Wednesday, January 28, 2009

"உந்தீ பற!” - 5

"உந்தீ பற!” - 5

பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”


[முந்தைய பதிவு]


எண்ணுரு யாவு மிறையுரு வாமென

வெண்ணி வழிபட லுந்தீபற

வீசனற் பூசனை யுந்தீபற. [5]


எண் உரு யாவும் இறை உரு ஆ[கு]ம் என


எண்ணி வழிபடல் உந்தீபற


ஈசன் நல் பூசனை உந்தீபற.


எவ்வகைத் தோற்றம் மனதில் எழினும்
அவ்வகை இறையென எண்ணிப் போற்றிக்


காணும் யாவினும் இறையுருக் கண்டு
வழிபடும் பூசனை அவற்றுள் கொண்டு


இறைவழிபாடு இவ்விதம் செய்து
ஈசன் அவரே என்றே உணர்ந்து


நாளும் நினைவுடன் பூசனை செய்யின்
ஈசன் மகிழ்வான் இதுவே திண்ணம்.


காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.


வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்

விழுப்பமா மானத முந்தீபற


விளம்புந் தியானமி துந்தீபற. [6]


வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்கு உள் செபத்தில்

விழுப்பம் ஆனதமும் உந்தீ பற

விளம்பும் தியானம் இது உந்தீ பற.



ஈசன் நாமம் உரக்கச் சொல்லி
அவனது புகழைப் பாடுவர் சிலரும்


உதடுகள் மட்டும் அசைந்திடும் வண்ணம்
திருப்பெயர்ச் சொல்லிச் செபமும் செய்வர்


இதனினும் உயர்ந்தது அடி நாக்கிடத்தில்
எதனும் அசையா திருநாமம் செபித்தல்


தியானம் என்னும் மேல்நிலைப் படிக்கு
இதுவே வழியாம் என்றே உணர்க.


‘வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்’ என ஒரு பாடல்வரி உண்டு.

அதைப் போல, சத்தம் போட்டு இறை புகழ் பாடிடுவார் சில பேர்.


உதடுகளை மட்டுமே அசைத்து, சத்தம் வராமல் சிலர் செபம் செய்வர்.


இதை விடவும் சிறந்தது, உள்நாக்கில் இதனை உருட்டி, எதையும் அசைக்காமல், செபம் செய்வது.


இதுவே மிகவும் உயர்ந்த நிலை என இப்பாடல் சொல்கிறது.

*************************
[தொடரும்]