Wednesday, July 04, 2007

"கலங்க வைத்த காவல்காரர்"


"கலங்க வைத்த காவல்காரர்"

இன்று ஜூலை 4 - ம் தேதி

அமெரிக்க சுதந்திர தினம்.

காலை 4 மணிக்கே எழுந்து, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் 75 வயது அக்காவையும், 78 வயது அத்தானையும் டெக்ஸாஸ் அனுப்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.

என் மனைவியையும் உடனழைத்துச் சேன்றேன், கடைசி நேர முடிவாக!

விமான நிலையத்தில் வழக்கமான கெடுபிடிகள்.

காரை நிறுத்தியதும், கீழிறங்கி, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "ஒரு 5 நிமிடங்கள் இந்த வயதான தம்பதியரை உள்ளழைத்துச் சென்று, விட்டு வரலாமா?" என் பணிவுடன் கேட்டேன்.

அப்போது அவர் ஒரு ஆளில்லா காரின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து, சற்று கடுப்பாக, "இங்கு நிறுத்தக் கூடாது. காரை எடுங்க!" என்றார்.

நானும் சற்று ஏளனமாக அந்த ஆளில்லாக் காரைக் காட்டினேன்.

"ஆம்! அதற்கு ஒரு டிக்கட் கொடுக்கப் போகிறேன். உனக்கும் வேண்டுமா?" என்றார் அவர்!

எனக்குச் சற்று கோபம் வந்தது.

"நிறுத்தக்கூடாது என்றதும் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்து 'டிக்கட் தரட்டுமா?' எனக் கேட்பது சற்று அதிகமாய் இருக்கு! இது முறையல்ல! எனச் சொன்னேன்.

அதற்கு அவரும் கோபமாக, "இங்கு நின்றுகொண்டு வாதம் செய்தால் அதுதான் கிடைக்கும்" எனச் சொல்ல, நான் அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, என் மனைவியை இறங்கச் சொல்லி என் உறவினருடன் அனுப்பி, அவர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, காரை விருட்டென ஓட்டி ஒரு வலம் வந்தேன், விமானநிலையத்தை.

இன்னமும் என் மனைவி வெளியில் வரவில்லை.

அதே போலீஸ்காரர் தன் டார்ச் லைட்டைக் காட்டி என்னை புறப்படச் சொல்ல, என் மனதில் வேகம் அதிகரித்தது.

இந்த முறை ஒரு பெரிய வட்டமடித்து வந்தேன்!

அப்போது மனதில் ஒரு எண்ணம்.

அவர் தன் கடமையைச் செய்கிறார்.

நான் தான் அவரிடம் முறையின்றி நடந்திருக்கிறேன்.

இப்போது கோபம் கூட படுகிறேன்.

திரும்ப அங்கு செல்லும் போது, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு எண்ணியவாறு, மீண்டும் வெளிவாயிலுக்கு வந்தேன்.

இன்னமும் என் மனைவி வரவில்லை.

சரி, அவரிடம் பேச்சு கேட்க வேண்டாம் என நினைத்து, காரைக் கிளப்ப ஆரம்பிக்கையில், என் பக்க கண்ணாடியை யாரோ தட்டுவதை உணர்ந்து, பார்க்க,.... மீண்டும் அதே காவல்காரர்!

என் மனதில் ஒரு உதறல்!

சரி, என்னைப் புள்ளி வைத்துவிட்டார், ஏதோ ஒரு டிக்கெட் நிச்சயம்! என நினைத்து, சற்று பயத்துடனேயே கண்ணாடியை இறக்கினேன்.

"நான் சற்று அதிகக் கடுமையாகப் பேசிவிட்டேன். நீங்க நல்லவராயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஒரு தவறான கார் போதும், பிரச்சினையைக் கிளப்ப. இருந்தாலும் நான் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது.என்னை மன்னிக்கவும்." என்றார் அந்தக் காவல்காரர்.

எனக்கு வார்த்தையே வரவில்லை.

நாத்தழுதழுக்க, "நான் செய்ததுதான் தவறென உங்களீடம் நான் மன்னிப்பு கேட்க இருந்தேன். உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்களும் என்னை மன்னிக்கவும்." என்றேன்.

"இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும்" எனச் சொல்லி அகன்றார் அவர்.

என் மனதில் பாரம்.

அவரது பண்பையும், அதை அவருக்கு அளித்த இந்த நாட்டின் மாண்பையும் எண்ணி வியந்தவாறே, மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.

இப்போது என் மனைவி காத்திருந்தார்.

காரில் அவர் ஏறியதும் இன்னொரு ஆச்சரியம்.

எங்கிருந்தோ அந்தக் காவல்காரர் அங்கு தோன்றி, வருகின்ற கார்களை நிறுத்தி, என் காரை வெளியே செல்ல கை காட்டி, சிரித்த வண்ணம் அனுப்பி வைத்தார்!

பெருமையுடனும், பெருமிதத்துடனும் நான் என் மனைவியிடம் நடந்த நிகழ்வைச் சொல்லியபடியே வீடு திரும்பினேன்.

அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!

உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக!


Read more...

Friday, June 29, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************

------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************

................பொருள்...................

[பின் பார்த்து முன்]

"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க


"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!


"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"

தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************


....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

Thursday, June 21, 2007

எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!

எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!

எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.

அப்படி என்னதான் இந்த எட்டு எனப் பார்த்தால், ஆளாளுக்கு எழுதினதைப் பார்த்தா அவங்களை நினைச்சு சந்தோஷமா இருக்கு.
அதே சமயம், இவங்க எல்லாம் இப்படி அடுக்கியிருக்கறதுக்கு முன்னாடி, நாம என்னன்னு சொல்லமுடியும்னு, ஒரு பயம் அடிவயத்தைக் கவ்வுது.

அப்போதான், நம்ம இளா ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதைப் பார்த்ததும் கொஞ்ச தெம்பு வந்தது.

அதனால, அவருக்கு என்னோட முதல் நன்றி.

என் எட்டு இதோ!
சாதனைகள் ஏதுமில்லை.
ஆனால், மறக்கவொண்ணா நிகழ்வுகள்
நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா" என எங்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் சிறப்பு மாணவனாக இருந்தது. இன்னிக்கு எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச தமிழறிவு அவர் போட்ட பிச்சை.

2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
[கொத்ஸ் கவனிக்க!]

3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.

4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து, அத்தனை மக்களும் ஒன்றாக இணைந்து, ராவா, பகலா வேலை செய்து, பணம் திரட்டி, மிகச் சிறந்த அளவில் கும்பாபிஷேகம் செய்து முடித்தது. ... அந்தக் கோவில் இன்றும் சிட்லபாக்கத்தில் மங்கள விநாயகர் ஆலயம் என ஆன்மீகப் பணி ஆற்ரிக் கொண்டிருப்பது.

5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. விளையாட்டுத் திடலில் தொடர்ந்து 10 நாட்கள் வெற்றிகரமாக LINTEF [Lions' International Trade and Entertainment Fair] என்ற பெயரில் நடத்திக் காட்டியது.

6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. பாரத் பந்த் என ஒன்று அன்று. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அவசரத்துக்குக் கிடைத்த ஒரே டாக்டர் அகர்வால். அறுவை சிகிச்சை மூலமே விட்டுப்போன ரெடினாவை மீண்டும் இணைக்கமுடியும்; அதிகச் செலவாகும் இதற்கு என் சொல்லிவிட்டார்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன்.
மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்! பத்ரிநாத்திடம் செல்லுமாறு அந்தக் கோவிலை நிர்வகித்து வந்த கீதம்மாவின் அன்பான அறிவுரை.

அப்படியே செய்ய, பத்ரிநாத்தும் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்த, சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப் படுகிறேன். மறுநாள் அறுவை சிகிச்சை என முடிவாகிறது.அன்றிரவு வந்த டாக்டர் பத்ரிநாத் என்னைச் சோதிக்கிறார். அவராலேயே நம்ப முடியவில்லை. "டாக்டர். சங்கர்,நீ அதிர்ஷ்டசாலிப்ப்பா! உன்னோட ரெடினா தானே திரும்பவும் சேர்ந்திடுச்சு. இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!

7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது.

8. இணையத்தில் தற்செயலாக அறிமுகமாகி, பல்வேறு நண்பர்களைப் பெற்று, எழுதணும்னு நினைத்த பல விஷயங்களில், ஒருசிலவற்றையாவது எழுத முடிந்தது .

மேலே சொன்ன விஷயங்கள், அநேகமாக என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது, எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பேன் இதையெல்லாம்!
இப்ப உங்ககிட்டேயும்!

சொல்ல அழைத்த கொத்தனாருக்கு மீண்டும் ஒரு நன்றி.

இப்ப நான் ஒரு 8 பேரை அழைக்கணுமாம்.

1. குமரன்
2. செல்வன்
3. கோவி.கண்ணன்
4. ரவி கண்ணபிரான்
5. ஷைலஜா
6. அன்புத்தோழி
7. நாகை சிவா
8. வடுவூர் குமார்

எத்தனையோ பேர் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவர்கள் இவர்களே!
உங்களுக்கு இஷ்டமிருந்தால், வந்து எழுதுங்க.
கட்டாயமில்லை.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

_____________________________________
விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

OPTIONAL:

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Read more...

Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.
[இதை எனக்குத் தெரியப்படுத்திய அன்பு உள்ளத்திற்கும்!]
**************************************************************

"தந்தை என்று சொல்லவா"
[என் தந்தையின் நினைவுநாளை ஒட்டி, சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது.]

தந்தை என்று சொல்லவா
எந்தை என்று வணங்கவா
சொந்தம் என வந்தோரை
மந்தை என எண்ணாமல்
தம்தம் யென்று நினைத்தவரை
[தந்தை என்று .....]

இன்று எமைப் பிரிந்தாய்
சென்று துயர் கொடுத்தாய்
என்றும் உமைப் போற்றி
இங்கு யாம் இருப்போம்
[தந்தை என்று......]

எத்தனையோ பெற்றாய்
அத்தனையும் முத்துக்கள்
மொத்தமாக சொல்வதென்றால்
எத்தனையோ நேரம் வேண்டும்
[தந்தை என்று.....]

உன்னாலே பிறந்திட்ட
என்னோடு வளர்ந்திட்ட
கண்ணான சோதரரும்
இந்நாளில் பிரிந்திருக்க
என் சொல்வேன் நான் இன்று
[தந்தை என்று.....]

பிள்ளையாய்ப் பிறந்தாலே
பொறுப்புகள் பல உண்டு
பல்லோரையும் வாழ வைக்கும்
கடமையும் கூட வரும்- நீயோ
ஒரே பிள்ளையாய்ப் பிறந்து விட்டாய்
உறவை மட்டுமின்றி
ஊராரையும் வாழ வைத்தாய்
[தந்தை என்று.....]

உன் பிள்ளைகள் உனைப் போல
எந்நாளும் பலர் வாழ
தன்னாலே முடிந்ததெல்லாம்
இன்னாளில் செய்கின்றோம்
நீ இட்ட பிச்சையிது!
[தந்தை என்று]

பாசத்தைக் கொட்டவில்லை
பரிவாய் சொல் சொன்னதில்லை
உன் நெஞ்சில் ஓடி நாங்கள்
உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை

ஆனால்...,


இதுவெதையும் காட்டாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
எல்லாமே உணர்த்தி விட்டாய்
உன் அன்பு வாழ்க்கை மூலம்!
[தந்தை என்று....]

நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது
[தந்தை என்று....]

இன்னாளில் மட்டுமன்றி
என்னாளும் நினைக்காமல்
என்னாலே இயன்றிடுமோ
மண்ணாளில் வாழும் வரை
[தந்தை என்று....]

நீ உணர்த்திய பாசம் நிஜம்
நீ சொன்ன மொழியும் நிஜம்
நீ வாழ்ந்த வாழ்க்கையும் நிஜம்
நீ என்னுடனே இருப்பதுவும் நிஜம்
[தந்தை என்று....]

உன்னாலே வாழுகின்றேன்
உன்னை நான் நினைக்கின்றேன்
உன் சொல்லைக் கேட்கின்றேன்
உன் பெருமை பாடுகின்றேன்
[தந்தை என்று....]

என் மடியில் நீ படுத்து

இவ்வுலகை விட்டகன்ற
அந்நாளை நிதம் நினைத்து
என் காலம் போக்குகின்றேன்
[உன்னுடன் நான் சேரும் வரை]
[தந்தை என்று....]

உன் குலத்தில் பிறந்தவர்
நன்றாக வாழ்ந்திருக்க
உன் ஆசி வேண்டுகின்றோம்
இன்னாளில் நாங்கள் இன்று !
[தந்தை என்று....]

*************************************************************

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

Read more...

Friday, June 15, 2007

சிவாஜி ..... பாஸ்!!

"சிவாஜி பாஸ்" !!!!

சிவாஜி பார்த்தாச்சு!

எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!

ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து எனக் கொள்ளவும்!

முதல் நாள், முதல் ஷோ!

திரையரங்கில் நல்ல கூட்டம்!

ஆனால், ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை!
[எங்க ஊர் அப்படி!]

விளக்குகள் அணைந்ததும், சென்னை எங்களூருக்குள் வந்தது!

விசில் சத்தம் பறக்க, பேப்பர் துண்டுகள் பேப்பர்மாரி பொழிய, கைத்தட்டல்கள் காதைத் துளைக்க, சிவாஜி துவங்கினார்!

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை; சொல்வதற்கும் ஒன்றுமில்லை!

ஆரம்ப நாட்களில் வந்த கிசுகிசுக்கள் போல ஒரு ஒற்றை வரிக்கதை.

நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவையே இல்லை!

ஆனால், தமிழகம் தாங்குமா!

எனவே.... எண்டர் ஷ்ரேயா... மூலக்கதையுடன், அதன் நிகழ்வுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்களன்களுடன்!

ஆனால், அவர் இல்லாவிட்டால், அந்த பாடல் காட்சிகள் எப்படி இருக்கமுடியும்.

காமெடி வேணுமே!

கம் ஆன் விவேக்!!

சரி, படம் எப்படி?

3 மணி நேரப்படம்.

ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை!

ஒருசில காட்சி அமைப்புகள்[ஆஃபீஸ் ரூம், ம்யூசிக் ஸ்டோர்] அடிக்கடி ரிபீட் ஆனாலும், படம் தொய்வில்லாமல் போகிறது!

ரஜினி ஃபார்முலாபடி, முதல் ஒரு மணி காமெடி, அடுத்த ஒரு மணி கொஞ்சம் கதை, கடைசியில் அதிரடி என எதிலும் மாற்றமில்லை.

ரஜினி கெட்டப், உடை, மேக்கப் என படு இளமையாக ஜொலிக்கிறார்!

பாடல் காட்சிகளில் படுகவனம் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்!

ரஜினி ரசிகர்களுக்கு விசில் அடித்து மாளாத வண்ணம் காட்சித் தேர்வுகள்!

மெயின் பஞ்ச் டயலாக், "ச்ச்சும்மா அ....தி....ரு...தில்ல"! வரும்போதெல்லாம், அரங்கம் புத்துணர்சி பெற்று நிமிர்ந்து உட்காருகிறது.

ஷ்ரேயாவுக்கு வேலையே இல்லை, பாடல் காட்சிகளைத் தவிர எனச் சொல்லலாம். அழகாக இருக்கிறார்.

ஆடியோவில் கேட்பதைவிட, சில பாடல்கள், அரங்க அமைப்பாலும், ஒரு சில புதுமைகளாலும் திரையில் மிக நன்றாக வந்திருக்கின்றன. ....குறிப்பாக "ஸ்டைல்" பாடல் படமாக்கப்பட்ட விதம்..... அற்புதம்!!


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நல்லா வந்திருக்கு!

விவேக் காமெடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்!

பாதி ரஜினி வேலையை இவரே செய்து விடுகிறார். ஆரம்ப காட்சி ஒன்றில், ரஜினி ஒரு பஞ்ச் டயலாக் விடுக்க வாயைத் திறக்கும் போது, அவரை அடக்கிவிட்டு, இவர் தொடர்கிறார்!!

வில்லனை எதிர்கொள்ள, சிவாஜி எடுக்கும் செயல்கள், சற்றும் நடக்கக் கூடிய ஒன்றல்ல!

சண்டைக்காட்சிகள் ஆங்கிலப்படங்கள் பல பார்த்திருக்கும் நம் தமிழக மக்களுக்கு மிகவுமே பிடிக்கும்!

படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பாததால், ஒரு சில கருத்துகள் மட்டுமே சொல்லவிழைகிறேன்.

திரைப்படம் என்பது வெறும் கற்பனை.


நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.

ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

அந்த வகையில் பார்த்தால், ரஜினி என்னும் காந்த சக்தியின் மூலமாக, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வைத்திருக்கிறார் ஷங்கர்.

இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்!


ஆனால், படையப்பாவோ, சந்திரமுகியோ அல்ல!

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும், அந்த மொட்டை பாஸ் ரஜினி[பெயர் எம்ஜிஆர்!] சிம்ப்ளி சூப்பர்!


மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.

போர் அடிக்காமல் போகிறது படம்!

அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

சிவாஜி...... பாஸ்!





Read more...

Thursday, June 14, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என முடிவு செய்து, வழக்கமான மயிலை கபாலி குளத்தருகே இறங்கி, நேராக
நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், எதிரில் நம்ம மயிலை மன்னார்!

சில நண்பர்களோடு ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டு வந்தவன், என்னைப் பார்த்ததும், "அட! இன்னாபா, அதிசயமா இருக்கு! இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்லியே நீ! எங்க இம்மாந்தூரம்?" என்று நக்கலாகக் கேட்டான்.

"அதெல்லாம் இல்லேப்பா; கொஞ்சம் வேலை மும்முரம். அதான், அடிக்கடி வர முடியலை" என அசடு வழிந்தேன்.

"தா! இன்னாத்துக்கு பொய் ஸொல்றே? அதான் ஒன் கண்ணே ஒன்னியக் காட்டிக் கொடுக்குதே!" என்று அதட்டினான் மன்னார்.

'கண்' என்றதும் சட்டென ஒரு பொறி தட்ட, உடனே அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டேன்; " ஆமா, இந்தக் கண்ணு பேசுமா? எப்பிடி காட்டிக் கொடுக்குதுன்னு சொல்கிறாய்?"

"கண்ணு எப்பிடி பேசும்? வாய்தான் பேசும். ஆனா ஒரு ஆளைப் பாத்ததும் அவங்க மூஞ்சி காட்ற சில விஷயங்களைக் காட்டிக் கொடுத்திரும். அதுல இந்தக் கண்ணும் ஒண்ணு. இது மௌனமா சில சேதிகளைச் சொல்லும்.
ரொம்பப் பேரு இத மட்டுமே பார்த்திட்டு, இது என்னமோ பேசுதுன்னு நினச்சுகிட்டு, மத்த விஷயங்களைக் கோட்டை விடறாங்க. மொத்தமா கவனிச்சா, மத்த உறுப்புங்க செய்யற சேட்டைகளைப் பாக்கலாம். ஆனா, இவங்கதான் இந்தக் கண்ணு மேல
மொத்தமா நம்பிக்கை வெச்சிட்டாங்களே! மிஸ் பண்ணிடறாங்க! இது மாரி நம்பி மோசம் போனவங்கள்ல பொண்ணுங்கதான் டாப்பு. இப்பிடி நம்பி ஏமாந்து போனதுக்கப்பறம் கண்னை நம்பி ஏம்மாந்திட்டோமேன்னு புரிஞ்சுக்கறவங்களும் இவங்கதான்!
இந்த விஷயத்தைப் பத்தி ஐயன் ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. அது என்னான்னு சொல்றேன். வா. கடையாண்ட போய் வடையைக் கடிச்சுக்கினே கேளு" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துக் கொண்டே சென்றான்.

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 118. "கண் விதுப்பழிதல்"

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. [1171]

நான் உண்டு என் படிப்பு, உண்டு, என்னோட வீடு உண்டுன்னு இருந்த என்னை, 'ஏய்! அந்தாளைப் பாரு! இன்னா ஷோக்கா கீறான் பாரு!
அவன் கலரும், ஒசரமும், பாடியும் ! அவன் கண்ணைப் பாரேன்! எப்பிடி சிரிக்கறான் பாரு"ன்னு அவனைப் பாக்கச் சொல்லி, காட்டி, மனசுல பிடிச்சு வெச்சது நீங்கதான்!
இப்ப அதுனாலதான் எனக்கு இந்த தீராத நோவு வந்துது! இப்ப அவன் பூட்டான்! இத்தினியும் பண்ணின நீங்கதான் இப்ப பொலபொலன்னு கண்ணீர் வுடறீங்க! ஏ கண்ணுங்களா! இது இன்னா நாயம்?"

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். [1172]

"வெறும் அளகை மட்டுமே பார்த்திட்டு, பேச்சை மட்டுமே நம்பிட்டு, பின்னாடி இன்னா ஆவும்ன்றதைப் பத்தி துளிக்கூட யோசிக்காம,
இது சரிப்பட்டு வருமா? இது ஆவுற கதையா?ன்னுல்லாம் சிந்திச்சுப் பாக்காம, அவனையே மொறச்சு மொறச்சு பாத்த, ஏ, மை தீட்டின கண்ணுங்களா! இப்ப இன்னாத்துக்கு இப்பிடி வருத்தப்பட்டுகிட்டு அளுவுறீங்க?


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. [1173]

"அந்த ஆளைப் பாத்தப்போ, நல்லா அகலமாத் தொறந்து வெச்சு பாத்தீங்களே, கண்ணுங்களா, இப்ப அவன் பூட்டானேன்னு துக்கப்பட்டுக்கினு அளுவுறீங்களே, ரொம்ப நல்லாருக்குடிம்மா
நீங்க செய்யுறது! எனக்கு உங்களைப் பார்த்தா, சிரிப்புதான் பொத்துகிட்டு வருது! நல்லா அளுவுங்க!"

செயலற்றார் நீருலந்த உண்கண் உயலற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. [1174]


" இப்பிடி அளுது, அளுது, நான் தெனமும் அளகா மைதீட்டி வளத்த இந்த கண்ணுங்க, இப்ப எனக்கு நான் பொளைக்க முடியாதபடி ஒரு நோவைக் கொடுத்திட்டு,
அதுங்களும் அளமுடியாம வத்திப் போய் நிக்குதுங்க பாரேன்! வோணும் இதுங்களுக்கு!"

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். [1175]


"இப்ப அவரு என்னிய விட்டுப் போனதால, எனக்கு வந்திருக்கற இந்த துன்பம்ங்கற நோவு எம்மாம் பெருசுன்னா, இத்தோட பாக்கறப்ப,
தோ, எதுத்தாப்பல இருக்கே சாந்தோமாண்டை, அந்த கடல் கூட இத்த விட சின்னதுங்கலாம்!
இத்தக் கொணாந்ததே இந்தக் கண்ணுங்கதான். இப்பப் பாரு! அதுங்க தூங்கக் கூட முடியம தவிக்கற தவிப்பை!"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. [1176]

"இப்பிடி எனக்கு இந்த நோவைக் கொடுத்ததுக்கு முக்கிய காரணமே இதுங்க தான்!
இந்தக் கண்ணுங்கதான்!
இப்பம் பாரு, அதுங்களும் தூங்காம தவிக்குதுங்க.
ஹைய்யா, எனக்கு ஜாலி! இது ரொம்ப நல்லாருக்கு!"


உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண். [1177]

"பாரு, பாருன்னு என்னியத் தூண்டிவிட்டு, ஐயோ! இவரைப் போல வருமான்னு அவருக்காவ உருகி, உருகி,
அவரையே பாத்துகிட்டிருந்த இந்தக் கண்ணுங்க ரெண்டும் இப்போ அளுது, அளுது, தன் பண்ணின தப்புக்காவ வருந்தி, வருந்தி,
கண்ணுல தண்ணியே இல்லாமப்போவட்டும்!
நல்லா வோணும் இதுங்களுக்கு!"


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். [1178]


" இப்ப அவரு என்னிய வேணாமின்னு சொல்லிட்டு பூட்டாரு. மன்சால கூட என்னை விரும்பாதவராயிட்டாரு.
ஆனாலும், அவர் பேரை கேட்டாலே
இப்பவும் கிளுகிளுங்குது.

இந்த வெக்கங்கெட்ட கண்ணுங்க மட்டும், பொறுமையே இல்லாம, இன்னமும் அவரைப் பாக்கணுமின்னு துடியாத் துடிக்குது! சீச்சீ! இன்னா பொளப்பு இது?"

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [1179]

" இந்தப் பொல்லாத கண்ணுங்க இருக்கே, ரொம்ப மட்டம்! அவரு வரலேன்னாலும் தூங்க மாட்டேங்குதுங்க.
வந்தாக்காண்டியும் தூங்காதுங்க! அவரையே பாத்துக்கினு இருக்கும்!
இப்பிடி, வந்தாலும் தும்பம், வரலேன்னாலும் தும்பம்னு அலையுதுங்க!"


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. [1180]


அளுது அளுது, அவரையே நினைச்சுகிட்டு இருந்து வீங்கிப் போயிருக்கற
இந்தக் கண்ணு ரெண்டையும் பாரேன்.
பட படன்னு தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சேதி சொல்ற டமாரம் மாரி,
இதுங்க ரெண்டுமே என் மனசு இன்னமும் அவரையேதான் நினைச்சுகினு இருக்குன்றத,
ஊருக்கெல்லாம் காட்டிக் கொடுத்துகிட்டு அலையுதுங்க!"

இப்ப இதுவரைக்கும் சொன்னதிலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?
கண்ணுங்க வேலை பாக்கறதும், அளறதுந்தான்!
மூல காரணமா நின்னுகிட்டு, ஆசையைத் தூண்டி வுடறதும், அப்பால, அத்தயே நெனச்சுகிட்டு அளுவறதுந்தான் இதோட வேலை!
புரியுதா?
ஆராச்சும், கண்ணு பேசுது, சொல்லாத சொல்லெல்லாம் சொல்லுதுன்னு ரீல் வுட்டாங்கன்னா நம்பாதே!
காட்டிக் கொடுக்கும்; கஸ்டப்படுத்தும்!
அவ்ளோதான்!
ஆச்சா?"
என்றவாறே டீயை உறிஞ்சினான் மன்னார்.

"புரியுது மன்னார். இந்த 'உண்கண்' அப்படீன்னு சொல்றாறே, அப்பிடீன்னா என்ன?" எனக் கேட்டேன்.

பெரிதாகச் சிரித்தான் மன்னார்!
'நெனச்சேன்! நீ கேப்பேன்னு நெனச்சேன்! இந்தப் பொண்ணு கண்ணுக்கு மை தீட்டுதில்ல? அதெல்லாத்தையும் இந்தகண்ணு ரெண்டும்
நல்லா தின்னுதுங்களாம்! அதான் உண்கண், மையைத் தின்ன கண்ணுங்கன்னு ஐயன் சொல்லி சிரிக்கறாரு' என்றான்!

நானும் சிரித்துக் கொண்டே, பைதல்னா? என்று இழுத்தேன்.

'இது அடிக்கடி ஐயன் யூஸ் பண்றதாச்சே! பைதல்னா தும்பம்[துன்பம்].

சரி, சரி, தலீவர் படம் இன்னிக்கு ரிலீஸ்! இப்பத்தான் கொஞ்சம் காசு பாக்கலாம். தியேட்டராண்டை நம்ம பசங்க காத்துகினு இருப்பாங்க. நா வர்ட்டா! ஒனக்கு எதுனாச்சும் டிக்கட் வேணுமின்னா, ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் வந்து கண்டுக்கோ!
சரியா!" என்றவாறே அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் தாவினான் மயிலை மன்னார்!

"அட, இருப்பா! நானும் வரேன்!" என்றவாறு நானும் ஆட்டோவில் தொற்றிக் கொண்டேன்!

Read more...

Sunday, June 03, 2007

"மௌனம் ஒரு பாஷை"

மௌனம் ஒரு பாஷை -- மீண்டும் ஒரு டிவி கதை!!

படிகள் என்னும் தொடரைப் பற்றி எழுதியது நினைவிருக்கலாம்.

அதே போல் நேற்று ஒளிபரப்பான ஒரு சின்னத்திரை படத்தைப் பற்றிய ஒரு பதிவு.

முதலில் கதைச் சுருக்கம்.....!

5 பிள்ளைகள் பெற்ற ஒரு வயதான தம்பதியினர்.
கடைக்குட்டிக்கு இப்போது வயது 16.
முதல் பெண் விதைவையாகி,... இப்போது வீட்டில்.
அடுத்த மூன்று ஆண் பிள்ளைகளும் கல்யாணம் முடித்து, கூட்டுக் குடித்தனம்.

ஒரே ஒரு திருத்தம்!
கடைசிப் பிள்ளை மட்டும் சென்னையில்..... தந்தையால் தள்ளி வைக்கப்பட்டு ..... கூடப்படித்த வெள்ளைக்கார டாக்டர் பெண்ணைக் காதலித்ததால்.
இப்போது அவன் சென்னையில்.....தனியாக குடும்பம் நடத்துகிறான்.

கடிதப்போக்குவரத்து கூட கிடையாது.
கணவனின் கல்லாய்ப்போன மனம் கண்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கும் தாய்.

இந்நிலையில், தந்தை கைப்பட எழுதிய கடிதம் ஒன்று டாக்டர் மகனுக்கு வருகிறது.
தாய் திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என.
வரச்சொல்லி அல்ல!

பதறி அடித்துக் கொண்டு இவன் ஓடி வருகிறான்.
5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்காத சந்தோஷத்தில், அனைவரும் மகிழ்கின்றனர்.....
தன் மனைவியின் புகைப்படத்தை அனைவருக்கும் காட்டுகிறான்.
இன்னும் மகப்பேறு அடையாத இரண்டாவது அண்ணியை சென்னைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனை செய்ய வாக்களிக்கிறான்
தந்தை மட்டும் இன்னமும் முருங்கை மரத்தில்!!
இவனைக் கண்டாலே, முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்.
தாய் இன்னும் மயக்கமாகத்தான் இருக்கிறார்.

கண் விழித்ததும், கதறுகிறார், 'என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? இவனை ஏன் வரவழைத்தீர்கள்?' என.
மகனைப் பார்க்காததால்தான் இச்செயல் செய்ய முயற்சித்தார்; இப்போது மகனைப் பார்த்ததும் மனமகிழ்வார் என எண்ணிய மற்ற பிள்ளைகளுக்கு ஒரே அதிர்ச்சி.

டாக்டர் மகன் மட்டும், தாயின் கை [நாடி] பிடித்துப் பார்க்கிறான்.
அவன் முகம் மலர்கிறது!
"இதற்காகவா அம்மா இப்படி செய்யத் துணிந்தாய்?" என மலர்ச்சியுடன் கேட்கிறான்.

"ஊர் உலகம் என்ன சொல்லும்? என் முகத்தில் காறித் துப்புவார்களே! அந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி? அவரை என் முகத்திலேயே காட்டாதே!" எனப் புலம்புகிறார்.

ஆம்! அவர் இப்போது 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயாகியிருக்கிறார்! .

"ஓ! தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது! இதற்காக நீ வருந்தாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என சொல்லிவிட்டு, வெளியே வந்து, அனவரிடமும் [தந்தையைத் தவிர!!] இதைப் பகிர்கிறான்.

அவ்வளவுதான்! அங்கே ஒரு பூகம்பமே வெடிக்கிறது!

அம்மாவுக்கு என்ன ஆசை இந்த வயதில் எனப் பெரியவன் குமுற, இதுக்கொண்ணும் குறைச்சலில்லை எனப் பெரிய அண்ணி முகம் நொடிக்க, விவஸ்தை இல்லாமல் இப்படி ஒரு காரியம் செஞ்சாளே இவ, என தமக்கை முகம் சுளிக்க, தனக்கே இன்னும் குழந்தை பிறக்கா நிலையில், மாமியார் கருவுற்றதை சகிக்க முடியாமல் சிறிய அண்ணி மனம் வெதும்பிப் பொறாமை கொள்ள, அவமானத்தால் அவள் கணவன் தலைத் திருப்பிக் கொள்ள.......

எல்லாரும் தாயையும், தந்தையையும் இப்போது ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.


கடைசிப் பெண் மட்டும் எனக்குத் தம்பிப்பாப்பா வரப்போகிறான் எனக் குதூகலிக்கிறாள்.

டாக்டருக்கு ஒரே அதிர்ச்சி!

வரும் கோபத்தில், அவர்களை எல்லாம் பார்த்து ஒரு நீண்ட கூப்பாடு போடுகிறான்.முற்றத்தில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டே....

"என்ன மனிதர்கள் நீங்கல்லாம்? கொஞ்சங்கூட மனிதத்தன்மையே இல்லாம இருக்கீங்களே! தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அதை இன்னும் வழங்க இங்கே இரு ஜீவன்கள் இருக்கின்றனர் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதைக் கண்டு மகிழாமல், அதனைப் போற்றாமல் கேலி பேசும் உங்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கு. பெற்றவருக்கு ஆதரவா இருக்க வேண்டிய நீங்க இப்படி நடக்கலாமா?"
எனக் கூச்சலிட்டுவிட்டு, நகர்கிறான்.... சொட்டச் சொட்ட நனைந்தபடியே!

மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டபடியே இருந்த தந்தை, தன் மேல்துண்டை திண்ணையின் மேல் போட்டுவிட்டுச் செல்கிறார்......, வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே,........ இவனையும் தலையைத் துவட்டிக்கொள்ளச் சொல்கிற மாதிரி!

மறுநாள், தந்தையிடம் சென்று பேசுகிறான்...... அவர் இவனைப் பார்க்காமல் திரும்பி நின்றாலும்!
தாயின் மனநிலை, உடல்நிலை கருதி, தன்னுடன் கொண்டு சென்று வைத்துக் கொள்ளப் போவதாய்.

அவ உனக்கும் அம்மாதான். வந்தா கூட்டிகிட்டுப் போகலாம் என சொல்லிய வண்ணம் நகர்கிறார்!

சற்று தூரம் சென்ற மகன் சட்டெனத் திரும்புகிறான்........ கண்ணைக் குறுக்கியபடியே தன்னைப் பார்க்கும் தந்தையைப் பார்க்கிறான்!
இவன் திரும்பியதும், பொய்வீறாப்பாக, தந்தை முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.!!!

அம்மாவைச் சமாதானப் படுத்தி, தன் மனைவியைப் பற்றிய அவரது சந்தேகத்திற்கு பதில் சொல்லி, சென்னைக்குக் கூட்டிச் செல்கிறான்.

தந்தை இன்னமும் மௌனமாக வாசல் வரை வந்து, பார்த்தும், பாராதது போல் நின்று, வழியனுப்பி வைக்கிறார்.

அந்த மௌனம் எத்தனையோ மொழி பேசுகிறது.

மகனுக்கு நன்றி, புரிதலில் நிம்மதி, மனைவியைப் பிரியும் வருத்தம், அவளுக்கு சற்று அமைதி கிடைக்கப் போகிறதே எனும் மகிழ்ச்சி, இனித் தனியாக இவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம்...... இப்படி இன்னும் பல!!

அனைவரும் கார் நகர்ந்ததும் உள்ளே செல்லுகின்றனர்.

கடைக்குட்டி மட்டும், தயங்கியபடியே அப்பாவின் அருகில் வந்து, வெள்ளிக்கார அண்ணியின் புகைப்படத்தை அப்பாவின் சட்டைப்பையில் செருகிவிட்டு, சிட்டாகப் பறக்கின்றாள்.

யாரும் பார்க்காத தனி இடமாக வந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே, சட்டைப்பையிலிருந்து எடுத்து அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.

தூரத்தே கிளுகிளுவென யாரோ சிரிக்கும் சத்தம்!

ஒரு 70 வயதுக் கிழவர், தென்னை மரத்தடியில் அமர்ந்து, தன் ஆசை மனைவிக்கு 'இந்தா சாப்பிடு!' என்றபடியே அல்வா ஊட்டுகிறார். அந்தக் கிழவியும் திருப்பி ஊட்டுகிறார்!

சிங்காரம்பிள்ளையும் சிரிக்கிறார்!

70-களில் வந்த அருமையான குறுநாவல்.
எழுதியவர் சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்!!!

இந்தக் கதையை மிக மிக அற்புதமாக ஒரு 2 மணி நேரக் குறும்படமாக வழங்கினார்கள் நேற்று, விஜய் டி.வி.யில்.

தந்தையாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்; தாயாக வெண்ணிற ஆடை நிர்மலா!

அதிக வசனங்கள் இருவருக்கும் இல்லை.
ஆனால், தங்களது அனுபவ முதிர்ச்சியை, பண்பட்ட நடிப்பின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நடித்திருந்தனர்.


மற்ற கதாபாத்திர தேர்வுகளும் கச்சிதமாயிருந்தது.
கதை நிகழ்வதாகக் காட்டிய கிராமமும் கொள்ளை அழகு!
இயற்கை எழில் பூத்துக் குலுங்கியது.

மொத்தத்தில் ஒரு நிறைவான படைப்பு.

வழங்கிய விஜய் டி.விக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்.

இதில், சிம்பாலிக்காக, வேரில் காய்த்துத் தொங்கும் ஒரு பலாமரமும் சிறப்பாக நடித்திருந்தது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது!!

Read more...

Monday, May 28, 2007

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

"நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு வந்தா, கன்னாபின்னான்னு சொல்றார் அப்படீன்னு போன அதிகாரத்தைப் படிச்சவங்க சொன்னாங்க" என்ற பீடிகையுடன் மன்னாரைச் சீண்டினேன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே! அவரு ஸொன்னதை அப்பிடியே ஸொன்னேன். அவ்ளோதான். நா இன்னா செய்யமுடியும்? ஆனா, அதுக்காவ, ஐயனைக் கொறை சொல்லாதே! உள்ளதை உள்ளபடியே சொல்லணும்னாலும் அதையும் சொல்லுவாரு அவரு. இப்போ அது மாரி, ஒரு அதிகாரம் ஸொல்றேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஒரு பொண்ணோட மனஸு இன்னா பாடு படும்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு ஐயன்! ம்... எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கான அவன் விளக்கமும்!


"அதிகாரம் -- 123" "பொழுது கண்டு இரங்கல்"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்


வேலைநீ வாழி பொழுது. [1221]


"பொளுதெல்லாம் நல்லாத்தான் போகுது. காலைல எளுந்துரிச்சதும், பரபரன்னு வேலை செஞ்சு, அவருக்கு ட்ரெஸ்ஸு எடுத்து வெச்சு, நாஷ்டா பண்ணிப் போட்டு, மத்தியானத்துக்கு சோறு கட்டிக் கொடுத்து, அவரை அனுப்பி வெச்சதுக்கு அப்பொறம், வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு, சாப்ட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, சாயங்காலம் ஆச்சுன்னா, மொகம் களுவி, பொட்டு வெச்சு, பூ வெச்சு, சீவி சிங்காரிச்சுகிட்டு, அவரு வர்ற வளியையே பாத்துகிட்டு நிக்கறப்ப ஒரு தவிப்பு வருதே, அது என் உசிரையே குடிக்கற மாரி இருக்குது.

அதே மாரி, அவனுக்கும், வேலையெல்லாம் முடிச்சிட்டு, எப்போடா பொண்டாட்டியைப் போய் பார்ப்போம்னு துடிப்பான்.

இப்பிடி ரெண்டு பேரையும் இந்தப் பாடு படுத்தற மாலைப்பொளுதே! நீ நல்லா இரு கண்ணு! ஒனக்கு புண்ணியாமாப் போவட்டும்! ஏன் எங்க உசுரை இப்பிடி வாங்கறே நீ?"

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. [1222]

"இன்னும் கோவம் தீரலை இந்தப் பொண்ணுக்கு! இந்தப் பாட்டிலியும் தொடர்ந்து திட்டறா!"

" ஏ மங்கிப் போன மாலைக்காலமே! நீ நல்லா இருடி அம்மா! ஆமா, ஏன் நீ இப்பிடி மங்கிப் போயிருக்கே! பகல்லே எல்லாம் பளபளன்னு இருந்தே! இப்ப 'டல்'லாயிட்டியே! ஒன்னோட ஆளும் எங்காளைப் போல நெஞ்சில ஈரமில்லாத ஆளா? இன்னும் வரலியா? அதான் சாயம் போயி மங்க ஆரம்பிச்சிட்டியோ?"

எனக் கிண்டல் செய்யறா!


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துளிஅரும்பித்

துன்பம் வளர வரும். [1223]

"இன்னும் அவர் வரலை. நான் இங்க வாசல்லியே நிக்கறேன். வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமா நடுங்கிக்கிட்டே ஒளியறமாரி மங்குது.
இது மங்க மங்க, துளித்துளியா என்னோட மனக்கவலை அதிகமாயிட்டே வளருதே!"

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். [1224]

இந்த சாயங்காலப் பொளுது இன்னா மாரி இருக்குன்னு சொல்லுது அந்தப் பொண்ணு இந்தக் குறள்ல. கேட்டுக்கோ!

"6 மணி ஆச்சுது. இந்தப் பொண்ணு நல்லா சிங்காரிச்சுகிட்டு வாசக் கதவாண்டை நிக்குது.
வெய்யிலு சுளீருன்னு அடிக்குது. லேஸா வேர்க்குது. கர்ச்சீப்பை எடுத்து அப்பப்ப துடைச்சுக்குது.
இன்னும் அவரு வரலை.
வெய்யில் கம்மியாகி, மெதுவா இருட்டு பரவ ஆரம்பிக்குது.
இப்பிடி, வெய்யில் கொறைஞ்சு, இருட்டு வர்றது எப்பிடி இருக்குதுன்னா,

தூக்கு தண்டனை இடத்துல கைதி நிக்கறான்.
கொஞ்சங்கொஞ்சமா, தூரத்துல இருந்து அந்த தண்டனையை நிறைவேத்தற ஆளு வர்றப்போ எப்பிடி இருக்குமோ, .....அப்பிடி இருக்குதாம்!"

காலைக்குச் செய்ந்நன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. [1225]

"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். [1226]

"அவரு என்னோட இருந்த வரைக்கும், என்னை விட்டுப் பிரியாம இருந்த வரைக்கும், இந்த சாயங்காலம் அப்படீங்கற ஒண்ணு இம்மாம் தொல்லை பண்ணும்னு எனக்குத் தெரியாமப் போச்சு.
அதே, அவரு இல்லாம இருக்கறப்போ, அல்லாம் புரியுது! "


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். [1227]


மொதப்பாட்டுல சொன்னதையே திரும்பவும் வேற விதமா சொல்லிக் காட்டறாரு இதுல.
"காலைல அவரு கிளம்பிப் போனதுக்கப்புறம், கொஞ்சங்கொஞ்சமா அரும்பு விட்டு, ஆரம்பிச்சு, பகல் பொளுதெல்லாம் வளர்ந்து, சாயங்காலம் ஆச்சுன்னா முளுசா மலர்ந்து என்னை வாட்டுதே இந்த துன்பம்!"


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. [1228]


இப்ப கொஞ்சம் கற்பனை கலந்து சொல்றாரு ஐயன்!
கிராமத்துல இருக்கறவங்களுக்கு, இல்லாட்டி, அங்கே இருந்தவங்களுக்கு இது நல்லாவே புரியும்.


" மாலை நேரம்!
இந்தப் பொண்ணு காத்துகிட்டு நிக்குது.
இன்னும் அவன் வரலை.
அப்போ, தூரத்துல இருந்து ஒரு புல்லாங்குழல் சத்தம் கேக்குது.
மேய்ச்சலுக்குப் போன மாடுங்கல்லாம் வூட்டுக்கு திரும்பற நேரம்.
மாடுங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கறதுக்காவ, மாட்டுக்காரன் புல்லாங்குழலை எடுத்து ஊதறான்.
இது இந்தப் பொண்ணு காதுல விளுது.
ஆஹா! நேரம் ஆயிப்போச்சே! இந்த மாலை அப்படீங்கற கெட்ட பொளுது வர்றதுக்கு தூது சொல்ற மாரி இது இருக்கே" ன்னு ஏங்குது இது.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. [1229]

இப்போ அந்தப் பொண்ணோட கோபம் ஜாஸ்தியாவுது.
வர்ற கோபத்துல, அல்லாருக்கும் சாபம் கொடுக்க ஆரம்பிக்குது! எதுக்காவ?


இந்தப் பொண்ணு சாயந்தரமா வூட்டுக்காரனுக்காவ காத்துகினு நிக்குது.
அவனோ வந்தபாடில்லை இன்னும்!
சாரிசாரியா ஜனங்கல்லாம் அவங்கவங்க வூட்டுக்கு வந்து சேர்றாங்க.

ஒடனே, அந்தந்த வூட்டுக்காரிங்களும் அவங்களுக்கு வக்கணையா சோறாக்கி போடறாங்க!
சிலபேரு வயிறு முக்க துண்றாங்க
இன்னும் சில பேரு சோறு துண்றதுக்கு முந்தி கொஞ்சம் தண்ணி அடிக்கறாங்க.

இது ஒரு கண்ணால அத்தினியையும் பாத்துகினே கீது.

வெய்யில் தீந்து போயி, வெளிச்சம் மங்குது இப்ப.

இவனும் வந்த பாடில்லை.
ஆத்திரமும், துக்கமும் பொத்துகிட்டு வருது இதுக்கு.

"இங்கே நா காஞ்சு கருவாடா நிக்கறேன், அவரு இன்னமும் வரலியேன்னு; இவனுக இன்னாடான்னா தின்னுபுட்டு, குடிச்சுகிட்டு குஷாலா ஆட்டம் போட்டுக்கினு கீறாங்க.

நா எப்பிடி இங்கே அவரைக் காணாம தும்பப்பட்டுக் கீறேனோ, அதேமாரி, இவனுகளும் துண்ணது செரிக்காம, குடிச்சது தலைக்கேறி தும்பப்படட்டும்னு ஒரு சாபம் கொடுக்கறா!"
" என் புத்தியே மயங்கிப் போற மாரி வருது இந்த சாயங்காலம்.
எப்பிடி இங்கே நான் வருத்தப்படறேனோ, அதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கற அல்லாரும் மயங்கி துன்பத்தை அனுபவிக்கட்டும்!"


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். [1230]

இத்தான் டாப்! இந்த வருத்தம் இந்தப் பொண்ணை இன்னா பண்ணுதுங்கறதை கொஞ்சம் ஓவராவே சொல்லிக் காட்டுது இந்தக் குறள்.

" சம்பாரிச்சுகிட்டு வர்றதுக்காவ போனவரு இன்னமும் வராத இந்த சாயங்காலத்துல, இதுவரைக்கு போவாத என்னோட உசிரு, இன்னைக்கு, இப்ப, இந்த நேரத்துல, அவரை நெனைச்சே போயிரும் போல இருக்கே!"

இதுல எதுவுமே ஜாஸ்தியா ஐயன் சொல்லலை.
இது மாரி காதலனுக்காவ, புருசனுக்காவ ஏங்கிகிட்டு இருக்கற அன்பான பொண்ணுங்களைக் கேட்டுப் பாரு.
உண்மை புரியும் ஒனக்கு.

சொன்ன டயத்துக்கு வூட்டுக்கு போகாங்காட்டி, ஒங்க அண்ணி கண்ணைக் கசக்கிகிட்டு இருக்கும்.
சீக்கிரமா டீயைக் குடிச்சுமுடி.
நா வூட்டுக்கு போவணும்" என்று அசடு வழியச் சிரித்தான் மயிலை மன்னார்.

"சரி, சரி, நீ கிளம்பு" என அன்புடன் விடை கொடுத்தேன், என் நண்பனுக்கு!

Read more...

Wednesday, May 23, 2007

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"

மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"

பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்

*******************************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

Monday, May 14, 2007

மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!

மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!


மிக, மிகக் கேவலமான அரசியல் நடத்துபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்!

அவர்களைத் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அரசியல் நடத்தி காங்கிரஸுக்கே பாடம் போதித்தவர்கள் திமுகவினர்.

1967 முதல் நாம் கண்டுவரும் பாடம் இது.

துரதிர்ஷ்டவசமாக நாம் தமிழராய்ப் பிறந்து இதைக் கண்டு வருகிறோம்.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சோனியா காந்தியின் ஆணைக்கிணங்கி, உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு எனப் பெருமை பீற்றிக்கொள்ளும் அரசின் பிரதமர் தன் மனச்சாட்சியை அடகு வைத்து தயாநிதி மாறனின் ராஜிநாமாவைப் பரிந்துரை செய்திருக்கிறார் ஜனாதிபதிக்கு..... ஒரு விளக்கம் கூடக் கேட்காமல்!

தனது மந்திரி ஒருவர் ராஜிநாமா செய்கிறார்.

தனது கட்சிக்கு எதிராக சதி செய்ததாக இந்தத் தாத்தா சொல்கிறார்.
அச்சடித்த உரையைக் கையில் அடக்கியடியபடி தாத்தா வருகிறர்ர்.
தான் நினைத்த முடிவினைத் தவறாது சொல்லித் தளர்கிறார்

தன் துறையில் இதுவரை ஒரு தவறும் செய்யாத அமைச்சரை நீக்க, தன் ஆட்சிக்கு உலை வைக்கக்கூடிய கட்சியின் ஆணைக்கு, பிரதமர் இணங்குகிறார்.

ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கிறார்.

நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை.


தன் பதவியைப் பற்றி மட்டுமே!

அதுவும் சோனியாவின் உத்தரவுக்கிணங்க பாரதப் பிரதமர் ஆடுவது வெட்கத்திலும் வெட்கம்!

மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் முக்கியமில்லை மன்னர்களுக்கு!

ஆம்!

அவர்கள் இந்நாட்டு மன்னர்கள்!

நீங்கள் எந்நாளும் அடிமைகள்தாம்!

பிராமணர், வைசியர், க்ஷத்திரியர், சூத்திரர் என்ற பேதம் அரசியலில் இல்லை!

அதைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும்
அரசியல்வியாதிகளுக்குத்தான் அது!

இன்னமும் ஏமாந்து போகாமல், இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள், எம் தமிழர்களே!

மனம் பிறழ்ந்த மன்மோஹன்சிங்கே!

இனித் தூங்க முடியாது உம்மால்!

Read more...

Thursday, May 10, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"ஸார் வந்தா இவ்விடே இருக்கச் சொல்லி சேட்டன் பறைஞ்சு. ஒரு அவசர ஜோலியா வெளியில் போயிருக்கு. அதுவரையில் கொறச்சு மசால்வடை டீ கழிச்சோ," என அன்புடன் வரவேற்றார் நாயர்.

"என்ன அப்படி அவசர வேலை? ஏதாவது சண்டையா மறுபடியும்?" என பதட்டத்துடன் கேட்டேன், ..........மசால் வடையைக் கடித்தபடிதான்!

"ஞான் எந்து அறியு? எனிக்கி ஒன்னும் தெரியில்லா." என்று சொல்லி வெள்ளந்தியாகச் சிரித்தார் நாயர்.

சற்று நேரம் பொறுத்து, 23C பஸ்சில் இருந்து அசால்ட்டாக வந்திறங்கினான் மயிலை மன்னார்!

"இன்னாப்பா, ரொம்ப நேரம் ஆச்சா வந்து? நாயராண்ட சொல்ட்டுப் போயிருந்தேனே. இன்னா நாயர்! ஒண்ணும் சொல்லலியா நீ தம்பிகிட்ட?" என அதட்டினான் மன்னார்.

"அவரை ஒண்னும் திட்டாதே. நீ ஒரு அவசர வேலையா போயிருக்கறதா வந்தவுடனேயே சொல்லிட்டார்" என சமாதானப்படுத்திவிட்டு என்னவென வினவினேன்.

"ஓ அதுவா! எல்லாம் நம்ம அன்வர் பாஷா இருக்கான்ல. அவன் ஒரு பொண்ணை லவ்ஸு பண்றான். அது இவன் சாதியும் இல்ல. பையனைப் போய் பார்த்திட்டு வரச்சொல்லி அவனோட வாப்பா சொன்னாரு. சரி, இன்னா, ஏதுன்னு விசாரிப்போம்னு போனேன். பையன் ரொம்ப ஷ்ட்ராங்கா இருக்கான். அந்தப் பொண்ணுந்தான் இவன் மேல உசுரா இருக்கு. எனக்கென்னமோ இது முடிஞ்சிரும்னுதான் தோணுது. அவளை இன்னா மாரி வர்ணிக்கிறான் தெரியுமா? நம்ம ஐயன்கூட இப்பிடி எளுதலை!" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தான் மன்னார்.

வள்ளுவர் பெயரைக் கேட்டதும், எனக்கு டக்கென்று ஒரு மின்னல் பளிச்சிட்டது!

"ஆஹா! இன்று ஒரு நல்ல அதிகாரத்திற்குப் பொருள் கிடைக்கப்போகிறது என உள்மனது சொல்லியது.

இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென, "அது கிடக்கட்டும். என்னவோ ஐயன் கூட சொல்லியதில்லைன்னு சொன்னியே, மன்னார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?" என் மெதுவாகக் கேட்டேன்.

"நீ வந்த காரியத்துல குறியா இருப்பியே! சரி, சரி, ஸொல்றேன். 'நலம் புனைந்துரைத்தல்'னு ஒரு அதிகாரம். இந்தக் காதல் வந்திருச்சின்னா, பசங்களுக்கு தலகால் புரியாம பெனாத்துவாங்க! 'மானே, தேனே, மயிலே, குயிலே,....நீதான் நெலா, நீதான் காத்து, ஒன் அளகு இன்னாமாரி இருக்கு தெரியுமா'ன்னு நம்பமுடியாத கதையெல்லாம் வுடுவானுங்க. அது எப்பிடி இருக்குமின்னு ஐயன் கோடி காட்டறாரு இதுல! ம்...ம்.. எளுதிக்கோ" என சொல்ல ஆரம்பித்தான். நடுநடுவே அவனும் சில கமெண்ட்டுகளை அள்ளி விட்டான்!

இனி வருவது மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!


அதிகாரம்-112. "நலம் புனைந்துரைத்தல்"

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். [1111]

"இந்த அனிச்சம்பூ, அனிச்சம்பூன்னு ஒரு பூ இருக்காம். ஆரு பாத்திருக்காங்கன்னு தெரியல. ஆனா, எலக்கியத்துல அல்லா எடத்துலியும் அடிக்கடி வர்ற ஒரு பூ இது! ரொம்ப ரொம்ப மெல்லிசா இருக்குமாம். தொட்டாலே வாடிருமாம்! அவ்ளோ ஏன்? ஒன்னோட மூச்சுக்காத்து அதுல பட்டாலே சுருங்கிப் போயிடுமாம். அத்தப் பாத்து இவன் ஸொல்றான்.

ஏ அனிச்சம்பூவே, நீ நல்லாயிரு! மெல்லிசாவே இருந்துக்க.ஆனா என்னோட ஆளு.. என் காதலி... ரொம்பவே நல்ல குணமான பொண்னு. நான் அத்த உசிருக்கும் மேலேயே காதலிக்கறேன். அவளோட கம்பேர் பண்னினா நீ ஒண்ணும் அத்தினி மெல்லிசுன்னு ஸொல்றதுக்கில்லை!"

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. [1112]

"இப்ப கோடைக்காலம் தானே! ஊட்டில கூட்டம் அலை மோதுதாம். எதுக்கு? அங்கே நடக்கற மலர்க் கண்காட்சியைப் பாக்கத்தான் அம்மாம் கூட்டம். பூவெல்லாம் பார்த்தா மனசுக்குள்ள ஒரு ஆனந்தம் பொங்குது. மனசு குளுமையாவுது. இல்லியா?
அதேபோல இவன் தன்னோட மனசைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கறான்!


"ஏ மனசே! இங்க வந்து கூட்டங்கூட்டமா இந்த பூவையெல்லாம் பார்க்கறப்ப, உடனே நீ, ஆஹா! இப்பிடித்தானே அவளோட கண்ணும் இருக்குனு நெனச்சு மயங்குறியே! இத்தானே வேணான்றது!"

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்டகன் வேய்த்தோ ளவட்கு. [1113]

"இப்ப பாரு வேடிக்கையை! தன்னோட காதலிய வர்ணிக்கறான்! அசந்திடாதே!

அவ தோளு ரெண்டும் மூங்கில் போல தெரண்டு இருக்குமாம். ஆனா ஒடம்பு தளிர் நெறமா இருக்கும்.பல்லைப் பார்த்தியானா முத்து முத்தா இருக்குமாம். அவளை மோந்து பார்த்தா அப்பிடியே இதுவரைக்கும் எங்கியும் வராத, ஆனா இயற்கையான வாசனையா இருக்குமாம். மையி தீட்டின கண்ணுங்கள்லாம் வேல் மாரி கூரா இருக்குமாம்.


இப்பிடி ஒரு பொண்ணை நெனைச்சுப் பாரேன்! ஓடியே பூடுவே! ஆனா, இவன் வாய்க்கு வந்த மாரி வுடறான் கதை!:))"

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. [1114]

இப்ப கண்ணை மட்டும் தனியா ஸொல்றான்!

குவளைப்பூன்னு ஒண்னு இருக்கு. கொளத்தங்கரைலல்லாம் ஜாஸ்தியாப் பார்க்கலாம் இத்தை. ஊதாக்கலர்ல சும்ம ஜிம்முன்னு கண்ணு விரிச்சமாரி சிரிச்சிகிட்டு இருக்கும் இது. வயக்காமா, இந்தப் பாட்டு எளுதறவங்கல்லாம், அளகான பொண்ணுங்களொட கண்ணை இந்தக் குவளைப்பூவுக்கு உதாரணம் காட்டி எளுதுவாங்க!

நம்மாளு இன்னா ஸொல்றான்னா, இவனோட காதலியை இவன் வயக்கமா[வழக்கமாக] இந்த ஆத்தாங்கரை, கொளத்தாங்கரைல தான் பாக்கறது! அப்பிடி அவ வர்றப்ப, இந்த குவளைப்பூவெல்லாம் இவளைப் பார்க்குதாம். அடடா! இவ கண்ணுக்கு முன்னாடி நாமெல்லாம் எந்த மூலைக்கின்னு வெக்கப்பட்டு, அதது தலையைக் கவுத்துகிட்டு, நெலத்தைப் பாக்குதாம்!

நல்ல கூத்துதான் போ!"

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. [1115]

திரும்பவும் அதே அனிச்சம்பூ!


இவனோட லவ்வரு இன்னா பண்ணினாளாம்... ஒரு அனிச்சம்பூவை காம்போட எடுத்து தன் தலையில வெச்சுகிட்டாளாம். அவ்ளோதான்! அத்தோட வெயிட்டு.. அதாம்ப்பா எடை, பாரம்... தாங்காம 'மளுக்'குனு இந்தப் பொண்ணோட இடுப்பு ஒடிஞ்சிருச்சாம்!
நம்ப முடியலே இல்லை? இன்னும் இருக்கு கூத்து.

இவன் இன்னா பண்ணினானாம், ஒடனே, 'இது மாரி ஆயிருச்சே; இனிமே ஒரு அனிச்சம்பூவைக் கூட வுட்டு வைக்கக் கூடாது ஒலகத்துலே'ன்னு அதுக்கு சாவுப்பறை கொட்ட ஆரம்பிக்கறானாம்!"


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். [1116]


"நல்ல பவுர்ணமி ராவு. நிலா தக தகன்னு ஜொலிக்குது. மானம் பூரா, நட்சத்திரங்கல்லாம் மீனு மாரி மின்னுதாம். அதான் அதுக்கெல்லாம் விண்மீனுன்னு பேரு. இவங்க ரெண்டு பேரும் தனியா ஒக்காந்துகினு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ இந்த விண்மீனுங்கல்லாம் நிலா வெளிச்சத்துல இந்தப் பொண்ணொட மொகத்தைப் பாக்குதுங்களாம். நம்ம பக்கத்துல இருந்த நிலா எப்பிடிறா கீளே போச்சுன்னு தெகைச்சுப் போச்சுங்களாம். அப்பிடியே இங்கியும் அங்கியுமா அலையுதுங்களாம்....ஒண்ணும் புரியாம!"

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. [1117]

"அவ்ளோதான்! அதுங்க அலையறதைப் பார்த்ததும், இவனுக்கு ஒரே குஷியாயிடுது! ஒடனே ஒரு வெளக்கம்[விளக்கம்] கொடுக்க ஆரம்பிக்கறான்.


'மானத்துல இருக்கற நிலா தேஞ்சு, வளர்ந்து, தேஞ்சு, வளர்ந்து வருது. ஆனா, இவ மொகத்தைப் பாருங்க. எதுனாச்சும் குறை இருக்கோ? இல்லவே இல்லை!"


எப்பிடிப் போவுது பாரு கதை! இன்னும் இருக்கு அடுத்ததுல!"

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லவையேல்
காதலை வாழி மதி. [1118]

ஏ!நிலாவே! நீயுங்கூட என்னோட காதலி மாதிரி நல்ல வெளிச்சமா வந்தேன்னா, போனாப்போவுதுன்னு நீயும் நல்ல இருக்கேன்னு ஸொல்றென். ஒன்னையும் எனக்குப் பிடிக்கும் அப்போ!"

இவரு நிலாவோட டீல் போடறாரு இப்போ!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர் காணத் தோன்றல் மதி. [1119]


பக்கத்துல பொண்ணு இருக்கற தெகிரியம்! சும்மா பொளந்து கட்டறான் இன்னும்!

"ஏ! சந்திரனே! நீ என்னோட காதலி மாரி இருக்கணும்னா, ஒடனே நீ ஒண்ணு பண்ணனும். ஆர் கண்ணுக்கும் படக்கூடாது. எல்லாரும் பார்க்கற மாரி தெனம் உலா வரக் கூடாது! அப்பதான் நீயும் இவளும் ஒண்ணாவீங்க!"

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். [1120]


"கடைசிலியும் இந்த அனிச்சம்பூவை அவன் மறக்கலை!

இந்த அனிச்சம்பூவும், அன்னப்பட்சியோட மெல்லிசான இறகும், இவ நடந்து வர்ற பதையில இருந்து, இவ பாதத்துல பட்டுச்சின்னா, அப்பிடியே முள்ளு முள்ளா இருக்கற நெருஞ்சிப்பழம் குத்தின மாரி துடிச்சுப் பூடுவாளாம்! அவ்வளோ மெத்து மெத்துன்னு இருக்குமாம் அவ பாதம்!"

"இன்னாத்தை நா ஸொல்றது! கப்ஸா வுடறதுக்கும் ஒரு அளவு வோணாம்? புடிச்சிருக்கு சரி! அதுக்காவ, இன்னா மாரி ஸொல்றான் பாரு தன்னோட காதலியைப் பத்தி!
இப்பிடித்தான் நம்ம அன்வர் பயலும் ஆ, ஊ ன்னு பிலிம் காட்டறான்.
இதெல்லாம் வேலைக்கு ஆவற விசயமில்லை.
சட்டு புட்டுன்னு ரெண்டு பேரும் கொஞ்சம் தரையில எறங்கி வாங்க. வந்து அவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி கண்ணாலம் கட்டிக்கற வளியைப் [வழியை] பாருங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
நீதான் மன்னாரு எங்களுக்கு ஹெல்பு பண்னனும்னு தடார்னு ரெண்டு பேரும் கால்ல வுளுந்துட்டாங்க1
சரி, ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் ஏதும் தப்புத்தண்டா பண்ணாம ஒயுங்கா இருங்கன்னு ஸொல்லிட்டு வந்திருக்கேன்
இன்னா ஆனாலும் அன்வர் பையன் நமக்கு தோஸ்து ஆச்சே!
எப்பிடி வுட்டுர்றது ?
இன்னா நா சொல்றது?"
எனக் கேட்டு வாஞ்சையாகச் சிரித்தான் மயிலை மன்னார்.

"அதுதான் சரி! அப்பிடியே பண்ணுவோம்"னு சொல்லிவிட்டு நானும் விடை பெற்றேன் நண்பனிடமிருந்து..... இதைப் பதிய!

Read more...

Wednesday, May 09, 2007

மண்ணுநீதி!

"மண்ணுநீதி"!





கடல்நீரைக் குழிநிறுத்தி
அதில் சிக்கும் மீன் பிடிக்க
வலைவீசும் மனிதனே!- உன்

உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ

தளை களைந்து தலை நிமிர்ந்து
தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!

Read more...

Friday, May 04, 2007

"முடிவில் ஒரு தொடக்கம்!"

"முடிவில் ஒரு தொடக்கம்!"

பொதுவாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எதுவும் எழுதியதில்லை.

ஆனால், இந்தத் தொடர் என்னை மிகவும் பாதித்தது.

விஜய் தொலைக்காட்சியில், "படிகள்" என்னும் தொடரைப் பார்த்தேன்!

6 நிகழ்வுகளாக இது பிரிக்கப்பட்டு, வந்தது.

அதில் கடைசி நிகழ்ச்சியாக வந்தது, "முடிவில் ஒரு தொடக்கம்" !!

அதைப் பற்றிய ஒரு விமர்சனம் இது!

படியுங்கள்!

முடிந்தால் பாருங்கள்!



வாழ்வில், ஒரு கார்விபத்தில், தன் தவற்றினால் மனைவியையும், தன் உடலின் கீழ்ப்பாகத்தில் உணர்வையும் இழந்த ஒரு முதியவரின் தனிமைச் சோகம்!

யாரையும் அண்டவிடாமல், அருமை மகளையும் கோபித்து ஒதுக்கிவிட்டு பணிப்பெண்களின் உதவியால் காலம் தள்ளும் இவர் வாழ்க்கையில் ஒரு ஈழப் பெண் குறுக்கிடுகிறார், பணிப்பெண்ணாக.

எவரிடமும் எரிந்து விழுந்து, தன் ஆற்றாமையைக் கோபமாக வெளியிட்டு அனைவரையும் துரத்தி அடிக்கும் பெரியவரின் ஜம்பம் இந்தப் பெண்ணின் மீதும் பாய்கிறது.

ஆனால்,.... ஓ! இதென்ன அதிசயம்! இந்தப் பெண் அமைதியாக இவரது ஏசல்களையும், அவமரியாதையையும் சிரித்தபடி தாங்கிக் கொள்கிறாளே!

அது மட்டுமின்றி, அன்புடன், இனிய, தூய தமிழிலும் பேசி இவரை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள்.

இவள் பேசும் அந்தத் தமிழ்.... இன்று முழுதும் கேட்டுக் கோண்டிருக்கலாம்.

மூலையில் கிடந்த, மகளுக்காக ஆசையாய் வாங்கி, இப்போது உபயோகமின்றிக் கிடக்கும் மீன் தொட்டியை நடுவீட்டில் வைத்து, அதில் அழகிய தங்க மீன்களையும் விட்டு அழகு பார்க்கிறாள்!

வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கேட்டவருக்குக் கூடவே அதை வாங்கும் கோப்பையைக் கொண்டுவராததால், கோபத்தில் தரையில் துப்பிய உமிழ்நீரை சாந்தமாய்த் துடைக்கிறாள்.

10 ஆண்டுகளாகப் பார்க்க வராமல், இவர் கோபத்தைக் கண்டு பயந்து வாழும் மகள் குடும்பத்தைப் பெரியவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு அழைக்கிறாள்,... பெரியவர் கூப்பிட்டார் என ஒரு பொய் சொல்லி.!

வந்தவர்கள் அவமானப்பட்டுத் திரும்பும் போது, தன் தவறுதான் இது என வேண்டுகிறாள் அவர்களிடம்.

ஏன் இவர்களைக் கூப்பிட்டாய் எனப் பெரியவர் திட்டிவிட்டு, தன் கண்ணீர்க் கதையை இவளிடம் சொல்லும் போது, ஒரு சலனமுமில்லாமல் இவரைப் பார்க்கிறாள்.

"உனக்கென்ன தெரியும், நீ சின்னப் பெண்தானே! உனக்கு ஒன்றும் புரியாது" என பெரியவர் ஏளனமாய்ப் பேசும் போது, பொங்கி எழாமல், கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட, அமைதியாய், அன்பாய் வழ்ந்த தன் குடும்பம், இராணுவ வீரர்களின் கொடுமையால், தன் கண்ணெதிரே கொலையுண்டதை, மானபங்கப்படுத்தப் பட்ட அவலத்தைச் சொல்லி அழுகிறாள்....... "நானா சின்னப்பெண்? எனக்கா ஒன்றும் புரியாது? என ஒரு வார்த்தை கூடச் சொல்லாமலேயே!

தன் சோகத்தை விடப் பெரியதொரு சோகத்தைத் தாங்கி நிற்கும் இப்பெண்ணைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கும் பெரியவர் மனம் திருந்தி, ஒரு பாசத்துடன் இவளுக்கு ஒரு அன்பளிப்பு வழங்க முயல,
"ஓ! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஐயா! இதை உங்கள் மகளுக்குக் கொடுங்கள்" எனச் சொல்லி மறுக்கிறாள் இப்பெண்!

சொல்ல மறந்தேன்!
இவள் பெயர் ரேணுகா!

"நீங்கள் எனக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், என்னுடன் சற்று வெளியில் வந்து வெளியுலகத்தைப் பாருங்கள் ஐயா!" என ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க...
சரியெனச் சொன்னதும் தனக்கு ஏதோ ஒரு பெரிய பரிசே கிடைத்து விட்டது போல் ஒரு புன்முறுவல் பூக்கிறாளே... அது விலை மதிக்க முடியாத ஒரு காட்சி!

சீவி சிங்கரித்து, பவுடர் பூசி, புதுச்சட்டை மாட்டி, கறுப்புக் கண்ணாடி அணிவித்து, வெளியில் செல்லும் வேளையில், .....மனம் மாறி, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது!
வர மறுக்கிறார்.

சுய பச்சாதாபத்தினால், தன் சொந்தங்கள் யாவையும் இழந்து, ஒதுக்கி வாழும் அவலத்தை மீண்டும் இவர் சொல்ல,, "நீ ஒருத்தி மட்டும் ஏன் என்னை விட்டுப் போகாமல் இருக்கிறாய்?" என இவர் வினவ, அதற்கு அமைதியாய் அவரை ஏறெடுத்துப் பார்த்து,"நீங்கள் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள் ஐயா" எனச் சொல்லும் போது பெரியவர் மட்டுமல்ல.. நாமும் கலங்குகிறோம்.

மறுநாள்... ஞாயிற்றுக்கிழமை.. பெரியவர் மெதுவாகக் கேட்கிறார்.."இன்று வெளியில் கூட்டமாய் இருக்குமோ?' என!

ஏன் என ரேணுகா கேட்க, " வெளியில் போகலாமா? என ஒரு பச்சைக்குழந்தையைப் போல, இவளை எப்படியாவது மகிழ்விக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு பெரியவர் கேட்டவுடன்.....

அவ்வளவுதான்! இந்தப் பெண் காட்டும் முகபாவங்கள் இருக்கின்றனவே... அதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

அதை விடவும் சிறப்பான காட்சி அடுத்து வருவது!

எங்கே இந்தக் கிழம் மீண்டும் மனம் மாறிவிடுமோ என்ற அச்சத்தில், போட்ட பனியனோடு சக்கரவண்டியை நகர்த்தி வீட்டை விட்டு வெளீயில் அவசர அவசரமாகத் தள்ளிச் செல்கிறாள், மலர்ந்த சிரிப்புடன்!

நாமும் சிரிக்கிறோம்.

பெரியவரை ஒரு பார்க்குக்கு அழைத்துச் சென்று, குழந்தைகள் விளையாடும் இடத்தருகே கொண்டு சென்று, அவரை ரசிக்க விட்டுவிட்டு, இந்தப் பெண் தனியாக ஒரு பெஞ்சில் சென்ற அமர்கிறாள்.

இவர் ரசித்துச் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிக்கிறாள்.

மாகோவின் நடிப்பும், இந்தப் பெண்ணின் நடிப்பும் மறக்க முடியாத ஓர் அனுபவம்.
குறிப்பாக ரேணுகாவாக நடித்தவர்!

நவரசத்தையும் பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறார்!

கூடவே இனிய தமிழ் விருந்தும்!


நான் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தொடர் இது!

Read more...

Thursday, May 03, 2007

ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"
[ஜி.ரா. கேட்டது!]

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான

......பாடல்.......

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.

.....பொருள்......

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"

அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!


"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"

மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!

"கருதரு திண்புய சரவண"

எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!

"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"

அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!


"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."


பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!



"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"

கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!

கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!

காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!

மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!

மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்

இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி

"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"


சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்

இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!

அருஞ்சொற்பொருள்:

பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

Tuesday, April 24, 2007

"முன்னமொரு காலத்திலே!"


"முன்னமொரு காலத்திலே!"

அது ஒரு பெரிய காடு!

மணம் பொருந்திய காடு!

காட்டில் மரங்கள் உண்டு!

செடிகொடிகள் உண்டு!

சிங்கம், புலி, கரடி, ஓநாய், யானை, மான், எருது எனப் பல மிருகங்கள் உண்டு!

சிங்காரப் பறவைகளும் உண்டு!

அழகிய ஓடைகள் அங்குமிங்குமாய் குதித்தோடும்.

வவ்வால்கள் தலைகீழாய்த் தொங்கும் ஒரு சில மரக்கிளைகளில்!

அவ்வப்போது வேட்டைக்காரர்கள் வந்து சில தோட்டாக்களை வீசிச் செல்வார்கள்.

இத்தனையையும் தாண்டி, அங்கு இதமான காற்று வீசிக்கொண்டுதான் இருந்தது.

பறவைகள் காலையில் கீசுகீசுசென்று பேச்சரவம் பேசிக்கொண்டிருந்தன.

மிருகங்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

புலிகள் பசியெடுக்கும் போது, ஒரு மான் அல்லது எருமைக் கூட்டத்தைப் பார்க்கும்.

தனக்குத் தேவையான இரையைக் கவ்விக் கொல்லும்.

சிங்கம்... பெண்சிங்கம்... இரையைக் கொண்டுவர, ஆண்சிங்கங்கள் அதனை உண்டு பசியாறும்.

யானைகள் கூட்டங்கூட்டமாகச் சென்று இலை, தழைகளை உண்டு, ஓடையில் நீர் பருகிப் பசியாறும்.

மான்கள் மருண்டு பார்க்கும்.... எங்கேனும் வல்லிய மிருகங்கள் இருக்கின்றனவா என்று!

கண்டதும், வெருண்டு ஓடும்.

காடு நன்றாகவே இருந்தது!

ஒரு சில நரிகள் வந்தன காட்டுக்குள்!

இந்த அமைதியான காட்டைப் பார்த்ததும், மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது அவைகளுக்கு!

இந்த அமைதியைக் குலைத்து, அலங்கோலம் பண்ண எண்ணியன அவை!

யானையிடம் சென்று, புலியைப் பற்றி, .....சிங்கத்திடம் சென்று, காட்டெலியைப் பற்றி, .....கழுகிடம் சென்று, குருவியைப் பற்றி...... தப்புத் தப்பாக, ......இல்லாதது, பொல்லாதது எல்லாம் பேச ஆரம்பித்தன.

காட்டின் அமைதி குலைந்தது!

ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தன.

திடீர் திடீரெனத் தாக்குதல்கள் தொடங்க ஆரம்பித்தன.

எவர் எவரைத் தாக்குகிறார்கள் என எவருக்கும் தெரியவில்லை.

இதுவா, அதுவா எனத் தெரியாமல் எல்லா ஜீவராசிகளும் திகைத்தன.

ஓடைகள் வறண்டன.

மலர்கள் மலர மறந்தன.

வண்டுகளின் ஓட்டம் குறைந்தது.

காடு மணம் இழந்தது.

இது தீர என்ன வழி?

நரிகளை முதலில் துரத்துவோம் என சில மிருகங்களும், பறவைகளும் முடிவெடுத்தன.

நரிகளைப் பற்றிக் கவலைப் படாமல் அவரவர் வேலையை முன் போல் தொடரலாமே எனச் சில ஆலோசனை சொன்னன!

முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!

காடு மீண்டும் தன் மணத்தைப் பெறுமா?

காலம் பதில் சொல்லும்!



Read more...

Friday, April 20, 2007

"நண்பர் சதீஷின் அழகு!"

"நண்பர் சதீஷின் அழகு!"

என் அழைப்பை ஏற்று என் நண்பர் சதீஷ்[வி.க.] அழகு பதிவொன்று அழகாக இட்டிருக்கிறார்.

தமிழ்மணம் அவரை விலக்கி வைத்திருப்பதை நான் அறிவேன்.

ஆனாலும், இந்தப்பதிவு ஒரு உயரிய பதிவென்பதால் உரிமையுடன் இதனை என் பதிவில் இட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

தமிழ்மணம் இதனைத் தள்ளாது என நம்புகிறேன்!

நன்றி.


"எனது இனிய நண்பர் எஸ்கே(சங்கர் குமார்) என்னை அழகு பதிவு போட அழைத்து இருந்தார். எஸ்கே பழக ரொம்ப எளிமையானவர். இனிமையானவர். என்னுடன் தொடர்ந்து நல்ல முறையில் பழகி வருபவர். சமீபகாலமாக அவரை சாட்டில் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை! அவர் உடல் நலத்தோடு நூறாண்டுக்குமேல் வாழவேண்டும். "


http://karuppupaiyan.blogspot.com/2007/04/blog-post_17.html
--

Read more...

Tuesday, April 17, 2007

அ.அ. திருப்புகழ் -- 18 "அல்லில்"

[ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18 "அல்லில்"

அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை

கல்லினேர அ வழிதோறுங்
கையு நானுமு லையலாமோ

சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா

வல்லி மாரிரு புறமாக
வள்ளி யூருறை பெருமாளே.

வழக்கம் போல், பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய"

எம்போல யாருண்டு எமை வெல்ல எவருண்டு
தேவரும் எம்முன்னே திகைத்து நிற்பர் எனத்
தம் வீரம் தம் திறனைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்து நின்ற சூரர்படை அயர்வுறவும்,

"ஊர்கெட விடும் வேலா"

அப்படிச் சொல்லிய அந்த அவுணர்கள்
வாழ்ந்து வந்த ஊரே அழியும்படி
தன்னுடைய வீரவேலை அவர்பால்
செலுத்தி அவர்களை அழித்தவரே!


"வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே."


கஜவல்லி எனும் தெய்வானையும்
வனவல்லியெனும் வள்ளியம்மையும்
தன்னிருபக்கமும் தகைவாய்த் திகழ
வள்ளியூரென்னும் தலத்தில் திகழ்பவரே!


"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"


இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்

அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!

"கல்லினேர அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ?"


கல்லும் முள்ளும் நிறைந்த பாதை
அதுவே நமை இழுக்கும் மாயையின் பாதை
அவ்வழி செல்லுதல் எனக்குக் கூடாது
என் ஒழுக்கநிலையும் தவறலாமோ?

[என்னைக் காத்தருள்வது
நின்னருட் கடனே!]


அருஞ்சொற்பொருள்


அல்= இரவு

அ= அந்த

கை=ஒழுக்கம்

தொய்ய= அயர்வுற

வேலும் மயிலும் துணை!


முருகனருள் முன்னிற்கும்!


அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"--11

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 11

2007 பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது!

திருவெம்பாவை எழுதத் தொடங்கியபின் , மயிலை மன்னாரைப் போய்ப் பார்க்கவேயில்லை என்ற எண்ணம் திடீரென மனதில் தோன்றி உறுத்தியது.

அதற்குக் காரணமும் இருந்தது.[??]

எப்படிப் போய் அவனைப் பார்ப்பது என்ற அச்சம் இருந்தாலும், அவனைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்ற ஆவல் மிகவும் உந்தவே, அடுத்த நிமிடம் மயிலாப்பூர் மாடவீதியில் நின்றேன்!

சொல்லாமல், கொள்ளாமல் வந்தாலும் கொஞ்ச நேரம் குளத்தைச் சுற்றி வந்தால் எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

எங்கும் காணாமல் மனம் நொந்து, இன்னொரு தடவை சுற்றலாம் என நினைத்து, ஒரு 2 ரூபாய்க்கு சூடான வறுத்த வேர்க்கடலை வாங்கி, அதைக் கொறித்தவாறே நடந்தவனின் முதுகில் பளாரென ஒரு அடி விழுந்தது!

"இன்னாப்பா! ஆரைத் தேடிக்கினு இங்கே சுத்தறே? நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே? இன்னா வோணும்?" என்று நக்கலாகக் கேட்டபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!

"இல்லே மன்னார்! உன்னைப் பார்த்து நாளாகி விட்டதே என்றுதான் சுற்றிக் கொண்டிருந்தேன்" என்று அசடு வழிந்தேன் நான்!

"சரி! இன்னா சமாச்சாரம்? இப்ப எதுக்கு என்னியத் தேடிக்கிணு வந்தே? சொல்லு!" என்று அன்பாகக் கேட்டான் என் நண்பன்.

"திருக்குறள் அதிகாரம் எழுதி நாளாச்சு. காமத்துப் பாலில் இருந்து ஒரு அதிகாரம் நீ சொல்லி நான் எழுதணும்னு ஆசை! அதான்..." என்று தயக்கத்துடன் இழுத்தேன்!

"ப்பூ! இத்தானா! இதுக்கா இப்படி பம்மறே! மொதமொதலா காமத்துப்பால் எளுதப்போறேன்ற! அதுல இன்னால்லாமோ ஸொல்லிருக்காரு அய்யன்! பொண்ணு தனியா பொலம்புது, காதலன் தவிக்கறான்! ரெண்டு பேருக்கும் இன்னென்னமோ அட்வைஸ் கொடுக்கறாரு. ஸரி! நீ கேட்டுட்டே! ஒரு காதலன் காதலி ரெண்டு பேருமே ஸொல்ற மாரி ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. அத்தைச் சொல்றேன். எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்!


"புணர்ச்சி விதும்பல்னா, காதலின்பத்தைச் சொல்றதுன்னு அர்த்தம். மொதல்ல காதலி ஒரு 8 பாட்டு சொல்றா. பொறவால, காதலன் கடைசி 2 பாட்டு." என்றவாறு தொடங்கினான்.

இனி வருவது குறளும், அவன் விளக்கமும்!

"அதிகாரம் 129." "புணர்ச்சி விதும்பல்"

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு." [1281]

"இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்!... ஒனக்குக் கிடைக்குது. அத்தப் பாக்கற! வெள்ளையா இருக்கு. மூந்து பாக்கற! ஒரு கப்பு அடிக்குது! இத்தயா குடிக்கப்போறோம்னு நினைக்கறே! மூக்கைப் பிடிச்சுகிட்டு கப்பு கப்புன்னு அடிக்கறே! வவுத்தைப் பொறட்டுது மொதல்ல. கொஞ்சம் ஊறுகாயை எடுத்து நாக்குல தடவி, அந்த டேஸ்டை மாத்தறே! காவ் காவுன்னு ரெண்டு ஏப்பம் வுடறே! கொஞ்ச நேரம் களிச்சு , .... அப்பிடியே மெதக்குறே! ஒலகமே நல்லாத் தெரியுது ஒனக்கு! ரொம்ப சந்தோசமா இருக்கே!

ஆனா, இதெல்லாம் எப்ப வருது? எல்லாம் உள்ளே போனதுக்கு அப்புறமாத்தான்.
ஆனா, காதல்ங்கறது அப்பிடி இல்லை! ஆளை நெனைச்சவுடனேயே, ஒரு கிக் வருது! பார்த்தவுடனேயே ஒரு சந்தோஷம் வருது! இதான் காதலோட மகிமை! கள்ளை விட சிறந்தது காதல்!"


"தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்." [1282]


"எனக்கு அவரை நினைச்சாலே இம்மாம் அளவுக்கு காதல் பொங்குது மனசுல. ஒரு பனைமரம் அளவுக்கு உசருது என் உள்ளத்துல. இது இப்படியே இருக்கணும்னா, நான் துளிக்கூட அவரைப் பத்தி தப்பா நினைக்கக் கூடாது! 'அவரு என்னிய இன்னும் வந்து பாக்கலியே, நேத்துப் பார்த்த போது எங்கிட்ட ராங்கு பண்ணினாரே'ன்னு தோண ஆரம்பிச்சு அவரு மேல கோவம் வர ஆரம்பிச்சுதுன்னா, அவ்ளோதன், 'புஸ்'ஸுன்னு அல்லாம் எறங்கிடும்.அவரு பத்தின நல்ல நினைப்ப அப்பிடியே உசரமா வெச்சுக்கணும்!"

"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல் கண்." [1283]

"என்னைக் கட்டிக்கிட்டவரு[கொண்கன்] என்னை மதிக்காம, அவரு இன்னா நினைக்கறாரோ, அப்பிடியே அவர் மனசுபோல செஞ்சாலும், அவரைப் பார்க்காம இருக்க இந்தப் பாளும் பொம்பளை சென்மத்தால இருக்க முடியலியே!இந்தக் கண்ணு அவரையே தேடுது!"

"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு." [1284]


"அவர்கூட சண்டை போடணும்னுதான் மனசுல நினைச்சுகிட்டு அவரைப் பார்க்கப் போனேன். ஆனா, பாவிமவ, அவரைப் பார்த்தவொடனியே அல்லாம் மறந்து அவரைக் கட்டித் தளுவணும்னு மனசு கிடந்து துடிக்குது! சே இன்னா பொளைப்பு இது!"

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து." [1285]

"கண்ணுக்கு மை தீட்டலாம்னு ஒரு குச்சியை எடுத்து, மைதடவி, கண்ணு மேலே தீட்ட ஆரம்பிச்சேன். கண்ணாடி முன்னே நின்னு மை தடவும் போது,கண்ணு மேலியே என் கண்ணு நின்னுது. கோலை.. குச்சியைப்... பார்க்கவே இல்லை! அதே போல, அவரைத் திட்டணும்னு பலதை நினைச்சுகிட்டு இருந்தாலும், அவரு.. அதாங்க என்னைக் கொண்டவரு.. அவரைத்தான் "கொண்கன்"னு ஐயன் ஸொல்றாரு... எதிர்க்க வந்து நிக்கும் போது அவரைத் தவிர, வேற் எதுவும் நெனப்புல வரவே மாட்டேங்குது! குத்தம்ங்க்ற 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"

"காணுங்கால் காணேன் தவறாய் காணாக்கால்
காணேன் தவறல் லவை." [1286]

"அந்த மனுஷன் என்னெதிர்ல நிக்கறப்ப, அவரோட குத்தம் எதுவுமே மனசுல வர மாட்டேங்குது1 அவர் இல்லாதப்ப, அவரு பண்ணின தப்பில்லாத எதுவுமே நெனப்புக்கு வர மாட்டேங்குது! இது எப்படின்னு எனக்குப் புரியவே இல்லை!"

"உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து." [1287]

"இப்ப தொபுக்கடீர்னு போய் ஒரு ஓடற ஆத்துல குதிக்கறோம்! அது இன்னா பண்ணும்? நம்பளை அப்பிடியே இளுத்துகிணு போவும்! அது தெரிஞ்சும் அதுல குதிக்கிறோம்! அது போல, அவரோட சண்டை போட்டாக் கூட, அது நிலைக்காது, நான் அவரோட சமாதானமாயி கூடவே போயிடுவேன்னு தெரிஞ்சும், சண்டை போடற மாரி நடிக்கறேனே?"

"இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே உள்வநின் மார்பு." [1288]


மொதப் பாட்டுல.... குறள்ல... கள்ளைச் சொல்லி ஆரம்பிச்சாங்க இந்தத் தலைவி.... [கீதாம்மாவைச் சொல்லலை]!! இப்ப கடைசிப் பாட்டிலியும் அதே கள்ளை உதாரணம் ஸொல்லி முடிக்கறாங்க!
"ஏ கள்ளப்பயலே! கள்ளைக் குடிச்சா, அதால கெட்ட பேர்தான் வரும். இருந்தாலும் திரும்பவும் அதைக் குடிக்கணும்னு ஆசைதான் வருது. அதே போல, உன்கூட சேர்றது எனக்குக் கெட்டதுதான்னாலும், எம்மனசு கிடந்து உன்னோட மார்பைத் தளுவறதுக்கே திரும்பத் திரும்ப ஓடுது! இத்த் இன்னா பண்ணாத் தாவலை!"


இத்தைக் கேட்டுக்கினே நம்ம ஆளு வரான்! ஒரு ரெண்டு பாட்டு தலைவன் ஸொல்றான்!

"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்." [1289]

"காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது! என்னியப் போல அதை அனுபவிச்சவங்க இந்த ஒலகத்துல ரொம்பக் குறைஞ்ச பேர்தான் இருப்பாங்க!"

"கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னிலும் தான்விதுப் புற்று." [1290]

"என்னியப் பார்த்தவொடனே அவ கண் கலங்கித் தவிச்சா. ஆனா, அடுத்த நிமிசமே அத்தை மறந்திட்டு, என்னியவுட ரொம்ப வேகமா என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டா! அவளோட அன்புக்கு முன்னால என்னுதுல்லாம் ஒரு தூசுக்கு சமானம்!"

எல்லாம் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான் மன்னார்.

"என்ன ஆச்சு?' என வினவினேன்.

"இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு. ஒன்னியப் பார்த்த குஷில அத்த மறந்துட்டேன். இப்ப நான் போவணும். இல்லேன்னா அது சங்கடப்படும்" என்றான்.

"அதுவும் சரிதான். அண்ணியைக் கேட்டேன்னு சொல்லு." என்று சொல்லியபடி அன்புடன் விடை கொடுத்தேன் என் ஆசை நண்பனுக்கு.... டீ, மசால்வடை சாப்பிடாமலேயே!

மீண்டும் அடுத்த வாரம்!!

Read more...

Friday, April 13, 2007

அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!


அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!

அழகென்றால் குமரனே
அவனழைத்தான் என்னையே
அழைத்ததும் தெரிந்தது
அடுத்தவர் சொல்லித்தான்!

குமரன் அழைப்பு இப்படித்தான் வரும்
ஆரவாரமாக வருவதில்லை
அழைப்பதும் புரிவதில்லை
அறிந்துகொண்டால் அமைதி வரும்

அவனழைப்பை நாடி இங்கு
ஆவலுடன் எதிர்பார்த்து
அனுதினமும் காத்திருத்தல்
அதுவே முதலழகு!

நாம் பிறந்தது நம்மால் அல்ல!நம்மைப் பிறப்பித்தவர் வேறு எவரோ!அவர்கள் மகிழ்வுக்காக ஒரு சில ஆண்டுகள்! அவர்களே தெரிந்தெடுத்தோ, அல்லது நாமே தேர்ந்தெடுத்தோ நமக்கு ஒரு வாழ்வு அமைகிறது. இதுதான் நம் வாழ்வு! இது சிறப்பதும், சிறுப்பதும் இனி என் கையில்! இது சிறக்க என்னால் ஆன அத்தனையும் செய்வது....செய்தது... அடுத்த அழகு!

எனக்குத் தெரிந்தது இந்த ஒரு வாழ்வு மட்டுமே! இந்த உலகம் எனக்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. எனக்காக மட்டுமே!
இதை இப்போது அனுபவிக்கவில்லையென்றால் எப்போது அனுபவிப்பது!
மனதுக்குச் சரியென பட்ட அனைத்தையும், அடுத்தவருக்குக் கூடிய மட்டும் அதிகமாகத் தொந்தரவு கொடுக்காமல், நம்மால் இன்பம் இல்லாவிட்டாலும் துன்பம் வராதபடி பார்த்துக் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்!
பார்க்க முடிந்த மனதுக்கு இதமான அனைத்து இடங்களையும் பார்த்து விட வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படாமல்! கூட வர எவர் விருப்பப்பட்டாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு!
அதில் இருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!
அத்தனை உலகும் வண்ணக் களஞ்சியம்!"

இதுவே மூன்றாம் அழகு!
இதில் இருக்க எனக்கும் ஒரு துளி இடத்தை கொடுத்த சாயி ......!உனக்கு நன்றி!

கண் நிறைந்த மனையாள் அழகு!
கருத்தொருமித்த காதல் அழகு!
களங்கமில்லாக் குழந்தை அழகு!
கைகொடுக்கும் நண்பர் அழகு!
கபடமில்லா உறவழகு!
காலமெல்லாம் இதையளிக்கும்
கந்தனவன் மிக அழகு!
இதுவே என் நான்காம் அழகு!

"அத்தெல்லாம் சர்தாம்ப்பா! நம்மளை விட்டுட்டுட்டியே! கூடமாட எப்பவும் உங்கூட இருக்கறது நாந்தானே! ஒனக்கு எதுனாச்சும் ஒண்ணுன்னா ஒடனே வர்றது ஆரு? ஐயனைக் கூட்டிக்கிட்டு ஒனக்கு ஒதவி பண்றதுக்கு ஓடி வர்றதுக்கு என்னிய வுட்டா ஆரு இங்கே! ஒனக்கு இம்ம்புட்டு எளுதறதுக்கு ஒதவி பண்றது ஒலகத்துலியே மொத மொதலா வந்த தமிழ்தாங்கறத மறந்துறாத! நீயே என்கிட்ட எத்தினி வாட்டி சொல்லியிருக்கே! தமிழும், தமிழ்நாடும்தான் ஒனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு! அதனால கடசியா சொன்னாலும் இதான் ஒனக்கு ரொம்பவும் அழகானதுன்னு ஒன் சார்புல சொல்லிக்கறேன்"
என்கிறான் என் இனிய நண்பன் மயிலை மன்னார்!

ஷைலஜா, அன்புத்தோழி, மற்றும் என் இனிய நண்பர் ............சென்ற முறையே என்னைடம் உரிமையாக அன்புடன் கோபித்துக் கொண்ட...... சதீஷையும் அழைக்கிறேன் ... அழகு பற்றித் தொடர!

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP