Monday, December 14, 2009

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

சமீபத்தில், 'பிள்ளையார் கதை' என ஒரு இடுகையை ஆறு பதிவுகளாக இட்டிருந்தேன். கார்த்திகைக் கார்த்திகைத் தீபம் கழிந்த மறுநாள் தொடங்கி, இருபத்தோரு இழை கரத்தில் கட்டி, இருபது நாட்கள் இந்தக் கதையைப் படித்து, இருபத்தோராம் நாள் இந்த விநாயகர் சஷ்டி விரதத்தை முடிக்க வேண்டும் என்பது மரபு! இந்தக் கதை சுமார் 745 வரிகள் கொண்டது. அதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறேன். வருகிற 22-ம் தேதி, குறைந்த பட்சமாக, இதனையாவது படித்து அன்பர்கள் இன்புறுவார்களாக! நன்றி!

"கணபதி எல்லாம் தருவான்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"


ஐங்கரன் அருளைப் பாடுதல் இன்பம்

அவன் புகழ் தினமும் கேட்டலும் இன்பம்

பூமியில் மானுட ஜென்மமெடுத்த

உமையைத் திருமணம் சிவனார் புரிந்து



அழகுறு சிவனும் தளர்வுறா உமையும்

கரியுடல் கொண்டு கலந்தது இன்பம்

அதனில் பிறந்த கரிமுகன் தோற்றம்

கொம்பையுடைத்துக் கயமுகன் அழித்திட



அசுரனை மூடிக வாகனம் ஆக்கி

வல்லபை மணந்த கணபதி வணங்கி

ஆவணித் திங்கள் சதுர்த்தி நன்நாளில்

சதுர்த்தி விரதம் நோற்றல் இன்பம்



மகிழ்வுடன் ஆடிய குண்டுக் கணபதி

தோற்றம் கண்டு எள்ளிய மதியிலாத்

திங்களை வெகுண்டு சபித்தல் கண்டு

தேவரும் கார்த்திகை நோற்றதும் இன்பம்


கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்

இருபத்தோரிழை இன்புறக் கட்டி

ஒருவேளை உண்டி உண்டு ஒருமனத்துடனே

பிள்ளையார் கதையைப் படித்தலும் இன்பம்



தேவகி மைந்தன் உரைத்தது கேட்டு

பாண்டவர் நோற்று வென்றது இன்பம்

அறுமுகன் பிறப்பும் சூரன் முடிப்பும்

அழகு குஞ்சரியை திருமணம் கொண்டதும்



அமராவதியை நீங்கிடல் கேட்டு

அன்னை பார்வதி துயரமடைந்து

பொய்க்கரியுரைத்த மாலினைச் சபித்துப்

பைந்தள் பாம்பாய் கணபதி உறையும்



ஆலின் அடியில் உழன்றிடும் வேளை

கணபதி விரதம் நோற்றதால் மாலும்

தன்னுரு மீண்டதைப் படித்தலும் இன்பம்

சினந்த கவுரியைக் கபாடம் திறக்க



சிவனும் நோற்றுச் சிறந்ததும் இன்பம்

பார்வதி நோற்றுப் பாலனை மீண்டும்

தன்மடி சேர்த்து மகிழ்ந்தது இன்பம்

இலக்கண சுந்தரி இன்னல்படவே



அவளும் நோற்று மகிழ்ந்தது இன்பம்

இன்பம் இன்பம் இனியவன் திருக்கதை

தினமும் ஓதிடச் சேர்ந்திடும் இன்பம்

எல்லாம் தந்திடும் பிள்ளையார்கதை இன்பமே!

"கணபதி எல்லாம் தருவான்!"

1 comment:

  1. "கணபதி எல்லாம் தருவான்!"

    ReplyDelete