Monday, July 16, 2007

"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"


"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"

செல்வி விஜி ஒரு சிந்திக்க வைக்கும் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
//ஆடியில் ஏன் கூழ் காய்ச்சுகின்றார்கள்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்....
அறியும் பேராவலோடு...//


இதோ என் கருத்து!

தை மாதம் !

அறுவடை முடிந்து அனைவரும் மகிழ்வோடு இருக்கும் காலம்.

இதில் வந்த வளம் வைத்து அடுத்த 3 மாதம் ஓடுகிறது.

சித்திரை பிறக்குது.

இன்னும் கொஞ்சம் அரிசி இருக்கு.

வைகாசி, ஆனி....

மிச்சம் மீதி குருணை வைத்து காலம் ஒட்டியாச்சு.

ஆடி பிறக்குது.

ஆடிப்பெருக்கு வர இன்னும் 18 நாள் இருக்கு.

அதன் பின்தான் நிலம் ஈரமாகும்.

உழவே முடியும் அப்போதுதான்!

சம்பா விதைக்கமுடியும்.

ஆடிப்பட்டம் தேடி விதைக்க முடியும்.

இங்கோ....!

வெயில் கொளுத்துது.

வீட்டில் தண்ணீர் கூட இல்லை.

ஒரு பிள்ளைக்கு அம்மைநோய் வேறு!

வீட்டில் தாளிக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு வேறு.

சோறும் கிடையாது.

இருக்கும் சில மணி அரிசிகளோ மூட்டை மூட்டையாய் பணம் படைத்தவர் வீட்டில்.

பார்த்தாள் அம்மன்!

அருள் வந்து ஆடினாள்.

அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்துடா! அம்மன் கேக்கறா! எல்லாருக்கும் ஊத்து! அப்பதான் என் மனம் குளிரும்!

அரிசி யாரிடம் இருந்ததோ?

அவன் பயந்தான்.

கொண்டுவந்தான் கோயிலுக்கு.

கூழ் காய்ச்சினான்.

அல்லாரும் வாங்கடேய்! அம்மன் கூழ் குடிங்கடேய்!


வீட்டில் தண்ணி கூட கிடைக்காத ஏழைமக்கள் கோயிலுக்கு பாத்திரம் ஏந்தி வந்தனர்.

அம்மன் ஊற்றிய கூழைப் பிரசாதமெனப் பெற்று பசியாறினர்!

அம்மனும் மகிழ்ந்தாள்...... அல்லல் படுவோரைக் காப்பாற்றிய மகிழ்வில்!

மடை திறந்த வெள்ளமாய்ப் பிறந்தாள்!

ஆடிப்பெருக்கு !
ஆடிப்பட்டம் !
ஆடிச் சம்பா !

அதன் பின்னர் தை வரைக்கும் ஆட்டம் தான்! பாட்டம்தான்!!

அம்மன் அருள் எங்கும் பொலிக!

ஆடி வெள்ளி அன்றாவது மாரியம்மன் தாலாட்டு படியுங்கள்!



அதெல்லாம் சரி!

இந்தக் கூழை எப்படி காய்ச்சுவது?

இதோ அதன் பக்குவம்!



ஈழத்துப்பாடல் ஒன்று!!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்

ஆடிக்கூழ்:

தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

! காரம்+இனிப்பு சேர்ந்த இனிய கலவையில் மணக்கும்!!

சுவை மிகச்சுவை எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்வும் பிடிக்கும்...

கொழுக்கட்டையும் உண்டு!!..:))

Read more...

Sunday, July 15, 2007

"மாரியம்மன் தாலாட்டு"


[17-ம் தேதி துவங்கும் ஆடி மாதம் அனைவரும் பிரதி எடுத்துப் படிக்க வசதியாக முழுத் தாலாட்டும் இங்கே!]


"மாரியம்மன் தாலாட்டு"

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"

"விநாயகர் துதி"

'காப்பு'

'கொச்சகக் கலிப்பா'

"பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்

மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்

சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்

காதலுட னோதக் கணபதியுங் காப்பாமே"

'வெண் செந்துரை'

"முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே

கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்

வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்

வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்

பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே

காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே

சீரான நல்மருகா செல்வக்கணபதியே

ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே

கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே

வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா

மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே

ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே

தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்

பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே

வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்

தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா

முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே

கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே

முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே

செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்."


"சரஸ்வதி துதி"


"தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்

என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே

வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து

என்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா

கமலாசனத்தாளே காரடி பெற்றவளே

என்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே

என்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா

மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட

சரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா

கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட

பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா."

" மாரியம்மன் துதி"

"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே

திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே

எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]

நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே

உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே

உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்

உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்

உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்

உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்

உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே

உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்

உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்

உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]

உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே

உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்

உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா

துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்

துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]

தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்

மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்

சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்

இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்

சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே

சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா

கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே

கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்

கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே [40]

ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே

படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா

பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே

பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா

ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை

ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா

வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே

அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய

உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய [50]

மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய

பக்கங் கயிரோட பகரச் செடிலசைய

ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை

தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி

சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்

எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்

உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்

கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக

ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே [60]

எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே

திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா

முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி

அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்

தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மாயி மருளியரே மணிமந்திர சேகரியே

வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே

வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்

நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே

நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை [70]


கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே

நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே

நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்

தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்

வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே

தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா

பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா

தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா

கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் [80]


ஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே

பத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார்

வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்

செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

தூண்டிமுள்ளைத் தூக்கி துடுக்கடக்கும் மாரிமுத்தே

ஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட

ரெட்டைச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க

பரமசிவன் வாசலிலே பாற்பசுவைக் காவுகொண்டாய்

ஏமனிட வசலிலே எருமைக்கிடா காவுகொண்டாய்

எருமைக்கிடா காவுகொண்டாய் எக்கால தேவியரே [90]

எக்கால தேவியரே திக்கெல்லாம் ஆண்டசக்தி

காசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாருமம்மா

ஊசி வளநாடு உத்தியா குமரிதேசம்

அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை

எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை

பத்தென்றா லொன்றறியேன் பாலனம்மா உன்னடிமை

பாடவகை யறியேன் பாட்டின் பயனறியேன்

வருத்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன்

பேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே [100]


குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ

மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ

பாலன் வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ

கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி

சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே

வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்

தேடி யழைக்கின்றேன்நான் தேவிமுகங் காணாமல்

ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி

பாலன் குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி

மைந்தன் குழந்தையம்மா மகராசி காருமம்மா [110]


கல்லோடீ உன்மனது கரையிலையோ எள்ளளவும்

இரும்போடீ உன்மனது இரங்கலையோ எள்ளளவும்

கல்லுங் கரைந்திடுமுன் மனங்கரையா தென்னவிதம்

இரும்பு முருகிடுமுன் இருதயமுருகா தென்னவிதம்

முன்செய்த தீவினையோ பெற்றவளே சொல்லுமம்மா

ஏதுமறி யேனம்மா ஈஸ்வரியே சொல்லுமம்மா

கடம்பாடி யெல்லையிலே கட்டழகி வீற்றிருப்பாய்

கடும்பாடி யெல்லைவிட்டு கட்டழகி வாருமம்மா

கரகத் தழகியரே கட்டழகி மாரிமுத்தே

கரகத்து மீதிருந்து கட்டழகி கொஞ்சுமம்மா [120]

கும்பத் தழகியம்மா கோபாலன் தங்கையரே

கும்பத்து மீதிருந்து கொஞ்சுமம்மா பெற்றவளே

கொஞ்சுமம்மா பெற்றவளே குறைகளொன்றும் வாராமல்

உனக்குப் பட்டு பளபளென்ன பாடகக்கால் சேராட

உனக்குமுத்து மொளமொளென்ன மோதிரக்கால் சேராட

உலகமெல்லாம் முத்தெடுக்க உள்ளபடிதான் வந்தாய்

தேசமெல்லாம் முத்தெடுப்பாய் தேவிகன்ன னூராளே

முத்தெடுக்கத் தான்புகுந்தாய் உத்தமியே மாரிமுத்தே

உனக்கு ஈச்சங் குறக்கூடை யிருக்கட்டும் பொன்னாலே

உனக்கு தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே [130]


குறக்கூடை முத்தெடுத்து கொம்பனையே நீ புகுந்தாய்

கோயிலின் சந்தடியில் கூப்பிட்டால் கேளாதோ

அரண்மனைச் சந்தடியில் அழைத்தாலும் கேளாதோ

மாளிகையின் சந்தடியில் மாதாவே கேட்கிலையோ

மக்களிட சந்தடியோ மருமக்கள் சந்தடியோ

பிள்ளைகளின் சந்தடியோ பேரன்மார் சந்தடியோ

அனந்தல் பெருமையோ ஆசாரச் சந்தடியோ

சந்தடியை நீக்கியம்மா தாயாரு மிங்கே வா

கொல்லிமலை யாண்டவனைக் குமர குருபரனை

காத்தவ ராயனைத்தான் கட்டழகி தானழையும் [140]


தொட்டியத்துச் சின்னானை துரைமகனைத் தானழையும்

மதுரை வீரப்பனையென் மாதாவே தானழையும்

பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும்

கருப்பண்ண சுவாமியையுங் கட்டழகி தானழையும்

முத்தாலு ராவுத்தன் முனையுள்ள சேவகரை

மூங்கில் கருப்பனைத்தான் சடுதியிற் றானழையும்

பெரியபாளையத் தமர்ந்த பேச்சியரே மாதாவே

பாளையக் காரியம்மா பழிகாரி மாரிமுத்தே

கன்னனூர் மாரிமுத்தே கலகலென நடனமிடும்

உன்னைப் பணிந்தவர்க்கு உற்றதுணை நீயிரம்மா [150]

ஆதிபர மேஸ்வரியே அருகேதுணை நீயிரம்மா

உன்னைப்போல் தெய்வத்தை உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் மைந்தர் எங்குமுண்டு வையகத்தில்

உன்-மகிமை யறிந்தவர்கள் மண்டலத்தில் யாருமில்லை

உன் -சேதி யறிவாரோ தேசத்து மானிடர்கள்

உன் -மகிமையை யானறிந்து மண்டலத்தில் பாடவந்தேன்

உன் -மகிமையறி யாதுலகில் மாண்டமனு கோடியுண்டு

உன் -சேதியறி யாதுலகில் செத்தமனு கோடியுண்டு

தப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து

ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம் [160]


மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்

தேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா

கொண்டு மனம்பொறுத்து கொம்பனையே காருமம்மா

கார்க்கக் கடனுனக்குக் காரண சவுந்தரியே

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

வேணுமென்று காரடிநீ வேப்பஞ் சிலையாளே

பக்கத் துணையிருந்து பாலகனைக் காருமம்மா

பொரிபோ லெழும்பிநீ பூரித்து ஆலித்து

ஆலித்து நீயெழும்பி ஆத்தா ளிறக்குமம்மா

சிரசினிற் முத்தையம்மா முன்னுதாய் நீயிறக்கும் [170]


கழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்

தோளினில் முத்தையம்மா துரந்தரியே நீயிறக்கும்

மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்

வயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கும்

துடையினில் முத்தையம்மா தேவியரே நீயிறக்கும்

முழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கும்

கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கும்

பாதத்தில் முத்தையம்மா பாரினி லிறக்கிவிடும்

பூமியில் இறக்கிவிடும் பெற்றவளே காருமம்மா

பெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே [180]

உற்ற துணையிருந்து உகந்தரியே காருமம்மா

உன்னைவிட பூமிதனில் உற்றதுணை வேறுமுண்டோ

பக்கத் துணையிருந்து பாதுகாத்து ரட்சியம்மா

செக்கச் சிவந்தவளே செங்கண்ணன் தங்கையரே

மங்கையெனும் மாதரசி மகராசி காருமம்மா

திங்கள் வதனியரே தேவிகன்ன னூராளே

எங்கள்குல தேவியரே ஈஸ்வரியே கண்பாரும்

மக்கள் விநோதினி மாதாவே கண்பாரும்

ஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால்

வாழ்வதுதான் எக்காலம் வார்ப்புச் சிலையாளே [190]


ஆயி மகமாயி ஆரணங்கு சொற்காரணியே

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

இரங்கிறங்கும் தாயாரே எங்களைக் காப்பாற்றுமம்மா

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

வீரணன் சோலையிலே ஆரணம தானசக்தி

நீதிமன்னர் வாசலிலே நேராய்க் கொலுவிருந்தாய்

கொலுவிருந்த சக்தியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே

போட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே

பொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே [200]

செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

அடங்காத மானிடரை ஆட்டிவைக்கும் மாரிமுத்தே

துஷ்டர்கள் தெண்டனிட்டு துடுக்கடக்கும் மாரிமுத்தே

கண்டவர்கள் தெண்டனிட்டு கலக்கமிடும் மாரிமுத்தே

அண்டாத பேர்களைத்தான் ஆணவத்தைத் தானடக்கி

இராஜாக்க ளெல்லோரும் நலமாகத் தான்பணிய

மகுட முடிமன்னர் மனோன்மணியைத் தான்பணிய

கிரீட முடிதரித்த கீர்த்தியுள்ள ராஜாக்கள்

மகுடமுடி மந்திரிகள் மன்னித்துத்தெண்ட னிட்டுநிற்க

பட்டத் துரைகள் படைமுகத்து ராஜாக்கள் [210]


வெட்டிக் கெலித்துவரும் வேதாந்த வேதியர்கள்

துஷ்டர்களைத் தானடக்கும் சூலி கபாலியம்மா

அடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி

மிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே

தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே

அவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே

சிவனுடன் வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே

அரனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே

பிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே

விஷ்ணுவுடன் வாதாடும் வேதாந்த மாரிமுத்தே [220]

எமனுடன் வாதாடும் எக்கால தேவியரே

தேவருடன் வாதாடும் தேவிகன்ன னூராளே

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே கர்த்தனிட தேவியரே

நெருப்பம்மா உன்சொரூபம் நிஷ்டூரக் காரியரே

அனலம்மா உன்சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே

தணலம்மா உன்சொரூபம் தரிக்கமுடி போதாது

அண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே

காத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே

தொட்டியத்துச் சின்னானைத் தொழுதுவர பண்ணசக்தி [230]

கருப்பனையுங் கூடவேதான் கண்டு பணியவைத்தாய்

பெண்ணரசிக்காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய்

அடங்காத பிள்ளையென ஆண்டவனைக் கழுவில் வைத்தாய்

துஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கிக் கழுவில் வைத்தாய்

பாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே

வாரி யெடுக்கவொரு வஞ்சியரை யுண்டுபண்ணாய்

முத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணேயென்று

தாதியரைத் தானழைத்துத் தாயாரே முத்தெடுப்பாய்

முத்தெடுத்துத் தான்புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே [240]

ஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே

பாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

சொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்

கழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்

நல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க

உரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்

உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா

எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா

கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]


கடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா

பாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா

பேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

மகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா

பெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

ஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா

பூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா

பாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்

பூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்

வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]


பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ

மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ

குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ

சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ

பூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்

ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா

இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா

அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்

குப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே

கொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும் [270]

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே

மாரியென்றால் மழைபொழியும்

தேவியென்றால் தேன்சொரியும்

தேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே

திரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா

பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே

தாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே

பேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே

குருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்

கோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]


இப்படிக்கு நீயிருந்தால் இனி பிழையோம் தாயாரே

கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே

யுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே

கலியுகத்தில் தாயாரே கண்கண்ட தெய்வம் நீ

உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் மைந்தர்தான் எங்குமுண்டு வையகத்தில்

அனலை மதியாய் நீ யாவரையும் சட்டை பண்ணாய்

புனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டைபண்ணாய்

வருந்தி யழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணாமல்

பாலகனைக் காத்துப் பாதத்தா லுதைத்துவிடு [290]


மைந்தனைக் காத்து மகராசி உதைத்துவிடு

குழந்தையைக் காத்து கொம்பனையே உதைத்துவிடு

ஆதிபரஞ்சோதி அங்குகண்ணே வாருமம்மா

வெள்ளிக்கிழமையிலே கொள்ளிக்கண் மாரியரே

வெள்ளியிலுந் திங்களிலும் வேண்டியபேர் பூஜைசெய்ய

பூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே

இந்த மனையிடத்தில் ஈஸ்வரியே வந்தருள்வாய்

வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்

இருந்தமனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள்வாய்

கண்பாரும் கண்பாரும் கனகவல்லித் தாயாரே [300]

நண்பான பிள்ளைகளை நலிந்திடச் செய்யாதே

உன்னை நம்பினோரை ஓய்ந்துவிடச் செய்யாதே

அந்நீதஞ் செய்யாதே ஆயி மகமாயி

வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா

பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா

கொலுவி லிருந்தசத்தி கோர்த்தமுத்து நீயிறக்கும்

போட்டமுத்தை நீயிறக்கும் பூலோகமாரிமுத்தே

கேளிக்கை யாகக் கிளிமொழியே முத்திறக்கும்

அரும்பால கன்றன்னை அவஸ்தைப் படுத்தாதே

வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [310]

அன்ன மிறங்கவம்மா ஆத்தாளே கண்பாரும்

ஊட்டத்தை நீகொடுத்து உத்தமியே காருமம்மா

இரக்கங் கொடுத்து ஈஸ்வரியே காருமம்மா

காருமம்மா பெற்றவளே காலுதலை நோகாமல்

எங்கேயோ பாராமுகமாய் இருந்தேனென்று சொல்லாதே

அந்திசந்தி பூஜையில் அசதியா யெண்ணாதே

ஒட்டாரம் பண்ணாதே ஓங்காரி மாரிமுத்தே

பாவாடம் நேருமம்மா பழிகள் வந்து சேருமம்மா

பாவாடம் நேர்ந்ததென்றால் பாலருக் கேறாது

கண்டார் நகைப்பார்கள் கலியுகத்தா ரேசுவார்கள் [320]


கலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே

பார்த்தார் நகைப்பார்கள் பரிகாசம் பண்ணுவார்கள்

உதடு படைத்தவர்கள் உதாசீனஞ் சொல்லுவார்கள்

பல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள்

நாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் பேசுவார்கள்

பார்த்தோர் நகைக்கவம்மா பரிகாசம் பண்ணாதே

கச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே

தாயாரே பெற்றவளே தயவுவைத்துக் காருமம்மா

மாதாவே பெற்றவளே மனது வைத்துக் காருமம்மா

பார்வதியே பெற்றவளே பட்சம் வைத்துக் காருமம்மா [330]

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரம் முத்தினிலே பார்த்தெடுத்த ஆணிமுத்து

ஆறாயிரங்கண் முத்துதனி லாத்தாள் வளர்ந்தெழுந்தாள்

நாகத்தின் கண்ணேயம்மா நல்ல விடப்பாம்பே

சேஷத்தின் கண்ணேயம்மா சின்ன விடப்பாம்பே

அஞ்சுதலை நாகமுனைக் கொஞ்சிவிளை யாடுதம்மா

பத்துதலை நாகமம்மா பதிந்துவிளை யாடுதம்மா

செந்தலை நாகமம்மா சேர்ந்துவிளை யாடுதம்மா

கருந்தலை நாகமம்மா காக்குதம்மா உன்கோவில்

சேஷனென்ற பாம்பையெல்லாம் சேரவே பூண்டசக்தி [340]


நாகமென்ற பாம்பையெல்லாம் நலமாகப் பூண்டசக்தி

அரவமென்ற பாம்பையெல்லாம் அழகாகப் பூண்டசக்தி

ஆபரணமாய்ப் பூண்டாய் அழகுள்ள பாம்பையெல்லாம்

நாகங் குடைபிடிக்க நல்லபாம்பு தாலாட்ட

தாராள மாய்ப்பூண்டாய் தங்கத்திரு மேனியெல்லாம்

பாலாட்ட தாலாட்ட தாயார் மனமிரங்கி

சேஷன் குடைகவிய செந்நாகம் வட்டமிட

வட்டமிட்டு வீற்றிருந்தாய் மாரிகண்ண னூராளே

மார்மேலே நாகமம்மா மடிமேல் புரண்டாட

மார்மேலுந் தோள்மேலும் வண்ண மடிமேலும் [350]


கொஞ்சிவிளை யாடுதம்மா கோபாலன் தங்கையரே

ஏழையா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க

குழந்தையா லாகுமோதான் கொம்பனையேத் தோத்தரிக்க

அடியேனா லாகுமோதான் ஆத்தாளைத் தோத்தரிக்க

எந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க

இல்லையென் பார்பங்கில் ஈஸ்வரியே மாரிமுத்தே

நில்லா யரை நாழி நிஷ்டூரத் தாண்டவியே

உண்டென் பார்பங்கில் ஒளிவிளக்காய் நின்றசக்தி

பார்த்தோர்க்குச் செல்வனம்மா பாலன் குழந்தையம்மா

உன்னைப் பகைத்தோர்க்கு உருமார்பி லாணியம்மா [360]

நினைத்தோர்க்கு தெய்வமம்மா எதிர்த்தார்க்கு மார்பிலாணி

தாயே நீ வாருமம்மா தற்பறையாய் நின்றசக்தி

வாக்கிட்டால் தப்பாது வரங்கொடுத்தால் பொய்யாது

பொய்யாது பொய்யாது பூமலர்தான் பொய்யாது

பூவிரண்டு பூத்தாலும் நாவிரண்டு பூக்காது

மறவரிட வாசலிலே மல்லிகைப்பூ பூத்தாலும்

மறவ ரறிவாரோ மல்லிகைப்பூ வாசனையை

குறவரிட வாசலிலே குடமல்லி பூத்தாலும்

குறவ ரரிவாரோ குடமல்லி வாசனையை

பன்றி முதுகினில் பன்னீரைப் பூசினாக்கால் [370]


பன்றி யறியுமோதான் பன்னீரின் வாசனையை

எந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க

மைந்தனா லாகுமோதான் மாதாவை நமஸ்கரிக்க

பாலனா லாகுமோதான் பார்வதியை நமஸ்கரிக்க

எச்சி லொருகோடி இளந்தீட்டு முக்கோடி

தீட்டு மொருகோடி தெருவெங்குந் தானுண்டு

கன்னிகள் தீட்டுக் கலந்தோடி வந்தாலும்

ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்தாலும்

தாயே மனம்பொறுத்து தயவாகக் கருமம்மா

எச்சிற் கலந்ததென்று இடையப்போய் நின்றாலும்[380]


தீட்டுக் கலந்தாலும் ஈஸ்வரியே மனம்பொறுத்து

பக்ஷம்வைத்துக் காருமம்மா பராபரியே ஈஸ்வரியே

விருப்பம்வைத்துக் காருமம்மா விருது படைத்தசக்தி

நீலிகபாலியம்மா நிறைந்த பஞ்சாட்சரியே

சூலி கபாலியம்மா சுந்தரியே மாரிமுத்தே

நிஷ்டூரக் காரியரே விஸ்தார முள்ளசக்தி

வேப்பிலையால் தான் தடவி விசிறிமுத் தழுத்திவிடு

ஆனபரா சத்தியரே அம்மைமுத் தழுத்திவிடு

இறக்கிறங்குந் தாயே ஈஸ்வரியே நான்பிழைக்க

படவேட் டமர்ந்தவளே பாங்கான மாரிமுத்தே [390]

ஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளே

வீராணம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்

கன்னபுரத் தெல்லையெல்லம் காவல்கொண்ட மாரியரே

எக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மா

திக்கெல்லாம் பேர்படைத்த தேசத்து மாரியரே

அண்ட புவனமெல்லாந் துண்டரீக முள்ளசக்தி

கச்சிப் பதியாளே காமாட்சித் தாயாரே

கைலாச லோகமெல்லாம் காவல்கட்டி யாண்டவளே

பாதாள லோகமெல்லாம் பரதவிக்கப் பண்ணசக்தி [400]


காலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர்

உச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர்

அந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர்

கட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ண

பாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல்சொல்ல

வடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர்

கன்னடியர் காவலுடன் கர்னாட்டுப் பட்டாணியர்

இட்டசட்டை வாங்காத இடும்பரெல்லாம் காத்திருக்க

போட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க

வடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் [410]


வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்

கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து

மாயமெல்லா முன்மாயம் மருளரெல்லா முன்மருளர்

மருளர் தழைக்கவம்மா மருமக்க ளீடேற

பலிச்சட்டி தானெடுக்கும் புத்திரர்கள் தான்றழைக்க

வேதங்கள் தான்றழைக்க விண்ணவர்க ளீடேற

குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே கண்பாரும்

மைந்தர்கள் தான்றழைக்க மாதாவே கண்பாரும்

காஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து

கர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய் [420]

கங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய்

வைகை மூழ்கியம்மா வனமயிலே தவமிருந்தாய்

தவத்தில் மிகுந்தவளே சத்தகன்னி தாயாரே

ஆற்று மணலெடுத்து அரனாரை யுண்டுபண்ணாய்

சேற்று மணலெடுத்துச் சிவனாரை யுண்டுபண்ணாய்

கம்பை நதியிலே காமாட்சி தவமிருந்தாய்

இருநூற்றுக் காதவழி திருநீற்றால் கோட்டையிட்டாய்

திருநீற்றால் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே

அருணா சலந்தனிலே ஈசான்ய மூலையிலே

திருவண்ணா மலையிலேதான் தேவிதவமிருந்தாய் [430]


அருணா சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாய்

ஈசான்ய மூலையிலே இருந்தாய் பெருந் தபசு

இருந்தாய் பெருந் தபசு இடப்பாகம் பேறு பெற்றாய்

இடப்பாகம் பேறுபெற்றாய் ஈஸ்வரியே மாதாவே

காக முதுகினில் கதம்பப்பொடி பூசிவைத்தால்

காக மறியுமோதான் கதம்பப்பொடி வாசனையை

கொக்கு முதுகினிற் கோமேதகங் கட்டிவைத்தால்

கொக்கு மறியுமோதான் கோமேதகத்தி னொளியை

மூலக் கனலின் முதன்மையாய் நின்ற சக்தி

பாலனுக்கு வந்த பார எரிச்சல்களில் [440]


காலெரிவு கையெரிவு கட்டழகி வாங்குமம்மா

குத்தல் குடைச்சல் குலைமாரிடி நோவு

மண்டை குடைச்சலோடு மாரடைப்பு தலைநோவு

வாத பித்த சீதசுரம் வல்பிணியைக் காருமம்மா

இடுப்புக் குடைச்சலைத்தான் ஈஸ்வரியே வாங்குமம்மா

பித்த யெரிவுகளைப் பெற்றவளே வாங்குமம்மா

கழுத்து வலியதனைக் கட்டழகி வாங்குமம்மா

பத்திரியால் தான்தடவி பாரமுத் தழித்துவிடு

விபூதியைப் போட்டு இறக்கிவிடு முத்திரையை

வேப்பிலை பட்டவிடம் வினைகள் பறந்தோடுமம்மா [450]

பத்திரி பட்டவிடம் பாவம் பறந்தோடுமம்மா

விபூதிபட்ட தக்ஷணமே வினைகள் பறந்தோடுமம்மா

பஞ்சா க்ஷரம்பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும்

பத்தென்றா லிரண்டறியேன் பாலனம்மா வுன்னடிமை

எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை

நாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடப் பாம்பே

சேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடப் பாம்பே

பாம்பே தலைக்கணைதான் வேப்பிலையோ பஞ்சுமெத்தை

வேப்பம்பாலுண்டவளே வேதாந்த மாரிமுத்தே

ஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை [460]

வீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சுமம்மா

முந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னுதென்றாய்

நானூறு சந்தி நடுச்சந்தி யுன்னுதென்றாய்

சந்திக்குச் சந்தி தனிச்சந்தி யுன்னுதென்றாய்

வீதிக்கு வீதி வெளிச்சந்தி யுன்னுதென்றாய்

பட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

திருவிளக்கு நாயகியே தேவிகன்ன னூராளே

மணிவிளக்கின் மேலிருந்து மாதாவே கொஞ்சுமம்மா

விளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சுமம்மா [470]

திருவிளக்கின் மேலிருந்து தேவியரே கொஞ்சுமம்மா

கொஞ்சுமம்மா பெற்றவளே கோபாலன் தங்கையரே

சிரித்தார் முகத்தையம்மா செல்லரிக்கக் கண்டிடுவாய்

பரிகாசஞ் செய்பவரைப் பல்லைப் பிடுங்கி வைப்பாய்

மூலைவீட்டுப் பெண்களைத்தான் முற்றத்தி லாட்டிடுவாய்

அரண்மனைப் பெண்களைத்தா னம்பலத்தி லாட்டிடுவாய்

பொல்லாத பெண்களைத்தான் தோற்பாதங் கட்டிடுவாய்

தோற்பாதங் கட்டிடுவாய் துரந்தரியே மாதாவே

நடுவீதியிற் கொள்ளிவைத்து நானறியேன் என்றிடுவாய்

கடைவீதியிற் கொள்ளிவைத்துக் கடக்கப் போய் நின்றிடுவாய். [480]

கடியா விஷம் போலே கடிக்க விட்டுப் பார்த்திருப்பாய்

தீண்டா விஷம் போலே தீண்ட விட்டுப் பார்த்திருப்பாய்

பாம்புகன்னி நீலியம்மா பழிகாரி மாரிமுத்தே

தாயே துரந்தரியே சர்வலோக மாதாவே

ஆறாத கோபமெல்லாம் ஆச்சியரே விட்டுவிடு

கடலில் மூழ்கியம்மா கடுகநீ வாருமம்மா

காவேரியில் தான்மூழ்கி காமாக்ஷி வாருமிங்கே

வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்

கஞ்சா வெறியன் கனவெறியன் பாவாடை

பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும் [490]


தாயாரும் பிள்ளையுமாய்த் தற்காக்க வேணுமம்மா

மாதாவும் பிள்ளையுமாய் மனது வைத்துக் காருமம்மா

ஆத்தாளும் பிள்ளையுமாய் அன்பு வைத்துக் காருமம்மா

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

காசிவள நாட்டைவிட்டு காரணியே வந்தமரும்

ஊசிவள நாட்டைவிட்டு உத்தமியே வந்தமரும்

பம்பை முழங்கிவர பறைமேள மார்ப்பரிக்க

சிற்றுடுக்கை கொஞ்சிவர சிறுமணிக ளோலமிட

வேடிக்கைப் பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்

கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து [500]


சமய புரத்தாளே சாம்பிராணி வாசகியே

முக்கோணத் துள்ளிருக்கும் முதன்மையாய் நின்ற சத்தி

நாற்கோணத் துள்ளிருக்கும் நல்லமுத்து மாரியரே

பஞ்சா க்ஷரப்பொருளே பார்வதியே பெற்றவளே

அறுகோணத் துள்ளிருக்கும் ஆதிபர மேஸ்வரியே

அஷ்டா க்ஷரப்பொருளே ஆனந்த மாரிமுத்தே

நாயகியே மாரிமுத்தே நாரணனார் தங்கையரே

ஐம்பத்தோ ரட்சகியே ஆதிசிவன் தேவியரே

ஆதிசிவன் தேவியரே அம்மைமுத்து மாரியரே

பேருலக ரக்ஷகியே பெருமா ளுடன்பிறப்பே [510]

பெருமாளுடன் பிறந்து பேருலகை யாண்டவளே

ஆயனுடன் பிறந்து அம்மைமுத்தாய் நின்றவளே

திருகோணத் துள்ளிருக்கும் திரிபுர சவுந்தரியே

ஆறாதா ரப்பொருளே அபிஷேகப் பத்தினியே

மூலாதா ரப்பொருளே முன் பிறந்த தேவதையே

தாயே துரந்தரியே சர்வலோ கேஸ்வரியே

பத்திரியால் தான்தடவி பாரமுத்தைத் தானிறக்கும்

வேப்பிலையால் தான்தடவி மெல்லியரே தானிறக்கும்

மேனியெல்லாந் தானிறக்க மெல்லியரே தானிறக்கும்

இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா [520]


முத்திலு முத்து முகத்திலிடு மாணிமுத்து

எங்கும் நிறைந்த எல்லார்க்கும் மாரிமுத்து

பெண்ணாய்ப் பிறந்து பேருலகை யாளவந்தாய்

பேருலகை யாளவந்தாய் பெண்ணரசி மாரிமுத்தே

நித்தம் பராமரிக்க நிஷ்ட்டூரி நீ பிறந்தாய்

தேசம் பராமரிக்க தெய்வகன்னி நீ பிறந்தாய்

கிளியேந்தும் நாயகியே கிளிமொழியே தாயாரே

நித்தியக் கல்யாணி நீலி பரஞ்சோதி

அம்மணியே பார்வதியே ஆணிமுத்துத் தாயாரே

லோகமெல்லாம் முத்தளக்கும் லோகபர மேஸ்வரியே [530]

வெற்றிக்கொடி பறக்க விருதுபம்பை தான்முழங்க

எக்காள மூதிவர எங்கும் கிடுகிடென்ன

பஞ்சவர்ண டால்விருது பக்கமெல்லாம் சூழ்ந்துவர

நாதசுர மேளம் நாட்டியங்க ளாடிவர

தப்பட்டை மேளம் தவில்முரசு தான்முழங்க

தாளங்கள் ஊதிவர கவிவாணர் எச்சரிக்க

சின்னங்கள் ஊதிவர சிறப்பாய்க் கொடிபிடிக்க

ஜண்டா சிலர்பிடிக்க தனிமுரசு தானடிக்க

கொடிகள் சிலர்பிடிக்க கொக்கரிப்பார் வீரமக்கள்

சாமரைகள் தான்வீசி சந்திப்பார் வீரமக்கள் [540]


தாரை பூரி சின்னம் ஆரவர மாய்முழங்க

தக்க வுடுக்கைகளும் தவிலோடு பம்பைகளும்

மிக்க கவுண்டைகளும் மிருதங்கந் தான்முழங்க

நன்மகுடி யுஞ்சுதியும் நன்றாக ஊதிவர

தம்புரு வீணை தக்கபடி தான் வாசிக்க

பம்பை யடித்துப் பறமேளந் தானதிர

கெண்செட்டு வாத்தியமும் கிளர்நெட்டு வாத்தியமும்

கொடுவாத்தி யம்புதிதாய் கொண்டுவந்தர் உன்மக்கள்

இத்தனை வாத்தியங்கள் இசைக்கின்றார் பாருமம்மா [550]

பார்த்துக் குளிருமம்மா பாங்கான உன்மனது

கண்டு குளிருமம்மா கல்லான உன்மனது

எப்படி யாகிலுந்தான் ஏழைகளுமீ டேற

கண்பாரும் பாருமம்மா காரண சவுந்தரியே

இந்திரனுக் கொப்பா யிலங்குமக மாரியரே

கும்பத் தழகியம்மா கொலுமுகத்து ராஜகன்னி

சகலகுற்றம் சகலபிழை தாயாரே நீ பொறுப்பாய்

வணங்குகிற மக்களுக்கு வாழ்வு மிக அளிப்பாய்

ஓங்கார ரூபியென்று உன்னையே தோத்தரிக்க

படவேட்டில் வீற்றிருக்கும் பரஞ்சோதி தாயாரே [560]


ஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே

அண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்

தேசங்க ளெங்கும் தேவியைத் தோத்தரிப்பார்

எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தசக்தி

எங்கும் நிறைந்தவளே எல்லார்க்குந் தாயாரே

அஞ்சேலென்ற அஸ்தமொடு அடியார் தமைக்காக்க

வேப்பிலை யுங்கையில் விபூதியெங்குந் தூளிதமும்

கருணாகடாக்ஷம்வைத்து காக்கு மகமாயிவுந்தன்

சரணார விந்தமதைத் தந்தருளு மாரிமுத்தே

உன்பேர் நினைத்தால் பில்லிபிசாசு பறந்தோடுமம்மா [570]


சூனியமும் வைப்பும் சுழன்றலைந் தோடிவிடும்

பாதாள வஞ்சனமும் பறந்துவிடும் உன்பேர்நினைத்தால்

சத்தகன்னி மாதாவே சங்கரியே மனோன்மணியே

கரகத்தில் வீற்றிருக்கும் கன்னனூர் மாரிமுத்தே

சூலங் கபாலமுடன் துய்ய டமருகமும்

ஓங்கார ரூபமம்மா ஒருவ ரறிவாரோ

மகிமை யறிவாரோ மானிடர்கள் யாவருந்தான்

அடியார் தமைக்காக்கும் மந்திர நிரந்தரியே

அடியார்கள் செய்தபிழை ஆச்சியரே நீ பொறுப்பாய்

கோயி லடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி [580]


சன்னதி பிள்ளையைத்தான் தற்காரும் பெற்றவளே

உன்னையல்லால் வேறுதுணை ஒருவரையுங் காணேனம்மா

வருந்துவார் பங்கில் வளமாய்க் குடியிருப்பாய்

பாவாடைக் காரியம்மா பராபரியே அங்குகண்ணே

உண்ணுகின்ற தேவதைகள் உடுத்துகின்ற தேவதைகள்

கட்டுப்பட்ட தேவதைகள் கார்க்கின்ற தேவதைகள்

இந்த மனையிடத்தி லிருந்துண்ணும் தேவதைகள்

சாம்பிராணி தூபத்திற் குட்பட்ட தேவதைகள்

அனைவோரும் வந்திருந்து அடியாரைக் காக்கவேணும் [589]

ஓராம் படித்தளமாம் ஓலைப்பூ மண்டபமாம்

ஓலைப்பூ மண்டபத்தில் உகந்து கொலுவிருந்தாள்

இரண்டாம் படித்தளமாம் இரத்தின சிம் மாதனமாம்

இரத்தின சிம்மாதனத்தி லிருந்தரசு தான்புரிவாள்

மூன்றாம் படித்தளமாம் முனைமுகப்புச் சாலைகளாம்

முனைமுகப்புச் சாலைகளில் முந்திக் கொலுவிருந்தாள்

நான்காம் படித்தளமாம் நவரத்ன மண்டபமாம்

நவரத்தின மண்டபத்தில் நாயகியும் வந்தமர்ந்தாள்

ஐந்தாம் படித்தளமாம் அழுந்தியசிம் மாதனமாம்

அழுந்திய சிம்மாதனத்தில் ஆயி கொலுவிருந்தாள்

ஆறாம் படித்தளமாம் அலங்காரச் சாவடியாம் [600]


அலங்காரச் சாவடியில் ஆய்ச்சியரும் வந்திருந்தாள்

ஏழாம் படித்தளமாம் எழுதிய சிம் மாதனமாம்

எழுதிய சிம்மாதனத்தி லீஸ்வரியாள் கொலுவிருந்தாள்

எட்டாம் படித்தளமாம் விஸ்தார மேடைகளாம்

விஸ்தார மேடைகளில் விமலியரும் வந்தமர்ந்தாள்

ஒன்பதாம் படித்தளமாம் ஒருமுகமாய் நின்றசக்தி

ஒருமுகமாய் நின்றசக்தி உத்தமியுங் கொலுவிருந்தாள்

பத்தாம் படித்தளமாம் பளிங்குமா மண்டபமாம்

பளிங்குமா மண்டபத்தில் பத்திரியாள் கொலுவிருந்தாள்

ஆத்தாள் கொலுவிலேதான் ஆரார் கொலுவிருந்தார் [610]

ஐங்கரனும் வல்லபையும் அன்பாய்க் கொலுவிருந்தார்

தொந்தி வயிற்றோனும் துந்துபியுங் கொலுவிருந்தார்

குழந்தை வடிவேலன் குமரேசர் தானிருந்தார்

தோகை மயிலேறும் சுப்பிரமணியர் கொலுவிருந்தார்

சிங்கவா கனமேறும் தேவி கொலுவிருந்தார்

ஊர்காக்கும் காளி உத்தமியாள் கொலுவிருந்தாள்

துர்க்கையொடு காளி தொடர்ந்து கொலுவிருந்தாள்

வள்ளிதெய் வானையுடன் மகிழ்ந்து கொலுவிருந்தாள்

பச்சைமலை நாயகியாள் பைங்கிளியாள் தானிருந்தாள்

பூவைக் குறத்தியரும் பொருந்திக் கொலுவிருந்தாள் [620]


வாழ்முனியும் செம்முனியும் வந்து கொலுவிருந்தார்

காத்தன் கருப்பனொடு கட்டழகர் வீற்றிருந்தார்

தொட்டியத்துச் சின்னானும் துரைமகனுந் தானிருந்தார்

மருமக்க ளெல்லோரும் கூடிக் கொலுவிருந்தார்

குமாரர்க ளெல்லோரும் மகிழ்ந்து கொலுவிருந்தார்

ஆரிய மாலையுட னனைவோரும் வீற்றிருந்தார்

ஆயன் பெருமா ளனந்த சயனென்னும்

மாயன் பெருமாள் மங்கை மணவாளன்

ஐவரைக் காத்த ஆதி நெடுமாலும்

பஞ்சவரைக் காத்த பாரளந்தோர் தாமிருந்தோர் [630]


கொற்றவரைக் காத்த கோபாலர் தாமிருந்தார்

முட்டையிற் குஞ்சு முகமறியா பாலகரை

பிட்டு வளர்த்தெடுத்த பெருமாள் கொலுவிருந்தார்

செட்டையிற் காத்த செயராமர் சீதையரும்

அலமேலு மங்கையம்மா ளரிராமர் சீதையரும்

மங்கையோடு லட்சுமியும் மகிழ்ந்து கொலுவிருந்தார்

சீதேவி மூதேவி சேர்ந்துக் கொலுவிருந்தார்

பாஞ்சால னெக்கியத்தில் பதுமைபோல் வந்துதித்த

பத்தினியாள் துரோபதையும் பாரக் கொலுவிருந்தார்

தளரா தனஞ்செயரும் தருமர் கொலுவிருந்தார் [640]

தேவேந்திரன் புத்திரனார் தேர்விஜயன் தாமிருந்தார்

நகுல சகாதேவர் நலமாய்க் கொலுவிருந்தார்

கானக் குயிலழகர் கட்டழகர் வீற்றிருந்தார்

ஐவர்களுங் கூடி அன்பாய்க் கொலுவிருந்தார்

பட்டத் தரசி பைங்கிளி சுபத்திரையும்

ஆயன் சகோதரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்

நல்லதங்காள் வீரதங்காள் நல்லசங் கோதியம்மாள்

அந்தமுள்ள சுந்தரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்

மலையனூர் தானமர்ந்த மாரிக் கொலுவிருந்தாள்

கைச்சூலங் கப்பறையுங் கையிற் கபாலமுடன் [650]


பச்செலும்பு தின்றால் பாலொழுகுமென்று சொல்லி

சுட்டெலும்பு தின்றவளே சுடலைவனங் காத்தவளே

அக்காளுந் தங்கையரும் ஐந்திரண்டேழு பேரும்

ஐந்திரண்டேழு பேரும் அங்கே கொலுவிருந்தார்

தங்காது பேய்பில்லிதன் பேரைச் சொன்னவுடன்

அங்காள ஈஸ்வரியும் அமர்ந்து கொலுவிருந்தார்

தொல்வினை நீக்கிச் சுகுணமதை யளிக்கும்

எல்லைப் பிடாரியரும் இங்கே கொலுவிருந்தார்

காவலர்கள் தான்புகழக் கனகசிம் மாதனத்தில்

காவ லதிகாரி கட்டழகி வீற்றிருந்தாள் [660]


இந்தமனைமுதலா ஏழுமனை யுன்காவல்

சந்தத முன்காவல் சாதுகுண மாரியரே

காவல் கவனமம்மா கட்டழகி மாரிமுத்தே

காவலுக் குள்ளே களவுவரப் போகுதம்மா

பார சவுக்கிட்டுப் பத்திரமாய்க் காருமம்மா

தீரா வினைகளைத்தான் தீர்க்கும் பராபரியே

தாழும் பதிகளைத்தான் தற்காத்து ரட்சியம்மா

ஏழு பிடாரியும் இசைந்து கொலுவிருந்தார்

முத்தலு ராவுத்தன் முனையுள்ள சேவகரும்

முற்றத்தில் வந்து முனைந்து கொலுவிருந்தார் [670]


பூவாடை கங்கையென்று பூரித்துக் காத்திருக்கும்

பாவாடை ராயனும் பக்கங் கொலுவிருந்தார்

தாட்சியில்லா சிவசங்கரியா ளென்றுசொல்லும்

ஆச்சியுடன் கொலுவில் அமர்ந்து கொலுவிருந்தார்

தேவித் திருக்கொலுவில் சேர்ந்து கொலுவிருந்தார்

ஆயித் திருக்கொலுவில் அனைவரும் கொலுவிருந்தார்

மாரிக் கொலுவில் மனமகிழ்ச்சி யாயிருந்தார்

வீரியக் கொலுவில் வீற்றிருந்தா ரெல்லோரும்

ஆலித்துத் தானிருந்தார் அம்மைத் திருக்கொலுவில்

பாலித்துத் தானிருந்தார் பராபரியாள் தன் கொலுவில் [680]


கூடிக் கொலுவிருந்தார் கொம்பனையாள் தன் கொலுவில்

நாடிக் கொலுவிருந்தார் நாரணியாள் தன்கொலுவில்

சந்தேகம் போக்கிச் சாயுச் சியமடைய

சந்தோஷமாகத் தாமிருந்தா ரெல்லோரும் [684]

நாடு தழைக்கவம்மா நானிலத்தோர் தான்வாழி

மாடு தழைக்கவம்மா நல்லோர் மிகவாழி

பாரிலுள்ள ஆடவரும் பாலகரும் மங்கையரும்

ஆரியரும் மற்றோரும் யாவர்களும் தான்படிக்க

முன்னாளில் மூத்தோர் மொழிந்த இந்த தாலாட்டை

இன்னாளில் போற்ற எழுதா எழுத்ததனால் [690]


அச்சுக்கூடத் ததிபர் அநேகர் இதுவரையில்

உச்சிதமாய் அச்சிலிதை யோங்கிப் பதிப்பித்தார்

கற்றோரும் மற்றோருங் களிப்பாய்ப் படிப்பதற்கு

சொற்குற்றமில்லாமல் சுத்தப் பிரதியாய்

பாரிலுள்ளோ ரிக்கதையைப் படித்துத் தொழுதேற்ற

கற்றவரும் மற்றவரும் களிப்படைய வாழி

சங்கரனும் சங்கரியும் ஆறுமுகனுந்தான் வாழி

செங்கண்மால் ஸ்ரீராமர் சீதையரும் தான்வாழி

பஞ்சவர்க ளனைவரும் பைங்கிளியாள் துரோபதையும்

அல்லி சுபத்திரையும் அனைவோரும் தான் வாழி [700]


முப்பத்து முக்கோடி தேவர்க ளும்வாழி

சொற்பெரிய சோம சூரியாக் கினிவாழி

நாற்பத் தெண்ணாயிரம் நல்முனிவர் தான்வாழி

சந்திரனுஞ் சூரியனுந்தானவர்கள் தான்வாழி

இந்திரனுந் தேவர்கள் எல்லோருந் தான்வாழி

கற்பகக் காவும் காமதேனுவும் வாழி

பற்பல தீவும் பஞ்சாக்ஷரம் வாழி

காத்தனோடு வீரன் கருப்பன் மிகவாழி

சங்கிலிக் கருப்பன் சப்பாணி தான்வாழி

பாவாடை ராயன் பலதேவரும் வாழி [710]


இக்கதை கேட்டோர் என்னாளுந் தான்வாழி

பெருமையுடன் கேட்கும் பெரியோர் மிகவாழி

ஊரெங்கும் கீர்த்தி பெற்ற உத்தமருந் தான்வாழி

பாருலகி லிக்கதையைப் படித்தோர் மிகவாழி

நாயகியாள் தன்கதையை நாள்தோறும் வாசிப்போர்

பாரினில்புத் திரபாக்கியம் படைத்து மிகவாழ்வாரே

மாரித் திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்

தேவி திருக்கதையை தீர்க்கமய்க் கேட்டோரும்

பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான்பெறுவார்

நாடித் துதிப்போரும் நற்கதியைத் தானடைவார் [720]

ஆல் போல்தழைத்து அறுகுபோல் வேரோடி

மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார். [722]


மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு !

எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களமாம் ! !

மாரியம்மன் தாலாட்டு முற்றிற்று.



****************************************************************************

Read more...

Wednesday, July 04, 2007

"கலங்க வைத்த காவல்காரர்"


"கலங்க வைத்த காவல்காரர்"

இன்று ஜூலை 4 - ம் தேதி

அமெரிக்க சுதந்திர தினம்.

காலை 4 மணிக்கே எழுந்து, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் 75 வயது அக்காவையும், 78 வயது அத்தானையும் டெக்ஸாஸ் அனுப்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.

என் மனைவியையும் உடனழைத்துச் சேன்றேன், கடைசி நேர முடிவாக!

விமான நிலையத்தில் வழக்கமான கெடுபிடிகள்.

காரை நிறுத்தியதும், கீழிறங்கி, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "ஒரு 5 நிமிடங்கள் இந்த வயதான தம்பதியரை உள்ளழைத்துச் சென்று, விட்டு வரலாமா?" என் பணிவுடன் கேட்டேன்.

அப்போது அவர் ஒரு ஆளில்லா காரின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து, சற்று கடுப்பாக, "இங்கு நிறுத்தக் கூடாது. காரை எடுங்க!" என்றார்.

நானும் சற்று ஏளனமாக அந்த ஆளில்லாக் காரைக் காட்டினேன்.

"ஆம்! அதற்கு ஒரு டிக்கட் கொடுக்கப் போகிறேன். உனக்கும் வேண்டுமா?" என்றார் அவர்!

எனக்குச் சற்று கோபம் வந்தது.

"நிறுத்தக்கூடாது என்றதும் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்து 'டிக்கட் தரட்டுமா?' எனக் கேட்பது சற்று அதிகமாய் இருக்கு! இது முறையல்ல! எனச் சொன்னேன்.

அதற்கு அவரும் கோபமாக, "இங்கு நின்றுகொண்டு வாதம் செய்தால் அதுதான் கிடைக்கும்" எனச் சொல்ல, நான் அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, என் மனைவியை இறங்கச் சொல்லி என் உறவினருடன் அனுப்பி, அவர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, காரை விருட்டென ஓட்டி ஒரு வலம் வந்தேன், விமானநிலையத்தை.

இன்னமும் என் மனைவி வெளியில் வரவில்லை.

அதே போலீஸ்காரர் தன் டார்ச் லைட்டைக் காட்டி என்னை புறப்படச் சொல்ல, என் மனதில் வேகம் அதிகரித்தது.

இந்த முறை ஒரு பெரிய வட்டமடித்து வந்தேன்!

அப்போது மனதில் ஒரு எண்ணம்.

அவர் தன் கடமையைச் செய்கிறார்.

நான் தான் அவரிடம் முறையின்றி நடந்திருக்கிறேன்.

இப்போது கோபம் கூட படுகிறேன்.

திரும்ப அங்கு செல்லும் போது, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு எண்ணியவாறு, மீண்டும் வெளிவாயிலுக்கு வந்தேன்.

இன்னமும் என் மனைவி வரவில்லை.

சரி, அவரிடம் பேச்சு கேட்க வேண்டாம் என நினைத்து, காரைக் கிளப்ப ஆரம்பிக்கையில், என் பக்க கண்ணாடியை யாரோ தட்டுவதை உணர்ந்து, பார்க்க,.... மீண்டும் அதே காவல்காரர்!

என் மனதில் ஒரு உதறல்!

சரி, என்னைப் புள்ளி வைத்துவிட்டார், ஏதோ ஒரு டிக்கெட் நிச்சயம்! என நினைத்து, சற்று பயத்துடனேயே கண்ணாடியை இறக்கினேன்.

"நான் சற்று அதிகக் கடுமையாகப் பேசிவிட்டேன். நீங்க நல்லவராயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஒரு தவறான கார் போதும், பிரச்சினையைக் கிளப்ப. இருந்தாலும் நான் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது.என்னை மன்னிக்கவும்." என்றார் அந்தக் காவல்காரர்.

எனக்கு வார்த்தையே வரவில்லை.

நாத்தழுதழுக்க, "நான் செய்ததுதான் தவறென உங்களீடம் நான் மன்னிப்பு கேட்க இருந்தேன். உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்களும் என்னை மன்னிக்கவும்." என்றேன்.

"இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும்" எனச் சொல்லி அகன்றார் அவர்.

என் மனதில் பாரம்.

அவரது பண்பையும், அதை அவருக்கு அளித்த இந்த நாட்டின் மாண்பையும் எண்ணி வியந்தவாறே, மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.

இப்போது என் மனைவி காத்திருந்தார்.

காரில் அவர் ஏறியதும் இன்னொரு ஆச்சரியம்.

எங்கிருந்தோ அந்தக் காவல்காரர் அங்கு தோன்றி, வருகின்ற கார்களை நிறுத்தி, என் காரை வெளியே செல்ல கை காட்டி, சிரித்த வண்ணம் அனுப்பி வைத்தார்!

பெருமையுடனும், பெருமிதத்துடனும் நான் என் மனைவியிடம் நடந்த நிகழ்வைச் சொல்லியபடியே வீடு திரும்பினேன்.

அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!

உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக!


Read more...

Friday, June 29, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************

------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************

................பொருள்...................

[பின் பார்த்து முன்]

"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க


"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!


"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"

தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************


....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

Thursday, June 21, 2007

எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!

எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!

எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.

அப்படி என்னதான் இந்த எட்டு எனப் பார்த்தால், ஆளாளுக்கு எழுதினதைப் பார்த்தா அவங்களை நினைச்சு சந்தோஷமா இருக்கு.
அதே சமயம், இவங்க எல்லாம் இப்படி அடுக்கியிருக்கறதுக்கு முன்னாடி, நாம என்னன்னு சொல்லமுடியும்னு, ஒரு பயம் அடிவயத்தைக் கவ்வுது.

அப்போதான், நம்ம இளா ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதைப் பார்த்ததும் கொஞ்ச தெம்பு வந்தது.

அதனால, அவருக்கு என்னோட முதல் நன்றி.

என் எட்டு இதோ!
சாதனைகள் ஏதுமில்லை.
ஆனால், மறக்கவொண்ணா நிகழ்வுகள்
நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா" என எங்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் சிறப்பு மாணவனாக இருந்தது. இன்னிக்கு எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச தமிழறிவு அவர் போட்ட பிச்சை.

2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
[கொத்ஸ் கவனிக்க!]

3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.

4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து, அத்தனை மக்களும் ஒன்றாக இணைந்து, ராவா, பகலா வேலை செய்து, பணம் திரட்டி, மிகச் சிறந்த அளவில் கும்பாபிஷேகம் செய்து முடித்தது. ... அந்தக் கோவில் இன்றும் சிட்லபாக்கத்தில் மங்கள விநாயகர் ஆலயம் என ஆன்மீகப் பணி ஆற்ரிக் கொண்டிருப்பது.

5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. விளையாட்டுத் திடலில் தொடர்ந்து 10 நாட்கள் வெற்றிகரமாக LINTEF [Lions' International Trade and Entertainment Fair] என்ற பெயரில் நடத்திக் காட்டியது.

6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. பாரத் பந்த் என ஒன்று அன்று. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அவசரத்துக்குக் கிடைத்த ஒரே டாக்டர் அகர்வால். அறுவை சிகிச்சை மூலமே விட்டுப்போன ரெடினாவை மீண்டும் இணைக்கமுடியும்; அதிகச் செலவாகும் இதற்கு என் சொல்லிவிட்டார்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன்.
மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்! பத்ரிநாத்திடம் செல்லுமாறு அந்தக் கோவிலை நிர்வகித்து வந்த கீதம்மாவின் அன்பான அறிவுரை.

அப்படியே செய்ய, பத்ரிநாத்தும் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்த, சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப் படுகிறேன். மறுநாள் அறுவை சிகிச்சை என முடிவாகிறது.அன்றிரவு வந்த டாக்டர் பத்ரிநாத் என்னைச் சோதிக்கிறார். அவராலேயே நம்ப முடியவில்லை. "டாக்டர். சங்கர்,நீ அதிர்ஷ்டசாலிப்ப்பா! உன்னோட ரெடினா தானே திரும்பவும் சேர்ந்திடுச்சு. இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!

7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது.

8. இணையத்தில் தற்செயலாக அறிமுகமாகி, பல்வேறு நண்பர்களைப் பெற்று, எழுதணும்னு நினைத்த பல விஷயங்களில், ஒருசிலவற்றையாவது எழுத முடிந்தது .

மேலே சொன்ன விஷயங்கள், அநேகமாக என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது, எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பேன் இதையெல்லாம்!
இப்ப உங்ககிட்டேயும்!

சொல்ல அழைத்த கொத்தனாருக்கு மீண்டும் ஒரு நன்றி.

இப்ப நான் ஒரு 8 பேரை அழைக்கணுமாம்.

1. குமரன்
2. செல்வன்
3. கோவி.கண்ணன்
4. ரவி கண்ணபிரான்
5. ஷைலஜா
6. அன்புத்தோழி
7. நாகை சிவா
8. வடுவூர் குமார்

எத்தனையோ பேர் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவர்கள் இவர்களே!
உங்களுக்கு இஷ்டமிருந்தால், வந்து எழுதுங்க.
கட்டாயமில்லை.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

_____________________________________
விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

OPTIONAL:

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Read more...

Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.
[இதை எனக்குத் தெரியப்படுத்திய அன்பு உள்ளத்திற்கும்!]
**************************************************************

"தந்தை என்று சொல்லவா"
[என் தந்தையின் நினைவுநாளை ஒட்டி, சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது.]

தந்தை என்று சொல்லவா
எந்தை என்று வணங்கவா
சொந்தம் என வந்தோரை
மந்தை என எண்ணாமல்
தம்தம் யென்று நினைத்தவரை
[தந்தை என்று .....]

இன்று எமைப் பிரிந்தாய்
சென்று துயர் கொடுத்தாய்
என்றும் உமைப் போற்றி
இங்கு யாம் இருப்போம்
[தந்தை என்று......]

எத்தனையோ பெற்றாய்
அத்தனையும் முத்துக்கள்
மொத்தமாக சொல்வதென்றால்
எத்தனையோ நேரம் வேண்டும்
[தந்தை என்று.....]

உன்னாலே பிறந்திட்ட
என்னோடு வளர்ந்திட்ட
கண்ணான சோதரரும்
இந்நாளில் பிரிந்திருக்க
என் சொல்வேன் நான் இன்று
[தந்தை என்று.....]

பிள்ளையாய்ப் பிறந்தாலே
பொறுப்புகள் பல உண்டு
பல்லோரையும் வாழ வைக்கும்
கடமையும் கூட வரும்- நீயோ
ஒரே பிள்ளையாய்ப் பிறந்து விட்டாய்
உறவை மட்டுமின்றி
ஊராரையும் வாழ வைத்தாய்
[தந்தை என்று.....]

உன் பிள்ளைகள் உனைப் போல
எந்நாளும் பலர் வாழ
தன்னாலே முடிந்ததெல்லாம்
இன்னாளில் செய்கின்றோம்
நீ இட்ட பிச்சையிது!
[தந்தை என்று]

பாசத்தைக் கொட்டவில்லை
பரிவாய் சொல் சொன்னதில்லை
உன் நெஞ்சில் ஓடி நாங்கள்
உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை

ஆனால்...,


இதுவெதையும் காட்டாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
எல்லாமே உணர்த்தி விட்டாய்
உன் அன்பு வாழ்க்கை மூலம்!
[தந்தை என்று....]

நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது
[தந்தை என்று....]

இன்னாளில் மட்டுமன்றி
என்னாளும் நினைக்காமல்
என்னாலே இயன்றிடுமோ
மண்ணாளில் வாழும் வரை
[தந்தை என்று....]

நீ உணர்த்திய பாசம் நிஜம்
நீ சொன்ன மொழியும் நிஜம்
நீ வாழ்ந்த வாழ்க்கையும் நிஜம்
நீ என்னுடனே இருப்பதுவும் நிஜம்
[தந்தை என்று....]

உன்னாலே வாழுகின்றேன்
உன்னை நான் நினைக்கின்றேன்
உன் சொல்லைக் கேட்கின்றேன்
உன் பெருமை பாடுகின்றேன்
[தந்தை என்று....]

என் மடியில் நீ படுத்து

இவ்வுலகை விட்டகன்ற
அந்நாளை நிதம் நினைத்து
என் காலம் போக்குகின்றேன்
[உன்னுடன் நான் சேரும் வரை]
[தந்தை என்று....]

உன் குலத்தில் பிறந்தவர்
நன்றாக வாழ்ந்திருக்க
உன் ஆசி வேண்டுகின்றோம்
இன்னாளில் நாங்கள் இன்று !
[தந்தை என்று....]

*************************************************************

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

Read more...

Friday, June 15, 2007

சிவாஜி ..... பாஸ்!!

"சிவாஜி பாஸ்" !!!!

சிவாஜி பார்த்தாச்சு!

எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!

ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து எனக் கொள்ளவும்!

முதல் நாள், முதல் ஷோ!

திரையரங்கில் நல்ல கூட்டம்!

ஆனால், ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை!
[எங்க ஊர் அப்படி!]

விளக்குகள் அணைந்ததும், சென்னை எங்களூருக்குள் வந்தது!

விசில் சத்தம் பறக்க, பேப்பர் துண்டுகள் பேப்பர்மாரி பொழிய, கைத்தட்டல்கள் காதைத் துளைக்க, சிவாஜி துவங்கினார்!

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை; சொல்வதற்கும் ஒன்றுமில்லை!

ஆரம்ப நாட்களில் வந்த கிசுகிசுக்கள் போல ஒரு ஒற்றை வரிக்கதை.

நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவையே இல்லை!

ஆனால், தமிழகம் தாங்குமா!

எனவே.... எண்டர் ஷ்ரேயா... மூலக்கதையுடன், அதன் நிகழ்வுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்களன்களுடன்!

ஆனால், அவர் இல்லாவிட்டால், அந்த பாடல் காட்சிகள் எப்படி இருக்கமுடியும்.

காமெடி வேணுமே!

கம் ஆன் விவேக்!!

சரி, படம் எப்படி?

3 மணி நேரப்படம்.

ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை!

ஒருசில காட்சி அமைப்புகள்[ஆஃபீஸ் ரூம், ம்யூசிக் ஸ்டோர்] அடிக்கடி ரிபீட் ஆனாலும், படம் தொய்வில்லாமல் போகிறது!

ரஜினி ஃபார்முலாபடி, முதல் ஒரு மணி காமெடி, அடுத்த ஒரு மணி கொஞ்சம் கதை, கடைசியில் அதிரடி என எதிலும் மாற்றமில்லை.

ரஜினி கெட்டப், உடை, மேக்கப் என படு இளமையாக ஜொலிக்கிறார்!

பாடல் காட்சிகளில் படுகவனம் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்!

ரஜினி ரசிகர்களுக்கு விசில் அடித்து மாளாத வண்ணம் காட்சித் தேர்வுகள்!

மெயின் பஞ்ச் டயலாக், "ச்ச்சும்மா அ....தி....ரு...தில்ல"! வரும்போதெல்லாம், அரங்கம் புத்துணர்சி பெற்று நிமிர்ந்து உட்காருகிறது.

ஷ்ரேயாவுக்கு வேலையே இல்லை, பாடல் காட்சிகளைத் தவிர எனச் சொல்லலாம். அழகாக இருக்கிறார்.

ஆடியோவில் கேட்பதைவிட, சில பாடல்கள், அரங்க அமைப்பாலும், ஒரு சில புதுமைகளாலும் திரையில் மிக நன்றாக வந்திருக்கின்றன. ....குறிப்பாக "ஸ்டைல்" பாடல் படமாக்கப்பட்ட விதம்..... அற்புதம்!!


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நல்லா வந்திருக்கு!

விவேக் காமெடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்!

பாதி ரஜினி வேலையை இவரே செய்து விடுகிறார். ஆரம்ப காட்சி ஒன்றில், ரஜினி ஒரு பஞ்ச் டயலாக் விடுக்க வாயைத் திறக்கும் போது, அவரை அடக்கிவிட்டு, இவர் தொடர்கிறார்!!

வில்லனை எதிர்கொள்ள, சிவாஜி எடுக்கும் செயல்கள், சற்றும் நடக்கக் கூடிய ஒன்றல்ல!

சண்டைக்காட்சிகள் ஆங்கிலப்படங்கள் பல பார்த்திருக்கும் நம் தமிழக மக்களுக்கு மிகவுமே பிடிக்கும்!

படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பாததால், ஒரு சில கருத்துகள் மட்டுமே சொல்லவிழைகிறேன்.

திரைப்படம் என்பது வெறும் கற்பனை.


நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.

ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

அந்த வகையில் பார்த்தால், ரஜினி என்னும் காந்த சக்தியின் மூலமாக, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வைத்திருக்கிறார் ஷங்கர்.

இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்!


ஆனால், படையப்பாவோ, சந்திரமுகியோ அல்ல!

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும், அந்த மொட்டை பாஸ் ரஜினி[பெயர் எம்ஜிஆர்!] சிம்ப்ளி சூப்பர்!


மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.

போர் அடிக்காமல் போகிறது படம்!

அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

சிவாஜி...... பாஸ்!





Read more...

Thursday, June 14, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என முடிவு செய்து, வழக்கமான மயிலை கபாலி குளத்தருகே இறங்கி, நேராக
நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், எதிரில் நம்ம மயிலை மன்னார்!

சில நண்பர்களோடு ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டு வந்தவன், என்னைப் பார்த்ததும், "அட! இன்னாபா, அதிசயமா இருக்கு! இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்லியே நீ! எங்க இம்மாந்தூரம்?" என்று நக்கலாகக் கேட்டான்.

"அதெல்லாம் இல்லேப்பா; கொஞ்சம் வேலை மும்முரம். அதான், அடிக்கடி வர முடியலை" என அசடு வழிந்தேன்.

"தா! இன்னாத்துக்கு பொய் ஸொல்றே? அதான் ஒன் கண்ணே ஒன்னியக் காட்டிக் கொடுக்குதே!" என்று அதட்டினான் மன்னார்.

'கண்' என்றதும் சட்டென ஒரு பொறி தட்ட, உடனே அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டேன்; " ஆமா, இந்தக் கண்ணு பேசுமா? எப்பிடி காட்டிக் கொடுக்குதுன்னு சொல்கிறாய்?"

"கண்ணு எப்பிடி பேசும்? வாய்தான் பேசும். ஆனா ஒரு ஆளைப் பாத்ததும் அவங்க மூஞ்சி காட்ற சில விஷயங்களைக் காட்டிக் கொடுத்திரும். அதுல இந்தக் கண்ணும் ஒண்ணு. இது மௌனமா சில சேதிகளைச் சொல்லும்.
ரொம்பப் பேரு இத மட்டுமே பார்த்திட்டு, இது என்னமோ பேசுதுன்னு நினச்சுகிட்டு, மத்த விஷயங்களைக் கோட்டை விடறாங்க. மொத்தமா கவனிச்சா, மத்த உறுப்புங்க செய்யற சேட்டைகளைப் பாக்கலாம். ஆனா, இவங்கதான் இந்தக் கண்ணு மேல
மொத்தமா நம்பிக்கை வெச்சிட்டாங்களே! மிஸ் பண்ணிடறாங்க! இது மாரி நம்பி மோசம் போனவங்கள்ல பொண்ணுங்கதான் டாப்பு. இப்பிடி நம்பி ஏமாந்து போனதுக்கப்பறம் கண்னை நம்பி ஏம்மாந்திட்டோமேன்னு புரிஞ்சுக்கறவங்களும் இவங்கதான்!
இந்த விஷயத்தைப் பத்தி ஐயன் ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. அது என்னான்னு சொல்றேன். வா. கடையாண்ட போய் வடையைக் கடிச்சுக்கினே கேளு" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துக் கொண்டே சென்றான்.

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 118. "கண் விதுப்பழிதல்"

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. [1171]

நான் உண்டு என் படிப்பு, உண்டு, என்னோட வீடு உண்டுன்னு இருந்த என்னை, 'ஏய்! அந்தாளைப் பாரு! இன்னா ஷோக்கா கீறான் பாரு!
அவன் கலரும், ஒசரமும், பாடியும் ! அவன் கண்ணைப் பாரேன்! எப்பிடி சிரிக்கறான் பாரு"ன்னு அவனைப் பாக்கச் சொல்லி, காட்டி, மனசுல பிடிச்சு வெச்சது நீங்கதான்!
இப்ப அதுனாலதான் எனக்கு இந்த தீராத நோவு வந்துது! இப்ப அவன் பூட்டான்! இத்தினியும் பண்ணின நீங்கதான் இப்ப பொலபொலன்னு கண்ணீர் வுடறீங்க! ஏ கண்ணுங்களா! இது இன்னா நாயம்?"

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். [1172]

"வெறும் அளகை மட்டுமே பார்த்திட்டு, பேச்சை மட்டுமே நம்பிட்டு, பின்னாடி இன்னா ஆவும்ன்றதைப் பத்தி துளிக்கூட யோசிக்காம,
இது சரிப்பட்டு வருமா? இது ஆவுற கதையா?ன்னுல்லாம் சிந்திச்சுப் பாக்காம, அவனையே மொறச்சு மொறச்சு பாத்த, ஏ, மை தீட்டின கண்ணுங்களா! இப்ப இன்னாத்துக்கு இப்பிடி வருத்தப்பட்டுகிட்டு அளுவுறீங்க?


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. [1173]

"அந்த ஆளைப் பாத்தப்போ, நல்லா அகலமாத் தொறந்து வெச்சு பாத்தீங்களே, கண்ணுங்களா, இப்ப அவன் பூட்டானேன்னு துக்கப்பட்டுக்கினு அளுவுறீங்களே, ரொம்ப நல்லாருக்குடிம்மா
நீங்க செய்யுறது! எனக்கு உங்களைப் பார்த்தா, சிரிப்புதான் பொத்துகிட்டு வருது! நல்லா அளுவுங்க!"

செயலற்றார் நீருலந்த உண்கண் உயலற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. [1174]


" இப்பிடி அளுது, அளுது, நான் தெனமும் அளகா மைதீட்டி வளத்த இந்த கண்ணுங்க, இப்ப எனக்கு நான் பொளைக்க முடியாதபடி ஒரு நோவைக் கொடுத்திட்டு,
அதுங்களும் அளமுடியாம வத்திப் போய் நிக்குதுங்க பாரேன்! வோணும் இதுங்களுக்கு!"

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். [1175]


"இப்ப அவரு என்னிய விட்டுப் போனதால, எனக்கு வந்திருக்கற இந்த துன்பம்ங்கற நோவு எம்மாம் பெருசுன்னா, இத்தோட பாக்கறப்ப,
தோ, எதுத்தாப்பல இருக்கே சாந்தோமாண்டை, அந்த கடல் கூட இத்த விட சின்னதுங்கலாம்!
இத்தக் கொணாந்ததே இந்தக் கண்ணுங்கதான். இப்பப் பாரு! அதுங்க தூங்கக் கூட முடியம தவிக்கற தவிப்பை!"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. [1176]

"இப்பிடி எனக்கு இந்த நோவைக் கொடுத்ததுக்கு முக்கிய காரணமே இதுங்க தான்!
இந்தக் கண்ணுங்கதான்!
இப்பம் பாரு, அதுங்களும் தூங்காம தவிக்குதுங்க.
ஹைய்யா, எனக்கு ஜாலி! இது ரொம்ப நல்லாருக்கு!"


உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண். [1177]

"பாரு, பாருன்னு என்னியத் தூண்டிவிட்டு, ஐயோ! இவரைப் போல வருமான்னு அவருக்காவ உருகி, உருகி,
அவரையே பாத்துகிட்டிருந்த இந்தக் கண்ணுங்க ரெண்டும் இப்போ அளுது, அளுது, தன் பண்ணின தப்புக்காவ வருந்தி, வருந்தி,
கண்ணுல தண்ணியே இல்லாமப்போவட்டும்!
நல்லா வோணும் இதுங்களுக்கு!"


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். [1178]


" இப்ப அவரு என்னிய வேணாமின்னு சொல்லிட்டு பூட்டாரு. மன்சால கூட என்னை விரும்பாதவராயிட்டாரு.
ஆனாலும், அவர் பேரை கேட்டாலே
இப்பவும் கிளுகிளுங்குது.

இந்த வெக்கங்கெட்ட கண்ணுங்க மட்டும், பொறுமையே இல்லாம, இன்னமும் அவரைப் பாக்கணுமின்னு துடியாத் துடிக்குது! சீச்சீ! இன்னா பொளப்பு இது?"

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [1179]

" இந்தப் பொல்லாத கண்ணுங்க இருக்கே, ரொம்ப மட்டம்! அவரு வரலேன்னாலும் தூங்க மாட்டேங்குதுங்க.
வந்தாக்காண்டியும் தூங்காதுங்க! அவரையே பாத்துக்கினு இருக்கும்!
இப்பிடி, வந்தாலும் தும்பம், வரலேன்னாலும் தும்பம்னு அலையுதுங்க!"


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. [1180]


அளுது அளுது, அவரையே நினைச்சுகிட்டு இருந்து வீங்கிப் போயிருக்கற
இந்தக் கண்ணு ரெண்டையும் பாரேன்.
பட படன்னு தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சேதி சொல்ற டமாரம் மாரி,
இதுங்க ரெண்டுமே என் மனசு இன்னமும் அவரையேதான் நினைச்சுகினு இருக்குன்றத,
ஊருக்கெல்லாம் காட்டிக் கொடுத்துகிட்டு அலையுதுங்க!"

இப்ப இதுவரைக்கும் சொன்னதிலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?
கண்ணுங்க வேலை பாக்கறதும், அளறதுந்தான்!
மூல காரணமா நின்னுகிட்டு, ஆசையைத் தூண்டி வுடறதும், அப்பால, அத்தயே நெனச்சுகிட்டு அளுவறதுந்தான் இதோட வேலை!
புரியுதா?
ஆராச்சும், கண்ணு பேசுது, சொல்லாத சொல்லெல்லாம் சொல்லுதுன்னு ரீல் வுட்டாங்கன்னா நம்பாதே!
காட்டிக் கொடுக்கும்; கஸ்டப்படுத்தும்!
அவ்ளோதான்!
ஆச்சா?"
என்றவாறே டீயை உறிஞ்சினான் மன்னார்.

"புரியுது மன்னார். இந்த 'உண்கண்' அப்படீன்னு சொல்றாறே, அப்பிடீன்னா என்ன?" எனக் கேட்டேன்.

பெரிதாகச் சிரித்தான் மன்னார்!
'நெனச்சேன்! நீ கேப்பேன்னு நெனச்சேன்! இந்தப் பொண்ணு கண்ணுக்கு மை தீட்டுதில்ல? அதெல்லாத்தையும் இந்தகண்ணு ரெண்டும்
நல்லா தின்னுதுங்களாம்! அதான் உண்கண், மையைத் தின்ன கண்ணுங்கன்னு ஐயன் சொல்லி சிரிக்கறாரு' என்றான்!

நானும் சிரித்துக் கொண்டே, பைதல்னா? என்று இழுத்தேன்.

'இது அடிக்கடி ஐயன் யூஸ் பண்றதாச்சே! பைதல்னா தும்பம்[துன்பம்].

சரி, சரி, தலீவர் படம் இன்னிக்கு ரிலீஸ்! இப்பத்தான் கொஞ்சம் காசு பாக்கலாம். தியேட்டராண்டை நம்ம பசங்க காத்துகினு இருப்பாங்க. நா வர்ட்டா! ஒனக்கு எதுனாச்சும் டிக்கட் வேணுமின்னா, ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் வந்து கண்டுக்கோ!
சரியா!" என்றவாறே அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் தாவினான் மயிலை மன்னார்!

"அட, இருப்பா! நானும் வரேன்!" என்றவாறு நானும் ஆட்டோவில் தொற்றிக் கொண்டேன்!

Read more...

Sunday, June 03, 2007

"மௌனம் ஒரு பாஷை"

மௌனம் ஒரு பாஷை -- மீண்டும் ஒரு டிவி கதை!!

படிகள் என்னும் தொடரைப் பற்றி எழுதியது நினைவிருக்கலாம்.

அதே போல் நேற்று ஒளிபரப்பான ஒரு சின்னத்திரை படத்தைப் பற்றிய ஒரு பதிவு.

முதலில் கதைச் சுருக்கம்.....!

5 பிள்ளைகள் பெற்ற ஒரு வயதான தம்பதியினர்.
கடைக்குட்டிக்கு இப்போது வயது 16.
முதல் பெண் விதைவையாகி,... இப்போது வீட்டில்.
அடுத்த மூன்று ஆண் பிள்ளைகளும் கல்யாணம் முடித்து, கூட்டுக் குடித்தனம்.

ஒரே ஒரு திருத்தம்!
கடைசிப் பிள்ளை மட்டும் சென்னையில்..... தந்தையால் தள்ளி வைக்கப்பட்டு ..... கூடப்படித்த வெள்ளைக்கார டாக்டர் பெண்ணைக் காதலித்ததால்.
இப்போது அவன் சென்னையில்.....தனியாக குடும்பம் நடத்துகிறான்.

கடிதப்போக்குவரத்து கூட கிடையாது.
கணவனின் கல்லாய்ப்போன மனம் கண்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கும் தாய்.

இந்நிலையில், தந்தை கைப்பட எழுதிய கடிதம் ஒன்று டாக்டர் மகனுக்கு வருகிறது.
தாய் திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என.
வரச்சொல்லி அல்ல!

பதறி அடித்துக் கொண்டு இவன் ஓடி வருகிறான்.
5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்காத சந்தோஷத்தில், அனைவரும் மகிழ்கின்றனர்.....
தன் மனைவியின் புகைப்படத்தை அனைவருக்கும் காட்டுகிறான்.
இன்னும் மகப்பேறு அடையாத இரண்டாவது அண்ணியை சென்னைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனை செய்ய வாக்களிக்கிறான்
தந்தை மட்டும் இன்னமும் முருங்கை மரத்தில்!!
இவனைக் கண்டாலே, முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்.
தாய் இன்னும் மயக்கமாகத்தான் இருக்கிறார்.

கண் விழித்ததும், கதறுகிறார், 'என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? இவனை ஏன் வரவழைத்தீர்கள்?' என.
மகனைப் பார்க்காததால்தான் இச்செயல் செய்ய முயற்சித்தார்; இப்போது மகனைப் பார்த்ததும் மனமகிழ்வார் என எண்ணிய மற்ற பிள்ளைகளுக்கு ஒரே அதிர்ச்சி.

டாக்டர் மகன் மட்டும், தாயின் கை [நாடி] பிடித்துப் பார்க்கிறான்.
அவன் முகம் மலர்கிறது!
"இதற்காகவா அம்மா இப்படி செய்யத் துணிந்தாய்?" என மலர்ச்சியுடன் கேட்கிறான்.

"ஊர் உலகம் என்ன சொல்லும்? என் முகத்தில் காறித் துப்புவார்களே! அந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி? அவரை என் முகத்திலேயே காட்டாதே!" எனப் புலம்புகிறார்.

ஆம்! அவர் இப்போது 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயாகியிருக்கிறார்! .

"ஓ! தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது! இதற்காக நீ வருந்தாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என சொல்லிவிட்டு, வெளியே வந்து, அனவரிடமும் [தந்தையைத் தவிர!!] இதைப் பகிர்கிறான்.

அவ்வளவுதான்! அங்கே ஒரு பூகம்பமே வெடிக்கிறது!

அம்மாவுக்கு என்ன ஆசை இந்த வயதில் எனப் பெரியவன் குமுற, இதுக்கொண்ணும் குறைச்சலில்லை எனப் பெரிய அண்ணி முகம் நொடிக்க, விவஸ்தை இல்லாமல் இப்படி ஒரு காரியம் செஞ்சாளே இவ, என தமக்கை முகம் சுளிக்க, தனக்கே இன்னும் குழந்தை பிறக்கா நிலையில், மாமியார் கருவுற்றதை சகிக்க முடியாமல் சிறிய அண்ணி மனம் வெதும்பிப் பொறாமை கொள்ள, அவமானத்தால் அவள் கணவன் தலைத் திருப்பிக் கொள்ள.......

எல்லாரும் தாயையும், தந்தையையும் இப்போது ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.


கடைசிப் பெண் மட்டும் எனக்குத் தம்பிப்பாப்பா வரப்போகிறான் எனக் குதூகலிக்கிறாள்.

டாக்டருக்கு ஒரே அதிர்ச்சி!

வரும் கோபத்தில், அவர்களை எல்லாம் பார்த்து ஒரு நீண்ட கூப்பாடு போடுகிறான்.முற்றத்தில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டே....

"என்ன மனிதர்கள் நீங்கல்லாம்? கொஞ்சங்கூட மனிதத்தன்மையே இல்லாம இருக்கீங்களே! தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அதை இன்னும் வழங்க இங்கே இரு ஜீவன்கள் இருக்கின்றனர் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதைக் கண்டு மகிழாமல், அதனைப் போற்றாமல் கேலி பேசும் உங்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கு. பெற்றவருக்கு ஆதரவா இருக்க வேண்டிய நீங்க இப்படி நடக்கலாமா?"
எனக் கூச்சலிட்டுவிட்டு, நகர்கிறான்.... சொட்டச் சொட்ட நனைந்தபடியே!

மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டபடியே இருந்த தந்தை, தன் மேல்துண்டை திண்ணையின் மேல் போட்டுவிட்டுச் செல்கிறார்......, வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே,........ இவனையும் தலையைத் துவட்டிக்கொள்ளச் சொல்கிற மாதிரி!

மறுநாள், தந்தையிடம் சென்று பேசுகிறான்...... அவர் இவனைப் பார்க்காமல் திரும்பி நின்றாலும்!
தாயின் மனநிலை, உடல்நிலை கருதி, தன்னுடன் கொண்டு சென்று வைத்துக் கொள்ளப் போவதாய்.

அவ உனக்கும் அம்மாதான். வந்தா கூட்டிகிட்டுப் போகலாம் என சொல்லிய வண்ணம் நகர்கிறார்!

சற்று தூரம் சென்ற மகன் சட்டெனத் திரும்புகிறான்........ கண்ணைக் குறுக்கியபடியே தன்னைப் பார்க்கும் தந்தையைப் பார்க்கிறான்!
இவன் திரும்பியதும், பொய்வீறாப்பாக, தந்தை முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.!!!

அம்மாவைச் சமாதானப் படுத்தி, தன் மனைவியைப் பற்றிய அவரது சந்தேகத்திற்கு பதில் சொல்லி, சென்னைக்குக் கூட்டிச் செல்கிறான்.

தந்தை இன்னமும் மௌனமாக வாசல் வரை வந்து, பார்த்தும், பாராதது போல் நின்று, வழியனுப்பி வைக்கிறார்.

அந்த மௌனம் எத்தனையோ மொழி பேசுகிறது.

மகனுக்கு நன்றி, புரிதலில் நிம்மதி, மனைவியைப் பிரியும் வருத்தம், அவளுக்கு சற்று அமைதி கிடைக்கப் போகிறதே எனும் மகிழ்ச்சி, இனித் தனியாக இவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம்...... இப்படி இன்னும் பல!!

அனைவரும் கார் நகர்ந்ததும் உள்ளே செல்லுகின்றனர்.

கடைக்குட்டி மட்டும், தயங்கியபடியே அப்பாவின் அருகில் வந்து, வெள்ளிக்கார அண்ணியின் புகைப்படத்தை அப்பாவின் சட்டைப்பையில் செருகிவிட்டு, சிட்டாகப் பறக்கின்றாள்.

யாரும் பார்க்காத தனி இடமாக வந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே, சட்டைப்பையிலிருந்து எடுத்து அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.

தூரத்தே கிளுகிளுவென யாரோ சிரிக்கும் சத்தம்!

ஒரு 70 வயதுக் கிழவர், தென்னை மரத்தடியில் அமர்ந்து, தன் ஆசை மனைவிக்கு 'இந்தா சாப்பிடு!' என்றபடியே அல்வா ஊட்டுகிறார். அந்தக் கிழவியும் திருப்பி ஊட்டுகிறார்!

சிங்காரம்பிள்ளையும் சிரிக்கிறார்!

70-களில் வந்த அருமையான குறுநாவல்.
எழுதியவர் சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்!!!

இந்தக் கதையை மிக மிக அற்புதமாக ஒரு 2 மணி நேரக் குறும்படமாக வழங்கினார்கள் நேற்று, விஜய் டி.வி.யில்.

தந்தையாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்; தாயாக வெண்ணிற ஆடை நிர்மலா!

அதிக வசனங்கள் இருவருக்கும் இல்லை.
ஆனால், தங்களது அனுபவ முதிர்ச்சியை, பண்பட்ட நடிப்பின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நடித்திருந்தனர்.


மற்ற கதாபாத்திர தேர்வுகளும் கச்சிதமாயிருந்தது.
கதை நிகழ்வதாகக் காட்டிய கிராமமும் கொள்ளை அழகு!
இயற்கை எழில் பூத்துக் குலுங்கியது.

மொத்தத்தில் ஒரு நிறைவான படைப்பு.

வழங்கிய விஜய் டி.விக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்.

இதில், சிம்பாலிக்காக, வேரில் காய்த்துத் தொங்கும் ஒரு பலாமரமும் சிறப்பாக நடித்திருந்தது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது!!

Read more...

Monday, May 28, 2007

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

"நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு வந்தா, கன்னாபின்னான்னு சொல்றார் அப்படீன்னு போன அதிகாரத்தைப் படிச்சவங்க சொன்னாங்க" என்ற பீடிகையுடன் மன்னாரைச் சீண்டினேன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே! அவரு ஸொன்னதை அப்பிடியே ஸொன்னேன். அவ்ளோதான். நா இன்னா செய்யமுடியும்? ஆனா, அதுக்காவ, ஐயனைக் கொறை சொல்லாதே! உள்ளதை உள்ளபடியே சொல்லணும்னாலும் அதையும் சொல்லுவாரு அவரு. இப்போ அது மாரி, ஒரு அதிகாரம் ஸொல்றேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஒரு பொண்ணோட மனஸு இன்னா பாடு படும்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு ஐயன்! ம்... எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கான அவன் விளக்கமும்!


"அதிகாரம் -- 123" "பொழுது கண்டு இரங்கல்"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்


வேலைநீ வாழி பொழுது. [1221]


"பொளுதெல்லாம் நல்லாத்தான் போகுது. காலைல எளுந்துரிச்சதும், பரபரன்னு வேலை செஞ்சு, அவருக்கு ட்ரெஸ்ஸு எடுத்து வெச்சு, நாஷ்டா பண்ணிப் போட்டு, மத்தியானத்துக்கு சோறு கட்டிக் கொடுத்து, அவரை அனுப்பி வெச்சதுக்கு அப்பொறம், வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு, சாப்ட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, சாயங்காலம் ஆச்சுன்னா, மொகம் களுவி, பொட்டு வெச்சு, பூ வெச்சு, சீவி சிங்காரிச்சுகிட்டு, அவரு வர்ற வளியையே பாத்துகிட்டு நிக்கறப்ப ஒரு தவிப்பு வருதே, அது என் உசிரையே குடிக்கற மாரி இருக்குது.

அதே மாரி, அவனுக்கும், வேலையெல்லாம் முடிச்சிட்டு, எப்போடா பொண்டாட்டியைப் போய் பார்ப்போம்னு துடிப்பான்.

இப்பிடி ரெண்டு பேரையும் இந்தப் பாடு படுத்தற மாலைப்பொளுதே! நீ நல்லா இரு கண்ணு! ஒனக்கு புண்ணியாமாப் போவட்டும்! ஏன் எங்க உசுரை இப்பிடி வாங்கறே நீ?"

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. [1222]

"இன்னும் கோவம் தீரலை இந்தப் பொண்ணுக்கு! இந்தப் பாட்டிலியும் தொடர்ந்து திட்டறா!"

" ஏ மங்கிப் போன மாலைக்காலமே! நீ நல்லா இருடி அம்மா! ஆமா, ஏன் நீ இப்பிடி மங்கிப் போயிருக்கே! பகல்லே எல்லாம் பளபளன்னு இருந்தே! இப்ப 'டல்'லாயிட்டியே! ஒன்னோட ஆளும் எங்காளைப் போல நெஞ்சில ஈரமில்லாத ஆளா? இன்னும் வரலியா? அதான் சாயம் போயி மங்க ஆரம்பிச்சிட்டியோ?"

எனக் கிண்டல் செய்யறா!


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துளிஅரும்பித்

துன்பம் வளர வரும். [1223]

"இன்னும் அவர் வரலை. நான் இங்க வாசல்லியே நிக்கறேன். வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமா நடுங்கிக்கிட்டே ஒளியறமாரி மங்குது.
இது மங்க மங்க, துளித்துளியா என்னோட மனக்கவலை அதிகமாயிட்டே வளருதே!"

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். [1224]

இந்த சாயங்காலப் பொளுது இன்னா மாரி இருக்குன்னு சொல்லுது அந்தப் பொண்ணு இந்தக் குறள்ல. கேட்டுக்கோ!

"6 மணி ஆச்சுது. இந்தப் பொண்ணு நல்லா சிங்காரிச்சுகிட்டு வாசக் கதவாண்டை நிக்குது.
வெய்யிலு சுளீருன்னு அடிக்குது. லேஸா வேர்க்குது. கர்ச்சீப்பை எடுத்து அப்பப்ப துடைச்சுக்குது.
இன்னும் அவரு வரலை.
வெய்யில் கம்மியாகி, மெதுவா இருட்டு பரவ ஆரம்பிக்குது.
இப்பிடி, வெய்யில் கொறைஞ்சு, இருட்டு வர்றது எப்பிடி இருக்குதுன்னா,

தூக்கு தண்டனை இடத்துல கைதி நிக்கறான்.
கொஞ்சங்கொஞ்சமா, தூரத்துல இருந்து அந்த தண்டனையை நிறைவேத்தற ஆளு வர்றப்போ எப்பிடி இருக்குமோ, .....அப்பிடி இருக்குதாம்!"

காலைக்குச் செய்ந்நன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. [1225]

"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். [1226]

"அவரு என்னோட இருந்த வரைக்கும், என்னை விட்டுப் பிரியாம இருந்த வரைக்கும், இந்த சாயங்காலம் அப்படீங்கற ஒண்ணு இம்மாம் தொல்லை பண்ணும்னு எனக்குத் தெரியாமப் போச்சு.
அதே, அவரு இல்லாம இருக்கறப்போ, அல்லாம் புரியுது! "


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். [1227]


மொதப்பாட்டுல சொன்னதையே திரும்பவும் வேற விதமா சொல்லிக் காட்டறாரு இதுல.
"காலைல அவரு கிளம்பிப் போனதுக்கப்புறம், கொஞ்சங்கொஞ்சமா அரும்பு விட்டு, ஆரம்பிச்சு, பகல் பொளுதெல்லாம் வளர்ந்து, சாயங்காலம் ஆச்சுன்னா முளுசா மலர்ந்து என்னை வாட்டுதே இந்த துன்பம்!"


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. [1228]


இப்ப கொஞ்சம் கற்பனை கலந்து சொல்றாரு ஐயன்!
கிராமத்துல இருக்கறவங்களுக்கு, இல்லாட்டி, அங்கே இருந்தவங்களுக்கு இது நல்லாவே புரியும்.


" மாலை நேரம்!
இந்தப் பொண்ணு காத்துகிட்டு நிக்குது.
இன்னும் அவன் வரலை.
அப்போ, தூரத்துல இருந்து ஒரு புல்லாங்குழல் சத்தம் கேக்குது.
மேய்ச்சலுக்குப் போன மாடுங்கல்லாம் வூட்டுக்கு திரும்பற நேரம்.
மாடுங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கறதுக்காவ, மாட்டுக்காரன் புல்லாங்குழலை எடுத்து ஊதறான்.
இது இந்தப் பொண்ணு காதுல விளுது.
ஆஹா! நேரம் ஆயிப்போச்சே! இந்த மாலை அப்படீங்கற கெட்ட பொளுது வர்றதுக்கு தூது சொல்ற மாரி இது இருக்கே" ன்னு ஏங்குது இது.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. [1229]

இப்போ அந்தப் பொண்ணோட கோபம் ஜாஸ்தியாவுது.
வர்ற கோபத்துல, அல்லாருக்கும் சாபம் கொடுக்க ஆரம்பிக்குது! எதுக்காவ?


இந்தப் பொண்ணு சாயந்தரமா வூட்டுக்காரனுக்காவ காத்துகினு நிக்குது.
அவனோ வந்தபாடில்லை இன்னும்!
சாரிசாரியா ஜனங்கல்லாம் அவங்கவங்க வூட்டுக்கு வந்து சேர்றாங்க.

ஒடனே, அந்தந்த வூட்டுக்காரிங்களும் அவங்களுக்கு வக்கணையா சோறாக்கி போடறாங்க!
சிலபேரு வயிறு முக்க துண்றாங்க
இன்னும் சில பேரு சோறு துண்றதுக்கு முந்தி கொஞ்சம் தண்ணி அடிக்கறாங்க.

இது ஒரு கண்ணால அத்தினியையும் பாத்துகினே கீது.

வெய்யில் தீந்து போயி, வெளிச்சம் மங்குது இப்ப.

இவனும் வந்த பாடில்லை.
ஆத்திரமும், துக்கமும் பொத்துகிட்டு வருது இதுக்கு.

"இங்கே நா காஞ்சு கருவாடா நிக்கறேன், அவரு இன்னமும் வரலியேன்னு; இவனுக இன்னாடான்னா தின்னுபுட்டு, குடிச்சுகிட்டு குஷாலா ஆட்டம் போட்டுக்கினு கீறாங்க.

நா எப்பிடி இங்கே அவரைக் காணாம தும்பப்பட்டுக் கீறேனோ, அதேமாரி, இவனுகளும் துண்ணது செரிக்காம, குடிச்சது தலைக்கேறி தும்பப்படட்டும்னு ஒரு சாபம் கொடுக்கறா!"
" என் புத்தியே மயங்கிப் போற மாரி வருது இந்த சாயங்காலம்.
எப்பிடி இங்கே நான் வருத்தப்படறேனோ, அதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கற அல்லாரும் மயங்கி துன்பத்தை அனுபவிக்கட்டும்!"


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். [1230]

இத்தான் டாப்! இந்த வருத்தம் இந்தப் பொண்ணை இன்னா பண்ணுதுங்கறதை கொஞ்சம் ஓவராவே சொல்லிக் காட்டுது இந்தக் குறள்.

" சம்பாரிச்சுகிட்டு வர்றதுக்காவ போனவரு இன்னமும் வராத இந்த சாயங்காலத்துல, இதுவரைக்கு போவாத என்னோட உசிரு, இன்னைக்கு, இப்ப, இந்த நேரத்துல, அவரை நெனைச்சே போயிரும் போல இருக்கே!"

இதுல எதுவுமே ஜாஸ்தியா ஐயன் சொல்லலை.
இது மாரி காதலனுக்காவ, புருசனுக்காவ ஏங்கிகிட்டு இருக்கற அன்பான பொண்ணுங்களைக் கேட்டுப் பாரு.
உண்மை புரியும் ஒனக்கு.

சொன்ன டயத்துக்கு வூட்டுக்கு போகாங்காட்டி, ஒங்க அண்ணி கண்ணைக் கசக்கிகிட்டு இருக்கும்.
சீக்கிரமா டீயைக் குடிச்சுமுடி.
நா வூட்டுக்கு போவணும்" என்று அசடு வழியச் சிரித்தான் மயிலை மன்னார்.

"சரி, சரி, நீ கிளம்பு" என அன்புடன் விடை கொடுத்தேன், என் நண்பனுக்கு!

Read more...

Wednesday, May 23, 2007

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"

மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"

பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்

*******************************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP