Tuesday, February 10, 2009

"உந்தீ பற!” - 16

"உந்தீ பற!” - 16

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. [16]


வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீ பற
உண்மை உணர்ச்சியாம் உந்தீ பற.


அலைந்திடும் மனத்துக்கு ஆயிரம் விடயங்கள்
கலைந்திடும் மேகமென இங்குமங்கும் அலைக்கழிக்கும்

ஒருநிலைப் படுதலைக் குலைத்திடச் செய்யும்
விளைந்திடும் எண்ணமே மலையனக் குவியும்

பார்த்திடும் யாவையும் விலக்கியே வைத்து
பார்ப்பது யானெனும் நிலை புரிந்துவிடில்

ஒருநிலை உணர்வெனும் உண்மையின் காட்சி
உள்ளில் மலர்ந்து எங்கும் நிறையும்.


இதுவரை சொல்லிய அஷ்டாங்க யோகத்தின் முறையான பயிற்சியினால் விளையும் பயனை இந்தப் பாடல் விளக்குகிறது.

மூச்சுக்காற்றினை உள்ளில் ஒடுக்க, உண்மை எதுவெனத் தெரியும் என முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

வெளியில் தெரியும் அனைத்தையும், உடலும், உள்ளமும், அறிவும் நமக்கு உணர்த்தி இன்னின்னது இது எனக் காட்டினாலும், இவை அனைத்தையும் பார்ப்பது ‘நான்’ என்னும் ஒன்றே!

‘இது கணினி’,’இது புத்தகம்’ என பொருள்கள் எதிரில் தெரிந்தாலும், ‘நான்’ இப்போது ஒரு கணினியைப் பார்க்கிறேன்’, ‘நான் ஒரு புத்தகம் படிக்கிறேன்’ என அறியும்போது, உரு அழிந்து, ‘நான்’ என்னும் உணர்வு மேலோங்குகிறது.

இப்படி, இந்த ‘நான்’ என்னும் ஒன்றே அனைத்தையும் பார்க்கும், உணரும், அறியும் ஒன்று எனும் தெளிவு, புறப்பொருட்களை விடுத்து, உள்ளில் இன்னமும் அதிகமாக ஈடுபட ஒரு சாதகனைப் பண்படுத்துகிறது.

இந்த உணர்வு தொடர்ந்து செயல்படும்போது, ‘உண்மையான, சலனமற்ற உணர்வு’ காணும் பொருளுடன் ‘நான்’ என்னும் ஒன்றையும் ஒன்றச் செய்து, இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் செய்து, மனத்தை நிலைப்படுத்தி, ‘உண்மையின் காட்சி’ புரியத் துவங்கும்.


****************

[தொடரும்]

Read more...

Monday, February 09, 2009

"உந்தீ பற!” - 15

"உந்தீ பற!” - 15

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி
தனக்கோர் செயலிலை யுந்தீபற
தன்னியல் சார்ந்தன னுந்தீபற. [15]


மன உரு மாயம் மெய்ம்மன்னுமா[ம்] யோகி
தனக்கோர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீ பற.



மனமெனும் ஒன்று மாயங்கள் செய்து
பலவுருக் கொண்டு பாதகம் செய்யும்

பலவித உருவினைப் பலப்பலநேரம்
தனதெனச் சொல்லி ஆட்டியே வைக்கும்

மனமிது மாயா உருவென அறியும்
யோகியர் இதனின் வலையினில் விழாது

தனக்கென ஏதும் செயலிலை என்றே
தன்னியல்பு அறிந்து மகிழ்வுடன் இருப்பர்.


மனத்தை அழிக்கும் உபாயம் எதுவெனத் தெரிவதே ஒரு உண்மையான சாதகனின் தேடல்!

ஆசனம், பிராணாயாமம் என்னும் பல வகைகளின் மூலம் மட்டுமே ஒருவர் யோகி ஆவதில்லை!

இருவிதச் செயல்பாடுள்ள மனத்தின் செயலை அறிந்து, அதனை ஒடுக்கவும், அழிக்கவும் தெரிய இவற்றின் உதவியைச் சரியாகப் புரிந்து ‘உண்மைப் பொருளை’உணர்ந்தவரே, அப்படி நிகழ்த்தியவரே ‘யோகி’ என ஆகிறார்.

இவருக்கு ‘நான்’ யார்? என்பது புரிந்து, ஆனந்தம் வெளியில் இருக்கும் பொருள்களினால் வருவதில்லை; அது தனக்குள்ளேயே இருக்கிறது என்பது புரிவதால், எப்போதும் இயல்பான மகிழ்ச்சியுடனே இருக்கத் துவங்குகிறார்.

‘இது வேண்டும்!’, ’அது வேண்டும்!’ என விரும்பி அதற்காகச் செயல்கள், முயற்சிகள் செய்யாமல், ’நானே ஆனந்தம்’ என்னும் உணர்வில், எப்போதுமே ஆனந்தத்தில் திளைக்கிறார். பெறவேண்டியதென இனி ஒன்றும் இல்லை என்றபின், இனி அவர்க்கு என்ன தேவை? இனி செய்ய வேண்டியதெனவும் இவருக்கு ஒன்றும் இல்லை. இதைச் செய்; அதைச் செய் என எவராலும் நிர்பந்திக்கவும் முடியாத மகிழ்வில் எப்போதும் இருக்கிறார்.

அதற்காக இவர் செயல் என எதுவுமே செய்வதில்லையா? என ஒரு கேள்வி நமக்கு எழலாம்.

செய்வார்!

ஆனால், இவரது செயல்பாடுகள் எதையேனும் சாதிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தால் அல்லாமல், உள்ளிருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாட்டால், தன்னலமற்ற, ஆணவம் இல்லாத உலக நன்மைக்கான செயல்கள் இவரிலிருந்து பெருக்கெடுத்து இயல்பாகவே ஓடத் துவங்கும்!

இதையே இந்தப் பாடல் விளக்குகிறது.
*******************
[தொடரும்]

Read more...

Sunday, February 08, 2009

"உந்தீ பற!” - 14

"உந்தீ பற!” - 14


"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை
விடுக்கவே யோர்வழி யுந்தீபற
வீயு மதனுரு வுந்தீபற. [14]

ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர்வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீ பற.


உள்வழி இழுத்து மூச்சுக் காற்றினை
உள்ளே ஒடுக்கிட உள்ளம் ஒடுங்கும்

அலைந்திடும் உளத்தை வெளியில் விடாது
வளியெனும் காற்றினை உள்ளில் ஒடுக்கி

உளத்தை ஒடுக்கிட எண்ணம் அழியும்
இதனைப் பயின்று முறையொடு செய்யின்

உள்ளம் என்பதின் உருவம் அழியும்
உருவெதுமில்லா உளமது ஒளிரும்.

முந்தைய சில பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தையும், அதனால் விளையக்கூடிய பயனையும் பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.

பிராணயாமம் என்னும் மூச்சுக் காற்றினை உள்ளடக்கிச் செய்யப்படும் பயிற்சி, ஒரு வலையில் சிக்கி அடைபடும் பறவைகள்போல இருவிதச் செயல்களைச் செய்யும் மனத்தை, ஒடுக்கியும், அழித்தும் உதவி செய்கிறது எனப் பார்த்தோம்.

பிராணாயாமம் சாதகனின் மனத்தை அமைதிப் படுத்துகிறது.
இவ்வாறு அமைதியான மனது பரம்பொருளை நினைக்கத் துவங்குகிறது.
அப்போது ‘அறியாமை’ மெதுவாக விலகத் தொடங்குகிறது.

இந்தப் ‘பரம்பொருள்’ என்பது நாம் நினைக்கும் ஒரு ”உரு” அல்ல!

‘உரு’ மீதான அன்பு, ஈடுபாடு, விருப்பு, வெறுப்புகளை உள்ளில் உண்டாக்கி மனத்தை அலை பாயச் செய்கிறது.
என்னுடையதே சிறந்தது, மற்றது அதைவிடவும் தாழ்ந்தது என நினத்து, நினைவுகளை ஒருதலையாக மாற்றுகிறது.

”உண்மைப் பரம்பொருள்” என்பது ஒன்றே! அது இரண்டாக மாறுவதில்லை. இதுவே எல்லாவற்றினுள்ளும் இருக்கிறது என்பதாலேயே, எந்த ஒரு உருவும் நிலை பெறுகிறது என்பதை ‘அமைதி அடைந்த மனம்’ அறிய இந்த பயிற்சி உதவுகிறது.

நாம் வளர,வளர, நம் எண்ணங்களும் மாறுபடுகின்றன.
நேற்று உண்மை என நம்பியதை இன்று அதே மனம் ஏற்க மறுக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கே உணர்ந்திருக்கிறோம்.
ஏற்க மறுக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் சில கேள்விகளாவது வந்திருக்கும்!

இப்படி மனம் மாறிக் கொண்டிருந்தாலும், இதையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருப்பது ‘நான்’என்னும் ஒன்றுதான் என்பதை நாம் புரிய,அறிய மறுக்கிறோம்.

ஏனென்றால், இதை ‘புரிய’, ‘அறிய’ முடியாமல் நாம் எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருப்பதாலேயே!

முறையான குருவின் துணையுடன் இந்த ‘பிராணாயாமம்’ என்னும் மூச்சை உள்ளடக்கலை, அல்லது கவனித்தலைச் செய்யத் துவங்கும் சாதகன் இப்படி அலை பாய்வதில்லை.

‘நான்’ என்கிற ஒன்றில்லாமல் இதெல்லாம் நிகழ்வதில்லை என்பது புரிய வருகிறது அவருக்கு!

‘எல்லாவற்றையும் கடந்த “நான்”’ என்பதே எல்லா அறியாமையையும், எண்ண அலைகளையும் அழிக்கிறது என்பது இப்போது அவருக்குப் புரிய, அறிய வருகிறது.

“உரு” அழிகிறது!
‘உண்மை” புரிகிறது!
”பரம்பொருள்” எதுவென ஒருவாறாகத் தெரிய வருகிறது.

[முன்னமே சொல்லியபடி, இனி வரும் பாடல்கள் சற்று ஆழமாகச் செல்வதினால், இது பற்றிய விளக்கங்களும் அதிகமாவதைத் தவிர்க்க இயலவில்லை. நான் சொல்வதில், அல்லது சொல்ல வந்ததில் ஏதேனும் குறைகள் இருக்கக் கூடும். நான் புரிந்துகொண்ட அளவிலேயே இவற்றைச் சொல்ல முனைந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் சொல்ல
விழைகிறேன்.நன்றி.]


“தெளிவு குருவின் திருமேனி காண்டல்”
**************

[தொடரும்]

Read more...

Saturday, February 07, 2009

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"




பாம்பன் சுவாமிகள்! நம் காலத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர் இவர்! பல பதிகங்களை முருகன் மீது இவர் இயற்றியிருக்கிறார். ஒவ்வொன்றுமே முத்துகள்தான்! நான் முன்னம் ஒருமுறை சொல்லியிருந்த வேற்குழவி வேட்கை" என்னும் பதிகத்தைப் பக்தியுடன் ஓதி, இரட்டை குழந்தைகளிப் பெற்ற நிகழ்வு உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்! இவரது சமாதி ஆலயம் திருவான்மியூரில் இருக்கிறது.


"பகை கடிதல்" என்னும் ஒரு அற்புதப் பதிகம்! "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!


படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

தைப்பூச நன்நாளில் இப்பதிகத்தை அனைவரும் ஓதி, இலங்கையில் அல்லலுறும் நம் தமிழர்க்கு மயில் வாகனன் விரைவில் அருள அழைக்குமாறு வேண்டுகிறேன். சக்தி வாய்ந்த இப்பதிகம் அனைவர்க்கும் நல்லது அருளட்டும்!


[”முருகனருள்” வலைப்பூவில் இதைப் போட வந்தேன். அங்கு நண்பர் ரவி ஒன்று இப்போதுதான் பதிந்திருக்கிறார். நண்பர் தி.ரா.ச. இன்னொரு பதிவை போடுவதற்காக வைத்திருக்கிறார். எனவே இது இங்கு இடப்படுகிறது! பகவான் ரமணரின் உபதேச உந்தியார் திங்களன்று தொடரும்!!]

"பகை கடிதல்"

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே. [1]

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே. [2]

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே. [3]

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே. [4]

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [5]

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே. [6]

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே. [7]

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே. [8]

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [9]

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [10]



மயில் வாகனனே போற்றி!
முருகனருள் முன்னிற்கும்!

***********************************

Read more...

Friday, February 06, 2009

"உந்தீ பற!" - 13

"உந்தீ பற!" - 13

பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"


கடந்த நாட்களில், பகவான் ரமணர் சொன்னது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்!

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில்,தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த
பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள்
ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க
வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பாடல்கள்,


1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!

2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.

3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி,கதிவழி[முக்தி]
காட்டும் என்பதே உண்மை.

4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம், இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.

5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.

6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது,நெய்வீழ்ச்சி போல், சிந்தாமல்,சிதறாமல்,ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.

8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhAvam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அன[ன்]னிய பாவம் [bhAvam]. அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

9. அன்னிய, அன[ன்]னிய பாவம் இரண்டும் இல்லாத சத்பாவத்தில், நானும் இறையும் ஒன்று என்னும் பாவத்தில் திளைத்திருத்தலே பரபத்தி தத்துவம் எனப்படும்.

10. கன்மத்தில் தொடங்கி, பக்தி வயப்பட்டு, யோகநிலையில் ஆழ்ந்து, எல்லாம் நானே என்னும் ஞானம் வருகின்ற பரபத்தி நிலையே யோகஞானம் என்பதாம்.

இந்த இடத்தில், ஒரு மேல்விளக்கமாக, பதஞ்சலி முனிவர் அருளிய 'அஷ்டாங்க யோகம்' என்பதன் நிலைகள் சொல்லப்படுகின்றன.
யமம், நியமம், ஆஸனம்,ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகள் ஒரு சாதகன் பயிலுவான்.

11. பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றினை அடக்கும் முறையை ஒரு குருவின் துணையால் முறையாகக் கற்ற சாதகன், வலையில் சிக்கும் பறவைகள் போல தன் மனத்தையும் இதன் மூலம் ஒடுக்குவான்.

12. சக்தி [இறை, இயற்கை] என்னும் மூலத்திலிருந்து பிரிகின்ற இரு கிளைகளாக, உள்ளத்தால் உணரப்படும் அறிவும், உயிர் எனப்படும் பிராணன் வழியாகச் செய்யப்படும் செயலும் விளங்குகின்றன.

13. மனத்தின் செயல்கள் இரண்டு. உணரப்பட்ட அறிவு, உணர்ச்சிகளினால் விளையும் செயல்பாடு. மூனது ஒடுங்கி [லயம்] மீண்டும் எழும். பின்னது அழிந்துபோகும் [நாசம்].... முறையான பயிற்சிகள் செய்யும் சாதகனுக்கு.


விரிவான விளக்கங்களுக்கு பதிவுகளை மீண்டும் படித்துப் பார்க்கலாம். அல்லது, தகுந்த குருவின் அருளால் நிகழும்!

மீண்டும் திங்களன்று தொடரலாம்!

குருவே துணை! நன்றாக குரு வாழ்க!

************

[திங்களன்று தொடரும்]

Read more...

Thursday, February 05, 2009

"உந்தீ பற!" -- 12

"உந்தீ பற!" -- 12


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"



இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற. [13]


இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.

மனத்துள் அடங்குதல் இலயமெனச் சொல்வர்
மனமது அழிதல் நாசம் எனப்படும்

பிராணனும் மூச்சும் உள்ளே ஒடுங்கிட
லயமும் நாசமும் இவ்விதம் நிகழும்

அடங்கிய மனமும் மீண்டும் எழுந்திட
அழிந்த மனமோ திரும்புவதில்லை

உறங்கிட மீண்டும் எழுதல் நடக்கும்
இறந்தவர் மீண்டும் எழுதல் உண்டோ!


இதுவரை வந்த பாடல்களிலேயே, புரிந்துகொள்ளக் கடினமாய் இருந்த பாடல் இது எனக்கு!

மனத்தை அடக்கப் பயிலும் சாதகனுக்கு, பயிற்சியின் விளைவாய் இரு நிகழ்வுகள் நடக்கின்றன.

வலைக்குள் அடங்கிய பறவைகள் என முன்னொரு பாடலில் சொன்னது இங்கே உதவலாம்.

மூச்சுக்காற்றின் மூலம் பிராணாயாமம் செய்கையில், மனமும், அதன் விளைவான எண்ணங்களும் அடங்கி ஒடுங்குகின்றன.

இதிலிருந்து விடுபடும்போது, வலை விட்டு வெளிவந்த பறவைகள் போல இதுவரை ஒரு அனுபவத்தில் இலயித்திருந்த மனம் மீண்டும் விடுபட்டு எழுகிறது.

அஷ்டாங்க [எட்டுநிலை] யோகத்தில் சொல்லியிருந்த மற்ற பயிற்சிகளின் மூலம், மனத்தை, அதன் ஆசைகளை அழித்துவிட முடிகிறது. அப்படி அழிந்த மனம் மீண்டும் உயிர்ப்பதில்லை.

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவன், மீண்டும் அதிலிருந்து விடுபட்டு எழுந்திடக் கூடும். ஆனால், இறந்தவர் மீண்டும் எழுவதில்லை.

மேலே சொன்ன உதாரணத்தை, பிராணாயாமத்தால் இலயித்த,[அல்லது] ஒடுங்கிய மனத்துக்கும், நேரான மனக்கட்டுப்பாட்டினால் அழிக்கப்பட்ட மனத்துக்கும் ஒப்பிட்டால், இது இன்னும் சற்று புரியலாம்.

இதைத் தொடர்ந்து எழும் கேள்விகள் ஏராளம்!


அப்படியானால், இரண்டு மனங்களா நமக்கெல்லாம்?
மனம் அழிந்தால், அதனுடன் கூடவே அதன் நினைவுகளும் அழிந்துவிட்டால், பின்பு எப்படி எல்லாவற்றையும் உணர்வது?
மீண்டும் அனைத்தையும் முதலிலிருந்தே கற்றுக் கொள்ளணுமா?
எனக்கு இதுவரையில் நடந்த நிகழ்வுகள் இப்போது எல்லாம் என்னாகும்?
இப்படி நினைவழிந்த மனத்துடன் நான் எப்படி உலகில் வாழமுடியும்?

நியாயமான இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய, முதலில், இந்த 'மனமழிப்பு' என்றால் என்ன என ஆராய்வோம்!

இரண்டு மனங்கள் இல்லை நமக்கு; ஆனால் மனத்துக்கு இரு முக்கியச் செயல்கள் இருக்கின்றன!

1. புலன்களின் மூலம் உணர்ந்ததை உள்வாங்கிக் கொண்டு உள்நிறுத்திக் கொள்வது. புலன்களின் செயல்பாடு சரியாக இருக்கும் வரையிலும், இந்த மனத்திற்கு அழிவில்லை. இது தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

இதனால் தொந்தரவில்லை. மாறாக, முறையான கட்டுப்பாடுகளுடன் பயின்ற ஒரு சாதகனுக்கு இந்த உணர்வு உதவியே புரியும். இதைப் பார்க்காதே, இதை உண்ணாதே, இதைத் தொடாதே, இதைக் கேட்காதே, இதை நுகராதே என!

2. மனத்தின் இன்னொரு செயல்பாடு, பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படுவது. கோபம், பயம், பொறாமை, என்னுடையது எனும் எண்ணம், விருப்பு, வெறுப்பு ஆசை, நிராசை எனப் பலவித உணர்ச்சிகளுக்கு மனிதன்
தொடர்ந்து ஆட்படுகிறான்.... அல்லலும் படுகிறான் அதனால்!

முறையான பயிற்சியினால் இந்த மனம் அழிந்து போகிறது.

இதன் பயனாக, சாதகன் எந்தவிதமான சலனங்களுக்கும் ஆட்படாமல் போகிறான்.
சந்தோஷம் என்பது எனக்குள் நான் உணர்வதேயன்றி,
வெளிப்பொருட்களால் அல்ல
என்னும் தெளிவு பிறக்கிறது.
அறியாமை நீங்கிய தெளிந்த மனது தன்னைச் சுற்றி நிகழ்வதைக் கவனித்தும், உணர்ந்தும், தனக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கத் துவங்குகிறது.

இதனைத் தொடர்ந்தும் கேள்விகள் எழக்கூடும்!

ஆனால், இங்கு சொல்லப்படுவதெல்லாம், இந்த வழியில் செல்ல விழைபவர்க்கே எனபதைப் புரியவும். இந்த நிலை வருவதற்கு எத்தனை முயலவேண்டும் என்பதெல்லாம் முன்வந்த பாடல்கள் விளக்கியுள்ளன. அந்த நிலைகளைக் கடந்து இங்கு வந்தவர்கே இது!

அப்படியென்றால், இந்த நிலைக்கு வராமல் இதையெல்லாம் ஏன் தெரிஞ்சுக்கணும்!?

பள்ளிக்குச் செல்லும் மாணவன், நன்றாகப் படித்து, நல்லவேலையில் இருப்பவரைப் பார்க்கும்போது, தானும் அதுபோல ஆகவேண்டும் எனும் ஒரு உணர்வில் ஆட்பட்டு, முனைந்து படிப்பதைப் போலத்தான்!

அதற்கு, முதல் பயிற்சிதான் முன்னே சொல்லிய ‘யமம்’ ’நியமம்’ - வெளி, உள் கட்டுப்பாடு!

அதனில் முனைவோம் முதலில்..... இதையெல்லாம் படித்துக் கொண்டே!
****************

[தொடரும்]

Read more...

Wednesday, February 04, 2009

"உந்தீ பற!" -- 11

"உந்தீ பற!" -- 11


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

உளமு முயிரு முணர்வுஞ் செயலு

முளவாங் கிளையிரண் டுந்தீபற

வொன்றவற் றின்மூல முந்தீபற. [12]



உளமும் உயிரும் உணர்வும் செயலும்

உளவாம் கிளை இரண்டு உந்தீ பற

ஒன்று அவற்றின் மூலம் உந்தீ பற.



உள்ளம் என்னும் ஒன்றின் இருப்பால்

உயிரும் ஆங்கே ஓம்பியே வளரும்


உணர்வெனும் ஆக்கம் இருத்தலின் விளைவால்

செயலெனும் ஒன்றின் பிறப்பும் நிகழும்


உள்ளம் கொடுக்கும் உணர்வின் உந்தல்

உயிரின் செயலை ஓங்கியே வளர்க்கும்


இரண்டு கிளையாய்ப் பிரிந்து நிற்கினும்

சக்தியே இவற்றின் மூலம் ஆகும்.



உள்ளம் அறிவு சார்ந்தது. இந்த அறிவு, புலன்களின் வழியே கண்டு, கேட்டு, சுவைத்து, முகர்ந்து, தொடுதல் வழியாக உணரப்பட்டு, அறிந்து கொள்ளப் படுகிறது. உயிர் எனப்படும் பிராணன் அந்த அறிவைச் செயல்வடிவாக்குக்கிறது.

இந்த இரு கிளைகளும் சக்தி என்னும் பரம்பொருளின் [சிலர் இதனை இயற்கை எனச் சொல்லக்கூடும்], மூலத்திலிருந்து பிறக்கிறது.

பிராணன் என்கிற உயிர்மூச்சு, கிரியா சக்தியாகச் செயல்படுகிறது.

மனம் என்னும் ஞான சக்தி, தன்னறிவைக் கொண்டு வழிநடத்துகிறது.

புலன்கள் உணரும் பொருட்களை மனம் இன்னதென உணர்ந்து, தெரிந்து, புரிந்து கொள்கிறது.

இந்த இரண்டாலுமே தனித்தனியாக எதனையும் அறிய முடிவதில்லை என்பதைக் கவனிக்கவும்.

நம் மனம் ஏதோ ஒரு உணர்வின் வாயிலாக கோபமோ, பயமோ, ஆத்திரமோ அடையும்போது, நமது உடல் பதறி, மூச்சுக்காற்று வேகமாக வரத் துவங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்!

அதே மனம் சமாதானமாகும்போது, மூச்சும், உடலும் சீராகின்றன.

பிராணன், மனம் இரண்டிற்கும் இடையிலுள்ள சம்பந்தம் இந்த உதாரணத்தால் புரிய வரலாம்.

முந்தைய பாடலில் சொல்லப்பட்ட, 'மூச்சுக் காற்றை மட்டுமே கவனித்து வருதல்' என்கிற பிராணாயாமத்தைச் செய்யும்போது, எந்தவித அவசரமும் இல்லாமல் மூச்சு சீராக வருவதையும், உடல் லேசாக இருப்பதையும், மனம் வேறெதையும் நினையாமல், ஆராயாமல், அமைதியாவதையும் உணரலாம்!

பயிற்சி செய்யும் சாதகன் ஒருநிலைப்பட இது உதவுகிறது.

இந்த இரு கிளைகளுக்குமே ஆதாரமாக "சக்தி" விளங்குகிறது என்பதே இப்பாடலின் உட்பொருள்!

*********************

[தொடரும்]

Read more...

Tuesday, February 03, 2009

"உந்தீ பற!” -- 10

"உந்தீ பற!” -- 10
”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



வளியுள் ளடக்க வலைபடு புட்போ
லுளமு மொடுங்குறு முந்தீபற
வொடுக்க வுபாயமி துந்தீபற. [11]

வளி உள் அடக்க வலைபடு புள் போல்
உளமும் ஒடுங்குறும் உந்தீ பற
ஒடுக்க உபாயம் இது உந்தீ பற.


[வளி= சுழல்காற்று; புள்= பறவை[கள்]


கூட்டமாய் வந்து தானியம் தின்னும்
பறவைகள் அனைத்தும் விரிக்கும்வலையுள்

ஒன்றாய்ச் சிக்கி மடங்குதலென்னும்
நிலையினை யறிந்த ஞானியர் தாமும்

மூச்சுக் காற்றினை உள்ளே ஒடுக்கும்
உபாயம் அறிந்து அங்ஙனம் செய்திட

அவ்வழி தொடரும் உளமும் ஒடுங்கும்
இவ்வழி நல்வழி என்றே உணர்க.


[விளக்கம் கருதி, இனி பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிலும், கூடவோ, குறையவோ ஆகலாம்!]

‘ப்ராணாயாமம்’ என்னும் ஒரு பயிற்சியின் மூலம் இயல்பாக எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும் மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடும் செய்லபாட்டினை முறையாகச் செய்வது எப்படி என ஒரு குரு மூலம் உணர்ந்தறிந்த சாதகன், இதன் பயனை, பயிற்சியின் மூலம் உணரத்தொடங்குகிறார்.

சிதறிக் கிடக்கும் தானியங்களைக் கொத்தித் தின்னவரும் பறவைக் கூட்டம் தனித்தனியே அமர்ந்து, தன் வேலையைச் செய்யத் துவங்குகிறது.
மேலிருந்து ஒரு வலை அவை மீது வந்து விழுகிறது!
அத்தனை பறவைகளும் இப்போது அந்த ஒரு வலைக்குள்!

இதேபோல,
நம் மனத்துக்குள்ளும் பலவித எண்ண அலைகள்!
இங்கும் அங்குமாய்ப் பறந்து பறந்து கொத்திக் கொண்டிருக்கின்றன.
முறையான மூச்சடக்கிச் செய்யும் பயிற்சியின் மூலம், இந்த எண்ணங்கள் அடக்கப்படுகின்றன.

வலை அறுந்தால், பறவைகள் மீண்டும் சுதந்திரமாய்ப் பறப்பதுபோல, இந்தப் பயிற்சியின் முடிவில் மீண்டும் சாதகன் எண்ணங்களின் வசப்படுகிறார்.

உள்ளிழுத்தல் [பூரகம்], வெளிவிடுதல் [ரேசகம்] என்னும் இருவித நிலைகளையும் தவிர, உள்நிறுத்தி ஒடுங்குதல் [கும்பகம்] என்னும் மூன்றாம் நிலையும், பிராணாயாமத்தில் சொல்லித் தரப்படுகிறது.

மூச்சு விடுவதில், முதல் இரு நிலைகள் மட்டுமே பொதுவாக நிகழும். இந்த மூன்றாம் நிலையான ‘கும்பகம்’ என்பதை எப்படிச் செய்வது என்பது ஒரு முறையான குருவின் மூலமே கற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனம் வைக்கவும்.

பகவான் ரமணர் ஒரு எளிய வழியைச் சொல்லித் தருகிறார்.

எந்த விதமான கட்டுப்பாடும் செய்யாமல், இயல்பான மூச்சு விடுத்தலை மட்டுமே கவனிக்கச் சொல்கிறார். கவனம் சிதறாமல் இதிலேயே பதியும்போது, மனத்தின் ஓட்டம் கட்டுப்படுத்தப் படுகிறது. மனம் அமைதியாகி ஒடுங்குகிறது.

இதுபற்றி, படிப்பதையும், கேட்பதையும் விடவும், முறையான பயிற்சி மூலமே இது கைகூடும்.

************************

[தொடரும்]

Read more...

Monday, February 02, 2009

"உந்தீ பற!“ - 9

"உந்தீ பற!“ - 9



”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]


சென்ற பதிவில் சொன்ன விளக்கம் சிலருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!

கன்மம், பக்தி, ஞானம் என மூன்று நிலைகளைத்தானே கேட்டிருக்கிறோம்!
இதென்ன புதிதாக யோக ஞானம் எனச் சொல்கிறாரே என!

கன்மம், பக்தி என்கிற இரண்டு நிலைகளைத் தாண்டியதும், ஞானம் உடனே வருவதில்லை.
யோக சாதனை என்னும் ஒன்றின் மூலமே மனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.


நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவர் அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரே வார்த்தை இதுதான்!

“படித்ததெல்லாம் போதும்! பயிற்சியில் ஈடுபடு!”

இந்தப் பயிற்சிதான் யோகம் எனப்படுவது.

பலவிதமான யோக சாதனைகளைப் பற்றி பல பெரியவர்கள் சொல்லியிருந்தாலும், பதஞசலி முனிவர் விரிவாகச் சொல்லியிருக்கும் யோக விளக்கமே பொதுவாகப் பலராலும் பின்பற்றப் படுகிறது.


’பதஞ்சலி யோகம்’ என இது வழங்கப்படுகிறது.

எட்டு விதமான பயிற்சிகளை முறையாகப் பயில இதில் சொல்லுகிறார் பதஞ்சலி.


அஷ்டாங்க யோகம், ராஜ யோகம், த்யான யோகம் எனவும் இது சொல்லப்படும்.

இந்த எட்டு நிலைகள் என்னவெனப் பார்ப்போம்!

1. யமம்: பயிற்சியில் ஈடுபடும் ஒரு சாதகன் வெளிப்படையாகக் காட்டவேண்டிய, பயிலவேண்டிய நிலைகள் யமம் என அழைக்கப்படுகிறது. இவை ஐந்து வகைப்படும்.


அஹிம்சை: எவருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்

சத்யம்: உண்மை மட்டுமே பேசுதல்

அஸ்தேயம்: எதையும் திருடாமை


ப்ரம்மச்சரியம்: தன் [புலன்] அடக்கம்


அபரிக்ரஹம்: பிறருக்கில்லாது மறைக்காது இருத்தல்.



இதைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், பல செய்திகளைச் சொல்லும்! தனது நிலையை வெளிப்படையாகக் காட்டுதல், அடுத்தவர்க்கு இல்லாது எதனையும் பதுக்கி வைக்காதிருத்தல், என மேலே சொல்லியிருக்கும் முதல் நான்கு செயல்களின் மொத்தப் பயனாக இது விளங்குவது புரிய வரலாம்.

2. நியமம்: இது தனக்குள் சாதகன் செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறது. இதுவும் ஐந்து நிலைகளைச் சொல்கிறது.


சௌசம்: புறத் தூய்மை; அகத் தூய்மை.



மீண்டும் நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவரே நினைவுக்கு வருகிறார். சற்றும் கசங்காத உடைகள்; எப்போதும் சிரிக்கும் முகத் தோற்றம்; வெளியில் தெரியும் கைகளும், கால்களும், அதன் நகங்கள் உட்பட சீராக இருப்பது என ஒரு மரியாதையான புறத்தோற்றம் அவருக்கு!

அகத் தூயமை என்பது முதலில் சொல்லப்பட்ட யமத்தில் பயின்றதால், தனக்குள் நிகழும் மாற்றம்.

சந்தோஷம்: நாமெல்லாம் சந்தோஷம் என்பது கிடைக்காதது கிடைத்தால் என எண்ணுகிறோம். ஆனால், அதுவல்ல சந்தோஷம்! கிடைத்ததில் திருப்தி அடைவதே சந்தோஷம் எனப்படும்.

தவம்: எளிமையான தவநிலை

ஸ்வாத்யாயம்: புனித நூல்களைப் படித்தல்

ஈஸ்வர ப்ரணிதானம்: இறைவனே கதியெனச் சரண் அடைவது

இந்த பயிற்சிகள் சாதகனை [பயிற்சியாளனை] தன் வாழ்வில் ஒரு சமநிலை காணச் செய்து, அவனது தனித்துவத்தைச் சீர்படுத்துகிறது.

3. ஆஸனம்: தியானத்தில் ஆழ்வதற்கு முன் அமர்வது பற்றி இது சொல்கிறது. உட்கார்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே, இப்படியும், அப்படியுமாய் நெளிவதும், கால்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், லேசான முனகல், இருமல் எனப் பலர் செய்வதை நாம் பார்க்கலாம். இதற்கெல்லாம் அடிப்படை, முறையான அமர்தலைக் கற்றுக் கொள்ளாததாலே! இதை எப்படிச் செய்வது என்பதை ஒரு குரு மூலம் அறிவதே சிறந்தது.

4. ப்ராணாயாமம்: இடகலை,பிங்கலை எனச் சொல்லப்படும் இரு நாசி துவாரங்களின் வழியாகச் செய்யப்படும் மூச்சு இழுத்தலும், விடுதலும் ஒரு முறையான குருவின் மூலம் கற்றுக் கொண்டு பயிற்சி தொடர வேண்டும்.

5. ப்ரத்யாஹாரம்: வேண்டிய போதெல்லாம் தன்னிச்சையாகப் புலன்களை புலனின்பத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது எனப் பொருள். பல நிலைகளில் ஒரு சாதகன் புலன்களினால் தூண்டப்படும் நிலைக்கு ஆட்படுவான்.
அந்த நேரங்களில், தன்னை அந்த நிலையிலிருந்து விடுவித்து, மனத்தையும், புலன்களையும் அடக்குவதே இந்த நிலை.

6. தாரணம்: எதனாலும் அசைக்க முடியா மனத்திடத்துடன் மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணம்.

7. த்யானம்: ஒரே நிலையில் உண்மைப் பொருளை உள்ளில் உன்னி செய்யப்படும் நிலை இது. யோகத்தின் ஏழாவது நிலையாகத் தான் இது சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்! மற்ற ஆறு நிலைகளைச் செய்யாமல்
இதில் நேராக பலரும் முனைவதையே பொதுவாகக் காண்கிறோம். கவனம். குருவின் துணையும், அருளும் இதற்கு மிகவும் தேவை.

8. சமாதி: நினைவுகள் அனைத்துமே அற்ற ஒரு நிலை இது. யோகத்தின் இறுதி நிலை. யோகதியானம் இங்கு தியானயோகமாக மாறி பூரணமாகிறது.

ஆனால், யோகா என்னும் வகுப்புகளுக்குச் செல்லும் பலருக்கும், பிராணாயாமம், தியானம் என்னும் இரு நிலைகளே பயிற்றுவிக்கப் படுகிறது. முறையான ஒரு குரு மட்டுமே அனைத்து நிலைகளையும் சொல்லிக்
கொடுப்பார் என்பது கவனிக்கத் தக்கது.

யோக தியானம் மூலம் ஞானத்தை நோக்கிப் பயணிக்கலாம்.

இப்போது மீண்டும் பத்தாவது பாடலைப் படித்தால் இங்கு சொல்லப்படுவது என்னவெனப் புரியலாம்.

இனி நாளை தொடருவோம் பகவான் ரமணரின் உபதேச உந்தியாரை!
**************

[தொடரும்]


Read more...

Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

"உந்தீ பற!“ - 8

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

பாவ பலத்தினாற் பாவனா தீசசற்
பாவத் திருத்தலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற. [9]


பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.


அன்னியம் அனையம் இரண்டினும் மேன்மை
பாவனாதீதம் [bhaavanaathiitham] எனுமொரு நிலையே
[ஏதும் இல்லா ஒரு நிலையதுவே]

ஏதொரு ஒருவமும் வெளியிலோ உள்ளிலோ
இருத்தலில் ஈர்ப்பெனும் ஒருநிலை வரலாம்

அதனைப் பற்றிய கவனம் மிகுந்து
அடுத்ததைப் பழிக்கும் தீதும் வரலாம்

ஏதும் இல்லா சற்பாவத்தில் இருத்தலே
பரபத்தி தத்துவம் என்பதை அறியலாம்.


வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி செலுத்துகின்ற அன்னிய பாவம், அப்படி வெளியில் காணாது உள்ளேயே அந்த உருவினை வைத்து செய்கின்ற பக்தியான அனனிய பாவம் என்கிற இரண்டை விடவும்
எந்தவொரு உருவினையும் எண்ணாத சத்பாவத்தில் இருத்தலே ‘பரபத்தி’ என்னும் தத்துவம் ஆகும்.


உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற. [10]


உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீ பற
அது யோக ஞானமும் உந்தீ பற.


எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் பரபத்தி என்னிலோ

எதுவினைக் கண்டும் ஏதும் ஆகா[து]
எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]

ஆங்கே அதுவாய் ஒடுங்கி இருத்தலோ
கன்மம்பத்தி என ஆன்றோர் உரைப்பர்

அதுவேயோக ஞானம் எனுமாம்
உயரிய நிலையாம் உணர்வாய் இதனை.


இறையுணர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதனை அப்படியே உள்வாங்கி, பிறகு அதனிலேயே ஒடுங்கி ஆழ்வது கன்மம் தொடங்கி, பக்திவயப்பட்டு, பின் யோக நிலையில் ஆழ்கின்ற ஒன்றாகும்.

வெளியுருவைக் கண்டு அதனில் பக்தி செலுத்துவது கன்மம். அதனை உள்ளில் வைத்துப் போற்றுவது பக்தி.
அவையெல்லாவற்றையும் விடுத்து, ஏதுமில்லா ‘பரபத்தி’யில் ஆழ்வது யோக ஞானம் என்னும் உயரிய நிலை.

[அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்த யோகஞானம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்!]

****************
[தொடரும்]

Read more...

Friday, January 30, 2009

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]


”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்!

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:


1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!


2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.


3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.


4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.


5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.


6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.


8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].

அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

இனி, ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்தக் கருத்துகளை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்து, திங்களன்று மீண்டும் தொடரலாம்!

குருவே துணை!

*****************

[தொடரும்]

Read more...

Thursday, January 29, 2009

"உந்தீ பற!” -- 6

"உந்தீ பற!” -- 6

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடா துன்னலே யுந்தீபற

விசேடமா முன்னவே யுந்தீபற. [7]


விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடாது உன்னலே உந்தீ பற

விசேடமாம் உன்னவே உந்தீ பற.

தியானம் செய்தலில் பல்வகை உண்டாம்
நீரின் வீழ்ச்சி பலவிதமாகும்

சிந்திச் சிதறிப் பட்டுத் தெறித்து
நீரின் வேகம் போலது வீழும்

நெய்யின் வீழ்ச்சியோ சீராய் நிகழும்
மேல்முதல் கீழ்வரை ஒழுங்காய் ஒழுகும்

சிந்துதல் சிதறுதல் இதனில் கிடையா
இவ்வகை நிகழும் தியானமே உயர்வாம்.


எண்ணை, அல்லது நெய்யை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றும்போது கவனித்தால், அதன் ஒழுக்கு ஒரே சீராய் சிந்தாமல், சிதறாமல் நிகழ்வது தெரியவரும்.

நீரருவி விழுகையில், அப்படி இராது.

அப்படி, ஒரு நெய்யொழுக்கின் வீழ்ச்சி போல, கவனம் சிந்தாமல், அலைபாயாமல் தியானம் செய்வது நிகழவேண்டும்.

இதுவே உயர்ந்ததாம்.


அனியபா வத்தி னவனக மாகு

மனனிய பாவமே யுந்தீபற

வனைத்தினு முத்தம முந்தீபற. [8]


அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்

அனனிய பாவமே உந்தீ பற

அனைத்தினும் உத்தமம் உந்தீ பற.


புறமொரு தோற்றம் கண்ணால் கண்டு
அதனில் அளவிலாக் காதல் கொண்டு

அதனை அங்ஙனம் எண்ணீயபடியே
நிகழ்த்திடும் தியானம் அன்னியம் ஆகும்

அகத்துனுள் ஒரு தனி உருவினை நிறுத்தி
அதனை உள்ளுள் ஒளிரச் செய்து

அவ்வுருதன்னில் கருத்தினை உன்னும்
அனனிய தியானம் அனைத்திலும் உயர்வாம்.


வெளியே கண்ணுக்கு முன்னே தெரிகின்ற தனக்குப் பிடித்தமான கடவுளரின் உருவத்தைக் கண்ணாரக் கண்டு, உருகி, அந்தத் தோற்றத்தின் மீது பக்தி கொண்டு மெய்யுருகித் துதிப்பது அன்னிய பாவம்[bhaavam] என வகைப்படும்.

அதே தோற்றத்தைத் தன் மனத்துக்குள் நிலை நிறுத்தி,மனக்கண்ணால் அதனைக் கண்டு பக்தி செய்வது அனனிய பாவம்[baavam] எனச் சொல்லப்படுகிறது.

உள்ளில் இவ்வாறு எண்ணி தியானம் செய்வதே, இந்த அனனிய பாவமே
உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.

‘தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளில் தேடிக் கண்டுகொண்டேன்’ என்பதும் இதுவே!

*************

[திங்களன்று மீண்டும் தொடரும்] [நாளை இதுவரை கற்றதை ஒரு பார்வை பார்க்கலாம்!]

Read more...

Wednesday, January 28, 2009

"உந்தீ பற!” - 5

"உந்தீ பற!” - 5

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”


[முந்தைய பதிவு]


எண்ணுரு யாவு மிறையுரு வாமென

வெண்ணி வழிபட லுந்தீபற

வீசனற் பூசனை யுந்தீபற. [5]


எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என


எண்ணி வழிபடல் உந்தீபற


ஈசன் நல் பூசனை உந்தீபற.


எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்


காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை அவற்றுள் கொண்டு


இறைவழிபாடு இவ்விதம் செய்து
ஈசன் அவரே என்றே உணர்ந்து


நாளும் நினைவுடன் பூசனை செய்யின்
ஈசன் மகிழ்வான் இதுவே திண்ணம்.


காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.


வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்

விழுப்பமா மானத முந்தீபற


விளம்புந் தியானமி துந்தீபற. [6]


வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்

விழுப்பம் ஆனதமும் உந்தீ பற

விளம்பும் தியானம் இது உந்தீ பற.



ஈசன் நாமம் உரக்கச் சொல்லி
அவனது புகழைப் பாடுவர் சிலரும்


உதடுகள் மட்டும் அசைந்திடும் வண்ணம்
திருப்பெயர்ச் சொல்லிச் செபமும் செய்வர்


இதனினும் உயர்ந்தது அடி நாக்கிடத்தில்
எதனும் அசையா திருநாமம் செபித்தல்


தியானம் என்னும் மேல்நிலைப் படிக்கு
இதுவே வழியாம் என்றே உணர்க.


‘வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்’ என ஒரு பாடல்வரி உண்டு.

அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.


உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.


இதை விடவும் சிறந்தது, உள்நாக்கில் இதனை உருட்டி, எதையும் அசைக்காமல், செபம் செய்வது.


இதுவே மிகவும் உயர்ந்த நிலை என இப்பாடல் சொல்கிறது.

*************************
[தொடரும்]

Read more...

Tuesday, January 27, 2009

"உந்தீ பற!” - 4

"உந்தீ பற!” - 4

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]

கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்

கருத்தைத் திருத்தியஃ துந்தீபற

கதிவழி காண்பிக்கு முந்தீபற. [3]

கருத்தனுக்கு ஆக்கு[ம்] நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற.


பலனை வேண்டிச் செய்திடும் கருமம்
ஏதுபலன் தருமென எவரும் அறியார்

வேண்டிய பலனும் வந்திடின் வரலாம்
கூடவோ குறைந்தோ அதுவும் வரலாம்

முற்றிலும் வேறாய் பயனும் தரலாம்
இவ்வகை செய்பலன் நால்வகை ஆகும்

பயனெதும் கருதா செய்வினை செய்யின்
கருத்தைத் திருத்திக் கதிவழி காட்டும்

என்பதை உணரும் அறவழி மாந்தர்
அவ்விதம் செய்து பயனை விரும்பார்.


முதல் பாடல் கருத்தில் சொன்னதுபோல 'நால்வகைப் பயன்கள்' ஒரு செயலால் விளையும் என்பதை நன்கு உணர்ந்தவர், பயன் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யவேண்டிய செய்கையினை மட்டுமே
செய்வதே ‘நிஷ்காமிய கன்மம்’ என தங்களது கருத்தைத் திருத்திக்கொண்டு அதுவே முக்திக்கு வழியென நடப்பார்கள்.

திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற

வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. [4]


திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற.


இறைவனை எண்ணி ஆராதித்தலும்
அதனையே உன்னி நாமம் செபித்தலும்

மனதில் எண்ணி தியானம் செய்தலும்
உடல்வாக்கு உள்ளம்செய்யும் மூவகைத்தொழிலாம்

உடல்வழி செய்வது பூசை ஆகும்
அதனினும் சிறந்தது வாக்கினில் செபமும்

உளத்தில் ஒடுங்கிடும் தியானம் மிகவேவுயர்வே
இவ்வகையாய்ச் செய்திடல் எதனிலும் சிறப்பு.


‘காயேனவாசாமனஸா’ என உடல் வாக்கு மனம் என மூன்று வகையில் திடமாகப் பூசை செய்ய இயலும்.

உடலை வருத்தி பூசனை செய்வதைக் காட்டிலும், வாயால் செபித்து பூசை செய்வது சிறந்தது.

அதைவிடவும் சிறந்தது, மனதில் இறையை எண்ணி தியானம் செய்வது.

******************
[தொடரும்]

Read more...

Monday, January 26, 2009

"உந்தீ பற!” - 3

"உந்தீ பற!” - 3

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

காப்புச் செய்யுளாக வரும் இந்த மூன்று பாடல்களும் நான் எழுதியவை.

அருணைக் கோபுர வாசலில் அமர்ந்து
கருணைசெய் கணபதி உந்தீ பற
கவலைகள் தீர்ந்ததென உந்தீ பற

பெருமைத் தலமாம் அருணா சலத்தில்
சோதியாய் எழுந்தருள் உந்தீ பற
அண்ணாமலையா யுந்தீ பற

முத்தியருள் சிவ சத்திப் பதியினில்
உய்த்து உணர்ந்தவா வுந்தீ பற
குருவருள் ரமணா உந்தீ பற
**********************


“நூல்”

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற. [1]


கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.


கருமம் என்பது செய்தொழிலாகும்
செயல்படு பொருளதால் செய்கை ஆகும்


தானாய் இயங்கும் ஒரு தொழிலன்று
செய்கை என்பதோர் இயக்கம் மட்டுமே


இயக்கம் செய்தல் எவராலும் கூடும்
ஆயினும் அதன்பயன் எம்மிடம் இல்லை


பயனைத் தருவதும் இறைவன் ஆணையே
அதனால் அதையொரு சடமெனச் சொன்னார்


எனவே செய்கை இறையென ஆகா[து]


எந்தவொரு செயலும் தானாய் நிகழ்வது இல்லை. மேசை மேல் இருக்கும் ஒரு எழுதுகோல், அல்லது புத்தகம் இவை இரண்டுமே ஏதோ ஒரு இயக்கத்தின் மூலமே ஒரு பயனைப் பெறுகிறது. இதில் எதை எடுப்பது எனத்
தீர்மானிப்பவரின் செய்கையால் மட்டுமே இவை செயல்திறன் பெறுகின்றன.


கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போல, எந்த ஒரு செயலாலும் 1.எண்ணியபடியே, 2. எண்ணியதற்குக் குறைவாக, 3. எண்ணியதற்கும் மேலாக, 4. முற்றிலும் எதிர்பாராத என நான்கு விதமான பயன்களே வரமுடியும்.



ஒரு புறாவை நோக்கி அம்பு விடுக்கும் ஒரு வேடனை மனதில் எண்ணி இந்த நான்கு பலன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது புரியும். அப்படி, இந்த பலன்களை அளிப்பது இறைவன் ஆணையே! ஆகவே, செய்கருமம் ஒரு சடப் பொருளே; அதுவே இறைவன் என ஆகாது.

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற. [2]

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீ பற
வீடு தரல் இ[ல்]லை உந்தீ பற.


வளமுறு நிலத்தில் விதைக்கும் விதையால்
விதையின் திறனே பயிராய் விளையும்


விளைவதும் செய்திடும் முயற்சியால் கூடும்
கூடலும் குறைதலும் செய்வினை ஆகும்


செய்யும் வினையால் விளைவதும் வினையே
இதுவே தொடர்ந்து வினைக்கடல் ஆழ்த்தும்


வினைக்கடல் தாண்டி விடுதலை அடைந்திடல்
வினையின் செயலால் விளைவதும் இல்லை.

ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும். ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர. செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன.

அல்லது அது நட்டத்தில் செல்ல, அதனைத் தொடர்ந்தும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

சரவணபவன் உணவுவிடுதி,சத்யம் நிறுவனம் போன்றவற்றை இதனுடன் பொருத்திப் பார்த்தால் விளங்கும். இந்த வினைக்கடலில் ஆழ்ந்தவரால் வீடுபேறு என்பது அடையமுடியாத ஒன்றாகிப் போய்விடுகிறது.

**********************

[தொடரும்]

Read more...

Friday, January 23, 2009

"உந்தீ பற" -- 2

"உந்தீ பற" -- 2

[முந்தைய பதிவு]

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"

பாயிரத்தைத் தொடர்ந்து, திரு. முருகனார் ஒரு சிறிய முன்னுரை போல, பகவான் ரமணரின் இந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என சொல்ல விழைந்து, ஒரு கதையை நம் முன் எடுத்து வைக்கிறார்.


மாணிக்கவாசகர், முப்புரம் எரித்ததையும், தட்சன் நடத்திய யாகத்தில் அனைவரும் அழிந்ததையும் தனது திருவுந்தியில் பாட, முருகனாரோ, தாருகவனத்து முனிவர்கள், ’தான்’ என்ற மமதையில், செயல் ஒன்றே சிறந்தது என்கிற ஆணவத்தில், ஆதிசிவனோடு மோத, அவர்களது கருவத்தை சிவன் எப்படி அழித்து ஆட்கொண்டார் என்பதை ஆறு பாடல்கள் மூலம் சொல்கிறார்.
இதற்கு உபோற்காதம் [முன்னுரை, முகவுரை, பாயிரம், முன்கதை] எனப் பெயரிட்டு வழங்குகிறார்.

அந்தப் பாடல்களையும், அவற்றைப் பதம் பிரித்தும், சுருக்கமான பொருள் காணலாம்.


[கலித்தாழிசை]

உபோற்காதம்

தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கறை போயின ருந்தீபற.

தாரு வனத்தில் தவம் செய்திருந்தவர்

பூருவ கன்மத்தால் உந்தீ பற

போக்கறை போயினர் உந்தீ பற.

[தாருகாவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்கள், முந்தைய பிறப்பில் தங்களுக்குக் கிட்டிய செய்பலனால், தாங்கள் செய்வது இன்னது என அறியாது கெட்டொழிந்தனர்.]

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்

வன்மத்த ராயின ருந்தீபற

வஞ்சச் செருக்கினா லுந்தீபற.


கன்மத்தை அன்றிக் கடவுள் இல்லையெனும்

வன்மத்தர் ஆயினர் உந்தீ பற

வஞ்சச் செருக்கினால் உந்தீ பற.


[மதிமயங்கிய முனிவர்கள் தாங்கள் செய்கின்ற தவத்தினால் கிட்டிய செய்பலன் என்கிற கன்ம பலமே சிறந்தது. அதனை மீறிக் கடவுள் என ஒன்றும் இல்லை என ஆணவச் செருக்குற்றவராயினர்.]


கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற

கர்வ மகன்றன ருந்தீபற.


கன்ம பலம் தரும் கர்த்தர்[ரை] பழித்துச்

செய்கன்ம பலம் கண்டார் உந்தீ பற

கர்வம் அகன்றனர் உந்தீ பற.


[இந்த ஆணவம் தலைக்கேற, கன்ம பலம் என்கின்ற ஒன்றைத் தருகின்ற கடவுளைப் பழிக்கும் செயலால், [முற்பிறப்பால் கிட்டிய பலன்களை எல்லாம் இழந்து, இப்போது செய்துவந்த இழிச்செயலால்] இந்தச் செயலால் விளைந்த பலனை அடைந்தனர். அதன் மூலம், தங்கள் ஆணவமும் அழிக்கப் பெற்றனர். ]

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தனனுந்தீபற

சிவனுப தேசமி துந்தீபற.


காத்து அருள் என்று கரையக் கருணைக்கண்

சேர்த்து அருள் செய்தனன் உந்தீ பற

சிவன் உபதேசம் இது உந்தீ பற.

[ஆணவம் அழியப் பெற்றதால், எங்களைக் காத்து அருளவேண்டும் எனக் கண்ணீர் மல்க சிவனாரை வேண்ட, கருணைக் கண் திறந்து அவர்களுக்கு அருள் செய்தார். அப்படி அவர் செய்தபோது அருளிய உபதேசம் இது என அறிக.]


உட்கொண் டொழுக வுபதேச சாரத்தை

யுட்கொண் டெழுஞ்சுக முந்தீபற

வுட்டுன் பொழிந்திடு முந்தீபற.


உள்கொண்டு ஒழுக உபதேச சாரத்தை

உள்கொண்டு எழும் சுகம் உந்தீ பற

உள் துன்பு ஒழிந்திடும் உந்தீபற.


[இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கி அதன்படி நடந்து வந்தால், உள்ளிருந்து ஒரு சுகமான அனுபவம் எழுவதை உணரலாம். இதுவரை இருந்த துன்பங்கள் எல்லாமே ஒழிந்து போய்விடும்.]


சார வுபதேச சாரமுட் சாரவே

சேரக் களிசேர வுந்தீபற

தீரத் துயர்தீர வுந்தீபற.


சார உபதேச சாரம் உள் சாரவே

சேரக் களி சேர உந்தீ பற

தீரத் துயர்தீர உந்தீ பற.


[அப்படியே அனைவரும் இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இன்பம் ஒன்றையே அடையட்டும். அவர்கள் துன்பமெல்லாம் தீர்ந்து போகட்டும்.]

-- முருகனார்

[எனச் சொல்லி முருகனார் வாழ்த்துகிறார்!]
____________________________


இதுவரை வந்த பாடல்களுக்குச் சொல்லியதெல்லாம் பொதுப்படையான பொருள் மட்டுமே. உபதேச உந்தியாரில் வருகின்ற பகவான் ரமணரின் முப்பது பாடல்களுக்கும் சற்று வித்தியாசமான முறையில்,... ஒரு எட்டுவரிக் கவிதையில்.... சொல்ல முயன்றிருக்கிறேன். தொடர்ந்து சில உரைநடை விளக்கங்களும் இருக்கும்.


அப்படித் தொடங்கும் போது, என் மனதில் உதித்த ஒரு மூன்று பாடல்களை வாழ்த்துப் பாக்களாக உங்கள் முன் வைத்து, அதனைத் தொடர்ந்து, பகவானின் பாடல்களை அளிக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை [இந்திய நேரம்] வாரம் ஐந்து பதிவுகளாக இது வரும்.

நன்றி.

முருகனருள் முன்னிற்கும்!
_________________________
[தொடரும்]

Read more...

Thursday, January 22, 2009

"உந்தீ பற" -- 1

"உந்தீ பற" -- 1

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"


திருவாசகம் படித்துவருகையில், மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய ஒரு பாசுரம் என்னை மிகவும் கவர்ந்தது.


திருவுந்தியார் எனும் இந்தத் தொகுப்பு மூன்றடிகள் கொண்ட பாக்களால் ஆனது. இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஈற்றடியாக 'உந்தீ பற' எனும் சொற்றொடர் வரும்.


இதன் பொருள் என்னவெனத் தேடினேன். இது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு என ஒரு பொருள் இருந்தது. அதை வைத்து யோசிக்கையில், முதல் இரண்டு அடிகளைச் சொல்லி அதில் ஒரு கேள்வியையோ அல்லது கருத்தையோ வைத்து ஒரு பெண் மலர்ப்பந்தை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை அடுத்தவளிடம் வீச, அவள், அதற்கான விடையைச் சொல்லி திருப்பி எறிவது எனக் கற்பனை செய்து பார்த்தால், இதன் அமைப்பு சற்று புரிய வரலாம்.


இதைத் தவிரவும் மேல் விளக்கங்கள் இருக்கலாம். தெரிந்தவர்கள் வந்து சொன்னால், நன்றியுடையவனாக இருப்பேன்.


உதாரணத்திற்கு ஒன்று:


மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில், எட்டாம் திருமுறையில், 'ஞான வெற்றி' எனும் தலைப்பில் உள்ள 'திருவுந்தியாரில்’ இருந்து ஒரு பாடல்:


ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற


இதன் முதல் ஈரடிகள் சொல்வதின் பொருள்:


முப்புரம் எரிக்கக் கிளம்புகிற திருவேகம்பரின் திருக்கரத்தில் நாம் இரண்டு அம்புகளைக் கூட காணவில்லையே? ஒரு அம்புதானே இருக்கிறது
எனச் சொல்லி உந்தீ பறக்கவிடுகிறாள் அடுத்தவளிடம்!


அதற்கு பதில் அளிக்கிறாள், அடுத்தவள் மூன்றாவது அடியில்:


[பார்வையாலேயே சுட்டெரிக்கும் வல்லமை பெற்ற எம்பெருமானுக்கு] அந்த ஓரம்பே அதிகமில்லையோ? எனச் சொல்லி உந்தீ திருப்பிப் பறக்க விடுகிறாள்.


இப்படியாகப் போகிறது விளையாட்டு மாறி மாறி!


மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இந்த பாணியைக் கையாண்டு பலரும் இயற்றி இருக்கிறார்கள். அவையெல்லாமே 'திருவுந்தியார்' எனவே அழைக்கப்படுகின்றன.


அப்படி ஒரு நூல் என் கைகளில் வந்து சேர்ந்தது.


இது கிடைத்தது ஒரு சுவையான நிகழ்வு.


எனது உறவினர் ஒருவர் சொன்னதின் பேரில், எங்களூரில் இருக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்திருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.


அவர் பகவான் ரமணரின் குடும்ப வழித் தோன்றல் என்பது சென்ற பின்னரே தெரிய வந்தது. விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது, என் கையில் ஒரு புத்தகம் கொடுத்து ”இதைப் படியுங்கள்” எனச் சொன்னார். பகவான் ரமணரால் இயற்றப்பட்ட பல்வேறு பாசுரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல் அது.


அன்றுதான் திருவண்னாமலை தீபத் திருநாள்! அண்ணாமலையான் ஆசியாக அதை நினைத்து நன்றிசொல்லி வந்தேன்.


அண்மையில், சென்னை சென்றிருந்தபோது, விமானத்தில் படிக்க இதனை எடுத்துச் சென்றிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த பாசுரம்தான் இந்த ”திருவுந்தியார்”!


'நான்' என்பது யார்? அதனை எப்படி அறிவது? அறிந்தபின் எப்படி விடுவது? தான் அற்றவனாக எப்படி ஆவது? போன்ற பல கேள்விகளுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பாசுரமாக அது எனக்குத் தோன்றியது.


எனக்குத் தெரிந்த அளவில், இந்த மூன்றடிப் பாக்களை எட்டுவரிக் கவிதை வடிவில் விளக்க முயன்றிருக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்!
முப்பது பாடல்களில் இதனை பகவான் ரமணர் சொல்லியிருக்கிறார். அவரது சீடரான முருகனார் என்னும் அன்பர் இதற்கு முன்னும் பின்னுமாக பனிரண்டு பாக்களை இதே அமைப்பில் சேர்த்திருக்கிறார். அவற்றுள், முதல் ஏழு பாடல்களை முதலில் சுருக்கமாக அளிக்கிறேன்.


குருவருள் துணை நிற்கட்டும்!
******************************


"உபதேசவுந்தியார்"


பாயிரம்


[வெண்பா]

[இந்தப் பாடல் 'உந்தீ பற' அமைப்பில் அமைந்தது அல்ல!]


கன்மமய றீர்ந்துகதி காண நெறிமுறையின்
மன்மமுல குய்ய வழங்குகெனச் - சொன்முருகற்
கெந்தைரம ணன்றொகுத் தீந்தானுபதேச
வுந்தியார் ஞானவிளக் கோர்.


[பதம் பிரித்து]


கன்மமயம் தீர்ந்து கதிகாண நெறிமுறையின்
மன்மம் உலகுய்ய வழங்குக எனச் - சொன்முருகற்கு
எந்தை ரமணன் தொகுத்து ஈந்தான் உபதேச
வுந்தியார் ஞானவிளக்கோர்.


உபதேச உந்தியார் என்னும் ஒரு ஞானவிளக்கு! கன்ம மலம் தீர்ந்து எவ்வாறு கதி காணுவது என்பதன் மர்மத்தை இந்த உலகம் உய்வதற்கென வழங்கிடுக எனச் சொன்ன முருகருக்கு[சீடர் முருகனார்] எங்கள் தந்தையாகிய 'ரமணன்' இங்கே தொகுத்து அளித்தான்.

***********************************


[தொடரும்]

Read more...

Wednesday, January 21, 2009

”ஆனந்த ராமாயணம்” -- 2

”ஆனந்த ராமாயணம்” -- 2

"கிஷ்கிந்தா காண்டம்"


அனுமான் எதிரில்வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா


நேசம்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீ நிலத்தில் செய்து கொண்டீர் ராமா ராமா


சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டு மனம் கசிந்தீர் ராமா ராமா


சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மராமரத்தை ராமா ராமா


வாலியை வதைத்தவனை ராமா ராமா

வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா


சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதி சொல்லி விடுத்தீர் ராமா ராமா


நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகின்றார் ராமா ராமா

*****************************************


"சுந்தர காண்டம்"


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடவே ராமா ராமா


மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா


இலங்கிணி தன்னையே ராமா ராமா

கலங்கிட அடித்தானே ராமா ராமா


சீதையைத் தேடிக்கண்டானே ராமா ராமா

சேதி அடையாளம் தந்தான் ராமா ராமா


அசோகவனம் அழித்தான் ராமா ராமா

அசுரர்களைத் தான் வதைத்தான் ராமா ராமா


இலங்கைக்குக் கொள்ளி வைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா


சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா


இந்திரஜித்தன் அஸ்திரத்தால் ராமா ராமா

பந்தித்த அனுமானும் ராமா ராமா


ராவணனைக் கண்டு அனுமான் ராமா ராமா

சாவாமைக்கு புத்தி சொன்னான் ராமா ராமா


விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா

**************************************


"யுத்த காண்டம்"


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா


சரணமடைந்த விபீஷணர்க்கு ராமா ராமா

சிரஞ்சீவிப் பட்டம் தந்தாய் ராமா ராமா


ராவணாதி அசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷஸர் வேரற்றுப் போக ராமா ராமா


சீதையைச் சிறை நீக்கிவிட்டாய் ராமா ராமா

விபீஷணர்க்கு முடிதரித்தாய் ராமா ராமா


அயோத்திக்குத் திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்கு உரை செய்தாய் ராமா ராமா


புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா


போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போக விடுத்து அனுமானை ராமா ராமா


பரதன் உயிர் காப்பாற்றிய ராமா ராமா

அயோத்திநகர் வந்து சேர்ந்தீர் ராமா ராமா


மகுடாபிஷேகம் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா


குவலயத்தை ரக்ஷிக்கும் ராமா ராமா

குறைகள் ஒன்றும் வாராது ராமா ராமா


ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

*********************************

ஆனந்த ராமாயணம் நிறைவுற்றது!

Read more...

Tuesday, January 20, 2009

"ஆனந்த ராமாயணம்" - 1

"ஆனந்த ராமாயணம்"


நான் தினந்தோறும் சொல்லிவரும் ஒரு இனிய தோத்திரப் பாடல் ஆனந்த ராமாயணம். எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்து, அவனுக்கே அவன் கதையைச் சொல்லுவதாக அமைந்த பாடல் இது! இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

பதிவின் நீளம் கருதி, இரு பதிவுகளாக இதை இங்கு அளிக்கிறேன். இசைவடிவிலும் இதனை நாளை அளிக்க முயலுகிறேன்.

ஸ்ரீ ராமஜயம்!



"பால காண்டம்"


தேவர்குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா


தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடே ஜனித்தாய் ராமா ராமா


கோசலைதன் கர்ப்பத்தில் ராமா ராமா

கூசாமல் நீ பிறந்தாய் ராமா ராமா


தவமுனிக்கு உதவிசெய்ய ராமா ராமா

கவனமுடன் பின்சென்றாய் ராமா ராமா


தாடகையைச் சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா


கல்லைப் பெண்ணாக்கி வைத்தாய் ராமா ராமா

வில்வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா


ஜனகன் வரலாறு கேட்ட ராமா ராமா

தனக்கு முனிவன் பதிலுரைக்க ராமா ராமா


தனுசைக் கையில் எடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமற்றாய் ராமா ராமா


வில்முறிய சீதை கண்டு ராமா ராமா

நல்மணம் செய்துகொண்டாய் ராமா ராமா


மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கினீர் மிதிலை தன்னில் ராமா ராமா


பரசுராமன் வில் முறித்தீர் ராமா ராமா

கரிசனமாய் அயோத்தி சென்றீர் ராமா ராமா


சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறக்கவே அயோத்தி நகர் ராமா ராமா

****************************************


"அயோத்தியா காண்டம்"


அயோத்திக்கு அரசனாக ராமா ராமா

அவனிதனில் தசரதரும் ராமா ராமா


உந்தனையே வேண்டிக் கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா


சிற்றன்னை கைகேசியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா


பக்குவமாய் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா


உத்தரவு கேளென்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா


தாய்மொழி தவறாமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா


தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தான் நடந்தாய் கானகமும் ராமா ராமா


சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணரும் கூட வந்தார் ராமா ராமா


பக்தரெல்லாம் புலம்பிடவே ராமா ராமா

பலநீதி சொல்லி தான் நகர்ந்தாய் ராமா ராமா


கங்கைக் கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா


ஓடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உறவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா


சேனையுடன் பரதர் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா


பட்டம்கட்டி அரசுசெய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா

********************************************


"ஆரண்ய காண்டம்"


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சேர்ந்தாய் ராமா ராமா


கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா


தண்டகவனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா


பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா


சூர்ப்பனகையைக் கண்டீர் ராமா ராமா

தீர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா


தம்பியால் பங்கமடைந்தாள் ராமா ராமா

வெம்பி மனம் வாடினாள் ராமா ராமா


கரதூஷணாதியரை ராமா ராமா

வர முறையிட்டாள் ராமா ராமா


கோதண்டத்துக்கு இரையாக ராமா ராமா

கூக்குரலிட்டு ஓடிவந்தார் ராமா ராமா


சூர்ப்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா


மாரீசனை மானாக வர ராமா ராமா

மருமகனும் வேண்டிக் கொண்டான் ராமா ராமா


மாரீசன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா


சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப் பிடிக்கப் பின்சென்றாய் ராமா ராமா


அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா


சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா


ராவண சந்யாசி வந்தான் ராமா ராமா

நிலத்தோடே சீதையை ராமா ராமா


தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்தெதிர்த்த ஜடாயுவும் ராமா ராமா


சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா


தேடிவரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா


நல்வரமும் தானளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா


சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

***************************************
[நாளை நிறைவுறும்!]

Read more...

Saturday, December 06, 2008

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்



கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் பார்க்கப்படாத "ஆணிவேர்" என்னும் திரைப்படத்தை நேற்று பார்க்க முடிந்தது. இதை நீங்கள் பார்க்கவேண்டும் என அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி.

இந்தப் படம் ஒரு காதல் கதை!

தொழில் நிமித்தமாகச் சென்ற இடத்தில் தான் சந்தித்த ஒரு தமிழீழ மருத்துவரின் செயல் திறமையிலும், அவரது தன்னலமற்ற உன்னத நோக்கத்திலும் மனதைப் பறிகொடுத்த ஒரு இந்திய பத்திரிகைப் பெண்நிருபர், இது ஒத்துவராது எனக் காதலனால் நிராகரிக்கப்பட்டு தமிழகம் திரும்ப, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், அவரைத் தன் மனதை விட்டு நீக்க முடியாமல், தேடிவருகிறார் இலங்கைக்கு.

அவரைப் பற்றிய ஒரு விவரமும் அறியமுடியாமல், தவிக்கும்போது பின்னோட்ட நினைவுகளாக, தான் அவரைச் சந்தித்த சூழ்நிலைகளை அசைபோடும் காட்சிகளாகப் படம் விரிகிறது.


சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அட்டூழியங்கள், கொடூரக் கற்பழிப்புகள், ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களைக் விதவிதமாகக் கொன்று குவிக்கும் அவலங்கள் அனைத்தையும் விலாவாரியாக, ஒரு ஆவணப்படம் போலக் காட்டி சற்று அலுப்புத் தட்டும் விதத்தில் காட்டுகிறார்கள்.
ஒரே நிகழ்வுக்கு இத்தனை அடி படச்சுருளை வீணாக்கியதற்கு பதிலாக, இன்னும் பல நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.

இதற்கு நடுவில், காதலர் இருவரும் முதன்முறை சந்தித்தது, நிலைமையின் தீவிரத்தை அறியாத தமிழகப்பெண் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இதனைத் தானே அனுபவித்து உணர்கிறார் என்பதை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.


யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயரும் மக்களின் அவலம் இதயத்தைத் உலுக்குகிறது. "பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்படும் அவர்கள், தங்களுக்குப் பாதுகாப்பான இடம் வன்னியே எனச் சென்றது ஏன? என்ற கேள்வி மனதை நெருடியது. அதற்கான விடையை எனது நண்பர் திரு. சோழியான் ஒரு பதிவில் சொல்லியிருந்தார்! தங்களுக்குப் பாதுகாப்பு என அவர்கள் சென்ற இடம் வன்னி என்பதிலேயே பல விடைகள் அடங்கியிருக்கிறது என அவர் சொன்னது இப்போது நன்கே புரிகிறது.

கதாநாயகன் நந்தா சிறப்பாகச் செய்து தன் சொந்தக் குரலிலேயே பேசியது மிகச் சிறப்பு. மதுமிதா, ப்ரியா தங்கள் பாகத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். கற்பழிக்கப்பட்டு, கொல்லப்படூம் காட்சியில் ப்ரியா நிறைவாகச் செய்திருந்தார்.

இத்தனை சோகக் காட்சிகள் நிறைந்த படத்தில் நான் அழவே இல்லை..... ஒரே ஒரு காட்சியைத் தவிர.!!

'எம் பேரனைக் கட்டிப்பியா நீ?' என அந்த வயதான பாட்டி கேட்டபோது என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளித்தது. இரண்டே காட்சிகளில் வந்தாலும் நெஞ்சைத் தொட்டுவிட்டார் அந்த மூதாட்டி!

இது ஒரு விமரிசனம் கூட அல்ல! என் மனதில் பட்ட கருத்துகளே!

அந்தக் கடைசி காட்சி பலராலும் 'வெறும் சினிமாத்தனம்' என விமர்சிக்கப்பட்டது. காதலர் இருவரும் மீண்டும் சேரும் அந்தக் காட்சி வேறு எந்தப் படத்தில் வந்திருந்தாலும் நானும் அதையேதான் சொல்லியிருப்பேன். ஆனால், எனக்கென்னவோ அது ஒரு மிகப் பெரிய செய்தியைத் தாங்கி நின்றாற்போல் இருந்தது.
தன் காதலன் இறந்துவிட்டான் என அதிகாரபூர்வமாக அறிந்த காதலி மனமொடிந்து தமிழகம் திரும்பும் நொடியில், மீண்டும் ஒரு குண்டு வெடிக்கிறது.... மக்களின் அவலக் கூச்சல்கள்,...... புகை நடுவிலிருந்து ஒரு உருவம் இரு குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தியவாறு சிகிச்சை முகாமை நோக்கி ஓடி வருகிறது! வேறு யார்? நம் மருத்துவர் நந்தாதான்! அவசர அவசரமாக சிகிச்சை அளித்த பின்னர் ஏதோ ஒரு உணர்வு உந்த, சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார். தூரத்தில் கடலோரத்தில் காதலி! 'நாம் சேரணும் என்பதற்காகவே நான் இன்னமும் உயிரோடிருந்தேன் போல!' எனச் சொல்லி காதலியை அணைக்கிறார். என் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது!

ஆம்! நந்தா போன்றவர்களின் கனவு நிச்சயம் மலரும்! போராட்டம் நசுக்கப்பட்டாலும், அடக்குமுறைகள் கேட்பாரற்று போனாலும் நந்தாவைப் போல பலர் இதனைத் தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவர் என்பதைச் சிம்பாலிக்காகச் சொன்னதுபோல எனக்குத் தோன்றியது. இந்த ஒரு காட்சியிலேயே இயக்குநர் தன் எண்ணத்தை மிகவும் திறம்படச் சொல்லிவிட்டார் எனவே நம்புகிறேன்.

இவர்கள் கனவு பலிக்கட்டும்!

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் படத்தின் கோரக் காட்சிகளின் நீளத்தைச் சற்று குறைத்து இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை திரையரங்குகளிலும் ஒரு காட்சி இலவசமாக[ அரசு செலவில்] திரையிடப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மக்கள் படும் அவலத்தை நம்மவர்க்கு உணர வைக்க இது பெருமளவில் உதவும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் இணையநண்பர்கள் இதனை ஒரு கோரிக்கை மனுவாக்கி, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இது எவருடைய போராட்டத்தையும் ஆதரித்துச் சொல்லும் பதிவல்ல! அவர்களே சொல்வதுபோல், [நீ இலங்கை அரசுக்கு உதவி செய்யாமலிரு போதும்! மற்றதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!] இது அவர்கள் அவலம். ஆனால், இதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட!

நல்லதே நடக்கட்டும்! முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************
இந்தப் படத்தைத் தரவிறக்கம் செய்து பார்க்க கீழ்வரும் சுட்டிகள் உதவும்.

http://www.megavideo.com/?v=I3ASZ3Y0 - முதல் பாகம்
http://www.megavideo.com/?v=WMBFKLHV - இரண்டாம் பாகம்
http://www.megavideo.com/?v=0HBTMLLE - மூன்றாம் பாகம்
http://www.megavideo.com/?v=F58G9ZLL - நான்காம் பாகம்
http://www.megavideo.com/?v=LGUXINEV - இறுதி பாகம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP