப் பணம் வேணும்!"

[தொடரும்]
**********************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Monday, October 08, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12

முந்தைய பதிவு இங்கே!



10.


"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்


அஃதறி கல்லா தவர்." [427]


"சிதம்பரத்து ராசாவின் ஆசீர்வாதம் இன்னமும் என்கிட்ட இருக்கா?" என எண்ணிக்கொண்டே பைக்குள் கை விட்டு ஒரு கல்லை எடுத்தான்.

'கருப்புக் கல்!' ஆமாம்!

'புதையல் எனக்குக் கிடைக்குமா?'

மீண்டும் கைகளை விட்டுத் துழாவினான்.

இரண்டு கற்களுமே அவன் கையில் அகப்பட்டு, வந்தன!

......'அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......

நான் தீர்மானம் இன்னமும் செய்யாமல், கல்லை நம்பியது தவறு என அவனுக்குப் பட்டது.

'புதையலைத் தேடிகிட்டுப் போகணுமா, வேண்டாமா, இல்லை ஊருக்குத் திரும்பணுமா?' இது நான் எடுக்க வேண்டிய முடிவு. சகுனங்களை இதில் நம்பக்கூடாது' எனஅவனுக்குத் தோன்றியது.

'பெரியவர் இன்னமும் தன் கூடவேதான் இருக்கிறார் என இந்தக் கற்கள் சொல்லியிருக்கின்றன. அதுவே பெரிய தெம்பு! இனிமே நாமதான் ஒரு முடிவு எடுக்கணும்' என மனதில் தீர்மானித்துக் கொண்டு கற்களை மீண்டும் பத்திரப் படுத்தினான்,பைக்குள்.

.......'பல இடத்துக்கும் போகப் பாரு.' வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்தது!

'அவர் சொன்ன மாரியே நான் இப்ப ஊரை விட்டு மதுரை வரைக்கும் வந்திட்டேன்.இப்ப எல்லாத்தியும் தொலைச்சிட்டாலும், என்னோட லட்சியம் இன்னமும் என்கூடத்தான் இருக்கு. அது இன்னும் தொலையலை.இனிமே, புதையலை அடையறதுதான் என் லட்சியம்.'

அப்படியே அந்த பெஞ்சில் படுத்து உறங்கிப் போனான் கந்தன்.
********

யாரோ அவனை உலுக்கிய வேகத்தில் விழித்தன் கந்தன்.

'எலே! வாங்கடே போலாம்!' பழக்க தோஷத்தில் அவன் வாய் முணுமுணுத்தது.

சுற்று முற்றும் பார்த்தான்.

ஆடுகளைக் காணவில்லை!

தான் இருப்பது மதுரை ஜங்ஷன் பெஞ்ச் என்பதை உணர்ந்தான்.

ஒரு நொடி துக்கமாயிருந்தது.

அடுத்த நொடியே சந்தோஷமாகவும் இருந்தது.

'அதுங்களுக்கு தீனி வைக்க வேணாம். தண்ணி காட்ட வேணாம்.எந்த ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லாம, புதையலை மட்டுமே தேடிகிட்டு நான் போவலாம்.கையில ஒரு பைசா இல்லை.
ஆனாக்க, நம்பிக்கை மட்டும் இருக்கு!'

எழுந்து வெளியே வந்தான்.

மாலை நேரம்.

ஜங்ஷனுக்கு வெளியே கடைகள் களை கட்ட ஆரம்பித்திருந்தன.



வரிசை வரிசையாக ஜவுளிக்கடைகளும், பலகாரக் கடைகளும், பலவிதமான பொருட்களை வைத்துப் பரப்பிய நடைபாதைக் கடைகளும், ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போவது போல குறுக்கும் நெடுக்குமாக நடந்த மனிதர்களும், வாகனங்களும், மணக்கும் மல்லிகைப் பூவுமாக ஒரே பரபரப்பாக இருந்தது.

முட்டத்துக்கும் மதுரைக்கும் இடையேதான் எவ்வளவு வேறுபாடுகள்!

பேச்சுவழக்கிலிருந்து, உடை வரை எல்லாமே மாறியிருந்தது.

இந்த 'லே' அவனை மிகவுமே குழப்பியது.

பேசுவதிலும் கூட ஒரு வேகம் அவனை பயமுறுத்தியது.

நடந்து செல்லும் போதே பலவற்றையும் கவனித்துக் கொண்டே வந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

இங்கே வந்தாச்சு.

இனிமே திரும்பப் போறதில்ல.

பெரியவர் சொன்ன சகுனம்னு எதுனாச்சும் இருந்தா, அது இங்கேதான், இந்த ஊர்லதான் எனக்குக் கிடைக்கப் போவுது.

பொறுமையா கவனிக்கணும் நான்.

ஏனோ அவனுக்கு தன் ஆடுகளின் ஞாபகம் வந்தது.

'மே' என்ற ஒரு வார்த்தையைத் தவிர அதுங்க ஒண்ணுமே பேசலைன்னாலும், தங்களோட தேவைகளை, ஆசைகளை, அன்பை,இன்னும் என்னவெல்லாமோ அவைகள் காட்டியது மனதில் பாரமாக அழுத்தியது.

அதையே நான் புரிஞ்சுகிட்டு அதுங்களைப் பார்த்துகிட்டேன்னா,இதெல்லாம் புரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமே இல்லை.

....."ஒனக்கு இருக்கற மாதிரியே இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.கூடவே துக்கம்,பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!".

பெரியவர் சொன்னது பலமாகக் கேட்டது!



"என்னங்க தம்பி, வண்டியை தவறவிட்டுட்டீங்களா?"

கேட்ட குரலாயிருக்கிறதே எனக் கந்தன் திரும்பினான்!

[தொடரும்]
***********

அடுத்த அத்தியாயம்

Read more...

Saturday, October 06, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

முந்தைய பதிவு இங்கே!

9. "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். [463]



அவசர அவசரமாக கந்தனைத் தள்ளிக் கொண்டே, அந்த இளைஞன், 'அவரு உன் பணத்தைப் புடுங்கப் பாக்கறாரு. நீ வா சீக்கிரமா!'
என்றபடி வீதிக்கு வந்தான்.

'அப்படியா? ரொம்ப நன்றிங்க! அவரைப் பாத்தா அப்படித் தெரியலியே! நல்லவர் மாதிரில்லே இருந்திச்சு' என்றான் கந்தன்,
தன் பணம் பிழைத்ததே என்ற நிம்மதியுடன்!

"இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி! இப்ப நா மட்டும் இருந்ததால நீ தப்பிச்சே. சரி, சரி வா!
போயி டிக்கட்டு எடுத்துருவோம் சென்னைக்கு. ரிசர்வு பண்ணினாத்தான் வண்டில ஏற முடியும்." என்றபடி ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கந்தனும் கூடவே நடந்தான்.

ரிசர்வேஷன் கவுண்டரை அடைந்ததும், 'நீ இங்கியே லைன்ல நில்லு. இதோ வாறேன்' என்று கந்தனை விட்டு அகன்றவன், சற்று நேரத்தில்,
அவசர அவசரமாக ஓடி வந்தான்.

'ஒன் நல்ல நேரம்; எனக்குத் தெரிஞ்சவர்தான் உள்ளே இருக்காரு. டிக்கெட்டுல்லாம் இன்னிக்கு ஃபுல்லாம். ஸ்பெசல் கோட்டாவுல
ஒரு ரெண்டு டிக்கட்டு இருக்காம்.
காசை எடு. நா போயி வாங்கியாறன்' என்றான்.

'எவ்ளோ வேணும்?' எனப் பையைத் திறக்க ஆரம்பித்தான் கந்தன்.

'எவ்ளோன்னு தெரியல. நீ லைன்ல நிக்க வேணாம். அதோ அந்த பெஞ்சுல போயி ஒக்காரு. நா டிக்கட்டை வாங்கிகிட்டு இதோ வந்திடறேன். ம்ம்.. சீக்கிரமா எடு!'
என அவன் பணப்பையை வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் ஒரு கதவைத் திறந்து கொண்டு ஓடினான்.

'எவ்வளவு நல்லவனா இருக்கான் இவன்!' என எண்ணியபடியே, கந்தன் பெஞ்சில் சென்று உட்கார்ந்தான்.

சற்று நேரம் ஆயிற்று.

'ஏன் இவ்ளோ நேரமாவுது டிக்கட் வாங்கியாற?' என நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.

இளைஞனை எங்கும் காணவில்லை.

எழுந்து அந்த இளைஞன் சென்ற கதவு வழியே சென்று பார்த்தான்.

ம்ஹூம்! அங்கும் அவன் இல்லை!

மனதில் ஒரு தவிப்பு வரத் துவங்கியது.

'அப்படியெல்லம் ஒன்றும் இருக்காது! பணத்தை எடுத்துகிட்டு ஒண்ணும் ஓடியிருக்க மாட்டான். போன எடத்துல என்ன சோலியோ?
இன்னும் கொஞ்ச நேரம் பாப்பம்' என எண்ணிக் கொண்டே மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்தான்.

ஆனால், மனதில் தோன்றிய அவநம்பிக்கை அவனை விட்டு அகலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகியது.

நண்பகல் ஆனது.

கந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனத் தெளிவாகப் புரிந்தது!

அழுகை அழுகையாய் வந்தது.

'நேத்து வரைக்கும் நானுண்டு என் ஆடுங்க உண்டுன்னு இருந்தேன். ஊருலியும் தாயில்லாப் புள்ளையாச்சேன்னு என்கிட்ட அன்பா இருந்தாங்க.
செல்லி கூட அடிக்கடி வந்து பேசும். நானும் சந்தோசமா இருந்தேன். இப்பம், இந்த ஆண்டவன் என்னிய ஏமாத்திட்டாரு!
என் ஆடுங்களையும் என்கிட்டேருந்து புடுங்கிட்டு,இப்பம் பணத்தையும் பறி கொடுத்திட்டு, வெவரம் புரியாத ஊருல அநாதையா நிக்க வெச்சிட்டாரு!
இனிமே என்னால ஆரையும் நம்ப முடியாது! புதையலும் கிடைக்கப் போறதில்ல! இப்ப என்ன பண்றது?' என வருந்தினான்.

சாமி மேலயும், அந்தப் பெரியவர் மேலயும் கோவம் கோவமா வந்தது.

கையில வேற எதுனாச்சும் இருக்கான்னு, தன் துணிப்பையைத் திறந்து பார்த்தான்.ஒரு நாலு முழ வேட்டி, ஒரு துண்டு, மகாபாரதப் புத்தகம்,
கூடவே அந்தக் கிழவர் கொடுத்த அந்த இரண்டு கற்கள்!

இனம் புரியாத நிம்மதி பிறந்தது கந்தனுக்குள்.

3 ஆடுகள் கொடுத்து வாங்கிய அந்த கற்களை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்தான்.

தங்க வில்வமாலை அணிந்த அந்தப் பெரியவரைத் தொடுவது போல ஒரு உணர்வு!

இதை விற்று ஊருக்குத் திரும்பி விடலாம் என நினைத்தான்.

தன்னை ஏமாற்றிய இளைஞன் சொன்ன ஒரு உண்மை மட்டும் நினைவுக்கு வந்தது.

....."இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி!".....

கூடவே சிரிப்பும் வந்தது.

கற்களை பத்திரமாக ஒரு துண்டில் சுற்றி வைத்தான்.

ஓட்டல்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

இப்போதுதான் அவர் சொன்னதின் பொருளும் உறைத்தது.

தன்னை எச்சரிக்கவே அவர் அப்படிச் சொன்னார்; நான்தான் அவரை நம்பாமல் அந்த இளைஞன் பின்னால போயிட்டேன்.

நானும் எல்லாரையும் போலத்தான்.

இந்த உலகத்தை நான் நினைக்கற மாதிரியே பாக்கறேன். அது எப்படி இருக்குன்றதை கவனிக்காமலியே!

அவன் கைவிரல்கள் அந்தக் கற்களை வருடின.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,...
தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

......."கருப்பு, 'சரி' ....வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ,
அப்போ,இந்தக் கல்லுங்க உதவும். கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......


பெரியவரின் சொற்கள் மீண்டும் ஒலித்தன.

இந்தக் கற்கள் அவர் சொன்னது போலவே செய்யுமா?

சோதனை செய்து பார்த்து விடலாம் என முடிவெடுத்தான்.

[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

முந்தைய பதிவு இங்கே!

8. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். [517]



மதுரை ஜங்ஷன்!

கந்தன் வந்த பாஸஞ்ஜர் வண்டி அவனை அங்குதான் இறக்கி விட்டது.

அமைதியான கிராமத்தில் தன்னிச்சையாகத் திரிந்த கந்தனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.

இவ்வளவு பரபராப்பான ஒரு இடத்தை இதுவரை தன் வாழ்நாளில் கண்டதே இல்லை.

சாமான்களைத் தூக்கிச் செல்லும் போர்ட்டர்களும், எதையெதையோ விற்றுக் கொண்டிருக்கும் ஆட்களும், அடுத்தவரைப் பற்றி சற்றும் லட்சியம் இல்லாமல், இடித்துத் தள்ளிக் கொண்டு, முண்டியடித்து முன்னே செல்லும் மனிதக்கூட்டமும்,நெரிசலும் அவனுக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணியது.

கைப்பையில் இருந்த பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

வயிறு பசித்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தான்.

கூட்டம் அதிகமில்லாத ஒரு சின்னக் கடையாகப் பார்த்து நுழைந்தான்.

"வாங்க தம்பி! உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க?" அன்பான குரலில் கடைக்காரர் வரவேற்றார்.

குளித்து, தலைவாரி, நெற்றி நிறைய விபூதி பூசி, பெரிய குங்குமப்பொட்டு வைத்த முகம்.
அடர்த்தியான முறுக்கு மீசை.
வெள்ளை வேட்டி, அரைக்கை கதர்ச் சட்டை.

கல்லாவுக்கு மேலே பிள்ளையாரும் முருகனும் அழகாக இரு பக்கமும் சிரித்திருக்க, நடுவில் மீனாக்ஷி கையில் கிளியோடு அருள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மேஜை மேல் ஒரு சிறிய அழகான நடராஜர் சிலை.

ரெண்டு இட்லி, ஒரு காப்பி எனச் சொன்னான்.

வட்டமான தட்டில், வாழை இலை அதே அளவுக்கு வெட்டப்பட்டு, அதன் மேல் சூடாக இரண்டு இட்டலியும், சட்னி, சாம்பார் பக்கத்தில் ஊற்றி, அவன் முன்னே வைத்தார்.


'சாப்பிடுங்க தம்பி! காப்பி வருது!' என்றார் சிரித்த முகத்துடன்.

கந்தனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உணவைப் பார்த்ததும்.

இன்னும் கொஞ்ச நாள்ல புதையல் இருக்கற இடத்துக்குப் போயிறலாம். மார்ல தங்க மாலை போட்டிருந்த கிழவர் பொய் சொல்லியிருக்க மாட்டார்என்ற ஒரு நம்பிக்கை மனதில்.

சாப்பிட்டுக் கொண்டே, அவர் சொன்ன நல்ல சகுனம் எதுனாச்சும் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"தம்பி ஊருக்குப் புதுசா?" என ஒரு குரல் பின்னாலிருந்து வர, 'ஆகா. சகுனம் போல!' என நினைத்தபடியே குரல் வந்த திசையில்திரும்பினான்.

கட்டம் போட்ட லுங்கியும்,பனியன் தெரிகிற மாதிரி ஒரு மல் ஜிப்பாவும், கழுத்தில் சுற்றிக் கட்டிய ஒரு கர்ச்சீப்புமாய் ஒரு இளைஞன்!

'ஆமாங்க! நாகர்கோயில் பக்கம் ஒரு கிராமம்' என வெள்ளந்தியாகச் சொன்னான், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.

'என்ன சோலியா வந்திருக்கீஹ?' எனப் பேச்சைத் தொடர்ந்தான் அந்த இளைஞன்.

'சென்னைக்குப் போகணும். அதுக்கு முன்னால கொஞ்சம் சாப்பிட்டுட்டு போலாமேன்னு வெளிய வந்தேன். மத்தியானத்துக்கு மேலதான் வண்டியாம்' என அவனிடம் சொல்ல ஆரம்பித்தவன், உடனே சற்று உஷாராகி, புதையலைப் பற்றி இவனிடம் சொல்ல வேண்டாம்னுமுடிவு செய்தான்.

'சொன்னா, இவனும் அதுல பங்கு கேப்பான். இல்லாத ஒண்ணுல பங்கு தராதேன்னு அந்தப் பெரியவர் வேற சொல்லியிருக்காரு.' என எண்ணி, தன் புத்திசாலித்தனத்தை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டான்.

'எப்படி அங்கே போவணும்னு உனக்குத் தெரியுமா?' என அந்த இளைஞன் வினவினான்.

'ரெயில்ல ஏறினா, கொண்டு போயி விடப் போறான். இதுல தெரிய என்ன இருக்கு?' என அவனை மடக்கினான் கந்தன்!

'அதெல்லாம் சரித்தான்! அங்கன எறங்கி, பொறவால எங்க போவணும்னு தெரியுமா?' என பதிலுக்கு அவனை மடக்கினான் இளைஞன்.

கந்தனுக்கு குழப்பம் வர ஆரம்பித்தது.

'இவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு. மெட்ராஸ் பக்கத்துல இருக்குன்னு தெரியுமே தவிர, மஹாபலிபுரத்துக்கு எப்படிப் போவணும்னு தெரியாதே!'என எண்ணியவன், அந்த இளைஞனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

இவர்கள் பேசிக்கொள்வதை ஓட்டல்காரர் கவனிக்க ஆரம்பித்தார்!

'சென்னை இங்கேருந்து முன்னூறு மைல் தொலவுல இருக்கு. அது இந்த ஊரைப் போல பத்து பங்கு பெருசு! அதுல நீ போக வேண்டிய எடம் எங்கே இருக்கோ? அங்கே ஆளுங்கள்லாம் ரொம்ப மோசமானவனுக! ஒன்னைப் போல அறியாப்புள்ளைங்களை சுளுவா ஏமாத்திருனுவாங்க!காசு வேற நெறைய செலவளியும். பணம் எம்புட்டு வெச்சிருக்கே?' என்றான் இளைஞன்.

சட்டென இப்படி ஒருகேள்வி வந்ததும், கந்தன் கொஞ்சம் தயங்கினான்.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

கிழவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது கந்தனுக்கு.

பையில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞனிடம்.

ஓட்டல்காரரும் எட்டிப் பார்த்தார் அதை!

'எலே! இங்கே வா நீ!' என அந்த இளைஞனை அழைத்தார்.

அவனிடம் தணிந்த குரலில், ஆனால், சூடாக எதுவோ பேசினார்.

இளைஞன் திரும்பி வந்தான்.

'இந்தாளு சுத்த மோசம். நம்மள சந்தேகப்படறாரு. நாம போவலாம் வா' என்றான்.
கந்தனுக்கு நிம்மதியாயிருந்தது.

எழுந்தான்.

பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில்,'அவனை நம்பாதே! நல்லவனில்ல அவன்' என்றார் ஓட்டல்காரர்.

[தொடரும்]


*************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

முந்தைய பதிவு இங்கே!




7. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின். [666]



"ஓ! இவர் நிஜமாவே ராஜாதான்! திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார்! " என்று எண்ணினான் கந்தன்.

சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.

"இந்தா! இதை வெச்சுக்கோ!" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.

ஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்!

"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,
இந்தக் கல்லுங்க உதவும்.


கேக்கறதைச் சரியாக் கேளு.

ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.
இருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.

இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!

ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!

இப்போ கிளம்பு!

அதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.

ஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.


ஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு
பையனை அனுப்பி வெச்சான்.


பையனும் ஊரு ஊரா சுத்தினான்.

எவனுக்கும் தெரியலை!

கடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

இங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.

அந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.

ரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.

என்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.

சந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.

அந்தாளு சிரிக்கறான்.

'அது கிடக்கட்டும்! அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா! அதுக்கு முன்னாடி, இந்தா!
இந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ" என அனுப்பி வைத்தான்.

அப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்!

"என்ன? எல்லாம் பார்த்தியா? சலவைக்கல்லு ராமரைப் பார்த்தியா? மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா? தங்க மீனெல்லாம் பார்த்தியா?"
என அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி!

பையனுக்கோ ஒரே வெட்கம்!


'இல்லீங்க! எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை!' என அசடு வழிந்தான்.

இந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது! நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா!'
என மீண்டும் அனுப்பி வைத்தான்!

இப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்!

'எல்லாம் பாத்துட்டேங்க!' என்றான்.

'நான் கொடுத்த எண்ணை எங்கே?' என்றான் முதலாளி!

அப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை!

'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'

கந்தனுக்குப் புரிந்தது!


புதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.

அதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது!

கிழவர் எழுந்தார்!கந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.

அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்!

ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்!
*************************



'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.

ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.

அதோ! அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.

'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு! என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்!' கிழவரின் வாய் முணுமுணுத்தது!

ரயில் கிளம்பியது.

தன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.

'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்!
*******************


[தொடரும்]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"

இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!

முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்

இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!

:))))

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, October 02, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8






முந்தைய பதிவு இங்கே!




6. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்." [505]

சரி, படிக்கலாம் என புத்தகத்தை மீண்டும் பிரித்தான் கந்தன்.

ஆனால், மனம் அதில் செல்லவில்லை.

அந்தக் கிழவர் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.

அவர் சொன்னதின் உண்மை அவனை பலமாகத் தாக்கியது.

எவ்வளவு சரியாக அவர் சொல்லியிருக்கிறார் என உணர்ந்தான்.

எழுந்தான்.

அவன் கால்கள் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தன.

டிக்கட் கவுண்டரில் இருந்தவர், "எங்கே போகணும் தம்பி?" என்றார்.

"மெட்ராஸுக்குப் போவ எப்ப ரெயிலு?"

"இங்கேருந்து நேராப் போக முடியாது. ஒரு ரயில் பிடிச்சு ராமேஸ்வரம் போகணும். அங்கே போற அடுத்த ரயில் வர்ற நேரந்தான். பத்து ரூபா பணத்தை எடு." என்றார்.

'இன்னிக்கு இல்லை. நாளைக்கு வரேன்" என நகர்ந்தான்.

"போறான் பாரு! வேலையத்தவன்! பணமில்லை போல!" எனச் சிரித்தார் அவர்!

கந்தனுக்கு துக்கமாய் வந்தது.

'அம்மா சொன்னதைக் கேட்டு, இதுவரை ஆடுகளைப் பார்த்துக் கொண்டு, மானமாய் வாழ்ந்தாச்சு. இப்போ போய் ஏதோ ஒரு கனாவுக்கு
அர்த்தம் கேக்கப்போய் ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லி, நம்ம மனசைக் கலைச்சு, ஒருத்தி இல்லாத பணத்தை இப்பவே புடுங்கப் பாக்கறா! இன்னொருத்தர்
இருக்கற ஆடுங்களைப் புடுங்கப் பாக்கறாரு.இதெல்லாம் தேவையா எனக்கு? இல்லாத புதையலுக்காக இருக்கற ஆடுங்களையும் தொலைக்கணுமா?
இதோ! இந்த ஆடுங்க, எனக்கு சொந்தம்; அதுங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும்; அதுங்க என்னோட பேசும்; இதை விட்டுட்டு,
கனாவுல கண்ட புதையலை நம்பி இதையெல்லாம் தொலைக்கணுமா? ஒண்ணும் புரியலியே எனக்கு!

ஆனா, அதே சமயம், அந்தப் பெரியவரு,
"உன் உள்மனசு என்ன சொல்லுதோ, அதை நம்பு. அப்போத்தான் உலக ஆத்மா உனக்குத் துணையா வரும். எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்"
அப்படீன்றாரு!


அப்பா, ஆத்தா இல்லை எனக்கு. என்னை நம்பி ஆரும் இல்லை இங்கே.
ஆடுங்க ஒண்ணும் சதமில்ல எனக்கு! அதுங்களுக்கும் நான் சதமில்லை. எப்ப வேணும்னாலும் நாங்க ஒர்த்தரை ஒர்த்தர் விட்டு விலகலாம்...
விலகமுடியும்! ஆனா, இந்தப் புதையல்...? என்னால மறக்க முடியும்னு தோணலை. அப்போ... இதுதான் என்னோட நிஜம்!
கனவு இல்லை! நாளைக்கு அவரைப் பார்க்கணும்! அவர் கேட்ட ஆடுங்களைக் கொடுப்பேன்.அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்!

காற்று இப்போது சுகமாக வீசியது!

கந்தனின் முகத்தை வருடியது!

ஒரு புத்துணர்ச்சி பிறந்தது அவனுள்!

ஆம்! எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

இந்தக் காற்றைப் போல!

இந்த ஆடுகள்... செல்லி... இந்த ஊர்.... எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

என் கனவு... எனது நிஜம்!

அதை நான் காணுவேன்!

வீடு நோக்கி உற்சாகமாகத் திரும்பினான் கந்தன்!
*************


மூன்று ஆடுகளோடு மறுநாள் கந்தன் அங்கு வந்தான்.

" எனக்கே ஆச்சரியமாயிருக்கு! எப்பிடி சொல்றதுன்னே தெரியலை. நேத்து நான் வீட்டுக்குப் போனபோது, என்னோட அத்தை மகன் காத்திருந்தான் !
என்னமோ தொழில் பண்ணப் போறேன்னு சொல்லி, ஒண்ணரை டஜன் ஆடுங்களை என்கிட்ட வாங்கிட்டுப் போனான்!
இப்போ இதோ, நீங்க கேட்ட இந்த மூணு ஆடுங்கதான் மிச்சம் இருக்கு என்கிட்ட!அதை நான் ஓட்டிகிட்டு வந்திருக்கேன் உங்களுக்குக் கொடுக்க!
சரிதானே!" என அப்பாவித்தனமாய்க் கேட்டான்.

"அது அப்படித்தான் நடக்கும்! அதான் உலக ஆத்மா செய்யும்!" என்றார் கிழவர்,
"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."
எனச் சொல்லிக் கொண்டே ஆடுகளை ஒரு பார்வையிட்டார்.

ஒரு கால் ஊனமாய் இருந்த அந்த ஆட்டைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.

"புதையல் எங்கே இருக்கு?" கந்தன் ஆவலுடன் கேட்டான்.

"சென்னைக்குப் பக்கத்துல, மஹாபலிபுரம்ன்ற ஊருல! அங்கே கல்லுலியே செஞ்ச கோவில்லாம் கூட இருக்கு! கல்யானை கூட இருக்கும். அங்கேதான் உன் புதையல் இருக்கு!"

கந்தனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!

இதையேதானே அந்தக் கிழவி ஒரு பைசாகூட வாங்கிக்காம சொன்னா. இந்த ஆளு 3 ஆட்டைப் புடுங்கிட்டாரே! ஏமாந்திட்டோமோ? என
எண்ணினான்.

கிழவர் பேசினார். "இந்தப் புதையல் ஒனக்குக் கிடைக்கணும்னா, உன் கண்ணுக்கு எதுர்ல தெரியற சில நல்ல சகுனங்களைப் பாக்கத் தெரிஞ்சுக்கணும்.
ஆண்டவன் எல்லாருக்கும் தனித்தனியா ஒரு வழி வெச்சிருக்கான். எப்படிப் போவணும்னும் சில அடையாளங்களை விட்டிருக்கான்."

ஒரு அழகிய பட்டாம்பூச்சி எங்கிருந்தோ வந்து கந்தன் முன் பறந்தது.

கந்தனுக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது.

ஆத்தா அடிக்கடி சொல்லும்..
'பட்டாம்பூச்சிங்கல்லாம் நல்ல சகுனம்டா ராசா! சாமிகிட்டேருந்து நல்ல சேதி கொண்டு வருது'.

"ஒங்க ஆத்தா சரியாத்தான் சொல்லியிருக்காங்க" என்ற கிழவரின் குரல் அவனைத் தூக்கிவாரிப் போட்டது! 'நாம நினைச்சது எப்படி இவருக்குத்
தெரிஞ்சுது?' என!

கிழவர் தன் மேல்துணியை லேசாக விலக்கி, உள்ளிருக்கும் சட்டைப்பைக்குள் கையை விட்டார்.

தங்க ஒளி மீண்டும் மின்னியது!

[தொடரும்]
****************************

அடுத்த அத்தியாயம் திங்கள் காலை[IST] வரும்!

Read more...

Sunday, September 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

முந்தைய பகுதி இங்கே!



5. "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்" [971]






சட்டென நிமிர்ந்தான் கந்தன்!

இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?

ஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,
"ஏதோ, தேவையானது இருக்கு."
எனச் சொன்னான்.

"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது"
என்றவரைப் பார்த்து,

'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.

"தோ! நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே! எனக்கு ஒண்ணும் புரியலை.
என் புஸ்தகத்தைக் கொடுங்க! நான் போவணும்" என்றான்.

'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்"
என்றான் கிழவன் அமைதியாக!

உறைந்து போனான் கந்தன்!

'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட! இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்
பாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,

கிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.

கிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.

மார்பில் ஒரு தங்க ஒளி!

இலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.

சரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்!

கந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.

அங்கே.....

கந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன!

"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா? நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு!" எனச் சிரித்தான் கிழவன்!

'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்?' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.

'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு! நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு
வெச்சுப்போமே! சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே
தெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு ! தான் இன்னாவா ஆவணும்,
அதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,
ஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு
அவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'

கந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.

'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,
இந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.
ஆகா!இத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக!



கொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட
ஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு
கிளம்புவானுங்க! இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு!"

இன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,



"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.
இதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா?" என அவநம்பிக்கையோடு கேட்டான்.

'ஆமா! அது மட்டுமில்ல! கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே
இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.



கூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!
நீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.

"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு? சரி!....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு?" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்!

திகைத்துப் போனான் கந்தன்!

......."கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே"...........


வாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.

'அதெப்படி ஒங்களுக்குத் தெரிஞ்சுது?' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது!

"அதை விடு! அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு! அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்
வேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்!
வயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான்! நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.
ஆனா, அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே
கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை." என நிறுத்தினான்.


"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்டான் கந்தன்.


"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே! அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே! அதான்!" என்றான் கிழவன்.


'ஓ! அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ?' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.


அவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், "இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்!என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்! ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்!


இப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.அவனுக்கா ஒரே கோவம்!வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றார் கிழவர்.


'அதெல்லாம் சரி! என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"


"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்!"
கிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.


"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்" என்றார்.


'இல்லே! அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்...." என இழுத்தான் கந்தன்.


'அது அந்தக் கிளவியோட! எனக்கு என்ன வந்திச்சு அதுல? பரவாயில்லை! அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்!


"நாளைக்கு இதே நேரம், இதே எடம்! உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா! நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்!


[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6


முந்தைய பகுதி இங்கே!

4. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." [377]



கிழவி சொன்னதை அசைபோட்டுக் கொண்டே வழியில் இருந்த மற்ற கடைகளைப் பார்த்துக் கொண்டும், சில பொருட்களை வாங்கிக் கொண்டும் கந்தன் சந்தையில் சற்று நேரம் சுற்றினான்.

அப்படிச் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இங்கு வருவோர், போவோர் எல்லாரும் அவனுக்கு அதிகம் தெரியாதவர்கள்!

சிலரை அவ்வப்போது பார்த்தாலும், மிக நெருக்கமாக எவருடனும் பழக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கில்லை!

அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.

நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.

அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!

அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.

அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!

சட்டெனச் சிரிப்பு வந்தது கந்தனுக்கு!
கூடவே கோபமும் வந்தது!
செல்லியையும் காணவில்லை.
வயிறு பசிக்க ஆரம்பித்தது.

அருகில் இருந்த பலகாரக் கடைப் பக்கம் சென்று, சோறு வாங்கிக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து, சாப்பிட்டுக் கொண்டே,
விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினான்!

'எப்ப படிச்சாலும் இந்த வாயுல நுழையாத பேருங்களை எல்லாம் நினைவுல வெச்சுக்கவே முடியறதில்ல!' என வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே
படிக்கும் போது,


'தம்பி ஏதோ படிக்கறாப்புல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஒரு வயதானவன்.

செல்லியைப் பார்க்க முடியாமல் போன கடுப்பில் இருந்த கந்தனுக்கு, இந்த ஆளின் வருகை எரிச்சலூட்டியது.

'அதான் தெரியுதில்ல' எனச் சொல்லிக் கொண்டே அவனை ஒதுக்கி மேலும் படிப்பது போல பாவனை செய்தான்.

கிழவன் விடுவதாயில்லை.

'சாப்ட்டு ரெண்டு நாளாச்சு! கொஞ்சம் அரிசி சோறு கொடேன்' எனக் கெஞ்சவே, அரை மனதோடு, தன் சாப்பாட்டு இலையைப்
பாதியாகக் கிழித்து, ஒரு பகுதி சோற்றை அதில் தள்ளி, 'இந்தா. சாப்பிடு!' என அவனுக்கு அளித்தான்.

'என்னா புஸ்தகம் அது?' ஒரு வாய் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, கிழவன் தொடர்ந்தான்.

'அதான் சோறு குடுத்தாசில்ல? இன்னும் எதுக்கு என்னிய தொந்தரவு பண்றே?' எனக் கேட்க வாயெடுத்தவனுக்கு,
அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..."பெரியவங்க ஆராயிருந்தாலும், மரியாதையா நடந்துக்கோ"!

'ஆமா! இதான் படிக்கறேன்' என்றபடி புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.... படிக்க முடியாமல் அவர் இடத்தைக் காலி பண்ணிடுவார்
என நினைத்து!

"ம்ம்ம்! இதுவா?" என்றபடி சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, "நல்ல புஸ்தகம் தான். ஆனா படிக்கக் கொள்ள எரிச்சலா இருக்கும்"
என்றவுடன் கந்தனுக்கு ஒரே அதிர்ச்சி!

இந்தாளுக்கு படிக்க மட்டுமில்ல, இந்தப் புத்தகத்தையும் படிச்சிருக்காரு என்ற உண்மை புரிய, அவர் மேல் ஒரு மதிப்பு வரத் துவங்கியது.

"வேற எதுலியும் சொல்லாத பெரிய விசயம் எதுவும் இதுல சொல்லிறலை. ஒலகத்துல எவனுக்கும் தன்னோட லட்சியம் எதுன்னு தெரியறதில்ல
அப்படீன்றதைத்தான் இதுவும் சொல்லுது. அது மட்டுமில்ல.இந்த ஒலகத்துல இதுவரைக்கும் சொன்ன மஹா பெரிய பொய்யைத்தான்,
ஒவ்வொர்த்தனும் நம்பறான்னு இது முடியுது" என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்!

அதென்ன உலக மகா பொய்யி? என்றான்.

"அதுவா? ஒவ்வொருத்தனும், அவனவன் வாழ்க்கையில ஒரு கட்டத்துல, போராடிப் போராடிப் போயி, அதையும் மீறிகிட்டு தனக்கு நடக்கறதை பொறுத்துக்க முடியாம,
எல்லாம் விதிப்படி நடக்குது, விதி எனக்கெதிரா சதி செய்யுதுன்னு முடிவு பண்ணிடறான். அதான் மிகப் பெரிய பொய்யி!"


"கொளப்பறீங்களே சாமி!"

"என்னா சொல்ல வரேன்னா, தோல்வியைக் கண்டு தொவண்டு போயிடறான். மேலே தொடராம விட்டுர்றான். அதுக்கு விதி மேல பழியைப் போட்டுடறான். அதான் பொய்யின்னு சொல்றேன்."

'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன்

ரொம்ப நல்லது! அப்பத்தான் நீ நெனச்ச மாரி பல ஊருக்கும் போவ முடியும். இல்லியா?"

"நான் நினைக்கறதை இவர் கரெக்டா சொல்றாரே" என்று எண்ணிய கந்தன், கொஞ்சம் மரியாதையோடு,
"அய்யாவுக்கு எந்த ஊரு?" என வினவினான்.

"நமக்கு எல்லா ஊருந்தான்" என்றான் கிழவன்!

"அதெப்படி? எல்லா ஊருக்கும் வேணுமின்னா போவலாம் . ஆனா, எதுனாச்சும் ஒரு ஊருலேர்ந்துதானே வரணும் யாரும்?" என அவரை
மடக்கினான் கந்தன்.

"அப்டீன்றியா? அப்போ சரி. எனக்கு ஊரு சிதம்பரம்னு வெச்சுக்க"

சிதம்பரம் என்ற பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிராத கந்தன், அதை வெளிக்காட்ட விரும்பாமல்,


'ஓ! சிதம்பரமா? அங்கே ஆளுங்கள்லாம் எப்படி?' என அமர்த்தாலாக கேட்டான்.

'ஆளுங்களா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க, அவங்க அவங்க சண்டையை விடாமப் போட்டுகிட்டு!' எனப் பிடி கொடுக்காமல் கிழவன் சொல்ல,பேச்சை மாற்ற எண்ணி,

'அங்கே நீங்க என்ன பண்றீங்க?' என்றான்.

'நான் என்ன பண்றேனா? நல்லாக் கேட்டே போ! நாந்தான் சிதம்பரத்துக்கு ராசா!' என்று ஒரு போடு போட்டான் கிழவன், சிரித்துக் கொண்டே!

'சரியான பைத்தியம் போல! இவருக்கு என்னோட ஆடுங்க எவ்ளவோ மேலு. அதுங்க இது மாரி உளறாது' என மனதுக்குள் எண்ணியபடியே
மீதி சாப்பாட்டை முடிக்க ஆரம்பித்தான்.

பெரியவர் விடுவதாயில்லை.

"என் பேரு கூத்தன்! உம்பேரு கந்தன் தானே! அது சரி.....எவ்ளோ ஆடு வெச்சிருக்கே நீ ?" என்றார்!


[தொடரும்]
********************

அடுத்த பதிவு இங்கே!






Read more...

Saturday, September 29, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

முந்தைய பகுதி இங்கே!






3. "அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்." [96]


"உள்ளே வாங்க தம்பி! இப்படி குந்துங்க! கையி பாக்கணுமா? ரூவால்லாம் அப்பறம் பேசிக்கலாம்! சாஸ்தி இல்ல! வாங்க வாங்க!"
என அவனை வரவேற்றபடியே, விரித்திருந்த பாயைக் காட்டி அதில் உட்காரச் சொன்னாள் அந்தக் கிழவி.

"இல்லே! அதுக்கெல்லாம் நான் வரலை! புதுசா இருக்கேன்னு பாத்தேன். அவ்ளோதான்" என்றவாறு இழுத்த அவனை அன்புடன்
பார்த்தாள், கிழவி.

"சும்மா வா ராசா! நீதான் இன்னிக்கு மொதப் போணி! முட்டத்துலேர்ந்து இதான் எனக்கு மொதத் தடவை இந்த சந்தைக்கு வர்றது!
நீ ஒண்ணும் தர வேணாம். சும்மா கையக் காட்டு. சரியாச் சொன்னேன்னா அப்பால நா கேக்கறதைக் குடு!"
என்றவாறே அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.

அப்படியே ஒரு கோலை எடுத்து, அவன் வலது கையைப் பார்த்தாள்.

"அடேங்கப்பா!" என ஒரு குரல் கிளம்பியது, அவளிடமிருந்து.

கந்தனுக்குள் ஒரு இனமறியா பயம் தோன்றியது.

"கையெல்லாம் ஒண்ணும் பாக்க வேணாம்" என எழத் துவங்கினான்.

"ஆமாமாம்! கை பாக்க வரலை நீ. உனக்கு வர்ற கனாவைப் பத்தி என்னா ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தே!"

கிழவியின் சொற்களைக் கேட்டதும், மந்திரம் போல உட்கார்ந்தான், கந்தன்!

"ஒனக்கு எப்பிடித் தெரியும் ஆத்தா?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.

"கனாவெல்லாம், சாமி நம்மளோட பேசறது. நம்ம பாசைல பேசினா, அது என்னன்னு சொல்லிட முடியும்.
ஆனா, சில சமயம் நம்மளோட பேசாம, நம்ம ஆத்மாவோட பேசும் சாமி! அது ஒனக்கு மட்டுந்தான் புரியும்.

அதுக்கு அர்த்தம் சொல்ல என்னால முடியாது. சரி, அது என்ன ஏதுன்னு பாக்கலாம். அதுக்கு முந்தி நான் சொல்றதுக்கு நீ என்ன தரணும்னு
இப்போவே பேசி முடிச்சிருவோம்." என்று கிழவி சொன்னவுடன்,


"ஆஹா! கிழவி நம்மகிட்ட பணம் கறக்க முடிவு பண்ணிட்டா! சாக்கிரதையா இருக்கணும்"
என மனதுக்குள் முடிவு செய்து கொண்டு,

"ஒரே ஒரு கனவு இதுவரைக்கு ஒரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு! அது என்னான்னு சொல்றேன். கேட்டுக்கோ.

நான் என் ஆடுங்களை மேச்சுகிட்டு இருக்கேன். அப்போ ஒரு சின்னக் கொளந்தை வந்து, என்னோட ஆடுங்களோட சிரிச்சுகிட்டே விளையாடுது.
சரி, கொளந்தை தானேன்னு நான் அத ஒண்ணும் சொல்லலை. விளையாடிட்டு இருக்கற கொளந்தை, திடீர்னு என்னோட ரெண்டு கையையும்
பிடிக்குது.
அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் ஒரு புது எடத்துல இருக்கோம். அங்கே நெறய கோவில்லாம் இருக்கு!

கல்லுல செஞ்ச யானை கூட இருக்கு. பக்கத்துலியே கடலும். அந்தக் கொளந்த, .......வயசுல்லாம் தெரியலைன்னு சொல்றேன்ல!....
அது சொல்லுது,நீ இங்கே வந்தியானா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும். இதோ... இங்கதான்..." எனச் சொல்லிகிட்டே இருக்கையில,
சட்டுன்னு முளிப்பு வந்திருச்சு.... ஒவ்வொரு தடவையும்!....... இதுக்கு என்ன அர்த்தம்?
சொல்லு. சரியாச் சொன்னியானா,
துட்டு எவ்ளோ தரலாமின்னு பேசுவோம்" என அமர்த்தலாகச் சொன்னான் கந்தன்.

கிழவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வாயிலிருந்த வெற்றிலை பாக்கைத் துப்பிவிட்டு, கொஞ்சம் தண்ணி குடித்தாள்.

மறுபடியும், ஊறின பாக்கைக் கடித்துக் குதப்பி ஒரு வெற்றிலையைக் கிள்ளி, நிதானமாகச் சுண்ணாம்பைத் தடவினாள்.

நாலாகக் கிள்ளி அதை வாயின் இடது பக்கம் அடக்கி,பொறுமையாக மென்றாள்.

கூடவே, கொஞ்சம் கட்டைப்புகையிலையும் வெட்டிச் சேர்த்தாள்.

கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.

'செல்லியை வேற பார்க்கவில்லை இன்னும்' என்ற எண்ணமும் கூடச் சேரவே, கிழவியைப் பார்த்து,

" இந்தக் கனாவுக்கு என்ன அர்த்தம்?
தெரியுமா, தெரியாதா. சொல்லு ஆத்தா! எனக்கு சோலி இருக்கு"
எனக் கேட்டான்.

"அட! பொறுப்பா! ரொம்பவே அவசரப் படறியே! என்னா மாரி கையி இது! சரி! நீ எனக்கு ஒண்ணும் தரவேணாம் இப்ப! ஆனா, ஒரு கண்டிசன். புதையல் கிடைச்சதும் அதுல பத்துல ஒரு பங்கு எனக்குத் தரணும் நீ!
சம்மதமா?"

கடகடவெனச் சிரித்தான் கந்தன்.

"அப்பாடா! அப்போ இப்ப ஒண்ணும் தர வேணாண்ற! சரி, கனாவுக்கு அர்த்தம் சொல்லு" என ஒரு நிம்மதியுடன் சொன்னான்.

"மொதல்ல, எனக்கு சத்தியம் பண்ணிக் குடு, பத்துல ஒரு பங்கு தருவேன்னு சொல்லு. கனாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்"
என மீண்டும் கிழவி வற்புறுத்தவே,

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆவலில், "ம்ம்! சரி, சரி! நீ சொல்லு!"
என்றவுடன் கிழவி ஆரம்பித்தாள்....




"இது நான் முன்ன சொன்னமாரி, ஆத்மாவோட பேசற கனா இல்லை. நமக்கெல்லாம் புரியற ஒரு கனாதான். ஆனா, சொல்லப்போற விசயம்தான்ரொம்ப சிக்கலானது! அதுக்குத்தான் அந்த பத்துல ஒரு பங்கு கேக்கேன். சரியா!.... கவனமாக் கேட்டுக்க!நீ உடனே கிளம்பி அந்த எடத்துக்குப் போவணும்.சென்னப்பட்டணம் பக்கத்துல இருக்கு அந்த எடம். அப்பிடி ஒண்ணு இருக்கான்னு எனக்கு தீர்மானமா தெரியாது. ஆனாக்க, ஒரு கொளந்தை வந்து சொல்லிச்சுன்னா, அது கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கணும்.அங்கே ஒனக்கு நிச்சயமா புதையல் கிடைக்கும். நீயும் பெரிய பணக்காரனா ஆகப் போறே!"


கந்தனுக்கு எரிச்சல் வந்தது!

'இதைக் கேட்க இங்கு வரணுமா? அதுதான் கனவில் வந்து விட்டதே. கிழவி ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லையே'என எண்ணியபடியே,

"என் நேரத்தை இதுல செலவளிக்கறதா உத்தேசம் இல்லை" என்றவாறே எழ ஆரம்பித்தான்.


அவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழவி தொடர்ந்து பேசலானாள்.

"அதான் சொன்னேன்ல! இது கொஞ்சம் சிக்கலான கனான்னு! சுளுவா இருந்தா சொல்லியிருப்பேன்ல? கை பாக்கறது முகராசி பாக்கறதுல்லாம்கூட கத்து வெச்சிருக்கேன்! இரு" என்றதும்,



கிழவி சமாளிக்கிறாள் போல என நினைத்து, "அப்போ அந்தக் கோயிலுக்கு நான் போகலைன்னா, ஒனக்கு ஒண்ணும் தரவேண்டியதில்லைதானே"என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.


"ஆமாமாம். சரி, நீ புறப்படு! ஒரு வரும்படியும் இல்லாம இன்னிக்கு முதப்போணி ஆயிருக்கு! பொளப்பைப் பாக்கணும். நா சொன்னதை மட்டும் மறந்திராதே! " என, கிழவி அவனை அனுப்பிவைத்தாள்.

[தொடரும்]

***************************

அடுத்த அத்தியாயம்!

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4

முந்தைய பகுதி இங்கே!




2. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு." [335]


செல்லி அவனுக்குத் தெரிந்த பெண்தான்!

ஒரு 12-14 வயசிருக்கும்.

பள்ளியில் அவனோடு கூடப் படித்தவள்.

'அஞ்சாம் கிளாஸோட பொட்டைச் சிறுக்கிக்கு படிப்பெல்லாம் போறும்'னு வீட்டில் சொல்ல, அவளும் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

எப்பவாவது சந்தைக்கு வரும் போது அவனைப் பார்த்து அன்புடன் சிரிப்பாள்.

"நல்லா இருக்கியா செல்லி?" "ம்.. நீ...?" இவ்வளவுதான் அவர்கள் பேசிக் கொள்வது.

போனவாரம் பார்த்தபோது, கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "அப்ப இன்னும் நீ படிக்கிறியா என்ன?"
என வெகுளித்தனமாகக் கேட்டாள்.

"வாத்தியார் குடுத்தாரு. பாரதக் கதை! பொளுது போகச்சொல்லி படிக்கறேன்."

"ஆடு மேக்கறவனுக்கு படிப்பு இன்னாத்துக்காம்?" எனத் தொடர்ந்தாள்!

செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.

ஆனால், கேட்டது செல்லியாயிற்றே!

அவளைப் பார்த்து சிரித்தபடியே சொன்னான், "சார்தான் சொன்னாரு. நெறயப் படிக்கணுமாம். அல்லாரையும் பாக்கணுமாம்.
அது மட்டுமில்ல செல்லி, நா இப்படியே இங்கியே இருப்பேன்னு நெனைக்காதே! நான் நம்ம ஊரையெல்லாம் தாண்டி, பட்டணம்லாம் போவேன்!
நெறய ஊரைப் பாக்கணும் எனக்கு!" என கண்களில் ஒரு ஒளி தெரிய அவன் சொன்னதைக் கேட்டதும்,

"தோ பார்றா! தொரை சீமைக்குப் போவப் போறாராம்! அப்டீன்னா எங்களைல்லாம் மறந்திருவேன்னு சொல்லு" எனச் செல்லியும்
உற்சாகமாகச் சீண்டினாள்.

"சேச்சே! உங்களையெல்லாம் மறக்கமுடியுமா? அதெல்லாம் எங்க போனாலும் உன் நெனப்பு இருக்கும். நீதான் என்கிட்ட
எப்பவும் பிரியமா பேசறியே! ஒன்னிய எப்படி மறக்கறது?" என இவனும் பதிலுக்குச் சொன்னதும், வெட்கத்துடன் ஒரு
புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் போனது இவன் மனதில் ஓட....

"இரு புள்ள! இன்னும் கொஞ்ச நேரம் களிச்சுப் போவியாம்!" என்று வாய்விட்டுச் சொன்னவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் பார்க்கலியே என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அவளை நினைத்துக் கொண்டே, தனக்குள் பேசியதை எண்ணி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்!

'ம்.. ஒருவேளை செல்லி வந்தாலும் வரும்! அதுகிட்ட இந்தக் கனவைப் பத்தி சொல்லணும். அது கொஞ்சம் விவரமான புள்ளை.'
என முடிவு செய்து கொண்டான்.

**********
சந்தை!

எத்தனை விதமான மனிதர்கள்?
என்னவெல்லாம் தேவைகள்?

கூறு கட்டி வைத்திருக்கும் காய்கறிக்கடைகள், ரிப்பன், ஸ்லைடு, சாந்துப்பொட்டு, பவுடர் என ஒப்பனைப் பொருள்களை அடுக்கியிருக்கும் சிறிய கடைகள், அரிசி, மிளகாய், உப்பு இதெல்லாம் மலைபோல குவித்து வைத்து வருவோர் போவோரையெல்லாம் கூவி அழைக்கும் வியாபாரிகள், பக்கத்திலேயே, ஆடு, மாடு விற்க, வாங்குவோரைக் குறி வைத்து அலையும் தரகுக் கும்பல், சிறுவர், சிறுமியருக்கான பொம்மை, ஜவ்வுமிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அவரவர் கேட்கும் வடிவத்தில் நொடியில் தயாரித்துக் கட்டிவிடும் கடைக்காரர்கள், குடை ராட்டினம் என சந்தை களை கட்டியிருந்தது.

இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன் கண்களில்,
அந்தக் கொட்டகை பட்டது!

"உள்ளத உள்ளபடியே சொல்லும் ஜக்கம்மா அருள்வாக்கு" என்ற போர்டு அவனை ஈர்த்தது.

கையில் ஒரு சிறிய பிரம்புடனும், ஓலைக் காதோடும், அடக்கி வைத்த புகையிலையுடனும், மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றி நிறையக் குங்குமத்துடன் அமர்ந்திருந்த
அந்த பருத்த கிழவி, அவனைப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள்!

[தொடரும்]
************************************************

Read more...

Thursday, September 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3


முந்தைய பகுதி இங்கே!
1.

கருக்கலில் கண் விழித்தது முதலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான், கந்தன்.

பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து, வாய் கொப்பளித்து, முகம் அலம்பி,

"அம்மா! நான் போயிட்டு வரேன்" என்று, சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
குடிசையை விட்டு வெளியே வந்தான்.

பட்டி அருகே சென்றதுமே, "மே.....ஏ" என அன்புடன் வரவேற்றன ஆடுகள்.

படலைத் திறந்து, "தா, தா" என அவைகளை வெளியே விரட்டி, படலை மீண்டும் மூடிவிட்டு, உற்சாகமாக
சீட்டி அடித்தபடியே அவைகள் பின் சென்றான்.

மனம் இன்னமும் அதிகாலையில் அவன் கண்ட கனவைப் பற்றியே சந்தோஷத்துடன் அசை போட்டது.

இந்த வாரத்தில் அவன் இரண்டாம் முறையாகக் கண்ட கனவு இது!

அப்போது....மந்தையிலிருந்து பிரிந்து தனித்துச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஆட்டைப் பார்த்தவுடன், கையிலிருந்த குச்சியைத்
தரையில் தட்டியபடியே திரும்ப மந்தைக்குள் அதைத் தள்ளிவிட்டு, வழக்கமாக மேய்ச்சலுக்கு விடும் இடத்தை அடைந்தான்.

ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாழடைந்த கோவில்.

சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ களவாடிச் சென்றபின்னர்,பூஜைகள் நின்று போய், வருவோரின்றி, சிதிலமாகிக்
கிடந்த கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.

அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் அவனுக்கு அத்துப்படி!அந்த கோவில். சாமியில்லாத கர்ப்பக்கிரகம். இன்னமும் நிக்கற தெற்குச் சுவர். அதன் பின்னாலிருக்கும்,
ஓங்கி வளர்ந்த அந்தப் புளியமரம்! அதன் அடியில்தான் ஆடுகள் படுத்துறங்கும்.

கொண்டுவந்த கஞ்சிக்கலயத்தை, உள்மேடையில் ஓரமாக வைத்தபின்னர், 'கண்ணுங்களா! நல்லா மேயுங்க!'
என அன்பாகச் சொல்லியபடியே கையோடு எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.

அவனோட அம்மா விட்டுச் சென்ற ஒரே சொத்து அந்த ஓலைக்குடிசையும், 15 ஆடுகளும், இந்தப் புத்தகமும் தான்.

அம்மா இருந்தவரைக்கும், கஞ்சியோ, கூழோ கொடுத்து அவனை இஸ்கோலுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆத்தாவுக்கு உடம்புக்கு வந்து சீக்காப் படுத்தப்பதான், இவனுக்கு படிக்க முடியாமப் போனது.

வாத்தியாருக்கு இவன் மேல ரொம்பப் பிரியம்.

இந்த நிலைமையிலியும் படிக்க வரானேன்னு.

இப்ப முடியாமப் போச்சுன்னு ஆனதும், ரொம்பவே வருத்தப்பட்டார்.

"கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே" எனச் சொல்லி,
இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீக்கிரமே அம்மாவும் செத்துப் போக, இப்போ கந்தனுக்கு இதான் வாழ்க்கை.

காலையில் மேய்ச்சலுக்கு இங்கே வருவது,

சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
மீதிப் பொழுதை அங்கேயே கழிப்பது,

மனசிருந்தா, கோவிலைச் சுற்றி இருக்கற புதரை வெட்டி சீர் படுத்த முயல்வது,


சூரியன் உச்சிக்கு வந்ததும், கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டு, கொஞ்சநேரம் கொண்டுவந்த புத்தகத்தைப் படிப்பது,

ஆடுகள் எல்லாம், நிழலுக்காக வந்து அந்தப் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து அசை போடுவதைப் பார்த்த்படியே கொஞ்சம் கண்ணசருவது,

சூரியன் மேக்கால மறைஞ்சதும், 'வரேன் சாமி' என இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,


'எலே! வாங்கடே போலாம்!" எனச் சொல்லி வீடு திரும்புவது.

கைகால் கழுவிய பின்னர் அடுப்பை மூட்டி, கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சிட்டு, மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு
சற்று நேரத்தில் உறங்கப் போவது.

வாரம் ஒருமுறை சந்தைக்குப் போய், ஆட்டுரோமம் போன்ற பொருட்களை விற்று, நல்ல விலைக்கு வந்தால் ஆடுகளை வாங்குவதோ, விற்பதோ செய்து,
வீட்டுக்குத் தேவையான சாமான்களையும் கொஞ்சம் வாங்கி, தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்து வந்தான் கந்தன்.

சின்னப்பையன், அதுலியும் அப்பன், ஆத்த இல்லாத புள்ளைன்னு எல்லாருக்கும் இவன் மேல அனுதாபம்!


காலையில் எழுந்து சந்தைக்குப் போனான்.

அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்!

[தொடரும்]
************************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, September 26, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"


"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" [2]


முந்தைய பதிவு இங்கே!


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


[இதுதான் நான் முதலில் எழுதிய முன்னுரை இக்கதைக்கு!

45 நாட்களாக வராததற்கு ஒரு விளக்கமாக முந்தைய பதிவு எழுதினேன்.

எனவே இதையும் படியுங்கள்!]

"ஆன்மிகம் கலங்கலின்றி தெளிவாய் ஆகிக் கொண்டே இருக்கிறது உம்முள்"!

சற்றும் எதிர்பாராமல், இப்படி ஒரு ஆசி ஒரு பெரியவரிடமிருந்து எனக்கு வந்தது சில நாட்களுக்கு முன்னர்.

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கு நான் அருகதையானவனா, இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இப்படி ஒரு ஆசி கிடைப்பதே பெரிய விஷயம்தானே!

எல்லாவிதமான ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு, ஈடுபட்டு, உள்ளுக்கும் வெளியிலுமாக அலைபடும் ஒரு சாதாரண மனிதன்.

ஆனால், ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவானவன்.

அன்பு செலுத்துவதில், அதை வெளிப்படுத்துவதில்.

செலுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

வெளிக்காட்டுவதில்தான் !

அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...

இப்படி வெளிப்படும் நேரங்கள்தான் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும் நேரங்களாகப் போய்விடுகிறது.

வெகுவாகக் குறைத்து வருகிறேன், இத்தருணங்களை.

இதுதான் கலங்கலின்றித் தெளிவாதலோ!

பார்க்கலாம்!

இப்படி எண்ணங்கள் என்னுள் வந்து கொண்டிருந்த போது, சில மாதங்களாக நான் எழுத நினைத்து,
ஒத்திப் போட்டுக் கொண்டே வரும் ஒரு கதையை இங்கு ஒரு தொடராக வெளியிட எண்ணுகிறேன்.

இது என் கற்பனைக் கதை அல்ல.

நான் படித்த சில புத்தகங்களினால் எனக்குள் எழுந்த ஒரு பாதிப்பு எனச் சொல்வதே சரியாகும்.

கருத்து அங்கிருந்து.

களம் நான் அமைப்பது.

இது எந்தவொரு சித்தரைப் பற்றிய கதையும் அல்ல.

ஒரு மிக மிகச் சாதாரணமான மனிதன், தனது கனவை விடாது பற்றிச் செல்லுகையில் எப்படி அது என்னவாகுகிறது என்பதைப் பற்றிய கதை!

அப்போது ஒரு சித்தர் இதில் வருகிறார்!

ஆன்மீகத் தேடலில் இருப்போர்க்கு விடையாக அமையுமா?

தெரியாது.

அவரவர் தேடலை, அதில் அவர்கள் அடைந்திருக்கும் சாதனை அளவை, வளர்ச்சியைப் பொறுத்தது.

திடீர் திருப்பங்கள் இருக்காது.

ஆனால், ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு நாள் விட்டு ஒருநாளாகப் பதிய எண்ணம். [திங்கள், புதன், வெள்ளி என]

என் முதல் முயற்சி இது.

நல்லபடியாக அமைய குருவருள் வேண்டி, இறையருள் நாடி, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கோருகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இதோ வந்துவிட்டேன்!

"இதோ வந்துவிட்டேன்!"




'எங்கே உங்களைக் காணோம்? என்ன ஆயிற்று?' எனப் பல மடல்கள், தொலைபேசிகள்!

ஆம்! நான் காணாமல்தான் போயிருந்தேன்!

கடந்த 45 நாட்களாக ஒரு தவம்!

ஒரு நாவல் எழுத ஒரு உந்தல்!

அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனல்ல நான்.

என் மனதில் தோன்றியவற்றை கவிதைகள் மூலம்[கொத்ஸ் அதைக் கவுஜ என்பார்!] அவ்வப்போதும், திருக்குறள், திருப்புகழ் பாடல்களில் சிலவற்றையும் எனக்குத் தெரிந்தவரையில் எழுதியது தவிர, பெரிதாக ஒன்றும் எழுதியதில்லை.

ஆனால், ஒரு சில ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து வருகையில், இவற்றையொட்டி ஒரு கதையைச் சொல்லவேண்டும் என ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒரு சகுனம் எனக்குத் தெரிந்தது.

பொதுவாகவே இந்த சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன் நான்.

நடந்த நிகழ்வுகள் இதை உறுதிப் படுத்தின.

எழுதத் தொடங்கினேன்!

என்னால் முடியுமா என்ற ஒரு அவநம்பிக்கையோடே!

ஆனால், இது உருவான விதம் எனக்குள்ளேயே ஒரு பிரமிப்பை உண்டுபண்ணியது என்றால், அது மிகையில்லை.

இதை எழுத எனக்கு ஊக்கம் அளித்த ஒரே நபர் என் மனைவி!

[உற்சாகமூட்டியவர் எனது இனிய நண்பர் திரு.கோவி.கண்ணன், இதன் களம் என்னவென்று தெரியாமலேயே!]

ஒவ்வொரு அத்தியாயமும் எழுதிய பின்னர் அதைப் படித்து, அப்படியே இதை ஒரு திருத்தமுமின்றி என் மனைவி அங்கீகரித்தபோதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது.

இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!

ஏதோவொரு சக்தி மேலிருந்து தூண்டுவதால் நிகழ்வதென்!

இந்தக் கதை சொல்லப்பட வேண்டிய ஒரு கதை!

நான் அதற்கொரு கருவி!

அவ்வளவே!

இதைப் படிப்பவர்க்கும் அவ்வாறே!

செல்ல வேண்டியவர்க்கே இது செல்லும்!

இதை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாமே என ஒரு எண்ணம் வந்தது, முதலில்!

நம்மை அங்கீகரிப்பவர்களே..... அவர்கள் எவ்வளவு பேராயினும் சரி.... அவர்கள் பார்வைக்கே இது போய்ச் சேரட்டும் என ஒரு ஆணை மனதில் உதித்தது!

எனவே இது இங்கு... உங்கள் பார்வைக்கு!

படித்தவர்கள் தயவு செய்து எங்காவது ஒருமுறை தங்கள் முகத்தைக் காட்டினால் மகிழ்வேன். அது உங்கள் விருப்பம்! கட்டாயமில்லை.

இத்தனை பீடிகைக்குப் பின்னர், இனி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.

நிச்சயம் இது உங்களுக்குப் பிடிக்கும்.

இனி வருவது.....

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்!"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP