Saturday, September 19, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள்.

ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின்
குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே

புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே

மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே


வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும்
துர்க்கையளே!

ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே


சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே


மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே


நவநாயகியரில் முதல்நாளின்று
மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே

சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே


சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே


ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட
துர்க்கையளே!

பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே


ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே


தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே


நவநாயகியரில் இரண்டாம்நாளின்று
ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]

Read more...

Friday, September 18, 2009

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]


"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]




ரஜினி படங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய், சும்மா ரசித்துவிட்டு மட்டும் வருவது என் வாடிக்கை.
அதே சமயம் கமல் படங்களுக்கு அதில் எதிர்நேராய்!
'இந்தப் படத்துல என்ன பண்ணி சொதப்பிடுவாரோ; தான் ஒரு ஜீனியஸ்ன்றதுக்காக எப்படியெல்லாம் கதையை மாத்திக் கெடுத்துருவாரோன்ற ஒரு பயம் எப்பவும் அடிவயித்தைக் கலக்கிகிட்டே இருக்கும்!
'வெட்னெஸ்டே'ன்ற ஹிந்திப் படத்தை வைச்சு "உன்னைப்போல் ஒருவன்" எடுக்கறாருன்னதும் எனக்கு ஜுரமே வந்திருச்சு!

தீவிரவாதத்தை ஒரு சாதாரணக் குடிமகன் எப்படி எதிர்கொள்ள முடியும் என்கிற மிக அருமையானதொரு கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருப்பாங்க.
நஸுருதீன் ஷா வின் பிரமிக்க வைக்கும் நடிப்பு; அதற்குச் சவாலாக விளங்கும் போலீஸ் கமிஷனர் பாத்திரம், அந்த நிருபர், உதவிக் காவல்துறையினர் என ஒட்டுமொத்தமாக திறம்பட விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்ட படம் அது.

அதனால், இன்று இரவு 9 மணிக்குத் திரையிடுகிறார்கள் என்றவுடன் முதல் காட்சிக்கே ஆஜராயிட்டேன்.
இன்றும், நாளையும் வேலைநாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. ஒரு 25 பேர்தான் அரங்கில்!
இதுவே 'எந்திரன்' ரிலீஸ்னா எப்டி இருக்கும் தியேட்டர் என யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்!

நேரடியாகப் படம் துவங்கியது.
அதிக மாற்றங்கள் செய்யாமல், அதிகமாகச் சொதப்பாமல் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எடுத்ததற்காக முதலிலேயே கமலுக்கு ஒரு 'சபாஷ்'!

இதன் முக்கியக் காரணம் மோஹன்லால் என்னும் அற்புதமான நடிகரின் சவாலான நடிப்பு.
கடைசிக் காட்சியைத் தவிர தனது உணர்ச்சி மிகுந்த நடிப்பைக் காட்ட கமலுக்கு இதில் வாய்ப்பே இல்லை என்பதை நன்கு புரிந்த மோஹன்லால் காட்சிக்குக் காட்சி வெளுத்து வாங்கியிருக்கிறார்!
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் எடுக்கின்ற துரிதமான நடவடிக்கைகள், தலைமைச் செயலருடன் பேசும்போது காட்டும் அலட்சியம், நடக்கப்போவதைப் பற்றிய தெளிவான ஒரு அறிவு என பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்! அவருக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்..... குறிப்பாக அந்த இரு துணைக் காவலதிகாரிகள்!

ஏற்கெனவே ஹிந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை.... மோஹன்லாலின் நடிப்பைத் தவிர.
ஆனால், இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாகப் பார்த்திராத தமிழக மக்களுக்கு இது ஒரு திருப்புமுனைப் படம் எனச் சொல்லலாம்.
சொல்லப்போனால், இது தமிழ் ரசிகர்களுக்கு கமல் விடுத்த மறைமுகச் சவால் எனலாம்!

'இந்தக் காலத்துல நம்ம ஆளுங்க நேரா ஒரு கதை சொன்னா எங்கே பார்க்கறாங்க?
ஒரு காதல் கதை, அதுல ரெண்டு குத்துப்பாட்டு, மூணு சண்டை, கொஞ்சம் செண்டிமெண்ட்டு, வடிவேல்/விவேக் காமெடி இதெல்லாம் இல்லைன்னா படம் ஓடாது எனச் சொல்லிவரும் திரையுலகினர் சரியா, ....இல்லை,....தமிழ் ரசிகர்களை அவர்கள் துல்லியமாக எடை போட்டிருக்கிறார்களா என்பதை நிருபிக்கும் பொறுப்பைக் கமல் தமிழ் ரசிகர்களுக்கு விடுத்திருக்கிறார் என அடித்துச் சொல்லுவேன்!

ஹிந்திப் படத்தை அப்படியே தமிழ் ஒலி கொடுத்துகூட கமல் வெளியிட்டிருக்கமுடியும்.
அப்படிச் செய்யாமல், நல்ல நடிகர்களைப் பொருத்தமாகத் தேர்வுசெய்து, காமெடி, சண்டை, பாட்டு என்றெல்லாம் சோதிக்காமல், மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்தை அவர் கொடுக்க முன்வந்ததற்காகவே இதை ஒரு வெற்றிப்படமாக்கச் செய்வது ஒவ்வொரு தமிழ் திரைப்பட ரசிகரின் கடமை என எனக்குப் படுகிறது.

குறைகள்????
இருக்கின்றன!

முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞரே நடித்திருப்பதுபோலத் தோன்ற வைத்திருக்கிறார் கமல்!...... குரல் வழியாக!
ஆனால், அதுதான் படத்தின் ஒரே காமெடி ட்ராக்! தவிர்த்திருக்கலாம்!
லக்ஷ்மியின் பாத்திரப் படைப்பு சரியாக வடிவமைக்கப் படவில்லை!
ஸ்ருதியின் இசை வெட்னெஸ்டே படத்திலிருந்து துளியும் மாறவில்லை!
கமலே எழுதிப் பாடிய ஒரே ஒரு பாடல் 'டைட்டிஸ்' போடும்போதும், 'க்ரெடிட்ஸ்' போடும்போதும்! சொல்லும்படியா ஒன்றுமில்லை!
நஸுருஷீன் அளவுக்கு கமலின் நடிப்பு இல்லையென்றே எனக்குப் பட்டது.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து நான் முன்சொன்ன காரணத்துக்காகவே இதை ஒரு வெற்றிப் படமாக்கினால், மேலும் தரமான திரைப்படங்கள், வழக்கமான ஃபார்முலாவிலிருந்து மாறி வரக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்தப்படம் விதைத்திருக்கிறது.
அதைச் செயலாக்கச் செய்வது தமிழ் ரசிகர்கள் கையில்!

தொடக்கத்தில் ரஜினியை இதில் இழுத்திருந்தேன்... காரணமாகவே தான்!
ஒரு தரமான 'ரீ-மேக்' படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை ரஜினி
கமலின் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளணும்! குசேலன் கொடுமை நினைவில் வந்து தொலைத்தது!

ஆக மொத்தம் 'உன்னைபோல் ஒருவன்'......

.... இதுவரையில் இல்லை!

தரமான தமிழ்ப்படங்கள் வேண்டுமென விரும்பும் எல்லாரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!
***********************************************************

Read more...

Sunday, September 13, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]

'மன்னாரைக் கண்டோ' எனக் கேட்டுக்கொண்டே நாயர் கடைக்குள்
நுழைந்தேன்.
'ஆ! வரு நேரந்தன்' எனச் சொல்லி ஒரு டீயை என் பக்கம் நீட்டினார் நாயர்!
சொல்லி வைத்தாற்போல் அங்கு வந்து சேர்ந்தான் மயிலை மன்னார்!
அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ பிரச்சினை எனப் புரிந்தது!
என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தேன்.
ஒன்றும் சொல்லாமல், என் கையில் இருந்த டீயை வாங்கி உறிஞ்சினான்.
'இப்ப இதைக் குடிக்கறதுல உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கா சங்கர்'
என்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
'நாம என்ன அப்படியா பழகிகிட்டிருக்கோம் மன்னார்? எதுக்கு இப்படி ஒரு
கேள்வி?' என சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டேன்.

'அதில்லேப்பா! இன்னிக்கு ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே காப்பி
கொண்டுவந்து குடுத்தாங்க! கையில குடுக்காம, பக்கத்துல வைச்சாங்க!
அப்பவே ஒருமாரியா இருந்திச்சு. குடிச்சதுக்கப்புறமா, அதும்மேல தண்ணி
தெளிச்சிட்டு உள்ளே எடுத்துகினு போனாங்க! இத்தினிக்கும் நான் போன வூடு
ஒரு ஐயர் வூடு கூட இல்லை! எனக்கு வெறுத்துப் போச்சு! வர்ற வளியுல
பாத்தா, ஒரு சாதி ஊர்வலம்! அதுல இருந்தவன் பேசினதையெல்லாம்
வேற கேட்டுத் தொலைச்சேன். அதான் டென்சனா இருக்கேன்!' என்றான்.

சட்டென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது!
'திருவள்ளுவர் காலத்துலியும் இந்த சாதி, குலமெல்லாம் இருந்துச்சா மன்னார்?'
எனக் கேட்டேன்.
மன்னாரின் முகம் மலர்ந்தது.
ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்து, 'ம்ம்.இருந்துச்சே! அவரும்
இதைப் பாடியிருக்காரே குறள்ல. சொல்றேன் எளுதிக்கோ! ஆனா, ஒரு
கண்டிசன்! நான் சொல்லி முடிக்கற வரைக்கும் நடுவுல இன்னா, ஏதுன்னு கேள்வி
கேக்கக்கூடாது. நம்ம ஐயனா இப்படில்லாம் பேசறாருன்னு வாயைப் பொளக்கக்
கூடாதுசரியா' எனப் பெரிதாக ஒரு பீடிகை போட்டான்.
'சரி, ஏதோ வில்லங்கமாத்தான் சொல்லப்போறான்' என நினைத்த நான்
ஆவலுடன் நோட்டுப்புத்தகத்தைப் பிரித்தேன்.

இனி வருவது, குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

'அதிகாரம் - 96 "குடிமை"

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. [951]

நல்ல தரமான சாதியில, அதான் ஒரு ஒசந்த கொலத்துல பொறந்தவங்கிட்டதான்
இன்னார்னு பாராட்டாத பாகுபாடு இல்லாத நடுவு நிலைமையும், 'ஐயோ, இது
செஞ்சா தப்பாப் போயிறுமே'ன்ற ஒரு வெக்கமும் இருக்குமாம். தாழ்ந்த
கொலத்துல பொறந்தவன் இதுக்கெல்லாம் அஞ்சவே மாட்டானாம். இன்னா
பண்ணினாலும் தான் பண்றதுதான் சரின்ற ஒரு திமிரும், எது பண்ணினாலும்
அதுக்காவ துளிக்கூட வெக்கமே படாத கொணமும் மண்டிக் கிடக்கும்னு
ஆரம்பிச்சு வைக்கறாரு ஐயன் இந்த அதிகாரத்தை! இதுலேர்ந்து இன்னா
தெரியுது? அவர் காலத்துலியும் இந்த சாதி, கொலம்லாம் இருந்திருக்குன்னு.
இப்ப அடுத்ததைப் பார்ப்போம்!

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். [952]

மேல சொன்ன ரெண்டு கொணத்தோட இன்னொண்ணையும் சேர்த்து இதுமாரி
ஒசந்த கொலத்துல பொறந்தவங்களை இன்னும் தூக்கி வைக்கறாரு ஐயன்!
நல்லா ஒளுக்கமா இருப்பாங்களாம்; பொய்யே பேசாம உண்மையை மட்டும்
பேசுவாங்களாம்; இன்னா காரியம் செஞ்சாலும் அதுல ஒருமாரி வெக்கம்
கூடவே கலந்திருக்குமா! நல்ல காரியம் செய்யறாங்களா, இதுனால நம்மளை
அளவுக்கதிகமாப் புகள்ந்துருவாங்களோ, இல்லைன்னா இது ஒரு கெட்ட
காரியமாச்சே, இதையெல்லாம் நாம் செய்யக்கூடாதேன்னு ரெண்டுபக்கமும்
வெக்கப்பட்டுகிட்டே நல்ல பண்போட நடந்துப்பாங்களாம். ஆரு? இந்த
ஒசந்த கொலத்துல பொறந்தவங்க!

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. [953]

மூணு இப்ப நாலாவுது! ஒரு ஏளை வர்றான்னு வைச்சுக்க. அவனைப்
பார்த்தவொடனேயே இந்த மேல்சாதிக்காரன் மூஞ்சியில ஒரு சந்தோசம்
தெரியுமாம்! வந்தவனை உக்கார வைச்சு 'இன்னாப்பா எதுனாச்சும்
சாப்ட்டியான்னு அன்பா விசாரிப்பாங்களாம்! அடுத்தாபல, ஒனக்கு இன்னா
வோணும்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, தன்னால முடிஞ்சதைக் கொடுத்து
அனுப்புவாங்களாம். 'போடா! போக்கத்த பயலே! பேமானி! பொளைக்க
வக்கில்லாதவனேன்னுல்லாம் எடுத்தெறிஞ்சு பேச மாட்டாங்களாம் இதுமாரி
ஒசந்த சாதியில பொறந்தவங்க! இன்னா அப்டிப் பாக்கறே! நான் சொல்லலை,
ஐயன் தான் இப்பிடில்லாம் சொல்றாரு. ம்ம்.. மேல போவோம்!

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். [954]

இதுமாரி மேல்சாதியில பொறந்தவங்ககிட்ட கோடி கோடியாப் பணம் குமிஞ்சு
கெடந்தாலும், தன்னோட குடிப்பெருமை கெட்டுப்போற மாரியான காரியங்கள
மறந்துபோயிக்கூட செய்ய மாட்டாங்களாம்! பணம் இருக்கேன்ற கருவம்
துளிக்கூட இல்லாம அடக்கமா இருப்பாங்களாம்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இலர். [955]

சரி, பணம் இருக்கற ஆளுங்க அப்பிடிப் பண்ணுவாங்கன்னா, அப்ப பணம்
இல்லாதவங்க இன்னா பண்ணுவாங்க? இதுக்கும் பதில் வைச்சிருக்காரு ஐயன்!

காலங்காலமா இதுமாரி மேல்சாதில பொறந்து வளந்து வர்ற இது மாரியான
ஆளுங்க, ஒண்ணுமே இல்லாத ஏளையாப் போனாக்கூட, அவங்ககிட்ட
துட்டே இல்லாமப் போனாக்கூட, மேல சொன்ன அந்த நாலு கொணங்களை
மட்டும் விட்டுக் கொடுக்காமக் காப்பாத்துவாங்களாம்! ஏன்னா, அவங்க பொறந்த
சாதி அதுமாரி! அந்தச் சாதியில பொறந்தவங்களுக்கு இந்த மாரி நல்ல
கொணமெல்லாம் விட்டே போவாதுன்னு ஐயன் உறுதியாச் சொல்றாரு.

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். [956]

முந்தி சொன்ன அல்லாக் குறளையும் சேர்த்துவைச்சு இதுல சொல்றாரு ஐயன்!
இந்தமாரி நல்ல ஒசந்த குடியில பொறந்தவங்க தங்களோட குலப்பெருமை
இன்னா ஏதுன்னு நல்ல ஒணர்ந்து, அதை மீறித் தப்புத்தண்டாவா எந்த ஒரு
காரியமும் செய்ய மாட்டாங்களாம். அவ்ளோ நல்லவங்க இவங்கள்லாம்!

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. [957]

எதுக்காக இப்பிடி இவங்கள்லாம் நடக்கறாங்க? அப்பிடி நடக்கலைன்னா
இன்னா ஆவும்? பவுர்ணமி அன்னிக்கு வானத்துல முளு நிலா பாக்கறேல்ல?
அதுல இன்னா தெரியுது? வெள்ளைவெளேர்னு நிலா! அதுக்கு நடுவுல இங்கியும்,
அங்கியுமா கறுப்பா, திட்டுத்திட்ட சில புள்ளிங்க! நிலாவை விட அந்தப்
புள்ளிங்கதான் பளிச்சுன்னு கண்ணுக்குப் படுது இல்லியா? அதுமாரி, இந்தமாரி,
மேல்சாதிக்காரங்க எதுனாச்சும் தப்புத்தண்டாவா பண்ணினா, அதான் மொதல்ல
மத்தவங்க கண்ணுல பட்டு உறுத்தும்ன்றதை நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க
இவங்கன்னு ஐயன் சொல்றாரு.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். [958]

சரி, இதுமாரி மேல்சாதியில பொறந்த ஒருத்தங்கிட்ட அபூர்வமா இதுமாரி
கொணம் இல்லாமப் போவுதுன்னு வைச்சுக்க! ஆனா, அவனோ, தான் இன்ன
சாதிக்காரன்னு ஊருல, ஒலகத்துல தன்னைச் சொல்லிக்கறான்னா, அவன்
அந்த சாதிக்காரனே இல்லைன்னு புரிஞ்சுக்கோன்னு எச்சரிக்கை பண்றாரு!
இதுமாரி வேசம் போடறவந்தான் இந்தக் காலத்துல ரொம்பவே ஜாஸ்தி!
இவனுங்களைல்லாம் அடையாளம் கண்டுபிடிக்க இந்தக் குறளு ரொம்பவே
ஒத்தாசையா இருக்கும் நம்மளுக்கெல்லாம்!

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். [959]

இப்ப ஒரு விதையை பூமியில நடறே! அது நல்ல வளமான பூமின்னா, மொளைச்சு
வர்ற அந்தச் செடி நல்லா பூரிப்பாக் காட்டிரும். அதுவே ஒரு சொத்தை பூமின்னா, செடியும் நோஞ்சானாத்தான் இருக்கும் ரைட்டா? அதேமாரி, ஒர்த்தன் வாயிலேர்ந்து வர்ற வார்த்தைங்களை வைச்சே இவன் இன்னா கொலத்துல, சாதில பொறந்திருக்கான்னு கண்டுபுடிச்சிரலாமாம்!

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. [960]

இவ்ளோ நேரம் இப்பிடி இந்த மேல்சாதி ஆளுங்களைப் பத்தி சொன்ன நம்ம
ஐயன் இதுல ஒரு பொடி வைச்சு அல்லாத்தியும் புட்டுப் புட்டுக் காமிச்சிடறாரு!

ஒர்த்தனுக்கு நல்லது நடக்கணும்னா, அவங்கிட்ட ஒரு அச்சம், பயம், தப்பு
பண்ணக்கூடாதேன்ற வெக்கம் இருக்கணும். அப்பத்தான் அப்பிடில்லாம் செய்யாம இருப்பான்.

அதேபோல, நீ மேல்சாதிக்காரன்னு சொல்லிக்கணுமா? நல்ல குடியில
பொறந்தவன்னு காட்டிக்கணுமா, என்னோட கொலம் ஒசந்த கொலம்னு
பெருமை பாராட்டனுமா, மொதல்ல அல்லார்கிட்டயும் பணிஞ்சு, அடக்கமா
இருக்கக் கத்துக்கோ! அதுதான் மேல்சாதி, அதுதான் நல்ல குடி, அதுதான் ஒசந்த கொலம்!

மத்தபடி, நீ பாப்பானா, செட்டியாரா, மொதலியாரா, நாடாரா, இல்லை,
தாழ்ந்த சாதியான்றதுல்லாம் இங்க மேட்டரே இல்லை! அடுத்தவன்கிட்ட எவன் பணிவா நடந்துக்கறானோ, அவந்தான் மேல்சாதிக்காரன்னு 'டமார்'னு ஒரு குண்டைப் போட்டு முடிக்கறாரு ஐயன்! இன்னா கில்லாடி பாரு இவரு' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருந்த நானும் இப்போது ஒரு தெளிவு பெற்ற
நிம்மதியுடன், மன்னாரைப் பணிவுடன் வணங்கிக் கொண்டேன்!
சிர்ப்பின்னும் மாறாமல் என் தோள்மீது கைபோட்டு 'சங்கீதா' நோக்கி என்னை
அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!
***********************************************

Read more...

Thursday, September 03, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3

மூன்றாம் பகுதி [இரண்டாம் பகுதி]


12345654321

ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை


ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருவகையில் பார்த்தால் யானையெனச் சொன்னாலும்
இளயானை கிழயானை என இருவகையில் வரக்கூடியதும்,

கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும்

மும்
மதநீரும் பெருகிவரும் கிழயானைக்கே!

இளயானை மதம் பிடிப்பதில்லை!

ஆனாலும் முருகா! நீயோ!
.....

நினக்குப்பின்னே நின்னண்ணன் கிழயானையாய் வந்ததனால்

கிழயானைக்கே மூத்த சகோதரன் ஆகிப்போனாய்

வாயி
னின்று தொங்கிடும் துதிக்கையை உடையவனும்

ங்கரன் எனவழங்கும் விநாயகக் கடவுளும்

அறு
கம்புல்லை ஆசையுடன் தன்தலையில் சூடிக்கொள்ளும்

கணபதிக்கு இளைய சோதரனாய் விளங்குகிறாய்


நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலமாய்

நான்கு
வேதங்களாலும் இறையென உணர்த்தப்பட்டு

சூரிய,சந்திர,அக்கினி என்னும் முச்சுடரையும் கண்களாய் உடையவரும்
நல்வினை, தீவினை இரண்டிற்கும் மருந்தாக அமைபவராம்
சிவனுக்கே ஒரு குருநாதனாய் விளங்கினாய்!


[கந்தபுராணம் சொல்லும் கதை]

வள்ளியைத்தேடித் தினைப்புனம் அலைந்து

வேடனாய் வந்து வள்ளியை அணைக்க

ஓலமிட்ட குரல்கேட்டு சோதரர் ஓடிவர

வேங்கைமரமாய் உருமாறி நின்று

அண்ணனை மதியாமல் தனியே வந்த
தவறுணர்ந்து அவரை வேண்டிட,

அனுக்கிரகம் புரிந்த அண்ணனும்

துணைக்கு வருவதாய் வாக்களித்தான்
!

நாயகியைக் காணவேண்டி விருத்தனாக வேடமிட்டு
வேண்டுகின்ற போதினிலே நீயங்கு வரவேணும்

என்றதற்குச் சம்மதித்த வேழமுகக் கடவுளும்

சுனையருகே வள்ளியினை விரட்டிடவே

மதம்கொண்ட கிழயானையாய் உருவெடுத்து வந்தான்

கிழவனுக்கும்பின்வந்த காரணத்தால் கணபதியும்

முருகனுக்கு இளையோன் ஆனான்!

ஆனாலும் முருகனென்றும் கணபதிக்கு இளையவனே!


பிரணவத்தின் பொருளறியாப் பிரமனைச் சிறையிட்டு

விடுக்கவேண்டி முறையிட்ட சிவனாரை எதிர்கொண்டு

பிரணவத்தின் பொருள்சொல்ல அப்பனையே பணியவைத்து

தகப்பன்சாமியாய்த் திகழ்ந்திட்ட சுந்தரக் குழந்தையிவன்!

[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]

ஓரு
ருவாயினும் இருவகைக் களிறாய்மிளிரும்
முத்
தமிழ் முதல்வோன் முருகனுக்கிளையன்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலு
ம் கலந்துண்ணும் ங்கரன் கணபதி
அறு
முகன் தனக்கு மூத்தவன் இவனே!
நமசிவயவெனும் ந்தெழுத்ததிபன்
நான்
மறை வேதியன் முக்கண் முதல்வோன்
இரு
வினை அறுத்திடும் சிவனுக்கருளிய
ஒரு
குருநாதன் என்னவன் முருகன்!

அருஞ்சொற்பொருள்:

மும்மதன்= மூன்று வகையான மதநீரைப் பெருக்கும் யானை
நால்வாய்= தொங்குகின்ற வாய், தும்பிக்கை
அறுகு= ஒரு வகைப் புல், விநாயகனுக்கு உகந்தது
ஐந்தெழுத்து= நமசிவய என்னும் 5 எழுத்து மந்திரம்
**********************************

1234567654321

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


அன்றொருநாள் சீர்காழியில்
அருமைக் குழந்தையைக் குளிப்பாட்டிக்
கரையில் இட்டபின் பெற்றவர் குளத்திலிறங்க
பசியின் கொடுமையால் சிசுவும் அலற
வானில் உலவிய அன்னையிறங்கி
சிசுவை எடுத்து இருமுலை அழுத்தி
ஞானப்பாலை அன்புடன் புகட்டி
முத்தமிழ்ச் சுவையும் உடனே புகட்டி
ஆசுகவி, மதுரகவி,சித்திரகவி, வித்தாரகவி
என்னும் நால்வகைக் கவியின் நாயகன்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் வகை நிலத்தின் அதிபதியாம்
ஆறுமுகன் இவனெனவே எழிலுடன் விளங்கி
சீர்காழிஎன்னும் கழுமலத்தில் சம்பந்தனாய்
நீயும் அவதரித்தாய்!

கார்த்திகைப் பெண்டிர் ஆறு தாரகைகளின்
பாலினை உண்டதால் அவர்க்கு மகனானாய்
கற்பகம் மந்தாரம் பாரிஜாதம் சந்தானம் அரிசந்தனம்
என்னும் வகை மரங்கள் திகழும் தேவலோகம்
அதற்கே அதிபதியாய் நீயும் சிறந்தாய்!
நான்மறைகள் போல ரகசியமானதும்
மூன்று சிகரங்களை முடிப்பாய்க் கொண்ட
கிரவுஞ்சமெனும் பெயர்கொண்ட
அன்றில்பறவைப் பெயர்கொண்ட மலையை
இருகூறாய்ப் பிளக்குமாறு வலிமைபொருந்திய
ஒரு வடிவேலினை நீ விடுத்தாய்!

[கந்தபுராணம் சொல்லும் கதை]

சிவனின் மூன்றாம் கண்ணினின்றுப்
புறப்பட்ட ஆறுபொறிகளை வாயுவும் தீயும்
தாங்கிடமுடியாமல் கங்கையில் விடவும்
தீப்பொறி வெப்பம் தாங்கிடவொண்ணா
கங்கையும் வறளச் சரவணப் பொய்கையில்
ஆறுகமலங்களில் அதனை விடவும்
ஆறுகுழவிகள் அதனில் மலர
கார்த்திகைப் பெண்டிர் எனவே வழங்கும்
ஆறு தாரகைகள் குழவியை எடுத்து
முலைப்பால் கொடுத்து முகிழ்நகை பருகி
மகனெனக் கொஞ்சிட மகிழ்வுடன் சிறந்தாய்!
தேவரை வதைத்த சூரனின் இளவல்
கிரவுஞ்சம் என்னும் மலையாய் மாறி
பூதப்படைகளை மாயம் செய்திட
தனிவேல் விடுத்து மலையைப் பிளந்து
தாரகன் மடியும் தீரமும் செய்தாய்!
சூரனைக் கொன்று தேவரைக் காத்து
இந்திரன் மகளை மணம் செய்ததனால்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்!

[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்]

ஒருநாள் அழுத குழவியின் பசியை
இருமுலைப் பாலால் உமையவள் தீர்க்க
முத்தமிழ்ப் பாலைப் பருகிய சிசுவும்
நாற்கவி சிறக்க ம்புலம் ஆள
ஆறுமுகன் என எழிலுடன் திகழ்ந்தாய்
ஆறுதாரகைப் பெண்டிரின் மகனாய்
வகை மரங்கள் விளங்கும் உலகாம்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்
நான்குமறைகளின் ரகசியம்போல
மூன்று சிகரம் கொண்டதாம் அந்த
கிரவுஞ்சம் என்னும் தாரகமலையை
இரண்டு கூறாய்ப் பிளந்திட விடுத்த
தனியொரு வேலைத் தான் விடுத்தவனே!

அருஞ்சொற்பொருள்:

விரகன்= வல்லவன்
கிழவன்= உரிமையாளன்
கழுமலம்= சீர்காழிக்கு இன்னொரு பெயர்
அறுமீன்= ஆறு தாரகைகளான கார்த்திகைப் பெண்டிர்
ஐம் தரு= தேவலோகத்தில் காணப்படும் ஐந்து வகை மரங்கள்
செஞ்சூட்டு= சிவந்த கொண்டைகள், சிகரங்கள்
அன்றிலங் கிரி= அன்றில் பறவையின் பெயர் கொண்ட கிரவுஞ்ச மலை
*****************************************

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.

[திருவெழுகூற்றிருக்கை -முடிப்பு]

வளமை பொங்கிடும் காவிரி நதியின்
வடகரை அதனில் திகழ்ந்திடும் குருமலை
என்னும் பெயர்கொண்ட சுவாமிமலையினில்
சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை
ஓதிடும் அடியவர் உன் பாதங்கள் போற்றிட
திருவேரகத்தின் இறைவன் எனநீ அருள்கின்றாயே!

அருஞ்சொற்பொருள்:

குருகிரி= அப்பனுக்குப் பாடம் சொன்னதால் குருமலை என வழங்கப்படும்
சுவாமிமலை
ஆறெழுத்து= சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம்
ஏரகம்= சுவாமிமலைக்கு இன்னொரு பெயர்
******************************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------

Read more...

Wednesday, September 02, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை][2]

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]

[இரண்டாம் பகுதி] முதல் பகுதி1212321

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை

இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை


அனைத்துக்கும் முதலான ஒருபொருள்
ஓமெனச் சொல்லும் பிரணவம் ஆகும்

ஐந்துமுகம் கொண்டதோர் சிவனாருடன்

இன்னொரு முகமாய்ப் பிரணவமும் சேர்ந்து

ஆறுமுகம் ஆனதோர் ஒருவகைத் தோற்றத்தில்

சக்தியும் சிவனுமென
இருவகைக் குணங்களும்
இணைந்ததோர் பிறப்பாய் விளைந்திடவேண்டி

அவையிரண்டும் ஒன்றினில் ஒன்றாகி

சக்தி சிவனெனும் இருவரிடமும் தோன்றி

மூன்றாவதான
ஒன்றாக உருவாகி
என்றும்
மூப்பே இலாத இளமையொடு விளங்குகிறாய்!

அந்தணர்க்கோர் வழக்கம் உண்டு

பிரணவப் பொருளை ஓதிடும் பழக்கம்

புரிநூல் அணிந்திடும் நிகழ்ச்சியில் தொடங்கும்
எனவே இவர்க்கு இருபிறப்பெனச் சொல்வார்!
நூலுக்கு முன்னால், நூலுக்குப் பின்னால்

அப்படி வழங்கும் ஓர் அந்தணர் குலத்தில்

ஒப்பிலா
ஒருவனாய் வந்துதித்த சம்பந்தன்!

[கந்தபுராணம் சொல்லும் கதை!]

தவத்தினில் இருந்த சிவனை எழுப்பி

சத்தியும் சிவனுமாய்ச் சேர்ந்தவோர்

திரு உருவினைக்கொண்டு

சூரனை அழித்திடும் திருச்செயல் நடக்கவேண்டி

மாரனை அனுப்பித் தவத்தைக் கலைக்க

நெற்றிக்கண்ணொளி நெருப்பினில் எரிந்து

மாரனும் சாம்பராகி மடிந்து வீழ்ந்திட

தவநிலை கலைந்த சிவனது அருளால்

அமரர் துயரம் தீர்த்திட வேண்டி

தேவியை நோக்கிய சிவனாரின் கருணை

சத்தியின் சக்தியும் சேர்ந்தவோர் அம்சமாய்

நெற்றிக்கண்ணினின்று பிறந்ததே கந்தனின் உருவாம்!


இருபிறப்பென்னும் வழக்கம் கொண்ட

அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாய்

திருஞான சம்பந்தராய் நீ அவதாரம் செய்தாய்!


[திருவெழுக்கூற்றிருக்கை! நமது பாணியில்!]
ஒரு
வனாய்ப் பிறந்தவன் இருவரின் அம்சமாய்

ஒரு
பொருள் சேர்த்து இருநிலை கலந்து

மூன்றாம்
பொருளாய் மூப்பின்றி விளங்கினான்!

இரு
பிறப்பென்னும் அந்தணகுலத்தில்

ஒப்பிலா ஒருவனாய் சம்பந்தன் ஆனாய்
!

அருஞ்சொற்பொருள்:
தாரகப் பிரமம்= முழுமுதற் பொருளான பிரணவம்

இரு மரபு= சக்தி, சிவம் என்னும் இரு அம்சங்கள்

மூவா= மூப்பே இல்லாத, மூன்றாவதான

**********************************************

1234321

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


தகைமைக்குத் தகுதியற்ற ஓர்செயலைக்
கருவமுடன்
செய்ததனால் முன்னொருநாள்

பிரமனின் தலைக்குடுமி இமைப்பொழுதில்
கலைந்துபோகுமாறு
அவன் தலையினில்
குட்டிச் சிறையினில் தள்ளிட
அரியும் அரனும் இந்திரனும் மூவராய்
முன்வந்து
நின்னிடம் அயனைச் சிறைவிடுக்க

இரு
தாளிணைவேண்டிநிற்க அருள்மிகக் கொண்டு

அவனை ஒருசிறை விடுத்தனை


[கந்தபுராணக் கதை]

சிவனைக் காணவந்த பிரமனும் ஓர்நாள்

செருக்கு மிகக்கொண்டு சிறுபயல் என்றெண்ணி

வணக்கம் சொல்லாமல் குமரனைக் கடந்திட

அதட்டியழைத்து முன்னே நிறுத்தி
படைத்தொழில் செய்திடும் கருவமோ நினக்கு

பிரணவத்தின் ஒலியினின்றே அனைத்தும் பிறப்பதால்

ஓமென்னும் ஒருசொல்லின் பொருளுரைத்துச்
செல்கவென
முருகனும் அயனைக் கேட்டிட
பொருளறியாது விழித்தனன் பிரமனும் ஆங்கே

சினம்மிகக்கொண்டு காலாலுதைத்து

தலைமுடி கலைந்திடத் தலையினில் குட்டி

செய்தொழில் பெருமை அறியாது செய்திடும்

நின்னிடம் இனிமேல் சிறையினில் என்றே

அயனைச் சிறையினுள் எட்டித் தள்ளினான்

அழகன் முருகன்!


சேதிகேட்டுப் பதைபதைத்துத்

திருமாலும் சிவனாரும் இந்திரனும்
மூவருமாய்
அழகனிவன் எதிர்வந்து
அயனைச்
சிறைவிடுக்க வேண்டுமெனக் கேட்டிடவே
பிரணவத்தின் பொருளறியா மூடனிவன்

நீர் பொருள் சொல்லிச் சிறைவிடுப்பீர்

எனக்கேட்ட முருகனிடம் கைபொத்திச்
சிரம்தாழ்த்தி
சிவனாரும் பணிந்துநிற்க
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாகி
அருள்புரிந்து அயனைச் சிறை விடுத்தான்

அழகன் முருகன்!


[திருவெழுக்கூற்றிருக்கை- நமது பாணியில்!]

தகுதியிலாதோர் ஆணவத்தால் ஓம் என்னும் ஈரெழுத்தை

முத்
தமிழில் விளக்காத நான்முகனின் தலையில்குட்ட

அரனரி யிந்திரன் மூவரும் முருகனின்
இருதாள்பணிய
அயனை அன்று ஒருசிறை விடுத்தனை!


அருஞ்சொற்பொருள்:

ஓரா= [இரு பொருள்] ஒன்று, தெரியாமல்

இருமை= [இரு பொருள்] இரண்டு, கர்வம்

நான்முகன்= பிரமன்

இமைப்பினில்= ஒரு நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில்

மூவர்= அரி, அரன், இந்திரன்
*****************************************

123454321

ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருநொடிப்பொழுதில் இருசிறகினை விரிக்கும்
மயில்மீதேறி
முப்பக்கமும் கடல்சூழ்ந்த
முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் என்னும்

நானிலமே அஞ்சிநடுங்கி ஐந்தாம்வகையாம்
பாலையென வறளும் வேகத்துடன்

இப்பூவுலகை நீ வலமாக வந்தாய்


பெருமைக்குரிய நால்வகைத் தந்தங்களுடையதும்
மூ
வகையான மதம் பிடிக்கவல்லதும்
பனையோலைபோலும் பரந்த
இரு செவிகளையுடையதும்
நீண்டுதொங்கும் அழகிய
தொரு துதிக்கையையுடையதுமான வெள்ளிமலைபோலும் ஐராவதம் எனும்
யானையையுடைய
இந்திரனின் மகளாம் தேவயானையை
முறைப்படி மணம் செய்து கொண்டவன் நீ!


[கந்தபுராணம் சொல்லும் கதை]

கைலாயத்தில் அன்றொரு காட்சி
!
சிவனும் உமையும் அமர்ந்திருக்க
கணபதி முருகன் உடன் விளையாட

நானிலத்திற்கோர் உண்மை புகட்டிட

நாரதர் கொணர்ந்தார் நல்லதோர் மாம்பழம்!

அதனைப் பற்றிடச் சோதரர் இருவரும்
எனக்கே எனக்கே என மல்லுக்கு நிற்க

உலகினை எவரிங்கு முதலில் வலமாய்ச்

சுற்றிவருபவரோ அவருக்கே மாங்கனி
என்றிட
மயிலினை அழைத்து அதன்மீதேறி
பெருத்த சிறகினை விரித்திடும் மயிலினில்

மூன்று பரப்பினில் சுற்றிடும் கடலைக்

கொண்டிடும் பூமியை வலம்வரச் செய்திட

முருகன் பறந்தான் இமைப்பொழுதினிலே!


அருகினில் நின்ற பருத்த கணபதியும்
'அம்மையப்பனும் உலகும் ஒன்றலவோ' என

நாரதமுனியை நவின்று கேட்டிட

'ஓம்'என நாரதர் இருகைகூப்ப

அம்மையப்பனை அழகாய் வலம்செய்து

அன்னையின் கையினில் இருந்த மாங்கனியை

தொந்திக்கணபதி தான்பறித்துண்டான்!


விரைவாய் வலம்வந்து கனியைத் தட்டலாம்

எனவே வந்த குமரக்கடவுளும்
இந்நிலைகண்டு
கோபம் கொண்டு
அனைத்தையும் துறந்து
ஆண்டியாகிப்போனான்!


அனைத்தையும் துறந்து ஆண்டியானாலும்

பின்னவன் செய்திட்ட வீரச்செயலினால்

சூரனும் அழியத் தேவர்கள் மகிழ
பட்டத்து யானையாம் ஐராவதமென்னும்

வெள்ளையானை வளர்த்த பூமகள்

தேவயானை என்னும் குலமகள்

கந்தனுக்கென்றே பிறந்த நன்மகள்
கைத்தலம் பற்றிக் கந்தனும் அருளினான்!


[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]

ஒரு
நொடிப்பொழுதில் சிறகிரண்டுவிரித்து

மூன்று
புறங்களில் கடலால் சூழ்ந்த

நானி
லம் அஞ்சிஉலகும் வறள

மாங்கனிவேண்டி நீ வலம் வந்தனை.

நாலு
தந்தமும் மூவகை மதமும்

முறங்கள்போலும் இருசெவியழகும்

நீண்டுவளர்ந்ததோர் தும்பிக்கையும்

ஒருங்கே அமைந்த வெள்ளையானையைத்

தனக்கெனக்கொண்ட இந்திரன் மகளாம்

தேவயானையை நீ திருமணம் செய்தனை
!

அருஞ்சொற்பொருள்:

சிறை- சிறகு, இறக்கை
முந்நீர்= மூன்று புறமும் சூழ்ந்த கடல்

நானிலம்= குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்னும் நிலம்

மருப்பு= தந்தம்

பொருப்பன்= இந்திரன்

*****************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------
[இதன் அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில்!]

Read more...

Tuesday, September 01, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1


"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1



[முதல் பகுதி]
நண்பர் ரவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருவெழு கூற்றிருக்கை வகையில்
அமைந்துள்ள இந்தத் திருப்புகழை எனக்குத் தெரிந்த அளவில் விளக்க
முயன்றிருக்கிறேன்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என
அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக
அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும்
அற்புதப் பாடல்.

ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து
அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321

என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!

பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ்
அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே
முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.
சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இப்போது பாடலைப் பார்ப்போம்!


*********** பாடல் ***********

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை


ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை


அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

**************

*********** பொருள் ***********

இப்பாடலில் எண்களை வைத்து விளையாட அருணையார் முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக அப்படியே விட்டு விடுவாரா?!!
சொற்களில் எண்களை வைத்தவர், கருத்தினில் கந்த புராணத்தையே
சொல்லியிருக்கிறார்.
இறையருள் கைவந்த ஒருவரால் மட்டுமே இது இயலும் என்பதற்கு
இப்பாடல் ஒரு உதாரணம்.
பாடலின் பொருள் புரியவரும்போது, நமக்கும் இது புரியும்!

முதலில் இதைப் பதம் பிரித்துப் பார்ப்போம்!

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து

ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை


இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத்து இருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை

ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என

எழில்தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை


அறுமீன் பயந்தனை ஐம்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு

அன்றில் அம் கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
--------------------------------

இப்பவே கொஞ்சம் புரிஞ்சிருக்குமே!

இருந்தாலும், அவர் சொன்ன கந்தபுராணக் கதையை நான் சொல்வதற்காக,
இதன் பொருளைப் பார்ப்போம்.
எண்களை வைத்து இப்பாடல் அமைந்திருப்பதனால், வழக்கம்போல்
பின் பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பொருள் காணலாம்.
அருஞ்சொற்பொருளையும் ஒவ்வொரு பத்திக்கும் அடியில் இட்டிருக்கிறேன்,
பாடல் விளங்குவதற்காக!
சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை
விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும்.

பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழுக் கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை!
பொறுத்தருள்க!
[அடுத்த பதிவு நாளை வரும்!]
**********************************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------

Read more...

Sunday, August 16, 2009

"இறைசெயல் தன்செயல்"

"இறைசெயல் தன்செயல்"

'இறைசெயல் தன்செயல் எப்படி உணர்வது இதனை?'

என்றொருகேள்வியை நானும்வைத்திட
எம்மவர் அருகினில் திரும்பிப் பார்த்தார்

நிகழ்வன யாவும் இறைசெயலாகும்

எம்துணையின்றியே அதுவும் நிகழும்


நீயும் நானும் இருந்திடும் நேரம்

இங்கே எதிரே எம்நலன்பேணி

அன்புடன் அன்னை அளித்திடும் உணவும்

தன்செயல்தொட்டே நிகழ்வது ஆகும்


வருபவர் நலனைக் கருத்தினில் கொண்டு

அறுசுவையமுது எமக்கெனப் படைக்க

மாலையில் தொடங்கிய பணியின் விளைவே

இங்கே எதிரில் இருந்திடும் உணவு


சோலையில் மாலையில் அமர்ந்திடும் நேரம்

எவரோ ஒருவர் குறுக்கே போவதும்

இலையது உதிர்ந்து மேலே வீழ்வதும்

எம்செயல் அதிலே ஏதும் இல்லை


சித்திரப்படமொன்று[animation movie] பார்த்திடும் நேரம்

இதுபோல் காட்சியை நினைத்துப் பார்க்கின்

இலைகள் விழுவதும் மனிதர் நடப்பதும்

இயக்குநர் ஒருவரின் ஆக்கம் அல்லவோ


நிகழ்ந்திடும் எதனையும் கருத்தினில் கொண்டு

கவனமாய் இயக்கத்தைப் புரிந்துகொண்டு

வருவதைத் தாங்கிடும் மனமிது கொண்டால்

வருத்தங்களில்லா வாழ்வும் அமையும்

வலியச்சென்று வம்புகள் செய்து

அலையும் மனதின் செயல்வழி நடந்திட

வந்திடும் வினைகளோ எந்தம் பொறுப்பு

என்பது புரிந்திட தன்செயல் அடங்கும்


கணக்குகள் வழக்குகள் எமக்குள் வேண்டாம்

பிணக்குகள் பூக்கும் அடுசெயல் வேண்டாம்

நல்லது கெட்டது என்பதும் இல்லை

நடக்கும் யாவையுமோர் கணக்கினில் நிகழும்


நிகழ்வினை நிகழ்த்திடும் இறைவன் அறிவான்

கணக்குகள் என்ன காட்சிகள் எதுவென

இகழ்ச்சியும் புகழ்ச்சியும் அவனுக்கில்லை

மகிழ்ச்சியில் ஆழ்வதன் மர்மமும் இதுவே

இறைசெயல் விளைத்திடும் அமைதியில் ஆழ்ந்து

தன்செயல் என்பதைத் தள்ளியே வைத்து

வருவன யாவையும் ஏற்றிடும் பண்பினை

அவனே அருளிட அவனை வேண்டு


என்றவர் சொல்லி என்னைப் பார்த்தார்

என்ன செய்யணும் இப்போ என்றேன்

ஒன்றும் வேண்டாம் சும்மாயிருப்பாய்

இன்னுமா புரியலை என்றே சிரித்தார்!
*********************************************

Read more...

Thursday, August 13, 2009

"காட்டில் எரியும் வட்டநிலா!"

"காட்டில் எரியும் வட்டநிலா!"


பனிபொழியும் இரவுநேரம்

பாதையிலாக் காட்டுவனம்
தென்றலொன்றைத் துணையாக்கித்

தனிமரமாய் நடந்திருந்தேன்

ஆருமற்ற காட்டினிலே
வேறுசத்தம் கேட்கவில்லை

பறவைகளும் உறங்கியாச்சு

இரவுமங்கே அடர்ந்தாச்சு


காற்றலையின் சிலுசிலுப்பில்

கனிமரங்கள் இலையசைய
கிளைகளது விரிப்பினிலே
பால்நிலவின் தரிசனம்


முழுநிலவாய் ஒளிர்ந்தங்கு

பால்நிலவாய்ப் பொழிந்திருக்க

பாதைசற்றுத் தெளிவாக

நன்றியுடன் தலைநிமிர்ந்தேன்

நிலவங்கு அழுவதுபோல்

எனக்குள்ளே பிரமைதட்ட

துணுக்குற்று அதைப் பார்த்தேன்

என்மீது சிறுதூறல்


யாருமில்லாக் காட்டினிலே

எவர்க்காகப் பொழிகி்றது

வட்டநிலா வடிவழகைக்
கண்டிடவோ் ஆளில்லை


அழகினையே ரசித்திடவோ

அக்கம்பக்கம் எவருமில்லை

தண்ணொளியைப் பருகிடவோ
எவராலும் இயலவில்லை


தனிக்காட்டில் எரிகின்ற

தங்கநிலா துயரதனை

எவரறிவார் ஏதறிவார்

எவருக்குத்தான் இதுபுரியும்


எரிகின்ற வண்ணநிலா
எத்தனையோ நாட்டினிலே

அவரையெண்ணி மனம் கசிந்தேன்

நலம்வாழப் பிரார்த்தித்தேன்!


எரிகின்ற நிலாக்கள் இனி

வளமாகும் நிலை வேண்டும்

சுவரில்லாச் சித்திரங்கள்
தம்துணையைச் சேரவேண்டும்!


என்மனத்தை அறிந்தவனாய்

மனமுருகன் சிரித்திட்டான்

சுவருண்டு துணையுண்டு

நேரம்வரும் பொறு என்றான்!

ஓம்!ஓம்! என்பதுபோல்

மணியோசை காதில்விழ

பால்நிலாவைத் துணைகொண்டு

வேகமாக நடக்கலானேன்!


முருகனருள் முன்னிற்கும்!


அனைவருக்கும் ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்!



சிந்தாமணியே திருமால்மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம்

தந்து எனையாள் முருகா! தணிகாசலனே!



இதை இன்று 16 முறை சொன்னால் நல்ல பலன் தருவான் மனமுருகன்!
*********************************

Read more...

Thursday, August 06, 2009

"காட்டுவழிக் காவலன்!"

"காட்டுவழிக் காவலன்!"


பாதை மிகக் கடினம் பக்கதுணை யாருமில்லை
ஆதரவாய்ப் பேசிடவோ அக்கம்பக்கம் யாருமில்லை

காரிருளும் கவிஞ்சாச்சு சூரியனும் மறைஞ்சாச்சு

பறவைகளின் சத்தமெல்லாம் அப்படியே அடங்கியாச்சு

ஆந்தைகள் அலறுவதும் அங்கங்கே கேட்டிருக்கு

மந்தைமாடு அத்தனையும் வீடுவழி போயாச்சு

பாதிவழி வந்திருக்கு மீதிவழி போகணுமே
ஏதுசெய்வேன் யானிங்கே எனவஞ்சி வாடுகையில்

ங்கிருந்தோ வந்தார் என்னப்பா என்றிட்டார்
மங்கிவரும் வேளையிலே செல்வதெங்கே கூறென்றார்

வந்தவனோர் கள்ளனென்று பயத்தாலே கண்மூட

கள்ளனல்ல காவலன்யான் என்னவேணும் சொல்லென்றார்

வழியில்லாக் காடுஇது வந்தவரும் தவறிடுவார்

விழிபார்த்து நடந்தாலும் வழிதப்பிப் போய்விடுவார்

எத்தனையோ பேரிங்கே இன்னமும் அலைந்திருக்க

நீயுமதில் ஒருவனாகப் போய்விடவோ சொல்லென்றார்

நம்பிக்கை மனங்கொண்டு வந்தென்றன் கையைப்பிடி
தும்பிக்கை பகவானின் துணையிருக்கும் பாரென்றார்

காட்டுவழி செல்கையிலே காலநேரம் பார்க்கவேணும்

கூட்டுவார் துணையின்றிச் செல்லுதலும் இயலாதென்றார்
அன்போடு அவர்சொன்ன மொழியங்கே எனைத்தேற்ற

அவர்தந்த கோல்பற்றி அவருடனே நடந்திட்டேன்

வழிதெரிந்த பளிங்கரைப்போல் விறுவிறுவென நடந்திட்டார்

மொழியேதும் பேசாது அவர்பின்னே யான் சென்றேன்

மணித்துளிகள் நினைவில்லை களைப்பெதுவும் தெரியவில்லை

துணிச்சலுடன் அவர்சொன்ன வழியினிலே நான் சென்றேன்

நேரம்சற்றுச் செல்லச்செல்ல வழியெல்லாம் தெளிவாச்சு

தூரம் ஏதும் தெரியாமல் நடைப்பயணம் எளிதாச்சு
வழிகாட்டும் துணையிருக்க வழியினிலே ஏதுபயம்

விழிதிறந்த பின்னாலே காட்சிக்கும் ஏது தடை!

ஒவ்வொருவர் வாழ்வினிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும்

அவரவரை வழிகாட்ட ஒருவரிங்கே வந்திடுவார்

சரியான துணையெதுவென சட்டென்று புரிந்துவிடும்

அறியாமை நீங்கிடவே அவர் எமக்குத் துணையிருப்பார்

நல்லதோர் குருநாதன் வரும்வரையில் காத்திருந்தால்

நம்பிக்கை கைகொண்டு நாமவரைத் தேடிநின்றால்

தானாக வந்திடுவார் தயவுடனே காத்திடுவார்

ஏனென்ற கேள்விக்கெல்லாம் விடையாக அருள்புரிவார்!


"குருவடி சரணம்! குருவே சரணம்!"

Read more...

Sunday, July 26, 2009

"சூரிய கிரஹணம்" - இரு எண்ணங்கள்!

சூரிய கிரஹணத்தன்று இரவு் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மனத்தில் எழுந்த சில எண்ணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! நன்றி.

"சூரிய கிரஹணம்"

http://vizhiyan.wordpress.com/2009/07/22/solar-eclipse-photographs/

[நன்றி: விழியன்]

ஒளிர்மிகுந்தெழுந்தான் ஆதவன்
உலகின் ஒளியே நானென மகிழ்ந்தான்
மறையும்போதில் நிலவைப் பார்த்தான்
என்னைத் தாங்கிடு நீயே என்றான்

ஒளியைத் தாங்கிட முடியா நிலவன்
தேய்ந்தும் வளர்ந்தும் சற்றே நெளிந்தான்
அடங்கிய ஒளியில் அலர்ந்த நிலவினில்
அடங்காக் காதலை அனைவரும் உணர்ந்தார்

தன்னொளியில்லா நிலவின் ஒளியில்
மயங்கிய அனைவரும் மயங்கியே போனார்
நிலவனும் உணர்ந்தான் தன்நிலை தன்னை
உலவிடும் தானும் நிழலென் றறிந்தான்

எனக்கென ஓர்நாள் இருக்குமா என்றான்
என்னையே மறைப்பாய் நீயும் ஓர்நாள்
ஒளியும் நிழலும் ஒன்றே என்பதை
உலகிற் குணர்த்தும் அந்நாள் தன்னில்

எனவே யுரைத்த ஆதவன் மொழியில்
அகமே மகிழ்ந்தான் நிழலவன் நிலவன்
இடையில் வருகையில் இகமே உணரும்
என்செயல் எதுவென யானும் காட்டுவேன்

பகலவன் சிரித்தான் பரமன் சிரித்தான்
அகிலம் சிரித்தது ஐம்புலன் சிரித்தன
மறைவதும் தெரிவதும் மாயவன் வேலை
அதனில் யாமெலாம் அவனது கருவிகள்

கிரஹணம் வந்தது ஆதவன் மறைந்தான்
நிலவன் உணர்ந்தான் நிஜமது அறிந்தான்
ஒருசில நொடியே நிழலும் மறைக்கும்
உண்மை யொன்றே என்றும் நிலைக்கும்

மறுக்கும் குணமும் மனதில் துளிர்க்கும்
குருவின் அருளால் அனைத்தும் புரியும்
மறைவதை உணர்த்தி மங்களம் தருவான்
குறைவிலா வாழ்வினை எமக்கே தருவான்!

குருவே சரணம்! குருவடி சரணம்!
***************************

"கிரஹணம் விலகிட....."

நிலவும் ஆதவன் மறைத்திடும் நேரம்
நீயும் கொண்டாய் நெஞ்சினில் சோகம்

உதயம் எழுந்திடும் பகலவன் முகத்தை
மூடிட எண்ணிடும் அறியா நிலவும்

மெதுவாய்ப் படர்ந்து நிழலால் தவழ்ந்து
சூரியன் மறைத்திட நிலவும் மகிழும்

அதனால் படரும் இருளின் துன்பம்
நிலத்தில் பட்டிட பூமியும் கலங்கும்

கலக்கம் அனைத்தும் ஒருசில நொடியே
விலக்கம் உடனே விரைவில் துவங்கும்

மூடிய நிழலும் சுழற்சியில் நகரும்
மீண்டும் ஆதவன் ஒளியும் தெரியும்

பரவிடும் ஒளியினில் இருளும் விலகும்
பல்லுயிர் மகிழ்ந்து நீரினில் ஆடும்

பாதைகள் முட்டும் புள்ளியில் சிலநொடி
ஒன்றால் ஒன்று மறைதலும் நிகழும்

பாதைகள் விலகிட பேரொளி தெரியும்
சோதனை தீர்ந்து வேதனை மறையும்

விளக்கம் இல்லா விலக்கம் இங்கே
விலகும் அனைத்தும் விளக்கிடும் அன்றோ

அறிவால் இதனை அடைதலும் கூடுமோ
புரிந்திடும் அருளினில் புரிந்திடும் அன்றோ!

குருவே சரணம்! குருவடி சரணம்!
*****************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP