Friday, April 20, 2007

"நண்பர் சதீஷின் அழகு!"

"நண்பர் சதீஷின் அழகு!"

என் அழைப்பை ஏற்று என் நண்பர் சதீஷ்[வி.க.] அழகு பதிவொன்று அழகாக இட்டிருக்கிறார்.

தமிழ்மணம் அவரை விலக்கி வைத்திருப்பதை நான் அறிவேன்.

ஆனாலும், இந்தப்பதிவு ஒரு உயரிய பதிவென்பதால் உரிமையுடன் இதனை என் பதிவில் இட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

தமிழ்மணம் இதனைத் தள்ளாது என நம்புகிறேன்!

நன்றி.


"எனது இனிய நண்பர் எஸ்கே(சங்கர் குமார்) என்னை அழகு பதிவு போட அழைத்து இருந்தார். எஸ்கே பழக ரொம்ப எளிமையானவர். இனிமையானவர். என்னுடன் தொடர்ந்து நல்ல முறையில் பழகி வருபவர். சமீபகாலமாக அவரை சாட்டில் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை! அவர் உடல் நலத்தோடு நூறாண்டுக்குமேல் வாழவேண்டும். "


http://karuppupaiyan.blogspot.com/2007/04/blog-post_17.html
--

Read more...

Tuesday, April 17, 2007

அ.அ. திருப்புகழ் -- 18 "அல்லில்"

[ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18 "அல்லில்"

அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை

கல்லினேர அ வழிதோறுங்
கையு நானுமு லையலாமோ

சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா

வல்லி மாரிரு புறமாக
வள்ளி யூருறை பெருமாளே.

வழக்கம் போல், பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய"

எம்போல யாருண்டு எமை வெல்ல எவருண்டு
தேவரும் எம்முன்னே திகைத்து நிற்பர் எனத்
தம் வீரம் தம் திறனைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்து நின்ற சூரர்படை அயர்வுறவும்,

"ஊர்கெட விடும் வேலா"

அப்படிச் சொல்லிய அந்த அவுணர்கள்
வாழ்ந்து வந்த ஊரே அழியும்படி
தன்னுடைய வீரவேலை அவர்பால்
செலுத்தி அவர்களை அழித்தவரே!


"வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே."


கஜவல்லி எனும் தெய்வானையும்
வனவல்லியெனும் வள்ளியம்மையும்
தன்னிருபக்கமும் தகைவாய்த் திகழ
வள்ளியூரென்னும் தலத்தில் திகழ்பவரே!


"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"


இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்

அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!

"கல்லினேர அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ?"


கல்லும் முள்ளும் நிறைந்த பாதை
அதுவே நமை இழுக்கும் மாயையின் பாதை
அவ்வழி செல்லுதல் எனக்குக் கூடாது
என் ஒழுக்கநிலையும் தவறலாமோ?

[என்னைக் காத்தருள்வது
நின்னருட் கடனே!]


அருஞ்சொற்பொருள்


அல்= இரவு

அ= அந்த

கை=ஒழுக்கம்

தொய்ய= அயர்வுற

வேலும் மயிலும் துணை!


முருகனருள் முன்னிற்கும்!


அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"--11

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 11

2007 பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது!

திருவெம்பாவை எழுதத் தொடங்கியபின் , மயிலை மன்னாரைப் போய்ப் பார்க்கவேயில்லை என்ற எண்ணம் திடீரென மனதில் தோன்றி உறுத்தியது.

அதற்குக் காரணமும் இருந்தது.[??]

எப்படிப் போய் அவனைப் பார்ப்பது என்ற அச்சம் இருந்தாலும், அவனைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்ற ஆவல் மிகவும் உந்தவே, அடுத்த நிமிடம் மயிலாப்பூர் மாடவீதியில் நின்றேன்!

சொல்லாமல், கொள்ளாமல் வந்தாலும் கொஞ்ச நேரம் குளத்தைச் சுற்றி வந்தால் எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

எங்கும் காணாமல் மனம் நொந்து, இன்னொரு தடவை சுற்றலாம் என நினைத்து, ஒரு 2 ரூபாய்க்கு சூடான வறுத்த வேர்க்கடலை வாங்கி, அதைக் கொறித்தவாறே நடந்தவனின் முதுகில் பளாரென ஒரு அடி விழுந்தது!

"இன்னாப்பா! ஆரைத் தேடிக்கினு இங்கே சுத்தறே? நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே? இன்னா வோணும்?" என்று நக்கலாகக் கேட்டபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!

"இல்லே மன்னார்! உன்னைப் பார்த்து நாளாகி விட்டதே என்றுதான் சுற்றிக் கொண்டிருந்தேன்" என்று அசடு வழிந்தேன் நான்!

"சரி! இன்னா சமாச்சாரம்? இப்ப எதுக்கு என்னியத் தேடிக்கிணு வந்தே? சொல்லு!" என்று அன்பாகக் கேட்டான் என் நண்பன்.

"திருக்குறள் அதிகாரம் எழுதி நாளாச்சு. காமத்துப் பாலில் இருந்து ஒரு அதிகாரம் நீ சொல்லி நான் எழுதணும்னு ஆசை! அதான்..." என்று தயக்கத்துடன் இழுத்தேன்!

"ப்பூ! இத்தானா! இதுக்கா இப்படி பம்மறே! மொதமொதலா காமத்துப்பால் எளுதப்போறேன்ற! அதுல இன்னால்லாமோ ஸொல்லிருக்காரு அய்யன்! பொண்ணு தனியா பொலம்புது, காதலன் தவிக்கறான்! ரெண்டு பேருக்கும் இன்னென்னமோ அட்வைஸ் கொடுக்கறாரு. ஸரி! நீ கேட்டுட்டே! ஒரு காதலன் காதலி ரெண்டு பேருமே ஸொல்ற மாரி ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. அத்தைச் சொல்றேன். எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்!


"புணர்ச்சி விதும்பல்னா, காதலின்பத்தைச் சொல்றதுன்னு அர்த்தம். மொதல்ல காதலி ஒரு 8 பாட்டு சொல்றா. பொறவால, காதலன் கடைசி 2 பாட்டு." என்றவாறு தொடங்கினான்.

இனி வருவது குறளும், அவன் விளக்கமும்!

"அதிகாரம் 129." "புணர்ச்சி விதும்பல்"

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு." [1281]

"இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்!... ஒனக்குக் கிடைக்குது. அத்தப் பாக்கற! வெள்ளையா இருக்கு. மூந்து பாக்கற! ஒரு கப்பு அடிக்குது! இத்தயா குடிக்கப்போறோம்னு நினைக்கறே! மூக்கைப் பிடிச்சுகிட்டு கப்பு கப்புன்னு அடிக்கறே! வவுத்தைப் பொறட்டுது மொதல்ல. கொஞ்சம் ஊறுகாயை எடுத்து நாக்குல தடவி, அந்த டேஸ்டை மாத்தறே! காவ் காவுன்னு ரெண்டு ஏப்பம் வுடறே! கொஞ்ச நேரம் களிச்சு , .... அப்பிடியே மெதக்குறே! ஒலகமே நல்லாத் தெரியுது ஒனக்கு! ரொம்ப சந்தோசமா இருக்கே!

ஆனா, இதெல்லாம் எப்ப வருது? எல்லாம் உள்ளே போனதுக்கு அப்புறமாத்தான்.
ஆனா, காதல்ங்கறது அப்பிடி இல்லை! ஆளை நெனைச்சவுடனேயே, ஒரு கிக் வருது! பார்த்தவுடனேயே ஒரு சந்தோஷம் வருது! இதான் காதலோட மகிமை! கள்ளை விட சிறந்தது காதல்!"


"தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்." [1282]


"எனக்கு அவரை நினைச்சாலே இம்மாம் அளவுக்கு காதல் பொங்குது மனசுல. ஒரு பனைமரம் அளவுக்கு உசருது என் உள்ளத்துல. இது இப்படியே இருக்கணும்னா, நான் துளிக்கூட அவரைப் பத்தி தப்பா நினைக்கக் கூடாது! 'அவரு என்னிய இன்னும் வந்து பாக்கலியே, நேத்துப் பார்த்த போது எங்கிட்ட ராங்கு பண்ணினாரே'ன்னு தோண ஆரம்பிச்சு அவரு மேல கோவம் வர ஆரம்பிச்சுதுன்னா, அவ்ளோதன், 'புஸ்'ஸுன்னு அல்லாம் எறங்கிடும்.அவரு பத்தின நல்ல நினைப்ப அப்பிடியே உசரமா வெச்சுக்கணும்!"

"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல் கண்." [1283]

"என்னைக் கட்டிக்கிட்டவரு[கொண்கன்] என்னை மதிக்காம, அவரு இன்னா நினைக்கறாரோ, அப்பிடியே அவர் மனசுபோல செஞ்சாலும், அவரைப் பார்க்காம இருக்க இந்தப் பாளும் பொம்பளை சென்மத்தால இருக்க முடியலியே!இந்தக் கண்ணு அவரையே தேடுது!"

"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு." [1284]


"அவர்கூட சண்டை போடணும்னுதான் மனசுல நினைச்சுகிட்டு அவரைப் பார்க்கப் போனேன். ஆனா, பாவிமவ, அவரைப் பார்த்தவொடனியே அல்லாம் மறந்து அவரைக் கட்டித் தளுவணும்னு மனசு கிடந்து துடிக்குது! சே இன்னா பொளைப்பு இது!"

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து." [1285]

"கண்ணுக்கு மை தீட்டலாம்னு ஒரு குச்சியை எடுத்து, மைதடவி, கண்ணு மேலே தீட்ட ஆரம்பிச்சேன். கண்ணாடி முன்னே நின்னு மை தடவும் போது,கண்ணு மேலியே என் கண்ணு நின்னுது. கோலை.. குச்சியைப்... பார்க்கவே இல்லை! அதே போல, அவரைத் திட்டணும்னு பலதை நினைச்சுகிட்டு இருந்தாலும், அவரு.. அதாங்க என்னைக் கொண்டவரு.. அவரைத்தான் "கொண்கன்"னு ஐயன் ஸொல்றாரு... எதிர்க்க வந்து நிக்கும் போது அவரைத் தவிர, வேற் எதுவும் நெனப்புல வரவே மாட்டேங்குது! குத்தம்ங்க்ற 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"

"காணுங்கால் காணேன் தவறாய் காணாக்கால்
காணேன் தவறல் லவை." [1286]

"அந்த மனுஷன் என்னெதிர்ல நிக்கறப்ப, அவரோட குத்தம் எதுவுமே மனசுல வர மாட்டேங்குது1 அவர் இல்லாதப்ப, அவரு பண்ணின தப்பில்லாத எதுவுமே நெனப்புக்கு வர மாட்டேங்குது! இது எப்படின்னு எனக்குப் புரியவே இல்லை!"

"உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து." [1287]

"இப்ப தொபுக்கடீர்னு போய் ஒரு ஓடற ஆத்துல குதிக்கறோம்! அது இன்னா பண்ணும்? நம்பளை அப்பிடியே இளுத்துகிணு போவும்! அது தெரிஞ்சும் அதுல குதிக்கிறோம்! அது போல, அவரோட சண்டை போட்டாக் கூட, அது நிலைக்காது, நான் அவரோட சமாதானமாயி கூடவே போயிடுவேன்னு தெரிஞ்சும், சண்டை போடற மாரி நடிக்கறேனே?"

"இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே உள்வநின் மார்பு." [1288]


மொதப் பாட்டுல.... குறள்ல... கள்ளைச் சொல்லி ஆரம்பிச்சாங்க இந்தத் தலைவி.... [கீதாம்மாவைச் சொல்லலை]!! இப்ப கடைசிப் பாட்டிலியும் அதே கள்ளை உதாரணம் ஸொல்லி முடிக்கறாங்க!
"ஏ கள்ளப்பயலே! கள்ளைக் குடிச்சா, அதால கெட்ட பேர்தான் வரும். இருந்தாலும் திரும்பவும் அதைக் குடிக்கணும்னு ஆசைதான் வருது. அதே போல, உன்கூட சேர்றது எனக்குக் கெட்டதுதான்னாலும், எம்மனசு கிடந்து உன்னோட மார்பைத் தளுவறதுக்கே திரும்பத் திரும்ப ஓடுது! இத்த் இன்னா பண்ணாத் தாவலை!"


இத்தைக் கேட்டுக்கினே நம்ம ஆளு வரான்! ஒரு ரெண்டு பாட்டு தலைவன் ஸொல்றான்!

"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்." [1289]

"காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது! என்னியப் போல அதை அனுபவிச்சவங்க இந்த ஒலகத்துல ரொம்பக் குறைஞ்ச பேர்தான் இருப்பாங்க!"

"கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னிலும் தான்விதுப் புற்று." [1290]

"என்னியப் பார்த்தவொடனே அவ கண் கலங்கித் தவிச்சா. ஆனா, அடுத்த நிமிசமே அத்தை மறந்திட்டு, என்னியவுட ரொம்ப வேகமா என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டா! அவளோட அன்புக்கு முன்னால என்னுதுல்லாம் ஒரு தூசுக்கு சமானம்!"

எல்லாம் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான் மன்னார்.

"என்ன ஆச்சு?' என வினவினேன்.

"இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு. ஒன்னியப் பார்த்த குஷில அத்த மறந்துட்டேன். இப்ப நான் போவணும். இல்லேன்னா அது சங்கடப்படும்" என்றான்.

"அதுவும் சரிதான். அண்ணியைக் கேட்டேன்னு சொல்லு." என்று சொல்லியபடி அன்புடன் விடை கொடுத்தேன் என் ஆசை நண்பனுக்கு.... டீ, மசால்வடை சாப்பிடாமலேயே!

மீண்டும் அடுத்த வாரம்!!

Read more...

Friday, April 13, 2007

அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!


அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!

அழகென்றால் குமரனே
அவனழைத்தான் என்னையே
அழைத்ததும் தெரிந்தது
அடுத்தவர் சொல்லித்தான்!

குமரன் அழைப்பு இப்படித்தான் வரும்
ஆரவாரமாக வருவதில்லை
அழைப்பதும் புரிவதில்லை
அறிந்துகொண்டால் அமைதி வரும்

அவனழைப்பை நாடி இங்கு
ஆவலுடன் எதிர்பார்த்து
அனுதினமும் காத்திருத்தல்
அதுவே முதலழகு!

நாம் பிறந்தது நம்மால் அல்ல!நம்மைப் பிறப்பித்தவர் வேறு எவரோ!அவர்கள் மகிழ்வுக்காக ஒரு சில ஆண்டுகள்! அவர்களே தெரிந்தெடுத்தோ, அல்லது நாமே தேர்ந்தெடுத்தோ நமக்கு ஒரு வாழ்வு அமைகிறது. இதுதான் நம் வாழ்வு! இது சிறப்பதும், சிறுப்பதும் இனி என் கையில்! இது சிறக்க என்னால் ஆன அத்தனையும் செய்வது....செய்தது... அடுத்த அழகு!

எனக்குத் தெரிந்தது இந்த ஒரு வாழ்வு மட்டுமே! இந்த உலகம் எனக்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. எனக்காக மட்டுமே!
இதை இப்போது அனுபவிக்கவில்லையென்றால் எப்போது அனுபவிப்பது!
மனதுக்குச் சரியென பட்ட அனைத்தையும், அடுத்தவருக்குக் கூடிய மட்டும் அதிகமாகத் தொந்தரவு கொடுக்காமல், நம்மால் இன்பம் இல்லாவிட்டாலும் துன்பம் வராதபடி பார்த்துக் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்!
பார்க்க முடிந்த மனதுக்கு இதமான அனைத்து இடங்களையும் பார்த்து விட வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படாமல்! கூட வர எவர் விருப்பப்பட்டாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு!
அதில் இருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!
அத்தனை உலகும் வண்ணக் களஞ்சியம்!"

இதுவே மூன்றாம் அழகு!
இதில் இருக்க எனக்கும் ஒரு துளி இடத்தை கொடுத்த சாயி ......!உனக்கு நன்றி!

கண் நிறைந்த மனையாள் அழகு!
கருத்தொருமித்த காதல் அழகு!
களங்கமில்லாக் குழந்தை அழகு!
கைகொடுக்கும் நண்பர் அழகு!
கபடமில்லா உறவழகு!
காலமெல்லாம் இதையளிக்கும்
கந்தனவன் மிக அழகு!
இதுவே என் நான்காம் அழகு!

"அத்தெல்லாம் சர்தாம்ப்பா! நம்மளை விட்டுட்டுட்டியே! கூடமாட எப்பவும் உங்கூட இருக்கறது நாந்தானே! ஒனக்கு எதுனாச்சும் ஒண்ணுன்னா ஒடனே வர்றது ஆரு? ஐயனைக் கூட்டிக்கிட்டு ஒனக்கு ஒதவி பண்றதுக்கு ஓடி வர்றதுக்கு என்னிய வுட்டா ஆரு இங்கே! ஒனக்கு இம்ம்புட்டு எளுதறதுக்கு ஒதவி பண்றது ஒலகத்துலியே மொத மொதலா வந்த தமிழ்தாங்கறத மறந்துறாத! நீயே என்கிட்ட எத்தினி வாட்டி சொல்லியிருக்கே! தமிழும், தமிழ்நாடும்தான் ஒனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு! அதனால கடசியா சொன்னாலும் இதான் ஒனக்கு ரொம்பவும் அழகானதுன்னு ஒன் சார்புல சொல்லிக்கறேன்"
என்கிறான் என் இனிய நண்பன் மயிலை மன்னார்!

ஷைலஜா, அன்புத்தோழி, மற்றும் என் இனிய நண்பர் ............சென்ற முறையே என்னைடம் உரிமையாக அன்புடன் கோபித்துக் கொண்ட...... சதீஷையும் அழைக்கிறேன் ... அழகு பற்றித் தொடர!

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Read more...

Thursday, April 12, 2007

"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"




"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"








காலை நேரமிது
கனவெல்லாம் நனவாக
களிப்புடனே கிளம்புகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அன்னையவள் அன்புடனே
ஆசையாய் உணவெடுத்து
அன்புடனே அனுப்பி வைப்பேன்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

வாகனங்கள் இங்குமங்கும்
வேகமாய்ப் போய் வரும்
வழிமீது விழி வைத்து நீ
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அப்பா! நான் போயிட்டு வரேன்
என்று சொல்லி என் மகளே
அக்கறையாய் இறங்குகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

ஆ! இதென்ன! என்ன நிகழ்கிறது?
அப்பக்கம் இப்பக்கம் எதுவுமே பாராமல்
இப்படி ஓடுகிறாளே அலட்சியமாய் என் மகள்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஐயோ! இதுவென்ன்ன சத்தம்!
காரொன்று "கிறீச்"சுகிறதே!
உனக்கேதும் ஆகவில்லையே?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏனிந்த மயான அமைதி?
என்ன நடந்து விட்டதிங்கு?
ஏன் எல்லாரும் எனைப் பார்க்கின்றனர்?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏதோ விபத்து நடந்திருக்கிறது!
ஏன் என் மகள் இன்னும் பஸ் ஏறவில்லை?
அவளுக்கு ஏதும்.........................
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

அரைபட்டுக் கிடக்கிறாள் அன்புமகள்
கைபிசைந்து நிற்கின்றார் காரோட்டி
கையில் தவழ்ந்த மகளைக் கையிலெடுத்து...:(
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

காலையில் கிளம்புகையில் நினைத்தேனா?
கனிமொழியைப் பறிகொடுப்பேனென்று
காதல் மனைவிக்கு என் சொல்வேன்?
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரமாய் அள்ளுகின்றேன்
அசைவில்லை அவள் உடலில்
அரற்றுகின்றேன் நானினிங்கு
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரப்பிரிவில் என் மகள்
அறுவைச் சிகிச்சை நடக்கிறது
உயிருக்கு உத்திரவாதமில்லை
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

கையைப் பிசைந்த வண்ணம்
காப்பாற்ற முடியவில்லையென
சொல்லியங்கே செல்கின்றார்... இனி என்ன?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

போகும் வழியிலே பயமில்லை இனி
யாரும் உனைத் தொந்தரவு செய்ய மாட்டார்
வாகனங்கள் ஏதும் வேகமாக வாராது
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

செல்லுகின்ற வேளையிலும்
உயிரதனைப் பிரிந்தாலும்
இதயத்தைத் தானம் தந்தாய்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நீ எம்மைப் பிரிந்தாலும்
இனியின்றிப் போனாலும்
"உன்னிதயம்" வாழுமிங்கு
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நினைவெல்லாம் நீயாக
உயிரெல்லாம் உனதாக
உனை எண்ணி வாழ்ந்திருப்போம்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது; அவளும் கடைவழி செல்கின்றாள் என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்காகவும், அவர் குடும்பத்தினர்க்காகவும் ஒரு நொடி பிரார்த்தியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்]





இதற்கு மேல் தொடர மனமில்லை.
இதைக் கேளுங்கள்!




"நாம் எவ்வளவு நல்லவர் என்பது இல்லை; எவ்வளவு நல்லது செய்தோமென்பதே" --அனுஷா வாஸுதேவா

Read more...

Tuesday, April 03, 2007

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"

யாரென்றும் தெரியாது
எனக்கென்றும் பதியாது
இருந்தாலும் அன்போடு
அழைத்திட்டார் அன்புத்தோழி!

முன்னமே பதிந்தாலும்
எண்ணமெலாம் உரைத்தாலும்
அன்புத்தோழி அழைத்ததால்
மீண்டும் பதிகிறேன் வியர்டு!!

சுருக்கமாகச் சொல்லுகிறேன்
இறுக்கத்தை இன்று விட்டு
விருப்பமான வியர்டுகளை
பொறுத்திருந்து கேட்டிடுவீர்!

பெண்களின் பாதம் பார்க்கப் பிடிக்கும்
கண்களின் காதல் தெரியத் துடிக்கும்
நண்பரின் நலம் பேணப் பிடிக்கும்
துன்பத்தில் துவளா மனம் பிடிக்கும்
இன்பமாய் என்றும் இருந்திடப் பிடிக்கும்
அன்புத்தோழியின் மனம் பிடிக்கும்!

இதுவே எனது இன்னொரு வியர்டு ஆறு!
பொதுவாகச் சொல்லி விட்டேன்
பதமாக விரித்துரைக்க மனமில்லை
இதமான அன்புத்தோழிக்கென இந்தப் பதிவில்!

நன்றி!
வணக்கம்!

Read more...

Sunday, March 25, 2007

"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"


சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]

"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"


அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]


"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"

முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்

"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"

பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்


"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"

நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்


"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"

தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்


மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]


"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"


நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்


"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"

நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

அருஞ்சொற்பொருள்:

அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த

ஜீமுதம்= மேகம்
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி

[இன்று மாத சஷ்டி பூஜை செய்ய வேண்டியிருந்ததால் இருபகுதிகளாக வெளிவர நேரிட்டது! இப்பாடலை ஸ்ரீராகத்தில் பாடுதல் உகந்தது எனச் சொல்லுவர்.]


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Read more...

Saturday, March 24, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.



எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"


ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,

தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"

என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!

அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,

"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"

பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.

பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்

ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.

'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,

"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,

முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை

எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!


"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"

தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட

கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!


[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]

"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."


எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!

[மீதிப் பகுதியும், அருஞ்சொற்பொருளும் இன்றிரவு வரும்!]

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Read more...

Friday, March 23, 2007

"நான் ஒரு வியர்டுங்க!"

"நான் ஒரு வியர்டுங்க!"

கோவியார் அழைத்திருந்தார்
கோக்குமாங்கு பதிவொன்று போடும்படி
மணிகண்டனும் மடலிட்டார்
மறைகழன்ற விதம் சொல்ல

வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்
செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது
சரி, இது வைத்தே சொல்லுவோம்
என்றிங்கு வந்து நான் என் வியர்டை
சொல்லுகிறேன் கேட்டிடுவீர்!

இதாங்க! இதுதான் என்னோட பெரிய வியர்ட்!

என்ன சொன்னாலும் உடனே அது ஒரு நாலு வரிக் கவிதையா [கொத்ஸ் இதைக் கவுஜ எனச் சொல்லுவார்!] சொல்றதுதான் என்னோட முதல் வியர்ட்னெஸ்!

இரண்டாவது வியர்ட்.... இருங்க! என் மனைவி என்னமோ சொல்றங்க! என்னது? ஆங்! சரி! சரி! சொல்லிடறேன் நீ போய்ப் படு!
ஒண்ணுமில்லீங்க

எந்தப் பாட்டைக் கேட்டாலும் சரி!
உடனே இது மாதிரி, இதே சாயல்ல இருக்கற ஒரு பழைய பாட்டை குடைஞ்சு, குடைஞ்சு கண்டு பிடிக்கற வரைக்கும், காதைப் பொத்திகிட்டு, அந்த ட்யூனை மனசுலியும், வாயாலியும் பாடிப் பாடி, எல்லாரையும் ஒரு வழியாக்கி, எரிச்சல் படுத்தி, உனக்குத் தெரியுதா, உனக்குத் தெரியுதான்னு தொளைச்சு, அது கண்டு பிடிக்கற வரைக்கும் ஓய மாட்டேன்!
கடைசியில் கண்டுபிடித்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இருக்கே, அது குடும்பமெல்லாத்துக்கும் பரவும்!

அடுத்தது, மூணாவது,
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அதுல முழு ஈடுபாட்டோட இறங்கி, அது முடியற வரைக்கும், சோறு, தண்ணி பாக்காம, குடும்பத்தைக் கவனிக்காம, பணத்தைப் பத்திக் கவலைப்படாம, குதிச்சிடுவேன்![உ-ம்: திருவாசகம் இன் ஸிம்ஃபொனி]
இதுல தோல்வியும் வரும்; ஜெயமும் வரும்!
தோல்வி வரும் போது தனியா அனுபவிப்பேன். எல்லார்கிட்டேயும்[ஈடுபடுத்தின அத்தனை பேருகிட்டேயும்] தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.
வெற்றி பெற்று விட்டாலோ, அவ்வளவுதான்!
என்னைப் பிடிக்கவே முடியாது!
பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டிதான்!
பிரமாதப் படுத்திடுவேன்!!

நாலாவது!
கொஞ்ச நாளா, முடி கொட்டி வழுக்கை வர ஆரம்பித்தது!
க்ளோஸா கட் பண்ணி சமாளிச்சேன்.
போன வருஷம், இந்தியா போன போது, குலதெய்வம் கோயிலுக்குப் போன போது முடி இறக்கினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சுது!
சரின்னு, அப்படியே விட்டு விட்டேன்!
ஆமா!
இப்போ நானும் மைக்கேல் ஜோர்டான் ஸ்டைல்தான்!
மொட்டை!
பெர்மனென்ட் மொட்டை!
இது மாதிரி தடாலுன்னு முடிவெடுக்கறதுல நான் மன்னன்!

கடைசியா அஞ்சாவது!
இதுல கூட ந்நான் வியர்டுன்னு காட்டப் போறேன்!
ஆமாம்
அஞ்சு A, அஞ்சு B ன்னு ரெண்டு சொல்லப்போறேன்!

அஞ்சு A :
இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!
இதை என் மனைவிகிட்ட இன்னிக்குத்தான் சொன்னேன்!
சரிதான் போடான்னு சொல்லிட்டு [நிஜமாவே!!]திரும்பிப் படுத்துத் தூங்கிட்டாங்க!
அஞ்சு B :
யார் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது! இதனால எனக்கும், என் மனைவிக்கும் எத்தனையோ சண்டை வந்திருக்கு! சொல்றது யாரு? நம்ம ஆளுதானேன்னு அவங்களை சமாதானப் படுத்தினாலும், கெட்ட பேரு என்னவோ எனக்குதான்!... ரெண்டு பக்கத்துலியும்!
அதைப் பத்திக் கவலைப்படாம காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அவ்ளோதாங்க!

யாரையெல்லாம் கூப்பிட்டு இருக்காங்கன்னு தெரியாததால, இதோ எனக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரைக் கூப்பிடறேன்!

பத்மா அர்விந்த்

ஜெஸிலா

லிவிங் ஸ்மைல் வித்யா

செல்வநாயகி

குமரன்


இதையே அழைப்ப எடுத்துகிட்டு அஞ்சு பேரும் வந்து சொன்னா,, மகிழ்வேன்!

பாக்கறவங்களும் அவங்களுக்கு சொல்லிடுங்க!

அப்பாடா!
என் ராஜ்ஜியத்திலாவது 80% ஒதுக்கீடு கொடுத்து விட்டேன்!
சீக்கிரம் என்னை பிரதமர் ஆக்குங்கப்பா..ம்மா!!
:))
மீண்டும் கோவியாருக்கும், மணிகண்டனுக்கும் நன்றி!

இந்தியா நாளை ஸ்ரீலங்காவை வெல்ல வாழ்த்துகள்!

Read more...

Thursday, March 22, 2007

பெயர் சூட்டு விழா--VSK[வீயெஸ்கே]




பெயர் சூட்டு விழா!!

நிகழும் விய வருடம் பங்குனி மாதம் 9-ஆம் நாள் வெள்ளிக்கிழமை நன்நாளில்,

இதுவரை "எஸ்கே" என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட சங்கர்குமார் என்கின்ற நான்,

ஏற்கெனவே வலைப்பூவில் இன்னொரு எஸ்.கே என்கின்ற "புள்ளி" வைத்த மூத்த பதிவர் இருக்கின்ற காரணத்தால்,

இன்று முதல்,

வீயெஸ்கே[VSK]

என புதுப் பெயரால் உங்கள் அனைவரின் ஆசியோடும், அன்போடும் வரவிருக்கிறேன்
என்பதை அறிவித்துக் கொள்கிறேன்!!!

மறந்துவிடாதீர்கள்!

எஸ்கே, இனிமேல்

வீயெஸ்கே!!!!!!!!!!!! [vsk]

அனைவரும் வந்து அன்பளியுங்கள்!

Read more...

Monday, March 12, 2007

"திருமுருகாற்றுப்படை"

"திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!

ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.

கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"

எனச் சொல்லி,

ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,

இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"

தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!

என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?

பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.

அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.

"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],

தாளையும்[4],

கையையும் [5], உடையனாகித்

தெய்வயானைக்குக் கணவனாகி[6],

மாலை அசையும் மார்பனாகிக்[11],

காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],

சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],

அவன் தங்குமிடத்துக்கு[[63],

வழியை விரும்பினையாகில்[64],

உன்னுடைய ஆசைப்படியே[65],

இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],

இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],

அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],

அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],

அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],

அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],

அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],

அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],

வெறியாடும் இடங்களிலும்[222],

காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],

இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],

முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],

ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],

கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],

என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],

நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],

நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],

பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],

அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],

தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],

"அஞ்சவேண்டாம் புலவரே[291],

நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],

உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],

அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],

என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.

முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]


"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, March 08, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

Wednesday, March 07, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!

[இன்னும் வரும்!]

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

Wednesday, February 28, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! 11

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]
"படைச் செருக்கு" [771]


இந்த லப்-டப் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தேன்... இப்பவெல்லாம் மன்னாரைப் போய் பார்க்கவே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இன்றைக்கு எப்படியாவது பார்த்துடணும்னு முடிவு பண்னி, அவனைத் தேடி 23B பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி, சூடான வேர்க்கடலை ஒரு 2 ரூபாய்க்கு வாங்கி, கொரித்துக் கொண்டே வழக்கமான டீக்கடை நோக்கி நடந்தேன்.

திடீரென ஒரு கரம் என்னை இழுத்து ப்ளாட்ஃபாரத்தில் தள்ளியது.
அதே நேரம், "ஸர்"ரென்று ஒரு பஸ் என்னைத் தாண்டிச் சென்றது!

"இன்னாப்பா! வூட்ல சொல்லிக்கினு வண்ட்டியா? என் பஸ்தானா ஒனக்குக் கெடச்சது அதுக்கு.... சாவுக்கிராக்கி" என்ற மாமூல் திட்டுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

சற்று சுதாரித்துக் கொண்டு யார் நம்மைக் காப்பாற்றியது எனப் பார்த்தால்... சாக்ஷாத் மயிலை மன்னார்!

"ஒரு ஸெகண்டு வுட்ருந்தா இன்னா ஆயிருக்கும்! பாத்து வரக்கூடாது ஸங்கரு! ஸரி ஸரி.. வா! கெதி கலங்கிப் போயிருக்கே! நாயர் கடைல டீயும், வடையும் துன்னியானா அல்லாம் ஸரியாப் பூடும்" என ஆதரவாய்ச் சொல்லிக் கொண்டே என்னைக் கூட்டிப் போனான், மன்னார்.

'ஆமா! அப்டி இன்னா தல போற விசயம் யோஸிச்சிகினு இருந்தே! சொல்லு!' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! உன்னைப் பர்த்து நாளாகி விட்டதே. இன்று எப்படியும் பார்த்து விடணும்னு வந்தேன். கொஞ்சம் அஸால்ட்டா இருந்துட்டேன். ரொம்ப நன்றிப்பா!' என்று மஸால் வடையை கடித்துக் கொண்டே ஸொன்னேன்!

'அதான் நாம ஒனக்கு ஒரு ஸோல்ஜர் மாரி இருக்கோம்ல! எங்ஙன போனாலும் வுட்ட்ருவோமா? சமயத்துல ஸோல்ஜர்! ஆனா நெஸமாலும் ராஸா!' என்று சற்று மிதர்ப்பாக சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

இப்படி ஒரு ஆளு எனக்கு நண்பனாய் இருப்பதற்கு, இல்லை இல்லை ராஜாவாய் இருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, 'இதே மேட்டர்ல ஒரு குறள் சொல்லி பொருளும் சொல்லேன்' என்றேன் நான்.

'அவ்ளோதானே! என்னிய மாரி ஒர்த்தன் ஒனக்கு இருக்கான்றதை நீ எப்படி போயி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்னு ஒரு குறள்..... வேணாம்... கதை ஒண்ணு சொல்றேன், எளுதிக்கோ!" என்றான்.


இனி வருவது, அவன் சொல்ல, நான் எழுதி உங்கள் முன் வைப்பது!

"அதியமான், அதியமான்னு ஒரு ராஸா இருந்தானே, தெர்யுமா? அதாம்ப்பா! நம்ம அவ்வைப்பாட்டிக்கு கூட நெல்லிக்கா கொடுத்தன்னு படிச்சோமே நம்ம இஸ்கூல்ல! அவந்தான்!

அவனும், இந்த அவ்வையாரும் ரொம்பவே தோஸ்துங்க. நீயும், நானும் மாரின்னு வெச்சுக்கயேன்!

எதுனாச்சும் ஒண்ணுன்னா, இவன் அந்தம்மாவுக்கு ஒதவி பண்றதும், அவனுக்கு எதுனாச்சும் புத்தி சொல்லணும்னா இந்தம்மாவைக் கேக்கறதும், அவங்க அத்தினி வேலையையும் போட்டுட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதும் .... அப்படியே ரொம்ம்ம்ம்ப ஃப்ரென்ட்ஷிப்பா இருந்தாங்க.

இந்தம்மா அவனோட வீரத்தைப் பத்தில்லாம் நெறையவே பாட்டெல்லாம் பாடியிருக்கு!

ஒருநாளைக்கு அடுத்த ஊர்ல இருக்கற, தொண்டமான்ங்ற ராஸா ஒர்த்தன்.. இன்னாமோ இவன்ட்ட கோவிச்சுகிட்டு, பலான பலான தேதிக்கு நான் ஒன் நாட்டு மேல படையெடுக்கப் போறேன். ஒன்னால ஆனத செஞ்சிக்கோன்னு ஒரு ஓலை வுட்டான்.

அதியமானும், வலுச்சண்டைக்கு போறதில்லை; வந்த சண்டைய வுடறதில்லன்னு சண்டைக்கு ரெடியாயிட்டு இருக்கான்!

ஆனாக்காண்டி, நாட்டுல கொஞ்சம் நெலமை மோசமாயிருந்திச்சு அப்ப.

கொஞ்சம் பஞ்சம்,
மக்கள்ல்லாம் பசி, பட்டினின்னு பஞ்சம் பொளைக்கப் போயிருக்காங்க!

இந்த சமயத்துல, சண்டை வேணாமேன்னு அவ்வையாரம்மா நெனைக்கறாங்க.

"தா! நீ கொஞ்சம் கம்முனு இரு. ஒன் வீரம்ல்லாம் எனக்குத் தெரியும் நல்லாவே! ஆனா, அது இப்ப வேணாம்! நா போயி இன்னா, ஏதுன்னு கண்டுகினு வரேன்'ன்னு சொல்லிட்டு தொண்டமான் ஊருக்கு வராங்க!

'ஆஹா! எப்பவும் நம்ம ஊருக்கு வராத கெளவி இப்ப நம்மைத் தேடி வந்திருக்காங்களே'ன்னு ராஸாவுக்கு ஒரே குஷியாப் பூடுச்சு!

தடபொடலா விருந்து வைக்கிறான்!

ராஸான்னா, அவனைப் பத்தி எதுனாச்சும் பாடணுமே!

'இன்னாடா பாடறது. நம்ம ஆளை வுட்டுக் கொடுக்காம நாம இவனைப் புகழ்ந்தும் பாடணுமே'ன்னு யோசிக்கறாங்க!

அப்ப, இந்த ராஸா இன்னா பண்றான்; ....அவனோட கத்தி கபடால்லாம் வெச்சிருக்கற எடத்துக்கு கூட்டிகினு போயி காமிக்கறான்.

'பாட்டியும் பாக்கட்டும், பார்த்தா, போயி, அதியமான்ட்ட சண்டை இல்லாம பணிஞ்சுறச் சொல்லிடும் இந்த அம்மா'ன்னு ஒரு கணக்கு போடறான்.

அங்க பாத்தா, வேலு, வில்லு, அம்பு, கத்தி, கேடயம், ஈட்டின்னு அளகா அடுக்கி வெச்சிருக்கு.

பாட்டிக்கு டமார்னு ஒரு ஐடியா கிடைக்குது!
பாடறாங்க!

"இங்கே பார்த்தா, மாலை சூட்டி, பொட்டு வெச்சு, எண்ணை தடவி, சும்மா பளபளான்னு பட்டை தீட்டி, புச்சா, இத்தினி அடுக்கி வெச்சிருக்கே ராஸாவே!

ஆனா, அங்கே அதியமான்ட்ட போயி பார்த்தியானா, சதா சண்டை போட்டு, சண்டை போட்டு, அவன் கத்தில்லாம் ஒடஞ்சி போயி, ஈட்டில்லாம் முறிஞ்சி போயி, காயலான் கடைல கீற மாரி குமிஞ்சு கெடக்கு.

இதுலேர்ந்து இன்னா தெரியுதுன்னா, சண்டைன்னா அவன் ஒரு கை பாக்காம வுட மாட்டான்.

ஆனா, ஒர்த்தன் கிட்ட ஒண்ணும் இல்லியா அவனோட சேர்ந்து போயி இவன், தன் சோத்தையும் வெச்சு அவனோட சாப்பிடுவான்!

ஆகக்கண்டி,....இன்னா....உன் வேலெல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு"

அப்பிடீன்னு ஒரு பாட்டு பாடறாங்க!

அவ்ளோதான்!

ராஸாவுக்கு புரிஞ்சிடுது!

இப்ப மாரி அடுத்தவன் அசந்திருக்கற நேரம் பர்த்து அடிக்கற எனம் இல்லை தமிளினம்!

ஒனக்கு சரிசமானமா இருக்கறவனோட மட்டுமே சண்டை போடணும்னு தெரிஞ்சு வெச்ச எனம் நம்முளுது!

'இவுஹ சொன்னதுலேர்ந்து, அங்கே நெலமை சரியில்லை; இப்ப நாம சண்டை போடக்கூடாது'ன்னு தொண்டமானும் அப்போதிக்கு நிப்பாட்டிர்றானாம் சண்டைய!

இதுல வள்ளுவரு எங்கே வராருன்னு கேக்கிறியா!?

அவரும் இந்த அம்மா காலத்துல இருந்தவர்தானே!

அவருக்கும் இது தெரிய வருது!

அவரு இதை ஒரு குறள்ல சொல்லணும்னு நெனைக்கறாரு!

"படைச்செருக்கு"ன்னு ஒரு அதிகாரம் எளுதறாரு!

அதுல மொதக் குறளா இதை வைக்கறாரு!

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னை
முன் நின்று கல்நின் றவர்." [771]

"ஏ எதிரிங்களே! என் தலைவன் முன்னே நின்னு, போர் செஞ்சு, மடிஞ்சு, அவனவனுக்குக் ஸமாதி கட்டிகிட்டவங்க பல பேரு!
ஆனதுனால, என் தலைவன் முன்னே நிக்காதீங்க!"

அப்படீன்னு அம்ஸமா ஒரு குறளு, அதுவும் இது எங்கினாச்சும் நமக்கு மறந்து பூடுமோன்னு நெனச்சி, மொதக் குறளாவே எளுதியிருக்காரு!

அதே மாரி,.....நீயும் போயி, நம்ம பெருமைய ஊருக்கெல்லாம் ஸொல்லு!"


என்று சொல்லியபடி நகார்ந்தான் மயிலை மன்னார்!

'அது ஸரி மன்னார்! அவ்வையார் பாடினது என்னன்னு ஸொல்லவே இல்லியே' எனக் கேட்டேன்!

"அதுவா! பொறநானூறுல 95ஐப் பாருன்னு கண் சிமிட்டியவாறே ஸொல்லிவிட்டுப் போய்விட்டான் மயிலைமன்னார்!

அவசர அவசரமா வீட்டுக்கு வந்து, புஸ்தகத்தைப் புரட்டினேன்!

இதோ அந்தப் பாடல்!



"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ -- என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே."


இதோ நண்பர்களே! உங்கள் பார்வைக்கும் இது!

நன்றி!



Read more...

Saturday, February 17, 2007

ஆத்திகச் சுடர்!

ஆத்திகச் சுடர்!

இந்தச் சுடரை ஏற்றி வலையுலகில் பரவவிட்டு, இன்று சுடராகிப் போன கல்யாணுக்கு அஞ்சலி செலுத்தி இதனைத் தொடர்கிறேன்.

நண்பர் விடாது கருப்பு சதீஷ் இதை எனனிடம் அனுப்பி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

அவர் சொன்னது போல என் கருத்தை மற்றவரிடம் திணிக்க அல்ல: ஆனால் சொல்லிடவே நான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.

எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.

முடிந்தால் மற்றவரைக் கோபப்பட வைக்க முடியும்; வருத்தப்படவைக்க முடியும்; அவர் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆனால், புரிவது அவரவரிடமே நிகழ முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்...........

' குதிரையை தண்ணீர்த்தொட்டிக்கு கொண்டு செல்லத்தான் நம்மால் முடியும்; குதிரைதான் குடிக்க வேண்டும்.... முடியும்.'

இதனை உணர்ந்து, தம் கருத்துகளை அடுத்தவரைப் பழிக்காமால், அவர் மனதை நோக வைக்காமால் தம் கருத்துச்சுடரை ஒவ்வொருவரும் ஏற்ற வேண்டும், வலைப்பூவிற்கு வருவது ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வைப்பது வலைப்பதிவார்களின் தலையாய பொறுப்பு எனக் கூறி, இனி எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்!!


அதற்குமுன், சிவாராத்திரியை முன்னிட்டு, சில "ஆத்திக" நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், உடனே இந்தச் சுடரைத் தொடர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது என் பதில்!

1)ஆன்மீகத்தினை நீங்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. உலகில் இவ்வளவு இந்துக் கடவுள்கள் இருக்க அதிலும் குறிப்பாக முருகனைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

இது மிகவும் சுலபமான கேள்வி!

நான் பிறந்தது ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பத்தில்! என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது முருகன், வள்ளி, தெய்வானை உருவச்சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்.

பூஜைக்கு வர வேண்டும்; அனைவரும் அருகில் உட்கார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் வற்புறுத்தியதில்லை.

ஆனால், பூஜை முடியும் சமயம், ஒரு மணி அடிப்பார்! யார் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே அதை விட்டுவிட்டு, தட தடவென ஓடி அவரிடமிருந்து விபூதி பெற்றுக் கொள்ள மட்டும் மறந்துவிடக் கூடாது! வராதவருக்கு அன்று தர்ம அடி நிச்சயம்!

நான் ஒரு நாளும் அடி வாங்கியதில்லை! ஏனென்றால், நான் ஒருவன் தான் அவர் பூஜை ஆரம்பித்த முதல் கடைசி வரைக்கும் அவரருகே அமர்ந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவேனே!

ஆம்! அவர் பூஜை செய்யும் அழகும், முருகனை ஆராதிக்கும் பாங்கும் என் மனதைக் கவர்ந்தது. முருகன் என் மனதை ஆட்கொண்டான்! நான் முருகன் அடிமை ஆனேன்!

எல்லாத் தெய்வங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், முருகனே என் சொந்தக் கடவுள்!

ஒரு சின்ன தகவல்!

அந்த முருகன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது! சஷ்டி, கிருத்திகை என பூஜை அவருக்கு கோலாகலாமாய் நடந்து வருகிறது!

2)வலைப்பதிவு உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் போராக இருக்கிறது. முதலில் பார்த்தீர்கள் என்றால் பார்ப்பனர் - திராவிடர் பிரச்னை. அதன்பின் விடாது கருப்பு- விட்டது சிகப்பு போர். அடுத்து பார்த்தீர்கள் என்றால் ஆரிய திரட்டி - திராவிட திரட்டி சண்டை. அடுத்து டோண்டுவின் பன்முகங்களை கொசுபுடுங்கி என்பவர் தோலுரித்தது. இதற்கெல்லாம் குழுமனப்பான்மைதான் காரணம் என்கின்றனர் பலர். ஒற்றுமை என்பது இனி இல்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் முகம் மூடி எழுதும் பதிவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உட்தாரணமாக விட்டது சிகப்பு, முகமூடி, கொசுபுடுங்கி, குசும்பன், இட்லிவடை, வந்தியத்தேவன். இது ஆரோக்கியமான சூழலா?

குழு மனப்பான்மை என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே ஒரு குழுவாய்த்தான் வாழ்கின்றன. ஏன்... மனிதனே முதலில் தனித்தனியாய் இருந்து, பின்னர், ஒரு குழுவாய்ச் சேர்ந்து வாழ வேண்டியகட்டாயம் ஏற்பட்டதாகத்தான் வரலாறு சொல்லுகிறது.


புதிதாய்., முன்பின் தெரியாத,அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு இந்திய முகத்தைப் பார்க்க மாட்டோமா எனத்தான் நான் தேடினேன்.

அதுவே ஒரு தமிழ் முகமாயும் இருந்தபோது, என் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது. இதுதான் மனித இயல்பு.

இதுவே நம் வலைபூவிலும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

இது ஆரோக்கியமான சூழலா, இல்லையா என்பது கேள்வி அல்ல இப்போது.

இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.

அநேகமாக இங்கு எல்லாரும் ஏதோ ஒரு வகையில் 'முகம் மூடி'த்தான் எழுதுகின்றனர். இதில் இவர், அவர் எனப் பிரித்துப் பார்ப்பது தேவையில்லை எனக் கருதுகிறேன்.

சதீஷ் என்ற நீங்கள் 'விடாது கருப்பு' என்றும், சங்கர்குமார் என்ற நான் 'எஸ்கே' என்று எழுதுவதும், முகத்தை மூடி 'பூனை, முருகன்' போட்டுக் கொள்வதும் இது போல ஒன்றே!

இங்கு எல்லாரும் முகமூடிகள் தான்!


3)சென்ற நூற்றாண்டில் திரிக்கப்பட்ட இந்திய வரலாறுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விதிக்கப்பட்ட என்றால் அதன் பொருள் என்ன? படிக்காத உயர்ந்த வகுப்பினர் தலித்துகளைப் பீ அள்ளினால் அது பாவமா?

ஐந்து கேள்விகள்தான் கேட்க வேண்டும் என்பது சுடரின் விதி என்பதால் ஒரு கேள்வியிலேயே மூன்று கேள்விகளைத் "திணித்த" உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!:))

இது மூன்றுக்கும் ஒரு பொதுவான பதிலை அளிக்கவே நான் விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டை விட்டு இன்னும் சற்றித் தள்ளிப் போய் பிந்தைய வரலாற்றைப் பார்த்தால், நாம் எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்திருக்கிறோம்.

அதனைப் பிரதிபலிக்கும் வகையாகவா இன்றையப் பதிவுகள் இருக்கின்றன?

நீங்கள் முந்தையக் கேள்வியில் சொன்னது போல, எங்கு பார்த்தாலும் விருப்பு, வெறுப்பு, குழு, சண்டை... இவைதான்!


திரிக்கப்பட்டவை எல்லா இடங்களிலும், வல்லமை படைத்த எல்லாராலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் மனமே நமக்கு நிலை!
அதன்படி வாழவே நான் முயற்சித்து வருகிறேன்.

"விதிக்கப்பட்ட" என எதை நீங்கள் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த "விதிக்கப்பட்ட" சிலவற்றைச் சொல்லுகிறேன்.
உங்களுக்குப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.

என் பிறப்பு நான் கேட்டு வந்ததிலை என்பதால், அது 'விதிக்கப்பட்டது'.
எவருக்குப் பிறக்க வேண்டும் என்பதும் நான் கேட்டு வராததால், அதுவும் 'விதிக்கப்பட்டது'.
எந்த ஊரில், நாட்டில், மொழியில் பிறக்க வேண்டும் என்பதும் 'விதிக்கப்பட்டதே'... நான் கேட்டு வராததால்!
'குலம்', 'சாதி', 'இனம்' இவையெல்லாமும் நான் உருவாக்காததால், அதில் எதாவது ஒன்றில் நான் வந்து உதித்ததுவும், 'விதிக்கப்பட்டதே'!
இதில் எதுவும், எவரும் குறைவில்லை என்பது என் கருத்து!

இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!


இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே!


மேற்கூறிய இவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பினும், என்னளவில் மட்டுமே, எனக்குள் மட்டுமே இவை பெருமை பெறுகின்றன!
இவற்றை நான் போற்றுகிறேன்......எனக்குள் மட்டுமே....என் வீட்டுக்குள் மட்டுமே.... வெளியில் அல்ல!


இவற்றை வெளியில் பாராட்டும் போது, இதனைக் கொண்டு அடுத்தவரை எடை போட நான் முயலும் போது, நான் இந்தப் பெருமைகளை எல்லாம் இழக்கிறேன் என்பதினை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன் .

எவர் மலத்தையும் எவர் அள்ளுவதும் பாவமில்லை!
அள்ளாமல் விட்டால்தான் பாவம்!
மனித குலமே நாறிப் போகும்!
யாராவது ஒருவர் அள்ளத்தான் வேண்டும்!

இதில் தலித் என்ன, செட்டியார் என்ன, முதலியார் என்ன, நாடார் என்ன, பார்ப்பான் என்ன?
எல்லாம் ஒரே மலம்தான்!


4)தாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமுன் கடவுளை வேண்டுவீர்களா? அல்லது தங்களின் தொழிலின் மீதுள்ள திறமையை முழுவதுமாக நம்புவீர்களா?

என் திறமை இறைவன் எனக்குக் கொடுத்தது! எத்தனையோ மருத்துவர் இங்கிருக்க, எனை நாடி வந்த நோயாளி நலம் பெற வேண்டும் என என் முருகனை வேண்டிக்கொண்டு என் திறமையைக் காட்டுவேன்!

5)பிராமனர்கள் பொதுவாக தமிழை விட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையைத்தான் அதிகமாக வாழ்த்துவதாகவும் பாராட்டுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் வலைப்பதிவர்கள் தமிழில் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தில் வலைபதிய வேண்டியதுதானே? எனக்குத் தெரிந்து தாங்கள் நடுநிலையாளர். நல்ல சிந்தனையாளர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என்று சொன்னார்கள் பெரியவர்கள். தமிழை நீசபாசை என்பவனின் நாவை அறுக்காமல் பல பதிவர்கள் வடமொழியை உயர்த்திப் பேசுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறு எனக் கருதுகிறேன்.

ஒருவருக்குத் தாயை விட தந்தையை அதிகமாகப் பிடிக்கும், அல்லது தந்தையை விட தாயை அதிகம் விரும்புவார்கள். இதனால், அடுத்தவரை இழிவாகக் குறிப்பதாக எண்ணுவது மதியீனம்.

ஸம்ஸ்கிருதத்தை ஒருவர் விரும்புவதால் அதனைக் கொண்டு அவரது தமிழ்ப்பற்றை கேள்வி கேட்ட்பது, தாயைச் சந்தேகிப்பதை ஒக்கும் என நான் கருதுகிறேன்.

'நீசபாஷை என்பது வடமொழி........ 'காட்டுமிராண்டி மொழி' என்பது தமிழ். ....அவ்வளவுதான் இதில்!


இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!

உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன், சுடரின் விதிமுறைகளைப் பார்த்தேன்.. அதில், ஒன்பதாவது விதியாய் இப்படிச் சொல்லி இருக்கிறது!

ஆனால், கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.


இச்சுடரை ஏற்றி, நம் மீது நம்பிக்கை வைத்து, இது மனிதநேயம் மலர வழி வகுக்கும் எனச் சொல்லி மறைந்த அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் இசுசுடரை நம் ஆன்மீகச் செம்மலாம் குமரனுக்கு அனுப்பி மனிதம் வாழ வகை செய்ய வேண்டுமாய்க் கேட்டு அனுப்புகிறேன் இந்த சுடர் .... ஆத்திகச் சுடர்....... எங்கும் பரவட்டும்!

அன்பு குமரனுக்கு என் ஐந்து கேள்விகள்!

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?.

2.. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?


ஆத்திரச் சுடர் அடங்கி, ஆத்திகச் சுடர் ஒளிரட்டும்!
அன்பே சிவம்!

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html
http://www.thenkoodu.com/sudar.php

Read more...

Monday, February 12, 2007

இறுதிப் பரிசு!


"இறுதிப் பரிசு!"
[ஒரு கண்ணீர் அஞ்சலி]

உன்னை எனக்கு முழுதுமாய்த் தெரியாது
உன் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்
மரத்தடியில் சாகரன் என ஒருவர் எழுதுகிறார் எனத் தெரியும்
அங்கங்கே கல்யாண் என பெயர் அடிபட்டிருக்கிறது
அது தவிர உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது!

இன்று நீ இறந்து விட்டாயாம்
குளிருது எனச் சொல்லி மாத்திரை சாப்பிட்டவன்
வாந்தி எடுத்துவிட்டு படுத்தாயாம்
அன்பு மனையாள் எழுப்ப கண் விழிக்க மறந்தாயாம்
அவ்வளவுதான் தெரியும்

அடுத்து..........
தேன்கூடு நிறுவனர் கல்யாண் என்பவர் மறைந்ததாகச் செய்தி
அருமையான நண்பரை இழந்தேன் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதிவுகள்
அடுத்தடுத்து அவை எண்ணிக்கையில் அதிகமாகின்றன
தமிழ்ப்பதிவுலகமே ஒன்று திரண்டு புலம்ப ஆரம்பிக்கிறது

என்னை ஏன் அது இத்தனை அளவு பாதிக்கிறது?
எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
என் கண்கள் ஏன் குளமாகின்றன?
சாதாரணமாக மரணங்களால் பாதிக்கப்படாத நான் ஏன் அழுகிறேன்?
உன் மரணம் என்னை ஏன் உலுக்குகிறது?

உனக்கு இருபத்தெட்டு வயது என்பதா?
இல்லையே!
முப்பது வயதில் என் அக்கா மகன் மறைந்திருக்கிறானே!
இளம் மனைவியுடன் இரு குழந்தைகளை விட்டு அவன் சென்றானே!
அப்போது கூட இவ்வளவு கலங்க வில்லையே!

சாதனையாளன் ஒருவன் சிறுவயதில் மறைந்ததா?
இருக்கமுடியாது.
வருத்தமளிக்கும் விஷயம்தான் என்றாலும் இது ஒன்றும் புதிதில்லையே
இராமானுஜம் முதல் எத்தனையோ சாதனையாளர்கள் அல்பாயுளில் போயிருக்கிறார்கள்
இதுவும் அதில் இன்னொன்று என ஏன் என்னால் நினைக்க்முடியவில்லை

ஏன் இப்படி உன்னைப் பற்றிய எல்லாப் பதிவுக்கும் சென்று வருகிறேன்?
எல்லாப் பதிவினிலும் ஏன் பின்னுட்டமிட்டு வருகிறேன்?
நீ என்ன எனக்கு சொந்தமா இல்லை பந்தமா?
உனக்கும் எனக்கும் என்ன கணக்கு?
எனக்கு ஏன் இந்தக் கண்ணீரும் கவலையும்?

பரஞ்சோதி உனக்குக் கடன் பட்டிருக்கிறார்
முத்துகுமரனும் அப்படியே சொல்லுகிறார்
அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் சொல்கின்றனர்
எனக்கு வலைத்தளம் அமைத்துக் கொடுத்தாய்
எனக்கு இன்னின்னது செய்தாய் என!

உன் முகம் கூட எனக்குத் தெரியாதே
உன்னிடமிருந்து ஒரு மடல் கூட வந்ததில்லையே
ஒரு பதிவைக் கூட பாராட்டியோ, விமரிசத்தோ இல்லையே
எனக்கும் நீ பின்னூட்டம் இட்டதில்லையே
பின் ஏன் இப்படிக் கலங்குகிறேன்?

இரண்டு நாட்களாய் யோசிக்கிறேன்
எப்படி எப்படியோ சிந்திக்கிறேன்
எதுவும் புரியாமல் விழிக்கிறேன்
பொருளே இல்லாத சோகம் இதுவென
முடிவெடுக்கும் வேளையில் பொறியொன்று தட்டியது!

பதிவுலகில் என்னைப் பாராட்டியவர் பலர் உண்டு
தூற்றியவரும் 'அதிகப்' பலருண்டு!
எதையும் பெரிதென எண்ணாமல் எழுதி வருகிறேன்
ஆனால், என்னையும் பொருட்டென மதித்து
எனக்களித்தாய் நீ ஒரு பரிசு!

அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!
இறுதித் தேன்கூடு போட்டியில் இறுதிப் பரிசு!
ஆம்!முதல், இரண்டாம் பரிசுக்குப் பின்னர்
இறுதிப் பரிசு மூன்றாம் பரிசுதானே!
அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!

கடன்பட்டோர் பலர் நடுவே
கைம்மாறு செய்திடக் காத்திருப்போர் நடுவே
கண்ணீருடன் நட்பினை நினைந்திருப்போர் நடுவே
கவினுறு எழுத்தை உணர்ந்திருப்போர் நடுவே
கடைசிப் பரிசுடன் வலம் வருகிறேன் நான்!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி
கொடுக்காமல் போனவர் பல பேர்
இருந்தும் கொடுக்காதவர் எத்தனையோ
இருக்கும் வரை அனைவருக்கும் கொடுப்பவர் ஒரு சிலரே
அதில் ஒன்று, அதுவும் கடைசி ஒன்று எனக்கு!

இதுதான் உலுக்குதோ என்னை
இதுதான் கலக்குதோ என்னை
இருக்கலாம்; இருக்கணும்!
பார்க்காமலேயே, பழகாமலேயே
உன் பரிசினைப் பெற்றவன் நான்!

இன்று நீ பிரிந்தாலும்
எமை விட்டுச் சென்றாலும்
உன் நினைவு என்றுமே
எனை விட்டு அகலாது
உனை என்றும் மறவாது!

உனை இழந்து வாடுகின்ற
அத்துணை பேருக்கும் என் இரங்கல்!
நான் வணங்கும் முருகனை வேண்டுகிறேன்
உன் குடும்பம் நலம் வாழ வாழ்த்துகிறேன்
முருகனருள் முன்னிற்கும்!

---------------------------------------------------------------------

Read more...

Thursday, February 08, 2007

நினைவுகள் இனியவையா?



நினைவுகள் இனியவையா?






இருக்கும் போது எனக்கெனவே
இனிய நினைவு தந்தவளே!
விருப்பமாய் என்னுடன் என்றும்
துணையென வந்தவளே!

நீயில்லா இந்நேரம்
இன்ப நேரம்!

காணுமிடமெங்கும் என்னுடனே
நீக்கமற நிறைந்தவளே!
வாழும் நாள் வரைக்கும்
என் நினைவில் கலந்தவளே!

நீ திரும்பும் நாள்வரைக்கும்
நான் பசியால் வாடுவேன் என
வித விதமாய் செய்து வைத்த
உணவினிலே உனைப் பார்க்கிறேன்!

உன்னன்பை அதில் கண்டு
உணவாறி முன்னறை வந்தால்
தொலைக்காட்சிப் பெட்டியினில்
உன் முகமே தெரியுதடி!

எங்கெங்கு பார்த்திடினும்
உன் முகமே தெரியுதடி
வீம்பாக உனை மறக்க
முயன்றாலும் முடியலைடி!

இருந்தபோதும் எனை நிறைத்தாய்
உன்னன்பால் எனை அணைத்தாய்
விரும்பியுனை நினைக்கின்றேன்
உனையெங்கும் பார்க்கின்றேன்!

போனாலும் இருந்தாலும்
நீயென்றும் என்னவளே!
வாணாள் முடியும்வரை
நீயென்றும் என்னவளே!

ஒரு திங்கள் எனைவிட்டு
போனதற்கே இது போல
மகிழுகிறேன் நானின்று
உனை என்றும் மறவாமல்!

என் நினைவை உன்னுடனே
எடுத்தங்கு சென்றிட்ட
உன் மனதை நானறிவேன்
நானங்கே இருப்பதினால்!

நினைவில்லா மனமிங்கே
களிப்புடனே சிரிக்கிறது!
கனவினிலும் நனவினிலும்
களித்திங்கே வாழ்கிறது!

நினைவுகள் இனியவையா?
நினைவெல்லாம் நனவாக
நிகழ்வெல்லாம் நினைவாக
நிகழ்கையிலே ஏது பிணை?

எல்லாம் சுகமே!

Read more...

Thursday, February 01, 2007

"என்" வலது கை

"என்" வலது கை

அயர்ந்து உறங்கிய நடுநிசியில்
அடி ஒன்று விழுந்தது போல் உணர்வில்
சட்டென்று கண் விழித்தேன்.

கனமாக ஏதோ ஒன்று எனை அழுத்த
உறக்கம் கலைந்த சினத்துடன் பார்த்தால்
என்னவளின் வலது கை என் மீது!

எரிச்சலுடன் அதை விலக்க முனைகையில்
கட்டையான கையைத் தள்ளுகையில்
விலக மறுத்து இன்னும் அழுத்தியது!

என் மனதில் ஏதோ நினைவுகள்!.......

கணநேரச் சலனத்தில் ஆவலுடன் பற்றிய கை
இனி என்றும் விடமாட்டேன் என வாக்களித்த கை
மணம் புரிந்தபோது மனமாரப் பிடித்த கை
தினமும் காலையில் தலை கோதி எனை எழுப்பிய கை
சனிக்கிழமை எனை அமர்த்தி எண்ணை தேய்த்த கை
வட்டிலிலே சோறெடுத்து ஆசையுடன் பரிமாறிய கை
கட்டிலிலே என்னோடு சாகசங்கள் பல செய்த கை
வீட்டினிலும் வெளியினிலும் என்னுடன் இணைந்த கை
எப்போதும் பாசத்துடன் எனை அணைத்த கை
அவ்வப்போது கோபத்துடன் எனை நோக்கி சுட்டிய கை
எப்போதாவது என்கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை
ஆதரவாய்ப் பலருக்கும் பிரசவம் பார்த்த கை
ஆசையாய் அனைவருக்கும் அன்னமிட்ட கை


விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை.

சற்றேனும் தளராமல், குறையென்று கருதாமல்
பிறர் உதவி நாடாமல், தன் செயலைத் தான் செய்து
எதிர் நீச்சல் போட்டுவரும் அவளது வலது கை!

அடியென உணர்ந்தது இனித்தது
ஆதரவாய்ப் பற்றினேன்
ஆசையாய்த் தடவினேன்
என்னவளின் வலது கையை!

........அப்படியே உறங்கிப் போனேன்!






Read more...

Thursday, January 25, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]

"பாதி தண்ணிதான் பூண்டிக்கு வந்துதுன்னு சொன்னேனா" என்றவாறு ஒரு டீயை உறிஞ்சிக்கொண்டே தொடர்ந்தான் மயிலை மன்னர்.

"ஏண்டா தண்ணி வரலை! என்ன ஆச்சுன்னு பாக்கப் போனாங்க நம்ம ஆளுங்க.

நல்லவேளை, போன தபா மாரி, ஆரும் தண்ணியைத் திருடலை.

சிமிண்ட்டுகரை வளியா தண்ணி ஊறி, வெளியே போவுது.

ஆஹா! சிமிட்டு [] வளியாக் கூட தண்ணி கசியுமேன்னு யோசிக்கலியேன்னு தெகைச்சாங்க.

இப்ப இன்னா பண்றது! இதுக்கு இன்னா வளின்னு ஆலோசனை பண்ணினாங்க.

சிமிண்டுக்கு பின்னாடி, கரை வலுவா இருந்தா தண்ணி போவலை; ஆனா, கரை 'பொத-பொத'ன்னு இருந்தா, தண்ணி கசியுது ரொம்ப-ன்னு தெரிஞ்சுது.

அந்த எடத்துல மட்டும் ஒரு கெமிக்கல் கலந்த பாலிமர் ஷீட்டை போட்டா அது சிமிண்டோட ஒட்டிகிட்டு இன்னும் வலுவாயிரும்னு புரிஞ்சுது.

ஆனா, இன்னும் அதிக செலவாகும்.

இன்னா, அதிகம் இல்ல.

ஒரு 90 கோடி ரூபா மேல!

ஏற்கெனவே 150 கோடி ஆயிப் போச்சு.

ட்ரஸ்டு ஆளுங்க நேரா சாமியப் போய் பார்த்தாங்க!

"செலவப் பாத்தா ஆவாது! இன்னா செய்யணுமோ செய்யுங்க"ன்னு சாமி சொல்லிட்டாரு.

அவ்ளோதான்!

எல்லாம் மளமளன்னு நடந்துது.

ஜூன் மாசம், 3-ந்தேதி, 2005-ம் வருசம்!
நாயுடு போயி, ராஜசேகர ரெட்டி வந்துட்டாரு சீஃப் மினிஷ்டரா!
அவரை வெச்சு ஒரு விளா வெச்சு ஷீட்டு போடற வேலய ஆரம்பிச்சாங்க!

அதே வருசம், நவம்பர் மாசம் சாமி பொறந்த நாளன்னிக்கு[23] தண்ணிய தொறந்து வுட்டாங்க!

"கிருஸ்னாம்மா" சும்மா கலகலன்னு சிரிச்சுகிட்டு குலுங்கி, தளுக்கிகிட்டு ஒரு ராசபாட்டையில வர்ற மாரி ஓடி வருது!



29-ந்தேதி பூண்டிக்கு வருது!

அல்லாருக்கும் சந்தோசம்!

12 டிஎம்சி தண்ணி வருது!

2005லியே தண்ணி வந்திருச்சின்னா இப்ப எதுக்கு விளா எடுத்தாங்கன்னு கேக்கறியா?

தண்ணி வந்தவொடனியே, ஒரு விளா எடுக்கணும்னு நெனச்சாங்க!

ஆனா, அப்ப இங்க இருந்த அம்மா அது முக்கியம்னு நினைக்கலை!

ஆட்சி மாறிச்சு!

கருணாநிதி வந்தாரு!

பத்து வருசம் களிச்சு சாமியும் இப்பதான் சென்னைக்கு வந்தாரு.

68லிருந்து எப்பிடியாவுது சென்னைக்கு குடிதண்ணி கொண்டு வரணும்னு இத்தயே நெனைச்சுகிட்டு இருந்த நம்ம மொதலமைச்சரும், நம்ம தமிள்நாட்டு மக்களோட நன்னியக் காட்ட இதுதான் சமயம்;
அது மட்டுமில்ல, மத்த 3 மொதலமைச்சருங்களையும் இதுக்கு ஒத்துக்க வைக்கவும் இதுதான் சமயம்னு முடிவு பண்ணி ஒரு விளாவுக்கு ஏற்பாடு பண்ணினாரு.

சாமியும் ஒத்துகிட்டாரு.

மத்ததெல்லாம் ஒனக்கு தெரியும்!:)

தமிளனோட நன்றியறிதலக் காட்டின நம்ம மொதலமைச்சருக்கு நெசமாவே ஒரு பெரிய்ய்ய 'ஓ' தான் போடணும்!

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.

நல்லபடியா நமக்கு தண்ணி கெடைக்கணும்னு நெனச்ச ஆளு சாமிக்கு சமம்.
அவரு சாமியோ இல்லியோ அத அவங்கவங்க நெனப்புக்கு வுட்டுருவோம்.

ஒருத்தரைக் கூப்புட்டு ஒத்த பைசா கொடுன்னு கேக்காம,
ஒருத்தர் வந்து இத்த எங்களுக்கு செஞ்சு கொடுங்கன்னு தன்கிட்ட கேக்காம, ஒரு ஆளு, தானே வந்து ஒரு காரியத்த இன்னொருத்தருக்காவ செஞ்சார்னா, அவர்தான் சாமிக்கும் மேல!

இத்தப் பத்தி நா சொல்றத வுட, நம்ம ஐயன் இன்னா சொல்லிருக்காருன்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்.

ஐயனப் பாத்து ஒர்த்தன் கேக்கறான்!

"மலய வுடப் பெருசு எது?
ஒலகத்த வுடப் பெருசு எது?
கடல வுடப் பெருசு எது?"

அப்படீன்னு.

வள்ளுவன் சொல்றான்.....

"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]

"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]

அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!

"மக்கள் சேவையே மகேசன் சேவை"

"அனைவரிடமும் அன்பு செய்; அனைவருக்கும் சேவை செய்"

சரி , ரொம்ப நேரமாச்சு! போயி அல்லாருக்கும் இத்த சொல்லு!

"மொதல்ல மனுசனா இருக்க கத்துக்க! அடுத்தவனப் பத்தி ஒண்ணு சொல்றதுக்கு முன்ன, அத்த தீர விசாரி! ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"



தொடர்ந்து படித்த அனைவருக்கும் எனது நன்றி!

வணக்கம்!

சாய்ராம்.

Read more...

Wednesday, January 24, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]

[முதல் பாகம் இங்கே!]

"இப்ப நான் இன்னாத்துக்கு பூராக் கதையும் வெலாவாரியா சொல்றேன்னா" எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார், ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே!

"இன்னாத்துக்குன்னா, அப்பத்தான் ஒனக்கு இதுக்கப்பால நடந்தது என்னான்றது புரியும்.

ம்ம்ம்ம்! எங்க விட்டேன்?.... ஆங்!ஆபிசருங்கல்லாம் கையப் பெசஞ்சுகிட்டு நின்னாங்க!
ஏன்னா, வுடறேன்னு சொன்னது 15 டிஎம்சி; அப்பிடி இப்பிடி ஆவியாப் போனாக்கூட ஒரு 12 டிஎம்சி தண்ணியாவுது பூண்டிக்கு வந்து சேந்ந்திரும்னு நம்ம ஆளுங்கள்லாம் கணக்கு போட்டு வெச்சிருந்தாங்க!

ஆனா, நடந்தது இன்னான்னா, தொண்ணித்தாறுலேர்ந்து, டூ டவுசண்டு வரைக்கும் [1996 - 2000]வர்ஷந்தோரும் வந்த தண்ணி இத்த வுட ரொம்ப கம்மி!
ஒரு ரெண்டு தபா வெறும் அரை டிஎம்சி கூட வரலை இந்த நாலு வர்ஷத்துல.

அத்தத்தான் இவனுக போய் பார்த்திட்டு வந்து 'லபோ-திபோ'ன்னு அடிச்சிகிட்டானுங்க.
ஆக மொத்தம், தெலுங்கு கங்கை,..... வெளங்கலீங்க!
சனத்தொகை கூடிப்போயி, மானமும் பொய்யாப் போயி, மெட்ராஸ் சனங்கல்லாம் தண்ணிக்கு ஆலாப் பறக்க ஆரம்பிச்சாங்க!

இப்பதான் நான் சொன்ன அதிசயம் நடந்துச்சு!
பொங்கல் களிச்சு ஒரு 4 நாளு போயிருக்கும் 2002-ல,... சனவரி பத்தொம்பதாந்தேதி.
பெங்களுர்ல சாமி கட்டின ஆசுபத்திரிக்கு மொதலாம் ஆண்டுவிளா!
பெரிய பெரிய ஆளுங்கள்லாம்.. வாஜிபாயி என்ன, கவுனர் என்னான்னு அத்தினி பேரும் குந்திருக்காங்க!

சாமி எளுந்து பேசறாரு. ஆசுபத்திரியோட நோக்கம், ஒடம்பை எப்பிடி சரியா கவனிசுக்கணும்னுல்லாம் பேசிகினே வந்தவரு, டபார்னு ரூட்டை மாத்தினாரு.


மெட்ராஸ் சனங்களோட தண்ணிக் கஸ்டத்தைப் பத்தி பேச்சு திரும்புது.
எப்டில்லாம் கஸ்டப்படறாங்க, வூட்டுக்குப் பக்கத்துல ஓடற அயுக்கு தண்ணியைவெல்லாம் கொணாந்து பொம்பளைங்க சமைக்கறதுக்கும், குடிக்கறதுக்கும் யூஸ் பண்றாங்கன்னு கேக்கறவங்க மனசெல்லாம் கரையற மாரி பேசறாரு.

கூடவே, ஆருமே எதிர்ப்பாக்கத, ஒரு அறிவிப்பையும் வுடறாரு.
இந்தமாரி, சாமி... அல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காரு; துட்டு படைச்சவன்லாம், லாரி, டேங்க்ல தண்ணி சப்ளை பண்ண வெசுகிட்டு குஷாலா கீறாங்கோ. ஏளைபாளைங்களைப் பத்தி ஆரும் கவலப்படற மாரி தெரியல. அதுனால.... இவங்க கஸ்டத்தை போக்கறதுன்னு தான் முடிவு பண்ணியாச்சுன்னு!

அவ்ளோதான்.. அங்க இருக்கறவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்!

சாமி ஒரு நல்ல வார்த்தை சொன்னார்னா, முடிக்காம வுடமாட்டாரு. இனிமே தீந்துது சென்னையோட கஸ்டம்லாம்னு.

மளமளன்னு காரியம் சும்மா மிலிடரி வேகத்துல ஆரம்பிச்சுது.
மொதல்ல ஒரு குரூப் ஆளுங்க, இன்னாடது. ... அகிலபாரத சத்யசாயி சேவா ட்ரஸ்டு... அதிலேர்ந்து போயி, ஆந்திரா கவர்மெண்டைப் பாத்தாங்க.

நம்ம என்டிஆர் மாப்ள சந்திரபாபு நாயுடுதான் சீப்மினிஷ்டர். ஏற்கெனவே, ஆந்திராவுல இதுமாரி ஏகப்பாட்ட வாட்டர் ப்ராஜெக்டுல்லாம் இந்த ட்ரஸ்டு பண்ணி ஒரு 20 லச்சம் பேருங்களுக்கு தண்ணிவசதி பண்ணினதுல்லாம் அவருக்குத் தெரியும்.
ஒடனே சரி, இதுக்கு இன்னா டெக்னிகல் எல்பு[ஹெல்ப்] வோனுமோ அத்தெல்லாம் தாரேன்னுட்டாரு.
எப்பிடியாவது, சென்னைக்கு தண்ணி கிடைக்கும்னா, எது வோணும்னாலும் செஞ்சுக்கலாம்னும் சொல்லிட்டரு.

இப்போ இஞ்சினியருங்கல்லாம் போயி, எதுனால தண்ணி கண்டலேறுலேர்ந்து பூண்டிக்கு போய் சேரலேன்னு டெஸ்டு பண்ணினாங்க. முன்னியே சொன்ன மாரி, காவா[கால்வாய்] சரியாத் தோண்டலை; தோண்டினதும் தூந்து போச்சு; அங்கங்க தேங்கற தண்ணியும் அடுத்தவன் வயப்பக்கமா பூடுது..... இப்படி அல்லாத்தையும் கண்டுபிடிச்சு லிஸ்டு ஒண்ணு தயார் பண்ணினாங்க.




(சில படங்கள்]

கடைசில, ஒரு ரிப்போர்டு தயார் பண்ணினாங்க.
கண்டலேருலேர்ந்து, பூண்டி வரைக்கும் திரும்பவும் புதுப்பிச்சாலொளிய, இந்த கால்வாய்க்கு இனிமே விமோசனமே இல்லேன்னு கண்டிஷனா இருக்கு அதுல!
மொத்த நீளம் இம்மாம் தெரியுமா?
150 கிலோமீட்டரு.
புதுப்பிக்கறதுன்னா இன்னான்னு நெனச்சே!
கண்டலேறு ரிசர்வாயரைப் பலப்படுத்தி, மளை பெய்யாத காலத்துலியும், தண்ணியைத் தேக்கி வைக்கற அளவுக்கு வலுவாக் கட்டணும்
ஏற்கெனவே நோண்டி, தூந்து போன வாய்க்காலை ஆளமாக்கணும்.
கரையை அகலப் படுத்தணும்.
தண்ணி கசியாமப் பாத்துக்கணும்.

இதுக்கான மொத்தச் செலவையும் ட்ரஸ்டே எடுத்துக்கும்னு சொல்லச் சொல்லி சாமி உத்தரவு போட்டுட்டாரு.


ஒர்த்தர்கிட்ட ஒரு நயாபைஸா கேக்கலை. ஒரு நோட்டிசு வுடலை.

லார்சண்ட் டுப்ரோ [L&T] கம்பெனி இந்த வேலைய தானே செஞ்சு தரேன்னு சொல்லிச்சு.

இப்பிடியே பல பேரு முன்னுக்கு வந்தாங்க.

வேலை ஜரூரா ஆரம்பிச்சு அல்லாம் முடிஞ்சுது.

ஒரு வெள்ளோட்டம் போல தண்ணியத் தொறந்து வுட்டுப் பாத்தாங்க!.........

.........பாதித் தண்ணி கூட பூண்டி வந்து சேரலை!!!!


ஏன்???????????!

[நாளை முடிவுறும்!]

ஜெய் சாய்ராம்!



Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP