Tuesday, February 05, 2008

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!"



தை அமாவாசை தினம்!

திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது!

ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்!

என்னவெனப் பார்க்கிறேன்!

நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

தொட்டில் எனச் சொல்லலாமா இதை?

மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்!

ஏன்? எதற்காக அப்படிச் சொல்கிறாய்? என நீங்கள் பதறுவது கேட்கிறது!

சற்றே கவனமாகப் பாருங்கள்!

அந்தத் தொட்டிலுக்குள் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்!

அவர் முகம் மகிழ்ச்சியாக சிரித்தபடி இருக்கிறது!!

என்னவாய் இருக்கும்?

அதென்ன கீழே?

'திகு திகு'வென எரிதழல் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறதே!

இதென்ன? பக்கத்தில் இரு காவலாளிகள் ஒவ்வொரு கயிறாக அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்?

தொட்டிலில் அமர்ந்திருப்பவரும் கண்களை மூடியபடியே ஏதோ பாடலாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.....இந்த நிலையில் எப்படி இவரால் அமைதியாகப் பாடல் பாட முடிகிறது?

கொஞ்சம் இருங்கள்!

இவர் என்ன பாடுகிறார் எனக் கேட்போம்?

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அபிராமியைப் போற்றிப் பாடும் பாடல் எனப் புரிகிறது!
அது மட்டுமல்ல! ஒவ்வொரு பாடலின் முடிவில் வரும் சொல்லை வைத்தே அடுத்த பாடல் தொடங்குகிறது!

ஏன் சுற்றி இருப்பவர் முகத்திலெல்லாம் இப்படி ஓர் பரபரப்பும், எதிர்பார்ப்பும்?

ஒவ்வொரு பாடல் முடிந்த பின்னரும் அனைவரும் தலையை உயர்த்தி வானத்தை வேறு பார்க்கிறார்கள்!

என்னய்யா நடக்குது இங்கே!?

சரி! பக்கத்தில் இருப்பவர் யாரையாவது கேட்போம்!

'ஐயா! ஐயா!'

'அட சும்மா இருமைய்யா! அங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! இந்த நேரத்தில் உமக்கென்ன 'ஐயா' வேண்டிக் கிடக்கிறது?' பக்கத்தில் இருப்பவர் சிடுசிடுக்கிறார்.

'கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! நான் ஊருக்குப் புதுசு! இங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை. அதுதான் என்னவெனத் தெரிந்து கொள்ளலாமென....!' நான் மெதுவாக இழுக்கிறேன்.

'அதுதான் சொன்னேனே! இங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என! பொதுவாக இழுத்துக் கொண்டிருக்கும் உயிரைத்தான் அப்படிச் சொல்வார்கள்! இன்றைக்குத்தானைய்யா மெய்யாகவே 'ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்' ஒரு உயிரைப் பார்க்கிறேன்'!!

'சற்று விளக்கமாகச் சொன்னால் நலமாயிருக்கும்' என்று நான் கேட்க, என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்த நண்பர் வேகப்படுகிறார்.

'என்னைய்யா இது அக்கிரமம்! அந்த பட்டர்தான் ஒரு விவரம் கெட்டவர், பைத்தியம் என்றால் இந்த மன்னருக்கு புத்தி எங்கே போயிற்று?'

நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்க்கிறேன்.

'ஓ! உமக்குத்தான் ஒரு விஷயமும் தெரியாதே! சொல்கிறேன் கேளும்! அதோ தொங்கிக் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் சுப்பிரமணிய பட்டர். அம்பாளுக்கு பூஜை எல்லாம் செய்து வருபவர். சதா சர்வ காலமும் அவளே கதி என அவளைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்! இப்ப அதான் அவரே தொங்குகிறார்!' எனச் சொல்லிச் சிரித்தார்.

'புரியவில்லையே! அவளைச் சரணடைந்ததற்கு இவர் ஏன் இப்படித் தொங்க வேண்டும்?' என்றேன் நான்.

'அதில்தான் இவருக்குப் பிடித்தது சனி! இவர் பாட்டுக்கு அவள் உண்டு தான் உண்டு என இருந்திருக்கலாம். எவருக்கும் பிரச்சினை வந்திருக்காது. இவர்தான் எங்களுக்கெல்லாம் நேரம், காலம் திதி எல்லாம் பார்த்துத் தருகின்ற பண்டிதரும் கூட! அம்பாளைப் பற்றியே நினைத்திருந்து, வருபவர், போகிறவர்க்கெல்லாம் என்ன வாயில் வருகிறதோ, அதைச் சொல்லி வந்திருக்கிறார். சிலருக்கு அதில் பொல்லாதது நடக்கப் போய் மன்னரிடம் வத்தி வைத்து விட்டார்கள். அவராவது இதைப் பெருசு பண்ணாமல் இருந்திருக்கலாம். 'ஆஹா! நம்ம ராஜாங்கத்தில் இப்படி ஒரு நிகழ்வா?' எனக் கிளம்பி வந்து விட்டார்!'

'யார் நம்ம சரபோஜி மன்னரா? அவரா இப்படிச் செய்தார்?' என அப்பாவியாகக் கேட்டேன்.

அதற்குள் இன்னொரு கயிறு அறுக்கப்பட்டு தொட்டில் ஏடாகூடமாக ஆட, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் 'ஆ' என அலறுகிறார்கள்! நம் நண்பரும் கூட அலறிவிட்டுத் தொடர்கிறார்!

'ம்ம்.. என்ன கேட்டீர்? ஆமாம்! சாட்சாத் அவரே தானைய்யா! என்னமோ வேறு வேலையே ராஜாங்கத்தில் இல்லாதது போல மந்திரி பிரதானிகளுடன் இங்கு வந்துவிட்டார் இன்றைக்கு. அட! இந்த பட்டருக்குத்தான் எங்கு போச்சு புத்தி? ராஜா வரப்போகிறார் எனத் தெரியும்தானே! இன்றைக்கு ஒருநாளாவது வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லவா? இன்றைக்கு எனப் பார்த்து தை அமாவாசை! அம்பாளைப் பார்த்து அவளை வணங்கியே ஆகவேண்டுமென வந்து, கோவிலில் இருந்திருக்கிறார். அவரைப் பற்றித்தான் தெரியுமே! ஓ! உமக்குத்தான் ஒன்றுமே தெரியாதே! அபிராமி முன்னால் அமர்ந்துகொண்டு தோத்திரங்களாய்ப் பொழிந்து கொண்டு இருந்திருக்கிறார். மன்னர் வருகிறார். எல்லா ஜனங்களும் அவருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். இவர் என்னடாவென்றால், எதுவுமே அறியாத பரப்பிரும்மமாய் அபிராமியைப் பார்த்து என்னவோ பாடிக் கொண்டிருக்கிறார்."

'அடடா! அப்புறம்? என்ன ஆச்சு?' ஆவலை அடக்க முடியாமல் நான் கேட்க,

' என்ன ஆச்சு? போறாத காலம்தான்! மன்னர் வந்து இவர் பக்கத்தில் நிற்கிறார். இவரோ அவரைக் கவனிக்காமல் அம்பாளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

'நீர்தான் சுப்பிரமணிய பட்டரோ?' மன்னர் கேட்கிறார்.

ஏதோ காதில் விழுந்தும் விழாதது போல் இவர் வைத்த கண்ணை அபிராமியை விட்டு எடுக்காமல், 'ம்ம்' என்பது போலத் தலையை ஆட்டுகிறார்.

'இந்த நேரம் திதி எல்லாம் பார்த்துச் சொல்பவர் நீர்தானாமே?' மன்னர்!

'ஆமாம். இப்ப என்ன அதுக்கு?' என்றார் இவர்!

'ஒன்றுமில்லை! இன்றைக்கு என்ன திதி எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமோ?' மன்னர் விடாமல் கொக்கி போடுகிறார்.

'அதோ அங்கே பார்த்தீரில்லையா? அந்த ஒளிவீசும் கண்களைப் பாரும்! முகத்தில் ஜொலிக்கிற ஒளியைப் பாரும்! இன்னிக்கு முழுப் பௌர்ணமி!'

சுற்றியிருப்பவர் முகத்திலெல்லாம் ஒரே அதிர்ச்சி! சிலர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி! 'அதான் நாங்க சொன்னோமில்லையா' என்பது போல ஒரு எக்காளம்!
மன்னர் முகத்திலோ கோபம் கொப்பளிக்கிறது!

'சரியாகத்தான் சொல்கிறீரா? இன்று பௌர்ணமி என்றால் நிலவு எங்கே? என்ன உளறுகிறீர்?' கோபத்துடன் பட்டரை வினவுகிறார்.

ஆமாம்! இன்று பௌர்ணமிதான்! நான் சரியாகத்தான் சொல்கிறேன்' பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார்.

கூடியிருப்பவர்களில் சிலர் அச்சத்துடன் சுப்பிரமணியரை உலுக்கி அவரை நினைவுலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு விழிக்கிறார் பட்டர்! சுற்று முற்றும் பார்த்தார். எதிரே நாடாளும் மன்னர். கேள்வி கேட்டவரும் அவர்தான் எனத் தெரிந்தது. நிலைமையின் தீவிரமும் புரிந்தது!

'எப்படி இன்று பௌர்ணமி எனச் சொன்னீர்கள்? இன்று அமாவாசை அல்லவா? இப்படித்தான் எல்லாருக்கும் சொல்லி வருகிறீரா?' சரபோஜி உறுமினார்.

'அப்படியெல்லாம் இல்லை அரசே! அவளைப் பற்றியே நினத்துக் கொண்டிருந்ததில் சற்று பிழையாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!'

'ஓ! அவளை நினைத்துக் கொண்டிருந்தால் எது வேண்டுமானாலும் செய்வீரோ? யாரங்கே? இவரைப் பிடித்துக் கட்டுங்கள்! நெருப்பை மூட்டி ஒரு தொட்டிலில் இவரை வைத்து அதன் கீழே தொங்க விடுங்கள்! ஒவ்வொன்றாக கயிறுகளை அறுத்து, மரணபயம் இவரை முழுதுமாகப் பிடித்தபின்னர் இவர் அந்த நெருப்பில் வீழ்ந்து மாளட்டும்! தன் கடமையை மறந்து, எல்லாவற்றுக்கும் அபிராமி மேல் பழியைப் போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்! இது அரச கட்டளை! உடனே நிறைவேற்றுங்கள்!' சரபோஜி மன்னர் கட்டளையிட்டார்' எனச் சொல்லி நிறுத்தினார் நண்பர்.

'பிறகு? ....பிறகென்ன நடந்தது?' என பதட்டத்துடன் கேட்டேன்.

என்னை ஏளனமாகப் பார்த்தவாறே அவர் கூறினார்! 'அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறீரே! இதுதான் நடக்கிறது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டுமைய்யா! மன்னர் அப்படிச் சொன்னவுடன், பட்டர் முகத்தில் அப்படி ஒரு ஒளி வீசியது! அதை நீர் பார்த்திருக்க வேண்டும்! அம்பாளைப் பார்த்துக் கத்தினார்!


'அடியே! உன்னால்தானே இதெல்லாம்! உன் மேல் கொண்ட பக்தியால் தானே நான் மனம் போனபடி அப்படி சொல்லிவிட்டேன்! அதற்கு எனக்குத் தண்டனையா? அழகுதான் போ! யார் என்ன சொன்னாலும் சரி! இன்று பௌர்ணமிதான்! உன் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் நான் சொன்ன வார்த்தையை உண்மையாக்க வேண்டியது இனி உன் பொறுப்புதான்! இதோ! இவர்கள் ஒவ்வொரு கயிறாய் அறுக்க அறுக்க, நான் உன் மேல் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வருவேன்! என்னைக் காப்பதோ, சாகடிப்பதோ அதை இனி உன்னிடம் விட்டுவிட்டேன் என்னை இப்படி செய்யத் தூண்டிய நீயே இதற்கெல்லாம் பொறுப்பு!' அப்படீன்னு சொல்லிட்டு மனுஷன் பாட்டா பாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கயிறாய் அறுந்து கொண்டிருக்கிறது! ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை! அம்பாளாவது, வந்து இவரைக் காப்பாத்தறதாவது! பாரும்! நீரும் இந்த வேடிக்கையைப் பாரும்' எனச் சொல்லியவாறே சற்று நகர்ந்தார் அந்த நண்பர்.

'போறதுக்கு முன் ஒரு கேள்வி. இதுவரைக்கும் எவ்வளவு பாட்டு பாடியிருக்கார்?'


'அறுந்து தொங்கற கயிறை எண்ணிப் பாரும். தெரியும். இதுவரைக்கும் ஒரு 70 தாண்டி இருக்கும்னு நினைக்கிறேன்' என்றார்.

கூடியிருந்த கூட்டத்தோடு நானும் நிகழ்வை ஒரு பரபரப்புடன் கவனிக்கத் துவங்கினேன்.


73, 74, 75, 76........!!!!!!! பாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன!
கயிறுகளும் அறுந்து கொண்டிருக்கின்றன!

77, 78....!
மேலும் இரு கயிறுகள்!

79.. "விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன"... பட்டர் பாடத் துவங்குகிறார்!

ஆ! இதென்ன ஆச்சரியம்! அபிராமியின் ஒளிவெள்ளம் அங்கே நிறைகிறது!
தன் வலது காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வானில் வீசுகிறாள் அன்னை!
'விர்'ரெனப் பறக்கின்ற அந்த குண்டலம் வானில் ஒரு முழு நிலவாய்ச் சுடர்விட்டு தண்ணொளியை எங்கும் பரப்புகிறதே!

கண்டவர் அனைவர் முகத்திலும் பரவசம்!
அனைவரும் கிடைத்தற்கரிய இக்காட்சியினைக் கண்டு 'ஆஹா! இதென்ன அற்புதம்! அமாவாசையன்று முழுநிலவா!' என ஆனந்தக் கூச்சலிடுகின்றனர்!
நானும் என்னை மறந்து கத்துகிறேன்!

அரசன் முகத்தில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு பதட்டம்!

'பட்டரே! என்னை மன்னியுங்கள்! தங்களையும், அன்னையின் பெருமையையும் அறியாமல் தங்களுக்கு பெருத்த அநீதி இழைத்துவிட்டேன்! அன்னை மீது தாங்கள் கொண்ட பக்தியை உணராமல் நான் செய்த இந்தச் செயலை மன்னியுங்கள்!' மன்னர் கதறுகிறார்!

'அரசே! தாங்கள் எந்தத் தவறும் புரியவில்லை! தங்களது அருளால் அன்றோ அன்னை இந்த எளியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறாள்! நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!' என பட்டர் உருகுகிறார்.

'இப்படி இந்த எளியேனுக்கும் அருள் புரிந்த அன்னையைப் போற்றி இன்னும் சில பாடல்கள் பாடுகிறேன். அனைவரும் அமர்ந்து கேளுங்கள்!' என பட்டர் வேண்ட, அனைவரின் முன்னிலையிலும் 100 பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்கிறார்.

'அன்னையின் அருளை முழுதுமாகப் பெற்ற நீங்கள் இன்று முதல் 'அபிராமி பட்டர்' என அழைக்கப்படுவீர்கள்' என அரசன் ஆணையிட நிலவு பொங்கிப் பெருகிய அந்நாள் இனிதே நிறைவுற்றது!

இப்படியோர் காட்சியினை எனக்கும் காணக் கொடுத்த அன்னையைப் போற்றி வணங்கியபடி நானும் அவள் சந்நிதிக்குச் சென்று வழிபடுகிறேன்.

இந்த தை அமாவாசை நன்நாளில் உங்கள் அனைவருடனும் இதனைப் பகிர்கிறேன்.
இதோ அன்னையையே வரச் செய்த அந்த 79-வது பாடல்!

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?"


அன்னை அபிராமவல்லி பொற்பாதங்களில் சரணம்!
*********************************************************

இதை விளக்கும் ஒரு பாடலையும் "யூ ட்யூப்"பில் பார்த்து, கேட்டு மகிழுங்கள்!
http://www.youtube.com/watch?v=W3fQ1wlw3-E


Read more...

Sunday, February 03, 2008

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"

தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தாலே வரிவிலக்கு தந்திருக்கும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு!!

முதன் முதலாய் [இப்படிச் சொல்லலாமோ எனத் தெரியவில்லை! ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட்!!] ]தமிழக திரைப்பட வரலாற்றில் சரித்திரப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எல்லாத் திரைப்படங்களிலும் ஆங்கிலச் சொற்கள் எப்படியாவது ஒருவகையில் இடம் பெறுவது என்பதே!

இந்தவொரு சூழ்நிலையில், இங்கிருக்கும் நிலைமையினில், இன்னும் வரா "வாழ்த்துகள்" என்கின்ற திரைப்படத்தை பார்த்தேன்!

படம் என்கின்ற முறையில், இது ஒரு சிறந்த கருத்தைச் சொல்லுகின்ற படம்!
அதை விட என்னைக் கவர்ந்த ஒரு அம்சம், இது முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே சொல்லப்பட்ட ஒரு படம் என்பது!

ஆமாம் ஐயா! நம்புங்கள்! ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை!

இப்படியோர் படத்தினை உங்களுக்கெல்லாம் பரிந்துரைக்கின்றேன்!

தமிழ், தமிழ், எனவும், தமிழ் துரோகி எனவும் காலத்தைச் செலவிடும் நண்பர்களே!!

இப்படத்தைப் பாருங்கள்!
நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!
இதுவே தமிழை வளர்க்க வைக்கும் உங்கள் பணி!
மற்றவரைப் பழித்துத் தமிழ் வளராது!
தமிழைப் போற்றியே தமிழ் வளரும்!
சீமானைப் போற்றுங்கள்!
இந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்!
பிறகு வந்து பேசுங்கள்!


தமிழக முதல்வரே!
இதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்!
இதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்!!] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்!


செய்வீர்களா?
நம்புகிறேன்!




Read more...

Friday, February 01, 2008

"சுகமெல்லாம் தந்திடம்மா!!" [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]

சுகமெல்லாம் தந்திடம்மா!! [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]



மங்களங்கள் அருள்கின்ற மகிழ்வெல்லாம் அளிக்கின்ற
சங்கடங்கள் தீர்க்கின்ற சகலநலம் புரிகின்ற
பைங்கிளியைக் கையிலேந்தி பச்சைவண்ண மேனியுடன்
பக்தருக்கு அருளமுதை பரிவோடு வழங்கிவரும்
தென்மதுரை நகரிருந்து தென்பாண்டி ஆளுகின்ற
சுந்தரனின் துணைவியான மீனாக்ஷி திருக்கதையை
செந்தமிழில் சொல்லெடுத்து பக்தியுடன் பாடிடவே
மங்களவிநாயகனின் தாளடியை நான் பணிந்தேன். [1]

அருந்தவங்கள் ஆற்றியதில் அகமகிழ்ந்த மலைமகளும்
தானொருநாள் மகளாக வளர்வதாக வாக்களித்து
தேவமகள் வித்யாவ திக்குவரம் அளித்திடவே
பூவலகில் பெண்ணாகப் பிறந்திட்ட தேவமகள்
பாண்டிநாட்டை ஆண்டுவந்த மாமன்னன் மலையத்வஜன்
மனையாக மணம்புரிந்து தென்பாண்டி நாட்டினிலே
காஞ்சனமாலையெனும் பெயரோடு சீராக வாழ்ந்திருந்தாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [2]

பிள்ளையில்லாக் குறையாலே மன்னவனும் வருந்திடவே
மகவொன்று பிறக்கவேண்டி யாகங்கள் செய்திடவே
வளர்ந்தெழுந்த பெருந்தீயின் நடுவினின்று எழுந்ததம்மா
வடிவழகில் மிகச் சிறந்த தோற்றத்தைத் தானடக்கி
பட்டாடைதானணிந்து புன்னகையைத் தவழவிட்டு
புடம்போட்ட பொன்னெனவே பூவுலகம் வாழ்ந்திடவே
முனிவோரும் வாழ்த்திடவே மூன்றுவயதுப் பெண்ணொன்று!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [3]

பாண்டிநகர்த் துறைமுகத்தில் சீறிவரும் கடலலைகள்
கடலலைகள் நடுவினிலே துள்ளிவிழும் வெள்ளிமீன்கள்
வெள்ளிமீன் வடிவினைப்போல் வண்ணமகள் விழிமிளிர
மீனாக்ஷி என்னுமொரு திருநாமம் கொண்டிட்டாள்
அன்னையிவள் மீனாக்ஷி அன்னைமடி சென்றமர்ந்தாள்
மன்னவனும் பிள்ளையிலாக் குறைநீங்கிக் களித்திட்டான்
கற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிகள் எழுப்பிட்டார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [4]

முத்துமகள் மீனாளின் மார்பினிலே மும்முலைகள்
மன்னவனும் திகைத்திருக்க அசரீரி அங்கொலிக்க
"மங்கையிவள் மணாளனைக் காணுகின்ற பொழுதினிலே
குறைபாடு நீங்கியிவள் நிறைமுலையாய்த் திகழ்ந்திடுவாள்!"
மன்னவனும் மகிழ்ந்திட்டான் மகளை வாரி அணைத்திட்டான்
வீரமுள்ள திருமகளாய் மீனாளை வளர்த்திட்டான்
திக்விஜயம் செய்திடவே தலைமகளும் புறப்பட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [5]

அன்னையிவள் வெற்றியுலா அடியேனால் சொல்லப்போமோ
ஆற்றலுடன் போர் புரிந்து அடுத்தவரை வென்றிட்டாள்
முடிமன்னர் அடிபணிய வெற்றிகளைக் குவித்திட்டாள்
படைவீரர் எக்களிக்க வீரமுழக்கம் செய்திட்டாள்
செல்வழியில் கற்றவரை வாதுகளில் வென்றிட்டாள்
செருக்குண்ட பலபேரின் கருவத்தை அடக்கிட்டாள்
கைலாயம் சென்றங்கு சிவனாரைச் சமர் அழைத்திட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [6]

சிவனாரும் சமர்புரிய மிடுக்குடனே வெளிவந்தார்
என்னவொரு ஆச்சரியம்! சிவனாரை கண்டவுடன்
மார்பகத்தில் இருந்திட்ட மூன்றாம்முலை மறைந்ததம்மா!
மணவாளன் இவனென்று மகிழ்வாகத் தெரிந்ததம்மா!
நாணமங்கே தலைகவிழ்த்து நயமாக நின்றததம்மா
"தென்மதுரை நீ திரும்பு, எட்டாம் நாள் நான் வருவேன்
சித்திரையில் யாம் மணப்போம் கொற்றவளே" என்றுரைத்தார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [7]

நாச்சியாரும் திரும்பிட்டாள்! பெற்றவரிடம் சேதி சொன்னாள்
உற்றவனாம் சோதரனாம் கள்ளழகர்க்கு ஓலையிட்டார்
சித்திரையில் வருகின்ற முழுநிலவின் முதல் நாளில்
சித்திரமாம் மீனாளின் திருக்கரத்தை பற்றிடவே
சுந்தரனாம் சோமசுந்தரன் தென்மதுரை வந்தடைந்தார்
உற்றவரும் சுற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிக்க
அன்னையிவள் கைப்பிடித்தார் ஆலவாய் அழகனுமே
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [8]

சோதரியின் திருமணத்தைக் காணவேண்டி கள்ளழகர்
தன்னிருக்கை தனைவிடுத்து வைகைநதிக் கரையடைய
வைகையிலே வந்தவெள்ளம் வழிமறைத்துத் தான் தடுக்க
அக்கரையில் அக்கறையாய் அழகருமே தங்கிவிட்டார்
இக்கரையில் அதற்குள்ளே மணம் முடிந்த சேதிவர
உக்கிரமாய் கள்ளழகர் பெருவெள்ளம் தனிலிறங்கி
தன்னிடத்தைத் தானடைந்தார் தணியாத கோபமுடன்!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [9]

மங்கலங்கள் புரிகின்ற மாமதுரை மீனாக்ஷி
தன் கதையைப் பாடிடவே மங்கையவள் அருள்செய்தாள்
மங்களங்கள் பெருகிவிடும் மனமகிழ்ச்சி கூடிவிடும்
சுந்தரமாய் நம் வாழ்க்கை சுடர்விட்டு ஒளிவீசும்
தாய்மீனின் கண்பார்வை தம்குஞ்சை உயிர்ப்பதுபோல்
அன்னையிவள் அருட்பார்வை அனைத்திடரை அணைத்துவிடும்
சங்கடங்கள் விலகிவிடும் சுந்தரியாள் கண்திறந்தால்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [10]

மாமதுரை மீனாக்ஷி, மங்கையரில் அரசியிவள்
பைங்கிளியைக் கரமேந்தும் பச்சைவண்ண மீனாள்
சுந்தரனின் பாதியிவள் தென்பாண்டித் தெய்வமிவள்
மும்மணியில் ஒருமணியாய் முழுவாழ்வு தந்திடுவாள்
மூக்குத்தி ஒளியாலே மூவுலகும் பொலிவு பெறும்
அண்டியவரை ஆதரிக்கும் அங்கயற்கண்ணியிவள்
சொந்தமுடன் பாடிவந்தேன் சுகமெல்லாம் தந்திடம்மா
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [11]
************************************************************

Read more...

Monday, January 28, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"

தை ஒண்ணாந்தேதி! பொங்கல் திருநாள்! சென்ற முறையை விட சென்னை இப்போது அதிகமாகவே கூட்டமாயிருந்தது! அதிலும் மயிலைப்பகுதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கமான நாயர் கடை கூட இப்போது டேபிள் பெஞ்ச் எல்லாம் போட்டு பெரிதுமாக மாறியிருந்தது. நாயர் மட்டும் 'வா சேட்டா!' என அழைத்திரா விட்டால் என்னாலேயே அடையாளம் கண்டிருக்க முடியாது. 'சா குடிச்சோ' என்ற அந்த அன்பான அழைப்பை மறுக்க மனமில்லாமல் உட்கார்ந்து குடித்தபடியே மன்னாரைப் பற்றி விசாரித்தேன். 'ஞான் கண்டிட்டில்லா! கொறைச்சு நாளாச்சு' எனற நாயரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே நடந்தேன். வடக்கு மாடவீதியில் வஸந்த பவன் தாண்டி நடக்கையில், முதுகில் பளாரென ஒரு அறை விழ, திடுக்கிட்டுத் திரும்பினால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நம்ம மயிலை மன்னார் சிரித்தபடி, 'இன்னா! நம்ம பேட்டைக்கு வந்திட்டு நம்மளைப் பாக்காமியே போயிருவியா?' எனக் கேட்டான். 'உன்னைப் பார்க்கத்தான் மைலாப்பூருக்கே வந்தேன்' எனச் சொன்னவுடந்தான் கொஞ்சம் சமாதானமானான். 'சரி! வா! எதுனாச்சும் சாப்பிடலாம்! இன்னிக்கு பொங்கல் மொத நாளு' என்றவனை மறித்து, இன்னிக்கு தமிழ் புத்தாண்டு கூட என அரசாணை வந்ததை நினைவு படுத்தினேன். 'எல்லா நாளும் ஒண்ணுதான்! அடுத்த ஆட்சி வந்தா இன்னாமோ பெரிய வேலை மாரி மொதக்காரியமா இதை ரத்து பண்ணப் போறாங்க! இதுக்கெல்லாம் அலட்டிக்காதே! இந்த ஒலகத்துல எல்லாம் நெலையில்லாது. இதைப் பத்தி நம்ம ஐயன் சொன்னதை சொல்றேன் கேளு' என்று மன்னார் சொன்னதும், 'அட! வந்ததுக்கு ஒரு நல்ல விஷயமும் கிடைக்குதே' என்ற ஆவலுடன் வஸந்த பவனுக்குள் அவனுடன் நுழைந்தேன்!
இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-34 "நிலையாமை"

"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை." [331]



இப்ப, இந்த ஒலகத்துல எதுனாச்சும் நிலையா நின்னுருக்கா? ஆனாக்காண்டி, எவனை வேணுமின்னாலும் கேட்டுப்பாரு! இன்னாமோ தான் தான் அல்லாத்தையும் கடந்து போயி நெலைச்சு நிக்கற மாரி பேசுவான். இங்க இருக்கற எதுவும் சாசுவதமில்லை! எல்லாமே ஒருநா இல்லாட்டி ஒருநா அளிஞ்சுதான் பூடும்! இதை உணராம நிலையில்லாததையெல்லாம் நிலைச்சு நிக்கறதுன்னு பம்மாத்து பண்றவனோட அறிவு ரொம்பவே அல்பமானது; மட்டமானதுன்றாரு.

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளைந் தற்று. [332]


பில்லா படம் பார்க்க ஒரு தியேட்டருக்குப் போறே! "ஆ! இன்னா கூட்டம்"னு மலைச்சுப் போறே! படம் விட்டதும் இன்னா ஆவுது? அவனவன் தன் சோலியைப் பாக்கப் போயிருவான்! 'அவ்ளோதான்! ஆட்டம் க்ளோசு'ன்னு! அது மாரித்தான் ஒருத்தன்கிட்ட வர்ற பணமும்! இருக்கற வரைக்கும் இருந்திட்டு, ஒருநா அப்பிடியே சொல்லாம கொள்ளாமப் போயிரும்! பணமெல்லாம் நிலையே இல்லை! புரிஞ்சுக்கோ!

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். [333]


பணம்ன்றது நிலையில்லாததுன்னு புரிஞ்சுகிட்டேல்ல? இப்ப நீ இன்னா பண்ணணும்? அது கையில இருக்கறப்பவே நல்ல காரியங்க செஞ்சுறணும்! நாலு பேருக்கு படிப்புக்கு ஒதவறது, இல்லாத ஏழைங்களுக்கு தானதருமம் பண்றது அப்படீன்னு! நிலையில்லாத செல்வத்தை வைச்சு, நிலையான தருமங்களைப் பண்ணணும்னு ஐடியா குடுக்கறாரு ஐயன்!

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈறும்
வாளது உணர்வார்ப் பெறின். [334]

'இன்னிக்கு பொளுது போச்சா, சரி, நாளைக்கு மறுபடியும் ஆட்டையைத் தொடங்கலாம்'னு படுக்கப் போறோம் தெனமும்! ஆனா, விசயம் அறிஞ்சவங்க இன்னா செய்வாங்கன்னா, 'அடடா! இன்னிக்கு நாளு பூடுச்சே! நம்ம ஆயுசுன்ற காலண்டர்ல ஒருநாளை வெட்டிட்டாம்ப்பா எமன்'னு புரிஞ்சுகிட்டு, இந்த நாளுன்றதுல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வாழ்நாளை அறுக்கற வாளுன்னு தெளிவா நடந்துக்குவாங்க!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். [335]

இப்ப கையில துட்டு இருக்குன்னு குஜாலா ஆட்டம் போடாதே! வயசானப்பறம் இந்த நல்ல காரியமெல்லாம் பண்ணிக்கலாமின்னு ஒத்திப் போடாதே! சாவு எப்ப வருமின்னு எவனுக்கும் தெரியாது! அப்பிடி, ஒனக்கு நாவெல்லாம் தள்ளி, விக்கல் வந்து தொண்டையிலியே நின்னுகிட்டு, மேலியும் வராம, கீளேயும் போவாம நெஞ்சுக்குளியை அடைக்கற நேரம் வர்றதுக்கு முந்தியே, செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஜரூரா செஞ்சுறணும்!

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. [336]


'அட! நேத்துக்கூடப் பாத்தேனே! இன்னிக்கு செத்துப்பூட்டான்னு தகவல் வருதே'ன்னு எத்தினி தபா சொல்லக் கேட்டிருப்போம்! ஒர்த்தொருத்தனும் போறப்ப சொல்லிக்கினு போறதில்லை! அதான் இந்த ஒலகத்தோட பெருமையே! அவ்ளோ நிலையில்லாததாம்!

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. [337]

மேல சொன்னமாரி, நாளைக்கு இருப்போமான்றதே தெரியாத... நாளைக்கு இன்னா நாளைக்கு?... அடுத்த நொடி நாம இருப்போமான்றதே நிச்சயமில்லாத நமக்கு மனசுல மட்டும் பாரு! கோடிக்கோடியா நெனைப்பு இருந்துகினு இருக்கும்! அத்தைப் பண்ணலாமா? இத்தை நிறுத்தலாமா? அப்படீன்னு! இன்னமோ போ!

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. [338]

ஆசை ஆசையா ஒரு குருவி சுள்ளியெல்லாம் பொறுக்கி ஒரு கூடு கட்டும். கொஞ்ச நாளு களிச்சுப் பார்த்தியானா, முட்டையெல்லாம் பொறிச்சு குஞ்சுங்கல்லாம் பறந்திடுச்சின்னா, இதுவும் அந்தக் கூட்டைக் காலி பண்ணிட்டு பறந்திரும். அது போலத்தானாம் இந்த உயிருக்கும், ஒடம்புக்கும் நடுவுல இருக்கற தொடர்பு! வேலை ஆச்சுன்னா ஆட்டம் காலி!

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339]


சாவறதுன்றது தூங்கிப் போற மாரி. பொறக்கறதுன்றது அப்பிடி தூங்கிமுளிச்சுக்கறது மாரின்னு ஐயன் இதுல சுளுவா சொன்ன மாரி இருந்தாக்காட்டியும், இதுக்குள்ள ஒரு டக்கரு தத்துவத்தை அப்டியே அசால்ட்டா சொல்லிட்டுப் போயிருக்காரு. இப்போ தூங்கறது முளிச்சுக்கறது ரெண்டு பேரும் ஆரு? ஒரே ஆளுதானே! அதுபோல, செத்துப்போறதும், திரும்பிப் பொறக்கறதும் ஒரே ஆத்மாதான். அப்ப தூங்கக்கொள்ள இது எங்க போயிருந்திச்சு? அதைத்தான் ஒவ்வொருத்தரும் ஆராயணும். இத்தப் புரிஞ்சுகிட்டியானா, நாம ஆரு? எதுக்காவ வந்தோம்? எங்க போறோம்ன்றது தெளிவாயிடும்! இதைத்தான் சூட்சுமமா ஐயன் சொல்லிக் காட்டியிருக்காரு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. [340]


போன பாட்டுல சொன்ன விசயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தற மாரி இதுல சொல்றாரு. இந்த ஒடம்புல உசிரு இருக்கறது ஒர்த்தன் வாடகைவூட்டுல குடக்கூலிக்கு இருக்கறமாரி. நெரந்தரம் இல்லை. வாடகை வூடு சொந்த வூடாகுமா எப்பனாச்சும்? ஆவாதுல்ல? அதேமாரி, உசிரும் இந்த ஒடம்புக்கு சொந்தமாவாது! அப்ப அது இன்னா பண்ணும்? இன்னோரு வூட்டைத் தேடிகிட்டுப் போவும். ஒடம்பு மாத்தி ஒடம்புன்னு சும்மா பூந்து பூந்து பொறப்பட்டு வருது. உசிரும் சரி, ஒடம்பும் சரி எதுவும் நெலையில்லைப்பா! இதைப் புரிஞ்சுக்க'

என்று சொல்லியபடியே பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் மன்னார். தொடர்ந்து அவன் சொன்ன கருத்துகள் இவை!

"இப்பிடி பணம், காசு, ஒடம்பு, உசிரு இப்பிடி எதுவுமே நெலையில்லாதப்ப, மத்ததெல்லாம் இன்னா ஆவும்ன்றே? நமக்கெல்லாம் எப்ப புத்தாண்டு தெரியுமா? சித்திரையிலியும் இல்லே; தையிலியும் இல்ல! எப்ப 'போனசு' வருதோ, எப்ப டயத்துக்கு சோறு கிடைக்குதோ, கடனெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கோமோ, மனசுக்குப் பிடிச்ச ஆளைக் கட்டிகிட்டு சண்டையில்லாம இருக்கோமோ அப்பத்தான்! மத்தபடி இந்த புத்தாண்டு உத்தரவெல்லாம் அதை வைச்சு பொளைப்பு நடத்துறவங்களுக்குத்தான். நீ போயி ஆவற கதையைப் பாரு! ஆரையும் திட்டாம, ஆருக்கும் கெடுதி பண்ணாம இருக்கப் பாரு! அதுதான் இந்த மன்னாருக்கு வேணும். வர்ட்டா!" என்றபடி அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிப் பறந்துவிட்டான் மயிலை மன்னார்.

அவன் சொன்னதை அசை போட்டுக் கொண்டே நானும் வீடு திரும்பினேன்.

Read more...

Friday, January 25, 2008

பத்திரமாய்க் காத்திடம்மா!


பத்திரமாய்க் காத்திடம்மா!

இன்று தை இரண்டாம் வெள்ளிக்கிழமை! சென்ற வாரம் இதே வெள்ளியன்று அன்னை காமாக்ஷியின் அருள் தரிசனம் காஞ்சியில் எனக்கு கிடைத்தது! அந்த நினைவுடன் அவளை நினைத்தபோது என் மனதில் தோன்றிய சில வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! அனைவரும் அன்னை அருள் பெறுக! இன்புற்று வாழ்க!

பத்திரமாய்க் காத்திடம்மா!

அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியான சக்தியிவள்
பிண்டங்கள் சமைத்திங்கு உலவிடவே உயிர்தருவாள்
கண்டவரும் இங்கில்லை விண்டவரும் எவருமில்லை
அண்டிவரும் அடியாரின் அருந்துணையாய்த் தானிருப்பாள்
கற்பனைக்கும் எட்டாத காமகோடி பீடமதில்
அற்புதமாய்த் தானமர்ந்து அருள்மழையைப் பொழிகின்றாள்
சொற்பதங்கள் கோர்த்துவொரு பாமாலை சூட்டிடுவேன்
கற்பகமாம் கணபதியின் தாளடிகள் தான் பணிந்து. [1]

பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எதுவுமின்றி இருந்தவேளை
ஆழமைதி தான்கலைந்து சிவனாரும் கண்விழித்தார்
அசைவின்றி நின்றிருந்த பெருவெளியும் அக்கணத்தில்
இசைவாக உருப்பெற்று மெதுவாக ஆடியது
வேறியக்கம் ஏதுமில்லை ஓருயிரும் அசையவில்லை
சக்தியவள் கருணையின்றி தன்னியக்கம் தொடராது
என்றறிந்த சிவனாரும் மோனத்தில் கண்மூடி
தாயவளைத் தியானித்தார் அவளருளை நாடிநின்றார். [2]

அன்னையவள் அருள் சுரந்தாள் அன்புடனே சிரித்திட்டாள்
கடைக்கண்ணால் பார்த்ததிலே கோடியண்டம் தான் பிறக்க
கைவிரலை அசைத்ததிலே காற்றுமங்கே ஓமென்க
புருவங்கள் உயர்த்துகையில் புள்ளினங்கள் பொலிவுபெற
புன்னகைத்த வேளைதனில் பல்லுயிரும் பிரசவிக்க
கால்விரலின் அசைவினிலே ஐம்பொறிகள் உருவாக
சிற்றிடையின் நெளிவினிலே சீரலைகள் ஆர்ப்பரிக்க
கண்ணசைவில் இயக்கங்கள் களிப்புடனே தொடக்கி வைத்தாள் [3]

உடுக்கை ஒலியினிலே ஓங்காரம் பிறந்ததம்மா
பம்பை ஒலியினிலே பாற்கடலும் பிறந்ததம்மா
செண்டை ஒலியினிலே நானிலங்கள் பிறந்ததம்மா
கைவளையின் கலகலப்பில் தாரகைகள் பிறந்ததம்மா
முத்துப்பல் சிரிப்பினிலே மன்னுயிரும் பிறந்ததம்மா
கண்ணிரண்டின் ஒளிகளிலே ரவிமதியும் பிறந்ததம்மா
கால்மெட்டி அசைவினிலே காவினங்கள் பிறந்ததம்மா
அன்னையிவள் நினைத்துவிட்டால் ஆகாதது எதுவுமுண்டோ [4]

தலையினிலே பொற்கிரீடம் நெற்றியிலே சுட்டிமணி
காதுகளில் கருகமணி கண்விழியில் அஞ்சனங்கள்
நாசியிலே மூக்குத்தி செவ்வாயில் தாம்பூலம்
அலையலையாய்க் கூந்தலிலே அகில்புகையின் நறுமணங்கள்
கழுத்தினிலே பொற்றாலி ரத்தினத்தால் பதக்கங்கள்
கைகளிலே பொன்வளையல் கைவிரலில் மோதிரங்கள்
இடுப்பினிலே ஒட்டியாணம் கால்களிலே கொலுசொலிக்க
கால்விரலில் மெட்டியுடன் பட்டாடை புனைந்திருப்பாள் [5]

சங்கடங்கள் செய்திட்ட சண்டமுண்டரை யழித்தாய்
பாதகங்கள் தான் புரிந்த பண்டனையும் போர்முடித்தாய்
காளியாக நீ மாறி காலரையும் தான் வதைத்தாய்
சூலியாக வந்தங்கு சும்பநிசும்ப வதம் செய்தாய்
மஹிஷாஸுரமர்த்தினியாய் அவதாரம் செய்திட்டாய்
சிங்கமதில் தானமர்ந்து வெஞ்சமர்கள் நீ செய்தாய்
சூலமதைக் கையிலேந்தி வீணர்களை அழித்திட்டாய்
அத்தனையும் சொல்லப்போமோ அறியாத சிறுமகனால் [6]

காத்யாயினி காமாக்ஷி கருமாரி கல்யாணி
வேதாயினி விசாலாக்ஷி வடிவுடையாள் வாராஹி
மங்களாம்பா மீனாக்ஷி மகமாயி மதுரவல்லி
சுகுணவதி சுந்தரியாள் சுகுமாரி சரசுவதி
திரிசூலி திலகவதி திரௌபதியாள் திகம்பரி
படவேட்டு மாரியம்மா பார்வதியாள் பவானி
கமலாம்பா தேனாம்பா நீலாம்பா கௌமாரி
ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரி நாயகியே! [7]

அடியவரைக் காப்பதிலே அன்னையவள் அபிராமி
கொடியவரைத் தொலைப்பதிலே கோபமான மாகாளி
வேண்டும் வரம் தருவதிலே வாஞ்சையான வரலக்ஷ்மி
தண்டனைகள் தருவதிலே துடுக்கான துர்க்கையிவள்
குற்றங்கள் பொறுப்பதிலே கருணையுள்ள காமாக்ஷி
வெற்றிகள் குவிப்பதிலே வளமான விஜயலக்ஷ்மி
எத்திசைக்கும் காவலாக என்றுமென்னைக் காத்திருப்பாள்
பத்திமலர் பாடுகிறேன் பத்திரமாய்க் காத்திடம்மா! [8]
****************************************************************

Read more...

Wednesday, January 23, 2008

அருள் செய்ய வா முருகா!


தைப்பூச நன்நாளில் ஒரு முருகன் பதிவு இட்டு உங்கள் புதுக் கணக்கைத் துவங்கலாமே என என் அன்பு நண்பர் திரு.ரவி கண்ணபிரான் சொன்னதிற்கிணங்க இதோ என் முருகன் மீதான ஒரு சுய பதிவு. படித்தவர்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

அருள் செய்ய வா முருகா!

பாராளும் மன்னனிவன்
சீராளன் செல்வனிவன்
கார்போலப் பொழிந்துவரும்
கருணைமழை நாதனிவன்
வேதனைகள் யாவினையும்
வேரறுக்கும் விநாயகனை
பாதமலர் நான் தொழுது
குமரன்புகழ் பாடிடுவேன்

சிவனாரின் தீப்பொறியில்
சுயமாக தோன்றிநின்றான்
கார்த்திகையில் தான்பிறந்தான்
கமலத்தில் உருவெடுத்தான்
அறுவர்முலைப் பால்குடித்தான்
சரவணத்தில் தான்மிதந்தான்
அன்னைவந்து அணைத்திடவே
அறுமுகனாய் அவதரித்தான்!

அண்ணனிடம் தோற்றதனால்
அருங்கனியைத் தவறவிட்டான்
அறுமலையில் முதல்மலையாய்
ஆவினன்குடி
சென்றுநின்றான்
ஆண்டிக்கோலத்தில் தண்டெடுத்து
ஆங்கவனும் தான்நிற்க
தண்டபாணி என்றபெயர்
தாங்கியவன் சிரித்திருந்தான்!

நான்முகனின் செருக்கடக்க
பிரணவத்தின் பொருள்கேட்டு
விடைதெரியா பிரமனையும்
வெஞ்சிறையில் தானடைத்தான்
விடுவிக்க வேண்டிநின்ற
விடையனார் விடைகேட்க
தந்தைக்கே குருவானான்
ஏரகத்தில் தானமர்ந்தான்!

தேவர்குறை நீக்கிடவே
தான்பிறந்த காரணத்தை
நாதனவன் நயமுரைக்க
மாதரசி வேலளிக்க
சூரனவன் துடுக்கடக்கி
மாமரத்தைக் கூர்பிளந்து
சேவலும் மயிலுமாய்
சீரலைவாயில் சிரித்து நின்றான்!

இந்திரனும் மனமகிழ்ந்து
குஞ்சரியை குலமகளைக்
குமரனுக்கு மணமுடிக்க
தேவரெலாம் வாழ்த்திவர
மாதேவன் உமையவளும்
மங்கலமாய் நாணெடுத்து
மைந்தனவன் கைகொடுக்க
பரங்குன்றில்
மணமுடித்தான்!

சூரனவன் கதைமுடித்த
கோபமது தானடங்க
ஒருகுன்றில் வந்தமர்ந்தான்
தனித்தங்கு நின்றிருந்தான்
தணியாத கோபமது
தணித்தவொரு மலையதனால்
நரமுனிவர் வாழ்த்திவரும்
தணிகைமலை தானமர்ந்தான்!

தினைப்புனத்தைக் காத்துவந்த
குறவள்ளி தனைமணக்க
வேடனாய், விருத்தனாய்
வேங்கைமர வித்தகனாய்
பலவேடம் தானணிந்து
மனவள்ளி மாலைசூட
சோலையெலாம் தவழ்ந்துவந்தான்
குன்றுதோறும் ஆடிநின்றான்!

தைப்பூச நன்நாளில்
பக்தரெலாம் கூடிநின்று
பால்காவடி பன்னீர்க்காவடி
புஷ்பக்காவடி சந்தனக்காவடி
பலவிதமாய்க் காவடிகள்
தெருவெல்லாம் ஆடிவர
மயில்மீது நீயமர்ந்து
அருள் செய்ய வா முருகா!

பாலாலே அபிஷேகம்
பன்னீரால் அபிஷேகம்
சந்தனத்தால் அபிஷேகம்
பஞ்சாமிர்த அபிஷேகம்
வெண்ணீறால் அபிஷேகம்
அத்தனையும் தாங்கிநின்று
அழகாக நீ சிரித்து
அருள் செய்ய வா முருகா!
முருகனருள் முன்னிற்கும்!!

Read more...

Sunday, December 23, 2007

குருவாய்! வருவாய்! அருள்வாய்!


குருவாய்! வருவாய்! அருள்வாய்!


ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!

ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!

ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!

மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!

சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!

பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!

தீவினை அங்கே பல்லை இளிக்கும்!

நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!

ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!

எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்

இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!

நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,

செயல்வினை யாவும் அவனது எனவே,

பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,

உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,

உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,

குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,

உருவினைப் பெருத்து சாகரம் மேவிய

அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,

ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த

திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,

அருவினை யாவும் அறுந்தோடிடுமே!

ஸ்வாமி சரணம்!

*************************************************


[தாயகம் செல்கிறேன்! ஒரு மாதம் கழித்து வருகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

Read more...

Thursday, December 20, 2007

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"
['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]


காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்
பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்
வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்
நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்
அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்தது
உயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்தது
சிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே முகிழ்த்தது
முகிழ்த்ததில் வாசங்கள் இதனுளே பரந்தது
பரந்ததை இதழ்களும் தனக்குளே மறைத்தது
மறைத்தது மௌனமாய் தனக்குளே வளர்ந்தது
வளர்ந்தது ஓர்நாள் இதழ்களை விரித்தது
விரித்ததில் வாசமும் எங்கணும் படர்ந்தது
படர்ந்தை உணர்ந்துமே வண்டினம் மொய்த்தது
மொய்த்ததில் தேனையும் பருகியே அகன்றது
அகன்றதும் ஆங்கனே மகரந்தம் நின்றது
நின்றதால் மலரும் தன் மௌனத்தில் அழுதது
அழுததை உரைத்திட ஆருமே அங்கிலை
பூக்களின் மௌனங்கள் பூவுடன் கழிந்தது
மௌனத்தின் விழித்துளி சாறெனச் சேர்ந்தது
பூக்களின் சூல்களும் கனியதாய் கனிந்தது
மகிழ்ச்சியும் துயரமும் புளிப்பதாய் சுரந்தது!

மனிதன் ஒருவன் கனியதைச் சுவைத்தான்!
சுவைத்த மனிதன் சொன்னான், 'சீ சீ! இது புளிக்குது'!!

மனிதம் அறியுமோ மலர்களின் மௌனம்!

Read more...

Tuesday, December 18, 2007

செவ்வாய் !!!


செவ்வாய் !!!


முதலில் தொடங்கி முடிவில் முடியும்
செவ்வாய்க் கதையிங்கு யானும் சொல்வேன்!

அன்னையின் வயிற்றினில் அமைதியாய் உறங்கி
உண்மையை உணர்ந்திடும் ஆசையின் வழியே
இன்பமும் துன்பமும் யாமுணர்ந் திடவே
மன்னும் உலகினில் வந்து வீழ்ந்ததும்
சுவாசம் இழுத்திட வழியெதுவெனவே
திகைப்பினில் பவள வாயினைத் திறந்தே
முதலாம் முதலாய் ஆங்கோர் காற்றை
முதலில் இழுப்பதும் செவ்வாய் வழியே!

மூச்சுக் காற்று உட்புகுந் திடவே
உடலும் உயிருடன் கலந்திட அங்கே
பிரிந்ததை எண்ணி ஒரு புறம் துக்கமும்
வந்ததை எண்ணி மறுபுறம் வருத்தமும்
ஒருங்கே சேர்ந்து உளம் உருகிடவே
ஓங்கிடும் ஒலியினைத் தானே கிளப்பி
உலகோர் உவப்ப ஈன்றவள் மகிழ
முதலில் அழுவதும் செவ்வாய் வழியே!


அழுகையின் இயக்கத்தில் உட்தீ எரிய
தனக்குத் தானே இயக்கம் என்பதை
உளமது உணர்த்த உடலும் வருத்த
முதலில் தோன்றிடும் பசி போக்கிடவே
எங்கே உணவென ஆவலாய்த் தேடி
தாயின் முலையினைப் பற்றியே சிசுவும்
தன் பசி தணித்திட பீறிடும் அமுதை
முதலில் சுவைப்பதும் செவ்வாய் வழியே!

பசியும் பறந்திட பத்தும் பிறந்திட
உடலின் இயக்கம் உணர்வில் கலந்திட
அருகே ஆரென அறியும் ஆவலில்
உடலினை நெளித்து சோம்பல் முறித்து
கண்களை விரித்து கைகளை ஆட்டி
மலர்முகம் காட்டி தாய்முகம் நோக்கி
அவளது அகமும் புறமும் மலரவே
முதலில் சிரிப்பதும் செவ்வாய் வழியே!


வளரும் வயதில் எத்தனை செயினும்
கைகளால் தொட்டு காலினால் உதைத்து
கண்களால் சிரித்து செவிவழி கேட்டு
உண்ண மறுத்து, வாந்தி எடுத்து
இன்னமும் எத்தனை குறும்புகள் செயினும்
அன்னையும் பிறரும் கேட்கத் துடிப்பது
'ம்மா' எனவே ஆசையில் அங்கே
வருமொலி அதுவும் செவ்வாய் வழியே!

அறியும் கல்வியும், புரியும் தமிழும்
சொல்லும் மொழியும், செப்பும் கவியும்
அறிவியல் அறிவும், ஆசைமொழிகளும்,
கூறிடும் காதல் கன்னல் சுவையும்,
விருப்பினைக் காட்ட வெளிவரும் சொல்லும்,
மறுப்பினைக் காட்ட மொழிந்திடும் மொழியும்,
சிரிப்பினைக் காட்ட சிந்திடும் தேனும்,
முதலாய் வருவது செவ்வாய் வழியே!


பிடித்தவர் முகமதை உள்ளில் வாங்கி
அவரை நினைந்தே உள்ளும் உருகி
கண்வழி, மடல்வழி, செவிவழி அதிலே
கனவுத்தூதுகள் கடிதினில் அனுப்பி
கொண்டவர் நெஞ்சில் தானும் புகுந்து
ஆசையில் அவருடன் தனியிடம் சென்று
அன்புடன் அவரிரு கரங்கள் பற்றி
காதலை மொழிவதும் செவ்வாய் வழியே!

இறையின் வடிவினில் மனது லயித்து
முறையாய் தோத்திரம் பாடவே முனைந்து
கரை சேர்த்திட இறை என்றே தெளிந்து
கரையும் சொல்லால் பாடல்கள் படித்து
விரைவாய்த் தினமும் ஆலயம் சென்று
இறையைத் தொழுது அவனை வணங்கி
நிறைவாய்த் தமிழில் பாசுரம் வடித்து
இறையைத் தொழுவதும் செவ்வாய் வழியே!

உழலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
பழகிடும் போதில் இன்புற்றிருப்பதும்
வழியும் உணர்வின் ஒவ்வொரு சொல்லும்
திகழும் பெருமையும் வருவது யாவும்
இகழும் நிலையினை தானே அடைவதும்
புகழும் ஏச்சும் ஒருங்கே வருவதும்
தமிழும் தரணியில் மேலும் உயர்வதும்
அழகுடன் மொழிந்திடும் செவ்வாய் வழியே!

வாடி அலைந்து, அல்லற் பட்டு,
ஓடிக் களைத்து, இனிவியலாதென்று
வாடி வதங்கி வயோதிகம் வந்து
தேடியதெல்லாம் தனதிலவெனவே
நாடிய ஞானம் நண்ணிடப் பெற்று
கூட்டை விட்டு பிரிந்திடும் வேளை
வாய்வழி பிறந்த மூச்சும் குன்றி
வாய்வழி அதுவே சென்றிடும் நேரம்
உறவும் சுற்றமும் ஓவெனவலறி
நால்வர் சுமக்க இடுகளம் வந்து
சிதையில் கிடத்தி செந்தீ மூட்டும்
சமயம் ஆங்கே வந்திடும் போது
அனைவரும் விடைகொட இறுதிக்கடனாய்
அரிசியை இடுவதும் செவ்வாய் வழியே!


செவ்வாய் தொடங்கி செவ்வாய் வழியே
ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்
எவ்வாறெனவே இதுவரை சொன்னேன்!
செவ்வாய் அதனின் சீர்மை உணர்ந்து
செவ்வாய் வழியே நல்மொழி சொல்லி
செவ்வனே செயல்கள் யாவையும் ஆற்றி
செவ்வேள் முருகனைப் பணிவாய் நெஞ்சே!

***************************************************


'செவ்வாய்க்கிழமையான இன்று அதே செவ்வாயை வேறு விதமாக எண்ணியதில் விளைந்த வரிகள்!'

Read more...

Thursday, December 13, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"கிட்டத்தட்ட 4 மாசம் ஆயிடுச்சு மன்னார், உன்னைப் பார்த்து! என்னை தப்பா நினைச்சுக்காதே!" என்று தயங்கியபடியே சொன்னேன்.

"அட! இன்னாபா நீ! இதுக்கெல்லாம் போயி தப்பா நினைச்சுக்குவானா இந்த மன்னாரு! அப்புறமேல நம்ம பிரெண்ட்சிப்புக்கு இன்னா மருவாதி இருக்கு! நீ இன்னா வேணுமின்னேவா என்னியப் பாக்காம இருந்தே! ஒரு நாவலு, 2 சிறுகதை அப்பிடீன்னு வேலையாதானே இருந்தே! நாங்கூட படிச்சேன் அந்த நாவலை! என்னை மறந்தாலும், ஐயனை மறக்காம ஒவ்வொரு பதிவுலியும் ஒரு குறளு போட்டே பாரு! அங்கேதான் நீ நம்மளை 'டச்'பண்ணிட்டேப்பா! இதுமாரி, கேட்டதை மறக்காம இருக்கே பாரு! அதப் பத்தி கூட வள்ளுவரு ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு! கேக்கிறியா?" என்று என் நண்பன் மயிலை மன்னார் சொன்னவுடன் உற்சாகமாக பேப்பர் பேனாவை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டேன்!

இனி வருவது குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் - 42 "கேள்வி"

"செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை" [411]


"இந்த ஒலகத்துல எத்தினியோ விதமான வழியில துட்டு சம்பாரிச்சு பணக்காரனா ஆயிறலாம். ஆனாக்க, இந்த 'கேக்கறது'ன்ற செல்வம் இருக்கு பாரு.... அதாம்ப்பா... எந்த ஒரு விஷயத்தையும் காதால கேட்டு மனசுல உள்வாங்கிக்கற பாரு....அதைத்தான் செல்வம்னு ஐயன் சொல்றார்ரு இங்க... ! அது எப்பிடீன்றியா? இப்ப, ஒரு விஷயத்தை நீ கண்ணால பாக்கற...அட, ஒரு பேச்சுக்கு நம்ம தலைவர் நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு பாம்பு ஸீன்னு வைச்சுக்குவோமே... அவரு முகபாவம்லாம் காட்டி பிரமாதமா நடிச்சிருப்பாரு. அதையே சவுண்டு இல்லாம ஓட்டறாங்கன்னு வைச்சுக்க... அந்த ஸீனு உனக்கு ரசிக்குமா? அதையே அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டே கேக்கறேன்னு வையி.... தலைவரு மூஞ்சி அப்பிடியே ஒன்னோட மனக்கண்ணு முன்னாடி ஓடும்! எப்பிடி அது? காதால கேட்டு மனசுல உள்வாங்கிகினதால.... இது போல இன்னும் எத்தினியோ சொல்லலாம்! இந்த கேள்விஞானம்ன்ற செல்வந்தான் அல்லா செல்வத்தைக் காட்டியும் ரொம்பப் பெருமையானது! இது எப்பிடின்னு பின்னாடி சொல்லுவாரு பாரு!"

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." [412]

"ஒனக்குப் பிடிச்சது ஒண்ணை நீ கேக்கறேன்னு வையி.... மவனே... பசி தூக்கம் அல்லாத்தியும் மறந்து 'ஆ'ன்னு கேட்டுகிட்டே இருப்பே! இப்பக்கூட பாரேன்! வயக்கமா இங்க வந்தா இன்னா பண்ணுவே நீ! மொதல்ல நாயர் கடையாண்டை நேர போயி 4 மசால்வடையை உள்ளே தள்ளிட்டு, ஒரு கப்பு டீ அடிச்ச பின்னாடிதான் எங்கிட்டவே பேச ஆரம்பிப்பே! நான் சொன்னவுடனே பேப்பர் பேனாவை எடுத்துகிட்டு கிறுக்க ஆரம்பிச்சிட்டேல்ல! அட! ஒரு தமாசுக்கு சொன்னேம்ப்பா! உடனே முறுக்கிக்காத! இப்பிடித்தான் அநேகமா அல்லாருமே இருப்பாங்க! கேக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னாத்தான் சோத்து நெனப்பே வரும்! "

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து." [413]

"இப்ப, இந்த தேவர்கள்னு ஆகாசத்துல இருக்கறவங்களைப் பத்தி சொல்லுவாங்களே, அவங்க இன்னா பண்றாங்க? எங்கியோ தொலைதூரத்துல இருந்தாலுங்கூட, இங்கேருந்து ஓதற மந்திர சத்தத்த சொல்லி நாம அனுப்பற சக்தியை எடுத்துக்கறாங்கன்னு நம்பறோமில்ல.... அது எப்பிடி நடக்குது?.... இந்தக் கேள்வி அறிவு அவங்களுக்கு இருக்கறதாலத்தான்! அப்பிடியாப்பட்ட இந்தக் கேள்வி அறிவுன்ற ஒண்ணு இருக்கற மனுஷங்க கூட, இந்த பூமியில இருந்தாலும், அந்த தேவர்களுக்கு சமமின்னு ஐயன் சொல்றாரு! கேக்கறதால வர்ற அறிவை வைச்சே சூட்சுமமா அல்லாத்தியும் 'டக்கு' 'டக்கு'ன்னு புரிஞ்சுப்பாங்க!"

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாத் துணை" [414]


"வயசாயிப்போன காலத்துல ஒன்னால சரியா பாக்க முடியாம கண்ணு மங்கலாயிடும், பசி அடைச்சுப் போயிரும். நடக்கமுடியாம தளந்து போயிருவே! 'ஒற்கம்'னா 'தளர்ச்சி'ன்னு அர்த்தம்! அப்போ உன்னால ஒண்ணுமே பண்ன முடியாது! ஆனா, நீ செயலா இருக்கறப்பவே, நாலு நல்ல நூலுங்களைப் படிக்கலைன்னாலும், அடுத்தவங்க சொல்லக் கேட்டாவது இருந்தேன்னு வையி... அது ஒனக்கு கைத்தடி மாரி பயன்படுமாம்! சும்மா கண்ணை மூடிக்கிட்டே, எங்கியும் போவாமலியே, உன்னோட அறிவாலியே, நீ நெனைச்சுப் பாத்துகினே சாந்தோசமா இருக்கலாம்! பொளுதும் போவும் ஒனக்கு! அதுனால இப்பலேர்ந்தே நாலு நல்ல விசயங்களைக் கேக்கறதுன்னு ஒரு வளக்கப் படுத்திக்க! இன்னா... வெளங்குதா?"

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." [415]

"அதுக்காவ, எவன் என்ன சொன்னாலும் கேக்கறதுன்னு அர்த்தம் இல்லை. நல்ல குணம் இருக்கறவன், நல்ல நடத்தையா இருக்கறவன் சொல்லாப் பாத்துக் கேக்கணும்! அதைக் கேட்டு நல்லா உள்வாங்கிக்கிட்டியானா, வளுக்கற பூமியில நடக்கறப்ப ஒருகைக்கோலு எப்பிடி நீ வளுக்கி விளாம இருக்க ஒதவுமோ, அப்பிடி அது ஒன்னிய கெட்ட விசயத்துல இருந்து காப்பாத்தும்!"

"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்." [416]


"இங்க ஒரு முக்கியமான மேட்டர் ஐயன் சொல்றாரு! கவனமாக் கேளு! அப்பிடி நீ கேக்கற விசயம் எம்மாம் பெருசுன்றது முக்கியமில்லை! நல்ல கருத்துக்களை மட்டுமே கேக்கணும்! அது தம்மாத்தூண்டு மேட்டரா இருந்தாலும் சரி! அது மாரி கருத்துங்கல்லாம் ஒனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை தேடித்தரும்! புரியுதா?"

"பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்." [417]

"ஒரு ஆளு ரொம்பக் கூர்மையா எந்த ஒரு விசயம்னாலும் ஆராய்ஞ்சு கவனமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கறவனா இருந்தா, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு கருத்தை அவன் தப்பாவே தெரிஞ்சுகிட்டாக்கூட, புத்தியில்லாத, முட்டாத்தனமான சொல்லை சொல்லவே மாட்டான். இதுல ஏதோ தப்பு இருக்கு! அதுனால, இப்பா இதைச் சொல்லி நாம அரைகுறைன்னு காட்டிக்க வேணாம். இன்னும் நல்லா ஆராய்ஞ்சு பாத்திட்டு உண்மை இன்னான்னு தெரிஞ்சதுக்கு பொறவால சொல்லலாம்னு 'கம்'முனு இருந்திருவான்!"

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி." [418]

"நாம இத்தினி சொல்லியும் ஆரும் சரியாக் கேக்க மாட்டேங்கறாங்களேன்னு ஐயனுக்கு கோவம் கோவமா வருது! அடுத்த மூணு குறள்ல போட்டு விளாசுறாரு இவங்களை! இதுவரைக்கும் நான் சொன்னது மாரி நல்ல கருத்துக்களை... அதையெல்லாம் கேட்டதால ஒன் காதே வலிச்சாலும் சரி... இன்னாடா இவன் தொணதொணக்கறானேன்னு ஒன் காது துளைச்சுப் போனாலும் சரி!..... கேக்கலைன்னா, ஒனக்கு காதுன்னு ஒண்ணு இருந்து, அது நல்லாவே கேட்டாலும் கூட, நீ காது கேக்காத செவிடுக்கு சமம்னு ஐயன் கண்டிசனா சொல்லிடறாரு!"

"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது." [419]


எந்த ஒரு விசயத்தையும் நல்லா கேட்டு, அதை சரியா புரிஞ்சு உள்வாங்கி வைச்சுக்கற இந்த கேள்வியறிவுன்ற ஒண்ணு மட்டும் ஒருத்தனுக்கு கிடைக்கலேன்னா, அவனால அடக்கமா, மருவாதியா வணங்கிப் பேச முடியாது!ஏன்னா அவன் அரைகுறை மாரி உளறிக் கொட்டிக்கினே இருப்பான்!"

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்." [420]


"இந்தக் கேள்வியறிவுன்ற ஒண்ணை உணராம,, அதால கிடைக்கற பலனைத் தெரிஞ்சுக்காம, நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பப் பாத்தாலும் நினைச்சுகிட்டு வயித்தை ரொப்பறவங்க இந்த ஒலகத்துல உசிரோட வாழ்ந்தாக்கூட அதனால இன்னா லாபம்னு ஐயன் ரொம்பவே சூடாறாரு!"

"இன்னா ஐயன் சொன்னது விளங்கிச்சா? அதுனால நல்லா படிச்சு, கேட்டு அறிவை விருத்தி பண்ணிக்கோ! கேக்கறது நல்லதா இருக்கட்டும்! அதை மனசுக்குள்ள நல்லா உள்வாங்கிக்கோ! இப்ப முதல் குறளைப் படி! ஏன் இதான் பெரிய செல்வம்னு சொல்றாருன்னு புரியும்!"

"சரி! சரி! நீ சூடாவாதே! இதுவரைக்கு கேட்டது போதும்! 412- ல சொன்னமாரி, இப்போ வயித்துக்கு கொஞ்சம் அனுப்பலாம்! நாயரு சூடா வடை சுட்டிருக்காரு ஒனக்காக ஸ்பெசலா! வா!" என தோள் மீது கை போட்டு அணைத்தபடியே நடந்தான் மயிலை மன்னார்!
********************************************************

Read more...

Wednesday, December 12, 2007

நிஜமான நிழல்கள்!

நிஜமான நிழல்கள் !

'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.

'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.

'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.

'ஆமா! பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா! இதோ பாரு! யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே! ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும்! எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ!' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.

அவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.
************
கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ?

ஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ! குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.
********************
'என்ன மாப்ளே! இன்னிக்கு எங்கே பார்ட்டி?' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.

'ரம்பாவுக்கு வந்திரு மச்சி! அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது! நாம இதுவரைக்கும் போகாத இடம்! அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு! சரியா? ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.

'அதுக்கென்ன! அப்படியே செஞ்சிடறேன். ரம்பாவா? எங்கேப்பா இருக்கு அது?' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.

மாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது! இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும்! குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.

அடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு! நல்ல கூட்டம்! குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.

குடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.


'என்னடா குணா! இங்க கூட்டிகிட்டு வந்திட்டே!' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே!!

'அட! சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா? இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம்! ஏன்! உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க!' எனக் கண்ணடித்தான் குணா!

'ரொம்ப நல்லாருக்கு போ! எனக்கு வேணாம்ப்பா அதுல்லாம்! நமக்கு வீட்டுல ஆளு இருக்கு! நீங்க நடத்துங்க!' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.

செழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும்!. முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்!

'என்ன பாக்கற! இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க!' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா!

கிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.
சட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்!

'டஃப் லக்!' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.

ஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

நடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில்! ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.

அதை எடுத்து வைக்கக் குனிந்தான்.

உள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா?' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்!



கிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன!
**********************


[சர்வேசனின் 'ந.ஒ.க. போட்டிக்கு]

Read more...

Sunday, December 09, 2007

நிழலும், நிஜமும்! [ந.ஒ.க.]

நிழலும், நிஜமும்!
[ந.ஒ.க.]



"யார் குழந்தை இது? இப்படி ஓடறதே?" அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்களில் அநேகம் பேர் முணுமுணுத்தார்கள்!

"சித்ரா, கொஞ்சம் உன் பையனைப் பிடிச்சு வையேன்!" ரமேஷ் கோபமாகச் சித்ராவைப் பார்த்து சொன்னான்.

"அவன் அப்படித்தாங்க! கொஞ்சம் அதிகமா விளையாடறான். இது புரியாம மத்தவங்கதான் சலிச்சுக்கறாங்கன்னா நீங்களும் கத்தறீங்களே!" சித்ராவும் பதிலுக்கு முறைத்தாள்.

"அதுக்கில்லேம்மா! இவ்வளவு ஹைப்பரா இருக்கானே! மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கட்டுமேன்னுதான் சொன்னேன்" என ரமேஷ் வழிய,
"சரி, சரி, வாடா இங்கே!" என ஓடிக்கொண்டிருந்த செந்திலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினாள் சித்ரா.

செந்தில் அடங்காமல் திமிறிக் கொண்டே அவள் மடியில் இருந்து இறங்க அடம் பிடித்து அலறினான்.

இனி இங்கிருந்தால் சரிப்படாது என முடிவு செய்து, பையனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

கூடவே வெளியில் வந்த ரமேஷ், 'இப்பல்லாம் ரொம்பவே அதிகமா ஆட்டம் போடறான் இல்லே! அடுத்த தடவை டாக்டர்கிட்ட போறப்போ, இதையும் சொல்லி என்னன்னு கேளு' என ஆலோசனை சொன்னான்.
************************
அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் ரமேஷ். அமைதியான சுபாவமும், பெற்றவர்களிடம் மிகுந்த பாசமும் கொண்ட நல்ல பிள்ளை. வாரம் இரண்டு முறையாவது அப்பா அம்மாவிடம் பேசலைன்னா தூக்கம் வராது அவனுக்கு! சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை மாதம் தவறாமல் அனுப்பி வைக்கிறான். அவர்களும் பெங்களூரில் ஒரு நல்ல ஃப்ளாட் வாங்கி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். சித்ரா இதற்கெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை. அவர் சம்பாதிக்கிறார். அப்பா அம்மாவுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு என அனுசரணையாகப் போய்விடுவாள்.

செந்தில் அவர்களது ஒரே பிள்ளை. வயது 4 முடிந்து சென்ற மாதம் தான் தடபுடலாக நண்பர்களை அழைத்து விழா கூட கொண்டாடினார்கள்.
பிறந்தது முதலே ரொம்பவும் சூட்டிகையான பிள்ளை. சதா துறுதுறுவென்றிருப்பான். அதிகம் பேச்சுதான் இன்னமும் வரவில்லை. சதா அம்மாவின் புடவைத்தலைப்பை[அல்லது துப்பட்டாவை!!] பிடித்துக் கொண்டே அலைவான். எதை எடுத்தாலும் டமாரெனப் போட்டு உடைத்து விடுவான்.

அப்படித்தான் அன்றொருநாள் யாரும் பார்க்காத போது, பாத்ரூமுக்குள் சென்று உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு, பைப்பைத் திறந்துவிட்டு, மூடத் தெரியாமல், உள்ளேயே நின்றுகொண்டு இருந்துவிட்டான்.
பையனைக் காணுமே எனத் தேடிய சித்ரா, தண்ணீர் வழிந்து வெளியில் கார்ப்பெட்டெல்லாம் நனைந்ததைப் பார்த்து, அவனைக் கதவைத் திறக்கச் சொன்னால், உள்ளிருந்து பதிலே வராமல், கலவரமாகி,.. ரமேஷுக்கு ஃபோன் போட்டு வரவழைத்து,..... ஒரே களேபரமாகிப் போயிற்று.
******************************
சொன்னபடியே டாக்டரிம் சென்று வந்த பின்னர் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

'அப்படில்லாம் இருக்காதுங்க! டாக்டர்தான் இன்னும் டெஸ்ட்டெல்லாம் எடுத்த பிறகு சொல்றேன்னு சொல்லியிருக்காரே! இப்பவே நாம ஒண்ணும் கற்பனை பண்ணிக்க வேணாம்!' சித்ரா உறுதியுடன் சொன்னாள்.

'அது சரிதான்! இருந்தாலும்....' என இழுத்தான் ரமேஷ்.

'என்ன இருந்தாலும்..? எல்லாம் சரியாயிரும். அப்படியே இருந்தாலும் இந்த ஊருல இல்லாத வசதியா? அமெரிக்காவுலதான் இதுக்கு ரொம்பவும் அருமையான ட்ரீட்மெண்ட்டுல்லாம் கிடைக்குதாம்' எனத் தைரியமாகச் சொன்னாள் சித்ரா.

'எனக்கென்னவோ எதுக்கும்.... ' என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.
**********************
ஒருமாதம் கழிந்தது. இப்போதெல்லாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை இருவரும்.

சித்ரா சதா கணினியில் எதையோ தேடிக் கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருந்தாள்.

அலுவலில் வேலை அதிகம் என ரமேஷ் லேட்டாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மாலை உற்சாகமாக வீடு திரும்பினான் ரமேஷ்.
"சித்ரா! அடுத்த வாரம் நாம் இந்தியா போறோம். 2 மாசம் ட்ரிப்! என்னென்ன பேக் பண்ணனுமோ எல்லாம் ரெடி பண்ணிக்கோ!" என்றான்.

"என்ன திடீர்னு? சொல்லவே இல்லையே! எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்" எனச் சட்டென சித்ராவும் உற்சாகமானாள்.

மீதி நாட்களில் தேவையான துணிமணிகளை இரண்டு சூட்கேஸுகளில் அடைத்தாள்.

கிளம்பும் நாள் வந்தது!

ரமேஷின் நண்பன் சுந்தர் காரெடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சித்ரா செந்திலுடன் பெட்ரூமில் ஏதோ மும்முரமாய் இருந்தாள்.

'சித்ரா, சுந்தர் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பி வா' என ரமேஷ் குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து பதில் ஒன்றும் வராததைக் கண்டு பெட்ரூமுக்குள் செல்ல முனைந்தான். கதவு உட்பக்கமாய் தாளிட்டிருந்தது.

'சித்ரா, ஏய்! என்ன பண்றே! கதவைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு?" எனப் பொறுமையிழந்து கத்தினான் ரமேஷ்.

"நானும் செந்திலும் வரலை! உங்க பெட்டி வெளியில வைச்சிருக்கேன். நீங்க போகலாம் உங்க அப்பா அம்மாகிட்ட!" சித்ரா உள்ளிருந்து பேசினாள்.

"ஏய்! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா! எதுக்கு இப்படி பண்றே?" கோபத்துடன் இரைந்தான் ரமேஷ்.

"எனக்கு ஒண்னும் ஆகலை. ரெண்டு நாளைக்கு முந்தி நீங்க உங்க நண்பர் சுந்தரோட என் காதுல விழாதுன்னு நினைச்சு பேசினதையெல்லாம் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். நம்ம குழந்தைக்கு ஆட்டிஸம்[autism]ன்றதால நீங்க உங்க வேலையை அங்கே மாத்திகிட்டு உங்க அப்பா அம்மா சொல்படி இந்தியாவுலியே தங்கப்போறீங்கன்னு சொன்னதெல்லாம் என் காதுலியும் விழுந்தது. ரெண்டு மாச ட்ரிப்புன்னு சொன்னதெல்லாம் வெறும் பொய்தானே! ஒரு பொண்டாட்டியா என்னை மதிச்சு என்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணக் கூட இல்லை நீங்க. அவகிட்ட சொல்லிட்டியான்னு கேட்ட சுந்தருக்கு என்ன சொன்னீங்க..... அவளுக்கு இது இப்ப தெரிய வேணாம். அவ இந்த ஊரை விட்டு வர மாட்டா. இங்கேதான் இதுக்கு நல்ல ட்ரீட்மெண்ட்
இருக்குன்னு மறுத்திடுவான்னு சொன்னீங்கள்ல.
ஸோஷியல் செக்யூரிட்டி ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என் பையனுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கறதுன்றதை எல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க போகலாம். உங்க ஃப்ளைட்டுக்கு லேட் ஆயிடுச்சு. நான் வரலை. இதுதான் என் தீர்மானமான முடிவு" சித்ரா உள்ளிருந்ந்து ஒரு ஆவேசத்துடன், ஆனால் அமைதியாகப் பேசினாள்.

'இதுக்காக நீ ரொம்பவே வருத்தப் படப் போறே! உன் திமிருக்கு தகுந்த பலன் உனக்குக் கிடைக்கும்! எங்க அப்பா பேச்சை நான் மீற மாட்டேன். பை!' தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ரமேஷ்.

'நான் இருக்கேண்டா உனக்கு! நீதான் எனக்கு முக்கியம்!' வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சிரித்தபடி செந்திலை அணைத்தாள் சித்ரா!

இதெதுவும் புரியாத பரப்பிரம்மாய் ஏதோ ஒரு பொம்மையை உடைத்துக் கொண்டிருந்தான் செந்தில்!
******************************


"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

Read more...

Monday, December 03, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

Read more...

Wednesday, November 28, 2007

"ஐயப்பன் தினசரி பூஜை"

"ஐயப்பன் தினசரி பூஜை"


கார்த்திகை 1-ம் தேதி ஆத்திக அன்பர்களுக்கு ஒரு முக்கிய தினம்!
ஐயப்ப பக்தர்கள் அன்றுதான் மாலை அணிந்து, மண்டலவிரதத்தைத் துவங்குவார்கள்!
நானும் கடந்த பல ஆண்டுகளாக இந்த விரதத்தை செய்து வருகிறேன்.
எளிய தமிழில் ஒரு பூஜை முறை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில், இதை எழுதி, நான் நடத்தும் பூஜைகளில் இதனைக் கடைபிடித்தும் வருகிறேன்.
ஐயப்ப பக்தர்களுக்காக இதை இங்கே வெளியிடுகிறேன்.
தேவைப்படுபவர்கள் இதனைப் பின்பற்றலாம்..... பிடித்திருந்தால்!

முதலில் பூஜை முறை பாக்களை அளித்துவிட்டு, பின்னர் இதன் தொடர்பாக சில பதிவுகள் அளிக்க எண்ணம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

--------------------------------------------------------

"ஐயப்பன் தினசரி பூஜை"
[எளிய தமிழில்]

விநாயகர் காப்பு:
முழுமைக்கும் முதலான வெண்களிற்று விநாயகனே!
பழுதின்றி பூஜை நடக்க முன்னின்று அருள் செய்வாய்!


குரு வணக்கம்:
குருவுக்கும் குருவான, திருவான குருவுருவே!
உறுமனத்தில் அன்பிருக்க, உருவாக அனுக்கிரஹிப்பாய்!


தீப வணக்கம்:
வெளியிருட்டை விலகச் செய்யும் சுடரான நெய்விளக்கே!
அறியாமை இருளகற்றி அடியேனைக் காத்திடுவாய்!

ஐயப்பன் அழைப்பு:
அந்தமும் ஆதியில்லா, அருட்பெரும் ஜோதிதேவா!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!

ஐயப்பன் வரவேற்பு:
வந்தனை வந்தனை நீ! வரதே வான்முகிலே ஐயா!
சிந்தனை களித்து இங்கே, சிறப்புடன் வீற்றிருப்பாய்!

சந்தனம் அளிப்பு:
பந்தனை அறுத்து எம்மை, பவக்கடல் தாண்டச் செய்ய,
சந்தனம் ஏற்பாய் ஐயா! சபரிமலை வாசனே!

குங்குமம் அளிப்பு:
ஆரியங்காவு ஐயனே! அடியரைக் காக்க நீயே,
குங்குமம் ஏற்பாய் ஐயா! குளத்துப்புழை பாலகனே!

மலர் சாற்றல்:
அலர்ந்திடக் கொண்டுவந்தோம்! அல்லல்கள் தீரவென்று,
மலர்களை ஏற்று எங்கள், மயக்கமும் தவிர்ப்பாய் ஐயா!

அக்ஷதை தூவல்:
பக்ஷமும் கொண்டு எங்கள், பவவினை பறந்து ஓட,
அக்ஷதை ஏற்றுக்கொண்டு, அருள்புரி ஐயப்ப தேவா!

தாம்பூலம் அளிப்பு:
வேம்பாகும் உலகவாழ்வு, வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்று எம்மை, தயாபரா ஆதரிப்பாய்!

கனி படைத்தல்:
பனிரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரமெல்லாம்,
கனியிதை ஏற்றுக்கொண்டு, கடைக்கண்ணால் பார்த்திடாயோ!

[ஐயப்பன் ஸஹஸ்ரநாமம்/அஷ்டோத்திரம்/ஸ்தோத்திரங்கள்/ பஜனைப் பாடல்கள் இப்போது செய்யலாம்.]

தூபம்:
பாபங்கள் விலகிச் சித்தம், பரிசுத்தமாகவென்று,
தூபமும் ஏற்றுக்கொண்டு, துயர்கெட அருள்வாய் ஐயா!

தீபம்:
தாபமாம் பிறப்பிறப்பு, தணித்துயர் முக்திமேவ,
தீபமும் ஒளிர ஏற்று, திகம்பரா அருள்வாய் ஐயா!

நைவேத்தியம்:
ஐவேதனைப் புலன்கள், அடங்கிட ஐயா இந்த,
நைவேத்யம் ஏற்றுக் கொள்வாய்! நாயகா லோகவீரா!

கற்பூரம்:
அற்பமாம் ஜகத்துமாயை, அழிந்தருள் ஞானம் மேவ,
கற்பூரஜோதி ஏற்று, கனிவுடன் அருள்வாய் ஐயா![x3]

துதி:
ஐயனே! அருளே! போற்றி! ஐயப்பதேவா போற்றி!
எம்மையே ஆதரித்து, இருள்கெட அருள்வாய் போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம், முற்றிட விதிப்பாய் போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய் போற்றி!

வேண்டல்:
அருளோடு செல்வம் ஞானம், ஆற்றலும் அன்பும் பண்பும்,
பொருள்நலம் பொறுமை ஈகை, பொருந்திடச் செய்வாய் ஐயா!
ஆயுள் ஆரோக்யம் வீரம், அசைந்திடா பக்தி அன்பு,
தேயுறாச் செல்வம் கீர்த்தி, தேவனே அருள்வாய் ஐயா!

பிழை பொறுக்க வேண்டல்:
அறியாமை இருளில் சிக்கி, ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவனே பொறுப்பாய் ஐயா!

மந்திரம் சடங்கு வேள்வி, மதிப்புறு உபசாரங்கள்,
வந்தனை துதிகள் ந்யாஸம், வழுத்தின ஜபமும் தியானம்
இந்தவார் செய்தபூஜை, இருந்திடும் பிழைகள் எல்லாம்,
சிந்தையில் கொள்ளாதேற்று, சீர் பெற அருள்வாய் ஐயா!

கனிமலர் தூப தீபம், கற்பூர நைவேத்யங்கள்,
நனியிலாச் சிறிதானாலும், ஐயப்பா நிறைவாய்க் கொள்வாய்!

[தெரிந்த அளவில் சரணங்கள் சொல்லவும்!]
இதன் தொடர்ச்சி நாளை வரும்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Read more...

Monday, November 26, 2007

"குமார கவசம்"

"குமார கவசம்"

கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு உந்தலின் காரணமாக நானும் ஒரு
கவசம் எழுதினேன். "சித்தர்" கதை அப்போது நிறைவுறாதலால், இதனை அப்போது இடவில்லை.
இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப்பிட வேண்டாம். என் முருகனுக்கு நான் செலுத்திய சிறு காணிக்கை என்ற அளவில் படித்து,
விரும்பினால் கருத்து சொல்லவும். நன்றி.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா!

"குமார கவசம்"


படிப்போர்க்குப் பெருமைவரும் , பகையும்போம், பண்ணில்

வடிப்போர்க்கு ஞானம் பெருகி - சிவமும் கூடிவரும்

பாமரரும் படித்தவரும் புகழ்ந்தேத்தும் சிவ

குமாரக் கவசந் தனை!

எனதுஅகமடங்க என்னகம்புகுந்த
மனமயில் வாகனனே கதி!


--நூல்--

குமரனின் குணங்களைக் குற்றமில்லாமல்
அடியவன் நானும் அன்புடன் கூறிட
கஜமுகன் கணேசன் கால்களைப் பிடித்தேன்
காத்திட வேணும் கருத்தினில் நிறையணும்

மோஹனக்குமரன் மயிலினில் ஏறி
வேகமதாக என்னிடம் வந்து
வாகனமாக என் மனம் கொண்டு
காக்கணும் இந்தப் பாக்களில் நின்று

ஆரணம் ஓதும் அடியவர்க்கெல்லாம்
காரணமின்றியே காத்திட வருவான் [10]
நாரணன் மருகன் நன்மையே புரிவான்
சீரலைவாயோன் செம்மையே செய்வான்

கந்தாவென்றால் இந்தாவென்பான்
கந்தாவென்றால் சொந்தமாய் நிற்பான்
கந்தாவென்றால் கவலைகள் தீரும்
கந்தாவென்றால் மூத்தவன் மகிழ்வான்

என்னகம் அகற்ற இங்கே வருக
என்னுளமறிந்து விரைவினில் வருக
கண்ணெனப் போற்றும் கண்நுதலோனிடம்
சொல்லியும் வருக சடுதியில் வருக [20]

அன்னை பார்வதி மடியினிலிருந்து
மெல்லவிறங்கி மயிலினில் வருக
அண்ணன் கணேசன் அடியைப் பணிந்தே
அவனருள்தனையும் எடுத்தே வருக

மாமன் மாமியர் அனைவரை வணங்கி
மகிழ்வுடன் வருக மயிலினில் வருக
அழைத்ததும் வருக அணைத்திட வருக
எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க

அமரர்தலைவா வருக வருக
குமரநாயகா வருக வருக [30]
அன்பருக்கன்பா வருக வருக
துன்பம் தொலைத்திட வருக வருக

சரவணபவனே வருக வருக
ரவண பவச வருக வருக
வணப வசரனே வருக வருக
ணபவ சரவ வருக வருக

பவசர வணனே வருக வருக
வசர வணப வருக வருக
சடக்ஷரத்தோனே வருக வருக
சஷ்டியின் தலைவா வருக வருக [40]

கார்த்திகைபாலா வருக வருக
சிவசக்திபாலா வருக வருக
தேவர்கள் துன்பம் தீர்த்திட வந்தாய்
தேவாதிதேவன் நெற்றியில் பிறந்தாய்

தீப்பொறி வெப்பம் தாங்கிடஅஞ்சி
வாயுவும் தீயும் தூக்கிடச் சென்று
கங்கையில் இடவே அவளும் வறள
சரவணப்பொய்கையில் கமலத்தில் தவழ்ந்தாய்

கார்த்திகைப்பெண்டிர் மார்பினில் இருந்தாய்
அன்னையும் மகிழ்ந்து அன்புடன் சேர்த்து [50]
ஆசையில் அணைத்து அருளது வழங்க
ஆறுமுகன் என அருள்செய வந்தாய்

சூரனை வேலால் கூறாய்ப் பிளந்து
சேவலும் மயிலுமாய்த் தன்னுடன் வைத்துத்
தேவர்கள் குறைகளைக் கனிவுடன் தீர்த்துத்
தேவகுஞ்சரி கரம்தனைப் பிடித்துத்

தேவர்கள் சேனாபதியானவனே
பாவங்கள் போக்கும் பன்னிருபுயனே
குறமகள் வள்ளியைக் கடிமணம் புரிய
கரிமுகன் அண்ணனைத் துணைக்குமழைத்து [60]

வேடனாய் விருத்தனாய் வேங்கை மரமாய்
வேடமணிந்து லீலைகள் புரிந்து
வள்ளியின் மனதினில் கள்ளமாய்ப் புகுந்து
நம்பிராஜனை நயமாய் வென்று

குறமகள் வள்ளியை மணம் செய்தவனே
தேவகுஞ்சரியை இடப்பக்கம் வைத்து
வள்ளியை வலப்பக்கம் வடிவுடன் இருத்தி
விண்ணவர் மண்ணவர் துயர்களைத் துடைத்துத்

திருப்பரங்குன்றம் , திருச்சீரலைவாய்
திருவாவினன்குடி திருவேரகமும் [70]
திருத்தணி பழமுதிர்சோலையமர்ந்து
அறுபடை வீட்டில் அருள் புரிபவனே

என் தலை வைத்துன் பொன்னடி பணிந்தேன்
தலைமுதல் கால்வரை தயவுடன் காக்க
விழிகளிரண்டையும் வேலவர் காக்க
செவிகளிரண்டும் செந்திலோன் காக்க

நாசியை நல்லூர்க் கந்தன் காக்க
கன்னமிரண்டும் கதிர்காமன் காக்க
செவ்வாயதனைச் சேனாபதி காக்க
நாவையும் பல்லையும் அருணையோன் காக்க [80]

கழுத்தும் கைகளும் கந்தனைத் துதிக்க
கனிவோடு குன்றக் குடியோன் காக்க
மார்பையும் வயிற்றையும் மருதமலை காக்க
அமரர் தலைவன் குறிகளைக் காக்க

கால்களை விரல்களை விராலிமலை காக்க
ஆசனவாயை அழகன் காக்க
முதுகைப் பரிவுடன் பிரான்மலை காக்க
முழுவுடலும் முத்துக் குமரன் காக்க

எவ்வித நோயும் எவ்வித இன்னலும்
எனையணுகாமல் எட்டுக்குடி காக்க [90]
காலை தொடங்கி துயிலும் வரையிலும்
புரியும் செயல்கள் அனைத்தையும் காக்க

கந்தனின் பெயரை அனுதினம் துதிக்க
கந்தா கடம்பா கருணாகரனே
கார்த்திகைமைந்தா மயில்வாகனனே
சஷ்டிகுமரா ஷண்முகா வேலா

அறுபடைக் குமரா அருணாசலனே
சிவனின் குருவே குருவின் உருவே
ஔவைக்கு அருளைப் பொழியும் குமரா
தணிகாசலனே தண்ணீர்மலையே [100]

தங்கரதத்தில் வலம்வரும் வேலா
மோஹங்கள் தீர்க்கும் மோஹனச் செல்வா
செல்வக்குமரா செந்திலாண்டவா
சூராதி சூரா வீராதி வீரா

விஜயமளிக்கும் விஜய குமாரா
சரவணபவனே ரத்னகுமாரா
வள்ளிமணாளா நவமணியாண்டவா
பவமழிப்பவனே வரமளிப்பவனே

சந்திர சூரியர் தாரகை போற்றும்
இந்திரன் மகளின் இதயக்காவலா [110]
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகாவெனவே

மூச்சுளவரைக்கும் உன்றனைப் போற்றி
உன்னில் உருகி உன்னுள் கரைந்து
அற்புத ஞானம் அருணைக்கு அருளித்
தந்ததுபோலெனைத் தயவுடன் காக்க

ஏழையேன் என்றன் இன்னல் களைக
என்றும் என்னை உன்னுடன் கொள்க
உன்னைப் போற்றியே உய்ந்திடும்வண்ணம்
ஒருவரம் தருக உன்னடி தருக [120]

சங்கரன் குமாரன் கவசமிதனைச்
சந்ததம் பாடச் சங்கடம் விலகும்
சந்தானபாக்கியம் சகல சுகங்களும்
சஞ்சலமின்றிச் சந்ததம் சேரும்

கருணைக்கடலே கந்தா போற்றி
பெருமைக்குரிய தலைவா போற்றி
அறுபடைவீட்டில் அமர்ந்தோய் போற்றி
அன்பருக்கருளைப் பொழிவோய் போற்றி

சீர்மிகு வள்ளி சரணங்கள் போற்றி
வான்மிகு தேவ குஞ்சரி போற்றி [130]
அறுமுகன் அடியார் அனைவரும் போற்றி
அவரைப் பணிவார் மலர்ப்பதம் போற்றி

சரணம் சரணம் ப்ரணவா சரணம்
சரணம் சரணம் குருகுகா சரணம்
சரணம் சரணம் ஸ்கந்தா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம் !! [136]

ஓம்! ஓம்! ஓம்!



Read more...

Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41


முந்தைய பதிவு இங்கே!


39.
"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

கந்தன் அந்தப் பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான்!

இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

புளியமரம் அவனைப் பார்த்து 'இத்தனை நாளா எங்கே போயிருந்தே! வா! வா!' என்பது போல் தன் கிளைகளை ஆட்டியது!

தன்னோட ஆடுகள் அதனடியில் படுத்துறங்கும் காட்சி அவன் மனத்துள் விரிந்தது.

அந்தக் கனவு மட்டும் வராமல் இருந்திருந்தால்....!!!!!!!!!!!

இப்போது ஆடுகள் இல்லை. அவன் கையில் ஒரு கடப்பாறை!

அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனத்துக்குள் இதுவரையில் அவன் கடந்து வந்த காட்சிகள் ஒரு நிழற்படம் போல ஓடியது.
திரும்பத் திரும்ப வந்த அந்த கனவு, அந்த குறி சொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர், பணத்தைத் திருடிக் கொண்டு ஓடிய திருடன், அண்ணாச்சி......
இப்படியே அனைவரும் அவன் கண்முன் வந்தனர். எல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடந்திருக்கு. எப்படி தவறாக முடியும்? அவன் எண்ணம் இன்னமும் தொடர்ந்தது.

கடைசியாக, மஹாபலிபுரத்தில் அந்தத் திருடன் சொன்ன சொல் அவன் காதில் மீண்டும் ஒலித்தது!

"தெற்கு கோடியில கடலோரத்துகிட்ட இருக்கற ஒரு ஊருல ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூடமேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவன் அவ்ளோதூரம் போவான்!"

சிரித்துக் கொண்டே எழுந்து, கடப்பாறையை எடுத்து அந்த மரத்தடியில் ஒரு போடு போட்டான்!

'பெரிய கில்லாடிய்யா நீ!' வானத்தைப் பார்த்துக் கத்தினான் கந்தன்! 'எல்லாமே உனக்கு அப்பவே தெரியும்! அதான் அந்த துறவிகிட்டக் கூட ஒரு கட்டித் தங்கத்தைக் கொடுத்து வைச்சிட்டுப் போனே! நான் ரத்தம் வழிய, வழிய, அவர் மடத்துக் கதவைத் தட்டினப்ப, அவர் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, அது ஆயுசுக்கும் மறக்காது! என்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கலாம்ல! ரொம்பவே குசும்புதான்யா உனக்கு!'

"இல்லை! நான் அப்பவே சொல்லியிருந்தா நீ அந்தக் கல்லுக்கோவிலைப் பார்த்திருக்க மாட்டே! அழகா இருந்திச்சுல்லே அது! கூடவே எத்தனை அனுபவங்கள்! " என ஒரு குரல் வானத்திலிருந்து கேட்டது!

நிமிர்ந்து பார்த்தான்! ஒரு அழகிய வெண்புறா தன் சிறகுகளை விரித்தபடி அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது!

'ரொம்பவே லொள்ளுதான் உங்களுக்கு!' எனச் சிரித்தபடியே சொல்லிக் கொண்டே மீண்டும் கடப்பாறையைப் போட்டான் கந்தன்!

ஒரு அரைமணி நேரத்தில் 'ணங்'கென்று எதுவோ தட்டுப் பட்டது!

சிறிது நேரத்தில், ஒரு இரும்புப்பெட்டி தெரிந்தது! அதைத் திறந்தான்! உள்ளே, தங்க நாணயங்கள், நகைகள்!!

தன் கைப்பையில் இருந்து பெரியவர் கொடுத்த அந்த இரு கற்களை எடுத்தான்.

இதற்கு முன் ஒரே ஒரு தடவைதான் அவைகளை எடுத்திருக்கிறான். இவைகளை எடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் அவனுக்கு சகுனங்கள் உதவி விட்டன!

அந்தக் கற்களை மார்போடு அணைத்துக் கொண்டான்.

இப்போது அவைகள்தான் "இதெல்லாம் கனவல்ல; நிஜம்தான்!" எனச் சொல்லிய அந்த தங்கமாலை அணிந்த பெரியவரின் நினைவாக இருப்பவை! அதுவே அவரை மீண்டும் அவன் கண்முன்னே நிறுத்தின,,.... அவரை இனி பார்க்க முடியாதெனினும்!

'இதெல்லாம் கனவல்ல! நிஜம்தான்! வாழ்க்கை எப்போதுமே தான் கண்ட கனவை விடாமல் தொடர்ந்து செல்பவர்க்கு நல்லதையே செய்கிறது!' கந்தனின் மனது துள்ளியது!

குறி சொன்ன கிழவிக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டுமே என்று நினைவுறுத்தியது!

காற்று ஒன்று மெல்ல வீசியது!

ஊழிக்காற்றல்ல அது!

இதமான ஒரு மலைவாசம் அதில் வீசியது!

மூலிகைகளின் மணம் அதில் கலந்து வந்தது!

அதனின்று ஒரு தனி மணம் கமழ்ந்து அவன் இதழ்களில் வந்து முத்தமிட்டது!

கந்தன் சிரித்தான்.

இதுதான் முதல் தடவையாக அவள் அனுப்புவது!

'இதோ வருகிறேன் பொன்னி!' உரக்கக் கத்தினான்!


[முற்றும்]
***********************************************************************************

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

****************************************************************

ஒரு மண்டலகாலம் இந்தக் கதை வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு!

தனது 82-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் "சித்தருக்கெல்லாம் பெரிய சித்தரின் " பிறந்தநாளன்று நிறைவுறுவது இன்னும் சிறப்பு!

இக்கதையை இதுகாறும் தொடர்ந்து படித்து, பின்னூட்டம் அளித்த அனைவர்க்கும் எனது நன்றி.

முன்னமே சொன்னதுபோல இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. என்னை மிகவும் பாதித்த 'தி அல்கெமிஸ்ட்' என்னும் கதை இதற்கு ஆதாரம்.

அத்துடன் இன்னும் சில பெரியவர்கள் சொன்ன ஆன்மீகக் கருத்துகளையும் சேர்த்து, நம்மவர்க்குப் புரியும் வகையில் புதிய களம் அமைத்து, நமது தமிழ்க்களத்தில் உலவ விட்டிருக்கிறேன். இதை ஊகித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு என் நன்றி.

உங்கள் கனவுகளைத் தொடர்ந்து தீவிரமாகச் செல்லுங்கள் ! கனவுகள் மெய்ப்படட்டும்!

அன்புவழி அனைவரும் செல்ல வாழ்த்துகள்!

நன்றி தெரிவிக்கும் இந்நாளில் [Thanks giving Day] அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்!









Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

முந்தைய பதிவு இங்கே!

38.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு." [426]



அக்கம் பார்த்துக் கொண்டே, பயமின்றி நடந்தான் கந்தன்.

கூட சித்தரும் இல்லாததால், தன் மனது என்ன சொல்லுகிறதெனக் கவனிக்கத் தொடங்கினான். புதையல் இருக்குமிடத்தை அதுதான் இனிக் காட்டும் எனவும் நம்பினான்.

"புதையல் எங்கே இருக்குதோ, அங்கேதான் உன் மனசு உன்னை இட்டுச் செல்லும்!' சித்தரின் குரல் உள்ளே கேட்டது.

ஆனால், அவன் இதயம் வேறென்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது.

'உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கந்தா! ஒரு சாதாரண சின்னப் பையனா ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த நீ, எதையெதையெல்லாமோ கடந்துவந்து, இப்ப அநேகமா புதையல் எடுக்கற இடத்துகிட்ட வந்துட்டே! பெரிய கில்லாடிதான் நீ! காத்தாக் கூட மாறிக் காமிச்சிட்டே!' என்று புகழ்ந்தது.

'அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீதான் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும் இப்ப' என அதட்டினான்.

'உன் கண்ணுலேருந்து தண்ணி வர்ற அளவுக்கு எங்கே, எந்த இடத்துல உனக்கு ஒண்ணு நடக்குதோ அங்கே நான் இருப்பேன். உன் புதையலும் தான்!' என்று கிசிகிசுத்தது.

மெதுவாக நடந்தான் கந்தன். இரவு தொடங்கி முழுநிலவு வெளிவந்து வெளிச்சத்தைக் கூட்டியது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது!

ஒரு சின்ன குன்று எதிர்ப்பட்டது. அதன்மீது ஏறினான். அவன் கண்ட காட்சி அவனைப் பரவசப்படுத்தியது!

அழகிய கருங்கடல் அலைகளோடு ஆரவாரித்தது. அதன் கரையருகே அழகிய கற்பாறைகளால் குடைந்தெடுத்த கோவில்கள்! நிலவுவெளிச்சத்தில் எல்லாமே பளபளத்தன.

கந்தனின் கால்கள் தானாக மண்டியிட்டன. தரையை முத்தமிட்டு வணங்கினான்.


கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது!
'எனக்கு ஒரு கனவைக் காண்பித்து, அதை ஒரு பெரியவர் மூலமா உறுதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்காரன் மூலமா ஆதாரம் கொடுத்து, ஒரு சித்தர் மூலமா அதை அடையவைத்ததற்கும், இறைவா! உனக்கு என் நன்றி! அது மட்டுமா! காதல் நிரம்பிய ஒருவனால் அவன் நினைத்ததை அடைய முடியாமல் போகாது எனத் தனக்குக் காட்டிய ஒரு பெண்ணை எனக்குக் கொடுத்ததற்கும் சேர்த்தே நன்றி!'

மனமார, வாய்விட்டுக் கதறினான் கந்தன்!

இப்படியே திரும்பிவிடலாமா என யோசித்தான்.


'கனவில் கண்டது உண்மைதான் எனத் தெரிஞ்சாச்சு.இப்படியே திரும்பி, பொன்னிகிட்ட போயிறலாம். இருக்கற தங்கத்தை வித்து, கொஞ்சம் ஆடுமாடு வாங்கி, அதை வைச்சு தொழில் பண்ணி மானமா வாழ்ந்திறலாம். இப்ப சித்தருக்குத் தெரியாத வித்தையா? அவர் தங்கம் பண்றதுகூடத் தெரிஞ்சு
வைச்சிருக்காரு. அதுக்காக இதை என்ன, எல்லார்கிட்டயும் போயிக் காமிச்சுகிட்டாரா என்ன? இதைப் பாக்கறதுக்குள்ள, என்னெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சு. இப்ப புதையலுக்கு என்ன தேவை?' இப்படியெல்லாம் எண்ணம் ஓடியது.

'இவ்வளவு தூரம் வந்தாச்சு. கனவு மெய்ப்படும் நேரம் வந்தாச்சு! இதோ இன்னும் கொஞ்ச தூரம் போனா, எதுக்காக வந்தோமோ அது கிடைக்கப் போகுது. அதில்லாம திரும்பினா, இதுவரைக்கும் பட்ட பாடெல்லாம் வீண்!'என நினைத்துக் கொண்டே கண்களைத் தாழ்த்தி தான் மண்டியிட்ட இடத்தைப் பார்த்தான்.

அவன் கண்ணீர் பட்ட இடம் கண்ணில் பட்டது! ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி எங்கிருந்தோ இந்த நேரத்தில் பறந்து அவன் தோளில் வந்து உட்கார்ந்தது! வண்ணத்துப்பூச்சி பறப்பது ஒரு நல்ல சகுனம் என அவன் மனது சொல்லியது!

சுற்று முற்று பார்த்தான். யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டபின், அந்த இடத்தைக் கைகளால் பரபரவெனத் தோண்டத் துவங்கினான். அருகில் கிடந்த ஒரு கம்பையும் வைத்துக் கிளறினான். மண் பிரதேசமாக இருந்ததால் தோண்டுவதும் எளிதாகவே இருந்தது!


தோண்டத் தோண்ட மண்ணும், சிறு பாறைகளும் வந்ததே தவிர புதையல் எதுவும் தென்படவில்லை!

அவன் கைகள் வலித்தன. நகமும், சதையும் பிய்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.இனியும் தோண்டணுமா என நினைத்தான். மனம் சொல்லியது நினைவுக்கு வரவே, விடாமல் தோண்டினான். ஒரு பாறை ஒன்று கையில் தட்டியது. முனைப்புடன் அதை அகற்றலானான்.

பின்னால் ஏதோ காலடி சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நிலவொளியின் பின்னே வந்ததால் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை.

'என்ன தோண்டிகிட்டு இருக்கே இங்கே?' ஒரு குரல் அதட்டியது.

பயத்தால் அப்படியே உறைந்தான் கந்தன். பாறைக்குக் கீழே புதையல் இருக்கிறதென நிச்சயமாக ஒரு உணர்வு சொல்லியது. இதை எப்படிச் சொல்வதென மனம் அஞ்சியது.

'என்ன சும்மா இருக்கே? என்னத்தை மறைச்சு வைக்கறே?' அதட்டல் மேலும் அதிகமாகியது.

'நான் எதையும் மறைக்கலை.' கந்தன் சற்று தைரியத்துடன் சொன்னான்.

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் அவர்களில் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு, ஒரு டார்ச் வெளிச்சத்தில் அவன் தோண்டிக் கொண்டிருந்த குழியை ஆராய்ந்தான்.
இன்னொருவன் கந்தனிடம் இருந்த பையைப் பிடுங்கி, அதில் துழாவினான்.

கையில் தங்கக்கட்டி அகப்பட்டது!

'ஏய்! இவன்கிட்ட தங்கம் இருக்குடோய்!' எனக் கூவினான்! கவனமாக அதைத் தன் மடியில் பத்திரப் படுத்திக் கொண்டான்!

'அதான் அந்தக் குழிக்குள்ள மறைச்சு வைக்கறான் போல! தேடுறா' என ஒருவன் ஆணையிட்டான்.

கந்தனையே மீண்டும் தோண்டச் செய்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. கந்தனை அடிக்கத் துவங்கினார்கள், உண்மையைச் சொல்லச்சொல்லி.

ரத்தம் வழிய கந்தன் கீழே சரிந்தான். சாவு நிச்சயம் என நடுங்கினான்.

'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணத்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என சித்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'ஒரு புதையலுக்காகத்தான் இங்கே தோண்டிகிட்டு இருந்தேன்' என உரத்த குரலில் கத்தினான். ' எனக்குக் கனவுல இந்த இடம் தெரிஞ்சுது. குறி சொல்ற ஒரு ஆத்தா கூட இது சரியான இடம்தான்னு சொன்னாரு. அதான் யாருமில்லாத நேரமா வந்து தோண்டிகிட்டு இருக்கேன்'.



அவர்களில் ஒருவன் இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தான்!
'அட, விடுங்கப்பா அவனை. செத்துத் தொலைக்கப் போறான். இவனை மாரி அலையற ரொம்ப ஆளுங்களை நான் பார்த்திருக்கேன். இவங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைன்னுதான் தோணுது. அந்தத் தங்கந்தான் இவன்கிட்ட இருந்த ஒரே பொருள் போல. அதைக் கூட அவன் திருடினாலும் திருடியிருப்பான். வாங்கடா போவலாம்'
என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.

அப்படியே தரையில் சாய்ந்தான் கந்தன் அநேகமாக மயங்கிய நிலையில்!

'நீ சாக மாட்டே! பொழைச்சுப்பே! ஆனா, இனிமே உசிரோட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இப்படி ஒரு முட்டாளா இருந்திட்டோமேன்னு நினைச்சு நினைச்சு புலம்பப் போற! ஏன் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னே,இதே இடத்துல.... நீ நிக்கறியே... அதே இடந்தான்... இந்த இடத்துல எனக்கும் ஒரு கனவு வந்திச்சு! தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவனாச்சும் அவ்ளோதூரம் போவானா!
அதுமாரித்தான் நீயும்! உன்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு. எப்பிடியோ போய்த் தொலை!'

அவர்களில் ஒருவன் சொல்லியது அவன் காதுகளில் அரைகுறையாக விழுந்தது.

அவர்கள் மறைந்தனர். கந்தன் தள்ளாடியபடியே எழுந்தான்.

தூரத்தில் கற்கோயில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அலைகள் சந்தோஷமாக ஆரவாரித்தன!

கந்தன் அதைப் பார்த்து பலமாகச் சிரித்தான்!


மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் வந்தது..... சந்தோஷத்தால்!

அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!

[நாளை "கனவு மெய்ப்படும்!"]!
************************************

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]


"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]



அடுத்த அத்தியாயம்




Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP