Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

"உந்தீ பற!“ - 8

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

பாவ பலத்தினாற் பாவனா தீசசற்
பாவத் திருத்தலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற. [9]


பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.


அன்னியம் அனையம் இரண்டினும் மேன்மை
பாவனாதீதம் [bhaavanaathiitham] எனுமொரு நிலையே
[ஏதும் இல்லா ஒரு நிலையதுவே]

ஏதொரு ஒருவமும் வெளியிலோ உள்ளிலோ
இருத்தலில் ஈர்ப்பெனும் ஒருநிலை வரலாம்

அதனைப் பற்றிய கவனம் மிகுந்து
அடுத்ததைப் பழிக்கும் தீதும் வரலாம்

ஏதும் இல்லா சற்பாவத்தில் இருத்தலே
பரபத்தி தத்துவம் என்பதை அறியலாம்.


வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி செலுத்துகின்ற அன்னிய பாவம், அப்படி வெளியில் காணாது உள்ளேயே அந்த உருவினை வைத்து செய்கின்ற பக்தியான அனனிய பாவம் என்கிற இரண்டை விடவும்
எந்தவொரு உருவினையும் எண்ணாத சத்பாவத்தில் இருத்தலே ‘பரபத்தி’ என்னும் தத்துவம் ஆகும்.


உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற. [10]


உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீ பற
அது யோக ஞானமும் உந்தீ பற.


எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் பரபத்தி என்னிலோ

எதுவினைக் கண்டும் ஏதும் ஆகா[து]
எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]

ஆங்கே அதுவாய் ஒடுங்கி இருத்தலோ
கன்மம்பத்தி என ஆன்றோர் உரைப்பர்

அதுவேயோக ஞானம் எனுமாம்
உயரிய நிலையாம் உணர்வாய் இதனை.


இறையுணர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதனை அப்படியே உள்வாங்கி, பிறகு அதனிலேயே ஒடுங்கி ஆழ்வது கன்மம் தொடங்கி, பக்திவயப்பட்டு, பின் யோக நிலையில் ஆழ்கின்ற ஒன்றாகும்.

வெளியுருவைக் கண்டு அதனில் பக்தி செலுத்துவது கன்மம். அதனை உள்ளில் வைத்துப் போற்றுவது பக்தி.
அவையெல்லாவற்றையும் விடுத்து, ஏதுமில்லா ‘பரபத்தி’யில் ஆழ்வது யோக ஞானம் என்னும் உயரிய நிலை.

[அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்த யோகஞானம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்!]

****************
[தொடரும்]

Read more...

Friday, January 30, 2009

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]


”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்!

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:


1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!


2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.


3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.


4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.


5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.


6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.


8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].

அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

இனி, ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்தக் கருத்துகளை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்து, திங்களன்று மீண்டும் தொடரலாம்!

குருவே துணை!

*****************

[தொடரும்]

Read more...

Thursday, January 29, 2009

"உந்தீ பற!” -- 6

"உந்தீ பற!” -- 6

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடா துன்னலே யுந்தீபற

விசேடமா முன்னவே யுந்தீபற. [7]


விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்

விட்டிடாது உன்னலே உந்தீ பற

விசேடமாம் உன்னவே உந்தீ பற.

தியானம் செய்தலில் பல்வகை உண்டாம்
நீரின் வீழ்ச்சி பலவிதமாகும்

சிந்திச் சிதறிப் பட்டுத் தெறித்து
நீரின் வேகம் போலது வீழும்

நெய்யின் வீழ்ச்சியோ சீராய் நிகழும்
மேல்முதல் கீழ்வரை ஒழுங்காய் ஒழுகும்

சிந்துதல் சிதறுதல் இதனில் கிடையா
இவ்வகை நிகழும் தியானமே உயர்வாம்.


எண்ணை, அல்லது நெய்யை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றும்போது கவனித்தால், அதன் ஒழுக்கு ஒரே சீராய் சிந்தாமல், சிதறாமல் நிகழ்வது தெரியவரும்.

நீரருவி விழுகையில், அப்படி இராது.

அப்படி, ஒரு நெய்யொழுக்கின் வீழ்ச்சி போல, கவனம் சிந்தாமல், அலைபாயாமல் தியானம் செய்வது நிகழவேண்டும்.

இதுவே உயர்ந்ததாம்.


அனியபா வத்தி னவனக மாகு

மனனிய பாவமே யுந்தீபற

வனைத்தினு முத்தம முந்தீபற. [8]


அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்

அனனிய பாவமே உந்தீ பற

அனைத்தினும் உத்தமம் உந்தீ பற.


புறமொரு தோற்றம் கண்ணால் கண்டு
அதனில் அளவிலாக் காதல் கொண்டு

அதனை அங்ஙனம் எண்ணீயபடியே
நிகழ்த்திடும் தியானம் அன்னியம் ஆகும்

அகத்துனுள் ஒரு தனி உருவினை நிறுத்தி
அதனை உள்ளுள் ஒளிரச் செய்து

அவ்வுருதன்னில் கருத்தினை உன்னும்
அனனிய தியானம் அனைத்திலும் உயர்வாம்.


வெளியே கண்ணுக்கு முன்னே தெரிகின்ற தனக்குப் பிடித்தமான கடவுளரின் உருவத்தைக் கண்ணாரக் கண்டு, உருகி, அந்தத் தோற்றத்தின் மீது பக்தி கொண்டு மெய்யுருகித் துதிப்பது அன்னிய பாவம்[bhaavam] என வகைப்படும்.

அதே தோற்றத்தைத் தன் மனத்துக்குள் நிலை நிறுத்தி,மனக்கண்ணால் அதனைக் கண்டு பக்தி செய்வது அனனிய பாவம்[baavam] எனச் சொல்லப்படுகிறது.

உள்ளில் இவ்வாறு எண்ணி தியானம் செய்வதே, இந்த அனனிய பாவமே
உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.

‘தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளில் தேடிக் கண்டுகொண்டேன்’ என்பதும் இதுவே!

*************

[திங்களன்று மீண்டும் தொடரும்] [நாளை இதுவரை கற்றதை ஒரு பார்வை பார்க்கலாம்!]

Read more...

Wednesday, January 28, 2009

"உந்தீ பற!” - 5

"உந்தீ பற!” - 5

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”


[முந்தைய பதிவு]


எண்ணுரு யாவு மிறையுரு வாமென

வெண்ணி வழிபட லுந்தீபற

வீசனற் பூசனை யுந்தீபற. [5]


எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என


எண்ணி வழிபடல் உந்தீபற


ஈசன் நல் பூசனை உந்தீபற.


எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்


காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை அவற்றுள் கொண்டு


இறைவழிபாடு இவ்விதம் செய்து
ஈசன் அவரே என்றே உணர்ந்து


நாளும் நினைவுடன் பூசனை செய்யின்
ஈசன் மகிழ்வான் இதுவே திண்ணம்.


காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.


வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்

விழுப்பமா மானத முந்தீபற


விளம்புந் தியானமி துந்தீபற. [6]


வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்

விழுப்பம் ஆனதமும் உந்தீ பற

விளம்பும் தியானம் இது உந்தீ பற.



ஈசன் நாமம் உரக்கச் சொல்லி
அவனது புகழைப் பாடுவர் சிலரும்


உதடுகள் மட்டும் அசைந்திடும் வண்ணம்
திருப்பெயர்ச் சொல்லிச் செபமும் செய்வர்


இதனினும் உயர்ந்தது அடி நாக்கிடத்தில்
எதனும் அசையா திருநாமம் செபித்தல்


தியானம் என்னும் மேல்நிலைப் படிக்கு
இதுவே வழியாம் என்றே உணர்க.


‘வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்’ என ஒரு பாடல்வரி உண்டு.

அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.


உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.


இதை விடவும் சிறந்தது, உள்நாக்கில் இதனை உருட்டி, எதையும் அசைக்காமல், செபம் செய்வது.


இதுவே மிகவும் உயர்ந்த நிலை என இப்பாடல் சொல்கிறது.

*************************
[தொடரும்]

Read more...

Tuesday, January 27, 2009

"உந்தீ பற!” - 4

"உந்தீ பற!” - 4

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]

கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்

கருத்தைத் திருத்தியஃ துந்தீபற

கதிவழி காண்பிக்கு முந்தீபற. [3]

கருத்தனுக்கு ஆக்கு[ம்] நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற.


பலனை வேண்டிச் செய்திடும் கருமம்
ஏதுபலன் தருமென எவரும் அறியார்

வேண்டிய பலனும் வந்திடின் வரலாம்
கூடவோ குறைந்தோ அதுவும் வரலாம்

முற்றிலும் வேறாய் பயனும் தரலாம்
இவ்வகை செய்பலன் நால்வகை ஆகும்

பயனெதும் கருதா செய்வினை செய்யின்
கருத்தைத் திருத்திக் கதிவழி காட்டும்

என்பதை உணரும் அறவழி மாந்தர்
அவ்விதம் செய்து பயனை விரும்பார்.


முதல் பாடல் கருத்தில் சொன்னதுபோல 'நால்வகைப் பயன்கள்' ஒரு செயலால் விளையும் என்பதை நன்கு உணர்ந்தவர், பயன் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யவேண்டிய செய்கையினை மட்டுமே
செய்வதே ‘நிஷ்காமிய கன்மம்’ என தங்களது கருத்தைத் திருத்திக்கொண்டு அதுவே முக்திக்கு வழியென நடப்பார்கள்.

திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற

வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. [4]


திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற.


இறைவனை எண்ணி ஆராதித்தலும்
அதனையே உன்னி நாமம் செபித்தலும்

மனதில் எண்ணி தியானம் செய்தலும்
உடல்வாக்கு உள்ளம்செய்யும் மூவகைத்தொழிலாம்

உடல்வழி செய்வது பூசை ஆகும்
அதனினும் சிறந்தது வாக்கினில் செபமும்

உளத்தில் ஒடுங்கிடும் தியானம் மிகவேவுயர்வே
இவ்வகையாய்ச் செய்திடல் எதனிலும் சிறப்பு.


‘காயேனவாசாமனஸா’ என உடல் வாக்கு மனம் என மூன்று வகையில் திடமாகப் பூசை செய்ய இயலும்.

உடலை வருத்தி பூசனை செய்வதைக் காட்டிலும், வாயால் செபித்து பூசை செய்வது சிறந்தது.

அதைவிடவும் சிறந்தது, மனதில் இறையை எண்ணி தியானம் செய்வது.

******************
[தொடரும்]

Read more...

Monday, January 26, 2009

"உந்தீ பற!” - 3

"உந்தீ பற!” - 3

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

காப்புச் செய்யுளாக வரும் இந்த மூன்று பாடல்களும் நான் எழுதியவை.

அருணைக் கோபுர வாசலில் அமர்ந்து
கருணைசெய் கணபதி உந்தீ பற
கவலைகள் தீர்ந்ததென உந்தீ பற

பெருமைத் தலமாம் அருணா சலத்தில்
சோதியாய் எழுந்தருள் உந்தீ பற
அண்ணாமலையா யுந்தீ பற

முத்தியருள் சிவ சத்திப் பதியினில்
உய்த்து உணர்ந்தவா வுந்தீ பற
குருவருள் ரமணா உந்தீ பற
**********************


“நூல்”

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற. [1]


கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.


கருமம் என்பது செய்தொழிலாகும்
செயல்படு பொருளதால் செய்கை ஆகும்


தானாய் இயங்கும் ஒரு தொழிலன்று
செய்கை என்பதோர் இயக்கம் மட்டுமே


இயக்கம் செய்தல் எவராலும் கூடும்
ஆயினும் அதன்பயன் எம்மிடம் இல்லை


பயனைத் தருவதும் இறைவன் ஆணையே
அதனால் அதையொரு சடமெனச் சொன்னார்


எனவே செய்கை இறையென ஆகா[து]


எந்தவொரு செயலும் தானாய் நிகழ்வது இல்லை. மேசை மேல் இருக்கும் ஒரு எழுதுகோல், அல்லது புத்தகம் இவை இரண்டுமே ஏதோ ஒரு இயக்கத்தின் மூலமே ஒரு பயனைப் பெறுகிறது. இதில் எதை எடுப்பது எனத்
தீர்மானிப்பவரின் செய்கையால் மட்டுமே இவை செயல்திறன் பெறுகின்றன.


கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போல, எந்த ஒரு செயலாலும் 1.எண்ணியபடியே, 2. எண்ணியதற்குக் குறைவாக, 3. எண்ணியதற்கும் மேலாக, 4. முற்றிலும் எதிர்பாராத என நான்கு விதமான பயன்களே வரமுடியும்.



ஒரு புறாவை நோக்கி அம்பு விடுக்கும் ஒரு வேடனை மனதில் எண்ணி இந்த நான்கு பலன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது புரியும். அப்படி, இந்த பலன்களை அளிப்பது இறைவன் ஆணையே! ஆகவே, செய்கருமம் ஒரு சடப் பொருளே; அதுவே இறைவன் என ஆகாது.

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற. [2]

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீ பற
வீடு தரல் இ[ல்]லை உந்தீ பற.


வளமுறு நிலத்தில் விதைக்கும் விதையால்
விதையின் திறனே பயிராய் விளையும்


விளைவதும் செய்திடும் முயற்சியால் கூடும்
கூடலும் குறைதலும் செய்வினை ஆகும்


செய்யும் வினையால் விளைவதும் வினையே
இதுவே தொடர்ந்து வினைக்கடல் ஆழ்த்தும்


வினைக்கடல் தாண்டி விடுதலை அடைந்திடல்
வினையின் செயலால் விளைவதும் இல்லை.

ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும். ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர. செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன.

அல்லது அது நட்டத்தில் செல்ல, அதனைத் தொடர்ந்தும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

சரவணபவன் உணவுவிடுதி,சத்யம் நிறுவனம் போன்றவற்றை இதனுடன் பொருத்திப் பார்த்தால் விளங்கும். இந்த வினைக்கடலில் ஆழ்ந்தவரால் வீடுபேறு என்பது அடையமுடியாத ஒன்றாகிப் போய்விடுகிறது.

**********************

[தொடரும்]

Read more...

Friday, January 23, 2009

"உந்தீ பற" -- 2

"உந்தீ பற" -- 2

[முந்தைய பதிவு]

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"

பாயிரத்தைத் தொடர்ந்து, திரு. முருகனார் ஒரு சிறிய முன்னுரை போல, பகவான் ரமணரின் இந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என சொல்ல விழைந்து, ஒரு கதையை நம் முன் எடுத்து வைக்கிறார்.


மாணிக்கவாசகர், முப்புரம் எரித்ததையும், தட்சன் நடத்திய யாகத்தில் அனைவரும் அழிந்ததையும் தனது திருவுந்தியில் பாட, முருகனாரோ, தாருகவனத்து முனிவர்கள், ’தான்’ என்ற மமதையில், செயல் ஒன்றே சிறந்தது என்கிற ஆணவத்தில், ஆதிசிவனோடு மோத, அவர்களது கருவத்தை சிவன் எப்படி அழித்து ஆட்கொண்டார் என்பதை ஆறு பாடல்கள் மூலம் சொல்கிறார்.
இதற்கு உபோற்காதம் [முன்னுரை, முகவுரை, பாயிரம், முன்கதை] எனப் பெயரிட்டு வழங்குகிறார்.

அந்தப் பாடல்களையும், அவற்றைப் பதம் பிரித்தும், சுருக்கமான பொருள் காணலாம்.


[கலித்தாழிசை]

உபோற்காதம்

தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கறை போயின ருந்தீபற.

தாரு வனத்தில் தவம் செய்திருந்தவர்

பூருவ கன்மத்தால் உந்தீ பற

போக்கறை போயினர் உந்தீ பற.

[தாருகாவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்கள், முந்தைய பிறப்பில் தங்களுக்குக் கிட்டிய செய்பலனால், தாங்கள் செய்வது இன்னது என அறியாது கெட்டொழிந்தனர்.]

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்

வன்மத்த ராயின ருந்தீபற

வஞ்சச் செருக்கினா லுந்தீபற.


கன்மத்தை அன்றிக் கடவுள் இல்லையெனும்

வன்மத்தர் ஆயினர் உந்தீ பற

வஞ்சச் செருக்கினால் உந்தீ பற.


[மதிமயங்கிய முனிவர்கள் தாங்கள் செய்கின்ற தவத்தினால் கிட்டிய செய்பலன் என்கிற கன்ம பலமே சிறந்தது. அதனை மீறிக் கடவுள் என ஒன்றும் இல்லை என ஆணவச் செருக்குற்றவராயினர்.]


கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற

கர்வ மகன்றன ருந்தீபற.


கன்ம பலம் தரும் கர்த்தர்[ரை] பழித்துச்

செய்கன்ம பலம் கண்டார் உந்தீ பற

கர்வம் அகன்றனர் உந்தீ பற.


[இந்த ஆணவம் தலைக்கேற, கன்ம பலம் என்கின்ற ஒன்றைத் தருகின்ற கடவுளைப் பழிக்கும் செயலால், [முற்பிறப்பால் கிட்டிய பலன்களை எல்லாம் இழந்து, இப்போது செய்துவந்த இழிச்செயலால்] இந்தச் செயலால் விளைந்த பலனை அடைந்தனர். அதன் மூலம், தங்கள் ஆணவமும் அழிக்கப் பெற்றனர். ]

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தனனுந்தீபற

சிவனுப தேசமி துந்தீபற.


காத்து அருள் என்று கரையக் கருணைக்கண்

சேர்த்து அருள் செய்தனன் உந்தீ பற

சிவன் உபதேசம் இது உந்தீ பற.

[ஆணவம் அழியப் பெற்றதால், எங்களைக் காத்து அருளவேண்டும் எனக் கண்ணீர் மல்க சிவனாரை வேண்ட, கருணைக் கண் திறந்து அவர்களுக்கு அருள் செய்தார். அப்படி அவர் செய்தபோது அருளிய உபதேசம் இது என அறிக.]


உட்கொண் டொழுக வுபதேச சாரத்தை

யுட்கொண் டெழுஞ்சுக முந்தீபற

வுட்டுன் பொழிந்திடு முந்தீபற.


உள்கொண்டு ஒழுக உபதேச சாரத்தை

உள்கொண்டு எழும் சுகம் உந்தீ பற

உள் துன்பு ஒழிந்திடும் உந்தீபற.


[இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கி அதன்படி நடந்து வந்தால், உள்ளிருந்து ஒரு சுகமான அனுபவம் எழுவதை உணரலாம். இதுவரை இருந்த துன்பங்கள் எல்லாமே ஒழிந்து போய்விடும்.]


சார வுபதேச சாரமுட் சாரவே

சேரக் களிசேர வுந்தீபற

தீரத் துயர்தீர வுந்தீபற.


சார உபதேச சாரம் உள் சாரவே

சேரக் களி சேர உந்தீ பற

தீரத் துயர்தீர உந்தீ பற.


[அப்படியே அனைவரும் இந்த உபதேச சாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இன்பம் ஒன்றையே அடையட்டும். அவர்கள் துன்பமெல்லாம் தீர்ந்து போகட்டும்.]

-- முருகனார்

[எனச் சொல்லி முருகனார் வாழ்த்துகிறார்!]
____________________________


இதுவரை வந்த பாடல்களுக்குச் சொல்லியதெல்லாம் பொதுப்படையான பொருள் மட்டுமே. உபதேச உந்தியாரில் வருகின்ற பகவான் ரமணரின் முப்பது பாடல்களுக்கும் சற்று வித்தியாசமான முறையில்,... ஒரு எட்டுவரிக் கவிதையில்.... சொல்ல முயன்றிருக்கிறேன். தொடர்ந்து சில உரைநடை விளக்கங்களும் இருக்கும்.


அப்படித் தொடங்கும் போது, என் மனதில் உதித்த ஒரு மூன்று பாடல்களை வாழ்த்துப் பாக்களாக உங்கள் முன் வைத்து, அதனைத் தொடர்ந்து, பகவானின் பாடல்களை அளிக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை [இந்திய நேரம்] வாரம் ஐந்து பதிவுகளாக இது வரும்.

நன்றி.

முருகனருள் முன்னிற்கும்!
_________________________
[தொடரும்]

Read more...

Thursday, January 22, 2009

"உந்தீ பற" -- 1

"உந்தீ பற" -- 1

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"


திருவாசகம் படித்துவருகையில், மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய ஒரு பாசுரம் என்னை மிகவும் கவர்ந்தது.


திருவுந்தியார் எனும் இந்தத் தொகுப்பு மூன்றடிகள் கொண்ட பாக்களால் ஆனது. இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஈற்றடியாக 'உந்தீ பற' எனும் சொற்றொடர் வரும்.


இதன் பொருள் என்னவெனத் தேடினேன். இது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு என ஒரு பொருள் இருந்தது. அதை வைத்து யோசிக்கையில், முதல் இரண்டு அடிகளைச் சொல்லி அதில் ஒரு கேள்வியையோ அல்லது கருத்தையோ வைத்து ஒரு பெண் மலர்ப்பந்தை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை அடுத்தவளிடம் வீச, அவள், அதற்கான விடையைச் சொல்லி திருப்பி எறிவது எனக் கற்பனை செய்து பார்த்தால், இதன் அமைப்பு சற்று புரிய வரலாம்.


இதைத் தவிரவும் மேல் விளக்கங்கள் இருக்கலாம். தெரிந்தவர்கள் வந்து சொன்னால், நன்றியுடையவனாக இருப்பேன்.


உதாரணத்திற்கு ஒன்று:


மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில், எட்டாம் திருமுறையில், 'ஞான வெற்றி' எனும் தலைப்பில் உள்ள 'திருவுந்தியாரில்’ இருந்து ஒரு பாடல்:


ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற


இதன் முதல் ஈரடிகள் சொல்வதின் பொருள்:


முப்புரம் எரிக்கக் கிளம்புகிற திருவேகம்பரின் திருக்கரத்தில் நாம் இரண்டு அம்புகளைக் கூட காணவில்லையே? ஒரு அம்புதானே இருக்கிறது
எனச் சொல்லி உந்தீ பறக்கவிடுகிறாள் அடுத்தவளிடம்!


அதற்கு பதில் அளிக்கிறாள், அடுத்தவள் மூன்றாவது அடியில்:


[பார்வையாலேயே சுட்டெரிக்கும் வல்லமை பெற்ற எம்பெருமானுக்கு] அந்த ஓரம்பே அதிகமில்லையோ? எனச் சொல்லி உந்தீ திருப்பிப் பறக்க விடுகிறாள்.


இப்படியாகப் போகிறது விளையாட்டு மாறி மாறி!


மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இந்த பாணியைக் கையாண்டு பலரும் இயற்றி இருக்கிறார்கள். அவையெல்லாமே 'திருவுந்தியார்' எனவே அழைக்கப்படுகின்றன.


அப்படி ஒரு நூல் என் கைகளில் வந்து சேர்ந்தது.


இது கிடைத்தது ஒரு சுவையான நிகழ்வு.


எனது உறவினர் ஒருவர் சொன்னதின் பேரில், எங்களூரில் இருக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்திருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.


அவர் பகவான் ரமணரின் குடும்ப வழித் தோன்றல் என்பது சென்ற பின்னரே தெரிய வந்தது. விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது, என் கையில் ஒரு புத்தகம் கொடுத்து ”இதைப் படியுங்கள்” எனச் சொன்னார். பகவான் ரமணரால் இயற்றப்பட்ட பல்வேறு பாசுரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல் அது.


அன்றுதான் திருவண்னாமலை தீபத் திருநாள்! அண்ணாமலையான் ஆசியாக அதை நினைத்து நன்றிசொல்லி வந்தேன்.


அண்மையில், சென்னை சென்றிருந்தபோது, விமானத்தில் படிக்க இதனை எடுத்துச் சென்றிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த பாசுரம்தான் இந்த ”திருவுந்தியார்”!


'நான்' என்பது யார்? அதனை எப்படி அறிவது? அறிந்தபின் எப்படி விடுவது? தான் அற்றவனாக எப்படி ஆவது? போன்ற பல கேள்விகளுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பாசுரமாக அது எனக்குத் தோன்றியது.


எனக்குத் தெரிந்த அளவில், இந்த மூன்றடிப் பாக்களை எட்டுவரிக் கவிதை வடிவில் விளக்க முயன்றிருக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்!
முப்பது பாடல்களில் இதனை பகவான் ரமணர் சொல்லியிருக்கிறார். அவரது சீடரான முருகனார் என்னும் அன்பர் இதற்கு முன்னும் பின்னுமாக பனிரண்டு பாக்களை இதே அமைப்பில் சேர்த்திருக்கிறார். அவற்றுள், முதல் ஏழு பாடல்களை முதலில் சுருக்கமாக அளிக்கிறேன்.


குருவருள் துணை நிற்கட்டும்!
******************************


"உபதேசவுந்தியார்"


பாயிரம்


[வெண்பா]

[இந்தப் பாடல் 'உந்தீ பற' அமைப்பில் அமைந்தது அல்ல!]


கன்மமய றீர்ந்துகதி காண நெறிமுறையின்
மன்மமுல குய்ய வழங்குகெனச் - சொன்முருகற்
கெந்தைரம ணன்றொகுத் தீந்தானுபதேச
வுந்தியார் ஞானவிளக் கோர்.


[பதம் பிரித்து]


கன்மமயம் தீர்ந்து கதிகாண நெறிமுறையின்
மன்மம் உலகுய்ய வழங்குக எனச் - சொன்முருகற்கு
எந்தை ரமணன் தொகுத்து ஈந்தான் உபதேச
வுந்தியார் ஞானவிளக்கோர்.


உபதேச உந்தியார் என்னும் ஒரு ஞானவிளக்கு! கன்ம மலம் தீர்ந்து எவ்வாறு கதி காணுவது என்பதன் மர்மத்தை இந்த உலகம் உய்வதற்கென வழங்கிடுக எனச் சொன்ன முருகருக்கு[சீடர் முருகனார்] எங்கள் தந்தையாகிய 'ரமணன்' இங்கே தொகுத்து அளித்தான்.

***********************************


[தொடரும்]

Read more...

Wednesday, January 21, 2009

”ஆனந்த ராமாயணம்” -- 2

”ஆனந்த ராமாயணம்” -- 2

"கிஷ்கிந்தா காண்டம்"


அனுமான் எதிரில்வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா


நேசம்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீ நிலத்தில் செய்து கொண்டீர் ராமா ராமா


சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டு மனம் கசிந்தீர் ராமா ராமா


சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மராமரத்தை ராமா ராமா


வாலியை வதைத்தவனை ராமா ராமா

வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா


சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதி சொல்லி விடுத்தீர் ராமா ராமா


நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகின்றார் ராமா ராமா

*****************************************


"சுந்தர காண்டம்"


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடவே ராமா ராமா


மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா


இலங்கிணி தன்னையே ராமா ராமா

கலங்கிட அடித்தானே ராமா ராமா


சீதையைத் தேடிக்கண்டானே ராமா ராமா

சேதி அடையாளம் தந்தான் ராமா ராமா


அசோகவனம் அழித்தான் ராமா ராமா

அசுரர்களைத் தான் வதைத்தான் ராமா ராமா


இலங்கைக்குக் கொள்ளி வைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா


சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா


இந்திரஜித்தன் அஸ்திரத்தால் ராமா ராமா

பந்தித்த அனுமானும் ராமா ராமா


ராவணனைக் கண்டு அனுமான் ராமா ராமா

சாவாமைக்கு புத்தி சொன்னான் ராமா ராமா


விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா

**************************************


"யுத்த காண்டம்"


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா


சரணமடைந்த விபீஷணர்க்கு ராமா ராமா

சிரஞ்சீவிப் பட்டம் தந்தாய் ராமா ராமா


ராவணாதி அசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷஸர் வேரற்றுப் போக ராமா ராமா


சீதையைச் சிறை நீக்கிவிட்டாய் ராமா ராமா

விபீஷணர்க்கு முடிதரித்தாய் ராமா ராமா


அயோத்திக்குத் திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்கு உரை செய்தாய் ராமா ராமா


புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா


போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போக விடுத்து அனுமானை ராமா ராமா


பரதன் உயிர் காப்பாற்றிய ராமா ராமா

அயோத்திநகர் வந்து சேர்ந்தீர் ராமா ராமா


மகுடாபிஷேகம் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா


குவலயத்தை ரக்ஷிக்கும் ராமா ராமா

குறைகள் ஒன்றும் வாராது ராமா ராமா


ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

*********************************

ஆனந்த ராமாயணம் நிறைவுற்றது!

Read more...

Tuesday, January 20, 2009

"ஆனந்த ராமாயணம்" - 1

"ஆனந்த ராமாயணம்"


நான் தினந்தோறும் சொல்லிவரும் ஒரு இனிய தோத்திரப் பாடல் ஆனந்த ராமாயணம். எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்து, அவனுக்கே அவன் கதையைச் சொல்லுவதாக அமைந்த பாடல் இது! இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

பதிவின் நீளம் கருதி, இரு பதிவுகளாக இதை இங்கு அளிக்கிறேன். இசைவடிவிலும் இதனை நாளை அளிக்க முயலுகிறேன்.

ஸ்ரீ ராமஜயம்!



"பால காண்டம்"


தேவர்குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா


தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடே ஜனித்தாய் ராமா ராமா


கோசலைதன் கர்ப்பத்தில் ராமா ராமா

கூசாமல் நீ பிறந்தாய் ராமா ராமா


தவமுனிக்கு உதவிசெய்ய ராமா ராமா

கவனமுடன் பின்சென்றாய் ராமா ராமா


தாடகையைச் சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா


கல்லைப் பெண்ணாக்கி வைத்தாய் ராமா ராமா

வில்வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா


ஜனகன் வரலாறு கேட்ட ராமா ராமா

தனக்கு முனிவன் பதிலுரைக்க ராமா ராமா


தனுசைக் கையில் எடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமற்றாய் ராமா ராமா


வில்முறிய சீதை கண்டு ராமா ராமா

நல்மணம் செய்துகொண்டாய் ராமா ராமா


மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கினீர் மிதிலை தன்னில் ராமா ராமா


பரசுராமன் வில் முறித்தீர் ராமா ராமா

கரிசனமாய் அயோத்தி சென்றீர் ராமா ராமா


சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறக்கவே அயோத்தி நகர் ராமா ராமா

****************************************


"அயோத்தியா காண்டம்"


அயோத்திக்கு அரசனாக ராமா ராமா

அவனிதனில் தசரதரும் ராமா ராமா


உந்தனையே வேண்டிக் கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா


சிற்றன்னை கைகேசியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா


பக்குவமாய் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா


உத்தரவு கேளென்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா


தாய்மொழி தவறாமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா


தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தான் நடந்தாய் கானகமும் ராமா ராமா


சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணரும் கூட வந்தார் ராமா ராமா


பக்தரெல்லாம் புலம்பிடவே ராமா ராமா

பலநீதி சொல்லி தான் நகர்ந்தாய் ராமா ராமா


கங்கைக் கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா


ஓடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உறவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா


சேனையுடன் பரதர் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா


பட்டம்கட்டி அரசுசெய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா

********************************************


"ஆரண்ய காண்டம்"


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சேர்ந்தாய் ராமா ராமா


கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா


தண்டகவனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா


பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா


சூர்ப்பனகையைக் கண்டீர் ராமா ராமா

தீர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா


தம்பியால் பங்கமடைந்தாள் ராமா ராமா

வெம்பி மனம் வாடினாள் ராமா ராமா


கரதூஷணாதியரை ராமா ராமா

வர முறையிட்டாள் ராமா ராமா


கோதண்டத்துக்கு இரையாக ராமா ராமா

கூக்குரலிட்டு ஓடிவந்தார் ராமா ராமா


சூர்ப்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா


மாரீசனை மானாக வர ராமா ராமா

மருமகனும் வேண்டிக் கொண்டான் ராமா ராமா


மாரீசன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா


சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப் பிடிக்கப் பின்சென்றாய் ராமா ராமா


அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா


சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா


ராவண சந்யாசி வந்தான் ராமா ராமா

நிலத்தோடே சீதையை ராமா ராமா


தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்தெதிர்த்த ஜடாயுவும் ராமா ராமா


சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா


தேடிவரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா


நல்வரமும் தானளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா


சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

***************************************
[நாளை நிறைவுறும்!]

Read more...

Saturday, December 06, 2008

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்



கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் பார்க்கப்படாத "ஆணிவேர்" என்னும் திரைப்படத்தை நேற்று பார்க்க முடிந்தது. இதை நீங்கள் பார்க்கவேண்டும் என அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி.

இந்தப் படம் ஒரு காதல் கதை!

தொழில் நிமித்தமாகச் சென்ற இடத்தில் தான் சந்தித்த ஒரு தமிழீழ மருத்துவரின் செயல் திறமையிலும், அவரது தன்னலமற்ற உன்னத நோக்கத்திலும் மனதைப் பறிகொடுத்த ஒரு இந்திய பத்திரிகைப் பெண்நிருபர், இது ஒத்துவராது எனக் காதலனால் நிராகரிக்கப்பட்டு தமிழகம் திரும்ப, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், அவரைத் தன் மனதை விட்டு நீக்க முடியாமல், தேடிவருகிறார் இலங்கைக்கு.

அவரைப் பற்றிய ஒரு விவரமும் அறியமுடியாமல், தவிக்கும்போது பின்னோட்ட நினைவுகளாக, தான் அவரைச் சந்தித்த சூழ்நிலைகளை அசைபோடும் காட்சிகளாகப் படம் விரிகிறது.


சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அட்டூழியங்கள், கொடூரக் கற்பழிப்புகள், ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களைக் விதவிதமாகக் கொன்று குவிக்கும் அவலங்கள் அனைத்தையும் விலாவாரியாக, ஒரு ஆவணப்படம் போலக் காட்டி சற்று அலுப்புத் தட்டும் விதத்தில் காட்டுகிறார்கள்.
ஒரே நிகழ்வுக்கு இத்தனை அடி படச்சுருளை வீணாக்கியதற்கு பதிலாக, இன்னும் பல நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.

இதற்கு நடுவில், காதலர் இருவரும் முதன்முறை சந்தித்தது, நிலைமையின் தீவிரத்தை அறியாத தமிழகப்பெண் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இதனைத் தானே அனுபவித்து உணர்கிறார் என்பதை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.


யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயரும் மக்களின் அவலம் இதயத்தைத் உலுக்குகிறது. "பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்படும் அவர்கள், தங்களுக்குப் பாதுகாப்பான இடம் வன்னியே எனச் சென்றது ஏன? என்ற கேள்வி மனதை நெருடியது. அதற்கான விடையை எனது நண்பர் திரு. சோழியான் ஒரு பதிவில் சொல்லியிருந்தார்! தங்களுக்குப் பாதுகாப்பு என அவர்கள் சென்ற இடம் வன்னி என்பதிலேயே பல விடைகள் அடங்கியிருக்கிறது என அவர் சொன்னது இப்போது நன்கே புரிகிறது.

கதாநாயகன் நந்தா சிறப்பாகச் செய்து தன் சொந்தக் குரலிலேயே பேசியது மிகச் சிறப்பு. மதுமிதா, ப்ரியா தங்கள் பாகத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். கற்பழிக்கப்பட்டு, கொல்லப்படூம் காட்சியில் ப்ரியா நிறைவாகச் செய்திருந்தார்.

இத்தனை சோகக் காட்சிகள் நிறைந்த படத்தில் நான் அழவே இல்லை..... ஒரே ஒரு காட்சியைத் தவிர.!!

'எம் பேரனைக் கட்டிப்பியா நீ?' என அந்த வயதான பாட்டி கேட்டபோது என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளித்தது. இரண்டே காட்சிகளில் வந்தாலும் நெஞ்சைத் தொட்டுவிட்டார் அந்த மூதாட்டி!

இது ஒரு விமரிசனம் கூட அல்ல! என் மனதில் பட்ட கருத்துகளே!

அந்தக் கடைசி காட்சி பலராலும் 'வெறும் சினிமாத்தனம்' என விமர்சிக்கப்பட்டது. காதலர் இருவரும் மீண்டும் சேரும் அந்தக் காட்சி வேறு எந்தப் படத்தில் வந்திருந்தாலும் நானும் அதையேதான் சொல்லியிருப்பேன். ஆனால், எனக்கென்னவோ அது ஒரு மிகப் பெரிய செய்தியைத் தாங்கி நின்றாற்போல் இருந்தது.
தன் காதலன் இறந்துவிட்டான் என அதிகாரபூர்வமாக அறிந்த காதலி மனமொடிந்து தமிழகம் திரும்பும் நொடியில், மீண்டும் ஒரு குண்டு வெடிக்கிறது.... மக்களின் அவலக் கூச்சல்கள்,...... புகை நடுவிலிருந்து ஒரு உருவம் இரு குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தியவாறு சிகிச்சை முகாமை நோக்கி ஓடி வருகிறது! வேறு யார்? நம் மருத்துவர் நந்தாதான்! அவசர அவசரமாக சிகிச்சை அளித்த பின்னர் ஏதோ ஒரு உணர்வு உந்த, சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார். தூரத்தில் கடலோரத்தில் காதலி! 'நாம் சேரணும் என்பதற்காகவே நான் இன்னமும் உயிரோடிருந்தேன் போல!' எனச் சொல்லி காதலியை அணைக்கிறார். என் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது!

ஆம்! நந்தா போன்றவர்களின் கனவு நிச்சயம் மலரும்! போராட்டம் நசுக்கப்பட்டாலும், அடக்குமுறைகள் கேட்பாரற்று போனாலும் நந்தாவைப் போல பலர் இதனைத் தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவர் என்பதைச் சிம்பாலிக்காகச் சொன்னதுபோல எனக்குத் தோன்றியது. இந்த ஒரு காட்சியிலேயே இயக்குநர் தன் எண்ணத்தை மிகவும் திறம்படச் சொல்லிவிட்டார் எனவே நம்புகிறேன்.

இவர்கள் கனவு பலிக்கட்டும்!

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் படத்தின் கோரக் காட்சிகளின் நீளத்தைச் சற்று குறைத்து இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை திரையரங்குகளிலும் ஒரு காட்சி இலவசமாக[ அரசு செலவில்] திரையிடப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மக்கள் படும் அவலத்தை நம்மவர்க்கு உணர வைக்க இது பெருமளவில் உதவும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் இணையநண்பர்கள் இதனை ஒரு கோரிக்கை மனுவாக்கி, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இது எவருடைய போராட்டத்தையும் ஆதரித்துச் சொல்லும் பதிவல்ல! அவர்களே சொல்வதுபோல், [நீ இலங்கை அரசுக்கு உதவி செய்யாமலிரு போதும்! மற்றதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!] இது அவர்கள் அவலம். ஆனால், இதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட!

நல்லதே நடக்கட்டும்! முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************
இந்தப் படத்தைத் தரவிறக்கம் செய்து பார்க்க கீழ்வரும் சுட்டிகள் உதவும்.

http://www.megavideo.com/?v=I3ASZ3Y0 - முதல் பாகம்
http://www.megavideo.com/?v=WMBFKLHV - இரண்டாம் பாகம்
http://www.megavideo.com/?v=0HBTMLLE - மூன்றாம் பாகம்
http://www.megavideo.com/?v=F58G9ZLL - நான்காம் பாகம்
http://www.megavideo.com/?v=LGUXINEV - இறுதி பாகம்

Read more...

Thursday, November 27, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8
"மனவேடன் காதல்"


'நம்பிராஜன் கூற்று ':

சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை! கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.

'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம். கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!

அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்! அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!

'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!' எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.

கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல் தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்! மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும் சல்லாபம் செய்திட்ட காட்சியது!

'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை! விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய, என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!

'வனவள்ளி கூற்று':

ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன், என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க, அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.

'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்! என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.

'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய் குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!

அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே, உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!

மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து, வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!

அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து, 'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும் முறையல்ல' எனச் சொல்ல,
'என் மனையாட்டி பெருமையினை உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,

'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல, 'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!' என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!

'நம்பிராஜன் கூற்று':

உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில், மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!

மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே, மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து, 'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!

மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க, கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'

எனச் சொல்லி வேண்டிநின்றேன்! அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்! அனைவருமே மகிழ்ந்திருந்தார்!

எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி, அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க, இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!



வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய, வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க, சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க, தென்றலது அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர, தீ வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க, ஐம்பூத சாட்சியாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின் வலதுகையைப் பற்றிக் கொண்டான்!

'மனவேடன்':

அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர, தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,

பலகாலம் தவமிருந்து,
இருவேறு இடம் வளர்ந்து,
கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,

இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!

ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை! இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............

மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!

கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!

அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்

கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]

கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!

கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!

முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************

Read more...

Tuesday, November 25, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'

'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு! அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?


துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ, பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை! தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!

ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை! எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை! என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ! வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!

ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'

என்றிவ்விதம் யோசித்து தேவராட்டி, வெறியாட்டாளன் இருவரையும் வரவழைத்து, நடந்த கதை சொல்லிவைத்து குறி சொல்லக் கேட்டிருந்தேன்.

அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க, பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!

'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்! விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும் அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'

அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல், செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!

'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள், தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து, சீக்கிரமாய்
என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'

'மனவேடன் கூற்று':

'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய், அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!

தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து, தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!

காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக், காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!

காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில் ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன் கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன் அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!

'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து, ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக! என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!

கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும் நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து, காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!

தாவியவள் பக்கலிலே தயவாக யானமர, தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.

'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும் கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது! கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'

என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக் கொடியெனவே அள்ளிக்கொண்டு, யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!

களவு மணமா கந்தனுக்கு?
*******************************
[நாளை நிறைவுறும்!]

Read more...

Monday, November 24, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6
"மனவேடன் காதல்"



'வனவள்ளி கூற்று':

நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே!

மாயமென்ன செய்துவிட்டான்! ஏனவனை மறக்கவில்லை! ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,
கையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க
மலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்! இடக்கையைக் காட்டென்றாள்'!
'குறி சொல்லியின் கூற்று':

காடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே!
கந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே!
கோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே!
சொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே!

பூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே!
சாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே!
மலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே!
வலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே!

இதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே!
வேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே!
வந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே!
மறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே!

கைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே!
தைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே!
வந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே!
சொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை!

வாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது
நாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே!
கஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி!
இஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே!


'வனவள்ளி கூற்று':

குறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்!
எனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்!

'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே!
மீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்?' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி!

'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும்! ராசியான வளைக்காரன்! சோசியமும் சொல்லிருவேன்!'
மான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி!
'
என்று சொல்லி கட்டிவைத்த மூட்டையினைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்!
உரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்!

'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு! கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்!
கைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்!'

என்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான்! வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்!
'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன்! வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க!'

என்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான்! வடிவேலன் எதிரில் நின்றான்! வஞ்சிநான் மெய்சிலிர்த்தேன் !

'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்!
சொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்!
நினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்!

'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான்! வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்!
வேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார்! கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்!
இச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்!
கவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக!'

எனச் சொல்லி மறைந்துவிட்டான்! கன்னி நான் மூர்ச்சையானேன்!

இனி என்ன?

***********************
[நாளை வரும்!]

Read more...

Sunday, November 23, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5



"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5
"மனவேடன் காதல்"


'வனவள்ளி கூற்று':

'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்!' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,
பக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்!

'இதமாக இருக்குதடி பெண்ணே! இன்னும் கொஞ்சம் மேலமுக்கு!' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,
'போனால் போகிறது! பாட்டைக்குச் செய்ததென எண்ணிக்கொள்வோம்!' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்!


'மனவேடன் கூற்று':

மனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்!

'தினையருந்தும் நேரமாச்சு! எழுந்திருங்க பாட்டையா!' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.
வட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்!

குழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........???
தொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,
விக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர்! தண்ணீர்! எனச் சைகைசெய்தேன்!

பட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.
சென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர்? ஒரு சொட்டும் காணவில்லையே!' எனப் பதறினாள்.

'மலையருவி உண்டிங்கு பக்கத்தில்! சுனையொன்று அதனடியில்! சுவையான நீருண்டு! நீருண்டு தணிந்திடவே! சென்றுவாரும் சீக்கிரமாய்!' என அல்லிமகள் படபடத்தாள்.

'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே!' என நான் சொன்னதுமே,
'காட்டானை அலையுமிடம்! காரிகை நான் வரமாட்டேன்! நீரே சென்றுவருக!' என்றவளும் பகர்ந்திருந்தாள்!

'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல! ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி! பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு!' என்றவுடன்,
அரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்!
தணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.
இதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,
கன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்!

'வனவள்ளி கூற்று':

தாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.
குரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,
எனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்!

முதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்!

தள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார்! காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்!
கைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்!
'அண்ணா வரணும்!' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,
காட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்!!!!!!

ஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,
வழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக! காத்திடுக' எனவவரைக் கூப்பிட்டேன்!

'ஆனை கண்டு பயம் வேண்டா! விரட்டுகின்ற வழி தெரியும்! ஆனாலும் அதற்கு முன்னால்
நீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்!'
என்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே!
சீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும்! ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,

'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... "நானுன்னை மணப்பேன்".... எனச் சத்தியம் செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும்! சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா!
ஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன்! யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,
'அண்ணா! செல்!' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே!


'மனவேடன் கூற்று':

ஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,
எட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா! ஏய்ச்சுப்புட்டேனே!' என்றாள்!

'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா! ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு!' என்றவளைப் பார்த்தபடி,
'அண்ணா! வரணும்!' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்!

'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக! சொன்னபடி கேட்டிடுவேன்! மணந்திடவே சம்மதிப்பேன்'
என்றவளின் சொல்கேட்டு, 'அண்ணா! செல்!' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே!

'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம்! எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்!
எனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்!

வள்ளிக்கண்ணாள் தள்ளி நின்றாள்! இரக்கமுடன் எனைப் பார்த்தாள்! 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்?
காதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்!' எனச் சொல்லிச் சிரித்தபடி,
'அண்ணா! வரணும்!' என ஓங்கிக் குரல் விடுத்தாள்!

ஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து "என்ன?"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,
'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை! வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக!' என வேண்டி நின்றாள்!

வரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[!] அண்ணனவன் முகம் பார்த்தேன்!

'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை! நீயாகப் போகிறாயா? நான் வந்து முட்டிடவோ!' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்!
காதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,

காதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத்தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்!

வேறென்ன வழி இனிமேல்?....
********************************

[நாளை வரும்!]

Read more...

Wednesday, November 19, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4
"மனவேடன் காதல்"



"மனவேடன் கூற்று":

'என்ன பிழை செய்துவிட்டோம்? ஏனிப்படி எண்ணியதும் நிகழவில்லை?' எனும் நினைப்பு மனதிலோட, அண்ணனவன் நினைவில் வந்தான்! நினைத்தவுடன் முன்னும் வந்தான்!

'கன்னி பிடிக்கும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிட்டாய்! கன்னி கிடைக்கவில்லை! கவண்கல்தான் பரிசுனக்கு!' எனச் சொல்லிச் சிரித்தவனின் காலடியில் நான் விழுந்தேன்!

'கைத்தலத்தில் கனிவைத்து கருணையொடு காக்கின்ற தெய்வமே! நினை மறந்து சென்றதுவும் என் பிழையே! மன்னித்து எனக்கருள வேண்டுகிறேன்!
நின்கையில் கனியிருப்பதுபோல், என்கையில் கன்னி கிடைத்திட அருள் செய்யப்பா!' எனத் தொழுதேன்! 'அப்படியே ஆகுக!' என்றான் அண்ணல்!

'அழைக்கின்ற நேரத்தில் அண்ணா நீ வரவேணும்' என்னுமெந்தன் வேண்டலுக்கு 'அப்படியே அழைத்திடுவாய்! வந்திடுவேன் தப்பாமல்' என்றண்ணன் ஆசிகூறி மறைந்தான்!

'வேடனாக வந்ததிலே கை பிடித்த சுகமன்றி, வேறு பலனொண்ணும் காணவில்லை! மீண்டுமந்த வேடமிட்டு கல்லடியைப் பெறவேண்டாம்!
தனியாளாய்த் தனித்திருக்கும் கன்னியிவள் கைபிடிக்க, அவளருகில் செல்லவேண்டும்! அடுத்ததெல்லாம் அண்ணன் கையில்!

நரைதிரையும், நடுங்குகின்ற கைகளுமாய் முதியவனாய்ச் சென்றிட்டால் முத்தழகி கருணை கொள்வாள்!' எனவெண்ணி வேடம் கொண்டேன் வயோதிகனாக!

"வனவள்ளி கூற்று":

'கவண்வீசிக் கவண்வீசி கைகளுமே வலிக்கிறது! காத்திருந்த சோதரரும் காட்டுவழி சென்றுவிட்டார்!
கூடவந்த தோழியரும் கண்ணினின்று மறைந்துவிட்டார்! தனியளாய் வாடுதலே தலைவிதியாய்ப் போனதிங்கு!

ஆறவமர்ந்து கதைத்திடவோ ஆதரவாய் ஆளில்லை! ஏது செய்வேன்? என்னழகா! நின்னையுமே காணவில்லை!
பரண்மேலே நின்றிட்டு கால்களுமே நோகிறது! கீழிறங்கி அமர்ந்திடுவோம்' என்றெண்ணித் தரை வந்தேன்!

'ஈதென்ன! ஏதோவோர் ஆளரவம் கேட்கிறதே! அழகனவன் முருகவேளின் அருட்பெருமை பாடிவரும் குரலோசை கேட்கிறதே!
ஆதரவாய்க் கேட்டிடவே அருகழைத்துப் பார்த்திடுவோம்!' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே?' எனக் குரல் விடுத்தேன்!

வந்தவொரு உருக்கண்டு வாயெல்லாம் பல்லாச்சு! வயோதிகரைப் பார்த்ததுமே மனசெல்லாம் லேசாச்சு!
தள்ளாடும் வயதினிலே தடியொன்றை ஊன்றியவர் தள்ளாடி வருதல்கண்டு, கைபிடித்துத் தாங்கி நின்றேன்!

'நடுங்குகின்ற கைபிடித்த என்கையும் நடுங்குவதேன்? நரம்பினிலே இதுவென்ன புத்துணர்ச்சி பரவிடுது?
நரைகண்ட தலைமுடியும் தாடியுடன் அலைகிறது! இருந்தாலும் இருகண்ணில் இதுவென்ன பேரொளியாய்?

குரலோசை குழறலாக வந்தாலும் என்மனத்தை ஏனிங்கு இப்படியது பிசைகிறது? என்னவிது மாயம்?' என்றெண்ணிக் கலங்கினேன்!
என்னுணர்வு என்னைவிட்டு எங்கேயோ போவதினை மெல்ல மெல்ல யானுணர்ந்து வந்தவரை வரவேற்றேன்.

'சொந்தவூர் செல்லவெண்ணி வழிதவறிப் போனீரோ? காட்டுவழி வந்ததென்ன? காரணத்தைச் சொல்லிடுக' வெனக் கேட்டேன்.
'காடுமலை சுற்றிவரும் கானகத்துக் கிழவன் யான்! கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன்! கால்வலியை மறப்பதற்குக் கந்தன் புகழ் பாடிவந்தேன்'

என்றவரும் சொல்லிடவே, 'காரியங்கள் ஏதுமில்லாக் கிழவரிவர் துணைகொண்டு மாலைவரை ஓட்டிடலாம்' எனக் களித்தேன்!

'வெகுதொலைவு நடந்ததனால் மூச்சிங்கு இளைக்கிறது! வெறும் வயிற்றில் இருப்பதனால் வயிறிங்கு பசிக்கிறது!
புசிப்பதற்கு ஏதுமுண்டோ? பெண்மானே சொல்லிடுவாய்!' என்றவரின் குரல் கேட்டு துணுக்குற்றேன் ஓர் கணம்!

'சென்றவனும் மானென்றான்! வந்தவரும் மானென்றார்! என்னவின்று மான்வேட்டை நாளோ!' எனும் நினைப்பு வந்தவுடன் வேடனவன் திருமுகமும் மனக்கண்ணில் நிழலாட,
'வந்த களைப்பு தீர்ந்திடவே நீரருந்தி நீரும் உணவருந்திச் சென்றிடலாம்! சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு!' எனச்சொல்லி முறுவலித்தேன்!

'சுந்தரியாள் நீயெடுத்து கைகளினால் உருட்டியதை என்கையில் வைத்திட்டால் சுகமாகத் தானிருக்கும்'
எனச் சொல்லி எனைப் பார்த்து இளித்திட்ட வயோதிகரின் முகவடிவைப் பார்த்ததுமே, சரியான வம்புக் கிழவரிவர் எனத் தெளிந்தேன்!

'காலலம்பிக் கைகழுவ நீரிங்கு வைத்திருக்கேன்! விரைவாக வந்திங்கு மரத்தடியில் அமர்ந்திடுக!
தினைமாவும் தெளிதேனும் வட்டிலிலே எடுத்தாறேன்' எனச்சொல்லி கலயத்தைக் கையெடுக்க குடிசைக்குள் நான் நுழைந்தேன்!


மனவேடன் [வயோதிகர்] கூற்று:

திரும்பியவள் வருவதற்குள், திரட்டிவைத்த நீரையெல்லாம் குறும்பாகத் தரையினிலே கொட்டிவிட்டு, குறுக்காகக் கால்நீட்டி மரத்தடியில் நான் சாய்ந்தேன்.

'களைப்பதிகம் ஆனதினால், கால்நீட்டிப் படுத்தீரோ! தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க! என்றவளைக் களைப்பாக நான் பார்த்தேன்!

'தொலைதூரம் நடந்ததனால் கால் சற்று குடைகிறது! கன்னிமான் நீ கைதொட்டு சற்றமுக்கி விட்டிருந்தால் கால்வலியும் பறந்தோடும்!
வேற்றாளைத் தொடுவதுவோ என்றஞ்சி மயங்காதே! வயதான கிழவனிவன் கால்தொட்டால் குற்றமில்லை' எனச் சொன்னேன்!


கிழவரின் அடுத்த நாடகம் என்ன?
*****************************

[நாளை வரும்!]

Read more...

Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3
"மனவேடன் காதல்" - 3
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************

[நாளை வரும்!]

Read more...

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2
"மனவேடன் காதல்"-2
அங்கே!....

'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]

Read more...

Monday, November 17, 2008

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

கந்தன் கருணை என்னும் இந்தத் தொடர் கவிதையை இதே போலவே தொடருங்க என நண்பர் ரவி சொல்லி இருந்தார்.
ஆனால், ஏதோ ஒரு உந்தலில் வேறுவிதமாக எழுத எண்ணம் வந்தது. அதைத்தான், 'புதுப்பொலிவுடன்' எனச் சொல்லியிருந்தேன்.
முருகனருள் முன்னிற்கும்.


"மனவேடன் காதல்!"

அழகிய திருத்தணி மலை! அதன் மீது முருகப்பெருமான் வலப்புறம் வள்ளியுடனும், இடப்புறம் தெய்வானையுடனும் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
அடிபணிந்து தொழுது நின்றேன்.
முருகன் அன்புடன் எனைப் பார்த்து முறுவலித்தான். 'என்ன?' என்பதுபோல் கண்
சிமிட்டினான்.
"சூரனை வதைத்து அன்னை தேவசேனாவை மணந்தது வரை எழுதிவைத்தேன். வள்ளி அம்மையாரை தாங்கள் மணம் செய்த கதையைத்
தங்கள் திருவாக்கினாலே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன் பணிவுடன்!
முருகன் சிரித்தான்!
"அதற்கென்ன! நானும் வள்ளியுமே சொல்கிறோம். கேட்டுக்கொள்!" என்றான்.
"முதலில் நான்தான் சொல்வேன்!" என தெய்வானை அம்மையார் முன்வந்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் துள்ளிக் குதித்தேன்!
அவர்கள் சொன்ன கதையை இங்கே பதிகிறேன்.
***********************************************

'மணமகள் கூற்று':

"பரங்குன்றான் பெருங்கருணை!"

கத்திவரும் சேவலது கொத்தவரும் பாம்பையெல்லாம் கொத்திக் கொத்திப் போடுது!
சீறிவரும் வேலதுவும் சீறிவரும் கொடும்பகையை சீறிப்பாய்ஞ்சு சிதைக்குது!
பறந்துவரும் மயிலதுவும் பறந்துவரும் கணைகளையும் பறந்துபறந்து மாய்க்குது!
கூடவரும் பூதப்படை கொடியவராம் அரக்கர்களை கொன்று சாய்த்துக் குவிக்குது!
என்னவனாம் முருகப்பன் கண்ணசைவில் கடிந்துவரும் பகையெல்லாம் பனியாக விலகுது!
மன்னவனாம் கதிர்காமன் மக்களையே காத்திடவே மனமிசைந்து வருகிறான்!
மனத்துள்ளே நிலைகொண்ட மகராசன் மனத்தினிலே மகிழ்ச்சி பொங்கச் செய்கிறான்!
சினமெல்லாம் தணிந்தபின்னே தேவியென்னைக் கைப்பிடித்து எனக்கிங்கே அருள்கிறான்!

'மனவேடன் கூற்று':

சினமெல்லாம் தணிந்திடவே வந்து நின்றேன் தணிகைமலை!
வருகின்ற அடியார்க்கு கேட்டவரம் தந்தபடி நின்றேன் சிலையாகி!
தெய்வயானை துணையிருக்க தமிழமுதம் பொங்கிவர களித்தேன் சிலநாளை!
என்நிலையை, ஏகாந்தம் குலைத்திடவே நாரதனும் வந்தான் எனைநாடி!

'வள்ளிமலை என்னுமொரு காட்டினிலே மலைக்குறத்தி உனையெண்னிப் பாடுகின்றாள்!
கள்ளமிலா உள்ளத்துடன் கன்னியவள் பரண்நின்று கவண்வில்லை வீசுகிறாள்!
கந்தனவன் சொந்தமென வருவானென வேட்டுவச்சி மனம்வெதும்பி வாடுகிறாள்!
உண்ணவில்லை! உறக்கமில்லை! உன்னையெண்ணிக் காடுமலை ஏறியவள் தேடுகிறாள்!

இப்போதே நீசென்று 'எண்ணத்தை மனம் நிறைக்கும்' கன்னியவள் துயர் தீரு!
தப்பாமல் நினக்கெனவே தவமிருக்கும் தனியாளின் தாகத்தைத் தணித்துவிடு!
தணிகைமலை அமர்ந்திருக்கும் நீயெழுந்து இப்போதே தவிக்கின்ற அடியாளைச் சேர்ந்துவிடு!'
எனச்சொன்ன நாரதனைக் கனிவோடு பார்த்திருந்து, கனிமொழியாள் முகம் பார்த்தேன்!

ஏறெடுத்து எனைப்பாரா ஏந்திழையாள் இப்போது நேரெடுத்து எனைப் பார்த்தாள்!
விழிமலரில் காதலுடன் விளக்கவொண்ணா பேரெழிலாள் எனைநோக்கி இது பகர்ந்தாள்!
"எல்லாம் அறிந்திருந்தும் எனைநோக்கிப் பார்க்கின்ற மர்மத்தை என்ன சொல்வேன்!
அங்கே தவமிருக்கும் மங்கைநல்லாள் என்னவளின் தங்கையென அறியாத கள்வனோ நீ!

யாமிருவர் நினைவேண்டி தவமிருந்த அன்றொருநாள் எமக்களித்த வரமின்று மறந்தனையோ!
தட்டாமல் இப்போதே தேவரீர் நீர் சென்று தங்கையினைக் கூட்டிவருக!
ஞானத்தின் வடிவழகாய் நாயகியாள் நானிருக்க, இச்சைக்கு வள்ளியென விதித்தவரே!
மோனத்தை வேலாக்கி ஆணவத்தை மயிலாக்கி அன்பரசு செய்கின்ற மன்னவரே!
' என்றாள்!

தனிவேலைத் தங்கவிட்டு, தங்கமகள் தெய்வானை தன்னிடத்தில் விடைபெற்று எழுந்தேன் நான்!
வனவேடன் வேடமிட்டு வனத்தினிடை செல்லுதலே நலமென்று நினைத்தந்த வேடம்பூண்டேன்!
காதல்மனம் கடிந்தேக, தாபமிங்கு பெருக்கோட தனிவேடனாய்த் தனியாளாய் நடந்தேன்!

காதலனைக் காணாமல் கனிமொழியாள் வருந்துகின்ற காட்சியினிக் காண்போம்!

அங்கே!....
*****************
[நாளை வரும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP