Saturday, October 06, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

முந்தைய பதிவு இங்கே!

9. "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். [463]



அவசர அவசரமாக கந்தனைத் தள்ளிக் கொண்டே, அந்த இளைஞன், 'அவரு உன் பணத்தைப் புடுங்கப் பாக்கறாரு. நீ வா சீக்கிரமா!'
என்றபடி வீதிக்கு வந்தான்.

'அப்படியா? ரொம்ப நன்றிங்க! அவரைப் பாத்தா அப்படித் தெரியலியே! நல்லவர் மாதிரில்லே இருந்திச்சு' என்றான் கந்தன்,
தன் பணம் பிழைத்ததே என்ற நிம்மதியுடன்!

"இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி! இப்ப நா மட்டும் இருந்ததால நீ தப்பிச்சே. சரி, சரி வா!
போயி டிக்கட்டு எடுத்துருவோம் சென்னைக்கு. ரிசர்வு பண்ணினாத்தான் வண்டில ஏற முடியும்." என்றபடி ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கந்தனும் கூடவே நடந்தான்.

ரிசர்வேஷன் கவுண்டரை அடைந்ததும், 'நீ இங்கியே லைன்ல நில்லு. இதோ வாறேன்' என்று கந்தனை விட்டு அகன்றவன், சற்று நேரத்தில்,
அவசர அவசரமாக ஓடி வந்தான்.

'ஒன் நல்ல நேரம்; எனக்குத் தெரிஞ்சவர்தான் உள்ளே இருக்காரு. டிக்கெட்டுல்லாம் இன்னிக்கு ஃபுல்லாம். ஸ்பெசல் கோட்டாவுல
ஒரு ரெண்டு டிக்கட்டு இருக்காம்.
காசை எடு. நா போயி வாங்கியாறன்' என்றான்.

'எவ்ளோ வேணும்?' எனப் பையைத் திறக்க ஆரம்பித்தான் கந்தன்.

'எவ்ளோன்னு தெரியல. நீ லைன்ல நிக்க வேணாம். அதோ அந்த பெஞ்சுல போயி ஒக்காரு. நா டிக்கட்டை வாங்கிகிட்டு இதோ வந்திடறேன். ம்ம்.. சீக்கிரமா எடு!'
என அவன் பணப்பையை வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் ஒரு கதவைத் திறந்து கொண்டு ஓடினான்.

'எவ்வளவு நல்லவனா இருக்கான் இவன்!' என எண்ணியபடியே, கந்தன் பெஞ்சில் சென்று உட்கார்ந்தான்.

சற்று நேரம் ஆயிற்று.

'ஏன் இவ்ளோ நேரமாவுது டிக்கட் வாங்கியாற?' என நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.

இளைஞனை எங்கும் காணவில்லை.

எழுந்து அந்த இளைஞன் சென்ற கதவு வழியே சென்று பார்த்தான்.

ம்ஹூம்! அங்கும் அவன் இல்லை!

மனதில் ஒரு தவிப்பு வரத் துவங்கியது.

'அப்படியெல்லம் ஒன்றும் இருக்காது! பணத்தை எடுத்துகிட்டு ஒண்ணும் ஓடியிருக்க மாட்டான். போன எடத்துல என்ன சோலியோ?
இன்னும் கொஞ்ச நேரம் பாப்பம்' என எண்ணிக் கொண்டே மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்தான்.

ஆனால், மனதில் தோன்றிய அவநம்பிக்கை அவனை விட்டு அகலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகியது.

நண்பகல் ஆனது.

கந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனத் தெளிவாகப் புரிந்தது!

அழுகை அழுகையாய் வந்தது.

'நேத்து வரைக்கும் நானுண்டு என் ஆடுங்க உண்டுன்னு இருந்தேன். ஊருலியும் தாயில்லாப் புள்ளையாச்சேன்னு என்கிட்ட அன்பா இருந்தாங்க.
செல்லி கூட அடிக்கடி வந்து பேசும். நானும் சந்தோசமா இருந்தேன். இப்பம், இந்த ஆண்டவன் என்னிய ஏமாத்திட்டாரு!
என் ஆடுங்களையும் என்கிட்டேருந்து புடுங்கிட்டு,இப்பம் பணத்தையும் பறி கொடுத்திட்டு, வெவரம் புரியாத ஊருல அநாதையா நிக்க வெச்சிட்டாரு!
இனிமே என்னால ஆரையும் நம்ப முடியாது! புதையலும் கிடைக்கப் போறதில்ல! இப்ப என்ன பண்றது?' என வருந்தினான்.

சாமி மேலயும், அந்தப் பெரியவர் மேலயும் கோவம் கோவமா வந்தது.

கையில வேற எதுனாச்சும் இருக்கான்னு, தன் துணிப்பையைத் திறந்து பார்த்தான்.ஒரு நாலு முழ வேட்டி, ஒரு துண்டு, மகாபாரதப் புத்தகம்,
கூடவே அந்தக் கிழவர் கொடுத்த அந்த இரண்டு கற்கள்!

இனம் புரியாத நிம்மதி பிறந்தது கந்தனுக்குள்.

3 ஆடுகள் கொடுத்து வாங்கிய அந்த கற்களை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்தான்.

தங்க வில்வமாலை அணிந்த அந்தப் பெரியவரைத் தொடுவது போல ஒரு உணர்வு!

இதை விற்று ஊருக்குத் திரும்பி விடலாம் என நினைத்தான்.

தன்னை ஏமாற்றிய இளைஞன் சொன்ன ஒரு உண்மை மட்டும் நினைவுக்கு வந்தது.

....."இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி!".....

கூடவே சிரிப்பும் வந்தது.

கற்களை பத்திரமாக ஒரு துண்டில் சுற்றி வைத்தான்.

ஓட்டல்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

இப்போதுதான் அவர் சொன்னதின் பொருளும் உறைத்தது.

தன்னை எச்சரிக்கவே அவர் அப்படிச் சொன்னார்; நான்தான் அவரை நம்பாமல் அந்த இளைஞன் பின்னால போயிட்டேன்.

நானும் எல்லாரையும் போலத்தான்.

இந்த உலகத்தை நான் நினைக்கற மாதிரியே பாக்கறேன். அது எப்படி இருக்குன்றதை கவனிக்காமலியே!

அவன் கைவிரல்கள் அந்தக் கற்களை வருடின.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,...
தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

......."கருப்பு, 'சரி' ....வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ,
அப்போ,இந்தக் கல்லுங்க உதவும். கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......


பெரியவரின் சொற்கள் மீண்டும் ஒலித்தன.

இந்தக் கற்கள் அவர் சொன்னது போலவே செய்யுமா?

சோதனை செய்து பார்த்து விடலாம் என முடிவெடுத்தான்.

[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

24 comments:

  1. கந்தன் மாதிரியே நானும் ஒரு தடவை சென்னை சென்ரலில் ஏமாந்தேன் .. திருப்பதி பெயரால்.
    பார்ப்போம் "கல்" எப்படி உதவுகிறது என்று.

    ReplyDelete
  2. அதாவது கந்தன் முதலில் இருந்து ஆரம்பிக்கப் போகிறான்!! சபாஷ்!

    ReplyDelete
  3. அடடா! உங்களுக்கும் கந்தனின் அனுபவம் இருக்கா, திரு.குமார்!

    எனக்கும் உண்டு!
    :))

    அந்த மனநிலை வர்ணிக்க முடியாத ஒன்று.

    ReplyDelete
  4. நிச்சலனமான மனசுங்க உங்களுக்கு, கொத்ஸ்!

    :))

    ReplyDelete
  5. படிஞ்சாச்சு, அனானியாரே!

    ReplyDelete
  6. //இந்த உலகத்தை நான் நினைக்கற மாதிரியே பாக்கறேன். அது எப்படி இருக்குன்றதை கவனிக்காமலியே!
    //
    இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தன!

    காணுகின்ற காட்சியாகவும், காணுவதெல்லாம் காட்டுவதாகவும் மாதா பராசக்தி இருப்பாள் என்ற பாரதியின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன!

    ReplyDelete
  7. ஆமாங்க ஜீவா!

    நாம நினைக்கறது ஒண்ணு. ஆன, நாம பார்க்கறது ஒண்ணாத்தான் எல்லாமே அனேகமா இருக்கு!

    பாரத் வரிகளுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கந்தனுக்கு கல்லா!

    நான் ரொம்ப குழப்பமான சூழ்நிலையிலையிலே காயின்தான் போட்டுப் பார்ப்பேன்!

    அதுல எது வருதோ அந்த முடிவுப் படி ஸ்ட்ராக்கா போவேன்!

    :)

    ReplyDelete
  9. ஒவ்வொருவர்க்கும் இது போல ஏதோ ஒண்ணு... கல்லோ, காயினோ...சோழியோ!

    வாங்க சிபியாரே!

    ReplyDelete
  10. சூப்பர். நல்லா மூவாவுது.

    ReplyDelete
  11. நன்றி, சர்வேசன்!

    ReplyDelete
  12. கொடுத்த வரத்தை பாபா சோதிப்பது போலவா...

    இந்த கற்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்துலாம் தானே?

    ReplyDelete
  13. காசு எல்லாம் குடுத்துத் தொலைச்சிட்டானா....சரி...மாமல்லபுரம் போய்ச் சேந்தப்புலதான். அந்த ரெண்டு கல்லு இருக்குதே...அதப் பயன்படுத்தப் போறானாக்கும். படுத்தட்டும் படுத்தட்டும்.

    ReplyDelete
  14. பாவம் பையன், ஏமாந்துட்டான். பார்க்கலாம் அந்த கல் அவனுக்கு எப்படி உதவுகிறது. நல்ல சகுணமாகவே இருக்கட்டும்.

    ReplyDelete
  15. இன்னைக்குத்தான் மொத்தமா இந்த 11 பாகத்தையும் படிச்சேன்.

    பிள்ளையார் படம் அற்புதம். அப்புறம் ஆடு, சந்தைன்னு பொருத்தமா வந்துக்கிட்டு இருந்த படங்களைக் காணோமே(-:

    அதுக்கு அர்த்தம்...........'படம் பார்த்தது போதும். கதையைக் கவனி'என்பதா?

    நல்லாப் போய்க்கிட்டு இருக்குங்க கதை!

    ReplyDelete
  16. //இந்த கற்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்துலாம் தானே?//

    இவை வெறும் கற்கள்தான், புலியாரே!

    ReplyDelete
  17. //படுத்தட்டும் படுத்தட்டும்.//

    வாழ்த்தறீங்களா, திட்றீங்களா ஜி.ரா. !
    :))

    ReplyDelete
  18. உங்க வாழ்த்துகள் பலிக்கட்டும், அன்புத்தோழி!

    ReplyDelete
  19. பெரியவர், மதுரை ஜங்ஷன் எனத் தேடிப் பார்த்துத்தான் போட்டேன், து.கோ.!

    இதில் அதிகம் தேட எனக்குத் தெரியவில்லை!

    கதை நல்லா போகுதுன்றீங்களே, அதுவே போதும்!

    மகிழ்ச்சியா இருக்கு!

    ReplyDelete
  20. //
    சாமி மேலயும், அந்தப் பெரியவர் மேலயும் கோவம் கோவமா வந்தது.
    //
    சோதனை ஏற்ப்படும்போது இது போன்ற மனநிலை தான் ஏற்படும்

    ரொம்ப சுவாரசியமா போயிட்டிருக்கு

    ReplyDelete
  21. //ரொம்ப சுவாரசியமா போயிட்டிருக்கு//

    தொடர்ந்து படித்து எழுதுவதற்கு நன்றி.திரு. ம. சிவா.

    ReplyDelete
  22. இளைஞன் ஏமாற்றுவான் என எதிர் பார்த்தது தான். தற்போது கற்கள் - எத்திசையில் செல்லப் போகிறான் ? பார்ப்போம்.

    ReplyDelete
  23. //இளைஞன் ஏமாற்றுவான் என எதிர் பார்த்தது தான். தற்போது கற்கள் - எத்திசையில் செல்லப் போகிறான் ? பார்ப்போம்.//

    செல்லும் திசை விரைவிலேயே தெரிய வரும்!
    :))

    ReplyDelete