Monday, October 08, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 12

முந்தைய பதிவு இங்கே!



10.


"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்


அஃதறி கல்லா தவர்." [427]


"சிதம்பரத்து ராசாவின் ஆசீர்வாதம் இன்னமும் என்கிட்ட இருக்கா?" என எண்ணிக்கொண்டே பைக்குள் கை விட்டு ஒரு கல்லை எடுத்தான்.

'கருப்புக் கல்!' ஆமாம்!

'புதையல் எனக்குக் கிடைக்குமா?'

மீண்டும் கைகளை விட்டுத் துழாவினான்.

இரண்டு கற்களுமே அவன் கையில் அகப்பட்டு, வந்தன!

......'அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......

நான் தீர்மானம் இன்னமும் செய்யாமல், கல்லை நம்பியது தவறு என அவனுக்குப் பட்டது.

'புதையலைத் தேடிகிட்டுப் போகணுமா, வேண்டாமா, இல்லை ஊருக்குத் திரும்பணுமா?' இது நான் எடுக்க வேண்டிய முடிவு. சகுனங்களை இதில் நம்பக்கூடாது' எனஅவனுக்குத் தோன்றியது.

'பெரியவர் இன்னமும் தன் கூடவேதான் இருக்கிறார் என இந்தக் கற்கள் சொல்லியிருக்கின்றன. அதுவே பெரிய தெம்பு! இனிமே நாமதான் ஒரு முடிவு எடுக்கணும்' என மனதில் தீர்மானித்துக் கொண்டு கற்களை மீண்டும் பத்திரப் படுத்தினான்,பைக்குள்.

.......'பல இடத்துக்கும் போகப் பாரு.' வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்தது!

'அவர் சொன்ன மாரியே நான் இப்ப ஊரை விட்டு மதுரை வரைக்கும் வந்திட்டேன்.இப்ப எல்லாத்தியும் தொலைச்சிட்டாலும், என்னோட லட்சியம் இன்னமும் என்கூடத்தான் இருக்கு. அது இன்னும் தொலையலை.இனிமே, புதையலை அடையறதுதான் என் லட்சியம்.'

அப்படியே அந்த பெஞ்சில் படுத்து உறங்கிப் போனான் கந்தன்.
********

யாரோ அவனை உலுக்கிய வேகத்தில் விழித்தன் கந்தன்.

'எலே! வாங்கடே போலாம்!' பழக்க தோஷத்தில் அவன் வாய் முணுமுணுத்தது.

சுற்று முற்றும் பார்த்தான்.

ஆடுகளைக் காணவில்லை!

தான் இருப்பது மதுரை ஜங்ஷன் பெஞ்ச் என்பதை உணர்ந்தான்.

ஒரு நொடி துக்கமாயிருந்தது.

அடுத்த நொடியே சந்தோஷமாகவும் இருந்தது.

'அதுங்களுக்கு தீனி வைக்க வேணாம். தண்ணி காட்ட வேணாம்.எந்த ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லாம, புதையலை மட்டுமே தேடிகிட்டு நான் போவலாம்.கையில ஒரு பைசா இல்லை.
ஆனாக்க, நம்பிக்கை மட்டும் இருக்கு!'

எழுந்து வெளியே வந்தான்.

மாலை நேரம்.

ஜங்ஷனுக்கு வெளியே கடைகள் களை கட்ட ஆரம்பித்திருந்தன.



வரிசை வரிசையாக ஜவுளிக்கடைகளும், பலகாரக் கடைகளும், பலவிதமான பொருட்களை வைத்துப் பரப்பிய நடைபாதைக் கடைகளும், ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போவது போல குறுக்கும் நெடுக்குமாக நடந்த மனிதர்களும், வாகனங்களும், மணக்கும் மல்லிகைப் பூவுமாக ஒரே பரபரப்பாக இருந்தது.

முட்டத்துக்கும் மதுரைக்கும் இடையேதான் எவ்வளவு வேறுபாடுகள்!

பேச்சுவழக்கிலிருந்து, உடை வரை எல்லாமே மாறியிருந்தது.

இந்த 'லே' அவனை மிகவுமே குழப்பியது.

பேசுவதிலும் கூட ஒரு வேகம் அவனை பயமுறுத்தியது.

நடந்து செல்லும் போதே பலவற்றையும் கவனித்துக் கொண்டே வந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

இங்கே வந்தாச்சு.

இனிமே திரும்பப் போறதில்ல.

பெரியவர் சொன்ன சகுனம்னு எதுனாச்சும் இருந்தா, அது இங்கேதான், இந்த ஊர்லதான் எனக்குக் கிடைக்கப் போவுது.

பொறுமையா கவனிக்கணும் நான்.

ஏனோ அவனுக்கு தன் ஆடுகளின் ஞாபகம் வந்தது.

'மே' என்ற ஒரு வார்த்தையைத் தவிர அதுங்க ஒண்ணுமே பேசலைன்னாலும், தங்களோட தேவைகளை, ஆசைகளை, அன்பை,இன்னும் என்னவெல்லாமோ அவைகள் காட்டியது மனதில் பாரமாக அழுத்தியது.

அதையே நான் புரிஞ்சுகிட்டு அதுங்களைப் பார்த்துகிட்டேன்னா,இதெல்லாம் புரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமே இல்லை.

....."ஒனக்கு இருக்கற மாதிரியே இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.கூடவே துக்கம்,பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!".

பெரியவர் சொன்னது பலமாகக் கேட்டது!



"என்னங்க தம்பி, வண்டியை தவறவிட்டுட்டீங்களா?"

கேட்ட குரலாயிருக்கிறதே எனக் கந்தன் திரும்பினான்!

[தொடரும்]
***********

அடுத்த அத்தியாயம்

19 comments:

  1. //'மே' என்ற ஒரு வார்த்தையைத் தவிர அதுங்க ஒண்ணுமே பேசலைன்னாலும், தங்களோட தேவைகளை, ஆசைகளை, அன்பை,இன்னும் என்னவெல்லாமோ அவைகள் காட்டியது மனதில் பாரமாக அழுத்தியது.//

    இது 'மியாவ்'ன்னா எனக்கும் ரொம்பவே பொருந்தும்:-)

    ReplyDelete
  2. இந்த 'லே' அவனை மிகவுமே குழப்பியது.
    சினிமா, மதுரை பக்கம் போய் குத்தகை எடுத்த போது தான் இது எனக்கும் தெரிய வந்தது.

    ReplyDelete
  3. ஆஹா! முதல் கமெண்ட்டே உங்ககிட்டேர்ந்தா, து.கோ.!

    உங்க பூனைகள்தான் உலகப்புகழ் வாய்ந்ததாச்சே!

    எங்க வீட்டிலும் ஒரு நயாரும், 2 பூனையாரும் இருக்காங்க!

    அவங்க 3 பேரும் அடிக்கற லூட்டி!
    :))

    ReplyDelete
  4. சினிமா குத்தகை கூடவா!

    உங்க அனுபவங்கள் ரொம்ப சுவையா இருக்கும் போலிருக்கே, திரு.குமார்.

    ReplyDelete
  5. சரிதான். ஹோட்டல்காரர்தான் இப்போதைக்கு ஆபத்பாந்தவன் போல!

    அப்புறம் குமார் சொன்னதைச் சரியா படிங்க. கமா எல்லாம் போட்டு இருக்காரு இல்ல. சினிமா வந்து மதுரைப் பக்கம் குத்தகை எடுத்து அங்கயே எல்லாப் படமும் நடக்குற மாதிரி எடுக்க ஆரம்பிச்ச பின்னாடிதான் அவருக்கும் லே பற்றி தெரிய வந்தது. அப்பாடா...

    ReplyDelete
  6. ஓ! அது அப்படியா சங்கதி!

    நாந்தேன் தப்ப புரிஞ்சுகிகிட்டன்!

    நா ஒரு வெள்ளந்திங்க!
    :))

    ReplyDelete
  7. ....."ஒனக்கு இருக்கற மாதிரியே இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.


    திரும்பத் திரும்ப படிக்கத்தூண்டும் வரிகள்.மதுரைக்கே இந்தப்பாடு என்றால் சென்னை வந்தால் என்ன ஆகும்?

    ReplyDelete
  8. :) இது நீங்க இ.கொ. வுக்கு கொடுத்த பதிலுக்கு...

    ஹோட்டல்காராக தான் இருக்கும்.. கந்தனுக்கு உதவி புரிய.. நல்லது நடக்கட்டும்....

    ReplyDelete
  9. கந்தன் படிப்பது
    வாழ்க்கை அனுபவ பாடம்.

    எதாவது ஒரு விசயத்தில நாமும் கந்தனாவே தான் இருக்கிறோம்.

    ReplyDelete
  10. ஊருக்குள்ளப் போயாச்சா? ஜங்சன்ல இருந்து அப்படியே காலேஜ் ஹவுஸ் வழியா நேராப் போனா மீனாட்சியம்மன் கோயில் வரும். அங்க போக வேண்டியதுதானே.

    வண்டி கெடைக்கலையான்னு கேட்டா...அது தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கனும். மதுரை தெரிஞ்சவங்க மனுசங்கள்ள ரெண்டு பேருதான். ஒருத்தன் திருடன். அவன் வர மாட்டான். இன்னொருத்தரு ஓட்டலாரு. அவராத்தான் இருக்கனும்.

    ReplyDelete
  11. //எதாவது ஒரு விசயத்தில நாமும் கந்தனாவே தான் இருக்கிறோம்.//

    நம் எல்லாருள்ளும் ஒரு கந்தன் ஒளிந்திருக்கிறான், திரு. ம. சிவா.
    நன்றி.

    ReplyDelete
  12. //அது தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கனும்//

    அதான் இதுல பெரிய திருப்பங்கள் இருக்காதுன்னு முதல்லியே சொல்லிட்டேனே, ஜி.ரா.

    இப்படி ஓட்டறீங்களே!

    :)))))))

    சரியாகவே யூகிக்கிறீர்கள்!

    ReplyDelete
  13. Is this a translation of the alchemist??

    ReplyDelete
  14. Is this a translation ...??

    முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல, இது நான் படித்த புத்தகத்தின் தாக்கமே!

    முழுதுமான மொழிபெயர்ப்பல்ல!

    இந்தக் கதை நம்மூரில் நடந்தால் எப்படி இருக்கும் என்றஒரு கற்பனை எனச் சொல்லலாம்.

    மொழிபெயர்ப்பு என்பதை விட, தழுவல் எனச் சொல்லலாம்!

    நன்றி, அனானி!

    முடிவுரையில் இது பற்றி விவரமாகச் சொல்லவிருக்கிறேன்.

    ReplyDelete
  15. 'அதுங்களுக்கு தீனி வைக்க வேணாம். தண்ணி காட்ட வேணாம்.எந்த ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லாம, புதையலை மட்டுமே தேடிகிட்டு நான் போவலாம்.கையில ஒரு பைசா இல்லை.
    ஆனாக்க, நம்பிக்கை மட்டும் இருக்கு//
    பிக்கல் பிடுங்காமல் வந்துவிட்டதாகத் தான் நினைக்கிறான்.
    பார்க்கலாம். புதையல் மெய்ஞ்ஞானமா,
    இல்லை பொருள் ஞானமானு படிக்கப் படிக்கத்தான் தெரியும்.:))

    ReplyDelete
  16. //புதையல் மெய்ஞ்ஞானமா,
    இல்லை பொருள் ஞானமானு படிக்கப் படிக்கத்தான் தெரியும்.:))//

    சரியாச் சொன்னீங்க அம்மா!

    அடுத்து 3 பதிவு வந்தாச்சு!

    அதையும் படிச்சு சொல்லுங்க!
    நன்றி.

    ReplyDelete
  17. தன் பொருள், சொந்தம் தன்னை விட்டுப் போகும் போது, அதனால் வரும் துன்பங்கள் தனக்கு வாராது என்பதையே கந்தனின் எண்ணங்கள் காட்டுகின்றன. கதைகளில் அவ்வப்போது சில கதாபாத்திரங்கள் தலை நீட்டி விட்டு, கடமையைச் செய்து விட்டு காணாமற் போய் விடுகின்றன. கதைகளில் இவை தவிர்க்க இயலாது. வாழ்க்கையிலும் கூடத்தான்

    ReplyDelete
  18. //கதைகளில் அவ்வப்போது சில கதாபாத்திரங்கள் தலை நீட்டி விட்டு, கடமையைச் செய்து விட்டு காணாமற் போய் விடுகின்றன//

    இதை விரிவான நாவலாக எழுத எண்ணவில்லை நான்.
    கொத்ஸ் சொன்ன மாதிரி, இது ஒரு மெகா சீரியலாக எழுதவும் நினைக்கவில்லை.
    அதனால்தான் இப்படி!
    :)

    ReplyDelete
  19. Alchemist ??
    GoodWork Sir!!

    ReplyDelete