Wednesday, June 07, 2006

வேறொன்றும் நானறியேன் பராபரமே!

வேறொன்றும் நானறியேன் பராபரமே!


பதிவொன்று போட்டிங்கு பல நாளும் ஆயாச்சு!
எதுவென்று தெரியாமல் எந்நாளும் நெனைச்சாச்சு!
இதுவா அதுவெனவே பலகாலம் யோசிச்சு
பொதுவாக ஒரு பதிவு போடவென முடிவாச்சு!

அரசியலைப் பேசயிங்கு அதிகம்பேர் இருக்கின்றார்!
சமையலைப் பற்றியோ தினமிங்கு பதிவுண்டு!
உள்குத்து வெளிக்குத்து ஓராயிரம் பதிவுண்டு!
தெள்ளுதமிழ் விளக்கம் சொல்ல குமரனும் இங்குண்டு!

கூடவே அவர் துணையாய் ஜிராவும் தினமுண்டு!
தன்வழியே போகின்ற வெட்டியானின் ஞானமுண்டு!
சுகமாகக் கவிதை சொல்ல சுகாவுடன் பலருண்டு!
பல்சுவையில் பரிமாற சுரேஷின் பதிவுமுண்டு!

யார் எங்கு போனால் எமெக்கென்னவென்றே
ஊர் ஊராய்ச் சென்றிங்கு அனவரையும் கலாய்க்கவென்றே
அனுமனின் பேர்சொல்லும் அழகான நாமக்கல்லின்
சிபியாரின் துணையின்றி தமிழிங்கே மணப்பதேது!

ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்
நானிங்கு நிற்கின்றேன் எனச் சொல்லி சதிரடிக்கும்
பொன்னான தமிழ்மகளாம் பொன்ஸாரின் தமிழ்மணக்க
நம்மையெல்லாம் நகைச்சுவையில் நிரப்பிடும் பதிவுமுண்டு!

இன்னுமிங்கு பலருண்டு, எடுத்தியம்ப நேரமில்லை!
பண்ணுகின்ற பணியதனை பாட ஒரு வாயுமில்லை!
என்னயிங்கு எழுதுவது என்றெண்ணிப் பார்க்கையிலே
ஒண்ணுமிங்கு தோணவில்லையென குசும்பாரும் சொல்லிவிட்டார்!

ஆகையினால் நண்பர்களே! நானிங்கு முடிவு செய்தேன்!
வாகாக ஒரு கருத்து என்மனதில் தோணும்வரை
சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
வேறொன்றும் நானறியேன் பராபரமே!

16 comments:

  1. //சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
    வேறொன்றும் நானறியேன் பராபரமே!//

    வாங்கய்யா வாங்க. உங்களை மாதிரி ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். எடுத்துக்கிட்ட வேலையில் நம்மள மறந்துராதீங்க. :)

    ReplyDelete
  2. //யார் எங்கு போனால் எமெக்கென்னவென்றே
    ஊர் ஊராய்ச் சென்றிங்கு அனவரையும் கலாய்க்கவென்றே
    அனுமனின் பேர்சொல்லும் அழகான நாமக்கல்லின்
    சிபியாரின் துணையின்றி தமிழிங்கே மணப்பதேது!
    //

    தன்யனானேன் எஸ்.கே!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. தமிழ் துள்ளி விளையாடுது உங்கள் நாவில்.சரஸ்வதியே உங்கள் நாவில் அமர்ந்து கவிதை எழுதுவாள் போல.உங்களுக்கா தலைப்பு கிடைக்காது?ஆன்மிகத்தை எழுதினால் அதற்கு முடிவேதும் உண்டா?புராணம்,வேதம்,பாரதம்,ராமாயணம் ஆகியவற்றில் எங்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத தகவல்களை எழுதுங்கள்.

    உதாரணத்துக்கு கர்ணன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றி பயங்கர அடிதடியே எங்கள் முத்தமிழ் குழுவில் நடந்துகொண்டிருக்கிறது.நீங்கள் உங்கள் கருத்தை ஒரு பதிவாய் இடலாம். முத்தமிழ் குழுவிலும் இடலாம்.

    http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/b627eb2598894f8b/55c21a3b258488a5?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&rnum=2#55c21a3b258488a5

    ReplyDelete
  4. பத்தோடு பதினொன்றாய் பதிவாளர் வந்துபோக,
    இத்தோடு இதுவொன்றாய் நினைக்கும் முன்னே - பொருள்
    சத்தோடு கவிகவிதை வித்தகராய் வந்து, நல்
    முத்தோடு கோர்த்த தமிழ்மாலை படைப்பவரே !

    அரசியலும் வேண்டாம், ஆசிரமம் வேண்டாம்
    அடுத்தவர் புண்படும் மதவாதம் வேண்டாம்
    துடுக்கு பேசி மடக்குபதிவில் பின்னூட்டம் வேண்டாம்
    அன்னையவள் ஆக்கிதந்த அருந்தமிழே போதும்!

    போற்றுவர் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டம் தமிழ் மொழிக்கே. ஆகையால்
    சேற்றில் நட்டாலும் செந்தமிழ் செழிக்குமென
    கூற்றுகளை மாற்றி போற்றவைக்க முயலலாமே !

    ReplyDelete
  5. ஸ்.கே. பின்னுட்டம் இடுவது என்ன அவ்வளவு சுலபான வேலையா?சொந்த வலைப்பதிவு என்பது சொந்த வேடு போல எல்லோரும்வருவார்கள். பின்னுட்டம் இடுவது வாடகை வீட்டில் இருப்பதுபோல. நாம்தான் வீடு வீடாகப்போகவேண்டும்.தி ரா. ச

    ReplyDelete
  6. உங்களையெல்லாம் மறப்பேனா, 'கொத்ஸ்'!
    கண்டிப்பா வருவேன்!

    ReplyDelete
  7. உண்மையாகவே சொன்ன வர்த்தைங்க, சிபி!

    ரொம்பவே ஜில்லுன்னு புகழ்ந்திட்டீங்க, செல்வன்!

    கர்ணனைப் பத்தி கொஞ்ச தகவல்கள் இருக்கு.
    கண்டிப்பா வர்றேன் நீங்க சொன்ன இடத்துக்கு!

    ReplyDelete
  8. நன்றாக உரைத்திட்டீர் நண்பர் கோவியாரே!
    பண்போடு புகழுரைத்தீர், மட்டற்ற நன்றி!
    தமிழை மறந்திங்கு சென்றிடவும் எண்ணமில்லை!
    மகிழ்வோடு நம் பணியும் நடத்திடவும் நாட்டமுண்டு!

    நன்றி!

    ReplyDelete
  9. குசும்பாரின் பதிவைப் பார்த்ததும் மனதில் எழுந்த எண்ண ஓட்டங்களைக் கவிதையில் வடித்தேன்!

    "இரண்டிலும்" சுவையுண்டு!

    உங்கள் கை இப்போது பரவாயில்லையா?

    மணிவிழா முடித்த களைப்பில் இருப்பீர்கள்!

    என் நன்றி கலந்த வணக்கங்கள், தி.ரா.ச. அவர்களே!

    ReplyDelete
  10. //ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்
    நானிங்கு நிற்கின்றேன் எனச் சொல்லி சதிரடிக்கும்
    பொன்னான தமிழ்மகளாம் பொன்ஸாரின் தமிழ்மணக்க
    நம்மையெல்லாம் நகைச்சுவையில் நிரப்பிடும் பதிவுமுண்டு!//
    மொத்தத்துல காமெடி ட்ராக்னு சொல்றீங்க..
    சரி சரி.. இதுல "ஆண் இங்கு அரசோச்சும்" என்பது தப்பு.. துளசி அக்கா மாதிரி தினம் ஒரு பதிவு போட்டு சுவையான பின்னூட்டங்களும் வாங்க ஒருத்தர் இனிமே பிறந்து தான் வரணும்.
    என்ன பண்ண எஸ்கே.. எங்கே போனாலும் தப்பு தான் கண்ணுக்குத் தெரியுது..:))) அதை எழுதாம விட்டீங்களே.. அந்த வரை மகிழ்ச்சி :)

    ReplyDelete
  11. உங்க ப்ராப்ளமே இதுதாங்க!
    நீங்களா ஒண்ணைத் தப்புன்னு முடிவு பண்ணிட்டு அதப்பத்தி எழுதிடறீங்க!

    ஆனா, அது தப்பா இல்லியா அப்படின்னு முடிவு பண்றது நீங்க இல்லை!

    'ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்'
    இதுல நீங்க புரிஞ்சுக்கிட்டது, நான் பெண்களை மட்டம் தட்டறேன்னு!

    ஆனா, நான் சொல்ல வந்தது என்னன்னா,
    'காசி' என்கிற 'ஆண்' தமிழ் மணத்தை நடத்துகிறார் என்பது மட்டுமே!

    வழக்கம் போல, நீங்க, தப்புண்ணு முடிவு பண்ணி ஒரு பின்னூட்டமும் போட்டுட்டீங்க!
    நானும் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு!

    ReplyDelete
  12. SK,
    //சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
    வேறொன்றும் நானறியேன் பராபரமே //

    சூப்பர்..

    அதே.. அதே..

    ReplyDelete
  13. ஓகே எஸ்கே, யூ வின்.. தப்பா புரிஞ்சிகிட்டது தப்புதான்.. :)

    FYI: மதின்னு ஒரு பொண்ணும் இருக்காங்க தமிழ்மணம் நிர்வாகிகள் குழுவில...

    ReplyDelete
  14. தொடர்ந்து படித்துப் பாராட்டுவதற்கு மிக்க நன்றி, சிவபாலன்!

    தகவலுக்கு நன்றி, பொன்ஸ்!

    இருந்தாலும், காசி தானே தலைவர் மாதிரி?

    இப்ப தமிழக அமைச்சரவைல கூடத்தான் பெண் அமைச்சர்கள் இருக்காங்க!


    ஹி, ஹி!

    ReplyDelete
  15. எஸ்.கே, பொன்ஸ் பதிவில் உங்களுக்கு வரும் பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் லிஸ்டாவதில்லை என்று கேட்டு இருந்தீர்களே, அதற்கு கமெண்ட் மாடரேஷனில், பின்னுட்டத்தை பப்ளிஷ் என்று கிளிக் செய்ததும், உங்க பதிவிற்கு திரும்பப் போய் refresh செய்யுங்க, உடனே தமிழ் மணத்தில் வந்துவிடும்.

    ReplyDelete
  16. முகம் காணா மனிதர்களாயினும்
    மனமுவந்து பரிந்து வரும்
    இணைய நண்பர்களின் நட்புக்கு
    என் மனமார்ந்த நன்றி!

    Many thanks, Ms. RU!

    ReplyDelete