Saturday, April 12, 2008

"மீண்டும் மீண்டும் பிறப்பு!"

"மீண்டும் மீண்டும் பிறப்பு"!

'என்னங்க! எங்கே போயிட்டு வரீங்க? புது வருஷமும் அதுவுமா!' என்று என் மனைவி கேட்டார்!
ஒன்றும் பேசாமல் என் பையிலிருந்து ஒரு இலையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்!
'என்ன இது?' என்றார்!
நான் சொல்லலானேன்!
ஆற்றோரம் அமர்ந்து கால்களை ஓடும் நீரில் நனைத்தபடி அமர்ந்திருந்தேன்!

சலசலவென ஓடிய குளர்ந்த நீர் என் பாதங்களை வருடி, சிரித்தபடியே சென்றது!

தெளிந்த நீரின் உள்ளே மெல்ல நகர்ந்து கொண்டு தங்களைச் சமன்படுத்திக் கொண்டிருந்த கூழாங்கற்களை காலால் சற்று கலைத்தேன்!

உலர்ந்த சருகொன்று மிதந்தபடியே வந்து என் கால்களில் தேங்கி நின்றது!

'எங்கிருந்து வருகிறாய் பெண்ணே!' எனக் கேட்டேன்!

"நான் ஒரு பெண்ணென்பதை எப்படி உணர்ந்தாய்?" என ஆச்சரியத்துடன் வினவியது சருகு!

"தவறாக நினைக்காதே! என் பாதங்களை வருடியபடி நீ வந்து நின்றதினால் உடனே அப்படி ஒரு எண்ணம் என் மனதில் பட்டது! அவ்வளவுதான்!" சிரித்தபடியே சொன்னேன்!

"ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தன்னம்பிக்கை!" சருகும் சிரித்தது!

'அப்பாடா! தவறாக நினைக்கவில்லை இவள்! இவளுக்கும் என்னைப் போலவே இயல்பான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது!' என சற்று சமாதானமானேன்!

சருகைக் கையில் எடுத்தேன்!

ஒட்டியிருந்த ஈரத்தை என் சட்டையில் துடைத்து நீவி விட்டேன்!

சருகு நிமிர்ந்தது!

தன் அழகை மீண்டும் பெற்றது போல் ......நிமிர்ந்தது!

"என் கேள்விக்கு இன்னமும் நீ பதில் சொல்லவில்லையே! எங்கிருந்து வருகிறாய்!" என மீண்டும் கேட்டேன்!

"என் கதை சொல்கிறேன் கேள்!

சென்ற வசந்தத்தில் ஓர் நாள்!
நான் உயிர் துளிர்த்தேன் ஒரு மரத்தில்!
மெல்லிய தளிராக என்னை உயிர்த்தாள் என் அன்னை!
சிவப்பும் பழுப்பும் கலந்த அந்த நிறத்தில் நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும்!
எனக்கே என் அழகைக் கண்டு மிகவும் பொறாமையாக இருந்தது!
என்னுடன் கூடவே இன்னொரு சகோதரி!
இரட்டை இலையாகப் பிறந்தோம்!
வேண்டிய உணவைத் தந்து வேராக என் தந்தையும், அள்ளி அரவணைத்து எப்படி இருக்க வேண்டுமென என தாயும் எம்மை வளர்த்தனர்!
வசந்தம் முடியும் நேரம் என் நிறம் பச்சையாக மாறியது!
என்னில் சில மாற்றங்களை நான் உணரத் தொடங்கினேன்!
பூக்கள் சில என்னுள் பிறந்து என்னிலிருந்து மலர்ந்தன!
இப்போது இன்னமும் அழகானேன்!
என் பருவம் அனைவரையும் கவர்வதை உணர்ந்தேன்!
வண்டுகள் என்னைச் சுற்றி மொய்த்து பூவை நோட்டமிடுவதைக் கண்டு ஒரு பெருமை எனக்குள் பிறந்தது!
மகரந்தத் தேனைக் குடிக்க வந்த வண்டுகளை விரட்ட முடியாமல், பூக்களை மெல்ல அணைத்து மறைத்தேன்!
அப்படியும் ஒரு வண்டின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை!
என்னருகில் வந்து ஆசை வார்த்தைகள் பேசியது!
'நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது! நான் உன் பூவின் மீது அமரலாமா?'
நான் அதன் ஆசை வார்த்தைகளில் மயங்கினேன்!
என்னைத் திறந்தேன்!
பூவின் மீது அமர்ந்த வண்டு தேனை அள்ளிக் குடித்தது!
கூடவே ஏதோ ஒன்றையும் என்னுள் விட்டுச் சென்றது!
நான் சூலானேன்!
பூ மலர்ந்ந்து காயாகி, காய் கனியாயிற்று!
எவனோ ஒருவன் வந்து கனியைத் தட்டிச் சென்றான்!
என் மனம் துடித்தது!
என் கனியை என்னிடம் கொடு! எனக் கதறினேன்!
என்னை லட்சியமே செய்யாமல் அவன் சென்று விட்டான்!
நான் வாடினேன்!
என் அழகு குலைந்தது!
'என்னம்மா இது?' என என் தாயை வினவினேன்!

'இதுதானடி காலம் செய்யும் கோலம்!
துளிர்ப்பதும், பருவம் அடைவதும், மல்ர்வதும், சூலுறுவதும், காயாகிக் கனிந்து பின் குலைவதும் வழிவழி
நிகழும் செயல்கள்! இப்படி எத்தனையோ என் மக்கள் என்னை விட்டுச் சென்று விட்டனர்!
இதோ! இன்னும் சில காலத்தில் நீயும் செல்வாய்! உன் பணி முடிந்தது! என் பணி இன்னமும் தொடரும்!
பழையன கழிவதும், புதியன புகுவதும் வழிவழி நிகழும் செயல்கள்!' என்றாள் என் தாய்!

காற்று ஒன்று வேகமாக வீசியது!
என்னுடன் வா! இனி உனக்கு இங்கு வேலையில்லை! என்றது!

இல்லை! நான் வரமாட்டேன்! என்னிடம் இன்னும் இளமை இருக்கிறது! என் மரத்தை விட்டு வர மாட்டேன்!'
இறுக என் தாயைப் பிடித்துக் கொண்டேன்!
காற்று சிரித்தபடியே, என்னுடன் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு சென்றது!

அன்பு மிகுந்து என் தாயை அணைத்தேன்!
இனம் புரியாத ஒரு பரிவுடன் மரம் என்னை மெல்ல அசைத்தது!

குளிர்காலம் வந்தது!
பனியின் இறுக்கத்தில் என் வலு தளர்வதை உணர்ந்தேன்!
எனினும் அன்னையை விடவில்லை!
பனி உதிர்ந்து, மரம் மீண்டும் சிலிர்த்தது!
ஏதோ ஒன்று என்னிலிருந்து விலகுவதை உணர்ந்தேன்!

'எனக்கு வழி விடு அக்கா! நான் வர வேண்டும் வெளியே!' உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கெஞ்சியது!
'உனது வேலை முடிந்து போனது! இனி வருவது என் காலம்! என்னைத் தடுக்க உன்னால் முடியாது! நீயாக நகர்ந்தால் நலம்!' என்றது அந்தக் குரல்!

'என்னம்மா இதெல்லாம்! என்றேன் நான்!

'அதுதான் முன்னமேயே சொன்னேனே! பழையன கழிதலும், புதியன புகுதலும் வழிவழி நிகழும் செயல்கள்! நீ செல்லும் காலம் வந்து விட்டது! உன்னைப் பிரிதல் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! இருந்தாலும், இனி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது! நீ சென்றால் நான் மீண்டும் துளிர்ப்பேன்! இதுதான் பருவங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்! வசந்தம் ஒவ்வொரு முறையும் வரும்! உயிர்கள் மீண்டும் மலரும்! நீ முழுமையானாய்! மகிழ்வுடன் செல்! வசந்தத்தைப் போற்று!'

நான் தெளிவானேன்!
சுற்றி இருந்த அனைவரையும் அன்புடன் பார்த்துக் கையசைத்தேன்!
என்னை விடுத்தேன்!

மீண்டும் காற்று என்னை ஆதரவாகத் தாங்கியது!
'உனக்காகத்தான் காத்திருந்தேன்! நீ ஒருநாள் வருவாய் எனத் தெரியும்!' எனச் சொல்லி என்னை வருடியது!
அன்புடன் என்னை இந்த ஆற்றில் விட்டது!"

சருகு தன் கதையைச் சொல்லி முடித்தது!
எனக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது!
அன்புடன் அந்தச் சருகை எடுத்து என் சட்டைப்பைக்குள் பத்திரப் படுத்தினேன்!

மெல்ல எழுந்து நடக்கலானேன்!
வசந்தம் தன் விதைகளைத் தூவி தன் செயலை எங்கும் காட்டிக் கொண்டிருந்தது!
எதிரில் தெரிந்த மரத்தில் இரு துளிர் இலைகள் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில், என்னைப் பார்த்துக் கண்ணடித்தன!
அவைகளைப் பார்த்து உரக்கக் கத்தினேன்!

"வசந்தமே வாழ்க!"

புனரபி ஜனனம் புனரபி மரணம்
பிறப்பதும் இறப்பதும் வழிவழிவழி நிகழும்!

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரையே வருக~!
சித்திரமாய் வருக~!
சிறப்பெல்லாம் தருக~!
சிறுமையெல்லாம் ஒழிக~!
சிந்தனைகள் மலர்க~!
சினமெலாம் தவிர்க~!
சிலரிங்கு செல்வதும்
சிலரிங்கு வருவதும்
சிவமெனும் ஒருவின்
சித்தம் என்பதை
சிந்தையில் கொண்டு
சிவனைப் பணிக~!

Read more...

Thursday, April 10, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!

நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!

வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின், இறங்கி வந்து பேசியதும் பதிவாகி இருக்கிறது.

இதைக் காட்டி, அரசு தரப்பில் வாதம்.

வெளியே, க்ளாராவுக்கு பெண்ணிய இயக்கங்களின் ஆதரவு வலுக்கிறது!

"க்ளாரா குற்றவாளி அல்ல!" என்ற பலகைகளைத் தாங்கியபடி ஊர்வலம்!

நீதிமன்றத்தில், லோரா கூண்டிலேறி, கொலையுறுவதற்கு முன், சில வாரங்களாகவே டேவிட் தன்னைச் சந்திக்க வில்லை என்றும், ஹில்டன் ஹோட்டலில் இனி இந்த உறவு நமக்குள் தொடர முடியாது எனச் சொல்லி விடை பெற்றதையும் கூறுகிறாள்!

இது போன்ற வலுவான ஆதாரங்களை வைத்து அரசு தரப்பில் ஒரு பெண் வக்கீல்.

"சந்தேகத்தின் உச்சத்தில், திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு இரக்கமற்ற கொலை என வாதிடுகிறார்.

3 வாரம் விசாரணை நடக்கிறது.

ஜூரர்கள் 4 மணி நேர விவாதத்திற்குப் பின், தங்கள் முடிவைத் தெரிவிக்கிறார்கள்.

"குற்றம் சாட்டப்பட்ட க்ளாரா, அப்படியே ஒரு குற்றவாளிதான்"[Guity as charged] என்று!

தலை கவிழ்த்து, நிலை குலைந்து அழுகிறாள் க்ளாரா!

அவளது வக்கீல் அவளைத் தேற்றுகிறார்!

"இன்னமும் ஒன்றும் ஆகவில்லை. நீ டேவிட்டின் மேல் காரை ஏற்றிக் கொன்றது உண்மையே! அதைத்தான் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மேல், இன்னொன்று இருக்கிறது! அதுதான் உனக்கு விதிக்கப்போகும் தண்டனை!
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!"

ஆம்!

க்ளாரா கணவன் மேல் கொண்ட ஒரு ஆசை கலந்த ஆத்திரத்தில் மட்டுமே [Passion] இதைச் செய்தாள் என்றால், ஒரு எச்சரிக்கையுடன் அவள் விடுவிக்கப் படலாம்!

அல்லது,
அவள் மனநிலை குன்றியவர் என நிரூபிக்கப் பட்டாலும் கூட!
ஆனால், இதற்கு இவள் முன்னமேயே ஒரு மனநல நோயாளியாக இருந்தாள் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்!

க்ளாராவுக்கு அப்படி எந்தவொரு கடந்தகால சாட்சியங்கள் இல்லை!
படிப்பில் சுட்டி!
அழகிலும், புத்திசாலித்தனத்திலும் கெட்டி!
எனவே இது சாத்தியமில்லை!

இதெல்லாம் முடியாவிட்டால், குறைந்தது 20 ஆண்டு கடுங்காவல் நிச்சயம்!

இந்த நிலையில்,....,
க்ளாரா தரப்பில், டேவிட்டின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயாவது மிஞ்சட்டும் என மீண்டும் முறையிடுகிறார்கள்.

அரசு தரப்பு இதற்கும் ஒரு பதிலடி வைத்திருக்கிறது!
லிண்டா கூண்டிலேறி, தனது தாய், டேவிட் மேல் காரை ஏற்றும் முன் சொன்ன கடைசிச் சொற்களைச் சொல்கிறாள்!
கோர்ட் அதிர்கிறது!

"இப்போ நான் அவனை இந்தக் காரை ஏத்திக் கொல்லப் போறேன்!"

க்ளாரா தலை குனிந்து அழுகிறாள்.

இறுதியாக,

க்ளாராவின் வக்கீல் தனது வாதங்களை வைக்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமன விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
கை கோர்த்து இருவரும் வந்த ஒரு காட்சியைப் பார்த்த அவளால் அதைத் தாங்க முடியவில்லை.
ஆத்திரத்தில், தன் கணவன் மீது கொண்ட ஆசையில் செய்யப்பட்ட கொலை இது எனக் கருதி கருணையுடன் அணுக வேண்டுகிறேன்!'

அரசு தரப்பு பெண்வக்கீல் தனது வாதத்தைத் தொடர்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன!
கணவனை திருந்துகிறேன் எனச் சொன்னதை நம்பி இருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் திருமணத்தை ஒரு ஆலோசகர் [Counsellor]மூலம் சரி செய்ய முனைந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
விவாகரத்து கோரியிருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் குழந்தைகளை வளர்க்கத் தானே சரியானவர் என நிரூபித்திருக்கலாம்!.... செய்யவில்லை!
லோராவுடன் பேசி இதைச் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்!...... செய்யவில்லை!
இறுதியாக,
குறைந்த பட்சம், தன் குழந்தைகளுக்கு ஒரு தந்தையைத் தந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
அவள் செய்தது ஒன்றே ஒன்றுதான்!!
கொலை!
'காரை ஏத்திக் கொல்லப் போகிறேன்' எனத் தன் வளர்ப்பு மகளிடமே சொல்லிவிட்டு, அதைச் செய்தும் காட்டியவள்!
ஆம்!
க்ளாரா, தன்னை மட்டுமே எண்ணிய ஒரு சுயநலவாதி.
தான் பெற்ற குழந்தைகளைக் கூட நினைக்காத ஒரு கொடிய மனம் படைத்த பெண்தான்
இதோ இங்கே உங்கள் எதிரே நிற்கும் க்ளாரா!
அதிகபட்ச தண்டனையைத் தவிர, வேறெதற்கும் தகுதியில்லாத ஒரு பெண்!
தகுந்த தண்டனையை வழங்குங்கள்!'

அரசு தரப்பு பெண் வக்கீல் அமர்ந்தார்!

ஜூரர்களுக்கு இப்போது 2 மணி நேரமே தேவைப்பட்டது!

"அதிக பட்ச தண்டனையான 20 ஆண்டு கடுங்காவல்!"

12 ஆண்டுகளுக்குப் பின் பரோல் விசாரணைக்கு உட்பட முடியும்!

நீதி வழங்கப் பட்டது எனப் பலரும், இல்லை எனச் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதலில், க்ளாரா செய்ததைப் பற்றிய உங்கள் கருத்தையும்,
அடுத்து, நீங்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பீர்கள் எனவும் சொல்லுங்களேன்!

[முற்றும்]


தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் நன்றி!

Read more...

Wednesday, April 09, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]



மறுநாள் மாலை!

டேவிட் வீட்டில் இல்லை.

பதறுகிறாள் க்ளாரா!

தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.

எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!

பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!

அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல் கண்ணில் பட்டது!

ஹில்டன் இன்டெர்நேஷனல்!

அவளுக்குத் திருமணம் டேவிட்டுக்கு நிகழ்ந்ததும் இதற்கு அடுத்த ஒரு இடத்தில்தான்!

ஏதோ ஒரு உணர்வு உந்த, அங்கு செல்கிறாள்.

வண்டிகளை நிறுத்தும் இடத்தில்,[Parking Lot] டேவிட்டின் கார் இருப்பதைப் பார்க்கிறாள்!

சற்றுத் தள்ளி தன் காரை நிறுத்திவிட்டு, தன் பெண் லிண்டாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே விரைகிறாள்!

வரவேற்பில் விசாரிக்கிறாள்.

டேவிட்-லோரா பெயரில் எவரும் பதிவில்லை என்ற தகவல் வருகிறது.

க்ளாராவுக்குத் திருப்தி இல்லை.

லிண்டாவைக் கூப்பிட்டு தன் தந்தைக்கு ஒரு தொலைபேசச் சொல்கிறாள்.

லிண்டாவும் அப்படியே செய்து, தனது தம்பிகளில் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு பொய்யைச் சொல்கிறாள்.

அடுத்த 3 நிமிடங்களில் ..........பதட்டத்துடன் 'தானியங்கி ஏற்றுமிடத்தில்[elevator] இருந்து டேவிட் வெளியே வருகிறான்... அந்த ஓட்டலில் இருந்து!

கூடவே கைகளைப் பிடித்தபடி லோரா!~

அவள் கண்களில் கண்ணீர்!

தன் சந்தேகம் உறுதியாகிவிட்டது எனும் நினைப்பில், க்ளாரா ஆத்திரத்துடன் இருவர் மீதும் பாய்கிறாள்.

லோரா தாக்குதலில் அடிபட்டு கீழே விழுகிறாள்.

டேவிட்டுக்கும் சரியான அடி!

இதுவெதையும் சற்றும் எதிபார்க்காத லிண்டா, "நான் உன்னை வெறுக்கிறேன்" அம்மாவை நோக்கிக் கத்தியபடியே, இருவரையும் தாக்குதலில் இருந்து தடுக்க முனைகிறாள்.

சமாளித்துக் கொண்டு எழுந்த டேவிட்,"பொதுவிடத்தில் சொன்னால் அவள் எப்படி இதை எதிர்கொள்வாளோ எனவெண்ணி ஒரு தனியறையில் இதைச் சொல்லிவிட்டு, இப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி அவசரப் பட்டுவிட்டாயே!" என வெறுப்புடன் சொல்லிவிட்டு, அடிபட்டு விழுந்ந்திருந்த லோராவை எழுப்பி, அவளை அவளது காருக்கு கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறான்.

அவசர அவசரமாக, லிண்டாவை அழைத்துக் கொண்டு, க்ளாராவும் தன் காருக்கு விரைகிறாள்.

லோராவை அவள் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, டேவிட் தன் காரை நோக்கி நடக்கிறான்.

க்ளாராவின் பென்ஸ் கார் விரைந்து வந்து அவனைத் தாக்குகிறது!

அவன் மேல் முழுதுமாக ஏறி அவனைத் தாண்டிச் சென்று, நின்று, அவனை 3-4 முறை சுற்றிச் சுற்றி வருகிறது.

அவனது துடிப்பு முழுதுமாக அடங்கிய பின்னர், க்ளாரா இறங்கி வருகிறாள்.

'நீ எனக்கு இல்லையெனில் எவருக்குமே இல்லை' எனச் சொல்லி மீண்டும் காருக்குத் திரும்புகிறாள்.

இதற்குள், நடந்த செய்தி காவல்துறைக்குச் சென்று, அவர்கள் வந்து க்ளாராவைக் கைது செய்கிறார்கள்.

வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.

டேவிட்டின் பெற்றோர்கள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயும் இல்லாமல் போகக் கூடாதே என அஞ்சி, அவள் மேல் வழக்கு தொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இப்போது, இது ஒரு அரசு வழக்கு.

யாரும் துணையில்லை அவர்களுக்கு.

ஆனால், கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது!

4,500 பவுண்டு எடையுள்ள ஒரு சாதனத்தைக் கொண்டு டேவிட்டைக் கொலை செய்ததாக க்ளாரா மீது வழக்கு பதிவு செய்யப் படுகிறது!

[தொடரும்]

Read more...

Tuesday, April 08, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]



முதல் பதிவு இங்கே!
2.
தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.

குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!

இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.

அவளது திறந்த பார்வையும், பழகும் விதமும், சிரிக்கும் அழகும் டேவிட்டுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது!

இருவரும் பழகத் தொடங்கினர்.

வெளியே உணவருந்தச் செல்வது, சினிமா, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது எனத் தொடங்கி, உடலுறவு வரைக்கும் வந்துவிட்டது.

இவர்கள் பழக்கம் க்ளாராவுக்குத் தெரிய வாய்ப்பில்லாதபடி அவளது தொழிலில் அவள் மூழ்கி இருந்தாள்.

ஆனால், க்ளாரா மூலம் வேலையில் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

டேவிட்டிடம் சென்று, 'நீ சொல்லுகிறாயா? இல்லை நானே சொல்லிவிடட்டுமா?' என எச்சரிக்கை விடுத்தாள்.

டேவிட்டுக்கு அப்போதுதான் தான் செய்து வந்த தவறின் தீவிரம் தெரிய வந்தது.

சாதாரண வேடிக்கையாகவும், ஒரு மாறுதலாகவும் தொடங்கிய ஒரு விஷயம் இவ்வளவு தீவிரமானதை உணர்ந்து வருந்தினான்.

மறுநாள், க்ளாரா குளியலறையில் இருந்தபோது, அவளிடம் நிகழ்ந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.

ஆனால்,...........

க்ளாராவுக்கு இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி!

தனது கனவுக்கோட்டை தகர்ந்ததாக உணர்கிறாள்.

டேவிட்டுடன் மிகப் பெரிய சண்டை போடுகிறாள்.

எனக்கும் அந்த லோராவுக்கும் என்ன வித்தியாங்கள் கண்டாய்? என ஒரு பட்டியல் போட்டுத் தர வற்புறுத்துகிறாள்!

டேவிட்டுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி!

இருந்தாலும், எழுதித் தருகிறான்.

கனிவு, அன்பு, பரிவு, பாசம், பழகும் தன்மை, கவரும் சிரிப்பு, பொறுமையாகக் கேட்கும் தன்மை..... லோராவிடம்!

அன்பு, ...... ஆளுமை, தனது துணைக்கென நேரம் ஒதுக்க முடியாமல் தொழிலில் ஈடுபடுதல், குழந்தைகளைக் கூட கவனிக்கமுடியாமல் போதல்..... க்ளாராவிடம்!

க்ளாராவுக்கும் தனது குறைகள் புரிய.... ஒப்புக் கொள்ள முடியாமல் ஒரு அதிர்ச்சி!

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள், லோராவினுடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குள், தான் டேவிட்டுக்கு ஏற்றமாதிரி ஆகி விடுவதாகவும் சொல்லிவிட்டு,

அவன் பதிலுக்குக் கூட காத்திராமல், உடனடியாக ஒரு அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம் எனச் சேர்ந்து தன்னை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

இடையில், ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடி, டேவிட்டைக் கண்காணிக்குமாறும் ஏற்பாடு செய்கிறாள்.

அவர்கள், இவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை என்னும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.

குடும்ப வாழ்க்கை, தொழில், இவையெல்லாம் இன்னும் அதிகமாகக் குலைவதைக் கவனித்த டேவிட், குழந்தைகளை இப்போது அதிகமாகக் கவனிக்கத் தொடங்குகிறான்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, வீட்டிலேயே இருக்கிறான்!

இன்னுமா நீ லோராவுடனான உறவை முறிக்கவில்லை? என்ற க்ளாராவின் கேள்வி அவனை உலுக்க, தான் இதுவரை லோராவைச் சந்திக்கவே இல்லை என்றும்,

நாளை மாலை அவளைச் சந்தித்துச் சொல்ல அவளுக்கும் சொல்லியிருப்பதாகவும் சொல்லுகிறான் டேவிட்!

க்ளாரா நம்பவில்லை.

தன்னை ஏமாற்றுகிறான் டேவிட் என உறுதியாக நம்பினாள்.

மறுநாள் மாலை!

[தொடரும்]

Read more...

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்!
1.

க்ளாரா ஒரு துணிச்சலான பெண்!

வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!

நினைத்தபடியே பல் மருத்துவம் படித்து ஒரு முன்னணி பல் மருத்துவராகவும் ஆனாள்.

தொழில் தொடங்குவதற்கு குடும்ப வாழ்க்கை அவசியம் ஆனால், அது பிக்கல் இல்லாத ஒன்றாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினாள்.

அப்போதுதான் அவள் கண்ணில் பட்டான் டேவிட்.

அவனும் ஒரு பல் மருத்துவர் தான்.
திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தபின் மனைவியை இழந்தவன்.

க்ளாராவின் பார்வை டேவிட் மேல் பட்டது.

பார்வைக்கு அழகாகவும் இருந்தான் டேவிட்.

துணைக்குத் துணையும் ஆயிற்று; உடனே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை; தொழிலுக்கும் உதவியாய் இருப்பான்!

தன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளும் இருந்ததைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து, டேவிட்டுடன் நெருக்கமானாள்.

டேவிட் குடும்பத்தினருக்கும் க்ளாராவைப் பிடித்துப் போயிற்று.

திருமணமும் நடந்தது.

டேவிட்டின் பெண் லிண்டா க்ளாராவை அம்மாவாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைந்தது.

ஒரே ஊரில், இரு வேறு இடங்களில் தனித்தனி சிகிச்சை நிலையங்களும் தொடங்கப் பெற்றன.

க்ளாராவின் கைராசியால் அவளது தொழில் விரைவில் பிரபலம் அடைந்தது.

ஆனால், டேவிட்டின் நிலைமை அப்படி ஆகவில்லை.

தொழில் மந்தம்!

க்ளாரா இப்போது, குடும்பத்தை மட்டுமல்லாமல், டேவிட்டின் தொழிலுக்கு சேர்த்தே உதவி செய்ய வேண்டிய நிலைமை.

க்ளாரா இதை எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், மனம் தளரவில்லை.

தனது தொழிலில் வந்த நபர்களுக்குத் தேவையான பல் மருத்துவ சிகிச்சையில் டேவிட்டுக்கும் பங்கு வருமாறு செய்து, தனது சில வாடிக்கையாளர்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

வாரத்திற்கு 3 முறை டேவிட்டையே தனது 'க்ளினிக்'கிற்கே வரவழைத்து சில சிகிச்சைகளை அவனையே செய்ய வைத்தாள்.

இப்போது டேவிட்டின் தொழிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

விரைவிலேயே, வரும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல், இன்னும் சில இடங்களில் நிலையங்களைத் தொடங்கி, மெலும் சில மருத்துவர்களை நியமித்து, கவனிக்க வேண்டிய அளவிற்கு, வளர்ந்து விட்டது!

5,000 சதுர அடி பரப்பில் பெரிய வீடு, 'பென்ஸ்' கார், வசதியான வாழ்க்கை, அள்வான குடும்பம்!

க்ளாராவுக்கு இப்போது குடும்ப ஆசை!

தனக்கும் குழந்தைகள் வேண்டுமென விரும்பினாள்.

டேவிட்டுக்கும் இதில் சம்மதமே!

சீக்கிரமே கர்ப்பமானாள்!

அதுவும் இரட்டைக் குழந்தைகள்!

க்ளாரா, டேவிட்டின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

லிண்டாவும் இப்போது 14 வயதுப் பெண்!

தனது இரு தம்பிகளின் மேல் அளவிலாப் பாசம் கொண்டவள்!

டேவிட்டின் பெற்றோர்களும் தங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

தொழிலும் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.

இப்போதுதான், விதி சிரித்தது!


[தொடரும்]

Read more...

Friday, March 21, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

சமீபத்தில் சிவராத்திரி குறித்து ஒரு பதிவு, 'சிவமாய் நிறைவாய்' என எழுதினேன். அந்த சமயம் எனது இனிய நண்பர் திரு. குமரன் மூலம் ஒரு ஒளிப்படம் கிடைத்தது. இலங்கையில் இருக்கும் திருக்கோணமலையின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலயக் காட்சிகள் அடங்கிய தொகுப்பு அது. அதில் வந்த ஒரு காட்சி என் கருத்தில் பதிந்தது. அருணையார் எழுதிய திருப்புகழ் ஒன்று போர்டில் எழுதப்பட்டுப் பதிக்கப் பட்டிருந்தது. அந்த புகழ் என்ன எனப் பார்க்கும் ஆவலையும் தூண்டியது. மிக அற்புதமான பொருள் அடங்கிய பாடல் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்ற, எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கேட்கும் பாடலை, பங்குனி உத்திர நன்நாளில் இங்கு இடுவதில் மகிழ்கிறேன். அனைவரும் ஓதி எண்ணியது எண்ணியாங்கு எய்த என் முருகனை இறைஞ்சுகிறேன்.

************** பாடல் **************

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
******************************************************************************************


சற்று பெரிய பாடல்! சந்தத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்கள் இப்பாடலில் வருவது ஒரு புதுமை!வழக்கம் போல பின் பார்த்து முன்![நீட்டி முழக்காமல்]!!

**************** பொருள் *****************

"மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே"



மலைக்கு நாயக! சிவகாமி நாயகர்
திருக்கு மாரனே! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாது ஒரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே!

மலையிருக்குமிடமெல்லாம் தானிருக்கும்
இடமெனக் கொண்டு தலைவனாய்த் திகழ்பவரே!
சிவன் உமை எனும் பேரிறையின் செல்வக்குமரனே!
கண்ணினின்று பொறிவிட்டு ஆறு பாலனாய்
ஆற்றினில் தவழ்ந்து பொய்கையடைந்து
ஆறு மாதர் முலைப்பாலுண்டாலும்
மாறுபாகம் கொண்ட உமையவளின் அணைப்பினால்
ஆறுமுகமாய் ஆனவனே!
அழகினுக்கே அழகுசெய்யும் வள்ளிக்குறமாதின்
ஒப்பற்ற மனவழகும் பொருந்திய தன்மையில்
உள்ளம் பறிகொடுத்து உவப்பாய் விரும்பும் தலைவனே!


"வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே"



வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வரு முருகோனே

தவத்திரு யோகிகள் வசிட்டர், காசிபமுனிவர்,
பெருமைமிகு அகத்தியர்,, இடைக்காடர், நக்கீரர்
இவர் அனைவரும் இயற்றிய பாடல்களிலெல்லாம்
தனிப்பெரும் பொருளாக இருக்கும் முருகனே!

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே"

நிலைக்கும் நான்மறை மகத்து ஆன பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆர் கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே!


என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும்
பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலை என்கின்ற
திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!

" நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே."

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடி தூளது ஆ எறி
நினைத்த காரியம் அநுகூலமே புரி பெருமாளே.


பிறவிகள் ஏழென்று சொல்லிடுவார்
ஒவ்வொன்றும் ஓர் கடலென்றும் சொல்லிடுவார்
வேல் விடுத்து கடல் மாய்த்து
சூர் என்னும் அசுரனையும்
சூறையாடிக் கொன்ற வேலன்
பிறவிப் பெருங்கடலையினையும்
தூளாகிப் போகுமாறு செய்யவல்ல
பெருமைபெற்ற முருகோனே!
நீயென்றன் மனத்தினில் எண்ணிய
கருமங்கள் யாவினையும் நிறைவேற்றித்
தரவல்லவன் எனப் பணிகின்றேன்!


"விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி"

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் அணிப்பூணும் ஆகவே
மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே மயல் ஊறி


தன் உடலையே விலைக்கு விற்கின்ற விலைமாதர்கள்
அதனை மிகவும் அழகூட்டவென மாலைகளும்
மேகலைஎன்கின்ற இடுப்பிலணியும் ஆபரணமும்
அழகிய ஆடைகளும், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும்
அழகுற அணிந்து மினுக்குகின்ற அவரிடத்தே ஆசைவைத்து
காமமெனும் கடலினில் மூழ்கி அந்த மயக்கத்தில் மிகவுமே திளைத்து


"மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்"

மிகுத்த காமியன் என, பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பது ஆகியே, உழைத்தே விடாய்படு கொடியேனை


காமத்தில் மிகவுமே விருப்பமுள்ளவன் இவன் என
உலகத்தில் உள்ளோர் என்னைப் பார்த்து சிரிக்குமாறு
ஒரு உடலை எடுத்து, அதனால் துன்பமடைந்து
அந்த உடல் மீதே வெறுப்புற்று, மீண்டும் மீண்டும்
இந்த உலக வாழ்விலேயே உழன்று [காதல்]
தாகம் அடைகின்ற கொடியவனாகிய என்னை


"கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைஇத்தேற வேசெயு மொருவாழ்வே"

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொ[ல்]லி கடைத்தேறவே செ[ய்]யும் ஒரு வாழ்வே!

என்னறிவு கலக்கமுற்றுப் போகும்படி செய்து
ஒன்பது வகையான கூடுகள் வழியே
விளைகின்ற மலங்களை வெளிக்கிடும்
இந்த உடலாகிய கூட்டுடன் சேர்ந்து
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
இவைகளினால் நான் தவிக்காமல்
உன்னுடைய புகழினைப் போற்றுகின்ற
தமிழ்க்கவிதைகளைச் சொல்லி
எனது ஆன்மா இவ்வுடற் கூட்டினின்று
கடைத்தேறும்படி செய்யவல்ல
நிகரற்ற வாழ்வாக அமைந்த பொருளே!

"கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்"

கதிக்கு நாதன் நீ உனைத் தேடியே புகழ்
உரைக்கும் நாயேனை அருட்பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்!

என் ஜென்மம் கடைத்தேற இருக்கின்ற ஒரே தலைவன் நீயே!
நினைப் போற்றி புகழ் பாடுகின்ற நாய் போன்றவன் யான்!
நினது அருட்பார்வையை என்மீது செலுத்தி
நினது திருவடிகளில் என்னையும் ஏற்றுக்கொண்டு
இவ்வுலகிலேயே மிகவும் சிறந்ததான
தாயின் கருணையினை ஒத்த அருளை
எனக்கு நீ தந்தருளவேண்டும் முருகப்பெருமானே!
******************************************************


திருக்கோணமலை இலங்கையில் உள்ள ஒரு சிவத்தலம். தக்ஷிண கைலாயம் என வழங்கப்படும் மூன்று தலங்களில் ஒன்று. மற்ற இரு தலங்கள், திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி.
கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோபுரநிலையில் உள்ள ஓரிடத்தின் பெயர்.
**************************************************************


வேலும் மயிலும் வாழ்க !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க !!!
*******************************

Read more...

Wednesday, March 05, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!

"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்!
[ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை மயிலைக்குப் போகும்போது தானும் வருவதாகச் சொல்லியிருந்தார்!! ]

"ஸார் பறைஞ்சது செரிதன்னே! ஞான் கூட ஆயாள் எப்போ வரும், எங்கனே வரும்னு தெரியாம, பலசமயம் குழம்பிப் போயுண்டு!" எனச் சொல்லி நாயரும் சிரித்தார்!

'சரி! அவர் வரும் வரை நாயர் ஸ்பெஷல் மசால் வடை, டீ சாப்பிடுவோம்!" என நான் சொன்னதும் நாயர் சுறுசுறுப்பானார்.

ஒரு ஆட்டோ பலத்த உறுமலுடன் வந்து நின்றது!

"வந்து ரொம்ப நேரமாச்சா நண்பா! ஒரு பிரச்சினைக்கு மத்தியஸ்தம் பண்ணக் கூப்பிட்டிருந்தாங்க! அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு! இன்னா நாயர்! நம்ம ஆளுங்களை நல்லா கவனிச்சுக்கினியா?' எனக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பக்கத்தில் இருந்த மஞ்சூராரைக் கவனித்தவன், "ஓ! இவர்தான் நீ சொன்ன உங்க தலைவரா? முத்தமிளுக்கே சொந்தம்னு சொன்னியே! அவர்தான் இவரா? இன்னா தலீவா! செங்கோல்லாம் எடுத்துக்கினுதானே வந்திருக்கீங்க?" எனக் கண்ணடித்தான்!

மஞ்சூரார் சற்றுக் குழப்பத்துடன், மன்னார் ஏதோ கிண்டல் செய்கிறான் என மட்டும் புரிந்து கொண்டு, என்னை நோக்க,
நான் அவரைப் பார்த்து சிரித்தபடியே, " பதறாதீங்க சுந்தர்! மன்னார் எப்பவுமே இப்படித்தான்! எல்லாருடனும் உடனே நட்பு பாராட்டி, சொந்தமாகப் பாவிக்கத் தொடங்கிடுவான்! அவன் கேட்ட செங்கோல் உங்க பேனாவைத் தான்! இன்னிக்கு உங்களுக்குத்தான் வேலை! நீங்கதான் எழுதிக்கணும் அவன் சொல்வதை! உங்களுக்குத்தான் ஏதோ மேட்டர் சொல்லப் போறான்னு நினைக்கிறேன்!" என்றதும் சமாதானமாகி, பேப்பர் பேனாவை சிரித்துக் கொண்டே எடுத்தார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்!

"செங்கோன்மை" -- அதிகாரம் 55

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை." [541]

இப்ப ஒரு குழுமத்துக்கு தலையா நீங்க இருக்கீங்கன்னு சங்கர் சொன்னான். ரொம்ப நல்ல விசயம். நல்லாவாவும் நடத்துறீங்கன்னும் சொன்னான். கேக்கவே சந்தோசமா இருக்கு. ஒரு தல இன்னா பண்ணனும்னு இதுல ஐயன் சொல்றாரு.
ஏதோ ஒரு தலைப்புல சில பேரு வந்து ஏடாகூடமா எளுதறாங்கன்னு வைச்சுப்போம். அதை எளுதறது யாருன்னு தக்கபடி விசாரிச்சு, தெரிஞ்ச ஆளு, புது ஆளுன்னு பாக்காம, நடுநிலைமையா ஆராய்ஞ்சு பாத்து, அததுக்கு தகுந்த தீர்ப்போ, தண்டனையோ கொடுக்கறதுதான் சரியான வளின்னு சொல்றாரு!

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி." [542]

இந்த ஒலகத்துல இருக்கற உயிருங்கல்லாம் மானத்துலேருந்து பெய்யற மளையை நம்பித்தான் வாளுது! அதேபோல, ஒரு தலீவன் இன்னாமாரி தன்னோட மக்களை நடத்தறான்னு அவனோட செங்கோலைப் பாத்துகிட்டே இருக்காங்களாம். பாராட்டறதுக்குப் பாராட்டி, தட்றதுக்குத் தட்ட, உன்னோட செங்கோலு, அதாம்ப்பா.. பேனா.. தயங்காம இருந்தாத்தான் அல்லாமும் நல்லா நடக்குமாம்!

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." [543]

நல்லாப் படிச்சவங்க கூட, இந்த இடத்துல நியாயமா நடத்துவாங்க நம்மளைன்னு ஒரு நம்பிக்கையோட வந்து எளுதறதுக்குக் கூட ஒன்னப் போல தல நடத்துற விதத்துலதான் இருக்கு. இப்ப, எங்க சீதாம்மா, ஜப்பார் அய்யா போல ஆளுங்கள்லாம் முத்தமிள்ல ரொம்ப சிறப்பா எளுதறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாத்துக்கும் காரணம் நீங்க நடத்தற விதந்தான்னு இதைப் புரிஞ்சுக்கணும்! சரியா!

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு." [544]

ஒரு குளுமத்துல இருக்கற ஆர்கிட்டயும் விரோதம் பாராட்டாம, அன்பா அவங்களை நடத்திகிட்டுப் போனா, அவுக அல்லாரும் 'ஆஹா! நம்ம மஞ்சூரார் போல உண்டா!'ன்னு உங்க கூடவே நிப்பாங்க! இது ரொம்ப முக்கியமா கவனத்துல நீங்க வைச்சுக்கணும்!

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு." [545]

ஒரு ராசா சரியான வளியில ஆட்சி பண்ணினான்னா, பெய்யற மளை கூட மொறை தவறாமப் பெய்யுமாம். விளையற பொருளு கூட நல்லா விளையுமாம்! இது எப்பிடி எனக்குப் பொருந்தும்னு தானே கேக்க வரீங்க! பெய்யற மளைன்றது சீதாம்மா போல ஆளுங்க ரெகுலரா எளுதறது! விளையற பொருளு... நல்ல சமாச்சாரமெல்லாம் நிறைய வந்துகிட்டே இருக்கறது! ரெண்டும் முக்கியம்! புரியுதுங்களா!;))

"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்." [546]


சண்டை போட்டு நாலஞ்சு பேரை விரட்டறது வீரமில்ல! செய்யற காரியத்த பாரபட்சமில்லாம பொதுவா ஒரு ராசா... நீங்க கூட மஞ்சூர் ராசான்னுதான் பேரு வைச்சிருக்கீங்களாமே!:))))... பொதுப்படையா ஒரு ராசா செஞ்சா அதான் பெரிய வீரமாம்!

"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்." [547]


ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!

"எண்பகத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்." [548]

நல்ல விஷயத்தை ஒருத்தர்.. இப்ப நம்ப சீதாம்மா மாதிரின்னு வைச்சுப்போமே... அவங்க வந்து சொல்ல வராங்க! அவங்களை எப்படி நாம வரவேற்கணும்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க! இதை வில்லங்கம் இல்லாம நான் பார்த்துக்கறேன்னு அவங்களுக்கு தெம்பு கொடுக்கணும். அப்ப, எவனாவது வந்து, ஏடாகூடமா கேள்வி கேட்டு, திசை திருப்பினா, அதைக் கண்டுக்காம விட்டா, அப்ப, அந்தப் பதிவு மட்டுமில்ல, தலையா நிக்கற உங்களோட பேனாவும்... செங்கோலும்... வளைஞ்சு போயிருமாம்! இதைக் கவனத்துல வைச்சுக்கங்க சாமி!

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்." [549]

ஒங்க குளுமத்துல வேந்தன்னு ஒருத்தர் இருக்காருன்னு சங்கர் சொன்னான். ரெண்டு வார்த்தைல தன்னோட கருத்தை அடுத்தவனுக்கு அது புரியுதோ இல்லியோ.. சொல்லிட்டுப் போயிடுவாராம். அதாவது, அடுத்தவனையும் வருத்தாம, அதே சமயம் அவ மனசிலியும் பதியுற மாரி! இதுனால, வேந்தனுக்கும் சங்கடமில்லை! சொன்னவனும் புரிஞ்சுப்பான்! இப்பிடி நடந்துகிட்டா, தலைக்கு நல்லது! நான் சொல்லை! ஐயன் சொல்றாரு!

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்." [550]


இவ்ளோ சொல்லியும் ஒருத்தன் கேக்கலைன்னு வைச்சுக்குவோம்! அப்போ இன்னா பண்ணணும்! தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது, இடையிலே மொளைச்சிருக்கற சில களைங்களை எல்லாம் வெட்டிப் புடுங்கி எறியற மாதிரீன்னு ஐயன் சொல்றாரு!

"இன்னா! நான் சொன்னதைக் கேட்டு தெகைச்சுப் போயிட்டீங்களா? இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் நடத்திகிட்டு வர்றதா சொல்லியிருக்கான் நம்ம தோஸ்த்து! அதுனால, இதுவரைக்கும் பண்ற மாரியே பண்ணிகிட்டு வாங்க! சீதாம்மா போல ஆளுங்க ஒங்க பதிவுல எளுத வந்ததே ஒரு பெரிய விசயம்! அவுங்களைப் போல ஆளுங்க தொடர்ந்து எளுத நீங்கள்லாம் ஒதவி பண்ணனும்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்! இன்னாப்பா சங்கர்! நான் சொன்னதுல எதுனாச்சும் தப்பு இருக்கா?" என்று சிரித்தான் மயிலை மன்னார்!

"நீ என்னிக்காவது தப்பா சொல்லி இருக்கியா? நீ சொல்றதை முழு மனசோட ஆமோதிக்கிறேன்! நாயர்! இன்னும் ரெண்டு வடை!" எனச் சொன்னேன்!

"ஒங்காளு மெய்யாலுமே பெரிய ஆளுதான்யா!"......டீயை உறிஞ்சியபடியே என் தோளில் கை போட்டர் மஞ்சூரார்!

"எல்லாப் பெருமையும் ஐயனுக்கே" என்றபடி ஆட்டோவில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!

Read more...

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது!

நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 250-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!

Read more...

Tuesday, March 04, 2008

சிவமாய் நிறைவாய்! "சிவராத்திரி பதிவு"






சிவமாய் நிறைவாய்!




[சிவராத்திரியை முன்னிட்டு ஒரு பதிவு இட வேண்டுமென என் நண்பர் திரு. ராஜா அண்ணாமலை கேட்டிருந்தார்! என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை!]


உலகாய் உயிராய் உலவும் பொருளாய்

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
விண்ணாய் விளங்கும் அனைத்திலும் ஒன்றாய்
கண்ணாய் ஒளியாய் சிவமாய் நிறைவாய்!

என்னுள் உறையும் இறையாய் நின்றாய்!
உறையுள் உறையும் வாளாய்ச் சென்றாய்!
எல்லாம் நீயே இயக்கம் என்றாய்!
உறங்கும் போதிலும் நடனம் புரிந்தாய்!

உறைவாய் உறைவாய்! என்னுள் உறைவாய்!
கரைவாய் கரைவாய்! என்னில் கரைவாய்!
பொழிவாய் பொழிவாய்! அன்பைப் பொழிவாய்!
மொழிவாய் மொழிவாய்! முத்தமிழ் மொழிவாய்!

பணிவாய் பணிவாய்! பண்பினில் பணிவாய்!
பனிவாய் பனிவாய்! இமயவன் பனிவாய்!
செவ்வாய் செவ்வாய்! தித்திக்கும் செவ்வாய்!
இசைவாய் இசைவாய்! இன்புடன் இசைவாய்!

அளவாய் அளவாய்! வளமும் அளவாய்!
உணர்வாய் உணர்வாய்! என்னுயிர் உணர்வாய்!
குழைவாய் குழைவாய்! தேனினில் குழைவாய்!
நிறைவாய் நிறைவாய்! என்னில் நிறைவாய்!

அமர்வாய் அமர்வாய்! இதயம் அமர்வாய்!
சொல்வாய் சொல்வாய்! இன்கதை சொல்வாய்!
உருவாய் உருவாய்! உளமே உருவாய்!
வருவாய் வருவாய்! துணையாய் வருவாய்!

தருவாய் தருவாய்! சகலமும் தருவாய்!
அருள்வாய் அருள்வாய்! இணையடி அருள்வாய்!
உறவாய் உறவாய்! என்னுடை உறவாய்!
மலர்வாய் மலர்வாய்! சிவமாய் மலர்வாய்!

வடிவாய் விளைவாய் பொலிவாய் குளிர்வாய்
நகையாய் மணியாய் நலமாய் தவமாய்
வளமாய் வருவாய் அன்பாய் அருள்வாய்
சிவமாய் சிவனாய் செம்மையாய் ஆக்குவாய்!

என்னில் உறையும் இறைவன் இவனே
நம்மை எழுப்பும் நடனம் புரிவான்
தன்னை உணரும் அனைவரின் மனதில்
இன்றே இவனே நடனம் புரிவான்!

சிவனிவன் நடனம் ஆடிடும் இறைவன்
அவனடி நிழலே அடியவர் துணையே!
சுடலையில் நடமிடும் நடுநிசியிரவில்
சிவனுடை நினைவு சுகமும் தருமே
!

************************************************

Read more...

Sunday, February 24, 2008

"அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"

"அ.அ. திருப்புகழ்" 25 -- "செகமாயையுற்று"



இந்த வாரம் சுவாமிமலைத் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் போடலாம் என் எண்ணி புரட்டினேன். இந்தப் பாடல் கண்ணில் பட்டது. இதன் பொருள் என்னை ஒரு தனிப்பட்ட முறையில் கவர்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத என் தோழி ஒருவருக்கு சென்ற ஆண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை" எனும் பதிகத்தை தினந்தோறும் ஓதுமாறு ஆலோசனை சொல்லியிருந்தேன். இவர் ஒரு சில உடற்கோளாறுகளால் கருத்தரிக்க இயலாத நிலையில் இருந்தார். செயற்கை விந்துப் பரிமாற்றம் கூட இருமுறை பயனளிக்காமல் போயிற்று. நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம். முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை என் தோழிக்குக் காணிக்கையாக்கி நல்ல முறையில் பிரசவம் நடந்தேற வேண்டி இங்கு அளிக்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!


********** பாடல் ***********

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்


தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி


மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி


மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா


தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே


தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!
************************************************************


********* பொருள் *********
[பின் பார்த்து முன்!!]

"முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா"
["முகமாயம் இட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா"]

அழகினுக்கு ஒரு முகமென்றால் அது
கிழவனுக்கும் பழிப்பு காட்டிய முகமொன்றே!
வேடனாய் வந்தவனைப் பார்த்து ஒதுக்கியவள்
விருத்தனாய் வந்தவன் ஆனையை அழைத்திடினும்
வேலனை மனத்தினின்று விடாது நின்றவள்
தினைப்புனத்தைக் காக்கையிலும் திறனாக நின்றவள்
முகவழகு விஞ்சிய வள்ளிக் குறமாதிவள்!
கொண்டவொரு தவத்தினை விடாது கொண்டவள்
வடிவழகில் மயங்கிய வேலனும் மனமகிழ்ந்தான்
குறமாதின் தனங்களிலே தஞ்சம் அடைந்தான்!
யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு
அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!

"முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா"
[முதுமா மறைக்குள் ஒரு மாபொருட்கு
உள்மொழியே உரைத்த குருநாதா]


முன்னைப் பழைமக்கும் பழைமையான
எல்லாச் சிறப்பும் பொருந்தியதான
வேதமுரைக்கும் பல்வேறு பொருட்களுக்கும்
முந்தையப் பொருளான பிரணவத்தின்
உட்பொருளைத் தந்தைக்கே குருவாகி
எம்பிரான் வாய்புதைத்து கைகட்டி நிற்க
அரும்பொருள் அருளிய குருநாதா!


"தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே"
[தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே]


கோபுரத்தின் மீதிருந்து குதித்திட்ட அருணையாரை
தன்கைமீது தாங்கிவந்து உயிர்காத்து அருள்செய்து
'சொல்லற சும்மாயிரு'என உபதேசம் செய்தது அருணையிலே!
அருட்காட்சி தந்ததுவோ மயிலாடும் விராலிமலையில்!
தடையேதுமில்லாமல் நினது அருட்பாதம் தந்து
அன்புடனே உய்வித்ததுவோ ஏரகத்தில்!
தந்தைக்கு உபதேசித்த திருத்தலமாம் சுவாமிமலையில்
தனியாக அமர்ந்திருந்து அருள்சுரக்கும் முருகோனே!

"தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே"
[தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே]

என்றும் வற்றாது நீர் வழங்கும்
செல்லுமிடமெல்லாம் மரங்களை வளர்த்துவரும்
விரிவான கரையெடுத்து விரைவாக வருவதினால்
கா விரி 'காவிரி' எனும் தனித்தமிழ் பெயர்பெற்ற
ஆற்றின் வடகரையில் விளங்கியிருக்கும்
சுவாமிமலை எனும் திருத்தலத்தில் இருந்து
சூரனுடன் போர் முடிக்க திருவுளம் கொண்டு
சக்திவேல் ஆயுதம் எடுத்த பெருமைக்குரியவனே!


"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்"
[செகமாயை உற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி]


உலகமாயையெனும் ஆளுகையில் அகப்பட்டு
காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில்
ஆசை மனைவிக்கு நான் அளித்த
கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து


"தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி"
[தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி]


பத்துத் திங்கள் முடியும் போது
முத்துப் பிள்ளையாய் அழகுடனே
நித்திலமாம் இப்பூவுலகில் நன்கு
ஒரு உருவாய் நீ வந்து
அழகுடன் நீ தோன்றி


"மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி"
[மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி]


என் மகவு என்கின்ற ஆவல்
என்னுள் உந்திவர ஆசையுடன்
உனை உச்சி மோந்து
அன்புடன் கண்களில் ஒற்றியும்
ஆசை மிகவேறி அப்படியே அள்ளிக்கொண்டு
முகத்தோடு முகம் சேர்த்து மகிழ்ந்தும்
என் திரண்ட புயங்களில் நீ உறவுகொண்டும்


"மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்"
[மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்]


என் மடி மேல் அமர்நது
என்னுடன் மிகவுமே விளையாடி
நாள்தோறும் நின்றன் மணிவாயினால்
எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!
**************************************************


"சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ என் மகனாய் வந்து எனக்கொரு முத்தம் தர வேண்டும்!"
****************************************************************************************************

அருஞ்சொற்பொருள்::

தெச மாதம் = பத்து மாதம்
திரமாய் = திரம் ஆய் = நன்றாக
ஆநநம் = முகத்தோடு முகம்
முக மாயம் இட்ட = முக அழகு மிகவும் படைத்த
நீதா = நீதிபதி
முது மா மறை = பழைமையான வேதம்
ஒரு பொருட்கு உள் மொழி = எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமான பிரணவம்
தகையாது = தடை எதுவும் இல்லாமல்
ஏரகம் = சுவாமிமலை
பாரிசம் = புறம், பக்கம்
சமர் = போர்
***************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
*****************************

Read more...

Tuesday, February 19, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"


புதன்கிழமை!

மாடவீதியில் நல்ல கூட்டம்!

'அடடா! இன்றைக்குப் போய் வந்தோமே! இன்னிக்கு பூம்பாவைத் திருநாளாச்சே! சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது! இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்!

முதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்!
'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப் பாக்காம போயிருவியோ?' என்றபடி சிரித்துக்கொண்டே மயிலை மன்னார்!

அடித்தது வலித்தாலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த அன்பை உணர்ந்த நான், 'உன்னைப் பார்க்காமல் போயிடுவேனாக்கும்! கூட்டமா இருக்கே! உன்னைப் பார்க்க முடியுமோன்னு நினைச்சேன்!' எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டேன்~!

'அடிச்சது ரொம்ப வலிச்சிருச்சா? இன்னிக்கு திருநாளாச்சே! செத்த பொண்ணை சாம்பல்லேர்ந்து ஒருத்தரு... அவரு பேரு இன்னா... ஆங்... யாரோ சம்பந்தராம்.. அவரு பாட்டுப் பாடி உசிரைக் கொணாந்தாராம்! நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி! அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம்! படா கில்லாடிய்யா அந்த ஆளு! ஆனாலும் அவரோட அன்பு இருக்கே, அத்தப் பாராட்டியே ஆவணும்' என மன்னார் என் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

கூடவே, 'இந்த அன்பு இருக்கே.... அதாம்ப்பா லவ்வு! அதுக்கு இன்னா வலு தெரியுமா? அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு! வேணுமின்னா எளுதிக்கோ!' என்று கண்ணைச் சிமிட்டினான்!

கரும்பு தின்னக் கூலியா என ஒரு கணம் நினைத்தவன், முதுகில் விழுந்த அடியின் வலி இன்னமும் உறைக்க, சிரித்துக் கொண்டே பேப்பர் பேனாவை எடுத்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-8 "அன்புடைமை"

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்." [71]

இந்தக் குறளை மட்டும் நீ சரியாப் புரிஞ்சுகிட்டியானா, மத்த எதையும் நீ படிக்க வேணாம்! அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா! கவனமாக் கேளு!

ஒனக்கு ரொம்பவே பிடிச்ச ஒருத்தரு! அவருக்கு ஒரு துன்பம் வந்திருது! உங்கிட்ட சொல்றாரு அதை! நீ ஒண்னும் பண்ணலை! சும்மா கேட்டுக்கினுதான் இருக்கே! ஆனா, அவரு சொல்லச் சொல்ல ஒன் கண்ணுல நீரு தளும்புது! நீ கவனிக்கலை அத்த! கொஞ்சங்கொஞ்சமா அது உருண்டு ஒங்கண்ணுல்லேர்ந்து வளியுது! ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே! அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல! தானா கண்ணு தண்ணி வுடுது! இருக்கற அடைப்பயும் தாண்டிக்கினு!

சரி! அத்த வுடு! நீ இந்த தண்ணியெல்லாம் தேக்கற இடத்தைப் பாத்துருக்கியா? ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க! அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும்! ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது! இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும்? தடுக்க முடியுமா அதால? அதையும் தாண்டி இப்ப இந்த வெள்ளம் ஓடி வந்திரும்!

அப்படித்தான் இந்த அன்புன்றது!

அணையெல்லாம் போட்டு இதைத் தடுக்க முடியாது! எந்தத் தடையையும் தாண்டி வெளிய வந்திருமாம்!

வேற எதையும் சொல்லாம, இந்த தாழைச் சொல்லி ஐயன் இன்னாமா சொல்லிருக்காரு பாத்தியா?!! இதுக்கு மேல அன்பைப் பத்தி இன்னா சொல்ல முடியும்ண்ற?

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு" [72]

இந்த அன்புன்றது எம்மாம் பெரிய விஷயம்னு இதுல சொல்றாருன்னு கேளு.
இந்த அன்புன்றது இல்லாதவங்க எல்லாம், எந்தப் பொருளைப் பாத்தாலும் தனக்கே தனக்குன்னு அலையுவாங்களாம். ஒண்ணையும் பிறத்தியாருக்குத் தராம தன்கிட்டயே வைச்சுப்பாங்களாம்.
அதே நேரம், ஒடம்புல மட்டுமில்லாம, மனசு பூரா அன்பை வைச்சிருக்கறவங்க, எதைப் பத்தியும் கவலைப்படாம, தன்னோட எலும்பைக்கூட கொடுப்பாங்களாம்.. அதாவது தங்களோட உடலையும் உசிரையும் கூட!
இதுக்கு மேல இன்னா வோணும்?

"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]

இப்ப, நீ இருக்கே! உன்னிய நான் பாக்கறேன். எதுனால? இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால! அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான்! சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம்! இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத! ஒனக்குப் புரியணுமேன்னுதான் சொல்றேன்!
ஒடம்புக்கு உசிரு எவ்ளோ முக்கியமோ அது மாரி, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அன்போட இருக்கறது!
இதான் ஐயன் சொல்றது!

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு." [74]


இந்த அன்புங்கற விசயம் எப்பிடீன்னா, நீ இன்னாதான் செஞ்சாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாம எப்பவுமே உங்கிட்ட கொஞ்சங்கூடக் குறையாத அளவுல விருப்பமாவே, இது வைச்சுகிட்டு இருக்கறவங்ககிட்டே இருக்கும்.
இப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்!
இதனால இன்னா ஆவுது?
இன்னாடா! இந்தாளைப் போட்டு இப்பிடி தட்டிட்டோமேன்னு என்னிய நினைக்க வைக்குது!
இதுனால, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற நட்பு இன்னமும் உறுதியாவுதில்ல?
அதேதான்!:))

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு." [75]


இப்ப இங்க இருக்கறப்ப முழுசா அன்பு காட்டி நீ இருந்தேன்னா, அதுவே நீ அடுத்த பிறவியிலியும் அன்பாவே இருக்கற மாரி வைச்சு ஒனக்கு பெரிய பெருமையைக் கொடுக்குமாம்!
[சில பேரு இந்த அடுத்த பிறவியை நம்புறாங்கள்ல... அதுல ஐயனும் ஒருத்தருன்றதை நெனைப்புல வைச்சுக்கோ!]

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" [76]

இதுவரைக்கும் சொல்லாத ஒரு விசயத்தை ரொம்ப அசால்ட்டா சொல்றாரு ஐயன் இந்தக் குறள்ல!
அன்புதான் நல்லவங்க அல்லாரும் செய்யற ஒரு தனி சமாச்சாரம்னுதானே இதுவரைக்கும் நீ நினைச்சுகிட்டு இருந்தே!
அப்டியில்லியாம்!
ஒனக்கு ஒருத்தன் கெடுதி பண்றான்னு வைச்சுக்கோ! திருப்பி அவனை அடிக்கணும்னுதானே தோணும்?
அப்டி பண்ணாம அன்பா இருந்து பாரு!
இந்த அன்பு மூலமாவே அது மாரி கெட்டதுக்கும் இந்த அன்பே துணையா இருக்கும்னு ஐயன் சொல்றாரு.


"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." [77]


இவ்ளோ சொல்லியும் இன்னும் நீ இந்த அன்போட மகிமையைப் புரிஞ்சுக்கலியேன்னு இப்ப ஐயன் கொஞ்சம் வேகப்படறாரு! இன்னா சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ!

மண்புழு நெளியுறத நீ பாத்திருக்கேதானே! அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு! இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு! நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது! கொஞ்ச நேரம் களிச்சுப் பத்தியான, காஞ்சு கருவாடாப் போயிருக்கும்!
அது மாரி ஒன்னியப் போட்டு இந்த அறக்கடவுள் வாட்டுவாராம், அன்புன்ற ஒண்ணு ஒங்கிட்ட இல்லாங்காட்டி!

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." [78]


கோவம் இன்னமும் தீரலை ஐயனுக்கு!

இப்பிடி மனசுல அன்பில்லாத ஆளுங்க இந்த ஒலகத்துல சந்தோசமா இருக்கறதுன்றது எப்பிடி இருக்குன்னா, துளிக்கூட தண்ணியே இருக்காத பாலைவனத்துல, ஒரு மரம் நல்லா துளிரு வுட்டு தளைச்சு வளந்திருக்குன்ற மாரியாம்! இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும்! நடக்காத காரியம்ண்றாரு!


"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." [79]

உள்ளுக்குள்ள அன்பு இல்லாத ஆளுங்களுக்கு வெளியில கையி, காலு, கண்ணுன்னு எல்லா உறுப்புகளும் ஒயுங்கா இருந்தாலும் அதுனால ஒரு பயனும் இல்லியாம்!

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு." [80]

இவ்ளோ நேரம் சொன்னேனே, இந்த அன்புன்ற ஒண்ணு இருக்கறவங்க ஒடம்புதான் உசிரோட பொருந்தி நிக்கற ஒடம்பாகும்.
மத்த ஒடம்பெல்லாம் சும்மா உள்ள இருக்கற எலும்பை தோலால போத்தி இருக்கற ஒடம்புதான் அப்பிடீன்னு ஐயன் சொல்றாரு!


இதையெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறியா? விசயம் இருக்கு! இன்னிக்கு இன்னா நாளு?
பூம்பாவை திருநாளு! சம்பந்தர் மேல அன்பை வைச்சுகிட்டே செத்துப்போன ஆத்மா! இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா! இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன்! நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால! போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு! அல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு! சரி வா! நாயர் கடையாண்ட போயி டீ, மசால்வடை துன்னுட்டு போலாம்!"
என அன்புடன் என் தோளில் கை போட்டு இழுத்தவாறு சென்றான், மயிலை மன்னார்!
மகிழ்வுடன்.... இல்லை இல்லை!.... அன்புடன் அவனுடன் நானும் நடந்தேன்!
**********************************************************************************

Read more...

Thursday, February 14, 2008

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]
அன்னையென்னும் அரும்பெயர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்
துணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்
அல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [1]

பத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே வாழ்ந்திருந்தாள்
பத்திரமாய் எனைக் கருவினில் சுமந்து கண்மணி போலே காத்திருந்தாள்
இத்தரையிலுள்ள நல்வரம்யாவும் தனக்கே வந்ததாய் மகிழ்ந்திட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [2]

தன்னுடல் நலனும் பேணாதிருந்து எனக்கெனவே அவள் பொறுத்திருந்தாள்
இன்னுயிராய் எனை எண்ணத்தில் நிறைத்து ஆசைக்கனவுகள் வளர்த்திருந்தாள்
மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினும் என்னையே பெரிதெனக் கருதிட்டாள் பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [3]

உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்
உள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்
உள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [4]

முப்பது நாட்கள் முள்ளாய்த் தவித்தாய் இருக்கிறேன் என்றே தானறிய
அடுத்தொரு திங்கள் அகமெலாம் தளர்ந்தாய் உள்ளே நிகழ்ந்த மாற்றத்திலே
மூன்றாம் திங்கள் பூரித்திருந்தாய் என்னை வளர்க்கும் நோக்கத்திலே
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [5]

நாலாம் மாதம் கருவது தெரிய நடையில் சற்று மிடுக்கடைந்தாய்
ஐந்தாம் மாதம் உயிரின் துடிப்பின் ஓசைகேட்டு முகமலர்ந்தாய்
ஆறாம் மதம் அடுத்தவர் காண ஆடையைத் தளர்த்தி அமர்ந்திருந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [6]

ஏழாம் திங்கள் வளைகளை அடுக்கி உடலின் சீரைச் சமன்செய்தாய்
எட்டாம் திங்கள் வயிறும் பெருத்து மூலிகை மருந்தினால் சரிசெய்தாய்
ஒன்பதாம் திங்கள் எல்லாம் ஒடுங்கி என்னைக் கொணரும் வழியறிந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [7]

பத்தாம் திங்கள் என்னைக் கொணர்ந்து படைத்தவள் என்னும் பெயர் பெற்றாய்
உதிரப்பாலை எனக்குக் கொடுத்து காத்தல் என்னும் தொழில் செய்தாய்
என்னில் இருந்த தீயவை அழிக்க எத்தனை வழியில் நீ முயன்றாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [8]

தன்னில் இருந்து என்னை வளர்த்து மண்ணில் இன்று தவழவிட்டாய்
முத்தொழில் செய்து வரமெனக்கருளி என்னை உலகில் வளர்த்துவிட்டாய்
எத்தனை நன்றி சொன்னாலும் அது அன்னை பெருமைக்கு ஈடாமோ
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [9]

வெள்ளியில் அன்னையைப் போற்றிப்பாடுதல் உள்ளவர்கெல்லாம் நலமாகும்
கச்சிப்பதியில் காமாட்சி மாநகர் மதுரையில் மீனாட்சி காசியில் வாழும் விசாலாட்சி
இவரைப் பணியும் வெள்ளித்தையில் எம் அன்னையை இங்கே போற்றிப்பாட
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [10]

இதுவரை யாரும் சொல்லாக் கருத்தினை இங்கே யானும் சொல்லவில்லை
புதிதாய்ப் பிறந்த ஒவ்வொருபேர்க்கும் அன்னையிவளே முதல் தெய்வம்
கருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [11]
********************************************************************************

தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!!

Read more...

Wednesday, February 13, 2008

"காலமெல்லாம் காதல் வாழ்க!!"

காலமெல்லாம் காதல் வாழ்க!!


இன்று காதலர் தினம்! இதையொட்டி இரு வித்தியாசமான கவிதைகள் எழுதினேன். ஒன்று என் மனைவிக்கு. மற்றொன்று என் முதல் காதலு[லி]க்கு! இரு கவிதைகளுமே "ஏற்பு" எனும் சொல்லில் தொடங்கி "வாழியவே" எனும் சொல்லில் முடிகிறது! எதையும் 'ஏற்றால்' எல்லாரும் 'வாழலாம்'! காலமெல்லாம் காதல் வாழ்க!!

ஏற்பது புகழ்ச்சி!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவ்வுலகம் நமையெல்லாம் தாங்கிநிற்குது
நீ என்னை எப்போதும் தாங்குதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ ரவி மதியும் பகலிரவில் முறை வருது
அல்லும் பகலும் எனை நீ மகிழ்வித்தல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பூமியிதன் சுழற்சியும் ஆதவனைத் தொடருது!
தன்செயலோடு என்னையும் நீ நாடுதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பருவங்கள் மாறிமாறி வருகிறது
நவரசமும் என்னிடமே நீ காட்டல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவையனைத்தும் இயல்பாக நிகழ்கிறது
என் குறைகளுடன் என்னை நீ ஏற்றது போல!

உதிரத்தில் ஓடுகின்ற அணுக்களெல்லாம்
உன்பெயர் சொல்லியே நகர்கின்றன!

விடுக்கின்ற காற்றும் எடுக்கின்ற காற்றும்
உன்நினைவைத் தாங்கியே செல்கின்றன!

உண்ணுகின்ற கவளம் ஒவ்வொன்றிலும்
தெரிவதும் நின் அன்பு முகமே!

செய்கின்ற செயல்யாவும் நிகழ்வதுவும்
நீ காட்டும் சிரிப்பாலே!

காதில் விழும் மொழிகள் யாவையும்
உன்குரலாய் மாற்றிக் களிக்கின்றேன்!

கண்பார்க்கும் காட்சியிலும் நின்னுருவே என்றும்
நீக்கமற நிறைந்திருக்கும்!

வாழுகின்ற காரணத்தை
வண்ணநிலா நீ தந்தாய்
வாழிய வாழியவே!

இது என் மனைவிக்கு "எங்களது திருமணநாள்" பரிசாக![02/11]
**************************************************

ஏற்பது மகிழ்ச்சி!



ஏற்று எனைக் கொள்வாயோ எனச் சொல்லி
நேற்றுவரை காதல்சொன்ன காதலியே!
உன்னையின்று அப்படி நான் அழைக்கலாமோ
வேற்றொருவன் மனைவியாகும் வேளையிலே?

காற்றுவழிப் போகின்ற அத்தனையும் காட்டியெனக்குக்
காதல்மொழி சொன்னவளும் நீதானே!
நீயின்றி நானில்லை எனச்சொல்லி என்நினைவில்
நிச்சயமாய் நின்றவளும் நீதானே!

யாரென்ன சொன்னாலும் நீதான் என்னுடைய
காதல்மணாளன் என்றவளும் நீதானே!
ஊரென்ன உறவென்ன சுற்றமென்ன சொந்தமென்ன
அத்தனையும்நீதான் என்றவளும் நீதானே!

காதலையும் மறந்தின்று பாசத்துக்கு அடிமையாகி
என்னையுமே நீயிங்கு மறந்தாச்சு!
உனையெண்னி என்னுணர்வை உருக்குலைந்து
ஒழித்திட்டேன் இன்றுவேறு கதையாச்சு!

உன்நினைவில் நான்வாட என்னையுமே மறந்திங்கு
பெற்றவனின் சொல்கேட்டுச் செல்கின்றாய்!
சொன்னமொழி அத்தனையும் சிந்தையிலே நிற்குதடி
சின்னவளே ஏன்மறந்தாய் சொல்லடி நீயும்!

கலியாணப் பந்தலிலே கண்மணியே நீயிருக்கும்
கோலத்தைக் கண்டிடவே வருகின்றேன்
ஈதென்ன நீயென்னைப் பார்க்கின்றாய் உன்கண்ணில்
ஒரு கோடி வேண்டுதல்கள்!

உன்பார்வை எனைநோக்கி விழிக்கிறதே இதுவென்ன
எனை நீயும் அறிந்தாயோ
மரணத்தில் நம்காதல் முகிழ்வதுவே சரியென்றால்
அதுவெனக்கு சம்மதமில்லை!

எதுநிகழ்வு என்பதனை எவரிங்கே நிச்சயிப்பார்
நீவாழும் மகிழ்வொன்றே போதுமடி
யான்வந்த காட்சியினைக் கண்டிட்ட நீயும்
மகிழ்வோடு தாலியினை ஏற்கின்றாய்!

அட்சதையைத் தூவிவிட்டு அகல்கின்றேன் யானும்
உனை யென்னின் நினைவிருத்தி
என்வாழ்வு இனியென்ன வெனவாகும் எனக்கிங்கு
தெரியாது என்றாலும் நீ வாழிய வாழியவே!

என் முதல் காதல் நினைவுக்கு! [00/00]
**********************************************************************
காலமெல்லாம் காதல் வாழ்க!!

Read more...

Monday, February 11, 2008

"அ.அ. திருப்புகழ்"[24] -- "அமைவுற்றடைய"

"அ.அ. திருப்புகழ்" [24] -- "அமைவுற்றடைய"


மயிலை மன்னார் ஐயனின் "நிலையாமை" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்!

விரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**************************************


.........."பாடல்".........

"அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
**************************************************


........"பொருள்" [பின் பார்த்து முன்!!].........

"இமயத்து மயிற்கு ஒருபக்கம்
அளித்தவருக்கு இசையப் புகல்வோனே"

பிருகுவென்னும் மாமுனிவர்
சிவனொன்றே திருவென நம்பி
திருவுருவாம் உமையவளை
இறையென்று மதியாமல்
சிவனாரை மட்டுமே
வலம்வந்தார் கயிலையில்!


இடம் நீங்கி உமையவளும்
காஞ்சியெனும் திருநகரில்
நால்வேதப் பொருளான
மாவடியில் தவமிருந்து
மணல்வடிவில் உருவமைத்து
சிவனாரை எண்ணியே
தவமிருக்க மறையோனும்
உமையவளை மணமுடித்து
இடப்பாகம் தந்திட்டான்!

பிரணவத்தின் பொருளறியா
நான்முகனின் தலைகுட்டிச்
சிறையிட்ட முருகோனை
வேண்டிட்ட சிவனார்க்கு
குருவாகி இசைவாகப்
பொருள் சொன்னவரே!


"இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரமவேலா"

போர்புரிய வந்திருந்து
எதிர்நின்று தாக்கவரும்
மதியற்ற வீரர்களைக்
கொன்றங்கு கழுகுக்கு
இரையாக அளிக்கின்ற
வீரமுடைய வேலென்னும்
ஆயுதத்தைத் தாங்கிநிற்கும்
வேலாயுதரே!

"சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் புகநாடும்"

எங்கிருந்து பிறந்தாலும்
எவ்வழியில் சென்றாலும்
நதியெல்லாம் வழியோடி
இறுதியிலே அடையுமிடம்
கடல்மடியே என்பது போல்
எவர்மூலம் தோன்றிடினும்
எவருரையால் வளர்ந்திடினும்
சமயங்கள் ஒவ்வொன்றும்
சென்றடையும் முடிவிடமோ
இறைவனது திருவடிகள்!

இதையுணரா வீணர்சிலர்
சமயத்தை முன்னிறுத்தி
வாதங்கள் செய்வதுவும்
வீண்சண்டை புரிவதுவும்!

பயனில்லாச் செயலென்று
அவ்வழியை விலக்கிவிட்டு,
நினைநாடி யான்செய்யும்
தவமொன்று நிறைவாகி
நின் திருவருளில் இனிதாக
யான் புகவும் விரும்புகின்ற,


"சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் பெருமாளே!"


தாமரைபோல் மலர்ந்திருக்கும்
ஆறுமுகம் திருவுருவாய்க்
கொண்டிருக்கும் ஷண்முகரே!

உள்ளமெனும் குகையினிலே
அருளொளியைப் பரப்புபவரே!


குறவள்ளி தனைமணந்து
வருவோரின் வினை தணிக்கும்
தணியென்னும் மலைசேர்ந்து
பெருமையுடன் வீற்றிருக்கும்
தணிகைக் குமார மூர்த்தியே!

பெருமையுடையவரே!


"அமைவுற்று அடையப் பசியுற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு இசையாதே"

["அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு கிசையாதே" ]


பசியால் மிகவாடி வாசல் நின்று
உண்ணுதற்கு ஏதேனும் தருகவென
இரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி
இருப்பதை அவருடன் மனவமைதியுடன்
பகிர்ந்துண்டு வாழும் மனமின்றி,

"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"
["அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"]

இருக்கின்ற பொருள்யாவும்
இருக்கின்ற இளமையினைத்
தக்கவைத்துக் கொள்ளும்
தகமைக்கே வாய்த்ததென
தனக்குள்ளே நினைத்திருந்து
எவருக்கும் கொடுக்காமல்
நல்லோர் சொன்ன நன்னெறியை
நினைவினிலும் கொள்ளாமல்
அதைவிட்டு அகன்றிருந்து
அகங்காரமென்னும் பெருநோயால்
தளர்ச்சி அடையாமலும்,

"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்
சமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்"


உடனிருக்கும் சுற்றத்தாரும்
ஓவெனவே அலறியழவும்
பறைமேள வாத்தியங்கள்
'டமடம'வென முழங்கிடவும்
அரசனிவன் ஆண்டியிவன்
படித்தவன் மூடனிவன்
பணக்காரன் ஏழையிவன்
சற்றுமுன்னரே மணமுடித்த
மாப்பிள்ளையிவன் என்கின்ற
பேதங்கள் ஏதுமின்றி
சமனாக அனைவரையும்
கொண்டு செல்கின்ற தன்மையினால்
"சமன்" என்ற பெயர் படைத்த
கொடுங்கூற்று இயமனும்
இவ்வுயிரைப் பற்றி
நெடுந்தொலைவு கொண்டுபோகின்ற,


"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வுற்று ஒழியக் கடவேனோ"

இளமையானவொரு கணவன்
அழகான அவன் மனைவி
அடை செய்து கொண்டுவாவென
அன்பான கணவன் கேட்க
அரிசியினை ஊறவைத்து
அன்புமனைவியும் அடைசெய்து
வட்டிலிலிட்டு பரிமாறிட
ஆவலுடன் அதையுண்டவன்
இடப்பக்கம் வலிப்பதாகச்
சொல்லிச் சற்றுப் படுத்தான்!
படுத்தவன் மீண்டும் எழவேயில்லை!
இதுவே இவ்வுலக வாழ்வு!

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" [திருமந்திரம்] [148]
[திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா!]

இதுவொன்றே உண்மையென
ஒருபோதும் அறியாது
நிலையற்ற இவ்வுடலை
என்றுமே நிலைத்திருக்கும்
எனக்கருதி இதை வளர்த்து
இதற்கெனவே பாடுபட்டுத்
தளர்ந்திங்கு யான் அழிவது
இது முறையாமோ?

[முறையில்லை! நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா!]
*******************************************************************************

"அருஞ்சொற்பொருள்"


தமர் = தம் மக்கள், சுற்றத்தார்
சமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்
இரணம் = போர்
எற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்
சிலுகை = சண்டை
சடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்
************************************************************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
******************************************

Read more...

Sunday, February 10, 2008

"குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]

"குட்டிராணி !" [காதலர் தின ஸ்பெஷல்!]




மாலை நேரம்!
சூரியன் மறைந்து செவ்வானம் படர்கிறது!


ஆற்றங்கரை மணல்மேட்டில் அமர்ந்தபடி கூடுதேடி பறந்துவந்து மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கிறேன்!
ஆசையுடன் தான் கொண்டுவந்த இரைக்காக குஞ்சுகள் ஆவென வாய்திறக்க, ஒரு தாய்மையின் முழுப்பரிவையும் வெளிக்காட்டி அக்கறையாய் ஊட்டுகின்ற தாய்ப்பறவைகளைக் கவனிக்கிறேன்!
அமைதியாக சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அதுதான் தந்தையாக இருக்க வேண்டும்!

தனக்கென்ன என்பதுபோன்ற ஒரு அலட்சியத்துடன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறது!

காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது!


மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!
உதிர்ந்து விழும் முன் அதற்குத் தெரிந்திருக்குமா, தான் எங்கே சென்று விழப்போகிறோம் என?
ஒட்டியிருந்த நினைவுகளெல்லாம் கலைந்து எங்கேயோ செல்கிறோமே என?
இப்படி ஒரு நினைவு தலைதூக்க சட்டென பார்வையை அகற்றி தலையை உயர்த்திப் பார்க்கிறேன்.

வெண்மேகக் கூட்டங்கள் யாரையோ அவசரமாகப் பார்க்கச்செல்வதுபோல் விரைந்து கொண்டிருக்கின்றன!


யாராக இருக்கக் கூடும்?

அல்லது யாருக்காக இவ்வளவு வேகமாகச் செல்கின்றன?

எவர் அனுப்பிய காதல் நினைவுகளைச் சுமந்துகொண்டு இவைகள் செல்கின்றன?


என் நினைவுகளையும் சுமந்து செல்ல ஒரு மேகம் இருக்கிறதா?
என்னுடைய மேகம் எது?
தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவைகளைப் பார்க்கிறேன்!
இருப்பதிலேயே குட்டியாய் இருந்த ஒரு வெண்மேகம் என்னைக் கவனிப்பதைப் போல ஒரு உணர்வு!

ஓ! இதுவா எனக்கான மேகம்!
அதற்கு 'குட்டிராணி' என ஒரு பெயர் சூட்டிச் சிரிக்கிறேன்!
இதென்ன பைத்தியக்காரத்தனம் என ஒரு எண்ணம் வர, அதனை அலட்சியப்படுத்தி ஒதுக்குகிறேன்!
'குட்டிராணி'யைப் பார்த்துச் சொல்கிறேன்!

'இங்கே ஒருவன் இன்பநினைவுகள் இதயத்தில் தாங்கி இன்றுவரை இருக்கிறான்! இனிமேலும் நினைத்திருப்பான்! இனியுன்னைச் சந்திக்கவில்லையெனினும் நினைவுகள் நிறைந்திருக்கும் இவனுள்! நினைவுகள் மட்டுமே சுகம் தரும் இவனுக்கு! அவளை இன்பமாய் எப்போதும் இருக்கச் சொல்!'

'குட்டிராணி' எனக்காக, என் சொல்லைக் கேட்டு, அதை முழுதுமாய் உள்வாங்கிக் கொள்வதுபோல், ஒரு நொடி நிற்கிறது!


நான் ஒன்றும் கனவெதுவும் காணவில்லையே!
கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கிறேன்!
நம்பினால் நம்புங்கள்! நம்பாவிடிலும் நட்டமில்லை!
எங்கிருந்தோ இன்னொரு குட்டி மேகம் இதனோடு சேர்ந்து இப்போது என் 'குட்டிராணி' சற்றுப் பெரிதாகி இருக்கிறது!

என்னுடைய செய்தி அதனுடன் சேர்ந்துவிட்டது என மனத்தில் ஒரு குதூகலம்!

இன்னும் சற்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்!
குட்டிராணி இப்போது சற்று விரைந்து செல்லுவது போலத் தோன்றியது!
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அது நகர்வதாகப் பட்டது!
குட்டிராணிக்கு முன்னால் ஒரு பெரிய வெண்மேகம்!
அதையே நோக்கி விரைகிறது என் குட்டிராணி!
இதோ! அந்தப் பெரிய மேகத்தைத் தொட்டு..... இதென்ன!

குட்டிராணி அதற்குள் நுழைகிறதே!
பெரிய மேகத்துடன் இப்போது சிறிது சிறிதாகக் கலக்கிறது!
இப்போது அதைக் காணவில்லை!
எனக்குள் லேசாக ஒரு பதற்றம்!


குட்டிராணி தன் இலக்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, சரியான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டது என மட்டும் புரிந்தது!
அந்த பெரிய மேகத்தின் வடிவைப் பர்த்துக் கொண்டிருந்தேன்!

ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி!

மேகம் தன் கடமையைச் செய்ய விரைகிறது எனப் புரிந்தது!
'சீக்கிரமாய் வா! உன் பதிலை எதிர்பார்ப்பேன்' என அதைப் பார்த்துக் கத்தினேன்.
ஒரு இனம்புரியா உணர்வுடன் எழுந்தேன்!

ஒட்டியிருந்த மணல்துகளைத் தட்டிவிட்டு ஆற்றில் கால் நனைக்கச் சென்றேன்!

நிலவு வெளிவரத் தொடங்கியிருந்தது!
********************************************


Read more...

Thursday, February 07, 2008

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]




காசினியில் வாழ்கின்ற கற்றோரும் மற்றவரும் கைதொழுது மெய்தொட்டு
பூசனைகள் செய்கின்ற புனிதநீரில்தான் குளித்து பூமலரால் அருச்சித்து
பாசமுடன் பரிவாக அவர்செய்யும் அபிஷேக ஆராதனை ஏற்கின்ற
காசிநகர் மேவிநிற்கும் விசாலாக்ஷி புகழ்பாட கணபதியே காப்பு.


பார்புகழும் பாரதத்தில் எத்தனையோ க்ஷேத்திரங்கள்
க்ஷேத்திரங்கள் அத்தனையும் தூயவரின் உறைவிடங்கள்
உறைவிடங்கள் ஒவ்வொன்றும் சொல்லும்கதை ஆயிரங்கள்
ஆயிரம்தான் சொன்னாலும் தாயிவளைப் போலாமோ! [1]

காசியெனும் நகரினிலே வீற்றிருக்கும் பேரரசி
பேரரசி வடிவழகில் புரிந்துவரும் இவள்மாட்சி
மாட்சிமையின் மகிமையிலே மாதரசி தேனாட்சி
ஆட்சியிவள் அருமையினை சொல்லுவதும் எளிதாமோ! [2]

இன்பத்தை அள்ளிவிடும் காமாட்சி திருக்கண்கள்
கண்களே மீன்போலத் திறந்தருளும் மீனாட்சி
மீனாட்சி காமாட்சி கண்களையும் விஞ்சுகின்ற
இன்றுபூத்த மலர்போலும் அன்னையிவள் கண்களுமே! [3]



தம்பாவம் கரைத்திடவே காசிக்குச் சென்றிடுவார்
இடும்பாவம் அத்தனையும் வாங்கிடுவாள் கங்கையளும்
கங்கையவள் தாங்குதற்கு தாயிவளே காரணமாம்
காரணமே பூரணமாய் நிறைந்ததிலோர் வியப்புண்டோ! [4]

கண்களிலே அன்புதேக்கிக் கனிவோடு வந்திருந்தாள்
இருந்தவளும் விஸ்வநாதன் அன்பினிலே மயங்கிவிட்டாள்
விட்டகுறை தொட்டகுறை இறையோடு இணைந்தவளை
அவளை மணமுடித்து தன்னோடு இருத்திட்டானே! [5]

ஆதிசிவன் அவதாரம் சங்கரரும் காசி வந்தார்
வந்தவரைப் பின்தொடர்ந்து சீடர்களும் சூழ்ந்திருந்தார்
'இரு! இவரைச் சோதிக்கலாம்! எனவெண்ணிச் சிவனும்
சண்டாளன் வேடமிட்டு முன்னாலே தோன்றி நின்றான்! [6]

சண்டாளன் உருவினிலே சிவனாரும் முன்வரவே
வந்தவனைப் பின்தொடர்ந்தாள் அவனுடைய நாயகியும்
நாயகிபின் நாயொன்று கூடவரும் காட்சிவந்த
வரவதனைப் பார்த்திட்ட சங்கரரும் திகைத்திட்டார்! [7]



'தள்ளிப்போ! சண்டாளா! என்றவனைத் தூற்றிநின்றார்
நின்றவனும் நகைப்போடு சங்கரரைக் கேட்டிட்டார்
"கேள்மகனே! எவனைத்தள்ளச் சொல்லுகின்றாய்?'
சொன்னதனைக் கேட்டவரும் மெய்வழியை உணர்ந்தாரே! [8]

"என்னிலுள்ள ஒன்றுதானே உன்னிலுமே உள்ள அது!"
"அதைவிடுத்து நான்சென்றால் உன்னிலது உயர்பெறுமோ?"
பெரும் பொருளைப் புரிந்தவரும் பணிந்தங்கே பாடிநின்றார்.
நின்றவரும் பாடியதே மனீஷாபஞ்சகம் எனும்துதிகள்! [9]

சண்டாளன் மனமகிழ்ந்து சங்கரனாய் மாறிநின்றான்
நின்றவனின் அருகினிலே விசாலாக்ஷி கூடிநின்றாள்
நின்றவளும் மகிழ்வோடு அங்கேயே குடிகொண்டாள்
கொண்டவொரு கோலத்துடன் காசியிலே அருளுகின்றாள்! [10]

அனைவர்க்கும் அருளிடவே அழகாகக் கோயில் கொண்டாள்
கொண்டதிருக் கோலத்தை அடியேனால் சொல்லப்போமோ
ஓமென்னும் ரூபத்தில் வடிவாக சமைந்திருந்தாள்
இருந்தவளின் கோலத்தை முடிந்தவரை சொல்லுகின்றேன்! [11]



இடக்கரத்தில் கனகத்தால் அமைந்தவொரு பாத்திரமும்
பாத்திரத்தில் நிறைந்திருக்கும் சுவையான பாயசமும்
பாயசத்தை அள்ளவொரு கரண்டியும் வலக்கரத்தில்
வலதிடது கரங்களாலே அள்ளித்தரும் திருவடிவம்! [12]

பட்டாடை புனைந்திருப்பாள் சிற்றாடை உடுத்திடுவாள்
உடுத்துகின்ற தேவதைகளும் உடன்வரவே அருளிடுவாள்
அருளமுதம் தனையிங்கு தந்திடவே சிரிக்கின்றாள்
சிரிப்பெல்லாம் முகத்தினிலே தேக்கியிவள் பொலிகின்றாள் [13]

விரிவான பார்வையினால் வந்தவர்க்கு அருள்கின்றாள்
அருட்பார்வை அதனாலே அகிலமெல்லாம் ஆளுகின்றாள்
ஆளுகின்ற கருணையினால் அருளமுது படைக்கின்றாள்
படைப்பதையே தொழிலாக அன்பரையும் காக்கின்றாள்! [14]

காஞ்சியிலே காமகோடி காமாட்சி அருளுகின்றாள்
அருளொளியை வீசும்மீனாள் தென்பாண்டிநாட்டினிலே
நாட்டிலுள்ளோர் நாடிவரும் விசாலாட்சி காசியிலே
காசிநகர் வீற்றிருக்கும் கங்கையிவள் அன்னபூரணி [15]

கண்விரித்து கங்கைக்கரை மீதிவளும் அருள்கின்றாள்
அருளமுதை வந்தவர்க்கு வாரிவாரி வழங்குகின்றாள்
வழங்குவதில் இவளுக்கோர் ஈடிங்கு என்அன்னை
அன்னையிவள் இருப்பதாலே அகிலமுமே வாழுதம்மா! [16]

பாவங்கள் தீர்ந்துவிடும் பாவையிவள் கண்பட்டால்
பட்டதெல்லாம் பறந்துவிடும் அன்னையிவள் அருள்சுரந்தால்
சுரக்கின்ற அருட்கருணை விழியதிலே பொழிந்திருக்கும்
பொழிகின்ற தாயவளைப் போற்றிடவோ மொழியுமில்லை! [17]

இத்தரையில் இவள்போல எங்குமொரு தெய்வமில்லை
இல்லையென வருவோர்க்கு ஈயாதது ஒன்றுமில்லை
ஒன்றினிலே ஒன்றாக ஒன்றியிவள் நின்றிடுவாள்
இடுகின்ற அமுதத்தால் இன்னல்களைப் போக்கிடுவாள்! [18]

என்னவளை என்தாயை இன்பமுடன் பாடிவந்தேன்
வந்தவரை அரவணைத்து வழிகாட்டி நடத்திடுவாள்
நடமாடும் தெய்வமிவள் நமைக்காக்க நிற்கின்றாள்
நின்றதிருக் கோலமதில் உள்ளமெலாம் பறிகொடுத்தேன்! [19]

மூவுலகும் ஆளுகின்ற ஆதிசிவன் தேவியிவள்
இவளருளால் விளைகின்ற பேரின்பம் பலகோடி
கோடிசுகம் தந்திடுவாள் நாடுகின்ற அன்பருக்கு
அன்பருக்கு இப்போதே இன்பமழை பொழிந்திடம்மா ! [20]

காமாட்சி மீனாட்சி காசிவிசா லாட்சிபோற்றி!
போற்றுபவர்க்குப் படியளக்கும் அன்னபூரணி அடிபோற்றி!
போற்றியிதைப் படிப்பவரின் பாவம்போக்கும் கழல் போற்றி!
போற்றியுனைப் பாடிடுவேன் விசாலாட்சி போற்றி போற்றி!! [21]

விசாலாட்சி என்னும்பெயர் கொண்டவளும் தாயிவளே
இவளன்றோ சிவனுக்கே அமுதளித்த அன்னபூரணி
பூரணமாய்ப் பொலிகின்றாள் இருவுருவில் காசியிலே
காசியிலே நின்றமர்ந்து காக்கின்றாள் காசினியை! [22]




காசிவாழ் விசாலாக்ஷி கழலடிகள் சரணம்!
**************************************************************

Read more...

Tuesday, February 05, 2008

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!"



தை அமாவாசை தினம்!

திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது!

ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்!

என்னவெனப் பார்க்கிறேன்!

நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

தொட்டில் எனச் சொல்லலாமா இதை?

மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்!

ஏன்? எதற்காக அப்படிச் சொல்கிறாய்? என நீங்கள் பதறுவது கேட்கிறது!

சற்றே கவனமாகப் பாருங்கள்!

அந்தத் தொட்டிலுக்குள் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்!

அவர் முகம் மகிழ்ச்சியாக சிரித்தபடி இருக்கிறது!!

என்னவாய் இருக்கும்?

அதென்ன கீழே?

'திகு திகு'வென எரிதழல் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறதே!

இதென்ன? பக்கத்தில் இரு காவலாளிகள் ஒவ்வொரு கயிறாக அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்?

தொட்டிலில் அமர்ந்திருப்பவரும் கண்களை மூடியபடியே ஏதோ பாடலாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.....இந்த நிலையில் எப்படி இவரால் அமைதியாகப் பாடல் பாட முடிகிறது?

கொஞ்சம் இருங்கள்!

இவர் என்ன பாடுகிறார் எனக் கேட்போம்?

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அபிராமியைப் போற்றிப் பாடும் பாடல் எனப் புரிகிறது!
அது மட்டுமல்ல! ஒவ்வொரு பாடலின் முடிவில் வரும் சொல்லை வைத்தே அடுத்த பாடல் தொடங்குகிறது!

ஏன் சுற்றி இருப்பவர் முகத்திலெல்லாம் இப்படி ஓர் பரபரப்பும், எதிர்பார்ப்பும்?

ஒவ்வொரு பாடல் முடிந்த பின்னரும் அனைவரும் தலையை உயர்த்தி வானத்தை வேறு பார்க்கிறார்கள்!

என்னய்யா நடக்குது இங்கே!?

சரி! பக்கத்தில் இருப்பவர் யாரையாவது கேட்போம்!

'ஐயா! ஐயா!'

'அட சும்மா இருமைய்யா! அங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! இந்த நேரத்தில் உமக்கென்ன 'ஐயா' வேண்டிக் கிடக்கிறது?' பக்கத்தில் இருப்பவர் சிடுசிடுக்கிறார்.

'கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! நான் ஊருக்குப் புதுசு! இங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை. அதுதான் என்னவெனத் தெரிந்து கொள்ளலாமென....!' நான் மெதுவாக இழுக்கிறேன்.

'அதுதான் சொன்னேனே! இங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என! பொதுவாக இழுத்துக் கொண்டிருக்கும் உயிரைத்தான் அப்படிச் சொல்வார்கள்! இன்றைக்குத்தானைய்யா மெய்யாகவே 'ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்' ஒரு உயிரைப் பார்க்கிறேன்'!!

'சற்று விளக்கமாகச் சொன்னால் நலமாயிருக்கும்' என்று நான் கேட்க, என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்த நண்பர் வேகப்படுகிறார்.

'என்னைய்யா இது அக்கிரமம்! அந்த பட்டர்தான் ஒரு விவரம் கெட்டவர், பைத்தியம் என்றால் இந்த மன்னருக்கு புத்தி எங்கே போயிற்று?'

நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்க்கிறேன்.

'ஓ! உமக்குத்தான் ஒரு விஷயமும் தெரியாதே! சொல்கிறேன் கேளும்! அதோ தொங்கிக் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் சுப்பிரமணிய பட்டர். அம்பாளுக்கு பூஜை எல்லாம் செய்து வருபவர். சதா சர்வ காலமும் அவளே கதி என அவளைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்! இப்ப அதான் அவரே தொங்குகிறார்!' எனச் சொல்லிச் சிரித்தார்.

'புரியவில்லையே! அவளைச் சரணடைந்ததற்கு இவர் ஏன் இப்படித் தொங்க வேண்டும்?' என்றேன் நான்.

'அதில்தான் இவருக்குப் பிடித்தது சனி! இவர் பாட்டுக்கு அவள் உண்டு தான் உண்டு என இருந்திருக்கலாம். எவருக்கும் பிரச்சினை வந்திருக்காது. இவர்தான் எங்களுக்கெல்லாம் நேரம், காலம் திதி எல்லாம் பார்த்துத் தருகின்ற பண்டிதரும் கூட! அம்பாளைப் பற்றியே நினைத்திருந்து, வருபவர், போகிறவர்க்கெல்லாம் என்ன வாயில் வருகிறதோ, அதைச் சொல்லி வந்திருக்கிறார். சிலருக்கு அதில் பொல்லாதது நடக்கப் போய் மன்னரிடம் வத்தி வைத்து விட்டார்கள். அவராவது இதைப் பெருசு பண்ணாமல் இருந்திருக்கலாம். 'ஆஹா! நம்ம ராஜாங்கத்தில் இப்படி ஒரு நிகழ்வா?' எனக் கிளம்பி வந்து விட்டார்!'

'யார் நம்ம சரபோஜி மன்னரா? அவரா இப்படிச் செய்தார்?' என அப்பாவியாகக் கேட்டேன்.

அதற்குள் இன்னொரு கயிறு அறுக்கப்பட்டு தொட்டில் ஏடாகூடமாக ஆட, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் 'ஆ' என அலறுகிறார்கள்! நம் நண்பரும் கூட அலறிவிட்டுத் தொடர்கிறார்!

'ம்ம்.. என்ன கேட்டீர்? ஆமாம்! சாட்சாத் அவரே தானைய்யா! என்னமோ வேறு வேலையே ராஜாங்கத்தில் இல்லாதது போல மந்திரி பிரதானிகளுடன் இங்கு வந்துவிட்டார் இன்றைக்கு. அட! இந்த பட்டருக்குத்தான் எங்கு போச்சு புத்தி? ராஜா வரப்போகிறார் எனத் தெரியும்தானே! இன்றைக்கு ஒருநாளாவது வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லவா? இன்றைக்கு எனப் பார்த்து தை அமாவாசை! அம்பாளைப் பார்த்து அவளை வணங்கியே ஆகவேண்டுமென வந்து, கோவிலில் இருந்திருக்கிறார். அவரைப் பற்றித்தான் தெரியுமே! ஓ! உமக்குத்தான் ஒன்றுமே தெரியாதே! அபிராமி முன்னால் அமர்ந்துகொண்டு தோத்திரங்களாய்ப் பொழிந்து கொண்டு இருந்திருக்கிறார். மன்னர் வருகிறார். எல்லா ஜனங்களும் அவருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். இவர் என்னடாவென்றால், எதுவுமே அறியாத பரப்பிரும்மமாய் அபிராமியைப் பார்த்து என்னவோ பாடிக் கொண்டிருக்கிறார்."

'அடடா! அப்புறம்? என்ன ஆச்சு?' ஆவலை அடக்க முடியாமல் நான் கேட்க,

' என்ன ஆச்சு? போறாத காலம்தான்! மன்னர் வந்து இவர் பக்கத்தில் நிற்கிறார். இவரோ அவரைக் கவனிக்காமல் அம்பாளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

'நீர்தான் சுப்பிரமணிய பட்டரோ?' மன்னர் கேட்கிறார்.

ஏதோ காதில் விழுந்தும் விழாதது போல் இவர் வைத்த கண்ணை அபிராமியை விட்டு எடுக்காமல், 'ம்ம்' என்பது போலத் தலையை ஆட்டுகிறார்.

'இந்த நேரம் திதி எல்லாம் பார்த்துச் சொல்பவர் நீர்தானாமே?' மன்னர்!

'ஆமாம். இப்ப என்ன அதுக்கு?' என்றார் இவர்!

'ஒன்றுமில்லை! இன்றைக்கு என்ன திதி எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமோ?' மன்னர் விடாமல் கொக்கி போடுகிறார்.

'அதோ அங்கே பார்த்தீரில்லையா? அந்த ஒளிவீசும் கண்களைப் பாரும்! முகத்தில் ஜொலிக்கிற ஒளியைப் பாரும்! இன்னிக்கு முழுப் பௌர்ணமி!'

சுற்றியிருப்பவர் முகத்திலெல்லாம் ஒரே அதிர்ச்சி! சிலர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி! 'அதான் நாங்க சொன்னோமில்லையா' என்பது போல ஒரு எக்காளம்!
மன்னர் முகத்திலோ கோபம் கொப்பளிக்கிறது!

'சரியாகத்தான் சொல்கிறீரா? இன்று பௌர்ணமி என்றால் நிலவு எங்கே? என்ன உளறுகிறீர்?' கோபத்துடன் பட்டரை வினவுகிறார்.

ஆமாம்! இன்று பௌர்ணமிதான்! நான் சரியாகத்தான் சொல்கிறேன்' பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார்.

கூடியிருப்பவர்களில் சிலர் அச்சத்துடன் சுப்பிரமணியரை உலுக்கி அவரை நினைவுலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு விழிக்கிறார் பட்டர்! சுற்று முற்றும் பார்த்தார். எதிரே நாடாளும் மன்னர். கேள்வி கேட்டவரும் அவர்தான் எனத் தெரிந்தது. நிலைமையின் தீவிரமும் புரிந்தது!

'எப்படி இன்று பௌர்ணமி எனச் சொன்னீர்கள்? இன்று அமாவாசை அல்லவா? இப்படித்தான் எல்லாருக்கும் சொல்லி வருகிறீரா?' சரபோஜி உறுமினார்.

'அப்படியெல்லாம் இல்லை அரசே! அவளைப் பற்றியே நினத்துக் கொண்டிருந்ததில் சற்று பிழையாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!'

'ஓ! அவளை நினைத்துக் கொண்டிருந்தால் எது வேண்டுமானாலும் செய்வீரோ? யாரங்கே? இவரைப் பிடித்துக் கட்டுங்கள்! நெருப்பை மூட்டி ஒரு தொட்டிலில் இவரை வைத்து அதன் கீழே தொங்க விடுங்கள்! ஒவ்வொன்றாக கயிறுகளை அறுத்து, மரணபயம் இவரை முழுதுமாகப் பிடித்தபின்னர் இவர் அந்த நெருப்பில் வீழ்ந்து மாளட்டும்! தன் கடமையை மறந்து, எல்லாவற்றுக்கும் அபிராமி மேல் பழியைப் போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்! இது அரச கட்டளை! உடனே நிறைவேற்றுங்கள்!' சரபோஜி மன்னர் கட்டளையிட்டார்' எனச் சொல்லி நிறுத்தினார் நண்பர்.

'பிறகு? ....பிறகென்ன நடந்தது?' என பதட்டத்துடன் கேட்டேன்.

என்னை ஏளனமாகப் பார்த்தவாறே அவர் கூறினார்! 'அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறீரே! இதுதான் நடக்கிறது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டுமைய்யா! மன்னர் அப்படிச் சொன்னவுடன், பட்டர் முகத்தில் அப்படி ஒரு ஒளி வீசியது! அதை நீர் பார்த்திருக்க வேண்டும்! அம்பாளைப் பார்த்துக் கத்தினார்!


'அடியே! உன்னால்தானே இதெல்லாம்! உன் மேல் கொண்ட பக்தியால் தானே நான் மனம் போனபடி அப்படி சொல்லிவிட்டேன்! அதற்கு எனக்குத் தண்டனையா? அழகுதான் போ! யார் என்ன சொன்னாலும் சரி! இன்று பௌர்ணமிதான்! உன் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் நான் சொன்ன வார்த்தையை உண்மையாக்க வேண்டியது இனி உன் பொறுப்புதான்! இதோ! இவர்கள் ஒவ்வொரு கயிறாய் அறுக்க அறுக்க, நான் உன் மேல் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வருவேன்! என்னைக் காப்பதோ, சாகடிப்பதோ அதை இனி உன்னிடம் விட்டுவிட்டேன் என்னை இப்படி செய்யத் தூண்டிய நீயே இதற்கெல்லாம் பொறுப்பு!' அப்படீன்னு சொல்லிட்டு மனுஷன் பாட்டா பாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கயிறாய் அறுந்து கொண்டிருக்கிறது! ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை! அம்பாளாவது, வந்து இவரைக் காப்பாத்தறதாவது! பாரும்! நீரும் இந்த வேடிக்கையைப் பாரும்' எனச் சொல்லியவாறே சற்று நகர்ந்தார் அந்த நண்பர்.

'போறதுக்கு முன் ஒரு கேள்வி. இதுவரைக்கும் எவ்வளவு பாட்டு பாடியிருக்கார்?'


'அறுந்து தொங்கற கயிறை எண்ணிப் பாரும். தெரியும். இதுவரைக்கும் ஒரு 70 தாண்டி இருக்கும்னு நினைக்கிறேன்' என்றார்.

கூடியிருந்த கூட்டத்தோடு நானும் நிகழ்வை ஒரு பரபரப்புடன் கவனிக்கத் துவங்கினேன்.


73, 74, 75, 76........!!!!!!! பாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன!
கயிறுகளும் அறுந்து கொண்டிருக்கின்றன!

77, 78....!
மேலும் இரு கயிறுகள்!

79.. "விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன"... பட்டர் பாடத் துவங்குகிறார்!

ஆ! இதென்ன ஆச்சரியம்! அபிராமியின் ஒளிவெள்ளம் அங்கே நிறைகிறது!
தன் வலது காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வானில் வீசுகிறாள் அன்னை!
'விர்'ரெனப் பறக்கின்ற அந்த குண்டலம் வானில் ஒரு முழு நிலவாய்ச் சுடர்விட்டு தண்ணொளியை எங்கும் பரப்புகிறதே!

கண்டவர் அனைவர் முகத்திலும் பரவசம்!
அனைவரும் கிடைத்தற்கரிய இக்காட்சியினைக் கண்டு 'ஆஹா! இதென்ன அற்புதம்! அமாவாசையன்று முழுநிலவா!' என ஆனந்தக் கூச்சலிடுகின்றனர்!
நானும் என்னை மறந்து கத்துகிறேன்!

அரசன் முகத்தில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு பதட்டம்!

'பட்டரே! என்னை மன்னியுங்கள்! தங்களையும், அன்னையின் பெருமையையும் அறியாமல் தங்களுக்கு பெருத்த அநீதி இழைத்துவிட்டேன்! அன்னை மீது தாங்கள் கொண்ட பக்தியை உணராமல் நான் செய்த இந்தச் செயலை மன்னியுங்கள்!' மன்னர் கதறுகிறார்!

'அரசே! தாங்கள் எந்தத் தவறும் புரியவில்லை! தங்களது அருளால் அன்றோ அன்னை இந்த எளியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறாள்! நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!' என பட்டர் உருகுகிறார்.

'இப்படி இந்த எளியேனுக்கும் அருள் புரிந்த அன்னையைப் போற்றி இன்னும் சில பாடல்கள் பாடுகிறேன். அனைவரும் அமர்ந்து கேளுங்கள்!' என பட்டர் வேண்ட, அனைவரின் முன்னிலையிலும் 100 பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்கிறார்.

'அன்னையின் அருளை முழுதுமாகப் பெற்ற நீங்கள் இன்று முதல் 'அபிராமி பட்டர்' என அழைக்கப்படுவீர்கள்' என அரசன் ஆணையிட நிலவு பொங்கிப் பெருகிய அந்நாள் இனிதே நிறைவுற்றது!

இப்படியோர் காட்சியினை எனக்கும் காணக் கொடுத்த அன்னையைப் போற்றி வணங்கியபடி நானும் அவள் சந்நிதிக்குச் சென்று வழிபடுகிறேன்.

இந்த தை அமாவாசை நன்நாளில் உங்கள் அனைவருடனும் இதனைப் பகிர்கிறேன்.
இதோ அன்னையையே வரச் செய்த அந்த 79-வது பாடல்!

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?"


அன்னை அபிராமவல்லி பொற்பாதங்களில் சரணம்!
*********************************************************

இதை விளக்கும் ஒரு பாடலையும் "யூ ட்யூப்"பில் பார்த்து, கேட்டு மகிழுங்கள்!
http://www.youtube.com/watch?v=W3fQ1wlw3-E


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP