Monday, October 10, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- 30:

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 30
29.

'இப்பிடி ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குதேன்னு பொலம்பினதும் லேசாக் கோவம் வருது அருணகிரியாருக்கு' எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

'எதுக்குக் கோபம் வரணும்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன் மன்னார்' என்றேன் நான்.

'சொல்றேன், சொல்றேன்! அதுக்கு முன்னே நீ பாட்டைப் படி' என்றான்.

29.
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ
பொல்லே னறியா மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே


இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

ம், ... இப்ப சொல்லு. ஏன் கோபம் வருது அருணையாருக்கு? என்றேன் ஆவலுடன்!

"நீயே நெனைச்சுப் பாரு. ஒரு நல்ல அனுபவத்தைக் காமிச்சாரு கந்தன். இப்பபாட்டைப் பத்திச் சொல்லலாம்னா, சுத்தமா ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குது. இதுக்கு இன்னா காரணம்னு யோசிக்கறாரு. நெனைப்பு, மறப்பு, நல்லது, கெட்டது, மெய்யி, பொய்யின்னு பலானாது பலானதுல்லாம் ஒரு நாடகம் போல நெறைஞ்சு கெடக்கற இந்த வாள்[-ழ்]க்கையுல சிக்கிக்கிட்டு க்கீறதாலதானே, இப்பிடியில்லாம் எனக்கு நடக்குதுன்னு புரியுது அவுருக்கு!

இத்தப் பண்ணினது ஆருன்னா ... தோ.... மாருல மாலையைப் போட்டுக்கினு சிரிச்சுக்கினு க்கீறானே.... இந்த முருகந்தான்னு தெரிய வருது!

பண்றதெல்லாம் பண்ணிட்டு, கள்ளமா சிரிக்கறான் பாருன்னு ஒரு கோவம் வருது! அதே கோவத்துல இந்தப் பாட்டு வருது!' என்றான் மன்னார்.

'இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே'

இந்த 'இல்'லுன்ற வார்த்தையை ரெண்டு விதமாப் பாக்கலாம்.

இல்லை'ன்ற பொய்யான வாள்[ழ்]க்கைன்னு சொல்லலாம். இப்பிடி ஒரு மாயையுல என்னிய தூக்கிக் கடாசிட்டியே முருகா! சரி, பண்ணினதுதான் பண்ணினே, அதியும் நீதானே செஞ்சே...... அப்ப, நான் பண்ற அயு[ழு]ம்புக்குல்லாம் நீதானே காரணம்! பின்ன, எதுக்காவ என்னியத் தண்டிக்கறே முருகா? இது இன்னா நாயம்? நாந்தான் அறியாதவன்னு தெரியுமில்ல? அத்தக் கொஞ்சங்கூட நெனைப்புல வைச்சுக்காம, இன்னாமோ அல்லாமே நாந்தான் செஞ்சேன்றமாரி, எனக்கு தண்டனை குடுக்கறியே முருகா!'ன்னு சொல்றதா வைச்சுக்கலாம்.

இன்னோரு வாட்டி அந்த 'இல்'லைப் பாத்தின்னா, வீடு, பொண்ஜாதின்னும் ஒரு அர்த்தம் வரும். நாம்பாட்டுக்கு சும்மா 'தேமே'ன்னு கெடந்தவனைப் பிடிச்சு இட்டாந்து இப்பிடி ஒரு மாயாவலையுல சிக்கவைச்சுட்டு, இப்ப அதுல நான் ஏதோ அறியாம பண்ற தப்புங்களுக்கெல்லாம் என்னிய கோவிச்சுக்கறியே, பொறுத்துக்க மாட்டேன்றியே முருகா'ன்னு கேக்கறமாரியும் புரிஞ்சுக்கலாம்.

அதான் இவரோட சொல் விளையாட்டோட மகிமை! இப்ப அடுத்த வரிக்கும் இதுக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பமா?

" மல்லே புரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே"

இதுல இன்னா சொல்லிருக்காரு?

சும்மா மல்யுத்தத்துக்குப் போற ஆளோடதுமாரி க்கீற ஒன்னோட பன்னண்டு தோளுலியும் என்னோட இந்தப் பாட்டுக்களை வைச்சுப் பண்ணின பாமாலையை போட்டுகிட்டு அள[ழ]கு பாக்கற ஜோதிமாரி ஜொலிக்கற வேலவனேன்னு சொல்றாரு!

இது எப்பிடி மேலே சொன்னதோட பொருந்தும்னு யோசி!' என்று நிறுத்தினான்.

'இது தனக்கில்லை; இவனுக்கு வைச்ச பரிட்சைதான்'என்னும் சந்தோஷத்துடன், நாயரும், சாஸ்திரிகளும் என் முகத்தை ஒரு பார்வை பார்த்தார்கள்!

அவர்களது எண்ணத்தைச் சிறிதும் பொய்யாக்க விரும்பாத நான், சட்டென்று, 'அதுல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னைத் தொந்தரவு பண்ணப்போறேன் மன்னார்!' எனப் பரிதாபமாகச் சொன்னேன்!

ஒரு பெரிய சிரிப்பலை அங்கே எழுந்தது!

ஆதரவுடன் என் தோளைத் தட்டிக் கொடுத்தபடி மன்னார் தொடர்ந்தான்.
'மேலாக்கப் பார்த்தா, இது வெறும் ஒரு அலங்கார வார்த்தையாத்தான் தெரியும்.

ஆனாக்காண்டிக்கு , இது ஏதோ வரியை ரொப்பறதுக்காவப் போட்டதில்லை. இதுக்குள்ளாரையும் ஒரு அர்த்தம் இருக்கு.
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இது இப்பிடித்தான்னு சொல்லலை. ஆனா, இப்பிடியும் பாக்கலாம்னுதான்....... கேளு'

'முருகா! ஒன்னோட தோளைப் பாத்தியா? மல்லுச்சண்டை, குஸ்தியுல ஜெயிக்கற பெரிய வீரன்மாரி சும்மா 'திண்'ணுனு க்கீது! ஒனக்கு எத்தினி மாலை போட்டாலும் அது தாங்கும்போல!

ஒன்னோட அருளால, ... நீ கொடுத்த வரத்தால... நீ அடியெடுத்துக் கொடுத்துத்தான் நான் இத்தினி பாட்டுங்களை ஒம்மேல பாடித் தள்ளிக்கினு க்கீறேன். அல்லாமே நீ குடுத்த பெருமை! அத்த வைச்சுக்கினு நானும் இன்னான்னாமோ பாடறேன். அதுல்லாம் சரியா, தப்பான்னு கூடப் பாக்காம, நான் பாடுற பாட்டுங்களையெல்லாம், இன்னாமோ பெரிய மாலைங்கமாரி நீ சந்தோசமா வாங்கிக்கினு, அல்லாத்தியுமே ஒன்னோட இந்தக் கட்டுமஸ்த்தான தோளுங்க...... ஒண்ணா, ரெண்டா, பன்னண்டு தோளுங்க... மேல சிரிச்சுக்கினே வாங்கிப் போட்டுக்கறே! குத்தம், கொறை எதுவுமே பாக்காம!

அப்பிடிப் பண்ணற நீ, ஏம்ப்பா இதும்மாரி இந்த மாயையுல என்னை நீயே சிக்கவைச்சு, அதுல நான் பண்ணற குத்தத்துக்காவ, தண்டனையும் குடுக்கறே! ? இது நாயமாப் படுதா ஒனக்கு? ஞானவேலைக் கையுல 'ஜம்'முன்னு வைச்சுக்கினுக்கீறியே,' ன்னு செல்லமா ஒரு சண்டை போடறாரோன்னு படுது' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

சற்று முன்னர் சிரித்த அனைவரும் மௌனமாகி, இதன் பொருளை உணர்ந்ததுபோல், தலை கவிழ்த்து, 'ஓம் சரவணபவ' என முணுமுணுக்கத் தொடங்கினர்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்

Read more...

Thursday, September 29, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29
28.


'எளிமையாப் பாடிகிட்டே வந்தவருக்கு திடீருன்னு ஒரு நெனைப்பு வந்திருது.
'இன்னாடா, இன்னாமோ குடுத்தாரு, குடுத்தாருன்னு சொல்லிக்கினே வரோமே, அத்த இப்ப வெலாவாரியா சொல்லிறணும்னு முடிவு பண்ணிட்டு, அது இன்னான்னு நெனைச்சுப் பாக்கறாரு.


முருகனைப் பாத்தது நெனைப்பிருக்கு!
அவுரு கையில தாங்கிப் பிடிச்சது நெனைப்புல வருது!
இன்னாமோ சொன்னாரேன்னு ஒரு நெனைப்பு க்கீது!
அதுக்கப்புறமா?????.........


ரொம்பவே யோசனை பண்ணிப் பாக்கறாரு!
இன்னாமோ நடந்திச்சேன்னு புரியுது!
அது இன்னான்னு சொல்லத் தெரியல!
அதான் இந்தப் பாட்டு!
எங்கே படி கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்!
நான் படிக்க, மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே .

"ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ"

நேத்து ஒரு வூட்டுக்கு விருந்து சாப்பிடப் போயிருந்தேன்!
நல்ல சாப்பாடு!

எல்லா அயிட்டமுமே ரொம்ப நல்லாயிருந்தாக்கூட, அந்தப் பால் பாயாசம் க்கீதே, அத்தச் சொல்லவே முடியாது!
அவ்ளோ ருசியா இருந்திச்சு!
ரெண்டு டம்ளர் குடிச்சுட்டேன்!

அப்பவும் ஆசை விடலை!
அத்தப் புரிஞ்சுகிட்ட அந்த வூட்டுக்க்காரம்மா 'அண்ணே! இன்னும் ஒரு கப்பு தரட்டுமா'ன்னாங்க!
நான் பதிலே பேசாம டம்ளரை நீட்ட, மேல ரெண்டு கரண்டி ஊத்தினாங்க!
அப்பறம், இன்னும் ரெண்டு கரண்டி!
அவங்க ஊத்த ஊத்த, நானும் வேணான்னே சொல்லாம குடிச்சுக்கினே இருந்தேன்!
எப்பிடி குடிச்சேன்னு இப்ப நெனைச்சுப் பார்த்தா, இப்ப அத எப்பிடி சொல்றதுன்னே தெரியலை!


இப்ப எதுக்கு சம்மந்தமேயில்லாம இத்தச் சொல்றானேன்னுதானே நெனைக்கறே?
அதான் இந்த 'ஆனா'!!




மேல மேல போதும்ன்னே சொல்லாம இருக்கறதுக்குப் பேருதான் 'ஆனா'.
அப்பிடியாப்பட்ட அமுதத்தை தர்றவனேன்னு முருகனைக் கூப்பிடறாரு
ஆனா அமுதேன்னு!


அயில்னா கூர்ப்புன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்!
கூரான வேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற என்ராசாவேன்னு கொஞ்சறாரு! அதான் 'அயில்வேல் அரசே'!


'ஞான ஆகரனே'ன்னா ஞானத்த உண்டுபண்றவன்னு அர்த்தம்!

'ஆகரன்'னா பொறக்க வைக்கறவன்.

இப்ப இந்த மூணையும் கொஞ்சம் சேர்த்துப் பாப்போமா!

வேலு ஞானத்தோட அடையாளம்!
அந்த ஞானம் பொறக்கற வேலு முருகன் கையுல !
அந்த வேலு ரொம்பவே கூர்ப்பா க்கீது!
அதாவுது, கூர்மையான ஞானம் இவுரு கையுல!

அந்தக் கையால ஒரு அமுதத்தைத் தராரு அருணகிரியாருக்கு!
அது அமுதம் மாரி க்கீதாம்!

அப்பிடி ஒரு அமுதத்தைக் குடுக்கறப்ப, அதைக் குடிக்கறாரு அருணையாரு!

போதும்னே இவுருக்கும் சொல்லத் தெரியல.
அவரும் குடுக்கறத நிறுத்தவேயில்லை!

ஞானாகரனே அயில்வேல் அரசே ஆனா அமுதே சொல்றது இதைத்தான்!


இப்பிடி அவுரு குடுத்த ஞானத்தை இன்னான்னு சொல்லச் சொன்னா, இவரால சுத்தமா முடியலை!

'நான் எப்பிடிப்பா இத்தச் சொல்றதுன்னு முருகன்கிட்ட பொலம்பறாரு!
நவிலத் தகுமோன்னு கதற்ராரு!
அதைத்தான் அடுத்த ரெண்டு வரியுல சொல்றாரு!

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

இதப் பத்திச் சொல்றதுக்கு முன்னாடி, ஒண்ணு நான் கண்டிப்பா சொல்லியே ஆவணும்!
போன பாட்டுல சொன்னேனே, அந்தக் கொணந்தான் இந்தப் பாட்டுலியும் வருது.... இன்னொரு விதமா!


எனக்குக் கிடைச்ச மாதிரியே எல்லாருக்கும் கிடைக்கணும்னு பாடினாருன்னு சொன்னேனே.. அதையே, இப்ப, இன்னொருமாரி,
தனக்குக் கிடைச்சதை நாம இவங்களுக்கு சொல்லலாமேன்னு நெனைக்கறாரு. ஆனா, முடியலை ! இன்னாமோ நடந்திச்சுன்னு புரியுது!
அதச் சொல்ல முடியல!

இந்த இடத்துலதான் நாம ஒண்ணைப் புரிஞ்சுக்கணும்!
எதுக்காவ, அவரு இப்பிடிப் பொலம்பணும்?

அப்பிடி இன்னாத்த இவரு அனுபவிச்சாரு? அது இன்னான்னு சொல்ல முடியலியேன்னு கூட சொல்றாரே? ன்னு நம்மளையெல்லாம் ஒரு செகண்டு நெனைக்கவைச்சு, அது இன்னாவாத்தான் இருக்கும்னு நம்மளோட ஆசையையும் தூண்டிவிடறதுக்காவத்தான் அருணையாரு இப்பிடில்லாம் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!

அப்பிடி நம்ம ஆசையைத் தூண்டறமாரி இன்னாதான் சொல்றாரு?

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

மனுஷனாப் பொறந்த அன்னைக்கே நம்மளையெல்லாம் வந்து பிடிச்சுக்கற சனியன் இந்த 'நானுன்ற' ஆணவம்! மொளைச்சு மூணு நாளுகூட ஆயிருக்காது ஒரு கொள[ழ]ந்தைக்கு! அதுக்குள்ளாறயே 'இதான் என்னோட அம்மா'ன்னு ஒரு நெனைப்பு எங்கேருந்தோ வந்து
ஒட்டிக்கிரும் அதுக்கு! அவளைத் தவர, வேற ஆராச்சும் வந்து தொடட்டும்.... இன்னாமோ தன்னோட சொத்தே பறிபோனமாரி, 'வீல்,வீலு'ன்னு அலறித் தீத்திரும்!

அப்பத் தொடங்கின இந்த 'நானு'ன்ற ஆணவம் மேல மேல வளர்ந்துக்கினே போவும்! கொறையவே கொறையாது!

இந்த 'என்னோடது'ன்ற ஆணவம் இருக்கற வரைக்கும் ஆண்டவனைப் பாக்க்கறதுன்றது கொஞ்சங்கூட நடக்கவே நடக்காதுன்னு அன்னைலேர்ந்து இன்னிக்குவரைக்கும் எத்தினியோ பேருங்க... பெரிய பெரிய மகானுங்கள்லாம் சொன்னாலும், இதைப் பத்திக் கவலைப் படறவங்க ரொம்பவே கம்மின்னுதான் சொல்லணும்!

இதைப் பத்தித்தான் இந்த வரி சொல்ல வருது.

அதும் மூலமா தனக்கு இன்னா ஆச்சுன்றதையும் நமக்கெல்லாம் ஒரு கோடி காட்டி, இதைப் பத்தி நமக்குள்ளியும் ஒரு ஆசையைத் தூண்டறமாரி ஒரு கருணை பண்னியிருக்காருன்னுதான் சொல்லணும்.

இன்னான்னமோ தப்புல்லாம் பண்ணி, இந்த ஆணவத்தால தறிகெட்டு அலைஞ்சப்பக் கூட, தனக்கு இந்த கந்தன் பண்னின கருணையைச் சொல்லிக் கலங்கற வரியாத்தான் இதை நான் பாக்கறேன்.


இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!

அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!
சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!


ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!

ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!
ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!

பிரம்மா, சூரன், இந்திரன், ஔவையாருன்னு இப்பிடி ஆரை வோணும்னாலும் பாரு.. இப்பிடித்தான் பண்ணியிருப்பாரு!

தனக்கும் அப்பிடித்தான் பண்னினாருன்னு இவுருக்கு ஒரே பூரிப்பு!

அப்பிடி இன்னா பண்ணினாரு?
ஆணவத்தால அலைஞ்சு திரிஞ்ச அருணகிரியைத் தன்னோட கையுலியே வாங்கிக்கினு, அவருகிட்ட இருந்த அந்த 'யான்' அப்பிடீன்ற கொணத்தை 'லபக்'கினு முளு[ழு]ங்கிட்டாரு முருகன்!

இந்த எடத்துல அருமையான ஒரு சொல்லைப் போட்டிருக்காரு அருணையாரு!
'விழுங்கி'ன்னு!


இப்ப ஒரு ஜிலேபி க்கீது!
அத்தக் கையுல வைச்சுக்கினு க்கீற நீ! பாக்கறே! சுருள்சுருளா பாக்கறதுக்கே அள[ழ]கா செவப்பா க்கீது! நாக்குல வைச்சு லேசா ருசி பாக்கறே. அந்த ஜீராவும், அந்த மணமும் அப்பிடியே நாக்குல எச்சி ஊறவைக்குது. கொஞ்சமாக் கடிக்கறே! இனிப்பு அடிநாக்கு வரைக்கும் போயித் தாக்குது! வேக வேகமா அதைக் கடிச்சுத் துண்றே! மொத்தமா முளு[ழு]ங்கிட்டே அந்த ஜிலேபியை இப்ப!

அதுக்கப்பறம்??? இன்னா ஆச்சு அதுக்கு!

இத்தினி நேரமா நீ அனுபவிச்ச அத்தினியும் காலி!

நல்லா இருந்திச்சுன்னுதான் சொல்லமுடியுமே தவர, வேற ஒண்ணுமே இப்ப ஒன்னால சொல்ல முடியாது!

அந்த நெலைமையுலத்தான் க்கீறாரு அருணகிரியும்!

இவர்கிட்ட இருந்த அந்த 'யான்' இப்ப காணோம்!

முருகன் அத்த எடுத்து முளு[ழு]ங்கிட்டாரு!
இப்ப தான் ஆருன்னே அருணகிரியாருக்குத் தெரியலை!
அதே சமயம் அத்த எப்பிடிச் சொல்றதுன்னும் சொல்ல முடியலை!

யான் இப்ப தான் ஆயிருச்சு!

அந்த தான் ஆருன்னா எப்பவுமே நெலைச்சு நிக்கற அனுபவந்தான் 'அந்தத் 'தற்பரம்'.

'தற்பரம்'னா தனக்கும் மேலே க்கீற ஒரு பெரிய பொருளு!

அது எப்பிடி இருக்கும்... அந்த அனுபவம் எப்பிடி இருக்கும்ன்றத என்னால சொல்லவே முடியலியே முருகா!ன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அந்தப் பெரியவரு!

ஒரு சாதாரண ஜிலேபியப் பத்தின அனுபவமே இப்பிடி இருக்கும்னா, நமக்கெல்லாம் மேலான ஒரு பெரிய தெய்வம்.... அந்த முருகன்....நமக்குள்ளியே வந்து குந்திக்கினா அது எப்பிடி இருக்கும்ன்றதை நமக்குள்ள புகுத்தி, இதைப் பத்தி நம்மளையெல்லாம் இன்னும் தீவிரமா ஈடுபடச் செய்யறதுக்குன்னே இதையெல்லாம் இங்க சொல்றாரு அருணகிரியாரு!

இதான் கந்தன் கருணையோட தனிப் பெருமை!

கந்தன் மட்டுமில்ல, அவர் மேல பக்தி பண்றவங்களுக்குங்கூட இந்தக் கருணை தானா வரச் செஞ்சிருவாரு முருகன்!

ஆனாக்காண்டிக்கு, இப்ப சாப்ட்டது ஜிலேபிதான்னு மட்டும் தெரியறமாரி, தனக்கு வந்தது ஞானம்னு மட்டும் இவருக்குத் தெரியுது! அதுனாலத்தான், 'கூர்வேல் போலக்கீற ஆனா அமுது கொடுத்த ஞானாகரனே'ன்னு மொதல்ல சொல்லி ஆரம்பிச்சாரு அந்தக் கருணையாறு....அருணையாரு! '
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனும் மந்திர ஒலி நாயரிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது!
********************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 23, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28
27.

"போன பாட்டுக்குச் சொன்னமாரி பெருசா சொல்லாமலியே, இப்ப வர்ற பாட்டு ரொம்பவே ஈஸியாப் புரிஞ்சிறும்! சும்மாப் படிச்சாலே புரியறமாரி அருணகிரியாரு எளு[ழு]தியிருக்காரு. படிப்பா, கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்.


அவன் சொன்னதுபோலவே பாடல் எளிமையாகத்தான் இருந்தது.

மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலே றியவா னவனே.


மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.

"மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?"

இதுக்கு இன்னா புதுசாச் சொல்லப்போறான் இவன்னுதானே பாக்கறே! பெருசா ஒண்ணுமில்லை.


போனபாட்டுல 'நீ கொஞ்சங்கூட என்னியப் பத்தி நெனைக்கமாட்டேன்றியே முருகா'ன்னு சொன்னவருக்கு இன்னொரு நெனைப்பு வருது! இந்த சென்மம் சீக்கிரமே முடிஞ்சிறப் போவுதே! அதுக்குள்ளார முருகன் வரணுமேன்னு பதைக்கறாரு.


ஒரு மின்னல்மாரி ஒரு செகண்டுல பளிச்சின்னு வெட்டி, மறைஞ்சிறப்போற இந்த வாள்[ழ்]க்கை மேல ஆசைப்பட்டேனேன்னு பொலம்பறாரு.


மின்னலைப் பாத்திருக்கேல்ல? ஒரு செகண்டுகூட இருக்காது. ஆனா, அதுக்குள்ளாரவே கண்ணைப் பறிக்கறமாரி வெளிச்சமா இருக்கும்! வந்த வேகத்துலியே முடிஞ்சும் போயிறும்.


ஆனாக்க, அதுக்குள்ளதான் இன்னா ஆட்டமில்லாம் போடறோம்! இது தான் சதம்னு நம்பிக்கினு, இதும்மேல ஆசைப்பட்டு, இதும் பின்னாடியே சுத்தினேனே! ன்னு தன்னோட தலைவிதியை நொந்து 'நூடுல்ஸ்' ஆறாரு!


அப்பத்தான் ஒரு உண்மை இவருக்குப் புரியவருது!

"பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே."

நெசமான பொன்னு, மெய்யான மணி, உண்மையான பொருளுல்லாமே 'தோ! மயிலுமேல 'ஜம்'முன்னு குந்திக்கினு ஒரு ராசா மாரி வராரே இந்த முருகந்தான் மெய்யின்னு 'பொட்'டுல அடிச்சமாரி வெளங்குது!


இந்த ராசாவோட அருளு இருந்தாப்போறுமே. அத்த சீக்கிரமே எனக்குக் குடுக்கமாட்டியான்னு கேக்கறாரு அருணையாரு.


அதுனால, இந்தக் கடைசி ரெண்டு வரியை இப்பிடிப் படிக்கணும்.

'பொன்னே மணியே பொருளே மன்னே மயிலேறிய வானவனே,.....அருளே'

அதாவுது, எனக்கு அருள் பண்ணே'ன்னு அவர் கேக்கறதுபோல' என்றான் மன்னார்.


'ஆமாண்டாப்பா! இதைத் தமிழ் இலக்கணத்துல 'வியங்கோள்வினை, ஏவல்வினையா' வர்றதுன்னு சொல்லுவா! அதாவது ஆச்சரியமாச் சொல்ற ஒரு வார்த்தையை அப்படியே ஒருத்தரைப் பார்த்துச் சொல்றமாதிரி! இப்ப ரொம்ப அழகா ஒருத்தர் இருக்கார்னா, அந்த சந்தோஷத்துல 'அழகே'ன்னு அவாளையே கூப்டறோமோன்னோ! அதுமாதிரி' எனச் சொன்னார். சாம்பு சாஸ்திரிகள்!


'சேட்டன் பறயாதது ஐயர் பறஞ்சு!' எனச் சிரித்தான் நாயர்!


*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 16, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் - 27

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 27
26.

[சற்று நீளமான இந்தப் பதிவை, ஒருமுறைக்கு இருமுறையாகப் படிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.]

நாயர் கடையில் அவனது ஸ்பெஷல் மசால் வடையையும், ஒரு கப் டீயையும் குடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி வரவும், மயிலை மன்னார் சாம்பு சாஸ்திரிகளின் வீட்டு வாசலில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது!


என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தவன் நேராக அடுத்த பாடலைப் படிக்கச் சொன்னான்.

ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோ தமனா
தீதா சுரலோ கசிகா மணியே!

என நான் படித்து அதைப் பிரித்தும் சொல்லிக் காட்டினேன்.... அதிகக் கடினமாக இல்லையென்பதால்!

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனா
தீதா சுரலோக சிகாமணியே!

என்னை ஒருவித இரக்கத்துடன் பார்த்துவிட்டு, 'இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுன்றது! அப்பிடிப் பிரிக்கக் கூடாது இத்த! மொத ரெண்டு வரியும் சரிதான். அதுல ஒண்ணும் கஷ்டமில்ல! அடுத்த ரெண்டு வரியையும் வேற விதமாப் பிரிக்கணும் எனச் சொல்லிவிட்டு, முழுப்பாடலையும் பிரித்துச் சொன்னான்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மன
அதீதா சுரலோக சிகாமணியே!

'ஞான விநோதா மனா தீதா' இல்ல! 'ஞான விநோத மன....அதீதா' அது' எனத் திருத்தினான்!

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது போல எனக்குப் பட்டது! அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் முகம் சலனமில்லாமல் இருந்தது!


'சரி, அது கெடக்கட்டும் இப்ப நல்லாக் கவனமா நான் சொல்றதை கேட்டுக்கோ! ஒரு பெரிய உண்மை இந்தப் பாட்டுல வரப் போவுது! அது இன்னான்றத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொதல்ல இந்த மொத ரெண்டு வரியும் ஒனக்கு எப்பிடிப் புரியுதுன்னு சொல்லு' என என்னைப் பார்த்துச் சிரித்தான்.


ஒன்றும் புரியாமல், அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தேன்!

"ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே"

உன்னுடைய அருளைப் பெறுவதற்கான எந்த விதமான ஆதாரமும் என்னிடம் கிடையாது! அதனால்தானோ என்னவோ, நீ கூட அதைப் பற்றிக் கொஞ்சம் கூட நினப்பதும் இல்லை' எனப் படுகிறது' என்றேன்.


'நீ சொல்றது சரிதான்! ஆனா, இதை வேற எப்பிடிப் பார்க்கலாம்' என என்னைச் சீண்டியபடியே நாயரைப் பார்த்தான்!


கொஞ்ச நேரம் யோசித்த நாயர், ' சேட்டன் பறஞ்சது சரியாயிட்டு உண்டு. பக்ஷே, இன்னொரு விதமாயிட்டும் பறயலாம்' என்றான்.


'சொல்லு' என்பது போலப் பார்த்தான் மன்னார்.


'அனுபூதி கிட்டிட்ட பின்னேதானே ஈ பாட்டு அருணகிரி பாடின்னு? பின்னே எந்தா இப்பிடி பறயின்னு?' என்றான் நாயர்!


'சபாஷ்!' என்றார் சாஸ்திரிகள்!


மன்னர் முகமும் நன்றாக மலர்ந்தது!


'பாயிண்ட்டைப் பிடிச்சிட்டே நாயர்! ' என்றான் .


'நாயர் சொல்றதுதான் கரீட்டு! இந்தப் பாட்டைப் பாடறப்ப, அருணகிரியாருக்கு ஏற்கெனவே முருகன் அருள் பண்ணிட்டான்! பின்ன, எதுக்காவ அவரு இப்பிடி சொல்லணும்?


பொம்பளைப் பித்து பிடிச்சு பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கினு இருந்தப்பவோ, இல்லாக்காண்டிக்கு, கோபுரத்துலேந்து குதிச்சப்ப முருகன் காப்பாத்தினப்பவோ, இல்ல, வயலூரு, விராலிமலையிலியோ இவுரு இந்தப் பாட்டைப் பாடலை! முருகன் 'சொல்லற; சும்மாயிரு'ன்னு சொல்லிட்டு, அப்பாலிக்கா, 'முத்தைத்தரு'ன்னு சொல்லெடுத்துக் குடுத்தப்ப, அவரு முருகன் மேல திருப்புகள்[ழ்]தான் பாடிக்கினுத் திரிஞ்சாரு!


முருகனே நேருல வந்து அவருக்கு பிரணவ உபதேசம் பண்ணினதுக்கு அப்பாலதான், அவரு கந்தரநுபூதியும், கந்தரலங்காரமும் பாடினாரு! எல்லாமே கெடைச்சதுக்கு அப்பாலிக்கா, இப்பிடி ஒரு பாட்டைப் பாடினாருன்னா, நம்ப முடியுமா?


அப்ப ஏன் இப்பிடி சொல்றாரு?


இங்கதான் கொஞ்சம் யோசிக்கணும்!


தனக்காவப் பாடலை அவுரு! அவுருக்குத்தான் வேணுன்றதுக்கு மேலியே முருகன் வாரி வாரிக் குடுத்துட்டானே!


அப்ப, வேற ஆருக்காவ பாடினாரு இப்பிடி?


ஒனக்கும், எனக்குந்தான்!


புரியிலியா?


அவரோட கருணை மனசு அவரை அப்பிடிப் பாட வைக்குது!
தனக்குக் கெடைச்சது அல்லாருக்கும் கெடைக்கணுமேன்னு துடிக்கற துடிப்புல பாடின பாட்டுங்க இதெல்லாம்!


எனக்குக் கிடைச்சிருச்சுன்றதச் சொல்ற பாட்டா இருந்தா அதோட கொரலே [தொனியே] வேற மாரி இருந்திருக்கும்! 'ஆ! பாருங்கப்பா! முருகன் எனக்கு இன்னாமா அருள் பண்ணியிருக்காருன்னு' ஒரு கெர்வமா வந்திருக்கும் அதெல்லாம்!


ஆனா, அவரோட பாட்டெல்லாத்தியுமே பாத்தியானா, அல்லாமே, ஒன்னையும், என்னியும் போல சாதாரண ஜனங்க பாடினா எப்பிடி இருக்குமோ, அதும்மாரிப் பாடின பாட்டுங்க!


அவருக்குக் கெடைச்சதைப் போல கெடைக்காம, .......ஆனாக்காண்டிக்கு, அதே சமயத்துல, அவுரு பண்னினதுக்கும் மேல, நெறையத் தப்பு பண்ணினவங்களுக்கும் இந்த அனுபூதி கெடைக்கணும்னு நெனைச்ச அவரோட பெரிய மனசுதான், இதும்போலப் பாட்டா வந்திருக்கு!


அதுனாலத்தான், அருணகிரியாரோட பாட்டுங்களைப் படிக்கறப்பல்லாம், அது தனக்கும் சரியாவே இருக்கறமாரி ஒரு 'ஃபீலிங்' உள்ளுக்குள்ள வரும் ரொம்பப் பேருக்கு!


இதான் அவரோட பாட்டுங்கள்ல க்கீற ஒரு இஸ்பெசல்!


இத்தப் புரிஞ்சுக்கினு, இப்பப் படிச்சியானா, ஒனக்கும் நாயர் சொன்னாமாரியே புரியும்'! இதான் நான் சொல்ல வந்தது' என நிறுத்தினான் மன்னார்!

எங்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது!


அதைக் கவனியாதவன் போல, மன்னர் தொடர்ந்தான்!

'ஆதாரம்'னா ரெண்டு விதமா சொல்லலாம்.


சாட்சின்ற பொருளு ஒண்ணு.


ஒன்னோட அருளு கெடைக்கறதுக்கான ஒண்ணுமே நான் பண்ணலியே முருகா!ன்னு சொல்றமாரி வரும்.


இன்னொண்ணு, பிடிச்சுக்கறதுக்கான ஆதாரம்!


ஒரு கொடி படரணும்னா, அதுக்கு ஆதாரமா ஒரு கொம்பு வோணும்!


இல்லேன்னா நாலா பக்கமுமா அந்தக் கொடி இங்கியும், அங்கியுமா அலையும், எதுனாச்சும் ஆதாரம் கெடைக்காதான்னு!


அதும்மாரி, ஒன்னோட அருளுன்ற ஆதாரம் எனக்குக் கெடைக்கணும்னா, அதுக்கு நீ மனசு வைக்கணும், அத்த வைக்க மாட்டேன்றியே முருகான்னு பொலம்பற மாரியும் புரிஞ்சுக்கலாம்!


இப்ப அடுத்த ரெண்டு வரியையும் பாப்பம்!


அதுக்கும், இப்ப சொன்னதுக்கும் இன்னா சம்பந்தமின்னு பாக்கலாமா' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்!

ஏதோ இதிலும் பொடி வைத்துச் சொல்லப் போகிறான் என ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்!

"வேதாகம ஞான விநோத மன அதீதா சுரலோக சிகாமணியே!"

மூணு சமாச்சாரம் இதுல வருது!

வேதாகம ஞான விநோத
மன அதீதா
சுரலோக சிகாமணியே!

ஒண்ணொண்ணா பாப்பம்!


வினோதன்னா, புதுமை பண்றவன்னு அர்த்தம்! இல்லாட்டி, புதுசு புதுசா வெளையாடறவன்னும் சொல்லலாம்!


அப்பிடி இன்னா புதுசா புதுமை பண்ணினாரு முருகன்!


அருணகிரிக்கு தன்னைப் பத்தியே நெனைப்பு வருது!


எந்த ஒரு காரியத்தையும் பண்ணினா, ஒண்னு அது வேதத்துக்கு சம்மதமா இருக்கணும். இல்லேன்னா, ஆகம விதிங்களுக்கு கட்டுப்பட்டதா இருக்கணும்! அதுவுமில்லேன்னா, ஞான வளி[ழி]யிலியாவுது அதுக்கு ஒரு கட்டளை இருக்கணும்! இந்த மூணுலியும் எதுனாச்சும் ஒண்ணுலியாவுது ஒர்த்தன் பண்ற காரியத்துக்கு ஒப்பு இருக்கணும். இல்லேன்னா அந்தக் காரியம் சரியில்லேன்னு அர்த்தம்! இதான் பெரியவங்க நமக்கெல்லாம் சொல்லியிருக்கறது!


இவுரு,... தான் பண்ணின காரியத்தையெல்லாம் ஒண்ணொண்ணா நெனைச்சுப் பாக்கறாரு.
தாம் பண்ணின எந்த ஒரு காரியத்துக்கும் மேலே சொன்ன மூணுலியுமே சரின்னு சொல்லிருக்கலைன்னு நல்லாப் புரியுது!


ஆனாக்காண்டிக்கும், முருகன் இவுருக்கு நேராவே வந்து அருள் பண்ணியிருக்காரு!


நெனைச்சுப் பார்க்கறப்பவே இவுருக்கு ஒரே ஆச்சரியமாப் பூடுது!


இது அத்தினிக்கும் மீறின சக்தியா அந்தக் கந்தன் நின்னுக்கினு ஒரு வெளையாட்டா இந்தக் காரியத்தப் பண்ணியிருக்காருன்னு புரியுது! அவரால மட்டுந்தான் இப்பிடிப் பண்ண முடியும்னு புரிய வருது!

அதான் வேத, ஆகம, ஞான விநோத'!!


இப்பிடிப் பண்றதுன்றது பொதுவா நடக்கவே முடியாது. ஆராச்சும் வந்து சொன்னா நம்ம மனசு அத்த ஒத்துக்காது! அடப் போடா! சும்மா கதை வுடாதேன்னு வெரட்டிருவோம்! ஆனாக்க, இப்பிடியாப்பட்ட ஒரு அருளை ரொம்ப 'அசால்ட்டா' பண்ணிட்டுப் போறாரு முருகன்.


அதத்தான், 'மன அதீதா' மனசையெல்லாம் கடந்தவனே, மனசுக்கெல்லாம் எட்டாதவனேன்னு சொல்லிக் கும்புடுறாரு அருணகிரியாரு!


இப்பிடி சொன்னதுமே, இதும்போல, வேற ஆருக்காவுது பண்ணியிருக்காரா நம்ம முருகன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாக்கறாரு!

ஏன்னா, ஒரே ஒரு தபா மட்டுந்தான் நடந்திச்சுன்னா, அத்த ஏதோ லக்கி சான்ஸுன்னு சொல்லிருவோம். அதே, ஒண்ணுக்கும் மேல நடந்திருச்சுன்னா, அப்ப அது அவரோட லீலைன்னு வெளங்குமில்லியா, அதுக்குத்தான்!


அப்பிடி நெனைக்கறப்ப, சட்டுன்னு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!


தப்பும் மேல தப்பு பண்ணின தேவருங்களுக்கும் இதும்மாரி அருள் பண்ணித்தானே அவங்களையெல்லாம் சூரனோட பிடிலேர்ந்து காப்பாத்தினாரு; அதுனாலத்தானே, இவுருக்கே பட்டங் கட்டி, அவங்கள்லாம் கந்தனோட காலுல விளு[ழு]ந்து கெடக்காங்கன்னு தோணுது! 'சுரலோக சிகாமணியே'ன்னு கூப்புடுறாரு! தேவலோகத்துக்கே தலைவனா இருந்து அவங்களோட தலையெல்லாம் ஒன்னோட காலடியுல கெடக்கறமாரி நிக்கறவனேன்னு துதிக்கறாரு!


இதும்போல மனசால கூட நெனைக்க முடியாத காரியம்லாம் பண்ற நீ கொஞ்சம் கருணை வைச்சு, என்னையும்.... என்னைப் போல இருக்கறவங்களையும்...... பாருப்பான்னு சொல்ற அருமையான பாட்டு இது!


கொஞ்சம் சாஸ்தியாத்தான் சொல்லிட்டேன்னு தெரியுது! இருந்தாலும், சொல்லாம இருக்க முடியலே' என ஒரு மழலை போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

சாஸ்திரிகள் மௌனமாக அமர்ந்திருந்தார்! நானும், நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! என்னையுமறியாமல் என் வாய் பாடலை மீண்டும் ஒருமுறை முணு முணுத்தது.


ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோத மனா
தீதா சுரலோ கசிகா மணியே.

'கொஞ்ச நேரம் இந்தப் பாட்டுல சொன்னத நெனைச்சுப் பாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!


அருணகிரிநாதரின் கருணை உள்ளத்தை நினைக்கையில் மனம் கசிந்தது!
*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, September 09, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"
25.

லேசாக மழைத் தூறல் பெய்யத் தொடங்கியது! காற்று சில்லென்று வீசியது! மாலை மங்கிய இனிய நேரத்தில் மேலே வானத்தில் ஒரு அழகிய வானவில் தெரிந்தது!
மனதையள்ளும் அந்தக் காட்சியில் மனதைப் பறிகொடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் பார்ப்பதைக் கவனித்த மன்னார் லேசாகச் சிரித்தான்.


'எவ்ளோ அள[ழ]கா இருக்கில்ல?' என்றான் மெதுவாக.
'ஆமாம் மன்னார்! அப்பிடியே பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்கு!' என்றேன் பரவசமாய்.
'ஆமாமாம்! நல்லாப் பார்த்துக்க. இல்லேன்னா சீக்கிரமே மறைஞ்சிரும்' என்றான் மன்னார்.


துணுக்குற்று திரும்பினேன் ! அவன் சொல்வதில் ஏதோ பொருள் இருப்பதாக உணர்ந்தேன்.
'நீ என்ன சொல்றே மன்னார்?' எனக் குழப்பத்துடன் வினவினேன்.


'பாக்கறதுக்கு எவ்ளோ அள-ழ]கா இருந்தாக்கூட, இது நெலையானதில்ல. ஒரு மாயம் அவ்ளோதான். இந்த நேரத்துக்கு நல்லா இருக்கு. ஆனா நெலைச்சு நிக்குமோ? நிக்காது! அப்பிடித்தான் நம்மளோட வாள்[ழ்]க்கையும்! இதைப் பத்தித்தான் அடுத்த பாட்டு சொல்லுது! அத்தப் படி;.... கேப்போம்' என்றதும்தான்,


'ஆஹா! வந்த விஷயத்தை மறந்துவிட்டு இப்படி கவனத்தைச் சிதறவிட்டுவிட்டேனே' என ஒரு குற்ற உணர்வுடன் பாடலைப் படித்தேன்.

மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே/னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே . [25]

மயிலை மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னான்.

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே .

'மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ?'

'வானவில்லைப் பார்த்தியான அதுல விதவிதமான கலருங்க இருக்கும். ஒண்ணொண்னும் ஒரு கொணத்தக் காட்டும்! ஒரு நேர்க்கோட்டுலியும் இருக்காது! வில்லு மாரி வளைஞ்சுக் கீறதாலத்தானே அதுக்கே அந்தப் பேரு வந்திச்சு!


ஒரு சமயம் பாத்தா ஒரு கலரு தூக்கலாத் தெரியும், இன்னொரு சமயம் வேற ஒரு கலரா இருக்கும்.
அதுமாரித்தான் நம்ம வாள்[ழ்]க்கையும்!


அப்பப்ப நடக்கறதுல மனசைத் தவறவிட்டுட்டு, அதும் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, படாத பாடுல்லாம் பட்டு, அப்புறமாத்தான் புத்தி வரும்.... இதெல்லாம் மெய்யில்ல; அத்தினியும் பொய்யின்னு!


ஆனாக்காண்டிக்கு, நடக்கற வரைக்கும் பாத்தியானா, இன்னாமோ அதான் கெடைக்கக்கூடாத பெரிய செல்வம்ன்றமாரி தெரியும். பின்னாடி பாத்தா, இதுக்கா அலைஞ்சோம்னு நமக்கே வெக்கமாப் பூடும்!
இப்பிடி அலையறதைப் பத்தித்தான் மொத ரெண்டு வரியும் சொல்லுது!


எப்பிடிப் பாத்தாலும் வெறும் சோகத்த மட்டுமே தர்ற இந்த ஒலக வாள்[ழ்]க்கையைப் போயி மெய்யின்னு நம்பி அதும் பின்னாடியே ஓடி இப்பிடி நான் அலையுறது நியாயமா முருகான்னு கேட்டுத் தலையைத் தூக்கறாரு!


எதுத்தாப்புல முருகன்!!!
அந்த சாமியைப் பாத்ததுமே அடுத்த ரெண்டு வரி தானா வந்து விளுது!

'கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே !'

செக்கச்செவேல்னு முருகன் ஜொலிக்கறாரு!
கையைப் பாத்தா அது செவப்பு!
கேட்டவங்களுக்கெல்லாம் அருளை வாரிவாரிக் குடுக்கற கையில்லியா அது! அதான் அம்மாம் செவப்பு!


கையுல பிடிச்சிருக்கற வேலு.... அதும் செவப்பு!
சூரனைக் கிளிச்சதுனாலியா?
இல்லையில்லை!
வேலு ஞானத்தோட சின்னம்!
கூர்ப்பான அறிவைக் காமிக்கறதுதான் வேலு! செம்மையான ஞானத்தோட அடையாளம் அந்த வேலு!


ஒடம்பு முளுக்க பாத்துக்கினே காலுகிட்ட வராரு!
அந்தக் காலும் செவப்பாக் கீது! எதுனால தெரியுமா?
ஒன்னைப் போல எத்தினியோ ஜனங்க முருகா! நீதாம்ப்பா கெதின்னு அவரு காலைப் பிடிச்சுகிட்டு விடாம க்கீறதால, அதுவும் செவந்து போயிருச்சு!


இப்பிடி ஒடம்பு முச்சூடும் செவப்பா ஜொலிக்கறாரு முருகன்!'அதான் கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்'!


அவரு குந்திக்கினு க்கீற மயிலைப் பாக்கறாரு!
அது இன்னொரு ஆச்சரியத்தக் குடுக்குது இவுருக்கு!


மயிலுதான் இருக்கற பறவைங்களுக்குள்ளியே ரொம்ப ரொம்ப அள[ழ]கான பறவை!
கண்ணு ஒரு கலரு, தலைக் கொண்டை ஒரு கலரு, களு[ழு]த்து ஒரு கலரு மூக்கு ஒரு கலரு... இதெல்லாம் பத்தாதுன்னு.... தன்னோட தோகையை விரிச்சா, அதுல ஏகப்பட்ட கலருங்க!
அதுவும் அது நல்லா முளு[ழு]சா அந்தத் தோகையை விரிச்சா, அப்பிடியே ஒரு பெரிய வானவில்லுமாரி இருக்கும்!


ஆனா, ஒரே ஒரு கலரு மட்டும் அதுல 'மிஸ்ஸிங்காப்' பூடும்!
அதான் செவப்பு!


இப்ப ஒனக்குங்குடக் கொஞ்சம் புரிஞ்சிருக்கணுமே!' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!


''ஓம் சரவணபவ' என உதடசையச் சொல்லிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த நாயர், உடனே தன் கண்களை அகலமாக விரித்து, 'ஞான் பறயட்டே! இங்கியும் ஒரு வானவில்' எனக் குதூகலித்தான்!


'கரீட்டாச் சொல்லிட்டேப்பா! தோகை விரிச்ச மயிலுக்கு நடுவுல ஒக்காந்துக்கினு க்கீற செவப்பான முருகனோட கலரு தூக்கலாத் தெரிய நெசமாவே இங்கியும் ஒரு வானவில்லுதான் தெரியுது அருணகிரியாருக்கு! அதான் மயிலேறிய சேவகனே !'ன்னு பாடறாரு!




ஆனா, ஒரு வித்தியாசம்!


இந்த வானவில்லு நெசம்! மறையாது! கலையாது!
அதும்மேல கெவனம் வைச்சு அதையே தியானம் பண்ணினியானா, இந்த வானவில்லு ஒனக்கு முன்னாடியே, எப்பவும் நிக்கும்!


இந்த சேவகனேன்றத ரெண்டு விதமாப் பாக்கலாம்!


சேவகன்னா சண்டைக்குப் போற வீரன்னு சொல்லலாம்.
எஜமானனுக்கு கைகட்டி சேவகம் பண்ற ஆளுன்னும் சொல்லலாம்!


பலவிதமா என்னை வெனைங்கள்லாம் தொறத்தறப்ப, அதுங்களை சண்டை போட்டு வெரட்டறதுக்காவ மயில் மேல வாப்பான்னு கூப்பிடறதாவும் வைச்சுக்கலாம்.

இல்லேன்னா,
இந்த வானவில்லைப் பாத்ததுக்கப்புறமா, நான் ஏன் கண்டதும் பின்னாடியும் அலையப் போறேன்னு சொல்லி கந்தன் காலுல விள, இவரைத் தூக்கியெடுத்து, அவன் சேவகம் பண்றமாரி நிப்பான்னு சொல்றமாரியும் புரிஞ்சுக்கலாம்!
அதான் முருகனோட பெருமை!
எனச் சொல்லி நிறுத்தினான் மன்னார்.

ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்!
'சரி, ஒரு வேலை க்கீது! அத்த முடிச்சிட்டு ஒரு அரை அவர்ல வந்திடறேன் வாரேன்' எனச் சொல்லி எழுந்தவன், எங்களைப் பார்த்து,
'ஆமா, முருகன்மாரியே செவப்பா க்கீற இன்னொரு சாமி ஆரு தெரியுமா? ஐயரே! நீங்க சொல்லாதீங்க!' எனக் கண்சிமிட்டினான்!


சட்டென்று நினைவுக்கு வராமல் நாங்கள் இருவரும் விழிக்க,
'அதாம்ப்பா,... தோ... க்கீறாரே, இந்தக் கபாலிதான் அந்த இன்னொரு ஆளு! ஒன்னோட தோஸ்த்து சிவசிவாகூட சொல்லுவாரே' எனச் சொல்லிவிட்டு, 'பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து' என முணுமுணுத்துக்கொண்டே, அந்தப் பக்கமாய் வந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!


'அட! ஆமாம்ல!' என நான் நாயரைப் பார்த்துச் சொன்னேன்!
'ம்ம்ம்... ஒனக்கு எந்த விஷயந்தான் ஞாபகத்துல இருக்கப்போறது!' எனத் தன் தலையில் அடித்துக்கொண்டே சாம்பு சாஸ்திரிகள் எழுந்து உள்ளே சென்றார்!


நாயர் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தபடியே, 'சேட்டா, வரு! கடைப் பக்கம் போலாம்' என அழைத்துச் சென்றான்!
*********
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, August 25, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25"
24

'இந்த தமாஷ் இன்னும் தொடருதா மன்னார்?' என வினவினேன்.


'முருகனோட பேசற பாணியை மாத்தலை! ஆனா, அதைக் கொஞ்சம் வேற விதமாச் சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


போன பாட்டுல கொஞ்சம் ஜாஸ்தியாவே முருகனைச் சீண்டிட்டோமோன்னு பதைக்கறாரு .
'நான் இன்னா யோக்கியம்னு முருகனைப் பத்தி அப்படி சொல்லப்போச்சு? அவுரு செய்யறதும் நான் செய்யறதும் ஒண்ணாயிருமா'ன்னு ஒரு அச்சம் வருது இவுருக்கு.


ஆத்தரத்துல இன்னால்லாம் சொல்லிட்டோம்னு நடுங்கறாரு. சொன்னது தப்புன்னு புரியுது! அதுல வந்ததுதான் இப்ப வரப்போற பாட்டு.' என மன்னார் என்னைப் பார்க்க நானும் பாடலைப் படித்துக் காட்டினேன்.


கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே
சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ
சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
போர்வே ல புரந் தரபூ பதியே.



கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே

"கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ"

'ஒன்னியப் போயி வள்ளி காலுலியே விளு[ழு]ந்து கெடக்கறியேன்னு சொன்னேனே! என்னோட யோக்கியதை இன்னான்னு தெரியுமா?


எப்பப் பாரு, பொம்பளைங்க பின்னாடியே அலைஞ்சு அவங்களோட மாருலியே வுளு[ழு]ந்து கெடக்கற நாதாறி நானு! அவங்களோட கூரான வேலு மாரி க்கீற கண்ணுங்களைப் பார்த்ததுமே அப்பிடியே மாருல சரிஞ்சிடறேன். இன்னாத்த சொல்றது?


நீ அந்த இச்சா சக்தியோட காலுல கெடந்தாலும் ஒன்னோட பக்தருங்களுக்கு அருள் பண்ண மறக்கறதே இல்லை!


ஆனா, நானு?.............
ஒன்னோட அருளு வோணும்னு நெனக்கறதுகூட இல்லை!


இதுல நான் ஒன்னோட என்னை 'கம்ப்பேர்' பண்ணி பேசிட்டேனே!ன்னு இவுருக்கு மனசுல உறுத்துது!


ஒன்னோட அருளை நெனைக்காம எப்பவும் பொண்ணுங்க பின்னாடியே சுத்தற நானும், இன்னா பண்ணினாலும் தன்னோட அடியாருங்களை மறக்காத நீயும் எப்பிடி ஒண்ணாயிற முடியும்? ஒன்னியப் போயி இன்னான்னமோ சொல்ட்டேனேன்னு இந்த வரியுல சொல்லாம சொல்றாரு!

"சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல புரந்தர பூபதியே"

வேற ஆரோட 'கம்ப்பேர்' பண்ணலாம்னு யோசிக்கறாரு. ஒடனே, இப்பிடி பொண்ணுங்களோட கண்ணுங்களை வேலுன்னு சொன்னதுமே அவுருக்கு இன்னொண்ணு ஞாபகத்துக்கு வருது!


சூரனோட கொலத்தையே பூண்டோட அறுத்த முருகனோட வேலு!


ஒரு நாளா, ரெண்டு நாளா?
பத்து நாளைக்கு ஒரு பெரிய சண்டை தொடர்ந்து போட்டு, ஒர்த்தொர்த்தரா... தாரகன், சிங்கமுகன், பானுகோபன், சூரன்னு அல்லாரையும் சேர்த்து முருகனோட வேலு அந்தச் சூரனோட கொலத்தையே அளி[ழி]ச்சுது!
ஆருக்காகன்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணையாரு!


அந்தப் புரந்தர பூபதிக்காவ, ,,.... தேவேந்திரனுக்காக, அவனைக் காப்பத்தறதுக்காவத்தான் இத்தினியும் பண்ணினாருன்னு புரியுது அவுருக்கு!


புரந்தரன்னா இந்திரன்!


மனசுல கொஞ்சம் தெம்பு வருது!


இந்திரன் பண்ணாத அட்டூளி[ழி]யமா? அவன் பாக்காத பொண்ணுங்களா?
அப்பிடி இருந்தாலுங்கூட, அவனுக்கும் அருள் பண்ணறதுக்காவ, தன்னோட வேலை வைச்சு ஒரு நீண்ட சண்டை போட்டுக் காப்பாத்தின குகன், ஏதோ ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க பின்னாடி சுத்தினதுக்காவ, நம்மளை கைவுட்டுருவாரா, இன்னான்னு ஒரு தெகிரியம் பொறக்குது!


முருகனோட தன்னை வைச்சுப் பாக்கறது தப்பு! நம்ம நெலைமைக்கு நம்மளை இப்போதைக்கு இந்திரனோட வைச்சுப் பாக்கறதுதான் சரின்னு வெளங்குது அருணையாருக்கு!


இப்பிடில்லாம் ஒண்ணை நெனைச்சு, அதைப் பாட்டுலியும் சொல்றதுக்கு இவுரை வுட்டா வேற ஆரால முடியும் சொல்லு!' என மௌனமானான் மயிலை மன்னார்!


ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்து மார்போடு அணைத்துக் கொண்டேன்!
********
[தொடரும்]

Read more...

Wednesday, August 17, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24


23.

அடுத்தாப்பல வரப்போற பாட்டு கொஞ்சம் வித்தியாசமானது! வேடிக்கையாவும் இருக்கும் பாரு!


இப்ப, ஒரு கொள[குழ]ந்தை க்கீது. அதுக்கு ஒண்ணு வோணும்னு இருக்கு! ஆனா கெடைக்கலைன்னு வைச்சுக்கோ?
அது .இன்னா பண்ணும்?


கெஞ்சிக் கேட்டுப் பாக்கும்.
கெடைக்கலைன்னா, கொஞ்சம் அளுது மொரண்டு பண்ணும்.
அப்பவும் இல்லைன்னா, ஒடனே ஆத்தரம் வரும்.
'போ! போ! நீ மட்டும் இன்னா ஒயு[ழு[ங்கோ? நீ கூட அப்பிடித்தானே பண்ணினே'ன்னு நக்கலாக் கேக்கும். இல்லியா?
அதும்மாரி, இந்தப் பாட்டுலியும் கொஞ்சம் முருகனை சீண்டிப் பாக்கறாரு!
எப்பிடின்றத பாட்டைப் படிச்சதும் சொல்றேன்' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


பாட்டைப் படித்துக் காட்டினேன். அதை கிட்டத்தட்ட அப்படியே பதம் பிரித்து என்னாலேயே திருப்பிச் சொல்லவும் முடிந்தது.

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா! குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா! குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே  [23]

'பரவாயில்லியே' என்பதுபோல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மன்னார் தொடரலானான்.


"அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ"

போன பாட்டுல சொன்ன சங்கதியேதான் இதுலியும்! ஆனா, கொஞ்சம் வேறவிதமா சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


முருகன் தன்னோட பாதத்தை இவுருக்குக் காமிச்சுட்டாரு.
பார்த்திட்டாரே தவர, இன்னும் அதைச் சரியா, கெட்டியா புடிச்சுக்கற புத்தி இன்னும் வரலியாம் இவுருக்கு!
இப்பிடி புத்திகெட்டு சீரளி[ழி]யறேனே! இது ஒனக்கே சரியா க்கீதா?ன்னு மொதல்ல கெஞ்சிப்பாக்கறாரு., அளு[ழு]தும் பாக்கறாரு.
ஒண்ணும் நடக்கலை.
இவ்ளோ அருமையா தனக்கு கெடைச்ச திருவடி காணாமலியே பூடுமோன்னு இவுருக்கு ஒரே ஆத்தாமையா வருது!


கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீகூட படிச்சுக் காமிச்சியே, 'நீயே வரினும் காணவும் நாணுவனே'ன்னு ஒரு பாட்டு.......

[நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. (எண்ணப்பதிகம் - திருவாசகம்)]

......அதாம்ப்பா,  அவுரு எளுதினதுதான்!.........

அதுல வர்றமாரி, கண்ணெதுருல கெடைச்ச திருவடியை புடிச்சுவைச்சுக்காம பூட்டோமேன்னு குமுற்ராரு!


பாட்டு வரிய நல்லாக் கெவனி.
முடியக் கெடவோன்னு ஒரு கெஞ்சல்,
மொறையோ இதுன்னு ஒரு அளுகை
அப்பால, இன்னோரு தபா, மொறையோன்னு ஆத்தரமாக் கேக்கறாரு!


அதுக்காக, இன்னாத்த சொல்லி முருகனைக் குத்திக் காமிக்கறாருன்னு பாரு.!

"வடி விக்ரம வேல் மகிபா! குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"

ஆத்தரம் கண்ணை மறைக்கறப்ப, இன்னான்னால்லாம் வாயுல வருதுன்னு பாரு.


மேலோட்டமாப் பாத்தேன்னா, இந்த வரி அப்பிடியே முருகனை உச்சாணிக்கொம்புல தூக்கிவைச்சுப் பாடறமாரி இருக்கும்.
ஆனாக்காண்டியும், அதுக்குள்ளாற, ஒரு லேசான கிண்டலும் கூடவே கீது!


'வடிவிக்ரம வேல் மகிபா'ன்றாரு.
வடிவேலுன்னா, கூர்ப்பான வேலுன்னு அர்த்தம்
விக்ரம வேல்னா வெற்றிவேல்னு அர்த்தம்
'மகி'ன்னா இந்த பூமி
மகிபன்னா பூமியை காப்பத்தற தலைவன்னு பொருளு.
கூர்ப்பான வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு இந்த ஒலகத்தையெல்லாம் காப்பாத்தற தலைவான்னு மொதல்ல சொல்றரு!


ஆச்சா?


இப்ப அடுத்தாப்புல, "குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"ன்னு வருது!


கொ[கு]றக்கொலத்துல பொறந்த மின்னல்கொடிபோல இடுப்பு க்கீற வள்ளியைக் கட்டிப்புடிச்சுக்கறவனேன்னு சொல்லலாம்.
இல்லாட்டி, கொறக்கொலத்தைக் காப்பாத்தறதுக்கின்னு அங்க கொடி போல வந்து பொறந்த வள்ளின்னும் சொல்லலாம்.


இப்பிடி சொல்லிட்டு குணபூதரனேன்னு முடிக்கறாரு.
பூ'ன்னாலும் பூமிதான், இந்த ஒலகந்தான்!
தரன்னா, காப்பாத்தற தலைவன்னு அர்த்தம்.
இப்ப கங்கையைக் காப்பாத்தி தன்னோட தலையுலியே வைச்சுக்கினு க்கீற சிவனை, கங்காதரன்னு சொல்றோமில்ல, அதும்மாரி!
அப்போ, பூதரன்னா, பூமியைக் காப்பாத்தற தலைவனேன்னு ஆவுதுல்லியா?
பூதரம்னா மலைன்னும் ஒரு பொருளு க்கீது! அதுவும் இங்க வைச்சுக்கலாம்


அப்பிடிக் கேக்கறப்ப, குண பூதரனேன்னு சொல்றாரு.
நம்மளைப் பொருத்தவரைக்குந்தான் இந்த நல்ல கொணம், கெட்ட கொணம்னு பிரிச்சுப் பாக்கறதெல்லாம்!
சாமின்னு..... கந்தசாமின்னு.... வண்ட்டா, கொணம்னு ஒண்ணு இல்லாததுதான் அவரோட கொணமே~!


அதுனால, குணபூதரன்னா, ஒரு பெரிய மலைபோல அல்லாக் கொணங்களையும் வைச்சுக்கினுக்கீற ராசாவேன்னு சொல்லலாம்.


அதான், மகிபான்னு சொல்லிட்டாரே! இன்னொரு தடவையும் பூதரனேன்னு எதுக்கு சொல்லணும்? என நான் கேட்டேன்!


தன்னோட அறிவுக்கெட்டத்தனத்தால கெடைக்காமப் போயிறுமோன்ற அச்சத்துல,
இம்மாம் பெரிய ஒலகத்தியே காப்பாத்தற நீயே, .....பெரிய வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற நீயே, .......வள்ளியம்மா காலுல வுளுந்து கெடக்கறேதானே, .....அப்ப, இந்த புத்திகெட்டவனுக்கும் கொஞ்சம் கருணை காட்டினா இன்னா கொறைஞ்சா பூடுவே'ன்னு செல்லமா சீண்டுறாரு!


இதான் இந்தப் பாட்டுக்குள்ளாற க்கீற டமாஷான சமாச்சாரம்' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

'கிட்டத்தட்ட இப்ப நீ சொல்லிண்டு வர்ற பாட்டுல்லாம் என்னமோ முருகனும், அருணகிரியாரும் நேரடியா பேசிக்கறமாதிரியே இருக்குடா மன்னார்!' எனச் சிலாகித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'ஞான் பறய நெனைச்சு! ஆசானும் அதே பறஞ்சு!' என்றான் நாயர்!


ஒன்றும் பேசாமல், பாட்டின் நயத்திலேயே ஆழ்ந்தேன் நான்!
****************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Friday, August 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 23

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 23



22

ஆர்வமிகுதியால் நானே படித்தேன். அதற்கு மயிலை மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

காளைக் குமரே சனெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே

காளைக் குமரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.

இது ஒரு விசேசமான பாட்டு! ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்லுவாங்க! அப்பிடிக் குள[ழ]ப்பியிருக்காரு!


ஒரு வகையுல பாத்தியானா, ஒரே ஒரு சமாச்சாரத்தை மட்டுமே நாலு வரியுல சொல்லியிருக்கறமாரித் தோணும்!


முருகன் வள்ளிக்காக உருகி, அதைப் பத்தி சிலாகிச்சு அருணகிரியாரு சொன்னதா இது படலாம்!


ஆனா, கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தீன்னா, இதுவரைக்கும் அப்பிடிச் சொல்லாதவரு இப்ப ஏன் இப்பிடி சொல்லணும்னும் தோணும்!


அந்த வகையுல நான் இப்ப சொல்லப் போறேன்!


எனக்கென்னவோ, எப்பவும் போலவே மொத ரெண்டு வரியுல ஒரு விசயம், அடுத்த ரெண்டு வரியுல அதுக்குப் பொருத்தமா ஒரு சமாச்சாரம்னு சொன்னதுமாரித்தான் படுது!


எப்பிடீன்னு சொல்றேன் கேளு!

"காளைக் குமரேசன் எனக்கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா"

இனிமே உசிரோட இருந்து இன்னா பிரயோசனம்னு கோபுரத்தும் மேலேர்ந்து குதிக்கறாரு இவுரு!

கீளே[ழே] விள[ழ]றப்ப இவுரு முருகனோட கையுல!

அவன் இன்னாமோ சின்னப் பையன்னே இவுருக்கு நெனைப்பு இதுவரைக்கும்!

ஆனா, இப்பத்தான் புரியுது..... அவன் ஒரு காளைன்னு!

காளை மாரி ஒரு கட்டான துடிப்பான வெடலைப்பையன்!


'சொல்லற! சும்மா இரு"ன்னு ஒரு உபதேசமும் குடுக்கறாரு.

இவுரா... 'டபால்'னு அவுரு காலுல விள[ழ]றாரு.


இப்பிடி ஒரு தவப்பயனை எனக்குக் குடுத்த அதிசயத்தை இன்னான்னு சொல்லன்னு மலைச்சுப்போயி நிக்கறாரு!


நான் முன்னாடியே பல எடத்துல சொல்லிக் காமிச்சிருக்கேனே.. இந்த 'ஆ'ன்னு வந்தா அது ஒரு ஆச்சரியக்குறின்னு... அதும்மாரித்தான் இதுல வர்ற 'ஆ'வும்.


என்னியப் பிடிச்சவன், எனக்கு தன்னோட காலைக் காமிச்சுக் கும்பிடுன்னு சொன்னவனைப் பாக்கறதுக்கு நான் இன்னா தவம் பண்ணியிருக்கணும்னு அருணகிரியாரு ஆச்சரியப்படறாரு!

சரி, இப்ப இதுக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்?

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே"

ஆரு இந்த ஆளு?
சுர பூபதி!
இந்த ஒலகத்துக்கே சக்கரவர்த்தி!

அதுவும் இன்னாமாரி ஆளு?
மேருவையே!
ஒலகத்துலியே பெரிய மலையான மேருமலைக்கு நிகரான ஆளு!

அதும் மட்டுமா?
அவுரு 'வேளு'!
'வேள்'னா ஒலகத்துலியே பெரிய ஆளுன்னு அர்த்தம்!

அவுரு இன்னா பண்ணினாரு?
'பாளைக் குழல் வள்ளி பாதம் பணியும்'


ஒரு பொம்பளை காலுல போயி விளு[ழு]ந்து கெடக்கறாராம்!

ஆரு அந்தப் பொண்ணு?
இவுருதான் எனக்கு வோணும்னு தவங்கெடந்த பொண்ணு
வள்ளி!

பாளைக்குழல் வள்ளி!
குழல்னா தலைமயிரு.
அது தென்னம்பாளைமாரி சுருள் சுருளா வளைஞ்சு கெடக்குதாம்!


வள்ளி ஆரு!
இச்சா சக்தி!
நம்மளோட ஆசையெல்லாம் இப்பிடித்தான் சுருள் சுருளா நெறைஞ்சு கெடக்குது!

அந்த இச்சையையெல்லாம் அடக்கறதுக்காக, அதோட காலைப் பிடிச்சுக் காப்பாத்தற கடவுள்தான் கந்தன்!

மலைபோல க்கீற பெரிய சக்கரவர்த்தி, தானே எறங்கிவந்து, ஆசையை அடக்கறதுக்காவ, அதோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்காறாருன்னு இந்த வரி சொல்லுது!


அதும்மாரி, கெட்ட ஆசையோடவே திரிஞ்ச என்னைக் காப்பாத்தி, ஒன்னோட காலையும் குடுத்த அதிசயத்தை இன்னான்னு நான் சொல்றதுன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கதறுராரு அருணகிரியாரு.

'என்னத்தை நான் சொல்றது? இப்படி ஒரு அர்த்தத்தைச் சொன்னியேடா மன்னார்! ' என வியந்தார் சாஸ்திரிகள்!

நாயரிடமிருந்து 'ஓம் சரவணபவ' ஓங்கி ஒலித்தது!

கபாலி கோயில் மணியோசை தூரத்திலிருந்து கேட்டது!
*****************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Thursday, July 21, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22
21.

'ம்ம்..அடுத்த பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறிகா ணவெனக்
கிருதாள் வனசந் தரவென் றிசைவாய்
வரதா! முருகா! மயில்வா கனனே!
விரதா சுரசூ ரவிபா டணனே!

என நான் படிக்க, அதைப் பதம்பிரித்துச் சொன்னான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா! முருகா! மயில் வாகனனே!
விரத அசுர சூர விபாடணனே!

'ரொம்ப ரொம்ப எளிமையா இந்தப் பாட்டுல உருகியிருக்காரு அருணகிரியாரு!
அதே சமயம் கேக்கவேண்டியதை, சொல்லவேண்டிய முறையுல சொல்லிக் கேட்டுமிருக்காரு! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!

"கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய்?"

முருகனைப் பார்த்ததுக்கப்புறமா இவுருக்கு வேற எதுவுமே கேக்கத் தோணலை!
ஒண்ணே ஒண்ணுதான் மனசுல திரும்பத் திரும்ப வருது !

போறும்ப்பா இந்த ஒலக வாள்[ழ்]க்கை! எனக்கு முத்[க்]தியக் குடுப்பான்னு மட்டுந்தான் கேக்க வருது!

எதுக்கு முத்தி?
முத்தின்னா இன்னா?

சொர்க்கத்துல போயிக் குந்திக்கறதா?
அதான் இல்ல!

முத்தின்னா, முருகனோட காலடியுலியே கெடக்கறது!
ஆருக்குக் கெடைக்கும் இந்த பாக்கியம்?
எப்பவுமே அவனோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறதுன்னா சும்மாவா?
அதுக்கு எம்மாங் குடுத்து வைச்சிருக்கணும்?
அதான் 'கருதா மறவா நெறி'!


அதுக்கப்புறமா எதையுமே கருத வேண்டியதில்ல!
அத்தப் பாத்ததுக்கப்புறமா, அதை வுட்டு வேற நெனைப்பும் இருக்காது!
எப்பவுமே மறக்கவுமே மறக்காது!
அதுக்குள்ளாறயே கெடக்கறப்போ, வேற இன்னா சொகம் வோணும் ஒனக்கு?


எதையுமே கருதாம, எப்பவுமே மறக்காத நெ[நி]லைக்கு இன்னாத்த உதாரணமாச் சொல்லலாம்?


மனுசனாப் பொறந்தா இந்த ரெண்டுமே இருக்கும்!
ஒண்ணுமில்லாத விசயத்தைப் போயி நெனைச்சு நெனைச்சு மருகிக்கினே இருப்போம்!
அதே சமயத்துல, ஒர்த்தன் நமக்குப் பண்ணின நல்லதை மறந்திட்டு, கெட்டத மட்டும் மறக்காமலும் இருபோம்.
மனுசனே இப்பிடின்னா, சூரனைப் போல அசுரனைப் பத்திக் கேக்கவா வோணும்?


தனக்கு வரங்குடுத்த சிவனோட புள்ளதானே இப்ப நமக்கு நல்லது சொல்ல வந்திருக்கான்றத மறந்திட்டு, முருகனோடயே சண்டைக்குப் போனவந்தானே சூரன்!
அப்பிடியாப்பட சூரன் பண்ணின தப்பை மனசுல கருதாம, அவனுக்கும் நல்லது பண்ணினாரு முருகன்!
இத்தத்தான் அடுத்த ரெண்டு வரியுல வைச்சுப் பாடுறாரு அருணையாரு!


அதுக்காவ இன்னாத்தக் கேக்கறாருன்னு பாரு!


முத்தி வோணும்னா, எனக்கு வேற ஒண்ணுமே வேணாம்ப்பா!
ஒரு ரெண்டு தாமரைப் பூவ மட்டும் குடுப்பான்னு கெஞ்சறாரு!
அதென்னா ரெண்டு தாமரைப் பூவு?
அதான் முருகனோட ரெண்டு பாதமும்!
'இருதாள் வனசம்'

'வனசம்'னா தாமரைப்பூ!
ஐயரைக் கேட்டியானா, வனஜம்ன்ற சமஸ்கிருத வார்த்தைன்னு சொல்லுவாரு!


அதுவும் சும்மா லேசுல கெடைச்சிராது!
அதுக்கு அந்த கந்தந்தான் மனசு எ[இ]ரங்கணும்!


எனக்கு முத்தி குடுப்பான்னு இங்க கேக்கல!
தாமரைப்பூ மாரி க்கீற ஒன்னோட ரெண்டு பாதத்தையும் தர்றதுக்கு எப்பப்பா மனசு வைக்கப் போறே! அப்பத்தானே எனக்கு முத்தி கெடைக்கும்னு கெஞ்சறாரு!


எப்பிடிக் கெஞ்சறாருன்னு கெவனி!


'வரதா'ன்றாரு!
வரதன்னா கேட்ட வரத்தத் தர்றவன்!
முருகனை வுட்டா வேற ஆரு கேட்டதுமே குடுக்கறவங்க!
"கந்தா"ன்னா "இந்தா"ன்றுவான் அந்தக் குமரன்!


அடுத்தாப்புல 'முருகா'ன்னு அன்பாக் கூப்புடறாரு!
முருகன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்!
அதுனால, அதிகமா சொல்ல வேண்டியதில்ல!


சீக்கிரமாவே வந்து கேட்டதயெல்லாம் குடுத்துருவான்னாலும், இவுருக்கு
இன்னும் அவசரம்!


அதுனால, 'மயில் வாகனனே'ன்னு சொல்லிக் காமிக்கறாரு!
அப்பத்தானே 'சட்டுன்னு' கெளம்பி வந்திருவான்னு ஒரு ஆசை இவுருக்கு!


அதுக்கு அப்பால சொல்ற வார்த்தைதான் இதுல உச்சம்!


'விரதாசுர சூர பயங்கரனே'ன்னு ஒரு சொல்லு வுடறாரு!


நான் முந்தி சொன்னேனே அதேதான் இது!


விரதம்னா நாளு கெளமைக்கு நாம இருக்கோமே அந்த விரதமில்ல இது!
ரதம்னா அள[ழ]குன்னு அர்த்தம்~!
விரதம்னா, அளகில்லாததுன்னு புரிஞ்சுக்கணும்!


தனக்குக் கெடைச்ச வரத்தைக் குடுத்தவரோட புள்ளைன்றத மறந்ததுனால, இவனோட பெருமையெல்லாம் போயிருச்சுன்றாரு!
அதுனால, வெறும அசுரனா இருந்தவன், இப்ப விரத அசுரனாயிட்டானாம்!


அதாவது, நல்ல கொணமே இல்லாத ராட்சசன்னு பொருளு!

அந்த சூரனையும் கொல்லாம, ரெண்டாப் பொளந்தாரு முருகன். விபாடணம் பண்றதுன்னா ஒரே போடுல ரெண்டாப் பொளக்கறது! அத்தப் பண்ணினதால விபாடணனேன்னு கூப்புடறாரு! எப்பிடிப் பொளந்தாரு?


மயிலும், சேவலுமா! ஒளியும் ஒலியுமா!


அவனுக்கும் நல்லதுதான் செஞ்சாரு முருகன்!


அதும்போல, கொஞ்சங்கூட நல்லதே இல்லாத எனக்கும், என்னோட இந்த நெனைப்பு,மறப்புன்ற ரெண்டையும் பொளந்து, ஒன்னோட ரெண்டு பாதகமலத்தை எப்பப்பா தரப் போறேன்னு கெஞ்சிக் கேக்கறதுதான் இந்தப் பாட்டுல சொல்லியிருக்கற பெரிய சங்கதி!'
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

அவன் சொன்ன வேகத்தில் பிரமித்துப் போய் நாயர், மன்னாரையே பார்த்துக் கொண்டிருந்தான்!


சாஸ்திரிகள் துண்டை எடுத்து, தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டார்!
***********
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Tuesday, July 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21


20.

‘என்னமோ புது ரூட்டுன்னு சொன்னியே! ஒரே ஆர்வமா இருக்கு மன்னார்!’ என்றேன் நான்!

‘அதே! ஞானும் விளிக்க நெனைச்சு!’ என்றான் நாயர்.

‘அது ஒண்ணுமில்லேப்பா! இதுவரைக்கும் மனசைப் பாத்து தனக்குக் கிடைச்ச அநுபுதியைப் பத்திச் சொல்லி, இனிமே எப்பிடி ஒயு[ழு]ங்கா இருக்கணும்னு சொல்லிக்கினு வந்தாரில்ல? இப்ப போன ரெண்ட பாட்டுலியும், முருகனோட பெருமையைப் பத்தி சொன்னதும், அப்பிடியே இவரோட நெனைப்பெல்லாம் அந்தக் கந்தன் மேல திரும்பிரிச்சு! ‘நீ இன்னான்னால்லாம் எனக்குக் குடுத்தே கந்தா’ன்னு இப்ப வரப்போற சில பாட்டுங்கள்ல சொல்லப் போறாரு, விசயம் இன்னாமோ ஒண்ணேதான்! ஆனாக்காண்டிக்கும், முருகனைப் பாத்தே பேசற மாரி இந்தப் பாட்டுங்க இருக்கும். அத்தத்தான் சொன்னேன். சரி, சரி, டயத்த வேஸ்ட் பண்ணாம அடுத்த பாட்டைப் படி’ என்றான் மயிலை மன்னார்.

ஆர்வம் இன்னும் அதிகமாக, நானும் படிக்கலானேன்.

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதே சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

மொதல்ல கடைசி ரெண்டு வரியச் சொல்லிட்டு, மொத ரெண்டு வரியப் படிச்சேன்னா, ஒனக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் புரியலாம். ஆனாலும், இது கொஞ்சம் அபூர்வமான பாட்டு. ஒரு பெரிய சமாச்சாரத்த ரொம்ப அஸால்ட்டாச் சொல்லிட்டுப் பூட்றாரு அருணகிரியாரு!

இப்ப, கடைசி ரெண்டு வரையப் பாப்பம்.

”விரிதாரண விக்கிரம வேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே”

இதுல ஒரு ரெண்டு விசயம் சொல்லி க்கீறாரு அருணகிரியாரு.
“விரிதாரண விக்கிரம வேள்;” “ இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.”

இந்த விரிதாரண விக்ரம வேளுன்றத, ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்றாங்க. விரிஞ்ச தோளைக் கொண்ட வீரனேன்னு சிலபேரு, விரிஞ்ச தோளுல மாலையைப் போட்டுக்கினு க்கீற வீரனேன்னு சிலபேருங்க சொல்ல நான் கேட்டிருக்கேன்! ஆனா, இதோட மெய்யான அர்த்தம் இன்னான்னு இப்ப சொல்றேன் கேட்டுக்க!


விரி தாருன்னா, வெற்றிக்கு அடையாளமா சூட்டற வாகை மாலை.

எப்ப இதும்மாரி மாலை போடுவாங்க?
எதுனாச்சும் சண்டையுல கெலிச்சா, இப்பிடி ஒரு மாலை வந்து ஒன் களு[ழு]த்துல விளு[ழு]ம்.

அதான் அந்த அடுத்த வார்த்தை, ‘ரண’
‘ரணம்’னா சண்டை, போரு.
விக்ரமன்னா வெற்றி அடையுறது.
வேளுன்னா வீரன்.
ஆகக்கூடி, இது விரி-தார்-ரண-விக்ரம-வேள்!

சரியா? இப்ப அடுத்த சொல்லைப் பாப்பம்.
’இமையோர் புரி தாரக நாக புரந்தரனே’

தேவருங்க கண்ணு எப்பவுமே இமைக்காதாம்! அதுனால, அவங்களுக்கு இமையோருன்னு ஒரு பேரு உண்டு.

‘புரி’ன்னா ஊரு.
தர்மபுரின்னு ஒரு ஊர்ரு க்கீதுல்ல, அதுமாரி!

இமையோருங்களோட புரி எது?
தேவலோகம். அதுக்கு ‘நாகம்’னு ஒரு பேரும் க்கீது.

’தாரக’ன்னா, கஸ்டத்தயெல்லாம் போக்கறவன்னு அர்த்தம். சர்த்தானே சாமி’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்க்க, அவரும், ‘ஆஹா! அப்படித்தான்!’ என்பதுபோல் கண்ணைக் காட்டினார்.

’புரந்தரன்’ன்னா காப்பத்தறவன்.

இப்ப இந்த வரி இன்னா சொல்லுது?
’இமையோர் நாகபுரி தாரக புரந்தரனே’ இதுக்கு இன்னா அர்த்தம் சொல்லு’ என என்னைப் பார்த்தான் மன்னார்.

தேவர்களோட கஷ்டங்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய இருப்பிடமான தேவலோகத்தையும் காத்தருள் செய்தவனே’ எனப் புரிகிறது என்றேன்.

கரீட்டு! அப்பிடிப் பண்ணதாலத்தான், இவுரு ‘விரி தார் ரண விக்ரம வேளு!’ வெளங்குதா?’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டினான் நாயர்!

ரெண்டே வரியுல ஒரு பெரிய கதையையே சொல்லிட்டாரு! ஆனாக்க, இதுக்குள்ளியும் ஒரு அர்த்தம் க்கீது! அத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொத ரெண்டு வரியப் பாக்கலாம்.

’அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்திய ஆ’

கெடைக்கவே கெடைக்க முடியாத ஒரு பெரிய உண்மைப் பொருளு... அதான் அநுபூதி! கந்தனோட அநுபூதி!... கந்தரநுபூதி!

அம்மாம்பெரிய மெய்யான தத்துவத்த, கொஞ்சங்கூடத் தகுதியில்லாத, என்னை, அதக் கேக்கறதுக்கு தகுதியுள்ளவனா மாத்தி, ஒ[உ]பதேசம் பண்ணினியே சாமி! இது எம்மாம் பெரிய அதிசியம்னு ஆச்சரியப்படுறாரு அருணகிரியாரு!

இதுல இன்னா விசேசம்ன்றியா?

பொதுவா, ஒரு பொருளை ஒர்த்தன் கையுல குடுக்கறதுன்னா, நாமள்லாம் ஒண்ணுக்கு ஆயரம் தபா யோசிப்போம். இத்த இவங்கையுல குடுக்கலாமா? குடுத்தா ஒயு[ழு]ங்கா காபந்து பண்ணுவானா? இத்தக் குடுக்கறதால இன்னா லாபம்? இப்பிடில்லாம் யோசிப்போம். அப்பவும் ஒரு ‘டவுட்டோடவேதான் குடுப்போம்! இல்லேன்னா, இவன் இதுக்கு லாயக்கில்லைன்னு சொல்லிட்டு, நீ போயிட்டு வாப்பான்னு அனுப்பிருவோம்.

கொஞ்சங்கூட தகுதியே இல்லாதவன் கையுல போயி ஒரு பத்து லட்ச ரூவாயைத் தூக்கிக் குடுத்துருவோமா? மாட்டோமில்ல?

ஆனாக்க, முருகனோட கருணை எப்பிடியாப்பட்டுதுன்னா, குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னா, இவனோட தகுதியப் பார்த்துக்கினு காலங்கடத்தாம, ஒன்னிய அதுக்குத் தகுந்தவனா மாத்தி, ஒன்னாண்டை குடுத்துருவாரு! புரியுதா நான் சொல்றது?

அதாவது, நீ இன்னாமாரி ஆளா இருந்தாலும் சரி! அதப் பத்தியெல்லாம் கவலியே படாம, ஒன்னை அதுக்கு ஏத்த ஆளாவும் மாத்திட்டு, ஒனக்கு குடுத்திருவாரு!

இதான் இந்தப் பாட்டுல சொல்லாம சொல்லி க்கீற சமாச்சாரம்!


இப்ப இந்த தேவருங்கள எடுத்துக்கோ!

இன்னாமா ஆணவம் பிடிச்சு அலைஞ்சாங்க!

அந்த ஆணவத்தையெல்லாம் அடக்க இவங்களைவுட ஆணவம் பிடிச்ச ஒர்த்தன் வந்து அல்லாரியும் ஜெயில்ல தள்ளிட்டான்.

அப்பத்தான் புரிஞ்சுது தாங்க செஞ்ச தப்பு!

முருகந்தான் வந்து நம்மளையெல்லாம் காப்பாத்தப் போறார்னு தெரிஞ்சதும், ‘கந்தா அபயம்! கதிர்வேலா அபயம்’னு இந்திரன்லேர்ந்து அல்லாரும் வந்து காலுல விளு[ழு]ந்தாங்க! அவங்க மேல எ[இ]ரக்கப்பட்டு, அவங்களுக்கு புத்தியக் குடுத்து, சூரனை கெலிச்சு, அவங்க ஊரை அவங்களுக்கே மீட்டுத் தந்தாரு வடிவேலன்!

அதும்மாரியே, பண்ணாத அக்ரமம்லாம் பண்ணிட்டு, இனிமே வேற கெதியில்ல முருகான்னு சொல்லிட்டு கோபுரத்துலேர்ந்து குதிச்சவரைக் காப்பாத்தி, அவருக்கு ஆருக்குமே கெடைக்க முடியாத மெய்ப்பொருளை சொல்லிக் காமிச்சாரு முருகன்!

அதுனால, அந்த இந்திரன் பண்ணினமாரி, "ஓம் சரவணபவ"ன்னு வுடாம செபிச்சுக்கினே இருந்தியானா, ‘யாமிருக்க பயமேன்’னு அந்தக் கந்தன் வந்து அல்லாத்தியும் குடுப்பாருன்னு இதுக்குள்ள ஒரு பெரிய ரகசியத்தச் சொல்லாம சொல்லிட்டுப் பூட்டாரு அந்தப் புண்ணியவான்! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!’ எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ’ என ஜெபிக்கத் தொடங்கினான் நாயர்!

வங்கக் கடலின் வாடைக் காற்று இதமாக வீசத் தொடங்கியது!
*********************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Tuesday, July 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 20

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 20


19.

'இப்பிடில்லாம் முருகனைப் பத்திப் பேசினதும், 'டக்'குன்னு ஒரு நெனைப்பு அருணகிரியாரு மனசுல வந்து குதிக்குது.

'இன்னாத்துக்காவ இத்தினி நாளா நாம இந்த முருகனை நெனைக்காமலே போயிட்டோம்னு!'  அப்பத்தான் அவுருக்கு ஒ[உ]றைக்குது,... இந்தத் தும்பத்துக்கெல்லாம் எது ஆதாரம்னு. அதைப் பத்தி இந்தப் பாட்டுசொல்லுது. எங்கே பாட்டைப் படி' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார். புத்தகத்தைப் பிரித்துப் பாட்டைப் படித்தேன்!

வடிவுந் தனமும் மனமுங் குணமும்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடியென்றொருபா விவெளிப் படினே

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

எனப் பதம் பிரித்துச் சொன்னவன், 'இந்தப் பாட்டை இப்பிடிப் படிச்சீன்னா, இன்னும் நல்லாப் புரியும் எனச் சொல்லிக் காட்டினான்.

மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகிய ஆ
அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே.


'மிடி என்றொரு பாவி வெளிப்படினே, வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகிய ஆ'

இன்னா சொல்றாருன்னு பாப்பம்! 'மிடி'ன்னா வறுமைன்னு அர்த்தம். 'ஏளை[ழை]மைன்னு அன்னைக்கு ஒன்னோட தோஸ்த்து சிவசிவா சொன்னாரே அதான் மிடி.

அது மட்டும் வந்திருச்சின்னா, இன்னால்லாம் ஆவும்னு ஒரு பட்டியலே போடுறாரு. அதுல இன்ன விசேசம்னா, அதை அவுரு சொல்லியிருக்கற வரிசைதான்!


மொதல்ல போறது ஒன்னோட அள[ழ]கு! ஒன்னோட வடிவு கொறைய ஆரம்பிக்கும். ஒரு பவுடர் வங்கக்கூட காசு இல்லைன்னா, அப்பொறமா
இன்னாத்த அவன் சிங்காரிச்சுக்கறது? அளகா காமிச்சுக்கறது.?

வறுமை வந்தாலே கையுல இருந்த பணமெல்லாம் போயிருச்சுன்னுதானே அர்த்தம்! அதான் அடுத்ததா 'தனம்'னு சொல்றாரு.

அளகும், பணமும் பூடுச்சுன்னா, கூடவே அவனோட நல்ல மனசும் காணாமப் பூடும்! நல்ல மனசு இல்லாதப்ப, இன்னா பண்றதுன்னே தெரியாம புத்தி தடுமாறும். அதான் 'மனம்'னு சொல்லிருக்காரு.

நல்ல மனசு இல்லைன்னா, நல்ல 'கொணமும்' இல்லாமப் போயிறும்! சோத்துக்கே சிங்கி அடிக்கறப்ப, தாராளமா அள்ளிக் குடுக்கறதுக்கு எங்கே போறது? ஆரைப் பாத்தாலும் ஒரு வெறுப்பு, எத்த நெனைச்சாலும் ஒரு கோவம், அவமானம், ஆத்தரம்னு வரிசையா எல்லாம் வந்து அவனோட நல்ல கொணத்தையே சீரளி[ழி]ச்சிரும்.

இத்தினியும் ஆச்சுன்னா, குடும்பம் செதறிப் போவும். அதான் 'குடி'ன்னு சொல்லிருக்கற வார்த்தை.

சரி, இத்தினிக்குப்புறமும் நீ ஏதோ கொஞ்சம் மானமா இருக்கலாம்னு முயற்சி பண்ணினாக்கூட, ஒன்னோட குடும்பத்துல க்கீற சின்னஞ்சிறுசுங்க, அதான் ஒன்னோட கொ[கு]லம், சும்மா இருக்குமா?

அதுங்க பசி தாங்கம, எங்கியாச்சும் போயி, திருடியோ, இல்லைன்னா வேற வளி[ழி[யிலியோ, தப்புக் காரியங்க பண்ணி ஒன்னோட கொ[கு]லப் பெருமையையே அளி[ழி]ச்சிரும்.

எட்டாவது பாட்டுல சொன்ன அதே'ஆ'வை இங்க வைச்சு இந்த வரியை முடிக்கறாரு. 'ஆ'ன்னா 'இந்த வகை என்ன'ன்னு பொருளு.

இந்த வறுமைன்ற ஒண்னு வந்ததால, இன்னால்லாம் நடக்குது பாருன்னு சொல்றதுதான் அந்த 'ஆ'

வடிவு, தனம், மனம், குணம், குடி குலம்னு எல்லாம் ஒர்த்தனை விட்டுப் போயிறுதே! இது இன்னாப்பா இதுன்னு கேக்கறாரு.


ஆரை?
வேற ஆரை? அல்லாம் அந்த கந்தன்ட்டதான்!


போன பாட்டுல அவரோட நைனாவைப் பத்திச் சொல்றப்ப சொன்ன அதே பெருமையை இந்தப் பாட்டுல முருகனுக்கும் சொல்லி ஆரம்பிக்கறாரு.


'அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே'


ரெண்டு தபா 'அரசே'ன்னு சொல்லலைன்னாலும், இப்பிடிப் படிச்சியானா, அர்த்தம் நல்லாப் புரியும்.

ஒன்னோட நைனாவைப் போலவே நீயும் 'ஆதியும் அந்தமும் இல்லாதவன்'னு கொண்டாடறாரு.

'அயில்'னா கூர்ப்பா க்கீறது.

கூரான வேலைக் கையுல வைச்சிக்கினு க்கீற என்னோட செல்ல ராசாவே'ன்னு பாடறாரு.

இதாம்ப்பா காரணம் நான் ஒன்னிய இத்தினி நாளா நெனைக்காததுக்குன்னு சொல்லாம சொல்லி முடிக்கறாரு.


இதுவரைக்கும் தனக்குக் கெடைச்ச அநுபூதியப் பத்திச் சொன்னவரு, இப்ப ஏன் இப்பிடி ஒரு பாட்டுப் படிக்கறாருன்னு கேக்கணுமேன்னு தோணுமே? வேற ஒரு ரூட்டுல இப்பப் போறாருன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.மிச்சப் பாட்டையெல்லாம் பாக்கறப்ப புரியும்' எனச் சிரித்தான் மயிலை மன்னார்.
*********************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Sunday, June 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

18.

ரொம்ப அருமையா முருகனோட பெருமையைச் சொல்ற இந்தப் பாட்டை சொல்றதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்! எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான்! இருந்தாலும் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். பாட்டைப் படிடாப்பா' என ஆரம்பித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
வதிகா வலசூ ரபயங் கரனே.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல சூர பயங் கரனே.


"உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா"

இன்னாரோட புத்ரன்னா தானா ஒரு பெருமை வந்து ஒட்டிக்கும் இல்லியா? காந்தியோட புள்ளை; நேருவோட பொண்ணுன்னாலே தனியா ஒரு மரியாதை வரும். அதுமாரித்தான் இந்தப் பாட்டோட மொதல் ரெண்டு வரில முருகனோட தோப்பனார் பெருமையைப் பத்திச் சொல்லியிருக்கார் அந்த மஹானுபாவன்!

உதியா, மரியான்னு மொதல் ரெண்டு வார்த்தை.


இதுவரைக்கும் ஜனனம்னோ, மரணம்னோ இல்லாத ஒர்த்தர் ஆருன்னா அந்த சாக்ஷாத் சிவபெருமான் மட்டுந்தான். இதுவரைக்கும் உதிச்சதில்லை; மரிச்சதுமில்லை! 'ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி'தான் இந்த உதியா, மரியா!


அடுத்ததா, உணரா, மறவான்னு ஒரு ரெண்டு !


லோகத்துல இருக்கறவாளுக்கு இந்த ரெண்டும் இருக்கும். உணரத் தெரியும்; மறக்கத் தெரியும்! சிலபேருக்கு உணர மட்டுந்தான் தெரியும்; மறக்க முடியாம அல்லல்படுவா!
சிலபேருக்கு இந்த உணர்ச்சின்றதே இருக்காது; ஏன்னா, எல்லாத்தியும் மறந்துடுவா!


ஆனா, இந்த மறந்துணர்தலும், உணர்ந்து மறத்தலும் இல்லாத ஒரே தெய்வம் அந்தப் பரமேஸ்வரன் தான்! அன்னைக்கு ஒருநாள் வந்தாரே, அந்த சிவசிவாவைக் கேட்டியானா, வரிசையா தேவாரப் பாடலா எடுத்து விடுவார் இதுக்கு!


ஜடம் மாரி உணர்ச்சியே இல்லாம இருக்கார்னு நெனைச்சுண்டாலும், இல்லைன்னா, என்னை மறந்துட்டாரேன்னு நெனைச்சுண்டாலும், அவர் செய்ய வேண்டிய கார்யங்களைச் செஞ்சுண்டுதான் இருப்பர்! அதான் சிவனோட விசேஷ குணம்!


அடுத்தாப்பல சொல்லியிருக்கறது நம்ம எல்லாருக்குமே நன்னாத் தெரிஞ்ச அந்த அண்ணாமலையான் ஸ்தலபுராணம்! 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை! அவா ரெண்டு பேராலியும் கூட அறிஞ்சுக்க முடியாத பரஞ்சோதியேன்னு சொல்றார்.


இதையெல்லாம் சொல்றது ஆரைப் பத்தின்னா மின்னாடியே சொன்னமாரி, அந்தப் பரமேஸ்வரனைப் பத்தித்தான்! அவர்தான் 'விமலன்'! எந்தவிதமான மலங்களும் இல்லாதவர்! பரிசுத்தமானவர்!


அவரோட 'புதல்வா'ன்னு, புத்ரனேன்னு ஸுப்ரமண்ய ஸ்வாமியைக் கூப்பிடறார்.


இந்த வரியுல ரெண்டு விசேஷம் இருக்கு!


'உதியா, மரியா, உணரா, மறவா'ன்னு ஒரு நாலு வர்றதோன்னோ! அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா! அந்த நாலும் இந்தப் புதல்வான்னு ஒரு பேர்ல முடிஞ்சு இவருக்கு அடைமொழியா அமையறது ஒண்ணு.


ரெண்டாவதா, நடுவுல 'விதி மால் அறிய விமலன்'ன்னு சொன்னதால, இது எல்லாமே சிவனுக்கானதுதான்னும் தெளிவாச் சொல்லிடறார். இப்பிடியாப்பட்ட தோப்பனோரோட புள்ளைன்னு சொல்றப்பவே ஒரு தனி கெர்வம் வர்றதோன்னோ! அதான் இதோட விசேஷம்! அப்பிடிச் சொல்றப்பவே, இவருக்கும் அதே அளவுக்கு குணங்கள் இருக்குன்னும் சொல்லாமச் சொல்லி ஒசத்தி வைக்கறார் முருகனை!

"அதிகா அநகா அபயா அமராவதி காவல சூர பயங் கரனே"

இனிமே வர்றதுல்லாம் குமரனைச் சிலாகிச்சு சொல்றது! இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார்? என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை? அதுக்காக!


'அதிகா'ன்னா, தலைவனேன்னு அர்த்தம். இவருக்கும் மேலான தெய்வம் வேற ஆருமில்லைன்னு கொண்டாடறார் அருணகிரியார். இவரை மதிக்காம நடந்துண்ட சூரனாகட்டும், சின்னப்பையன் நீன்னு சொன்ன ஔவையாராகட்டும், அவாவாளுக்குத் தகுந்தமாரி பாடம் புகட்டினவர் முருகப் பெருமான்.
சூரனோடையும் விளையாட்டாவே யுத்தம் பண்ணி, ஜெயிச்சுக் காட்டினார்! ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார்! அப்படிப்பட்ட பெரிய நேதா, தலைவன் தான் இந்த அதிகன்!


'அநகன்' இது அடுத்தாப்ல சொல்ற வார்த்தை! 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா! ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது! ஏன்னா, இவர்தான் அந்த விமலனோட புள்ளையாச்சே1 இவர்கிட்ட எப்படி குத்தமோ, பாபமோ இருக்கமுடியும்?


தேவலோகத்தோட தலைநகருக்கு அமராவதிப் பட்டணம். தேவர்கள்லாம் வசிக்கற இடம் அமராவதி. அந்த பட்டணத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனுக்கும் தேவாளுக்கும் காப்பாத்திக் கொடுத்ததுனால 'அமராவதி காவல'ன்னு புகழ்றார்.


'சூர பயங்கரன்'.... பயங்கரமான ஆளு சூரபத்மன்! தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ? இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது?'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்!' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார்! ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான்! அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே!' எனச் சொல்லி நிறுத்தினார் சாம்பு சாஸ்திரிகள்!


'தன்னோட மனசைப் பாத்து அநுபூதின்னா இன்னான்னு சொல்லிக்கினே வந்தவரு திடீர்னு நடுவுல இப்பிடி ஒரு பாட்டை... அதுவும் முளு[ழு]க்க முளு[ழு]க்க முருகனோட பெருமையைப் பத்தி ஏன் சொல்லணும்னுதானே 'டவுட்டு]ப்படறே' என்றான் மயிலை மன்னார், என்னைப் பார்த்து!


'ஆம்' என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!


'இன்னாரைப் பர்த்தேன்; அவரு எனக்கு இன்னின்னது....காரு, பங்களா, ஒரு கோடி ரூபா.... குடுத்தாரு'ன்னு நான் சொல்லிக் காட்டினா, மொதல்ல ஒம்மனசுல இன்னா நெனைப்பு வரும்? ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே! இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே? அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும்! நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும்! சர்த்தானே நா சொல்றது?


இப்ப, தனக்குக் கிடைச்ச அநுபூதி அனுபவத்தைப் பத்தி வெலாவாரியா சொல்லிக்கினே வந்தாரு அருணகிரியாரு. அதுக்கு நடுவுல முருகன், கந்தன்னு பேரு அடிபட்டுக்கினே வந்திச்சில்ல? அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ! இப்பேர்ப்பட்ட ஆளா அவுரு? அப்போ இவர் சொல்றது உண்மையாத்தான் இருக்குமின்னு நமக்கெல்லாம் ஒரு தெம்பைக் குடுக்கத்தான் இந்தப் பாட்டுல முருகனோட அப்பாவோட பெருமையைச் சொல்லி, இவுரும் ஒண்ணும் அவுருக்குக் கொறைஞ்ச ஆளில்லைன்னு சொல்லிக் காட்றாரு!' எனச் சிரித்தான் மன்னார்! சாஸ்திரிகளும் கூடச் சேர்ந்து மந்தஹாஸமாகச் சிரித்தார்!


கபாலி கோவில் மணியோசையும் கூடவே ஒலித்துச் சிரித்தது!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP