Friday, October 03, 2008

"விநாயகர் அகவல்" -- 15

"விநாயகர் அகவல்" -- 15
முந்தைய பதிவு

நான் வணங்கும் பெரியவர் சொன்னது!

"பெரியோர்களை மெய்யாக பணிந்து தெரிந்ததை சொல்கிறேன்.

சீதக் களபச் செந்தாமரை பூம்பாதச் சிலம்பு பலஇசை பாட...

சீதம் (seetham) எனும் சொல் பொதுவாக குளிர்ச்சியை குறிக்கும். சீதம் எனும் சொல் சந்தனத்தையும் குறிக்கும். களபம் என்றால் கலவை; வாசனையுடன் கூடிய கலவை எனும் பொருளைத் தரும். ஆக சந்தனகலவை பூசப்பெற்ற செந்தாமரை பூ போன்ற திருவடிகளில் உள்ள சிலம்பு பல இசையை பாட...என்னும் நேரடி பொருள் வருகிறது.

ஒரு யோகியரின் ஒவ்வொரு சொல்லும் பெரிய விளக்கத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும். காரணம் ஒரு சொல் இங்கே தவறினாலும், சங்கேதமாக இருக்கும் இவற்றின் பொருளை சிந்திக்கும் யோக‌ மாணவன் திசை தடுமாறி விடக்கூடும். ஆகவே அத்தனை சொற்களும் எந்த அர்த்தத்தை ஒரு சேர காண்பிக்கின்றவோ அதுவே சரியானதாக ஆகும்.

சீதா எனும் சொல்லிற்கு ஏர்க்காலினால் உழும் போது நிலத்தில் ஏற்படும் உழுத அடையாளம் எனும் பொருளுண்டு. அதில்தான் விதையை தூவுவார்கள் அல்லது நீர் பாய விடுவார்கள். அதனால்தான் சீதா என்று ஜனகரின் மகளுக்கு பெயர் வந்தது. நிலத்தில் உழுத போது அந்த பிளவில் அவள் கிடைத்ததால் அவளுக்கு அந்த பெயர்.

மூலாதாரம் பிருத்வி தத்துவமாகும். அதாவது நிலத்தின் தன்மை கொண்டது. நிலத்தின் தன்மையை உள்ளும்,புறமும் அறிவதற்கு, ஆள்வதற்கு உதவும் இடம். அதற்கு கீழே குல குண்டம் எனும் இடமே குண்டலினியின் இடம். பிராணனால் அங்கு உழுது கீறப்படும் போது அவள் விழித்தெழுகிறாள் அல்லது வெளிப்படுகிறாள். ஆக யோக மார்க்கத்தில் சீத எனும் சொல் வரும்போது சங்கேதமாக குலகுண்டம் சுட்டிக் காட்டப்படுகிறது. ஜனன உறுப்பிற்கும், குதத்திற்கும் இடையே சற்று உட்புறம் அமைந்திருப்பதாக பெரியோர் கண்டறிந்து சொல்கின்றனர்.ஆங்கிலத்தில் Perineum என்பார்கள்.

களபம் என்றால் கலவை! சரி என்ன கலக்கிறது? அந்த குலகுண்டத்தில் (perineum) குண்டலினியுடன் பிராணவாயு கலக்கிறது. இரண்டும் சேர்ந்து மேலே ஒன்றாக எழும்புவதால் இங்கு களபம் என்ற சொல் பயன்படுகிறது.

சரி! வேறு என்ன பொருள் இந்த சொற்களுக்கு வருகின்றன? அவையும் இதே பொருளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த சங்கேத குறிகளை கண்டறிந்தது சரியென்று ஆகும்.

சீத‌ம் என்றால் ச‌ந்த‌ன‌ம், க‌ள‌ப‌ம் என்றால் க‌ல‌வை! ச‌ந்த‌ன‌ம் என்ப‌து வாச‌னையை குறிக்கும். நாற்றம் (வாசனை) என்ப‌து பிருத்வி த‌த்துவ‌த்தின் த‌ன்மாத்திரையாகும். அதாவ‌து மூலாதார‌த்தின் வேலை. க‌ள‌ப‌ம் என்றால் வ‌ழ‌க்க‌ம் போல் க‌ல‌வை! ஆக‌ வாச‌னை என்றாலே வாயு இல்லாம‌ல் இல்லை! காற்று இல்லாம‌ல் ம‌ண‌த்தை உண‌ர‌முடியாது. ஆக‌ இங்கே ச‌ந்த‌னம் என்ப‌து மூலாதார‌த்தில் வ‌ந்த‌ வாயுவை குறிக்கும். எது க‌ல‌க்கிற‌து? குண்ட‌லினி! ஆக‌ இந்த‌ முறையிலும் சீத‌ க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள் வ‌ருகிற‌து.

சீத‌ம் என்றால் ம‌து என்று ஒரு பொருள் உண்டு! க‌ள‌ப‌ம் என்றால் யானைக்க‌ன்று என்று ஒரு பொருள் உண்டு! ம‌துவை போன்ற‌ ம‌தநீரால் ம‌த‌மான‌ யானைக்க‌ன்று என்று பொருள் வ‌ருகிற‌து. ச‌ஹ‌ஸார‌ர‌த்தில் முழு க‌ட‌வுளாய் விள‌ங்குப‌வ‌ர் இங்கே முத‌ற்க‌ட‌வுளாயும் இருக்கிறார்.

மேலே இருப்ப‌வ‌ர் ம‌ஹாக‌ண‌பதி என்றால் இவ‌ர் பால‌க‌ண‌பதி. எல்லா ஆதார‌ தெய்வ‌ங்க‌ளுக்கும் மிக‌ இளைய‌ தெய்வ‌மாய் இருப்ப‌தால் பால‌விநாய‌க‌ன் ஆகிறார். மேலே இருக்கும் ம‌ஹாகணப‌தி முழுமுத‌ற்க‌ட‌வுளின் சிர‌சு என்றால் மூலாதார‌ க‌ண‌பதி பாத‌ம் ஆகிறார். ஆகவே சீத‌க் க‌ள‌ப‌ப் பூம்பாத‌ம் இங்கேயும் பொருந்துகிற‌து. இங்கே ம‌து போன்ற‌ ம‌த‌நீராக‌ ஆவ‌து கீழே வ‌ந்த‌ வாயுவே! குண்டலினி மூலாதார‌த்தை தொடும்போது ஒரு விளைவு ஏற்பட்டு அங்கு குண்ட‌லினியே விநாய‌க‌ராய் காட்சி அளிக்கிறாள். என‌வே இங்கும் சீத‌க்க‌ள‌ப‌ என்றால் வாயுவுட‌ன் சேர்ந்த‌ குண்ட‌லினி எனும் பொருள் வ‌ந்துவிடுகிற‌து.


சீத‌ம் என்றால் மேக‌ம் என்றும் ஒரு பொருளுண்டு. குளிர்ச்சியினால் அத‌ற்கும் அந்த‌ பெய‌ருண்டு. மேக‌ம் என்ப‌து வாயுநிலையை தொட்ட‌ நீரே! ஆக‌ இங்கும் மேக‌ம் வாயுவை குறிக்கும் சொல்லாக‌ யோக‌ம் சொல்லும். அத‌னால்தான் ப‌ல‌ யோக‌ நூல்க‌ளில் ம‌ஹாவாயுவை மேக‌ம் என்று குறியீடாக‌ சொல்லும் வ‌ழ‌க்க‌ம் உண்டு. பின் க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள்! யானைக்க‌ன்று என்று வைத்துக் கொண்டாலும், கலவை என்று வைத்துக்கொண்டாலும் குண்ட‌லினியுட‌ன் சேருவ‌தையே குறிக்கும்.
சீத‌ம் என்றால் நீர்!
வாயுவே கீழே இற‌ங்கும் போது அட‌ர்த்தியினால் நீர்த‌ன்மை பெறுகிற‌து. என‌வேதான் வாயு மூலாதார‌த்தை நோக்கி இற‌ங்குகிற‌து. அங்கே மூல‌க்க‌ன‌லால்தான் மீண்டும் சுத்த‌ வாயுவாக‌ ஆகிற‌து. திரும்ப‌ க‌ள‌ப‌த்துட‌ன் சேர்த்தால் அதே பொருள் வ‌ரும்.

சீத‌ம் என்றால் பிர‌திப்ப‌லிக்க‌க்கூடிய‌ என்ற‌ பொருளும் உண்டு. நீரை சீத‌ம் என்று சொன்ன‌தால்தான் இந்த‌ பொருள் வ‌ந்த‌து என்றாலும். உண்மையில் ம‌ஹாவாயு நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப‌லிப்ப‌தால் அத‌னை அந்த‌ பெய‌ரில் சில‌ யோக‌ நூல்க‌ளில் சொல்லுவ‌துண்டு!
நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப்ப‌லிப்ப‌து என்றால்?
சூரிய‌னை நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ போது க‌ண்ணாடியில் அத‌னை பிர‌திப‌லிக்க‌ செய்து காண்ப‌தை போல‌.
ம‌ஹாவாயு ஆத்ம‌ த‌ன்மையை பிர‌திப‌லித்து காட்டும் த‌ன்மை கொண்ட‌து. என‌வே அதை க‌ண்ணாடி என்றும் சொல்வ‌ர். ம‌ஹாவாயு ச‌ரி வ‌ர‌ ஏறாத‌ யோகிக‌ள் என‌க்கு இன்னும் க‌ண்ணாடி போட‌வில்லைய‌ப்பா என்று ப‌ரிபாஷையில் சொல்வ‌தை கேட்டிருக்கிறேன்.

செந்தாம‌ரை பூம்பாத‌ சில‌ம்பு ப‌ல‌ இசை பாட‌

செந்தாம‌ரை போல‌ சிவ‌ந்த‌ நிற‌த்தில் இருப்ப‌து மூலாதார‌ம் மாத்திர‌மே! பாத‌ம் என்ப‌தை கால் என்றும் சொல்வ‌ர். கால் என்றால் காற்று! பாத‌ம் என்றாலே யோக‌ முறையில் காற்றுதான். மூல ஆதாரமாகிய‌ பாத‌த்தில் விழுவ‌து காற்று. அத‌ன்பிற‌கு அது ம‌ஹாவாயுவாக‌ ஆகிவிடும். சில‌ம்புத‌லால் சில‌ம்பு என்ற‌ பெய‌ர் அத‌ற்கு வ‌ந்த‌து. இங்கே வாயுவான‌து சுழுமுனை வ‌ழியே நுழைய‌ ஆர‌ம்பித்த‌தில் இருந்து செவியில் சின்சின் எனும் ஒரு ஒலி எழும்ப‌ ஆர‌ம்பிக்கிற‌து. சுவ‌ற்றுகோழி க‌த்துவ‌தை போல‌. சில் வ‌ண்டு ச‌த்த‌ம் எழுப்புவ‌தை போல‌. சில்வ‌ண்டின் ச‌த்த‌த்தை கொலுசு ச‌த்த‌ம் என்றெண்ணி ப‌யந்த‌வ‌ர் ப‌ல‌ருண்டு அல்ல‌வா?

மூலாதார‌த்தில் வாயு நுழைந்த‌ அக்க‌ண‌ம் அந்த‌ கொலுசு ச‌த்த‌ம் போன்ற‌ சின்சின் எனும் ஒலி கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. அதன் பின் வாயுவின் நகர்தலால் ஒவ்வொரு இசை கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. சின் எனும் ஒலி, ம‌த்த‌ள‌ம், புல்லாங்குழ‌ல், க‌ண்டா மணி, வ‌ண்டு,வீணை, ச‌ங்கு, அலையோசை, இடி போன்ற‌ ச‌த்த‌ங்க‌ளும் கேட்கின்ற‌ன‌. இதையே ப‌ல‌ இசை பாட‌ என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

பூ என்ற‌ சொல் பூவாகிய‌ ஆதார‌த்தையும் குறிக்கும்; பூ ஆகிய‌ பூமி எனும் மூலாதார‌த்தையும் குறிக்கும்.

இப்ப‌டி சிந்தித்து அறியும் மாணாக்க‌ன் த‌ன் அனுப‌வ‌த்தின் மூல‌மாக இவை உண்மை என்னும் ஊர்ஜித‌ப்ப‌டுத்திக் கொள்கிறான்.

இறைவன் அருளால் தவறின்றி சொல்ல முயல்கிறேன். வழக்கம் போல் பெரியோர்களும், நண்பர்களும் காணும் தவறுகளை பொறுத்து விடுங்கள்."


மேலே சொன்னது அனைத்தும் நான் வணங்கும் பெரியவர் சொன்னவை!

**************************

[தொடரும்]

Read more...

Wednesday, October 01, 2008

"விநாயகர் அகவல்" -- 14

"விநாயகர் அகவல்" -- 14



முந்தைய பதிவு

பல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.

இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி அன்னைக்கு ஒரு ஆலயம் எழுப்பி, மிகச் சிறந்த இறைப்பணி செய்துவரும் சைதன்யானந்தா என்னும் ஒரு பெரியவரின் அருளுரையில் இதற்கான பொருள் விளக்கம் கேட்க நேர்ந்தது..... முருகனருளால்.

இதன் ஆர்வமாய் மேலும் இதைப் படிக்கத் தொடங்க எண்ணித் தேடியபோது மதுரைத் திட்டத்தின் கீழ் திரு ரஜபதி ஐயா எழுதிய உரைவிளக்கம் கிடைத்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் பிரமிப்பூட்டின.

நான் வணங்கும் ஒரு பெரியவரின் ஆசியுடன், அவர் தந்த சில விளக்கங்களுடனும், இதற்கு எனது பாணியில் ஒரு எளிய விளக்கம் கொடுக்க எண்ணினேன்.

அதன் விளைவுதான் சென்ற 13 பதிவுகளாய் வந்த விநாயகர் அகவல் உரை விளக்கம்!

இந்த மூன்று பெரியவர்களுக்கும் எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

நான் சொன்னது மிக, மிக ஆரம்பநிலை விளக்கம் மட்டுமே!

இதனைப் படித்து, நன்கு உள்வாங்கிக் கொண்டு, உள்ளில் ஏதேனும் உந்தல் புறப்பட்டால், ஒரு குருவைத் தர விநாயகனை வேண்டுங்கள்!

அவர் காட்டித் தருவார்! வளம் தருவார்!

மதுரைத் திட்டச் சுட்டி இதோ!

விநாயகர் அகவல் இசைவடிவில் இங்கே!

இனி நான் வணங்கும் பெரியவர் எழுதிய முதல் ஓரிரு வரிகளுக்கான சில யோக விளக்கங்களைக் காணலாம். இது சற்று ஆழ்நிலை விளக்கமாக இருக்கும். பிடிப்பவர்க்குப் பிடிக்கும்! புரிபவர்க்குப் புரியும்! நன்றி.

"சங்கர் ஐயா கேட்டுக் கொண்டதற்கேற்ப எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

விநாயகர் அகவல் முழுக்கவே யோக நெறியின்படி எழுதப்பட்ட நூல்! யோகத்தில் முழுமைப்பெற்றவரது துணையும், அவர் காட்டும் தெளிவும் இல்லாமல் இருந்தால் மிக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு விடலாம்! கொஞ்சம் ஆபத்து தான்!


யோக நெறியில் உள்ளது என்ன என்ற ஒரு மேலெழுந்தவாரியான அறிவை வேண்டுமானால் இதனால் பெறலாம். இந்த யோகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதற்கு இந்த [vsk இன்] விளக்கம் உபயோகமாகும். தன் பணிகளுக்கு இடையில் நேரம் கிடைத்து இப்படி ஒன்றை [vsk] எழுதுவது பெரிய விஷயம்தான். பணிவுடன் வணங்குகிறேன்.

யோகத்தில் குறியீடுகள்தான் முக்கியம். ஏன்? வெளிப்படையாக சொன்னால் என்ன என்று தோன்றலாம். யோகத்தில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்.

1.இந்த பாதையை உள்ளப்படிக்கு உணர்ந்தவரது வழிக்காட்டல்;
2.சாதகன் எதையும் ஆழ்ந்து சிந்தித்து தானாக அறியும் ஞானம்.


இந்த பாதையை உள்ளப்படிக்கு முழுதும் சென்று அறிந்தவர் இதில் உள்ள ஆபத்துக்களையும், இடையூறுகளையும், நுணுக்கங்களையும் அறிந்திருப்பார். அவருக்கு அவர் குரு உதவி இருப்பார். ஆதியில் இறைவனே நேரடியாக குருவாக வந்து வழிக்காட்டியதாக சான்றோர் சொல்லால் அறிகிறோம். நானும் அப்படியே நேரடியாக இறைவனின் வழிக்காட்டுதலையே பெற்றுக் கொள்கிறேன் என்பவர் உண்மையில் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் முயன்றால் நிச்சயம் இப்போதுக் கிட்டும் என்று பெரியோர் ஆணித்தரமாக சொல்லுகின்றனர்.

சாத‌க‌ர் என‌ப்ப‌டும் யோக‌ ப‌யிற்சியாள‌ருக்கு குரு சில‌ அடிப்ப‌டைக‌ளை மாத்திர‌ம் சொல்லித்த‌ந்து எப்ப‌டி அறிய‌ வேண்டும் என்று க‌ற்றுத் த‌ருவார்! அதை வைத்துக் கொண்டு சீட‌ரே ஆராய்ந்து அறிய‌ வேண்டும். ப‌க‌வ‌த்கீதை, சித்த‌ர் பாட‌ல்க‌ள், உப‌நிஷ‌த் எல்லாமே இப்ப‌டி தான் அறிய‌ வேண்டும். அத்த‌னையும் இப்ப‌டி தான் என்று யோகிக‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். என‌வே குறியீடாய் சொல்வ‌தை க‌ண்ட‌றியும் திற‌னை ப‌யிற்சி மூல‌மாக‌வும், வ‌ழிக்காட்டுத‌ல் மூல‌மாக‌வும் சீட‌ன் அறிகிறான். திரும்ப‌ என்ன‌ வ‌ழிக்காட்டுத‌ல் என்று சொல்கிறேனே என்றால், ப‌யிலும் சீட‌ன் யோசித்து அறிந்த‌தை குருவிட‌ம் வ‌ந்து சொல்லும் போது குரு அதை ச‌ரி என்றோ த‌வ‌று என்றோ சொல்லுவார். த‌வ‌றாய் இருந்தால் மீண்டும் சீட‌ன் தியான‌த்தில் சிந்தித்து ஆராய்வான்.

உதார‌ண‌ம் தைத்திரீய‌ உப‌நிஷ‌த்தில் வ‌ருண‌ண் பிருகுவுக்கு சொல்வ‌தை காண‌லாம்.
"எதிலிருந்து எல்லாம் தோன்றிய‌தோ, எதனால் எல்லாம் இருக்கிற‌தோ, எத‌னால் எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டைகிற‌தோ அது எதுவென‌ அறிவாய்!" என்பார் வ‌ருண‌ன்.
பிருகு வெகுகால‌ம் தியானித்து அறிந்து வ‌ந்து "அன்ன‌ம்" என்பார்.
"ந‌ன்று! இன்னும் போய் ஆராய்வாய்!" என்பார் வ‌ருண‌ன்.
திரும்ப‌ ஆராய்ந்து நேர‌டியாக‌ அறிந்து வ‌ந்து "பிராண‌ன்" என்பார் பிருகு.
"ந‌ன்று! இன்னும் சிந்தி!" என்பார் வ‌ருண‌ன்.

இப்ப‌டியே போகும்!
ஆக‌ சீட‌னை சிந்திக்க‌ வைத்து, அதே ச‌ம‌ய‌ம் த‌வ‌றாக‌ போகும் போது மீண்டும் வழிக்குத் திருப்புவார் குரு. அப்படி சீட‌ன் சிந்திக்க‌வே யோக‌ முறையில் எல்லாம் குறியீடுக‌ளாக‌ இருக்கும். இத‌னால் அறிய வேண்டிய தாகத்தில் இருக்கும் ஒருவன், க‌ண்டிப்பாக‌ ஒரு முழுமைய‌டைந்த‌வ‌ரை தேடி அடைவான். அடுத்து அவ‌ன் சிந்திக்க‌ வாட்ட‌மாக‌, உப‌யோக‌மாக‌ இந்த‌ குறியீடுக‌ள் இருக்கும். இத‌னால் மொழியை க‌ட‌ந்து மொழியின் உள்ளே ம‌றைந்து இருக்கும் உண‌ர்வினை அறியும் வ‌ல்ல‌மையை பெறுகிறான்.

ஒரே ம‌ட‌லில் எல்லாம் இருந்தால் ப‌டிப்ப‌வ‌ருக்கு க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். அடுத்த‌ மட‌லில் விநாய‌க‌ர் அக‌வலின் முத‌ல் வ‌ரியில் இருக்கும் குறீயீடு (allegory) எதை குறிக்கிற‌தென்று ஒரு மாதிரிக்கு (sample) தெரிவிக்க முயலுகிறேன். அதுவும் ஓரளவிற்கு எனக்கு புரிய வைக்கப்பட்டதை, பெரியோர் அங்கீகரித்ததையே எழுத முயல்வேன்.
*********************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

Tuesday, September 30, 2008

"விநாயகர் அகவல்" -- 13

"விநாயகர் அகவல்" -- 13



முந்தைய பதிவு

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி [68]



சிவனை உணர்ந்து சிவத்தில் திளையும்

திருவடி பணியும் அடியவர் எல்லாம்

அடியவர் என்பதைக் காட்டிடும் புனிதத்

தவமுனி வேடமும் தவத்திரு நீறும்

தாங்கியே தம்மைக் காட்டிக் கொள்வர்


ஆனைமுகனின் அருள்வழி அடைந்த

ஔவைப்பாட்டியும் தானும் அதுபோல்

தவநிறை வேடம் தாங்கிடச் செய்து

மந்திரமாகும் சுந்தர நீற்றைத்

தன்னில் அணிந்து தன்னைப் போலும்

இறையருள் நிறைந்த அடியவர் கூட்டம்

என்றும் தன்னுடன் தங்கிட வேண்டி

தாயினும் சிறந்த தயாவாய் ஆளும்

சங்கரன்மகனின் தாள்பணிகின்றாள்



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் [70]


ஐந்தெழுத்து மந்திரத்தின் சுந்தரத்தைச் சொல்லிடுவோம்


'ந'கரமிங்கு மறைக்கும்பொருள்

'ம'கரமிங்கு மும்மலங்கள்

'சி'கரமென்னும் பதி உண்மை

'வ'கரமவன் அருட்கருணை

'ய'கரமது பசுவுண்மை


சொந்தமான பதியை விட்டுப்

பிரிந்துவந்த பசு ஆன்மா

திரும்ப அதை அடையாவண்ணம்

மறைந்திருந்து அதைத் தாக்கும்

மலமென்னும் மகரம் இங்கு!


பதியவனின் அருட்கருணை

பாய்ந்துவந்து தடையழிக்க

மறைப்பிங்கு விலகியோடி

பசுவிங்கு பதி அறியும்!

நமசிவயவின் பொருளிதுவே


ஐந்தெழுத்து மந்திரத்தை

அனுதினமும் இடைவிடாது

அன்புடனே ஓதிவரின்

அழுந்திவரும் ஆன்மாவும்

பேரின்பப் பேறடையும்


ஓமென்னும் பிரணவத்தின்

துணையின்றி தனியாக

ஓதுகின்ற பெருமையிங்கு

பஞ்சக்கரம் ஒன்றுக்கே

இருப்பதனை உணர்ந்திடுவோம்


இத்தகைய பேறுடைய

பஞ்சக்கர மந்திரத்தின்

உட்பொருளை கணபதியும்

ஔவைக்கு விளக்கிவிட

அன்னையிவள் ஆர்ப்பரிக்கிறாள்!


[பஞ்சக்கரம்= பஞ்ச+ அக்கரம்= பஞ்ச அக்ஷரம்= நமசிவய]



"சிவாய எனச் சொல்லி மூச்சிழுத்து நிறுத்திவிட்டு

நம:வெனச் சொல்லியதை வெளியினிலே விட்டுவிட

பலகாலப் பயிற்சியினால் தொங்கிநிற்கும் குண்டலினி

தானாகக் கிளர்ந்தெழுந்து மூலாதாரச் சக்கரத்தில்

தானாக நிலைகொண்டு ஒவ்வொன்றாய் மேலெழும்பி

சஹஸ்ராரம் சென்றடைய, சத்தத்தில் சதாசிவமும்

சித்தத்தில் சிவலிங்கமும் தானாகத் தோன்றிவிட

மூண்டெழுந்த முக்கோணச்சுடரினிலே மலமெல்லாம் சாம்பலாகும்

திருநீறாய் அதைக்கொண்டு நிர்மலனாய்த் திகழ்ந்திடுவாய்"

எனவந்த ஆனைமுகன் அருட்கருணைத் திறத்தினிலே

ஔவையிவள் அகமகிழ்ந்து ஆழ்நிலையில் அமிழ்கின்றாள்!



தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! [72]



"தானே அது" வென்னும் தத்துவத்தின் பொருளாகி

நாடிவந்த எவருக்கும் அருள்வழங்கும் அன்பனிவன்

வாடிநின்ற எவர்துயரும் பொடியாக்கிப் போக்கிடுவன்

ஆனைமுகக் கடவுளிவன் அறுகம்புல் அணிந்திடுவான்


எளியனான என்றனையும் ஏற்றிவிடக் கருணைகொண்டு

தவஞானத் தத்துவத்தை வித்தகனாய் எனக்குரைத்து

அருள்ஞான உபதேசம் தந்தென்னை ஆட்கொண்ட

நின்னடியைப் பணிந்திங்கு திருவடியில் சரண்புகுந்தேன்


என்றிங்கு முடிக்கின்றாள் தமிழன்னை ஔவைப்பாட்டி

திருவடியில் நூல் தொடங்கி திருவடியில் தாள்முடித்தாள்

கருணையுளம் மிகக்கொண்டு தமிழரெலாம் வாழவென்று

கருத்தெல்லாம் பாட்டாகக் கவினுறவே சொல்லிவைத்தாள்


செந்தமிழின் செல்வமென எமக்கெல்லாம் வந்தயிவள்

தாளடியை யான் பணிந்து தெரிந்தவரை சொல்லிவைத்தேன்

சொல்லவைத்த ஔவைக்கு என்வணக்கம் சொல்லிவைத்தேன்

சொலப்பணித்த கணபதியின் தாளிணையில் நான் பணிந்தேன்


சொற்குற்றம் பொருட்குற்றம் இதிலிங்கு இருக்குமெனில்

குற்றமெலாம் எனக்கெனவே எனசொல்லிப் பணிகின்றேன்

நிறையெதுவும் இதிலிருப்பின் முன்சொன்ன பெரியோர்க்கு

அத்தனையும் சேருமென்று சொல்லியிங்கு முடிக்கின்றேன்!



"வித்தக விநாயகன் விரைகழல் சரணே!"


"விநாயகர் அகவல்" முற்றிற்று.


[நாளை நிறைவுறும்!]

Read more...

Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

"விநாயகர் அகவல்" -- 12
முந்தைய பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]



உருவாய் வந்து திருவருள் செய்தவன்

குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்

அருவுருவாகி அகத்துள் ஆடுவான்

அவனே உருவிலா சதாசிவம் ஆகும்


சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்

அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்

சதாசிவமாகி விண்வெளி நிற்பான்

உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்


ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,

அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்

செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்

விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்


கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து

சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்

சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்

வானத்திலாடும் மயில் குயிலாச்சு!


யோகம் என்னும் ஞானம் பெற்றோர்

அண்டத்துள் அறிவது சதாசிவத்தை

உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது

சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்


அகமும் புறமும் யோகமும் போகமும்

இவரருளாலே நிறைந்திடக் கண்டு

கணபதி தந்த நற்கொடை அருளிது

மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]



இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது

சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்

அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய

பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது


இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை

எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு

அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து

அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்


பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்

கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!

கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து

கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து

இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல

என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை
********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 11

"விநாயகர் அகவல்" -- 11

முந்தைய பதிவு

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58]



சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்

பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!

பாசமறுக்க இறையருள் வேண்டும்!

இறையருள் வருவது குருவருள் மூலம்!


சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து

மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்

பாசமறுத்து பசுவெனும் அறிவை

உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட

இறையே இங்கு குருவாய் வந்த

இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!



இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் [60]



இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்

கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!


ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்

சிவமயம் என்னும் பேரருள் ஆணை!


இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்

எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்

தானே இறையாய் இருப்பது என்னும்

மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!


அருளே வடிவாம் கணபதி அருளால்

அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்

ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்

இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!



எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் [62]



இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்

தானே இறையெனும் உணர்வும் மறையும்


எல்லையில்லாப் பெருவெளியதனில்

எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது


எல்லா நலனும் இழந்தே போயினும்

எல்லையில்லா இன்பமே நிலைக்கும்


நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்

சொல்லா நிலையில் சுகமே விளையும்


இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்

எல்லாத் துயரும் அடியோடழிந்து


அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து

கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து

ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!
***********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 10

"விநாயகர் அகவல்" -- 10




முந்தைய பதிவு

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]



இறையின் தரிசனம் தியான முடிவினில்

மும்மலம் விளைத்த அகவிருள் விலகி

ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்

சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்

காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்

நால்வகை நிலையுள் சாலோகமென்னும்

முதல்நிலை
இதுவென ஆன்றோர் அறிவர்

சரியை என்னும் யோகம் சித்திக்க

சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்

இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்

ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!



என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து [56]



ஆன்மா தன்னை அறியும்போது

இறையின் அருகில் இருப்பதை உணரும்

இறையருள் இன்றி இது நிகழாது

பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய

ஆனைமுகனும் அருகில் தெரிவான்

ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க

ஆன்மா எதுவென தனக்கே மறக்க

அமலன் அருளால் தன்னை அறிந்திட

ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்

சாமீபமென்னும் இரண்டாம் நிலையினை

ஆனைமுகனின் அருகில் இருப்பதை

அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!


சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி

நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி

அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து

ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,


ஆனைமுகனின் அருளால் கிட்டும்

இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,

தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,

ஏதொருபயனும் இல்லை என்பதை

உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!


இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட

முன்னை வினைகள் முதலில் மாயணும்!

காலம் காலமாய்ப் பிறவியெடுத்து

கணக்கில்லாது வினைகள் புரிந்து

கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி

ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி

சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்

அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று

முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து

பேரொளி கண்டு தன்னை அறிந்து

மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!
*******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு


Read more...

"விநாயகர் அகவல்" -- 9

"விநாயகர் அகவல்" -- 9


முந்தைய பதிவு

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர

ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!

சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்

செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்


[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற

பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்

மேலிருக்கும்
ஸஹஸ்ராரம், ஆதாரம் ஆறு,

லலாடபிந்து, அர்த்த சந்திரன், ரோகிணி,

நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,

சமனா, உன்மனா
என்னுமிந்தப் பதினாறு

நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்

ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,

சூரிய சந்திரக் கலையிரன்டும்

சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது

உள்ளிருக்கும் சக்கரத்தை

உள்ளிருக்கும் கணபதிதான்

உள்ளபடி காட்டுகிறான்


சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்

பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்

வடிவம், உயரம், நீளம், அகலம்,

திண்மை, பருமை எனவும் சொல்வர்

நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு

இயந்திரவடிவில் இதனை அமைப்பர்

இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்

பத்து குணங்களும் எண்ணிடச் செய்து

உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை

கணபதி காட்டித் தருவான் என்றாள்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி

அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த

சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,

உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்

நிராதராம், மீதானம் எனும்

எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்

அற்புதத்தை
எனக்குப் புரியவைத்தனையே

என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!
******************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 8

"விநாயகர் அகவல்" -- 8





முந்தைய பதிவு

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் [40]


ஆதாரங்கள் ஆறும் இங்கே

இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்

மூலாதாரமும் சுவாதிட்டானமும்

அக்கினிமண்டலம் எனவாகும்

மணிபூரகமும் அநாகதமும்

சூரியமண்டலம் என விளங்கும்

விசுத்தி, ஆக்கினை இரண்டும் சேர்ந்து

சந்திரமண்டலம் என விளங்கும்


குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி

பாம்பின் உருவம் தனைக்கொண்டு

மூலாதார மடியினில் தன்னைச்

சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்

முறையுடன் புரியும் யோகசாதகன்

சுருண்டிருக்கும் அரவம் இதனை

மூன்று மண்டல வாயில் வழியே

ஆக்கினைவரையில் தானெழுப்பி

மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து

ஆன்மா இதனை உணரச் செய்யும்


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து [42]

பேசாதொலிக்கும் மந்திர சத்தம்

சுவாசச் சுழலின் துணையால் நிகழும்

இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்

சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!

உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்

கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்

கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்!



ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்!


சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்

ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்

ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்

அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு

சாதகம் என்னும் பயிற்சி செய்யின்

உள்ளே மூளும் கனலின் வெம்மை

தன்னில் உணரும் ஞானம் பிறக்கும்

[அசபை= அஜபா]

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே [44]


இத்தனை இதுவரை காட்டிய கணேசன்

மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்

கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து

சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்



காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி

காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!

[கால்=காற்று, பிராணன்]
*******************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 7

"விநாயகர் அகவல்" -- 7


[முந்தைய பதிவு]

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]

ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்

மூவகை நாடிகள் உடலில் உள்ளன.

பிங்கலை என்னும் சூரியநாடி

வலப்பக்க நாசியின் வழியே செல்லும்

இடகலை என்னும் சந்திரநாடி

இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்

சுழுமுனை என்னும் அக்கினிநாடி

உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்

வல, இடம் வாயு சென்றுவருவதில்

உடலின் இயக்கம் நிகழ்கிறது

பிராணனின் வாயு உள்ளே செல்வது

பூரகம் என்னும் சொல்லால் அறியும்

உள்ளே சென்றதை உடலிருத்துவது

கும்பகம் என்னும் சொல்லால் அறியும்

வெளியே சென்றிடும் வாயுவின் செயலை

இரேசகம் என்னும் சொல்லால் அறிக

ஓமெனும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால்

அகரம் உகரம் மகரம் புரியும்


பிங்கலைக்குரியது அகரம் ஆகும்

உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை

இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்

மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை

மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்

ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று

அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்

இவ்வகை வழிகளின் முறைகள் யாவையும்

குருமுகம் அறிவது சாலச் சிறந்தது


இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி

சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட

கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!


************************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

Friday, September 19, 2008

"விநாயகர் அகவல்" -- 6

"விநாயகர் அகவல்" -- 6




[முந்தைய பதிவு]

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் [28]



இன்பம் என்பது இன்னது என்று

தன்னையுணரா மாந்தர் இங்கு

இன்பம் என்பது புலனில் என்று

நின்னை மறந்து தன்னை அழிப்பர்

கண்டதைக் கண்டு காமம் கொண்டு

கருத்தொழிபட்டு மதியை இழந்து

புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து

பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்

சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்

ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்

தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து

செயல்வழி மறந்து சிந்தை குலைவர்

இதனைவிடுத்து சிவனில் இழைந்து

அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து

நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து

அருளொளி படர பிறவிருள் அகல

கணபதி தானே தன்னுள் வந்து

மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி

இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட

புலனை அடக்கும் வழிகளைக் காட்டி



கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]


தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்

உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்

இறையருள் கூடி குருவருள் நாடி

ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்

ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து

ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க

எல்லையில்லா இன்பம் பிறக்கும்!


ஆம்!


எல்லா விளக்கும் அணைந்தபின்னே


எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!

நல்வினை தீவினை இரண்டின் பயனால்

இன்பம் துன்பம் என்பன நிகழும்

இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க

ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்

திருவருள் கூடிய பேரின்பநிலையில்

அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்

அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்

பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து



தலமொரு நான்கும் தந்தெனக் கருளி [31]


இறைவனை அடைய நால்வழி உண்டு

பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி

என்பன இவற்றின் வகைகள் ஆகும்!

சரியை கிரியை யோகம் ஞானம்

என்னும் பெயரும் இவற்றுக்குண்டு


இறைபணி செய்து அடியரைப் பணிந்து

முதல்வழிமூலம் அடைவது சாலோகம்


இறையிடம் அமைத்து அவரை வழிபடல்

திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்

மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்


பொறிகளையடக்கி புலனை அடக்கல்

அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்

யோக வழியினில் பெறுவது சாரூபம்


தன்னையிழந்து தன்னை மறந்து

இறையில் கலந்து தானே இறையும்

என்றே கசிந்து காதல் மல்கிட

கனிவது காதல் வழியெனச் சொல்வர்

கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்


இவ்வழி நான்கும் எனக்கென அருளி


ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து

அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்


ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்

மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்


ஈசன் வடிவினையே தானும் அடைந்து

ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்


ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து

ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.


மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]


உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்

ஆணவம் கன்மம் மாயை என்னும்

மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்

இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்

என்றும் அண்டாமல் அடியோடகற்றி
************************************
[தொடரும்]


அடுத்த பதிவு

Read more...

Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

"விநாயகர் அகவல்" -- 5



முந்தைய பதிவு

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு

எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை

தன்னையுணரச் செய்திட இங்கு

குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்

இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்

குருவே எமக்குத் திருவருள் புரிவான்

இதுவே உண்மை இதுவே மெய்யென

நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்

ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து

அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட

அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து



வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்

தீர்ந்தது என்று அருளினை வழங்கி

கையினில் ஏந்திய தந்தக்கோலால்

முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து

மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து



உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி [26]


எத்தனை முறை யான் கேட்டபோதிலும்

முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை

பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை

உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை

என்றன் செவியில் அன்புடன் ஓதி

நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்

நீயே வந்து உரைத்திட்ட ஞானம்

யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்

திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்

என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்

அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா
******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 4

"விநாயகர் அகவல்" -- 4





முந்தைய பதிவு

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15


தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது

அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே

அன்பால் பழுத்த அடியவர்தம்மில்

குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்

அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!

ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்

ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே

எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை

அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்

“குண்டலியோகம் செய்பவர் உள்ளில்

குறுகுறுவெனவோர் உணர்வும் ஓடும்

பெருச்சாளி ஒன்று ஓடுதல்போல

அவ்வுணர்விருக்கும்”-
இது ஆன்றோர் வாக்கு!

மூலம் தொடங்கி மேலே ஏறிடும்

குண்டலிக் கனலின் உச்சியில் இருப்பவர்

விநாயகன்
என்றும் அறிந்தவர் சொல்லுவர்!



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் [18]



எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்

மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே

வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!

போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே

சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்

மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்

தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே

நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து

நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து

அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்



திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து [20]



பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்

குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து

நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத

மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்

நாபி, இதயம், கண்டம் புருவமத்தி
என்னும் இடங்களில்

சுழுமுனை வழியே நின்று துதிக்கும்

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்

என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து

ஓதும் நாமம் நாதமாய் மாறிட

கதறல் கேட்ட கணபதி அதனில்

ஓம் எனும் நாதமாய் வருவான்

நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத்

தன் திருவருள் தருவான் கணபதி.
*******************************************
[தொடரும்]

[நீலக் கணபதியை மேலே தரிசியுங்கள்!!]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 3

"விநாயகர் அகவல்" --- 3




முந்தைய பதிவு இங்கே

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8]


படைத்தல் காத்தல், அழித்தல்,

மறைத்தல், அருளல் என்றே உலகில்

இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்

நான்கு கரங்கள், எட்டுக்கைகள்

பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு

ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்

அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே

முன் ஒருகையில் ஒடித்த தந்தம்

எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு

படைக்கும் தொழிலைச் செய்கின்றான்

இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி

அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்

மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி

அழித்தல் தொழிலையும் புரிகின்றான்

நாலாம் கரத்தில் பாசம் தாங்கி

மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்

ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்

அமுதக் கலசம் அதனைத் தாங்கி

அருளினை எமக்கு வாரித்தருகிறான்

ஆனையின் நிறமோ கருமை ஆகும்

ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்

இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்

கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி

வெளியன் இவனை வழிபடும் அன்பர்

அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்

நம்பியாண்டான் நம்பி சொன்னது

நீலத்திரு மேனியின் எழிலின்

தன்மைகுறித்தே என்றே கொள்க.


நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்

மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்

நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!

ஆனையின் வாயினைப் போலே கீழே

தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!

நாலிரு புயமெனில் எட்டென வேண்டா

இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்

நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை

தோளெனத் தனியே அமைவது இல்லை

எனவே கணபதி வலிமை பொருந்திய

நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!

பகலவன், முழுமதி, அக்கினி எனவே

மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்

மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்

[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் [12]


எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்

இருந்தும் பயனற்று வாழ்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

என்று பாடினான் வள்ளுவன் இங்கு!

செவியின் பயனைச் சரியாய் உணரா

இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்

நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே

செவிகள் செய்யும் புண்ணியம் என்று

அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்

அருளைப் பாடி அவனடி பணிய

அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!

ஆம்!~

கணபதி திருச்செவி மட்டுமே இங்கு

அசையும் தன்மை உடையனவாகும்!

வேறெவர் செவியும் அசைவது இல்லை

ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!

ஆனைப்பாகன் ஆனையின் மீது

ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!

கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்

பிறவித்துயரை ஒழித்திட முடியும்

அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை

ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!

மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்

முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்

அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்

பொன்முடி இவனே அரசன் என்னும்!

ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்

முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி

ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்

விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!



சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே! [14]



அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்

ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்

உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்

உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்


ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா

விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து

வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்

ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்

கனவுலகில் சென்று அலையும் ஆன்மா

விரும்பிய இடங்களைத் தானே அடைந்து

எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்

நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!

இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி

அதிகம் இருக்கும் என்பதை உணர்க!

ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய

சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்

பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்

இதுவோர் மறதிநிலையே!

இதனால் பெரிதும் பயனேதுமில்லை!

மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி

சித்தம் தன்னை அவனில் நிறுத்தி

இருக்கும் நிலையைத் துரியம் என்பர்

ஆன்மா இங்கே இறையை உணரும்

காலமும் நேரமும் கடந்து நின்று

இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று

பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது

இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்

அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!

யானை அதிலும் ஆண்யானையாம்!

அதனால் கற்பகக் களிறே என்கிறார்!



[தொடரும்]


*********************


அடுத்த பதிவு





Read more...

"விநாயகர் அகவல்" --- 2

"விநாயகர் அகவல்" --- 2




ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்"

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2]




குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள்

தாமரை மலரினைப் போலச் சிவந்தவை

கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள்

பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள்

திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது

நாத ஒலியினில் நானிலம் பிறந்தது

அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன

ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய்

இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன

மூலாதாரக் கனலினைக் கிளப்பும்

நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும்

நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும்

[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்]





பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் [4]



பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும்

பூவினைப் போலும் மென்மை தவழும்

வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும்

பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர

[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப]


பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும் [6]



திருவடி தொடங்கி இடைவரை வந்தவர்

அண்டசராசரம் அனைத்தும் அடங்கும்

ஆனைமுகத்தோன் பானைவயிற்றில்

பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில்

சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார்.

ஆனைமுகத்தோன் அதனால் இங்கு

கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன்

அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு

சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர்

திருவடி துவங்கி முகநிறை தரிசனம்

ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்!

[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு]

Read more...

"விநாயகர் அகவல்" --- 1

"விநாயகர் அகவல்" --- 1
என் இனிய அன்பான நண்பர்களே,

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல்.

சேரமான் நம்பி கைலாயம் செல்ல விரைகிறார்!

ஔவையாரையும் உடனழைக்க, தன் பிள்ளையார் பூஜையை முடித்த பின்னே வர முடியும் என்கிறார் ஔவையார்.

காத்திராமல் நம்பி விரைய, ஔவையார் பூஜையைத் தொடர்கிறார்.

அப்போது பிறந்ததுதான் விநாயகர் அகவல்!

அகவலைப் பாடி முடித்ததும், தன் தும்பிக்கை மூலம், விநாயகப் பெருமான் ஔவையாரை நேராக ஒரு நொடியில் கைலாயம் கொண்டு சேர்த்ததாக வரலாறு!

அதாவது, இதில் சொல்லியபடி செய்தால், இறைவனடி சேரலாம் என்பது கருத்து!!

இதெல்லாம் தெரியாமலேயே, இதன் இனிமையும் சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது.

பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.

தமிழ்மணத்தில் பதிவெழுதத் தொடங்கியபின், இதனை மேலும் ஆழ்ந்து படிக்கத் துவங்கினேன்.


அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!

என் முருகனின் மயிலும் அகவும்!!

எனவே, இது மேலும் என்னைக் கவர்ந்தது!

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின!

இதனை என் மொழியில் சொல்ல வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது முருகனருள்.

எழுதி முடித்ததும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரிடம் இதை அனுப்பினேன்.

பத்து நாட்களாகியும் அவரிடமிருந்து பதிலில்லை.

இன்று காலை ஒரு மடல்...... பதியச் சொல்லி!

தாமதம் இல்லாது, இதோ உங்கள் பார்வைக்கு.

சொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும்,....... சொல்லப்போகும் அவையின் மனமறிந்து, ....... சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்

திங்கள் முதல் வெள்ளி வரை, தினம் ஒரு பதிவாகத் தொடர்ந்து வரும்.

வழக்கம் போல் நீட்டி முழக்கித்தான்!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!



வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************




Read more...

Saturday, September 06, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"


இன்னிக்கு எப்படியும் மன்னாரைப் பார்த்திடுவேன்னு ஒரு 'நம்பிக்கை'யோட மயிலாப்பூர் குளத்தை வலம் வந்து கொண்டிருந்தேன்!

[அட! ஆமாங்க! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது! நாயர் கடையில முதல்லியே கேட்டாச்சு! ]

'சரி! நம்ம விதி அவ்ளோதான்! இன்னிக்கு மன்னாரைப் பார்க்கற விதி இல்லைன்னு ஒரு முடிவோட..... சில பேரு அதை அவநம்பிக்கைன்னு சொல்லுவாங்க!!..... வீடு திரும்ப எண்ணி பஸ்ஸைப் பிடிக்க பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றேன்.

அப்போது.... என் எதிரே ஒரு ஆட்டோ வந்து நின்றது!

ஒரு கை என்னை இழுத்து உள்ளே தள்ளியது!

மயிலை மன்னார்!

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை!

விதி இன்னிக்கு நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன் என சந்தோஷமாகச் சிரித்தேன்!

விதின்னா என்ன? அது உன் நம்பிக்கைதானே? ஒண்ணு நடந்தா அது விதின்றே! நடக்கலியா ... அதையும் விதின்றே! என்னைப் பாக்கணும்னு வந்தே! நான் இல்லேன்னதும் உன் நம்பிக்கை இடிஞ்சு போச்சு! விதி சதி பண்ணிச்சுன்னு நினைச்சே! இப்ப என்னைப் பாத்ததும், விதி நீ நினைச்ச மாரியே பண்ணிருச்சுன்னு சந்தோசப் படறே! இந்த விதியைப் பத்தி ஐயன் சொன்னதைச் சொல்றேன் கேளு! எளுதிக்கோ! எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

நான் நோட்புக்கைப் பிரித்தேன்!

இனி வருவது மன்னாரின் குறள் விளக்கம்!!

"அதிகாரம் 38 -- ஊழ்"

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. [371]

ஒருத்தனுக்குப் பணம் வரணும்னு விதி இருந்திச்சுன்னா, அவனுக்குள்ல ஒரு புது சக்தி பிறக்கும்..... எதுனாச்சும் பண்ணனும்ன்ற வெறி வரும். என்னமாச்சும் பண்ணி பணக்காரனாயிடுவான். அவனுக்குள்ளேயே ஒரு தனி முயற்சி பிறக்கும்.
அதே, அவனோட நேரம்.. அதாம்ப்பா.. விதி..... விதி சரியில்லேன்னா, 'சரி, போ! அப்புறமாப் பார்த்துக்கலாம்'னு சோம்பேறித்தனமா இருந்திருவான்.
இப்ப இதுக்கு ஒரு ஒதாரணம் வேணும்னா.....

நேரம் நல்லா இருந்ததுனால, எம்ஜியார் கரீட்டா தேர்தல் நேரத்துல குண்டடி பட்டு திமுகவை கெலிக்க வைச்சாரு. இப்ப இன்னாமா துட்டு பாத்துட்டாங்க பாரு அவங்கள்லாம்!
அதே, நேரம்.... விதி சரியா இல்லாததுனால, ஆனானப்பட்ட காமராஜரே, 'படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு, சோம்பேறித்தனமா இருந்து தோத்துட்டாரு!
அவ்ளோதான்!
அதுக்கப்புறம், காங்கிரஸுக் கட்சி நம்ம ஊருல தலை தூக்கவே முடியல!
அதாவது, இன்னும் அதுக்கு நேரம் சரியா அமையலை!
:)) ஆகூழ்னா நல்ல விதி, போகூழ்னா கெட்ட நேரம்னு பொருள்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. [372]

அதேமாரி, பொல்லாத விதி உனக்கு இருந்திச்சுன்னா, அதாவது கெட்ட நேரம்னா, ஒன்னோட புத்தியும் கெட்டுத்தான் போவுமாம். நல்ல விதி இருந்திச்சுன்னா, அறிவு நல்லாவே வேலை செய்யுமாம்.

தோ! மேலே சொன்னதையே எடுத்துக்கோயேன்!

எம்ஜியாரை ராதாஅண்ணன் சொந்த விரோதத்துல சுட்டாரு.
அதியே, அரசியலாக்கி அண்ணதொரை, அவரு ஃபோட்டோவைக் காட்டியே ஜெயிச்சாரு தேர்தல்ல! அதான் அவரோட நல்ல புத்தி!... விதி சரியா வொர்க்கவுட் ஆச்சு!


காங்கிரஸு... ....... ஒனக்கே புரியுமின்னு நெனைக்கறேன்!:))

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். [373]


இப்ப ஒரு கூட்டத்துல நிக்கற நீ! ரொம்பவே படிச்சவந்தான் நீ! எத்தக் கேட்டாலும், டக்கு டக்குன்னு சொல்லிடுவேதான்! ஆனாக்காடியும், ஒனக்கு நேரம் சரியா இல்லேன்னா, சரியான நேரத்துல நீ சொல்லணும்னு நெனைக்கறது உனக்குத் தோணாமலியே பூடும்! அதான் உண்மை அறிவுன்னு ஐயன் நக்கலா சொல்லிக் காமிக்கறாரு!

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. [374]

இப்ப நீயே பாக்கற...! சிலபேரு ரொம்பவே மெத்தப் படிச்சவனா இருப்பான். ஆனாக்க, பரம ஏழையா இருப்பான்.
இன்னும் சிலபேரு ஒண்ணுமே படிக்கலேன்னாலும், பெரிய பணக்காரனா இருப்பான்.
இதெல்லாம் எப்பிடீன்றே?
அல்லாம் விதிப்பா.... விதி!
ஒன் தலயில இன்னா எளுதியிருக்கோ, அதும்படித்தான் நடக்கும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. [375]

ஒன்னோட விதி சரியா இல்லேன்னா... கெட்ட நேரந்தான் ஒனக்குன்னா... நீ ஒரு நல்ல காரியம் பண்ணினாக்கூட கெட்டதாவே முடியும் அது!

காருல அடிபட்டு விளுந்திருக்கானேன்னு போய் எதுனாச்சும் ஒதவி பண்ணலாம்னு நெனைச்சு அவனைத் தூக்குவே! பொசுக்குன்னு ஒன் மடியில மண்டையைப் போட்டுருவான் அவன்! போலீஸு, கேஸு, சாட்சின்னு நீ அலைய வேண்டிவந்து, ஏண்டா போனோம்னு வெறுத்துருவே நீ!

ஒண்ணுமே தப்பு நெனைக்காம ஒரு சொல்லு சொல்லுவே ஒன்னோட தோஸ்த்துகிட்ட.... இன்னாமா அத்த நீ சொல்லப் போச்சுன்னு பொலுபொலுன்னு பிடிச்சு உலுக்கிடுவான் உன்னிய!

அதே சமயம், நல்ல விதி இருந்திச்சுன்னா, அதே ஆள சரியான நேரத்துல காப்பாத்தினேன்னு ஜனாதிபதி பதக்கமே ஒன்னியத் தேடி வரும்!
ஆஹா! இன்னாமா ஒரு சொல்லு சொன்னே கண்ணுன்னு ஒன்னோட நண்பன் ஒன்னியத் தூக்கிக் கொண்டாடிருவான்.


அல்லாம் விதிப்பா.... விதி!:))

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. [376]


கெட்ட நேரம் ஒனக்கு வந்திருச்சுன்னா, இன்னாதான் வருந்தி வருந்தி ஒரு பொருளை நீ வைச்சுக் காப்பாத்தினாலும், அது ஒங்கிட்ட நிக்காம போயிரும்.

அதே, ஒன்னோட ஒரு பொருளையே வேண்டாமின்னு வெளியே போயிக் கொட்டினாலும், அது ஒங்கிட்டியே திரும்பி வந்து சேர்ந்திரும்.
அல்லாத்துக்கும் இந்த விதிதான் காரணம்னு ஐயன் சொல்றாரு.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. [377]

நீ இன்னாதான் கஸ்டப்பட்டு, கோடி கோடியா சேர்த்து வைச்சாலும், விதி ஒனக்கு சரியா இல்லேன்னா, ஒத்தப் பைசா கூட அதுலேர்ந்து அனுபவிக்க முடியாது. சுளி சரியா இருக்கனும் கண்ணு அதுக்கெல்லாம்!

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். [378]


இப்ப, ஒண்ணுமே இல்லாம ஏளையா இருக்கறவன்லாம் இன்னாத் தும்பம் வந்தாலும் சகிச்சுகிட்டு இருக்கானே! அது ஏன்னு யோசிச்சியா? இது வரும்.... அப்பிடியே சீக்கிரமே போயிரும்னு விதி மேல ஒரு நம்பிக்கை வைச்சுகிட்டு காலத்தை ஓட்டறான் அவன். அது மட்டும் இல்லேன்னா எப்பவோ சன்னியாசம் வாங்கிகிட்டு துறவியாப் போயிருப்பான்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். [379]

ஒனக்கு ஒரு நல்லது நடக்குது! ரொம்ப ரொம்ப சந்தோசமா அத்த அனுபவிக்கற! திடீருன்னு ஒருநாளு அத்தினியும் சட்டுன்னு பூடுது! ரொம்பவே கஸ்டம் வந்திருது ஒனக்கு. அதையும் சந்தோசமா அனுபவிக்காம, ஐயோ அல்லாம் பூடுச்சேன்னு இன்னத்துக்கு அளுவறே நீ?

ஆனாக்க, இப்பிடி இல்லாம அதைக்கூட சந்தோசமா அனுபவிச்ச ஒரு ஆளை ஒனக்குத் தெரியுமா?

அவருதான் காமராசரு! மவராசன் அல்லாம் இருந்தப்பவும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. அல்லாம் போனபோதும் அப்பிடியேதான் இருந்தாரு.

விதிய மீறி வாள்ந்து காமிச்சவரு அவரு!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். [380]

மந்திரம் கால்; மதி முக்கால்னு சொல்லுவாங்க!
விதிய மதியால வெல்லலாம்னும் சொல்லுவாங்க!
ஆனா, அல்லாம் தெரிஞ்ச சித்தன் நம்ம ஐயன் இன்னா சொல்றாருன்னா,
நீ இன்னாத்தான் புத்திசாலின்னு நெனைச்சுகிட்டு செஞ்சாலும், அதையெல்லாம் தாண்டிகிட்டு, விதி முன்னாடி வந்து நிக்குமாம்!
ஒரு ரயிலைப் பிடிக்கனும்னு நெனைக்கறே! இப்ப நேரம் ஒனக்கு சரியில்லேன்னு ஜோசியன் சொன்னாண்ட்டு, ரெண்டு மணி நேரம் முன்னாடியே ஆட்டோவைப் பிடிச்சு ஏறிடுறே!
அப்பாடா! அல்லாம் சரியாப் பண்ணிட்டோம்னு நெனைக்கறப்ப, வருது ஒரு ட்ராஃபிக் ஜாம்!
ஆட்டோ ட்ரைவர் கையில ஒரு அம்பது ருப்பாய அளுத்தி ஸ்டேஷனுக்கு ஓட்டச் சொல்ற!
அவரும், குறுக்கால குறுக்கால புகுந்து கொண்டுபோய் விட்டுடறாரு.
ஓட்ட ஓட்டமா ஓடி ட்ரெயினைப் பிடிச்சுடற!
ஒன்னோட ஸீட்டும் கிடைச்சுருது.
ஆஹா, விதியை கெலிச்சிட்டொம்னு நெனைச்சுப் படுக்கற.
எளுந்து பார்க்கறப்ப.......... ஒன்னோட பர்ஸ் காலி!
அதான் விதி!


இப்பப் பாரேன்!
என்னைப் பார்க்க நீ வந்தே! இல்லேன்னதும், கொஞ்சம் மயங்கினே! சரி போலாம்னு முடிவு பண்ணின! ஆனாக்கூட நீ விதிய நம்பி இங்கியே சுத்திகிட்டு இருந்தே! ஒன்னோட நம்பிக்கை உண்மையாச்சு! விதியை நம்பு! நல்லதே நடக்கும்! நடக்கறதெல்லாமே நல்லதுன்னு நம்பு! இப்ப வடையைத் துண்ணு! டீயைக் குடி! சந்தோசமா இரு!' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

விதியை வாழ்த்தி அவனைத் தழுவிக் கொண்டேன் நான்!


**********************************

Read more...

Thursday, September 04, 2008

"பிள்ளையாரே பிள்ளையார்!"

"பிள்ளையாரே பிள்ளையார்!"
பிள்ளை யார்? பிள்ளை யார்? என ஒருமொழி கேட்டால்
பிள்ளையாரே பிள்ளையார் என மறுமொழி வந்திடும்!

தாயைக் காத்திட தான் அவதரித்தான்
தாயைக் காத்திட வாயிலில் நின்றான்
சிவனே ஆயினும் விலகிடு என்றான்
தாயைக் காத்திட போரும் செய்தான்
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
என்பதன் பொருளே இன்பப் பிள்ளையார்!


தந்தையும் தாயும் தெய்வம் என்றான்
தம்பியாம் முருகன் உலகைச் சுற்றிட
தந்தை தாயை வலமும் வந்தான்
தந்தை தந்த மோதகம் வென்றான்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்னும் சொல்லின் இலக்கணம் பிள்ளையார்!

தந்தைக்காக கயிலையில் நின்றான்
தந்தை தந்த ஆத்மலிங்கம்
தசமுகராவணன் தவத்தால் கொள்ள
தந்திரமாகத் திரும்பவும் கொணர்ந்தான்
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
என்னும் சொல்லின் நாயகன் பிள்ளையார்!

குறமகள் வள்ளியை மணந்திடும் ஆவலில்
தன்னை வணங்காத் தம்பியின் துயரை
ஆனையாய் வந்து துணையும் புரிந்தான்
தன்பலம் தெரிந்தும் தம்பிக்காக
சொன்னபடி கேட்டான் சுகமே புரிந்தான்
உறவின் உயிராய் நின்றவன் பிள்ளையார்!

ஓமெனும் பிரணவப் பொருளை வேண்டி
சிவனார் பணிந்து தனயனைக் கேட்க
சுப்பிர மணியன் பாடம் சொன்னான்
என்னவன் சொன்னான் என்றே உணர்ந்தால்
ஓமெனும் வடிவாய் இருப்பவன் அண்ணன்
அவனே ஓம்நவ சக்திப் பிள்ளையார்!

உலகைச் சமனிட அகத்தியன் சென்றான்
தென்புலம் நோக்கிக் குறுமுனி நடந்தான்
குடத்தில் கூடவே காவிரி சென்றாள்
தென்புலம் வாழக் காவிரி தரவே
காகமாய் வந்து கமண்டலம் கவிழ்த்தான்
கருணையின் வடிவம் கற்பகப் பிள்ளையார்!

பிள்ளை என்பதன் இலக்கணம் காட்ட
அரும்பெருஞ் செயல்கள் பலவும் செய்தான்
உலகினில் உள்ள பிள்ளைகள் யார்க்கும்
வழிமுறை காட்டிட கருத்தினில் நின்றான்
இவனைப் போலொரு பிள்ளை எவரெனச்
சொல்லும் வண்ணம் திகழ்பவன் பிள்ளையார்!

உலகில் உள்ள பிள்ளைகள் அனைவரும்
வணங்கிடும் தெய்வம் அன்புப் பிள்ளையார்
ஆற்றங்கரையின் அருகிலும் இருப்பான்
அரசமரத்தின் அடியிலும் இருப்பான்
மண்ணிலும் இருப்பான் மஞ்சளிலும் இருப்பான்
வடிவம் எதுவும் இல்லாப் பிள்ளையார்!

தடைகளை உடைப்பான் தயவினைக் கொடுப்பான்
எடுக்கும் காரியம் எதிலும் வெற்றி
என்பது இவனை வணங்கிட நிகழும்
ஆனையின் வடிவம் கொண்டவன் இவனே
தும்பிக் கையால் துன்பங்கள் தொலைப்பான்
துணிவும் தருவான் செல்வப் பிள்ளையார்!

அருகம் புல்லில் உள்ளம் மகிழ்வான்
தோப்புக்கரணம் போட்டால் அருள்வான்
தலையில் குட்டிட அறிவும் தருவான்
கொழுக்கட்டை படைத்திட குவலயம் கொடுப்பான்
மந்திரம் எதுவும் சொல்லிடவேண்டாம்
அருள்வாய் என்றால் தருவான் பிள்ளையார்!

விஜயகணபதி வெற்றிகள் தருவான்!
செல்வக்கணபதி சுகங்கள் தருவான்
மூஷிகவாகனன் முக்தியைத் தருவான்!
மோஹனக்கணபதி மகிழ்ச்சியைத் தருவான்!
செந்தமிழ்க்கணபதி சொற்சுவை தருவான்!
மங்கல கணபதி மங்கலம் அருள்வான்!

பிள்ளையார் என்னும் பொருளைச் சொன்னேன்
பிள்ளை யாரெனத் தெரிந்திடும் இங்கு!
பிள்ளைகள் நாமும் அவன்புகழ் பாடி
அவனடி பணிவோம் அனைத்தும் பெறுவோம்!
நற்செயல் புரிய அவனிடம் கேட்போம்!
அவன்புகழ்பாடி அனுமனில் முடிப்போம்!

**************************************************

Read more...

Tuesday, September 02, 2008

" பாம்புகளின் கூடல்"

" பாம்புகளின் கூடல்"
நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிணையும், இணையும் எனப் பலவிதக் கருத்துகள் நிலவி வருகின்றன! இதில் உண்மை ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்தபோது கிடைத்த சில உண்மைகளை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்!

உயிர்வாழும் எந்தவொரு இனத்துக்கும் இரு அத்தியாவசியமான தேவைகள், முதல் உணர்வுகள் [Primal instincts] இருக்கின்றன.

'தான் உயிர் வாழ்வது'[ survival of the self] ; 'இனப்பெருக்கம் செய்வது'[survival of the species as awhole]

'தான் உயிர் வாழ்வது' என்னும் முதல் உணர்வில், தன் உணவுக்கு அலைவது, இருப்பிடம் தேடிக் கொள்வது, எதிர்ப்பு சக்திகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது, எதிர்ப்பது என்பவை அடங்கும்.

'இனப்பெருக்கம் செய்வது' என்பதில், வருடாந்திர நிகழ்வுகளான, 'தனக்கான ஒரு துணையைத் தேடுவது, அதனுடன் புணர்வது, தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வது' இவை அடங்கும்.

பாம்புகளின் வாழ்க்கையில், முதலாவது பெருமளவிலும், இரண்டாவது சற்று குறுகிய அளவிலும் நிகழ்கின்றன.

தான் எப்படி உயிரோடு பத்திரமாக இருப்பது என்பதில்தான் பாம்புகள் பெரும் கவனம் செலுத்துகின்றன.... பெரும்பாலும்.

தானுண்டு தன் தேவைகள் உண்டு என்பது மட்டுமே இவைகளுக்கு முக்கியமாகிப் போகிறது.

மற்ற பாம்புகளைப் பற்றி இதற்குக் கவலை இல்லை!

அடுத்த பாம்போடு சேர்ந்தால், தன் உணவில் பங்கு போட வருமே என்ற மனப்பான்மையில் வாழும் இனம் இது!

அதற்காக நாய்கள் மாதிரியோ, காகங்கள் மாதிரியோ, தன் இனத்தோடு சண்டை போட்டுத் துரத்துவதுமில்லை!

எப்போதாவது சந்தித்தால், ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்!!
பாம்புகள் நாமெல்லாம் கற்பனை செய்து போற்றிவரும் தாய்களும் அல்ல!
பெற்றவுடன் விட்டு விலகிவிடும்!

குட்டிகள் தம்மைத் தாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!

"எப்படி உடலுறவு கொள்கின்றன?"

வெயில் காலத்தில் வாலிப வயது வந்த கிளர்ந்தெழும் பாம்புகள் [sexually active snakes] தன் கண்ணில் தென்படும் எந்தவொரு பாம்பையும் அணுகும்!
ஆம்!

"எந்தவொரு பாம்பையும்!" அது எந்த ஜாதி எனப் பார்க்காமலேயே!

தான் எதிர்கொண்ட பாம்பின் வரவேற்பைப் பொறுத்து இதன் அடுத்த நடப்பு[encounter] இருக்கும்!

இது எதிர்கொண்ட பாம்பு ஒரு ஆணாக இருந்தால்... ஆம்... பாம்புகளுக்கு இது ஆண் இது பெண் எனக்கூடத் தெரியாது!... உடனடியாக ஒரு சண்டை நிகழும்! இந்தச் சண்டை இனத்துக்கு இனம் வேறுபடும்.

சிலவகைப் பாம்புகள் [Elapids and Vipers]கடிக்காமலும், சில வகைகள் [Colubrids] பயங்கரமாகக் கடித்துக் கொண்டும் சண்டையிடும்!

இப்படி ஏதும் நிகழவில்லையெனில், ஆண் பாம்பு உடலுறவு கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கும்.

தன் நாக்கில் இருக்கும் ஒரு உணர்வலைகளின் மூலம், தன் இணையவிருக்கும் பாம்பு எந்த ஜாதி, ஆணா, பெண்ணா, என அறிகிறது.

இது தனக்கு ஒவ்வாத ஒன்று என அறிந்தவுடன், உடனே அவ்விடத்தை விட்டு அகன்றுவிடும்!....

அடுத்த இணையைத் தேடி!!

தனக்கு இணையென உணர்ந்தவுடன், ஆண்பாம்பு அதனுடன் கூட விழையும்.
தன் தலையை அதன் உடல் மீது வைக்கிறது.
வாலால் உடலைப் பிணைக்கிறது.
தனது உறுப்பை அதன் உறுப்புடன் இணைக்க முயல்கிறது.

இப்படி எளிதாக இது நிகழ, பெண் பாம்பு அனுமதிப்பதில்லை!
வழுக்கிக் கொண்டு விலகி ஓடும்.
ஆண்பாம்பு துரத்தி, மீண்டும் பிணைய முயலும்.
இது சில மணி நேரமோ.... அல்லது சில நாட்களோ கூட ஆகலாம்!

ஆண் பாம்புக்கு இரு ஆணுறுப்புகள்! [hemepenes] என இது அழைக்கப்படும்.

வளையக்கூடிய எலும்புகளைக்[flexible spines] கொண்டது இது!

பெண்ணுறுப்புக்குள் நுழைந்தவுடன், தன் இரு எலும்புகளால் இறுகப் பிடித்துக் கொள்கிறது......

ஒரு மணி.. இரண்டு மணி... சிலசமயம் ஒரு சில நிமிடங்களில் கூட இது முடியும்!

இரு பாம்புகளும் ஒரு அசைவும் இல்லாது, அப்படியே இந்த நிகழ்வின் போது இருக்கும்.

சில சமயம், பெண்பாம்பு தன் மீது கவிந்த ஆணை இழுத்துக் கொண்டு நகரும்.
சில நேரம், ஆண்பாம்பு தன் துணையுடன் சில நாட்கள் கூடவே இருந்து, மீண்டும் கூடும் நிகழ்வும் நடக்கலாம்.

சரி... இப்படி நிகழ்ந்ததும்........

எது முதலில் வரும்?
முட்டையா? பாம்பா?

கேட்டால் சொல்கிறேன்!

ஆனால், இதன் மூலம் புரிவது என்னவெனில்,....

பாம்பு சாரையுடன் பிணையும்!
ஆனால்,....
இணையாது!
:))))))))))))))))


*****************

Read more...

Wednesday, August 27, 2008

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"


"ஸோட்ஸி"

ஒரு இளைஞன்!

தந்தை தாயற்ற அநாதை!

தவறான கும்பலுடன் சேர்ந்து தனக்கென ஒரு தவறான வழியையும் தேர்ந்தெடுக்கிறான்.

இவன் பின்னாலும் ஒரு நாலு பேர்!

சின்னச் சின்னத் திருட்டுகள், அடிதடிகள் செய்து தானும் ஒரு 'தாதா'வெனப் பெயரெடுக்கிறான்!

ஒருமுறை ஒரு கொலை எதிபாராதவிதமாக நிகழ்ந்துவிடுகிறது.

ஸோட்ஸி இதை நியாயப்படுத்தி கொலைசெய்த நண்பனுக்காகப் பரிந்து பேசுகிறான்.

நண்பர்களுக்குள் இதில் வேறுபாடு ஏற்பட்டு, ஆத்திரத்தில், தன் முடிவை எதிர்த்த நண்பனை நையப்புடைக்கிறான்.

தன் செயலில் தானே நொந்து போய், தனியே கிளம்புகிறான்.

ஒரு தனித் திருட்டை நிகழ்த்துகிறான்.

தனியே இருக்கும் அந்த ஆளை அடித்துப் போட்டுவிட்டு கிடைத்த பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான்.

வீட்டு வாசலில் கதவைத் திறக்கச் சொல்லி,அந்த வீட்டுக்காரரின் மனைவி ஒரு காரிலிருந்து இறங்கி, மணியை அழுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளைத் துப்பாக்கி முனையில் தள்ளிவிட்டு, அவள் காரில் ஏறித் தப்பிக்கிறான்.

கொஞ்ச தூரம் சென்றதும், பின் இருக்கையில் இருந்து ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான்!.....

ஒரு குழந்தையின் அழுகை ஒலி!

திடுக்கிட்டு காரை நிறுத்திப் பார்க்கிறான்!

ஆம்!

ஒரு சின்னக் குழந்தை பின்னிருக்கையில்!

திகைத்துப்போய், உடனே தன் வீட்டுக்குச் செல்கிறான்.

அந்தக் குழந்தையை ஒரு செய்தித்தாளில் சுற்றி, படுக்கைக்கு அடியில் ஒளித்து வைக்கிறான்!

பசிக்கு அது அழும்போது என்ன செய்வதெனத் தெரியாமல், பாலை அதன் வாயில் ஊற்ற, அது அதைத் துப்ப, செய்வதறியாது திகைக்கிறான்.

கூடவே ஆயும் போய் அது அழுகிறது!

ஒரு செய்தித்தாளில் அதை வாங்கி சுருட்டி வைக்கிறான்!

வெளியே சென்று திரும்புகிறான்.

குழந்தை வீறிட்டு அழுதுகொண்டிருக்கிறது.

படுக்கையின் அடியில் வைத்திருந்த அந்தக் குழந்தையை வெளியே இழுத்துப் பார்த்தால்.....

குழந்தையைச் சுற்றி ஒரே எறும்புக்கூட்டம்!

தித்திப்புப் பாலுக்காக வந்த எறும்புகள் மொய்த்து குழந்தையைக் கடித்துக் கொண்டிருக்கின்றன.

பதறிப்போய், உடனே தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான்.

அவள் ஒரு குழந்தைக்குத் தாய் என்பதை கடைத்தெருவில் பார்த்திருக்கிறான் இவன்!

அவளிடம் விவரத்தைச் சொல்லி, குழந்தையை அவளிடம் விட்டுச் செல்கிறான்.

அவளும் இவன் [முரட்டுக்]குணமறிந்து அதைப் பராமரிக்க ஒப்புக்கொள்கிறாள்.

குழந்தையைப் பறிகொடுத்தவர் போலீஸில் புகார் கொடுக்கிறார். மனைவியோ ஒரு தள்ளுவண்டியில்!

குழந்தைக்காக மீண்டும் அந்தக் குழந்தையின் வீட்டுக்கே சென்று, அதற்குத் தேவையான பொருள்களைத் தன் நண்பர்களுடன் சென்று திருடுகிறான்.

அப்போது, குழந்தைக்குத் தேவையானதைத் தவிர, மேலும் சில பொருள்களைத் திருட முற்படும் தனது நண்பனையே ஒரு சண்டையில் கொன்றும் விடுகிறான்.

இவனது இந்த "திருந்திய" போக்கு பிடிக்காத இன்னொரு நண்பனும் விலகுகிறான், இவனை விட்டு!

ஒரு பெரும் தொகையை இந்தக் குழந்தையைப் பராமரிக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க, அவள் அதை ஏற்க மறுத்து, குழந்தையையும் திருப்பிக் கொடுக்கிறாள்.

போலீஸ் கொடுத்த துப்பின் மூலம் உண்மை அறிந்த குழந்தையின் தாய், எடுத்த இடத்திலேயே ..... தன் வீட்டிலேயே குழந்தையை விட்டு விட்டு வந்தால் உன்னைக் காப்பாற்ற முயலுவேன் எனச் சொல்ல,
குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்கிறான்.


அதற்குள் போலீஸுக்கு விஷயம் தெரியவர, வீட்டைச் சூழ்கிறார்கள்.

'இவன் தன் தவறை ஒப்புக்கொண்டு குழந்தையைத் திரும்பவும் தந்துவிட்டான்' என அந்தத் தந்தை அலறிக்கொண்டு ஓடிவரும் வேளையில்,
ஸோட்ஸி போலீஸால் சுட்டுக் கொல்லப் படுகிறான்!


படம் முடிகிறது!

கலங்க வைக்கும் படம் இது!

சிறப்பான நடிப்பு, இயக்கம், காட்சித் தொகுப்பு, பின்னணி இசை!

மிகச் சிறந்த படங்களில் ஒன்று இது!

2005க்கான சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற படம் இது!

தென்னாப்பிரிக்கக் களம் இதன் இன்னுமொரு சிறப்பு!

தவறாமல் பாருங்கள்!


"ஸோட்ஸி!"

Read more...

Tuesday, August 26, 2008

"கண்ணா வா!"

"கண்ணா வா!"
[க்ருஷ்ண ஜயந்தி அன்றே எழுதி வைத்தது! வேறு சில பதிவுகள் இடையில் பதிந்ததால் தள்ளிப் போனது! அதனால் என்ன! கண்ணன் வர ஒரு நாள் வேண்டுமா? இதோ!...வருகிறான்!]

கண்ணன் என்னும் எந்தன் மன்னன் என்னில் வந்தான்
முன்னம் வந்த வினைகள் எல்லாம் தீர்த்து வைத்தான்
கண்ணில் அன்பைக் காட்டி என்னைக் கட்டிக் கொண்டான்
எண்ணம் முழுதும் அவனே என்னுள் பொங்கி நின்றான்!

இன்பம் என்னும் சொல்லின் பொருளின் காட்சி தந்தான்
துன்பம் இல்லா வாழ்வைக் காணும் வழியைத் தந்தான்
புல்லாங்குழலின் ஓசைமூலம் கீதை சொன்னான்
என்றும் சுகமாய் வாழும் வழியைச் சொல்லிச் சென்றான்!

வெண்ணையுண்ண கோதைப்பெண்டிர் இல்லம் சென்றான்
கண்ணில் கள்ளம் காட்டிக் கொண்டு புன்னகை செய்தான்
மண்ணையுண்டு வாயைத் திறந்து மாயம் செய்தான்
எண்ணவொண்ணா உலகைத் தன்னில் காட்டி நின்றான்!

காதல் செய்த ராதை உள்ளம் தன்னில் நின்றான்
கோதை ஆண்டாள் உள்ளில் தன்னின் மாலை தந்தான்
ஏதும் இல்லா காதல் என்னும் எண்ணம் தன்னை
தீதும் இன்றி என்னில் தந்த மன்னன் கண்ணன்!

வேதம் சொன்ன கண்ணன் என்றும் என்னில் என்னில்
கீதை சொன்ன கண்ணன் அந்தப் புல்லாங் குழலில்
ஓதும் எந்த வேதம் எல்லாம் இவனின் சொல்லில்
போதும் இந்தப் பிறவி இனிமேல் உந்தன் கையில்!

ஆவணி மாதம் ரோஹிணியில்நீ இல்லம் வந்தாய்
தேவகித் தாயின் கருவில் வந்து கீதை தந்தாய்
கோகுலம் வந்து கோபியர் நெஞ்சில் கோயில் கொண்டாய்
மாநிலம் வாழ என்றும் உந்தன் அருளைத் தந்தாய்!

சின்னச் சின்னக் குறும்புகள் செய்தென் நெஞ்சம் கொண்டாய்
வண்ண வண்ணக் கோலம் காட்டியென் சிந்தை நின்றாய்
என்னவென்ன சொல்லி உன்னைப் பாடுவேன் கண்ணா
சின்னக்கண்ணா நீயே என்றன் சொந்தம் மன்னா!

கண்ணன் என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்
கண்ணன் பேரைச் சொன்னால் கலியின் தாகம் தீரும்
கண்ணன் என்னும் சொல்லே வாழ்வின் பொருளைச் சொல்லும்
கண்ணன் என்னும் ஒன்றே என்றும் என்றன் இன்பம்!
************************************************


["கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல" பாடல் ராகத்தில் பாடிப் பாருங்கள்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP