Tuesday, July 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21


20.

‘என்னமோ புது ரூட்டுன்னு சொன்னியே! ஒரே ஆர்வமா இருக்கு மன்னார்!’ என்றேன் நான்!

‘அதே! ஞானும் விளிக்க நெனைச்சு!’ என்றான் நாயர்.

‘அது ஒண்ணுமில்லேப்பா! இதுவரைக்கும் மனசைப் பாத்து தனக்குக் கிடைச்ச அநுபுதியைப் பத்திச் சொல்லி, இனிமே எப்பிடி ஒயு[ழு]ங்கா இருக்கணும்னு சொல்லிக்கினு வந்தாரில்ல? இப்ப போன ரெண்ட பாட்டுலியும், முருகனோட பெருமையைப் பத்தி சொன்னதும், அப்பிடியே இவரோட நெனைப்பெல்லாம் அந்தக் கந்தன் மேல திரும்பிரிச்சு! ‘நீ இன்னான்னால்லாம் எனக்குக் குடுத்தே கந்தா’ன்னு இப்ப வரப்போற சில பாட்டுங்கள்ல சொல்லப் போறாரு, விசயம் இன்னாமோ ஒண்ணேதான்! ஆனாக்காண்டிக்கும், முருகனைப் பாத்தே பேசற மாரி இந்தப் பாட்டுங்க இருக்கும். அத்தத்தான் சொன்னேன். சரி, சரி, டயத்த வேஸ்ட் பண்ணாம அடுத்த பாட்டைப் படி’ என்றான் மயிலை மன்னார்.

ஆர்வம் இன்னும் அதிகமாக, நானும் படிக்கலானேன்.

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதே சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

மொதல்ல கடைசி ரெண்டு வரியச் சொல்லிட்டு, மொத ரெண்டு வரியப் படிச்சேன்னா, ஒனக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் புரியலாம். ஆனாலும், இது கொஞ்சம் அபூர்வமான பாட்டு. ஒரு பெரிய சமாச்சாரத்த ரொம்ப அஸால்ட்டாச் சொல்லிட்டுப் பூட்றாரு அருணகிரியாரு!

இப்ப, கடைசி ரெண்டு வரையப் பாப்பம்.

”விரிதாரண விக்கிரம வேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே”

இதுல ஒரு ரெண்டு விசயம் சொல்லி க்கீறாரு அருணகிரியாரு.
“விரிதாரண விக்கிரம வேள்;” “ இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.”

இந்த விரிதாரண விக்ரம வேளுன்றத, ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்றாங்க. விரிஞ்ச தோளைக் கொண்ட வீரனேன்னு சிலபேரு, விரிஞ்ச தோளுல மாலையைப் போட்டுக்கினு க்கீற வீரனேன்னு சிலபேருங்க சொல்ல நான் கேட்டிருக்கேன்! ஆனா, இதோட மெய்யான அர்த்தம் இன்னான்னு இப்ப சொல்றேன் கேட்டுக்க!


விரி தாருன்னா, வெற்றிக்கு அடையாளமா சூட்டற வாகை மாலை.

எப்ப இதும்மாரி மாலை போடுவாங்க?
எதுனாச்சும் சண்டையுல கெலிச்சா, இப்பிடி ஒரு மாலை வந்து ஒன் களு[ழு]த்துல விளு[ழு]ம்.

அதான் அந்த அடுத்த வார்த்தை, ‘ரண’
‘ரணம்’னா சண்டை, போரு.
விக்ரமன்னா வெற்றி அடையுறது.
வேளுன்னா வீரன்.
ஆகக்கூடி, இது விரி-தார்-ரண-விக்ரம-வேள்!

சரியா? இப்ப அடுத்த சொல்லைப் பாப்பம்.
’இமையோர் புரி தாரக நாக புரந்தரனே’

தேவருங்க கண்ணு எப்பவுமே இமைக்காதாம்! அதுனால, அவங்களுக்கு இமையோருன்னு ஒரு பேரு உண்டு.

‘புரி’ன்னா ஊரு.
தர்மபுரின்னு ஒரு ஊர்ரு க்கீதுல்ல, அதுமாரி!

இமையோருங்களோட புரி எது?
தேவலோகம். அதுக்கு ‘நாகம்’னு ஒரு பேரும் க்கீது.

’தாரக’ன்னா, கஸ்டத்தயெல்லாம் போக்கறவன்னு அர்த்தம். சர்த்தானே சாமி’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்க்க, அவரும், ‘ஆஹா! அப்படித்தான்!’ என்பதுபோல் கண்ணைக் காட்டினார்.

’புரந்தரன்’ன்னா காப்பத்தறவன்.

இப்ப இந்த வரி இன்னா சொல்லுது?
’இமையோர் நாகபுரி தாரக புரந்தரனே’ இதுக்கு இன்னா அர்த்தம் சொல்லு’ என என்னைப் பார்த்தான் மன்னார்.

தேவர்களோட கஷ்டங்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய இருப்பிடமான தேவலோகத்தையும் காத்தருள் செய்தவனே’ எனப் புரிகிறது என்றேன்.

கரீட்டு! அப்பிடிப் பண்ணதாலத்தான், இவுரு ‘விரி தார் ரண விக்ரம வேளு!’ வெளங்குதா?’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டினான் நாயர்!

ரெண்டே வரியுல ஒரு பெரிய கதையையே சொல்லிட்டாரு! ஆனாக்க, இதுக்குள்ளியும் ஒரு அர்த்தம் க்கீது! அத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொத ரெண்டு வரியப் பாக்கலாம்.

’அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்திய ஆ’

கெடைக்கவே கெடைக்க முடியாத ஒரு பெரிய உண்மைப் பொருளு... அதான் அநுபூதி! கந்தனோட அநுபூதி!... கந்தரநுபூதி!

அம்மாம்பெரிய மெய்யான தத்துவத்த, கொஞ்சங்கூடத் தகுதியில்லாத, என்னை, அதக் கேக்கறதுக்கு தகுதியுள்ளவனா மாத்தி, ஒ[உ]பதேசம் பண்ணினியே சாமி! இது எம்மாம் பெரிய அதிசியம்னு ஆச்சரியப்படுறாரு அருணகிரியாரு!

இதுல இன்னா விசேசம்ன்றியா?

பொதுவா, ஒரு பொருளை ஒர்த்தன் கையுல குடுக்கறதுன்னா, நாமள்லாம் ஒண்ணுக்கு ஆயரம் தபா யோசிப்போம். இத்த இவங்கையுல குடுக்கலாமா? குடுத்தா ஒயு[ழு]ங்கா காபந்து பண்ணுவானா? இத்தக் குடுக்கறதால இன்னா லாபம்? இப்பிடில்லாம் யோசிப்போம். அப்பவும் ஒரு ‘டவுட்டோடவேதான் குடுப்போம்! இல்லேன்னா, இவன் இதுக்கு லாயக்கில்லைன்னு சொல்லிட்டு, நீ போயிட்டு வாப்பான்னு அனுப்பிருவோம்.

கொஞ்சங்கூட தகுதியே இல்லாதவன் கையுல போயி ஒரு பத்து லட்ச ரூவாயைத் தூக்கிக் குடுத்துருவோமா? மாட்டோமில்ல?

ஆனாக்க, முருகனோட கருணை எப்பிடியாப்பட்டுதுன்னா, குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னா, இவனோட தகுதியப் பார்த்துக்கினு காலங்கடத்தாம, ஒன்னிய அதுக்குத் தகுந்தவனா மாத்தி, ஒன்னாண்டை குடுத்துருவாரு! புரியுதா நான் சொல்றது?

அதாவது, நீ இன்னாமாரி ஆளா இருந்தாலும் சரி! அதப் பத்தியெல்லாம் கவலியே படாம, ஒன்னை அதுக்கு ஏத்த ஆளாவும் மாத்திட்டு, ஒனக்கு குடுத்திருவாரு!

இதான் இந்தப் பாட்டுல சொல்லாம சொல்லி க்கீற சமாச்சாரம்!


இப்ப இந்த தேவருங்கள எடுத்துக்கோ!

இன்னாமா ஆணவம் பிடிச்சு அலைஞ்சாங்க!

அந்த ஆணவத்தையெல்லாம் அடக்க இவங்களைவுட ஆணவம் பிடிச்ச ஒர்த்தன் வந்து அல்லாரியும் ஜெயில்ல தள்ளிட்டான்.

அப்பத்தான் புரிஞ்சுது தாங்க செஞ்ச தப்பு!

முருகந்தான் வந்து நம்மளையெல்லாம் காப்பாத்தப் போறார்னு தெரிஞ்சதும், ‘கந்தா அபயம்! கதிர்வேலா அபயம்’னு இந்திரன்லேர்ந்து அல்லாரும் வந்து காலுல விளு[ழு]ந்தாங்க! அவங்க மேல எ[இ]ரக்கப்பட்டு, அவங்களுக்கு புத்தியக் குடுத்து, சூரனை கெலிச்சு, அவங்க ஊரை அவங்களுக்கே மீட்டுத் தந்தாரு வடிவேலன்!

அதும்மாரியே, பண்ணாத அக்ரமம்லாம் பண்ணிட்டு, இனிமே வேற கெதியில்ல முருகான்னு சொல்லிட்டு கோபுரத்துலேர்ந்து குதிச்சவரைக் காப்பாத்தி, அவருக்கு ஆருக்குமே கெடைக்க முடியாத மெய்ப்பொருளை சொல்லிக் காமிச்சாரு முருகன்!

அதுனால, அந்த இந்திரன் பண்ணினமாரி, "ஓம் சரவணபவ"ன்னு வுடாம செபிச்சுக்கினே இருந்தியானா, ‘யாமிருக்க பயமேன்’னு அந்தக் கந்தன் வந்து அல்லாத்தியும் குடுப்பாருன்னு இதுக்குள்ள ஒரு பெரிய ரகசியத்தச் சொல்லாம சொல்லிட்டுப் பூட்டாரு அந்தப் புண்ணியவான்! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!’ எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ’ என ஜெபிக்கத் தொடங்கினான் நாயர்!

வங்கக் கடலின் வாடைக் காற்று இதமாக வீசத் தொடங்கியது!
*********************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Tuesday, July 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 20

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 20


19.

'இப்பிடில்லாம் முருகனைப் பத்திப் பேசினதும், 'டக்'குன்னு ஒரு நெனைப்பு அருணகிரியாரு மனசுல வந்து குதிக்குது.

'இன்னாத்துக்காவ இத்தினி நாளா நாம இந்த முருகனை நெனைக்காமலே போயிட்டோம்னு!'  அப்பத்தான் அவுருக்கு ஒ[உ]றைக்குது,... இந்தத் தும்பத்துக்கெல்லாம் எது ஆதாரம்னு. அதைப் பத்தி இந்தப் பாட்டுசொல்லுது. எங்கே பாட்டைப் படி' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார். புத்தகத்தைப் பிரித்துப் பாட்டைப் படித்தேன்!

வடிவுந் தனமும் மனமுங் குணமும்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடியென்றொருபா விவெளிப் படினே

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

எனப் பதம் பிரித்துச் சொன்னவன், 'இந்தப் பாட்டை இப்பிடிப் படிச்சீன்னா, இன்னும் நல்லாப் புரியும் எனச் சொல்லிக் காட்டினான்.

மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகிய ஆ
அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே.


'மிடி என்றொரு பாவி வெளிப்படினே, வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகிய ஆ'

இன்னா சொல்றாருன்னு பாப்பம்! 'மிடி'ன்னா வறுமைன்னு அர்த்தம். 'ஏளை[ழை]மைன்னு அன்னைக்கு ஒன்னோட தோஸ்த்து சிவசிவா சொன்னாரே அதான் மிடி.

அது மட்டும் வந்திருச்சின்னா, இன்னால்லாம் ஆவும்னு ஒரு பட்டியலே போடுறாரு. அதுல இன்ன விசேசம்னா, அதை அவுரு சொல்லியிருக்கற வரிசைதான்!


மொதல்ல போறது ஒன்னோட அள[ழ]கு! ஒன்னோட வடிவு கொறைய ஆரம்பிக்கும். ஒரு பவுடர் வங்கக்கூட காசு இல்லைன்னா, அப்பொறமா
இன்னாத்த அவன் சிங்காரிச்சுக்கறது? அளகா காமிச்சுக்கறது.?

வறுமை வந்தாலே கையுல இருந்த பணமெல்லாம் போயிருச்சுன்னுதானே அர்த்தம்! அதான் அடுத்ததா 'தனம்'னு சொல்றாரு.

அளகும், பணமும் பூடுச்சுன்னா, கூடவே அவனோட நல்ல மனசும் காணாமப் பூடும்! நல்ல மனசு இல்லாதப்ப, இன்னா பண்றதுன்னே தெரியாம புத்தி தடுமாறும். அதான் 'மனம்'னு சொல்லிருக்காரு.

நல்ல மனசு இல்லைன்னா, நல்ல 'கொணமும்' இல்லாமப் போயிறும்! சோத்துக்கே சிங்கி அடிக்கறப்ப, தாராளமா அள்ளிக் குடுக்கறதுக்கு எங்கே போறது? ஆரைப் பாத்தாலும் ஒரு வெறுப்பு, எத்த நெனைச்சாலும் ஒரு கோவம், அவமானம், ஆத்தரம்னு வரிசையா எல்லாம் வந்து அவனோட நல்ல கொணத்தையே சீரளி[ழி]ச்சிரும்.

இத்தினியும் ஆச்சுன்னா, குடும்பம் செதறிப் போவும். அதான் 'குடி'ன்னு சொல்லிருக்கற வார்த்தை.

சரி, இத்தினிக்குப்புறமும் நீ ஏதோ கொஞ்சம் மானமா இருக்கலாம்னு முயற்சி பண்ணினாக்கூட, ஒன்னோட குடும்பத்துல க்கீற சின்னஞ்சிறுசுங்க, அதான் ஒன்னோட கொ[கு]லம், சும்மா இருக்குமா?

அதுங்க பசி தாங்கம, எங்கியாச்சும் போயி, திருடியோ, இல்லைன்னா வேற வளி[ழி[யிலியோ, தப்புக் காரியங்க பண்ணி ஒன்னோட கொ[கு]லப் பெருமையையே அளி[ழி]ச்சிரும்.

எட்டாவது பாட்டுல சொன்ன அதே'ஆ'வை இங்க வைச்சு இந்த வரியை முடிக்கறாரு. 'ஆ'ன்னா 'இந்த வகை என்ன'ன்னு பொருளு.

இந்த வறுமைன்ற ஒண்னு வந்ததால, இன்னால்லாம் நடக்குது பாருன்னு சொல்றதுதான் அந்த 'ஆ'

வடிவு, தனம், மனம், குணம், குடி குலம்னு எல்லாம் ஒர்த்தனை விட்டுப் போயிறுதே! இது இன்னாப்பா இதுன்னு கேக்கறாரு.


ஆரை?
வேற ஆரை? அல்லாம் அந்த கந்தன்ட்டதான்!


போன பாட்டுல அவரோட நைனாவைப் பத்திச் சொல்றப்ப சொன்ன அதே பெருமையை இந்தப் பாட்டுல முருகனுக்கும் சொல்லி ஆரம்பிக்கறாரு.


'அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே'


ரெண்டு தபா 'அரசே'ன்னு சொல்லலைன்னாலும், இப்பிடிப் படிச்சியானா, அர்த்தம் நல்லாப் புரியும்.

ஒன்னோட நைனாவைப் போலவே நீயும் 'ஆதியும் அந்தமும் இல்லாதவன்'னு கொண்டாடறாரு.

'அயில்'னா கூர்ப்பா க்கீறது.

கூரான வேலைக் கையுல வைச்சிக்கினு க்கீற என்னோட செல்ல ராசாவே'ன்னு பாடறாரு.

இதாம்ப்பா காரணம் நான் ஒன்னிய இத்தினி நாளா நெனைக்காததுக்குன்னு சொல்லாம சொல்லி முடிக்கறாரு.


இதுவரைக்கும் தனக்குக் கெடைச்ச அநுபூதியப் பத்திச் சொன்னவரு, இப்ப ஏன் இப்பிடி ஒரு பாட்டுப் படிக்கறாருன்னு கேக்கணுமேன்னு தோணுமே? வேற ஒரு ரூட்டுல இப்பப் போறாருன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.மிச்சப் பாட்டையெல்லாம் பாக்கறப்ப புரியும்' எனச் சிரித்தான் மயிலை மன்னார்.
*********************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Sunday, June 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19

18.

ரொம்ப அருமையா முருகனோட பெருமையைச் சொல்ற இந்தப் பாட்டை சொல்றதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்! எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான்! இருந்தாலும் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். பாட்டைப் படிடாப்பா' என ஆரம்பித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
வதிகா வலசூ ரபயங் கரனே.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல சூர பயங் கரனே.


"உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா"

இன்னாரோட புத்ரன்னா தானா ஒரு பெருமை வந்து ஒட்டிக்கும் இல்லியா? காந்தியோட புள்ளை; நேருவோட பொண்ணுன்னாலே தனியா ஒரு மரியாதை வரும். அதுமாரித்தான் இந்தப் பாட்டோட மொதல் ரெண்டு வரில முருகனோட தோப்பனார் பெருமையைப் பத்திச் சொல்லியிருக்கார் அந்த மஹானுபாவன்!

உதியா, மரியான்னு மொதல் ரெண்டு வார்த்தை.


இதுவரைக்கும் ஜனனம்னோ, மரணம்னோ இல்லாத ஒர்த்தர் ஆருன்னா அந்த சாக்ஷாத் சிவபெருமான் மட்டுந்தான். இதுவரைக்கும் உதிச்சதில்லை; மரிச்சதுமில்லை! 'ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி'தான் இந்த உதியா, மரியா!


அடுத்ததா, உணரா, மறவான்னு ஒரு ரெண்டு !


லோகத்துல இருக்கறவாளுக்கு இந்த ரெண்டும் இருக்கும். உணரத் தெரியும்; மறக்கத் தெரியும்! சிலபேருக்கு உணர மட்டுந்தான் தெரியும்; மறக்க முடியாம அல்லல்படுவா!
சிலபேருக்கு இந்த உணர்ச்சின்றதே இருக்காது; ஏன்னா, எல்லாத்தியும் மறந்துடுவா!


ஆனா, இந்த மறந்துணர்தலும், உணர்ந்து மறத்தலும் இல்லாத ஒரே தெய்வம் அந்தப் பரமேஸ்வரன் தான்! அன்னைக்கு ஒருநாள் வந்தாரே, அந்த சிவசிவாவைக் கேட்டியானா, வரிசையா தேவாரப் பாடலா எடுத்து விடுவார் இதுக்கு!


ஜடம் மாரி உணர்ச்சியே இல்லாம இருக்கார்னு நெனைச்சுண்டாலும், இல்லைன்னா, என்னை மறந்துட்டாரேன்னு நெனைச்சுண்டாலும், அவர் செய்ய வேண்டிய கார்யங்களைச் செஞ்சுண்டுதான் இருப்பர்! அதான் சிவனோட விசேஷ குணம்!


அடுத்தாப்பல சொல்லியிருக்கறது நம்ம எல்லாருக்குமே நன்னாத் தெரிஞ்ச அந்த அண்ணாமலையான் ஸ்தலபுராணம்! 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை! அவா ரெண்டு பேராலியும் கூட அறிஞ்சுக்க முடியாத பரஞ்சோதியேன்னு சொல்றார்.


இதையெல்லாம் சொல்றது ஆரைப் பத்தின்னா மின்னாடியே சொன்னமாரி, அந்தப் பரமேஸ்வரனைப் பத்தித்தான்! அவர்தான் 'விமலன்'! எந்தவிதமான மலங்களும் இல்லாதவர்! பரிசுத்தமானவர்!


அவரோட 'புதல்வா'ன்னு, புத்ரனேன்னு ஸுப்ரமண்ய ஸ்வாமியைக் கூப்பிடறார்.


இந்த வரியுல ரெண்டு விசேஷம் இருக்கு!


'உதியா, மரியா, உணரா, மறவா'ன்னு ஒரு நாலு வர்றதோன்னோ! அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா! அந்த நாலும் இந்தப் புதல்வான்னு ஒரு பேர்ல முடிஞ்சு இவருக்கு அடைமொழியா அமையறது ஒண்ணு.


ரெண்டாவதா, நடுவுல 'விதி மால் அறிய விமலன்'ன்னு சொன்னதால, இது எல்லாமே சிவனுக்கானதுதான்னும் தெளிவாச் சொல்லிடறார். இப்பிடியாப்பட்ட தோப்பனோரோட புள்ளைன்னு சொல்றப்பவே ஒரு தனி கெர்வம் வர்றதோன்னோ! அதான் இதோட விசேஷம்! அப்பிடிச் சொல்றப்பவே, இவருக்கும் அதே அளவுக்கு குணங்கள் இருக்குன்னும் சொல்லாமச் சொல்லி ஒசத்தி வைக்கறார் முருகனை!

"அதிகா அநகா அபயா அமராவதி காவல சூர பயங் கரனே"

இனிமே வர்றதுல்லாம் குமரனைச் சிலாகிச்சு சொல்றது! இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார்? என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை? அதுக்காக!


'அதிகா'ன்னா, தலைவனேன்னு அர்த்தம். இவருக்கும் மேலான தெய்வம் வேற ஆருமில்லைன்னு கொண்டாடறார் அருணகிரியார். இவரை மதிக்காம நடந்துண்ட சூரனாகட்டும், சின்னப்பையன் நீன்னு சொன்ன ஔவையாராகட்டும், அவாவாளுக்குத் தகுந்தமாரி பாடம் புகட்டினவர் முருகப் பெருமான்.
சூரனோடையும் விளையாட்டாவே யுத்தம் பண்ணி, ஜெயிச்சுக் காட்டினார்! ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார்! அப்படிப்பட்ட பெரிய நேதா, தலைவன் தான் இந்த அதிகன்!


'அநகன்' இது அடுத்தாப்ல சொல்ற வார்த்தை! 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா! ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது! ஏன்னா, இவர்தான் அந்த விமலனோட புள்ளையாச்சே1 இவர்கிட்ட எப்படி குத்தமோ, பாபமோ இருக்கமுடியும்?


தேவலோகத்தோட தலைநகருக்கு அமராவதிப் பட்டணம். தேவர்கள்லாம் வசிக்கற இடம் அமராவதி. அந்த பட்டணத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனுக்கும் தேவாளுக்கும் காப்பாத்திக் கொடுத்ததுனால 'அமராவதி காவல'ன்னு புகழ்றார்.


'சூர பயங்கரன்'.... பயங்கரமான ஆளு சூரபத்மன்! தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ? இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது?'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்!' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார்! ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான்! அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே!' எனச் சொல்லி நிறுத்தினார் சாம்பு சாஸ்திரிகள்!


'தன்னோட மனசைப் பாத்து அநுபூதின்னா இன்னான்னு சொல்லிக்கினே வந்தவரு திடீர்னு நடுவுல இப்பிடி ஒரு பாட்டை... அதுவும் முளு[ழு]க்க முளு[ழு]க்க முருகனோட பெருமையைப் பத்தி ஏன் சொல்லணும்னுதானே 'டவுட்டு]ப்படறே' என்றான் மயிலை மன்னார், என்னைப் பார்த்து!


'ஆம்' என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!


'இன்னாரைப் பர்த்தேன்; அவரு எனக்கு இன்னின்னது....காரு, பங்களா, ஒரு கோடி ரூபா.... குடுத்தாரு'ன்னு நான் சொல்லிக் காட்டினா, மொதல்ல ஒம்மனசுல இன்னா நெனைப்பு வரும்? ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே! இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே? அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும்! நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும்! சர்த்தானே நா சொல்றது?


இப்ப, தனக்குக் கிடைச்ச அநுபூதி அனுபவத்தைப் பத்தி வெலாவாரியா சொல்லிக்கினே வந்தாரு அருணகிரியாரு. அதுக்கு நடுவுல முருகன், கந்தன்னு பேரு அடிபட்டுக்கினே வந்திச்சில்ல? அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ! இப்பேர்ப்பட்ட ஆளா அவுரு? அப்போ இவர் சொல்றது உண்மையாத்தான் இருக்குமின்னு நமக்கெல்லாம் ஒரு தெம்பைக் குடுக்கத்தான் இந்தப் பாட்டுல முருகனோட அப்பாவோட பெருமையைச் சொல்லி, இவுரும் ஒண்ணும் அவுருக்குக் கொறைஞ்ச ஆளில்லைன்னு சொல்லிக் காட்றாரு!' எனச் சிரித்தான் மன்னார்! சாஸ்திரிகளும் கூடச் சேர்ந்து மந்தஹாஸமாகச் சிரித்தார்!


கபாலி கோவில் மணியோசையும் கூடவே ஒலித்துச் சிரித்தது!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

Wednesday, June 08, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

17.
வடை டீ சாப்பிட்டானதும், அடுத்த பாட்டை உடனே படித்தேன்.

யாமோ தியகல் வியுமெம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே/னடவீர் நடவீ ரினியே.

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

"யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்"

படிக்கறது வேற ஓதறது வேற. படிக்கறதுன்னா, சும்மா மெலெளுந்தவாரியா கண்ணை ஓட்டறது. கவனமாப் புரிஞ்சுக்காம, வேணுங்கறதை மட்டும் அப்படியே படிச்சுகிட்டுப் போறது! பரிட்சைக்கு சிலபேர் படிப்பாங்களே, முக்கியமான கேள்விங்களுக்கான பதிலை மட்டும்... அதும்மாரின்னு வைச்சுக்கலாம். படிச்சதுல பாதிய மறந்திருவான்!

ஆனா, ஓதறதுன்னா, ஒ[உ]ணர்ந்து சொல்றது. ஒவ்வொரு வார்த்தையையும் அப்பிடியே நெஞ்சுல அடிச்சமாரி வாங்கிக்கினு சொல்றதுக்கு ஓதறதுன்னு பேரு. நம்ம தருமபுரம் சாமிநாதன் தேவாரம் பாடறப்ப கவனிச்சியானா, இந்த ஓதறதுன்னா இன்னான்னு ஒனக்குப் புரிஞ்சிரும்! அதுனாலத்தான், அவங்களையெல்லாம் 'ஓதுவார்'னு சொல்றோம்.

சரி, அப்பிடி நல்லா மனசுல வாங்கிக்கினு படிச்ச படிப்பும், அதுனால வந்த அறிவையும் கொடுத்தவன் முருகன். அவனோட அருள் இல்லாம இப்பிடிப் படிக்கவோ, படிச்சதைப் புரிஞ்சுக்கவோ, அறிவைப் பெருசாக்கவோ முடியாது! அப்பிடிக் கிடைச்ச படிப்பையும், அறிவையும் வைச்சுக்கினு இன்னா பண்ணனும்? மேகத்துலேர்ந்து ஊத்தற மளை[ழை] கடலுக்குப் போயி, திரும்பவும் மேகமா மாறுறமாரி, அவங்கிட்டேர்ந்து வந்தது, திரும்பவும் அவனுக்கே போறமாரி நடந்துக்கணும்!

அவர்கிட்டியே திருப்பித் தந்திறணும்னு சொல்றாரு. எப்பிடித் திருப்பித் தர்றது? அந்த அறிவை வைச்சு அவனை மட்டுமே பாடுன்றாரு. ஏன்னா, இது அவர் குடுத்தது! அவர்கிட்டியே அவருக்கு அலங்காரமாத் திருப்பிக் குடு! அதாங்காட்டிக்கு, மத்த எதுலியும் சிந்தனை போவாம, முருகன் மேலியே நெனைப்பாக் கெடக்கணும்!
இதான் இந்த ரெண்டு வரியுல சொல்றது!

"பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர் நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே"

அதுக்கான வளி[ழி]யை இப்ப சொல்லிக் காமிக்கிறாரு!
போன பாட்டுல சொன்னாரே, ஆசையை ஒளி[ழி]க்கணும்னு! அதுக்கும் இதுல வளி காமிக்கிறாரு!


இந்த ஒலகத்தும் மேல க்கீற ஆசையையெல்லாம் கெடுறத்துக்கு சதா சர்வ காலமும் அந்த முருகனைப் பத்தி மட்டுமே பேசறது, பாடறது, படிக்கறது, நெனைப்புல வைச்சுக்கறதுன்னு மாத்திக்கினியானா, தானா மத்ததுல்லாம் ஒன்னிய வுட்டுக் கள[ழ]ண்டுக்கும். எது உண்மையான சமாச்சாராம்னு புரிஞ்சு போயிறும்!

'பூ'ன்னா இந்த ஒலகம். இந்தப் 'பூ'வை வைச்சு இன்னோரு அர்த்தமும் சொல்லலாம். ஆனா, அது இப்ப வேணாம்! இந்த ஒலகத்தும் மேல ஒனக்கு இருக்கற அல்லா ஆசையும் அத்துப் போவணும்னா, நீ எது மெய்யுன்னு புரிஞ்சுக்கினு, அத்தோட போய்ச் சேரணும். அத்தோட மட்டுந்தான் சேரணும்!
அப்பிடிப் பண்ணினியானா, அப்பறம் இன்னாடா கவலை ஒனக்குன்றமாரி, 'நாம் ஏன்?'னு சொல்லி ஒரு 'டொக்கு வைக்கறாரு.


"நாம் ஏன்"னா நமக்கு இனிமே இன்னா பயம்னு அர்த்தம்!

அப்போ இன்னாத்துக்கு ரெண்டு தபா 'நடவீர் நடவீர்'னு போட்டிருக்காரு?
இதான் படிக்கறதுக்கும், ஓதறதுக்குமான வித்தியாசம்!


சாதாரணமாப் படிச்சியானா, 'நடவீர்; நடவீர்'னு அளு[ழு]த்திச் சொல்றாரோன்னு தோணும். ஆனா, அது அப்பிடி இல்லை!
அத்த நீ எப்பிடிப் படிக்கணும்னா, 'நடவீர்; நடவீர் இனியே'ன்னு!


மொதல்ல சொல்லியிருக்கற 'நடவீருக்கு' நடங்கப்பா, போங்கப்பா, அந்த உண்மையான கந்தனை தேடிக்கினு'ன்னு பொருளு.

ரெண்டாவது நடவீரை "இனியே"வோட சேர்த்துப் படிக்கணும்.
அப்பிடி நீ குமரனைத் தேடிப் போனியானா, இனிமே நீ பொ[பி]றவி எடுத்து இந்த ஒலகத்துல நடக்கவே மாட்டேன்னு அர்த்தம்!
வெளங்குதா?

முருகனைத் தேடிப் போ! ஆசையெல்லாம் அத்துறும்! அந்த மெய்யான தெய்வத்தைக் கண்டுபிடிச்சிட்டேன்னா, அங்கயிங்கன்னு அலையாம அவரையே கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, அவனே தொணையா கூடவருவான்; அதுக்கப்புறமா, இனிமே ஒனக்குப் பொறப்புன்றதே கெடையாதுன்னு இன்னோரு உண்மையைப் புட்டுவைக்கறாரு அருணகிரியாரு!

இத்தயே, இன்னொருவிதமாச் சொல்றதானா, 'நா மேல் நடவீர்; நடவீர் இனியே'ன்னும் பிரிச்சு அர்த்தம் சொல்லலாம்.


அதாங்காட்டிக்கு, அவர் குடுத்த கல்வியயும், அறிவையும் வைச்சுக்கினு, இந்த ஒலக ஆசையையெல்லாம் ஒளிச்சு அவரையே அடையணும்னா, "முருகா, நீ வந்து எப்பவும் என்னோட நாக்குமேலியே நடமாடணும்ப்பா! அத்த விட்டு வேற எங்கியும் போவாம என்னோட நாக்குலியே குடியிருக்கணும்ப்பா!... நான் எப்பவும் ஒன்னியே பாடறதுக்குத் தோதா'ன்னு முருகங்கிட்ட வேண்டறதாவும் புரிஞ்சுக்கலாம்!

அப்பிடியாப்பட்ட அந்த முருகனோட பெருமையைச் சொல்றதுதான் அடுத்த பாட்டு. அத்த நம்ம ஐயரு சொல்வாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!


சாம்பு சாஸ்திரிகள் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Wednesday, June 01, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

16.
சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணை வழக்கம்போல நிரம்பியிருந்தது. அவரது மனைவியும், வந்தமர்ந்தார்.

"ஆசைப்படலாம், தப்பில்லை. அதுக்காகப் பேராசைப்படலாமோ? இருக்கற நகைகள் போறாதா? இப்ப எதுக்கு அதை அழிச்சு, புதுசு பண்ணணும்னு கெடந்து துடிக்கறே? ம்ம்ம்... நான் சொன்னா நீ கேழ்க்கவாபோறே?' எனச் சிரித்தார் சாஸ்திரிகள்.


மன்னாரும் லேசாகப் புன்னகைத்தான்.

'ஆசை, பேராசை... இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க சாமி' என்றான்.

'நான் என்னடாப்பா சொல்றது? இதென்ன ஆருக்கும் தெரியாத சமாச்சாரமா என்ன? அந்த பகவான் ஒர்த்தனைத் தவர, வேற எதுக்கு ஆசைப்படறதுமே தப்பு! சரி, லோகத்துல பொறந்துட்டோம். நமக்குன்னு இல்லைன்னாலும், கூட இருக்கறவாளுக்காகவாவது கொஞ்சம் ஆசைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கு. ஆனா, எல்லா ஆசையுமே கடைசியில துன்பத்துலதான் போயி முடியறது! 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்'னு அந்த புத்தரே சொல்லியிருக்காரோன்னோ! அதே தான்! ஆனா, பேராசை?? அது ரொம்ப ரொம்பத் தப்பு! அதுல மட்டும் சிக்கிண்டுட்டோம்னா, அப்பறமா, அதுலேர்ந்து வெளியுல வர்றதுக்கே முடியாது. சர்வ நாசம்தான்! ஆசை துன்பத்தைக் கொடுக்கும்னா, பேராசை ஆளையே அழிச்சுடும்! இதான் நாம லோகத்துல காலங்காலமா பார்த்துண்டு வர்ற சமாச்சாரம். அது சரி, இப்ப எதுக்கு என் வாயைப் புடுங்கறே? அடுத்த பாட்டைப் படிக்கச் சொல்லு!' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு காரணமாத்தான் கேட்டேன் சாமி! இந்தப் பாட்டும் அதைப் பத்தித்தான்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்! நான் படித்தேன்.

16.
பேரா சையெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா! முது சூர் படவே லெறியுஞ்
சூரா! சுர லோக துரந்தரனே.


பேராசையெனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா! முது சூர் பட வேல் எறியும்
சூரா! சுர லோக துரந்தரனே.


"பேராசையெனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?"

இப்ப நீங்க சொன்ன பேராசையைப் பத்தி நல்லாவே புரிஞ்ச ஒர்த்தர் பாடின பாட்டு இது! ஒரு பொதைமணல்மாரி, இதுக்குள்ள ஆம்ப்ட்டுகிட்டா, வெளியவே வர முடியாம அதுக்குள்ளாறியே பொதைஞ்சு போயிருவோம்னு புரிஞ்சவர் சொன்ன சத்திய வாக்கு இது!

இது ஒரு நோய் மட்டுமில்ல. அதாலியே சாவடிக்கற நோயி! எப்டின்றியா?
ஒரு சில வியாதிங்க இருக்கு. சக்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, அல்ஸர்னு. இதுங்க ரொம்பவே தீவிரமான நோய்தான். ஆனாக்காண்டிக்கும், ஒயுங்கா மருந்து மாத்தரை சாப்ட்டுக்கினு வந்தியானா, ஒடம்பைக் கவனமாப் பார்த்துக்கினியானா, இது இருக்கறதே தெரியாதமாரி வாள[ழ]முடியும். ஆனா, இப்ப கேன்சர், எய்ட்ஸுன்னு வருதுன்னு வைச்சுக்கோ, அந்த நோயே கொஞ்சங்கொஞ்சமா ஆளைக் காவு வாங்கிறும். அவஸ்தையும் படணும்; ஆளையும் கொண்டுபோயிறும். இதான் ஆசைக்கும் பேராசைக்குமான வித்தியாசம்!


ஆசைப்படலாம் ; தப்பில்ல. நல்லாப் படிக்கணும்; நல்ல வேலைக்குப் போவணும், குடும்பத்தை மானமாக் காப்பாத்தணும்னு தாராளமா ஆசைப்படலாம். ஏன்னா, இதெல்லாம் ஒரு கடமையா ஆயிருச்சு. அதைச் செய்யாம இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. அதுவே, ரொம்பப் பேராசைப் பட்டேன்னு வையி. அது கொஞ்சங்கொஞ்சமா அரிச்சு உன்னையே பலி வாங்கிறும்.

அதைத்தான் இந்த மொத ரெண்டு வரியுல சொல்றாரு.

'அப்பா! முருகா! இதும்மாரி இந்தப் பேராசைன்ற பெரிய வியாதிகிட்ட விவரம் புரியாம மாட்டிக்கினு, நான் அணுவணுவா சித்திரவதைப் படறது நியாயமா'ன்னு பொலம்பறாரு.

அடுத்த ரெண்டு வரியுல இன்னா சொல்றாருன்னு கெவனி!

"வீரா! முது சூர் பட வேல் எறியும் சூரா! சுர லோக துரந்தரனே."ன்னு கூப்புடறாரு!

இந்த வரியுல முக்கியமாக் கவனிக்க வேண்டியது அந்த முது சூருன்ற வார்த்தைதான்!

தேவருங்களோட ஒலகத்தைக் காப்பாத்தறதுக்காவ, வேலெடுத்து வீசி, அந்தப் பளை[ழை]ய சூரனைக் கொன்ன சூராதி சூரனே! பெரிய வீரனே!ன்னு முடிக்கறாரு.


அதென்னாது பளைய சூரன்? அப்படீன்னா, புது சூரன் இருக்கானா?ன்னுல்லாம் ஒனக்கு ஒரு சந்தேகம் நியாயமா வரணும்' என்றான்.


'ஞான் விளிக்க நெனைச்சு! மன்னார் சொல்லிட்டல்லோ!' எனக் குதூகலித்தான் நாயர்!... என்னை முந்திக்கொண்ட ஆனந்தத்தில்!

'சூரன் எப்பிடியாப்பட்ட ஆளு? என்னல்லாம் சக்தி அவனுக்கு இருந்திச்சு? ஆனாக்க, அவனோட பேராசை... இருக்கறது போறாதுன்னு, தேவலோகத்தும் மேலியே கை வைச்சான். அத்தோட விட்டானா? அவங்களை ஜெயிச்சு, 'தரதர'ன்னு இஸ்த்துக்கினு வந்து ஜெயில்ல போட்டுட்டான். அல்லாரையும் அடிமைங்கமாரி நடத்திக் கொடுமைப் படுத்தினான். இது அல்லாத்துக்கும் காரணம் அவங்கிட்ட இருந்த பேராசைதான்!


அப்ப முருகன் வந்து இன்னா பண்ணினாரு?

இவன் கெட்டவன்னு அவனைக் கொன்னா போட்டாரு? இல்லைதானே? வேலால அவனை ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாத்திகிட்டுத் தங்கிட்டியே வைச்சுக்கினாரு! அதுனால, சூரன் இப்பவும் இருக்கான்! ... சேவலும், மயிலுமா முருகனோடயே! அந்தப் பளைய சூரன் காணாமப் பூட்டான்! அதாங்காட்டிக்கு, அவனோட பேராசையை மட்டும் அளி[ழி]ச்சிட்டாரு. அதைத்தான் நாசூக்கா இதுல சொல்லி, அந்தாளைப் பண்ணினமாரியே, எங்கிட்ட க்கீற இந்தப் பேராசைன்ற கெட்ட கொணத்த மட்டும் கள[ழ]ட்டிவிட்டுட்டு, என்னியையும் ஒன்னோடவே வைச்சுக்கப்பான்னு, சொல்லாம சொல்லி வேண்டுறாரு!


எதுன்னாலும் முருகன்கிட்ட வேண்டு. அவனுக்குத் தெரியும், எதை எப்பிடி செய்யணும்னு! எடுக்க வேண்டியதை எடுத்து, வெட்ட வேண்டியதை வெட்டி, சேர்க்க வேண்டியதை சேர்த்து அருள் பண்ணுவாருன்ற தத்துவத்தை இந்தப் பாட்டுல அருணகிரியாரு பொடி வைச்சு சொல்லியிருக்காரு!


போன பாட்டுல முருகனை "குருவா எம்முன்னாடி மனுச ஒடம்புல வாப்பா"ன்னு சொன்னாருதானே! அப்பிடி வண்ட்டா, அவர் எத்த எடுக்கணும், இன்னா பண்ணணும்னு அவருக்கே இவுரு ரூட்டு சொல்லிக் குடுக்கறாரு இந்தப் பாட்டுல!


அடுத்த பாட்டு இத்த விடவும் இன்னும் படா ஷோக்கா க்கீறும் பாரேன்' என ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

நாயர் கடையிலிருந்து வந்த சூடான மசால் வடையும், 'டீ'யும் எங்களைச் சற்று ஓய்வெடுக்க அழைத்தன!
சாஸ்திரிகளின் மனைவியார், 'சரின்னா, நீங்க சொன்னமாரியே ஆகட்டும்! எனக்கொண்ணும் இப்போ புது நகை போட்டுக்கணும்னு ஆசை இல்லை' என்றவாறே உள்ளே சென்றார்!

"நாலே வரில அவ மனசையே மாத்திட்டியேடாப்பா! "என வியந்தார் சாஸ்திரிகள்!


"நானா? நான் இன்னா பண்ணினேன்? அல்லாம் அந்த அருணகிரியாருதான்!" எனக் கையெடுத்துக் கும்பிட்டான் மயிலை மன்னார்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்!
*****************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, May 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16
15.
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ எண்குண பஞ்சரனே.

ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டு! மேலாக்கப் பார்த்தா, இது ஒண்ணுமே இல்லாதமாரி இருக்கும்!
ஆனா, கொஞ்சம் உள்ளே பூந்து பார்த்தியானா, இதுக்குள்ள எத்தினி சங்கிதி சொல்லியிருக்காருன்னு புரிஞ்சு, அப்பிடியே மலைச்சுப் பூடுவே!
"தேவருக்கும் குருவான முருகா, குமரா, குகா, ஒன்னிய நெனைச்சு நெனைச்சு உருகற உணர்வை என்னிக்குப்பா எனக்குத் தரப் போறே, எட்டு கொணமும் ஒனக்குள்ளியே வைச்சிருக்கற என்னோட முருகா!"ன்றதுதான் இதோட அர்த்தம்.
இத்தப் படிச்சாலே போறும்! மனசெல்லாம் உருகிப் போயிரும்!
இதுக்கும் மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு தோணும்!
ஆனாக்காண்டிக்கு, இன்னும் கொஞ்சம் ஆள[ழ]மாப் பார்த்தியானா, ஒனக்கு ரொம்ப விசயம் புரியும்!
என்ன அள[ழ]கா இந்தப் பாட்டை குடுத்திருக்காருன்னு பாரு!

முருகுன்னா, அள[ழ]கு, இளமைன்னு அல்லாருக்குமே தெரியும்.
குமரன்னா, சிவனோட புள்ளைன்னு புரியும்
குகன்னா, மனசுன்ற குகைக்குள்ல இருக்கறவன்!
இப்பிடியாப்பட்ட முருகனை நெனைச்சு உருகற நெலை எப்பப்பா தருவேன்னு சொல்லிட்டு,
அடுத்த ரெண்டு வரியுல,
சம்பந்தமே இல்லாம, 'சண்டை போடற தேவருங்களுக்கும், எல்லா ஒலகத்துக்கும் எல்லாப் பொருளையும் உணரச் செய்யும், குருவே, எட்டு கொணத்தியும் உள்ளே வைச்சிருக்கற தலைவனே'ன்னு அடுத்த ரெண்டு வரியுல சொன்னதுக்கு இன்னா அர்த்தம்?' என நிறுத்தினான் மயிலை மன்னார்.
'நான் சொல்லட்டுமா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!
'சொல்லுங்க சாமி! நீங்க எப்போ வருவீங்கன்னுதான் காத்திருந்தேன்!' என்றான் மன்னார்.


'நீ சொல்றமாதிரியெல்ல்லாம் என்னால சொல்ல முடியாதுறா மன்னார்! ஆனாலும், இப்ப சொல்லணும்னு தோணறது. அதுனால சொல்றேன்.
'இது ரொம்ப தத்வமான பாடல்!
கடைசி ரெண்டு வரியைப் பார்த்தியானா,
அதுல ஒரு எட்டு குணத்தைப் பத்தி சிலாக்கியமாச் சொல்றார்.
அதென்ன எட்டு குணம்னு கேழ்க்கிறியா?
1.அடியார்களைக் கை கொடுத்து தூக்கறது
2.கருணையோட பார்க்கறது
3.அன்புக்குக்குள்ள அகப்படறது
4.அடியார்களோட இஷ்டத்துக்கெல்லாம் ஆடறது
5.மனசுக்குள்ளே லீலைகள் செஞ்சு ஆனந்தப்பட வைக்கறது
6.நீ என்ன தப்பு பண்ணினாலும் பொறுமையா இருக்கறது
7.நீ பாக்கற எல்லாத்துலியும் தன்னைக் காட்டிக்கறது
8.ஒன்னோட சுக துக்கம் எல்லாத்துலியும் தன்னைப் பிணைச்சிண்டு, நீ படற அத்தனையுலியும் தானும் இருக்கறது
இது புரியுறது கொஞ்சம் கஷ்டம்.
இப்போ, நீ ஒரு வேதனையை அனுபவிக்கறேன்னு வைய்யி! இல்லை, ஒரு சுகத்தை அனுபவிச்சாலும், அவனும் ஒரு கொழந்தையாட்டமா, தன்னையும் இணைச்சுண்டு, தானும் அதை அனுபவிப்பான்.
இது ஒரு மஹா தத்வம்!
அப்படி அவனை அனுபவிக்க நீ விடலாமோ?
கொஞ்சம் புரிஞ்சுண்டியானா, அவன் உனக்காக எவ்வளவு கீழே இறங்கி வரான்னு தெரியும்!
அப்போ, அவனுக்காகவது நீ சரியாப் பண்ண ஆரம்பிப்பே!

இந்த எட்டு குணத்தியும் வைச்சிண்டு இருக்கறவன் தான் குரு!
அவனாலதான் தேவர்களையும் காக்க முடியும்! பூமியையும் ஆள முடியும்!
அவன் தான் முருகன்!
என்னைக்கும் இளமையா இருக்கறவன்
அவன் தான் குமரன்!
அப்பாவான சிவனோட அஞ்சு முகத்தோட கூட, ஒரு ஆறாவது முகத்தையும் கொண்டவன்!
அவன் தான் குகன்!
ஒன்னோட மனசையும் அடக்கி ஆள்றவன்!
ஆக மொத்தம் எட்டாச்சா?
இளமையான முருகன் ஒண்ணு
ஆறுமுகன் ஆறு
மனசை அடக்கற குகன் ஒண்ணு
மொத்தம் எட்டு!
இந்த எட்டையும் ஒரு கூட்டுக்குள்ளே, ஒரு பஞ்சரத்துக்குள்ளே வைச்சு அடக்க ஆள்றவனை, அந்த முருகனை, குமரனை, குகனை அன்போட சொல்லி அனவரதமும் அவனோட திருப்பெயரைச் சொல்லி என்னோட மனசு உருக சொல்ற தன்மையை எப்போப்பா எனக்கு நீ தரப் போறேன்னு கதர்றார் அருணகிரியார்! இதான் இந்தப் பாட்டு சொல்றது' எனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!
நாங்களும்.
************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, May 04, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15

14.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம்
ஐவாய் வழிச்செல் லுமவா வினையே .


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே .


இந்தப் பாட்டு க்கீதே.... ரொம்பவே சுளுவான பாட்டு. படிக்கறதுக்கும் சரி, கேக்கறதுக்கும் சரி; புரிஞ்சுக்கறதுக்குங்கூட ஈஸியான பாட்டு.
ஒரு பச்சப்புள்ளைக்குகூடப் புரியுறமாரி, இதுல தெளிவா சொல்லிடுறாரு அருணகிரியாரு.


போன பாட்டுல விட்ட எடத்துலேர்ந்து இந்தப் பாட்டைத் தொடங்கறாரு.
போன பாட்டுல இன்னா சொன்னாரு?


குருவா அந்த முருகனே வந்தாலொளி[ழி]ய, இந்த அனுபூதி சமாச்சாரமெல்லாம் புரியவே புரியாதுன்னு பயங்காட்டினாரா?.... இப்ப அதுக்கு இன்னா வளி[ழி]ன்னு காட்டுறாரு.

"கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய்"

முருகனோட காலைப் போயிக் கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, ஒனக்கு கெதிமோட்சம்னு சொல்றாரு.
நீயாப் போயிப் பிடிச்சுக்கறதுன்றது அவ்ளோ சாதாரணமான சமாச்சாரம் இல்ல. அது நடக்கவே நடக்காது.
அவரா குருவா வந்தாத்தான் உண்டுன்னு போன பாட்டுல சொன்னதுமாரி, அவரா வந்து தன்னோட காலைக் காமிச்சு, 'இந்தா, கெட்டியா பிடிச்சுக்கோ'ன்னு சொல்லணும்! அப்பத்தான் இது நடக்கும்.

அதென்ன கைவாய் கதிர்வேல் முருகன்?
முருகன் தெரியும்!
கதிர்வேல் முருகனைக் கூட ஒருமாரி 'குன்ஸா' தெரியும்னு சொல்லலாம். சூரியனோட கதிருமாரி வர்ற வேலுன்னு!
ஆனா, 'கைவாய்'னா?
கையுலதான் முருகன் அந்த கதிர்வேலை வைச்சிருப்பாரு. வாய் எங்கேருந்து வந்திச்சு, இந்த எடத்துலன்னு ஒரு டவுட்டு வரும்.

இந்த எடத்துலதான் அருணகிரியாரு கொஞ்சம் தமிளோ[ழோ]ட வெள்ளாடறாரு.
அடுத்த மூணு வரிங்கள்லியும், உய்வாய், மெய்வாய், ஐவாய்னு போட்டதால, இந்த எடத்துல கொஞ்சம் இலக்கணத்தைச் சேர்த்து, 'கைவாய்'னு போட்டிருக்காரு.

'வாய்'னா இந்த எடத்துல நாம சாப்புடற வாயி இல்லை. பொருந்தறதுன்னு ஒரு அர்த்தம் க்கீது. கையுல பொருந்தி நிக்கற கதிர்வேலுன்னு சொல்றாரு.
சின்ன வயசுல நம்ம வாத்தியாரு நம்மளையெல்லாம் முட்டிபோட வைச்சு எலக்கனம்லா சொல்லிக் குடுத்தாரே... நெனைப்பு க்கீதா? ஒனக்கு எங்கே இருக்கப் போவுது? ஒனக்குத்தான் அது எப்பவுமே தகராறாச்சே' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!


'சரி, சரி, இப்ப எதுக்கு அதெல்லாம் சொல்லிக்கிட்டு? நீ மேலே சொல்லு' என்றேன் அவசர அவசரமாக. நாயர் என்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

'ஆமாண்டா! இவனைப் பத்தித்தான் நன்னாவே தெரியுமே. நீ மேல சொல்லு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

அதுக்கில்ல சாமி. இந்த ஏளா[ழா]ம் வேத்துமைன்னு சொல்லுவாங்களே, இன்னாது அது?.... 'இல், இடம், கண்'ணுன்னு. அதோட இந்த வாயும் பொருந்தும். அதுக்குத்தான் சொல்லவந்தேன்'

'அட! இதுலியும் 'வாய்' 'பொருந்துதே' என அவனது சிலேடையை ரசித்தார் சாஸ்திரிகள்.

'அப்ப, 'கைவாய்'னா, கையுல பொருந்தி க்கீற வேலுன்னு அர்த்தம், சரியா?' என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

'கையுல வேலைப் பிடிச்சுக்கினு வந்து ஒன்னெதுத்தாப்புல வந்து நிக்கறப்ப, 'டபக்'குன்னு அவரோட காலைப் பிடிச்சுக்கோ! அதான் நீ பொளை[ழை]க்கறதுக்கான வளி[ழி]'ன்னு மொத ரெண்டு வரியுல சொன்னவரு, எப்ப, எத்தப் பண்ணினா இந்தமாரி நடக்கும்னு மேல சொல்றாரு.

"மனனே ஒழிவாய் மெய்வாய் விழிநாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே ஒழிவாய்"

மொதக் காரியமா இந்த மனசைத் தொலைக்கணும்னு சொல்லிட்டு, அது எப்பிடித் தொலைக்கறதுன்னு பின்னாடியே சொல்லிட்றாரு.
மனசை ஒளி[ழி]க்கறதுன்றது சாமான்யப்பட்ட வேலை இல்ல. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, இல்லை, தொன்னைக்கு நெய்யி ஆதாரமான்றமாரி, இந்த மனசும், நம்மளோட அஞ்சு பொறிங்களும்....கண்ணு, வாயி, மூக்கு, காது, ஒடம்புன்ற அஞ்சும்.... மொதல்ல தொலையணும். இந்த அஞ்சும் சேர்த்துப் படுத்துற பாடு க்கீதே, தாங்க முடியாது! மனசுதான் இதுங்களைத் தூண்டி விடுதா? இல்லைன்னா, இந்த அஞ்சாலியுந்தான் மனசு கெடந்து அல்லாடுதான்னு ஆருக்கும் தெரியாது.


'நாம்பாட்டுக்கு சும்மாத்தான் கெடந்தேன், இந்தக் கண்ணுதான் பாத்துச்சு, காதுதான் கேட்டுச்சுன்னு மனசு பொலம்பும்.
எங்களுக்குன்னு எது தெரியும்? அல்லாம் இந்த மனசுதான் தூண்டி விட்டுச்சுன்னு இதுங்கள்லாம் பிராது குடுக்கும்!


பார்த்தாரு அருணகிரியாரு!
ஒங்க சண்டையைத் தீர்த்துவைக்கறது என்னோட வேலை இல்லை. உங்க ரெண்டு பேரையுமே தொலைச்சாத்தான் நிம்மதி. அப்பத்தான் என்னோட முருகன் எனக்கெதுத்தாப்புல வந்து நிப்பாரு. அப்பத்தான் காலைப் பிடிச்சுக்க முடியும்னு சொல்லிக் குடுக்கறாரு. அதுக்குங்கூட முருகனோட அருள் இருந்தாத்தான் நடக்கும். 'பொறிவாயில் ஐந்தவித்தான்'னு நம்ம ஐயன் சொல்லுவாரே, அந்தாளுதான் வந்து சரிபண்ண முடியும்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.


'அட! இவ்விடயும் ஒரு வாயா?' என வாயைப் பிளந்தான் நாயர்.

' ஓ! அதுக்குத்தான் ரெண்டு தடவை 'ஒழிவாய்'னு சொல்றாரா? எனக் கேட்டேன்.

சிலபேருங்க மனசைப் பார்த்துத்தான் சொல்றாருன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கென்னமோ, இப்பிடித்தான் படுது' என்ற மன்னார், 'சரி, இனி அடுத்த பாட்டு!' என ஜரூரானான்!
**********
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, April 19, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 14

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 14

13.
'அடுத்த பாடலுக்கும் சொல்லப்போகிறேன்' எனச் சொன்னானே என்று 'மளமள'வென அடுத்த பாடலைப் படித்தேன்.

முருகன் றனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளது அன்று இலது அன்று
இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே

தமிள் சும்மா பூந்து வெள்ளாடியிருக்கற பாட்டு இது! சொல்ல வந்த விசயமாவட்டும்; அதுக்குன்னு போட்ட வார்த்தையாவட்டும்; அதை சந்தத்துல வைச்ச ஜாலவித்தையாவட்டும்;... அப்பிடியே படிக்கப் படிக்க இன்பமா, சொல்லிக்கினே இருக்கலாம்போலத் தோணும்!
இதுவும் படிச்சதும் கொஞ்சம் புரிஞ்சிருந்தான்.


போன ரெண்டு பாட்டுல, தனக்கு முருகன் சொல்லிக் குடுத்தது இன்னான்னு சொன்னாரில்லியா? அத்தப் புரிஞ்சுக்கறது அவ்ளோ ஒண்ணும் சாதாரண விசயமில்லன்னு சொல்றாரு. அவரோட அருள் இல்லாம எதுவும் வேலைக்காவாதுன்னு தெளிவா சொல்லிடறாரு.

'சொல்லற சும்மாயிரு'ன்றது சாமான்யப்பட்ட சமாச்சாரம் இல்லை. தோ... வேலைக் கையுல பிடிச்சுக்கினு க்கீறானே... அந்தக் கந்தனா வந்து புரியவைச்சாலொளிய, நம்மகிட்ட க்கீற அறிவை 'யூஸ்' பண்ணி இத்தப் புரிஞ்சுக்கலாம்னு நெனைக்கறது ரொம்பக் கஸ்டம்னு தெளிவா நமக்கெல்லாம் சொல்றாரு.

அது மட்டும் இல்ல. அந்த ரெண்டையும் புரிஞ்சிக்கினு பண்ணினா ஒனக்கு தெரியவர்றது இன்னான்னு அந்தக் கடைசி ரெண்டு வரியுல சொல்றாரு.

உருவன்று அருவன்று உளது அன்று இலது அன்று இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே

உரு இல்ல; அருவமும் இல்ல; இருக்கறதோ, இல்லாதுதோ இல்ல; இருட்டும் இல்ல; வெளிச்சமும் இல்லன்னு சொல்றப்ப தலையே சுத்தும்.

சாதாரணமாப் பாத்தா, அநுபூதின்னா அதுக்கு உருவமும்கிடையாது; அதுக்காவ, அது அருவம்னும் சொல்லமுடியாதுன்றாரு.

அவ்ளோதானா இதுன்னு கேட்டியானா, இல்லைன்னுதான் சொல்லணும்!

உருவமா க்கீறது மயிலு! நல்லாத் தோகையை விரிச்சுக்கினு அளகா, பெருசா உருவமாத் தெரியும்.
முருகனோட கொடில சேவல் க்கீது. அதோட சத்தம் காதுக்குத்தான் கேக்குமே தவுர, பாக்க முடியாது. அதுக்காவ, அதை அருவம்னும் சொல்லமுடியாது. ஏன்னா அதை நாம கேக்கறோம்.

சரி, இப்ப அடுத்த ரெண்டையும் பாப்பம்.
இந்த அநுபூதிய நீ புரிஞ்சுக்கினியானா, அப்பிடி ஒண்ணு இருக்கா, இல்லியான்னே ஒனக்குப் புரியாமப் போயிறும்.
அந்த அனுபவம் இருட்டா, இல்ல, வெளிச்சமான்னு கூடத் தெரியாது.
இத்த இன்னும் தத்துவமாப் பாக்கப் போனியானா,
'நாத விந்து கலாதி நமோ நம'ன்னு திருப்புகள்[ழ்]ல சொல்றாரே, அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் பண்ணிப் பாக்கலாம்.

இந்த நாதம், விந்துன்ற ரெண்டாலத்தான் இந்த ஒலக இயக்கமே நடக்குது.
நாதம்ன்றது உருவமில்லாதது; விந்துன்றது உருவம் இருக்கறது.
விந்துன்றது இருக்கற ஒண்ணு; நாதம் எங்கேருந்து வருதேன்னு தெரியாதது, அதாங்காட்டிக்கு, இல்லாதது.
விந்துவை மயில் தோகைக்கு ஒப்பாச் சொல்லுவாங்க. மயிலு இருட்டான மேகத்தைக் கண்டா நல்லா தோகையை விரிச்சு ஆடும்.
இருட்டெல்லாம் விலகி, வெளிச்சம் வர்றப்ப சேவல் தன்னோட நாதத்த எளு[ழு]ப்பும்.
இதும்படிக்குப் பாத்தா, இந்த நாதம், விந்துன்ற ரெண்டையும் தாண்டி நிக்கற ஒண்ணு தான் 'அது'ன்னு புரியவரும்.
இதுக்கு இன்னும் பெருசா பெருசா விளக்கம் சொல்லுவாங்க பெரியவங்கல்லாம். அதெல்லாம் புரிஞ்சுக்கறது நம்மளால ஆவுற காரியம் இல்லை. இதைத்தான் மொத ரெண்டு வரி சொல்லுது.


முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ

ஞானம் வேணும் அதுக்கு!
முருகன் கையுல வைச்சுக்கினு க்கீறாரே, அந்த தனிவேல் தான் ஞானம்.
அத்தக் குடுக்கறவன் முருகன். முனிவருங்களுக்கெல்லாம் பெரிய முனி நம்ம கந்தன்!
அவனா மனசு வைச்சு ஒரு குருவா வந்து புரியவைச்சா மட்டுமே இதெல்லாம் புரியும்.
மத்தப்படி, நம்மகிட்ட க்கீற சின்ன அறிவை வைச்சுக்கினு இத்தயெல்லாம் புரிஞ்சுக்கறதுன்றது நடக்கவே நடக்காதுன்னு கண்டிசனா சொல்லிடுறாரு இந்தப் பாட்டுல.

போன ரெண்டு பாட்டுல சொன்னதக் கேட்டதும், 'அட! இது ரொம்ப 'ஈஸி'யான சமாச்சாரம் போல'ன்னு நெனைச்சுறக் கூடாதுன்றதுக்காக இந்தப் பாட்டுல ஒரு 'டொக்கு' வைக்கறாரு அருணகிரியாரு' என்று நிறுத்தினான் மயிலை மன்னார்.
'ஞான் கூட அதே சோதிச்சு! இப்ப நல்லா மனசிலாயி' எனக் கைகூப்பினான் நாயர்.
சரி, அடுத்த பாட்டைப் பாக்கலாம்' என்றான் மன்னார்.
***************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, April 01, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 13

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 13 12. அனைவரும் வந்தமர்ந்ததும் பனிரெண்டாம் பாடலைப் படித்தேன். செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா யிருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல் அற என் றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந் திலனே இதுங்கூட போன பாட்டு மாரித்தான். படிக்கறப்ப ஈஸியா புரியுறமாரி இருக்கும். ஆனா, உள்ளார போவப்போவ, இன்னான்னாமோ புரியவரும். இப்ப இந்த மொத வரியை எடுத்துக்க. "செம்மான் மகளைத் திருடும் திருடன்" செம்மான்னா ஆரு? ரெண்டர்த்தம்! நல்ல கொணமான பெருமாளுன்னு சொல்லலாம். செவப்புக் கலர் மானுன்னும் சொல்லலாம். அதென்னா கதைன்னு கேக்குறியா? ஒரு காலத்துல நம்ம பெருமாளு, அதான் மகாவிஸ்னுப்பா,.... அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. சுந்தரவல்லி, அமிர்தவல்லின்னு. இவங்க ரெண்டு பேருமே முருகனைக் கட்டிக்கணும்னு ரொம்பக்காலமா சரவணத் தடாகத்துல தவம் பண்ணினாங்க. அமிர்தவல்லிதான் தெய்வானையா இந்திரங்கிட்ட வளந்து, சூரனை முருகன் கெலிச்சதும், அவரையே கட்டிக்கினாங்க. சுந்தரவல்லியப் பாத்து, 'நீ பூலோகத்துக்குப் போயி மனுசப் பொறப்பு எடுத்துக்க . நாம வந்து ஒன்னியக் கட்டிக்குவோம்'னு சொல்லிட்டாரு. கொஞ்ச நாளு களிச்சு பெருமாளும் பூலோகத்துக்கு ஒரு முனிவர் மாரி வந்து தபசு பண்ணிக்கினு க்கீறாரு. அப்ப, அவரு எதுத்தாப்புல நல்லா அளகா ஒரு மானு இப்பிடியும் அப்பிடியுமா திரிஞ்சுது. அதும்மேல ஆசைப்பட்டு இந்த முனிவரு அத்தப் பார்க்க, நம்ம சுந்தரவல்லியம்மா அதுக்குள்ல ஒரு கொளந்தையா வண்ட்டாங்க! மானா வந்தது வேற ஆருமில்ல. லஷ்மியம்மாதான்! அதுனால, இவங்க செம்மான் மகளாயிட்டாங்க. பெருமாளோட பொண்ணுன்றது ஒண்ணு; மானோட பொண்ணுன்றது இன்னொண்ணு! அதான் வள்ளியம்மா! அந்த வள்ளியைத் திருடிக் கண்ணாலம் கட்டினவரு இந்த முருகன்! அதான் இந்த 'செம்மான் மகளைத் திருடுந் திருடன் முருகன்~!' இவரைப் பத்தித்தான், இவருக்கு பொறப்பு இறப்புன்றதே கெடையாது; அம்மாம் பெரிய ஆளுன்னு 'பெம்மான், பிறவான், இறவான்'னு பெருமையா சொல்றாரு. செத்துப் போலாம்னு நெனைச்சு, கோபுரத்து உச்சிலேர்ந்து அருணகிரியாரு குதிச்சப்ப வந்து காப்பாத்தினாரு முருகன்னு சொன்னேன்ல,... அப்பவே சாவுலேர்ந்து காப்பாத்திட்டாரு இவரை. அப்ப ஒரு உபதேசம் முருகன் பண்ணக்கொள்ள இவருக்கு இன்னொரு பொறப்பு வந்திருச்சு! ஆகக்கூடி, பொறப்பு இறப்பு இல்லாத கந்தன் அது ரெண்டையுமே ஒரே நேரத்துல இவருக்குக் காட்டிட்டாரு. அப்பிடி இன்னாத்த சொன்னாரு முருகன் இவுருக்கு? ரெண்டு வார்த்தை... 'சொல்லற சும்மாயிரு'ன்னு ரெண்டே ரெண்டு வார்த்தை. சொல்லை அறுக்கறதுன்னா இன்னா? நாலு விதமான சொல்லு,,, வாக்கு... இருக்குன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரின்னு. அதெல்லாம் இன்னா இன்னானு சொல்லப்போனேன்னா, ரொம்பப் பெருசாப் பூடும். அப்பால வந்து கேளு சொல்றேன். இப்போதைக்கு இந்தமாரி ஒரு நாலு க்கீதுன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. ஒண்ணொண்ணுக்கும் ஒரு தனிக் கொணம் க்கீது. இந்த நாலையுமே நிறுத்திட்டு , எதுவுமே சொல்லாம, செய்யாம, நெனைக்காம, மோந்து பாக்காம, சாப்பிடாம, தூங்காம, முளிக்காம, சித்தருங்கமாரி ஒரு மோன நெலையுல இருக்கறதுக்குப் பேருதான் சொல்லை அறுக்கறது! சும்மா மௌனவிரதம்னு, வாயை மட்டும் மூடிக்கினு, மனசுல எதுனாச்சும் சிந்தனை பண்ணிக்கினு, பேப்பர்ல எளுதிக் காட்டுறதுல்லாம் இல்லை! இதுக்கு எம்மாம் கெவனமா பயிற்சி பண்ணனும்னு யோசிச்சுப் பாரு! அடுத்துது 'சும்மா இரு' ! இதுவும் அதேம்மாரித்தான்! இந்த மனசு, ஒடம்பு, சொல்லு இந்த மூணாலியுமே எதுவுமே பண்ணாம, நெனைப்பே இல்லாம இருக்கறதுக்குப் பேருத்தான் 'சும்மா' இருக்கறதே தவுர, சோம்பேறியா கவுந்தடிச்சுப் படுத்துத் தூங்கறது இல்லை. இதை நல்லாப் புரிஞ்சுக்கணும். இப்பிடியாப்பட்ட ஒரு சமாச்சாரத்த முருகன் சொல்ட்டாரில்லியா! அதத்தான், மா பொருள்னு கொண்டாடுறாரு அருணகிரியாரு. அம்மா பொருளொன்றும் அறிந்திலனேன்னு பிரிக்கக் கூடாது! அம் மாபொருள்னு படிக்கனும். சரியா? முருகன் சொன்ன ரெண்டு வார்த்தை இவரை அப்பிடிப் பொரட்டிப் போட்டிருச்சாம்! எப்பிடி இந்த ரெண்டு காரியத்தியும் பண்றதுன்னு இன்னை வரைக்கும் புரியலேன்னு தெகைச்சிப் போயி நிக்கறாருன்னு சிலபேருங்க சொல்லுவாங்க! ஆனாக்காண்டிக்கு, அதில்ல இத்தோட அர்த்தம்! இவுருக்கா புரியாமப் போவும்? கொடுத்தது ஆரு? சாமான்யப்பட்ட ஆளா அந்த முருகன்! அதான் 'பெம்மான், பிறவான் இறவான்' ஆச்சே! கூடவே பெரிய திருடன்னு வேற நக்கலடிக்கறாரு! அம்மாங் காவலையும் தாண்டிப் போயி, வள்ளியைப் பாத்து, அவளைக் கையைப் புடிச்சு இளுத்து, கடத்திக்கினு போயி, கண்ணாலம் கட்டிகிட்ட திருடன் சொன்ன ரெண்டு வார்த்தையோட அர்த்தம், இவருக்கு நல்லாப் புரிஞ்சிட்டதால, இப்ப இவுரையும் திருடிக்கிட்டாறாம் அந்த முருகன்! அதுனால, இவுருக்கு ஊரு ஒலகம்லாமே மறந்து போயி, எதுவுமே தெரியாத நெலைமையுல க்கீறாருன்றத அப்பிடி 'நைஸா' சொல்லி வைக்கறாரு அருணகிரியாரு! ' எனச் சிரித்தான் மயிலை மன்னார். இந்த நாலு வரிக்குள்ளே இத்தனை பொருளா?' என வியந்தேன் நான். நாயர் பேச்சற்று இருந்தான்! அடுத்த பாட்டைப் படி! அதையும் சொல்லிறலாம். அதுவும் இத்தோட சேர்ந்ததுதான்! ' என்றான் மன்னார்! மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார் சாஸ்திரிகள்! *************** [தொடரும்]

Read more...

Thursday, March 24, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12
11.
இனிமே சொல்லப்போற மூணு பாட்டையும் ஒண்ணாப் பார்த்தா நல்லாருக்கும். ஒண்ணுக்கொண்ணு தொடர்பா ஒரு சங்கதியச் சொல்லுற பாட்டுங்க. பதிணொண்ணாம் பாட்டைப் படி!' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே

'அத்த இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என்றான்.

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை மெய்ப் பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே


'பாட்டெல்லாம் படிக்கக்கொள்ள ரொம்பவே ஈஸியாத்தான் இருக்கும். அர்த்தம் புரியுறதுகூட ஒண்ணும் பெரிய கஸ்டம்லாம் இல்லை. ஆனா, அதுக்குள்ளாற இன்னா பொடி வைச்சிருக்காருன்றதப் புரிஞ்சுக்கறதுலதான் க்கீது சூட்சுமம்'

இப்ப இந்தப் பாட்டையே எடுத்துக்க. மொத ரெண்டு வரியுல அந்தக் 'கிளை'ன்ற வார்த்தைதான் கொஞ்சம் தடுக்கும். கிளைன்னா சொந்தபந்தமின்னு புரிஞ்சிருச்சின்னா, அப்பாலிக்கா, மிச்சமெல்லாம் புரிஞ்சிரும்.

கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா

நான் செத்துப் போனேன்னா, என்னோட சொந்தக்காரங்கல்லாம் 'கா' 'கூ'ன்னு அதாவுது, 'காச்சுமூச்சு'ன்னு, 'லபோதிபோ'ன்னு கத்திக்கினு மாருல அடிச்சுக்கினு அளா[ழா]தபடிக்கா, எனக்கு நீ 'குன்ஸா' ஒரு பெரிய விசயத்தச் சொல்லிக் குடுத்தியே முருகா!ன்னு இதுல சந்தோசப் படுறாரு அருணகிரியாரு.

இதுல இன்னா புரியுது? ஆராவுது செத்துப் போனா, சொந்த பந்தம்லாம் இப்பிடி அளுவுறது சகஜந்தான். அதுல ஒண்ணும் பெருசா இல்லை. ஆனா, இவுருக்கு இன்னா நடந்திச்சுன்னு கோடி காட்டுறாரு அருணையாரு.

இவுருக்கு சாவே வரலைன்னு ஒரு சங்கிதிய 'டமார்'னு போட்டு ஒடைக்கறாரு!
அதுக்குக் காரணம் இன்னான்னும் சொல்றாரு! அதான் இவுருக்குக் கெடைச்ச அநுபூதி!
முருகன் வந்து இவுருக்கு இன்னாமோ சொல்லிக்குடுக்க, இவுருக்கு மரணபயமே போயிருச்சுன்றத சும்மா, அப்டி 'டகால்ட்டியா' சொல்லிக் காட்டுறாரு.
அப்பிடீன்னா, இது மட்டும் கெடைச்சிருச்சுன்னா, ஒனக்கு சாவே இல்லைன்னு ஒரு போடு போடறாரு இவுரு!

அப்பிடியாப்பட்ட கந்தனை அடுத்த ரெண்டு வரியுல பெருமையாப் பேசறாரு.

நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே

நீ நாகாசலன் வேலவன், நாலு கவியும் கொடுக்கற தியாகி, தேவலோகத்துக்கே ராசாவா மகுடம் சூட்டிக்கினு க்கீற பெரிய ஆளுப்பா நீ!'ன்னு இன்னான்னமோ சொல்லிப் பாடறாரு!

சரி, இதுக்கும், மொத ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பம்!

சாவே இல்லாமப் பண்றதுன்னா, இன்னா சும்மா சாதாரணக் காரியமா அது?
அப்பிடியாப்பட்ட ஆளு இன்னா பெரிய தருமவானா இருக்கணும்? இன்னா ஒரு கருணை இருந்தா அப்பிடி ஒரு கொணம் வரும் ஒர்த்தருக்கு?

இப்ப,... சாவே இல்லாதவங்க ஆரு?
தேவருங்க! தேவலோகத்துல க்கீற தேவருங்க!
அவங்களுக்கே ஒரு நாளு ஆபத்து வந்து சூரபத்மன் அவங்களையெல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டு வாட்டி எடுத்தான் ரொம்ப நாளைக்கு!

நீயும் நானும்னாக் கூடப் பரவாயில்லை. தோ, நீ க்கீறியே... ஒன்னிய ஒரு ரெண்டு தட்டு தட்டினாப் படுத்துருவே! அப்பாலிக்கா, ஒன்னோட 'பாடி'யத்தான் போட்டு அடிக்கணும்! ஆனா, தேவருங்க பாடு ரொம்பவே கொடுமை சாமி! எவ்ளோ வாட்டியெடுத்தாலும் சாவு மட்டும் வராது! வலிதான் கிடைக்கும்!

ஒன்னியும் என்னியும் விட, அப்பிடியாப்பட்டவங்களைக் காப்பாத்துறது இன்னும் பெட்டெர் தானே!
அத்தான் பண்ணினாரு முருகன்!
தன்னோட வேலை எடுத்து வீசி, சூரனைப் பொளந்து போட்டு, தேவருங்களுக்கு மறுபடியுமா, அவங்க ஒலகத்த வாங்கிக் குடுத்தாரு.
அதுக்காவ, இவங்கல்லாமாச் சேர்ந்து, முருகனுக்கே ராசாவாப் பட்டம் கட்டி, இந்திரன் தன்னோட பொண்ணியும் குடுத்தருன்றதுல்லாம் ஒனக்கும் தெரியும்.
அப்பிடி, தேவருங்க மாரி இவரையும் ஆக்கிட்டாராம் கந்தன். அதத்தான் அப்டி சொல்லிக் காட்றாரு.. சுரலோக சிகாமணியேன்னு! சிகைன்னா தலைமயிரு. மணின்னா மகுடம்.

அடுத்தப்புல, 'நாலு கவி தியாகா'ன்றாரு.

நாலு கவின்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். எங்க சொல்லு?' என்றான்.

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி. இதைப் பற்றி முன்பே ஒரு திருப்புகழில் விவரமா எழுதியிருக்கேன்' எனப் பதில் சொன்னேன்.

'அதேதான்! அல்லாராலியும் இந்த நாலையுமே பாடறதுன்றது கொஞ்சம் கஸ்டமான சமாச்சாரம். ஒண்ணு இருந்தா, ஒண்ணு நல்லா வராது. ஆனாக்காண்டிக்கு, அருணகிரியாருக்கு இதெல்லாம் கைவந்த கலையா வந்திச்சு. இப்பிடி நாலு விதமாப் பாடறதுக்கெல்லாம் காரணம் நம்ம முருகந்தான்! அவந்தானே தமிள்[ழ்]க் கடவுளு. அப்பிடி கொடுக்கற வள்ளலேன்னு சொல்றாரு. இப்பிடி ஆருக்கு எது வேணும்னு பாத்துப் பாத்துக் குடுக்கறமாரி இவுருக்கும் குடுத்துட்டாராம். அதுனால, நீ பெரிய வள்ளலுப்பா'ன்னு கூத்தாடுறாரு.

கடைசியா நாகாசலனேன்னு ஒரு வார்த்தை!

இந்த நாகாசலம்ன்றது எந்த எடம்?
திருப்பதின்னு சிலபேரு சொல்லுவாங்க. திருச்செங்கோடுன்னு சிலபேருங்க சொல்லுவாங்க!
ரெண்டுத்துக்குமே இந்தப் பேரு க்கீது.
திருப்பதியுல க்கீற ஏளு[ழு] மலையுல ஒரு மலைக்கு சேஷாசலம்னு பேரு.
திருச்செங்கோட்டுல ஆதிசேஷனே வந்து தன்னோட சாபம் தீர்றதுக்காவ பூசை பண்ணினான் முருகனைன்னும் சொல்லுவாங்க.
இந்த திருச்செங்கோட்டு முருகனைப் பத்தி ரொம்பப் பாட்டு பாடிக் கீறாரு அருணையாரு.
அதுனால, இத்த அந்த ஊரு முருகனைப் பத்திச் சொல்ற பாட்டாவே வைச்சுக்கலாம்!

வெஷம் இருக்கற ஆதிசேஷனையே காப்பாத்தி அருள் செஞ்சமாரி, என்னியும் காப்பாத்தினியேன்னு, அத்த மொதல்ல வைச்சு, வேலெடுத்து சூரனைப் பொளந்தியேன்னு சொல்லி, கேட்டவங்களுக்குக் கேட்டதெல்லாம் கொடுக்கற வள்ளல்ப்பா நீன்னு பெருமையாப் பாடி, சாவா வரத்த எனக்கும் கொடுத்த தேவலோக ராசாவேன்னு கொண்டாடறாரு இந்தக் கடைசி ரெண்டு வரியுல!' எனப் பேசிவிட்டு, அருகிலிருந்த நீரை எடுத்து மடமடவெனக் குடித்தான் மயிலை மன்னார்!

சாஸ்திரிகள் கண்ணிலிருந்து 'கரகர'வெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அடுத்தவாரம் புதங்கிளமை பாக்கலாம்' எனச் சொல்லியபடியே, அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மன்னார்.
சொல்லமுடியாத சந்தோஷத்துடன் நானும் நாயரும் சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்!

****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, March 21, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11
"கந்தரநுபூதி" -- 11
10.

'மனசைப் பார்த்து இம்மாம் விசயம் சொன்னவரு, இப்ப அதுக்கு கொஞ்சம் தெகிரியம் குடுக்கலாமின்னு பாக்கறாரு. அத்த வுடு, இத்த வுடுன்னு வரிசியா சொல்லிக்கினே வந்தா அந்த பாளாப்போன மனசு பயந்துருமோன்னு நெனைச்சவரு 'நீ ஒண்ணும் கவலைப்படாதே'ன்னு தெம்பு குடுக்கறாரு' என்று ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

நாங்கள் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் கூடியிருந்தோம். இன்று புதன் கிழமை! இன்னைக்கு ஒண்ணும் வேலையில்லை! வாப்பா' எனச் சொன்னதால், நாயரையும் கூட்டிக்கொண்டு சென்றேன்.
அப்படி என்ன சொல்லியிருக்கார் அருணகிரியார் என பாட்டை உரக்கப் படித்தேன்.

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

கார் மாமிசை காலன் வரின் கலபத்து
ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே.

'எமன் வரும்போது, மயில் மேல வாப்பா'ன்னு சொல்றவரைக்கும் புரியுது. அதுக்கப்புறமா, என்னமோ வலாரி, தலாரின்னுல்லாம் ஏதோ சொல்றாரே...அதான் புரியலை மன்னார்' என்றேன் நான்.

'அப்ப, அந்த மொத ரெண்டு வரியும் புரிஞ்சிருச்சுன்ற!' எனக் குறும்பாகச் சிரித்தான் மன்னார்.

'ஞானும் அதே சோதிச்சு!' என என்னைப் பார்த்தான் நாயர்.

'நீ சொன்ன அர்த்தம் கரீட்டுத்தான்பா. ஆனா, அதுக்குள்ள ஒரு சின்ன சமாச்சாரம் க்கீது. அத்தச் சொல்றேன் கேட்டுக்கோ'


"கார் மாமிசை காலன் வரின் கலபத்து ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்"

கார் மான்னா, கறுப்பா பெருசா க்கீற மாடு.... எருமை மாடு.. காலன்னா எமராசா. கால்னா காத்து. காத்துமாரி வேகமா வந்து உசிரை பிடுங்கிகிட்டு போயிருவான். அதான் காலன்னு பேரு. ஆனாக்காண்டிக்கு, அந்தாளு வர்றதோ மெதுவாப் போற எருமை மாட்டும் மேல.

பொதுவாவே முருகனடியாருன்னா, எமன் வர்றதுக்கே பயப்படுவான். ஒருவேளை அப்பிடியே வந்தாலும், நீ ஒடனே பெருசா, அளகா, தோகையை விரிச்சுக்கினு க்கீற மயில்மேல ஏறி வெரசலா வந்து என்னைக் காப்பாத்துப்பா, முருகா'ன்னு கேட்டுக்கறாரு.

கலபம்னா தோகை. கலாபம்ன்றத அப்பிடிச் செல்லமா சொல்றாரு. ஏருன்னா, அளகு. மயிலு தோகையை விரிச்சா அளகாத்தானே இருக்கும்?

மெதுவா எருமைமாட்டு மேல எமன் வர்றதுக்குள்ள, வேகமா மயில்மேல நீ வந்திருன்னு சொல்லி, மனசுக்கு ஒரு தெம்பைக் குடுக்கறாரு.

சரி, இதுக்கும் அடுத்தாப்புல வர்ற ரெண்டு வரிக்கும் என்னா சம்பந்தன்றதுதானே ஒன்னோட கேள்வி?

இதுல இன்னா சொல்லியிருக்காருன்னு மொதல்ல பாப்பம்.

"தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே."

'தார் மார்ப'ன்னு மொதல்ல சொல்றாரு! நல்ல வாசனையான கடம்பமலரால ஆன மாலையைப் போட்டுக்கீனு க்கீறவனேன்னு!இத்த எதுக்காவ சொல்றாருன்னா, முருகனோட வேலு வர்றதுக்குள்ள, அவனோட மயிலு பறந்து வேகமா வர்றதுக்குள்ள, இந்த மாலையோட வாசனை வந்து சொல்லிரும், கவலைப்படாதே! முருகன் வந்துக்கினு க்கீறான்னு! "ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே"ன்றமாரி, முருகனுக்கு முன்னாடியே, இந்த பூவாசம் வந்து ஒரு தெகிரியம் குடுத்துரும்னு தெம்பா சொல்றாரு!
இப்ப இந்த வலாரி ஆருன்னு சொல்றேன் கேளு. வலன், வலன்னு ஒரு ராட்சசன் இருந்தான். அவனுக்கும் இந்திரனுக்கும் பகை. அரின்னா எதிரின்னு அர்த்தம். தங்கிட்ட இருந்த வஜ்ஜிராயுதத்தால அந்த அசுரனை இந்திரன் கெலிச்சுட்டான். அதுனால, இந்திரனுக்கு வலாரின்னு ஒரு பேரு.

அடுத்துது 'தலாரி'! தலம்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். இருக்கற எடத்துக்கு தலம்னு சொல்லுவாங்க. இங்கியும், அதே 'அரி'தான். வலாரி தலாரின்னா, இந்திரன் இருந்த எடத்தையே அழிச்ச எதிரின்னு பொருளு. ஆரு அப்பிடிப் பண்ணினாங்க. அவந்தான் சூர்மா. மான்னா ரொம்பப் பெருசுன்னு அர்த்தம். சூரன் எப்போ பெருசா நின்னான்? சமாதானமாப் போப்பான்னு சொல்ல வந்த முருகனை எதிரியாப் பாத்து, அவனோட சரமாரியாச் சண்டை போட்டு, சமாளிக்க முடியாமப் போயி, கடல்ல போயி ஒளிஞ்சுகிட்டான். வேலை விட்டெறிஞ்சாரு கந்தன். கடலே வத்திப் பூடுச்சு. இன்னாடா பண்றதுன்னு நேரா தேவலோகத்துல போயி ஒளிஞ்சுக்கறான். அவனுக்கு முன்னாடியே மயிலு அங்க நிக்குது! நல்லாக் கெவனி! மயிலு.... இவன் வேகத்துக்கும் முந்தியே அங்க போயிருச்சு! அவ்ளோ ஷ்பீடு அதுக்கு. அதுக்குத்தான் எமன் எருமையுல வர்றப்ப, மயில்மேல வந்து காப்பாத்திருவான் நம்ம முருகன்னு தெகிரியம் குடுக்கறாரு மனசுக்கு!

ம்ம்ம்... இப்ப மிச்சக் கதையும் கேளு. இன்னா பண்றதுன்னு புரியாம சூரன் ஒரு பெரிய்ய்ய்ய மாமரமா நின்னுடறான். பார்த்தாரு முருகன். இது இனிமே வேலைக்காவுதுன்னு, தன்னோட கையுல க்கீற வேலை எடுத்து வுடறாரு. மாமரம் ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாறிட்டான்னு கந்த புராணம் சொல்லுது. அதான் 'தொடு வேல் அவன்!' தொடுன்னா எறியுறது!

நாயர் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனைக் கையமர்த்தி, சும்மா இருக்கச் சொல்லிவிட்டு, மன்னார் தொடர்ந்தான்.

நீ இன்னா கேக்கப்போறேன்னு தெரியும்! அதான் ஏற்கெனவே மயிலு ஒண்ணு க்கீதே, அப்போ இந்த மயிலு இன்னா ஆச்சுன்னுதானே? சூரனோட ஒரு பாதி சக்தி, மயிலோட ஐக்கியமாயிருச்சுன்னு எடுத்துக்கணும்! மீதி சக்தி அவருக்கு கொடியா மாறிடுது.

எதுத்து நிக்கற சக்தில்லாம் வேலும், மயிலுமா முருகன் வந்தா ஒண்ணுமில்லாமப் போயிறும். அதுனால நீ எதுக்கும் கவலைப்படாதேன்னு தட்டிக் குடுக்கறாரு அருணகிரி.

இனிமே அடுத்தாப்புல வரப்போற மூணு பாட்டும் ஒரு செட்டு. அதை சனிக்கிளமையன்னிக்குப் பாக்கலாம். இன்னா அப்பிடிப் பாக்கறே. இனிமே அடிக்கடி நானு உங்களையெல்லாம் பாக்கப்போறேன்'எனச் சொல்லி மகிழ்வுடன் சிரித்தான் மயிலை மன்னார்.
****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, March 15, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

கந்தரநுபூதி - 10
9.
'இன்னைக்குப் பாக்கப்போற பாட்டு, நான் முந்தியே சொன்ன நாலு பாட்டுல கடைசிப் பாட்டு. இந்த மனசு இருக்கே... அது ரொம்ப ரொம்பப் பொல்லாதுது. அது பண்ற அளும்பாலத்தான் ஒரு வளியுல நெலைச்சு நின்னு, மனசொப்பிப் போவ முடியாம தடுக்குது. அதைத்தான் இந்த நாலு பாட்டுலியும் ஒண்ணொண்ணா சொல்லிக்கினே வராரு அருணகிரியாரு.

நீ எம்மனசு மேல ஒங்காலை வைச்சியானா அல்லா வெனையும் தீந்துரும்னு மொதப் பாட்டுல கொஞ்சலாக் கெஞ்சினாரு.
அடுத்த பாட்டுல, இன்னும் ஒரு படி மேல போயி, முருகனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதுனால அவன் வந்து காலை வைக்கறதுக்காவ 'வெயிட்' பண்ணாம, நீயே போயி அவனோட ரெண்டு காலையும் கெட்டியாப் புடிச்சுக்கோன்னாரு.
மூணாவது பாட்டுல, இந்த வம்புப் பேச்சையெல்லாம் வுட்டுட்டு, பேசாமக் கம்முன்னு கெடன்னு கந்தன் சொன்னதால, என்னோட ஊரு, என்னோட வூடு, என்னோட சொந்தக்காரங்கன்ற அல்லாமே அத்துப் பூட்டதாச் சொல்லி, அத்தச் சொன்னது ஆருன்னும் சொன்னாரு.
இப்ப இதுல, இன்னோரு விசயத்தப் பத்திச் சொல்றாரு. ம்ம்ம்... பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.
நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.


மட்டூர் குழன்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே.


நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.

மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.


ஊரு, வூடு, சொந்தபந்தம்னு அல்லாத்தியும் வுட்டுட்டாக்கூட, இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் தீரலை அருணையாருக்கு! இந்த விசயத்துல அருணகிரியாரு ஒரு காலத்துல 'ஆசைகிரியாரா' இருந்தாரு. அதான் பொண்ணாசை!
'மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்'னு கதர்றாரு.

மட்டு ஊருதாம் குழல் மேல!
மட்டுன்னா இன்னா? தேன், வாசனைன்னு ரெண்டு விதமாவும் சொல்லலாம். ஆனா, தல நெறைய பூவை வைச்சுக்கினு, இருட்டற நேரத்துல ரோட்டாரமா நின்னுக்கினு, சொகம் குடுக்கறதுக்காவக் காத்துக்கினு நிப்பாங்களே, அவங்களைத்தான் சொல்றாரு இந்த வரியுல.
அவங்க வைச்சுக்கினு க்கீற பூவுலேர்ந்து தேனா வடியுதாம் . அதுனால, அவங்க தலைமயிர்லேர்ந்து அப்பிடி ஒரு வாசனை கெளம்பிக் கெறங்கடிக்குதாம். அந்த வாசனை இவரை இளு[ழு]க்க, இவுரும் அவங்க பின்னாடியே போயிடுறாராம். அவங்க விரிக்கற ஆசை வலையுல இவுரு மாட்டிக்கினு அல்லாடுறாராம். எப்பிடி? ஒரு படகு கணக்கா! இப்பிடியும், அப்பிடியுமா துடுப்பு இல்லாம தண்ணியுல தத்தளிக்கற ஒரு படகு மாரி, இவுரு மனசும் ஆடுதாம். பரிசுன்னா, படகுன்னு அர்த்தம். இந்த சங்கடத்த நான் என்னிக்கு ஒளி[ழி]க்கறதுன்னு அளுவுறாரு. அல்லாம் இந்தப் பாளும் மனசு பண்ற கூத்து! பொண்ணுங்களப் பத்தித் தப்பாச் சொல்லலை இந்தப் பாட்டுல அவுரு! ஒன்னியத்தான்... ஒம் மனசத்தான் குத்தம் சொல்றாரு. நல்லாப் புரிஞ்சுக்க!


அப்பத்தான், இவுருக்கு 'சட்'டுன்னு நெனைப்புக்கு வருது!
சூரனோட சண்டை போடப் போறப்ப, வளியுல ஒரு மாய மலை நின்னுக்கினு அல்லாரியும் உள்ளே இளுத்துக்கினு போச்சுன்னு சொன்னேன்ல! அப்ப முருகன் இன்னா பண்ணினாரு. தன்னோட வேலை எடுத்து வுட்டாரு. அது கரீட்டா எங்க எந்தெந்த இடத்துல ஓட்டைங்க இருக்குன்னு பார்த்து, அந்த மலையையே தூள் தூளாக்கிருச்சு.

'அட! இன்னா 'ஐஸாலக்கடி' வேலை பண்ணினேப்பா ! பொல்லாத பய நீ! ஒரு செகண்டுல கவலையையெல்லாம் போக்கடிச்சு, அல்லாரோட பயத்தியும் தீத்துக்கட்டின வீரன் நீ! ஒன்னால என்னோட இந்த சின்னூண்டு கவலையையா போக்கடிக்க முடியாது?'ன்னு 'நைஸு' பண்றாரு!

'சாமி! அந்தக் கடைசி வரியுல வர்ற சமஸ்கிருதத்துக்கு கொஞ்சம் வெளக்கம் குடுங்க!' என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்துச் சொன்னான் மயிலை மன்னார்.


"தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே."


'சைலம்னா மலை, கிரவுஞ்ச மலை. நிட்டூரன்னா பொல்லாத பயன்னு அர்த்தம். செல்லமாக் கொஞ்சறார் அருணகிரியார்! ஆகுலம்னா கவலை; நிராகுலன்னா கவலையே இல்லாதவன்னு அர்த்தம். நிர்ப்பயன்னா பயமே இல்லாம யுத்தம் பண்றவன்னு சொல்லுவா!'

வளைவும், நெளிவுமா இருக்கற அந்த மலைக்குள்ள நுழைஞ்சு, அதைச் சல்லடை சல்லடையாப் பொடிப்பொடியாக்கின வேலைக் கையிலேர்ந்து துளிக்கூட பயமில்லாம எறிஞ்சு நிர்மூலம் பண்ணினவனே, அப்பனே முருகா!ன்னு ஸ்தோத்ரம் பண்றார் என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'இந்த நாலு பாட்டுலியும் சொன்னதக் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, இந்த மனசுன்ற ஒண்ணப் பத்திக் கவலியே படத் தாவல்ல! சரி, அடுத்த வாரம் பாப்பம். நான் வரேன் சாமி! ' எனச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான் மயிலை மன்னார்!
'எண்ட தெய்வமே! முருகா!' என கோபுரத்தைப் பார்த்து வணங்கினான் நாயர்.
*************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

Monday, March 07, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9
"கந்தரநுபூதி" -- 9

சரியான நேரத்துக்கு சாஸ்திரிகள் வீட்டை அடைந்தேன்.
இந்தமுறை மறக்காமல், நாயரையும் பார்த்துவிட்டு, அவனையும் கூடவே அழைத்துவந்தேன்!

எனக்கு முன்னாலேயே மன்னார் வந்திருந்தான். சாஸ்திரிகளுடன் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன், எங்களைப் பார்த்ததும், அப்படியே அதை நிறுத்திவிட்டு, 'வாங்க, வாங்க! நேரத்தோட வண்ட்டாப்புல க்கீது!' என வரவேற்றான்!

'பின்ன நாங்க எந்து செய்யி? சேட்டன் இப்போழ் வாரம் ஒரு முறையாய்ட்டுத் தானே சம்சாரிக்கின்னு!' எனச் சிணுங்கினான் நாயர்!

'தோ பார்றா? நாயருக்குக் கோவம் வர்றத!' எனச் சிரித்த மன்னார், சட்டென்று சீரியஸாகி,
'சரி, அப்போ அடுத்த பாட்டைப் பாக்கலாமா? அதுக்கும் முன்னாடி நான் சொன்னது நெனைப்பிருக்கட்டும். மனசைப் பாத்து சொல்ற மூணாவுது பாட்டு இது!

மொதப் பாட்டுல, கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு. ரெண்டாவது பாட்டுல, வெனையாவே செஞ்சு செஞ்சு கெட்டுப்போன மனசுக்கு ஒரு வளி காமிச்சாரு. இன்னான்னு? ஒன்னுதுன்னு ஒண்ணுத்தியும் ஒங்கிட்ட வைச்சுக்காமக் கொடுத்திட்டு, கந்தனோட காலு ரெண்டையும் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, நீ படுற வெனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாயிப் போயிரும்னாரு. இப்ப, இதுல இன்னா சொல்றார்னு பாப்பம்! அதுக்கும் முந்தி, பாட்டைப் படி' என்றான்.
நானும் படித்துக் காட்டினேன்.

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா
குமரன் கிரிரா சகுமா ரிமகன்
சமரம் பொருதா னவநா சகனே

அமரும் பதி கேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசிய ஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

'ஒரு பெரிய சங்கதியை முருகன் இவுருக்கு சொன்னாருன்னு போன பாட்டுல சொன்னேன்ல. அத்தச் சொன்னது ஆருன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கூத்தாடுறாரு அருணகிரிநாதரு.

'பேச்சையெல்லாம் வுட்டுட்டு 'கம்'முன்னு கெட'ன்னு சொன்னாராம்.
அந்த சத்திய வாக்கைக் கேட்டதுமே, ஒரு மூணுவிதமான மயக்கம் இவுருக்கு தீந்துபூட்டுதாம்!
இன்னான்னானு வரிசையா பட்டியலு போடுறாரு.

'அமரும் பதி'ன்னா இருக்கற ஊரு.
'கேள்'னா கேக்கறது இல்லை! சொந்தக்காரங்கன்னு அர்த்தம்! சொந்தமின்னா, அல்லாருந்தான்! பொண்டாட்டி, புள்ளை, மாமன், மச்சான்னு அல்லாரையுமேத்தான் சொல்றாரு.
இந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு கோஷம் போடுவாங்களே ஆளாளுக்கு மேடையுல அது ரெண்டுந்தான் மேல சொன்ன ரெண்டும்!
அடுத்தாப்புல, 'டகால்டி'யா ஒரு வார்த்தை போடுறாரு!... 'அகம்'னு.
அகம்னா வூடுன்னும் அர்த்தம் வைச்சுக்கலாம், நானுன்ற இந்த அகங்காரத்தியும் சொல்லலாம்.

மேல சொன்ன மூணையும் ... என்னோட ஊரு, என்னோட சாதிசனம், என்னோட வூடுன்றதுல்லாமே மனசுக்குள்ள ஒரு கெர்வத்தைக் குடுத்து என்னிய ஆட்டுது! ஒரு மயக்கத்தைக் குடுக்குது.
அத்தத்தான் 'பிமரம்'னு சொல்றாரு.
மொறையாப் பாத்தா, பிரமம்னுதான் சொல்லியிருக்கணும்!
ஆனா, அதெல்லாம் ஒரு மயக்கத்தைக் குடுக்கறதால, அந்த வார்த்தையே கொஞ்சம் திரும்பிப்பூடுது!
பிரமம், பிமரம் ஆயிருது!
இதுமாரி 'டமாசு'ல்லாம் அடிக்கடி பண்ணுவாரு நம்ம அருணகிரிசாமி!

முருகன் சொன்ன 'மெய்ப்பொருளால'... சத்திய வாக்கால... இந்த மயக்கமில்லாம் தீந்திருச்சாம் இவுருக்கு!
இந்த அதிசியத்த இன்னான்னு நான் சொல்லுவேன்னு குதிக்கறாரு!
அதான் 'கெட மெய்ப்பொருள் பேசிய ஆ!'

இத்தச் சொன்னது ஆருன்னு இப்ப அடுத்த பட்டியலு போடுறாரு!

இதுலியும் ஒரு மூணு வருது!

சொன்னது குமரன், அது ஆருன்னா கிரிராச குமாரியோட மகன், அவன் இன்னா பண்ணினான்னா, சமரம் பொரு தானவ நாசகன்னு வரிசியா அடுக்கிக்கினே போறாரு!

மொதல்ல சொன்ன மூணுக்கும், இப்ப சொல்ற மூணுக்கும் எதுனாசும் சம்பந்தம் க்கீதான்னு பாத்தா,... ஆமா! க்கீதுன்னு புரியவரும்!

'குமரன்'னாலே மலையிருக்கற ஊருலல்லாம் ஒக்காந்துக்கினு கீறவன்னு அல்லாருக்கும் தெரியும்! அப்போ, குமரன்னதுமே ஏதோ ஒரு ஊரு ஒன்னோட நெனைப்புக்குத் தானா வந்திரும்!

மலைராசன் பொண்ணு பெத்த புள்ளைன்னு அடுத்த வார்த்தை! 'கிரிராசகுமாரி மகன்'னு! இதுல ஒரு சொந்த பந்தத்தையும், அவரோட சொந்த வூடு எதுன்னும் லேசா தொட்டுக் காமிக்கறாரு!

'தனு'ன்னு ஒரு ராட்சசி பெத்த புள்ளைங்களான ராட்சசங்கள்லாம் சண்டைக்கு வந்தாங்களாம்.இவுரை எதுத்து! தனு பெத்ததால தானவர்னு அவங்களுக்குப் பேரு! அவங்களையெல்லாம் ஒண்ணுமில்லாம நாசம் பண்ணினவர்னு மூணாவதா சொல்றாரு. ...'சமரம் பொரு தானவ நாசகன்'னு!
சாமியோடையே சண்டை போட வர்றான்னா, அவன் எவ்ளோ பெரிய மடையனா இருக்கணும்? புத்தி கெட்டுப் போனாத்தானே, ஒரு மயக்கம் வந்தாத்தானே, இதும்மாரில்லாம் செய்யத் தோணும்!

இப்ப ரெண்டியும் சேத்துப் பாத்தியானா, ஊரு, சொந்தம், வூடுன்ற மூணு வித மயக்கமும் மனசைப் போட்டுக் கொய[ழ]ப்பறப்ப, தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, முருகன் சண்டை போட வந்திருவான்னு பூடகமா சொல்லிக் காட்றாரு நம்மாளு!

போன பாட்டுலியே சொன்னாமாரி, முருகன் சண்டை போட்டார்னா, ஆரும் அளிஞ்சுபோவ மாட்டாங்க! அதுக்குப் பதிலா, அந்தக் கொணங்களை மட்டும் தொரத்திட்டு, ஒனக்கு ஒரு உண்மையைக் காட்டுவாருன்னு இந்தப் பாட்டுல புரிஞ்சுக்கணும்!

இப்ப ஒரு சட்டை அளுக்காயிருச்சுன்னா, தூக்கியா கெடாசிடறோம்? அதுல க்கீற அளுக்கை மட்டும் சோப்பு போட்டுத் தொவைச்சு சுத்தம் பண்ணித் திரும்ப மாட்டிக்கறோம்ல?

அதும்மாரித்தான் இங்கியும்!
மயக்கந்தான் கெட்டுப் போவும்! நீ கெட மாட்டே! ஏன்னா, அப்பத்தானே ஒனக்கு அநுபூதின்னா இன்னான்னு புரியும்! இன்னா? சொல்றது வெளங்குதா?' என்றான்.

'ஏதோ கொஞ்சம் புரியுது மன்னார்! அப்பிடீன்னா, அடுத்த பாட்டுதான் இந்த வரிசையில் கடைசி பாட்டுல்லை? அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கே!' என்றேன்.

சாஸ்திரிகளைப் பார்த்து என்னைக் காட்டி உதட்டைப் பிதுக்கினான் மயிலை மன்னார்!

'ம்ம்... என்னத்தைச் சொல்றது?' என்பதுபோல் என்னை ஒரு இரக்கத்துடன் பார்த்தார் சாஸ்திரிகள்.

நாயர் ஒன்றும் பேசாமல், மௌனமாக எழுந்து நடையைக் கட்டினான்!

'அடுத்த வாரம் பாப்பம்! நாங்க வரோம் சாமி!' என சாம்பு சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டுவிட்டு, என் தோளின் மீது கையைப் போட்டவாறே நடக்கத் தொடங்கினான் மன்னார்.

மாலைநேர மயிலை மாடவீதி வழக்கம்போலக் களை கட்டியிருந்தது!
**********
[தொடரும்]

Read more...

Tuesday, February 22, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8
கந்தரநுபூதி: 8

பல வேலைகள் இருப்பதால் இனி வாரம் ஒரு முறைதான் பார்க்கமுடியுமெனச் சொல்லிவிட்டான் மன்னார்!

குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, என்ன வேலை இருந்தாலும், அந்த நேரத்தில் தான் சாஸ்திரிகள் வீட்டில் கண்டிப்பாக இருப்பேன் என வாக்களித்திருந்தான் மன்னார்!

'அநுபூதி கிடைப்பதென்றால் சும்மாவா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

சரியாகச் சொன்ன நேரத்திற்கு முன்னமேயே அங்கு சென்றுவிட்டேன்!

ஒரு சில நிமிடங்களில் அங்குவந்த நாயர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

அப்போதுதான் புரிந்தது... நான் அவனை அழைத்து வராமல் நேராக வந்துவிட்டதை!

ஒரு குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்தேன்!

'ஒன்னும் கொழப்பமில்லா! நிண்ட ரூட்டு வேற. எண்ட ரூட்டு வேற! எனிக்கு மனசிலாயி ' எனக் கபடமில்லாமல் சிரித்தான் நாயர். அவன் கையில் மசால் வடை பார்சல் இருந்தது!

இதைக் கேட்டுச் சிரித்தபடியே வந்தான் மயிலை மன்னார்!

'இன்னா நாயர்? அனுபூதி நீ இல்லாமலியே கேட்டுறலாம்னு வண்ட்டானா நம்ம சங்கரு? ' எனக் கிண்டலடித்தான்!

சாஸ்திரிகள் பெரிதாகச் சிரித்தார்!

'சரி, சரி! மேட்டருக்கு வருவோம்! அடுத்த பாட்டைப் படிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! இந்தக் "கந்தர் அனுபூதி"யை மட்டும் நம்ம அருணகிரியாரு கொத்து கொத்தாச் சொல்லியிருக்காரு! முந்தியே சொன்னேனில்ல... அந்த 3.4.5 மூணு பாட்டும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்கன்னு....... அதேமாரி, போன பாட்டுலேர்ந்து.... அதான், 6,7,8,9 பாட்டு நாலும் ஒரு செட்டு! இந்த நாலு பாட்டும் மனசைப் பத்திச் சொல்றது.
போன பாட்டுல கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு.

இப்ப இந்தப் பாட்டுல..... எங்கே அந்தப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்!


கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதா ணினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே .

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே .

ஏ! கெட்டுப் போன என்னோட மனசே!ன்னு தன்னோட மனசைப் பார்த்துப் பேசறாரு அருணகிரியாரு!
முன்னாடியே சொன்னேனே, அதுமாரி, இதெல்லாம் ஒனக்காவோ, இல்லை, எனக்காவோ அவுரு பாடலை!
இதும்மாரி பெரியவங்க சொன்னதெல்லாம் அவங்களைப் பத்தி மட்டுந்தான்! அவங்க பட்ட அனுபவத்தத்தான் பாட்டாப் பாடியிருக்காங்க!

ஏ, கெட்டு ஒளி[ழி]ஞ்சுபோன என்னோட மனசே! ஒனக்கு ஒரு வளி[ழி] சொல்றேன் கேட்டுக்கோன்னு ஆரம்பிக்கறாரு!

அதான்,
'கெடுவாய் மனனே கதிகேள்'

'கரவாதிடுவாய்'னா, கொஞ்சங்கூட சிந்தனையே பண்ணாம, ஒங்கிட்ட க்கீற பொருளையெல்லாம் கொடுத்திருன்றாரு!

ஒங்கிட்ட அப்பிடி இன்னா க்கீது?
பண்மா? பொருளா?
அதில்லை இங்க சொல்றது

அடுத்த வரியுல சொல்றரு... அத்தக் கவனி

'வடிவேல் இறைதாள் நினைவாய்'ன்னு ஒண்ணு சொல்றாரு!

அதான் இதுல முக்கியமாக் கவனிக்கணும் நீ!

இன்னாமோ நாம சம்பாதிச்சதக் குடுக்கறோம்னு அகந்தை பிடிச்சு அலையாம, இத்தயெல்லாம் குடுத்தது அந்தக் கந்தவேலந்தான்னு புரிஞ்சுக்கினு, அவன் குடுத்தத அவனோட அடியாருங்களுக்குக் குடுக்கறேன்ற நெனைப்போடக் குடுக்கணும்!

துளிக்கூட அகங்காரமே இல்லாம, இதெல்லாம் என்னோடதுன்ற நெனைப்பு கொஞ்சங்கூட வராமக் குடுக்கணும்ம் நீ!
அப்பத்தான் நீ குடுக்கறதுலியே ஒரு அர்த்தம் இருக்கும்னு தெளிவாச் சொல்றாரு அருணகிரியாரு!

அப்பிடிக் குடுத்தாத்தான் ஒன்னோட வேதனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாகிப் போவும்னு ஷ்ட்ராங்காச் சொலிடறாரு அடுத்த வரியுல!

'நெடுவேதனை தூள் படவே சுடுவாய்'

இத்தினி நாளா நீ அனுபவிச்சுக்கினு க்கீற வேதனையெல்லாம் தீந்து போவணும்னா, நீ குடுக்கறதெல்லாம் ஒன்னோடது இல்லை; அல்லாமே அவன் குடுத்ததுதான்ற நெனைப்போடக் குடுத்தாத்தான் வேதனை தீரும்னு புட்டுப் புட்டு வைக்கிறாரு!

இதுக்கு அப்பாலதான், ஒரு டகால்டி வேலை பண்றாரு இந்தாளு!

இன்னும் இன்னத்தக் குடுன்னு சொல்லலை ! நல்லாக் கெவனி!

'வினை யாவையுமே விடுவாய் விடுவாய்'னு ரெண்டு தபா சொல்றாரு!

எதுக்கு அப்பிடிச் சொல்றாருன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

வெனைன்னா இன்னா?

நல்ல வெனை, கெட்ட வெனைன்னு ரெண்டு க்கீது!

கெட்டத விட்டிருன்னுதான் அல்லாரும் சொல்லக் கேட்டிருக்கோம்!

இவுரு இன்னாடான்னா, அது நல்ல வெனை, கெட்ட வெனைன்னு பாக்காதே! வெனைன்னு எப்ப தெரிஞ்சு போச்சோ, அப்பவே, அது நல்லதா, கெட்டதான்னு ஆராய்ச்சி பண்ணிக்கினு டயத்த வேஸ்ட் பண்ணாம, வெனைன்னு தெரிஞ்சதுமே, அத்த விட்டிருன்னு அடிச்சுச் சொல்றாரு. இதத்தான் குடுக்கச் சொல்றாரு!

கொஞ்சம் கொயப்பமாத்தான் இருக்கும் இந்த சமாச்சாரம்!

கெட்டத வுட்டுரலாம். அது புரியுது.

ஆனா, எதுக்காவ நல்லதியும் வுட்டுருன்னு சொல்றாரு?

ஒரு நல்லது பண்ணினா அதுனால ஒனக்கு கொஞ்சம் புண்ணியம் கெடைக்கலாம்.
அத்த அனுபவிச்சே ஆவணும் நீ!

நீ அனுபூதியத் தேடிப் போறப்ப, இது எதுக்கு ஒனக்கு?

புரியுதா?

இத்தத்தான் 'சொல்லற, சும்மாயிரு'ன்னு கந்தன் சொல்லி வைச்சாரு அருணகிரியாருக்கு!

அது இப்ப நெனைப்புல வருது அவுருக்கு!

ஆஹா! எனக்கு நல்லதும் வேணாம்; கெட்டதும் வேணாம்! ஒண்ணுமில்லாம இருந்தாலே போறுண்டா சாமின்னு தடாலடியா மனசு கையுல சொல்லிடறாரு!

இப்ப ஒரு நாயை, அது ஒன்னோட நாயா இருந்தாக்கூட, ரூமுக்குள்ள பூட்டிவைச்சு அடிச்சியான்னா, ஒரு நேரத்துல அது ஒன்னியே திருப்பிக் கடிக்க வரும்! அதும்மாரித்தான், நாம செய்யற நல்லதும் கெட்டதும் நம்மியே திருப்பித் தாக்கும்! புரியுதா நான் சொல்றது? கெட்டதுல மட்டுமில்லாம, நல்லதாலியுங்கூட மனசு கெட்டுப் போவறதுக்கு சான்ஸ் க்கீது! கெர்வம் வந்திரும்!

அதுனால, நல்லதோ, கெட்டதோ, எத்தயுமே ஒங்கிட்ட வைச்சுக்காம, அல்லாமே அவன் தான் குடுத்தான்ற நெனைப்போட அல்லாத்தியுமே விட்டொளிச்சிருன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.

சரி, அடுத்த வாரம் இதே நேரம் பாப்போம்' எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

என்ன சொல்வதெனப் புரியாமல், ஏக்கத்துடன் மயிலை மன்னாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன் நான்!
*************

[தொடரும்].

Read more...

Wednesday, February 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

கந்தரநுபூதி: 7

'அதெப்பிடி நீ சொல்லலாம்!? லோகத்துல வந்து பொறந்துட்டேன்! இங்க எனக்குன்னு சில கடமைகள் விதிச்சிருக்கு! அதுக்கும் அவனைத் தானே நான் கேழ்க்கணும்? என்னை இப்பிடி கொண்டுவந்து போட்டுட்டியே ஷண்முகா! இப்ப நான் என்ன பண்றது? எனக்கு ஒன்னை விட்டா ஆரு கெதின்னு அந்த பகவானைக் கேழ்க்காம வேற ஆரைப் போய் நான் கேழ்க்கணும்ன்றே? எனக்கு நீ சொன்னது சரியாப் படலை மன்னார்!' என்றார் சாஸ்திரிகள்!

அவர் கண்கள் மயிலை மன்னாரைப் பார்த்து, லேசாகச் சிமிட்டியதுபோலத் தெரிந்தது என் மாயையோ? எனக்குத் தெரியவில்லை!

ஆனால், அவர் கேட்ட கேள்வியில் நியாயம் இருப்பதாகப் பட்டது!
'ஞானும் அதே விளிக்க நெனைச்சு' என நாயரும் எங்கள் பக்கம் சேர்ந்து கொண்டதும், இது சரிதான் எனும் முடிவுக்கே நானும் வந்துவிட்டேன்!
மன்னாரின் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது!

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, 'அடுத்த பாட்டைப் படி!' என்றான்!
நானும் படித்தேன்!

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந் தமரும் புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே.

திணியான மனோசிலை மீது உனது தாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே

'இன்னா சொல்றாரு இதுல?
எம் மனசு கல்லு போல க்கீது! அதுல ஒன்னோட தாமரைக் காலை வையி! மெல்லிசா க்கீற வள்ளியோட பாதத்தும் மேல தலைவைச்சுப் படுத்துக்கினுக்கீறியே, முருகா! அவ மேல ஒனக்கு இத்தினி ஆசையா? எம்மேல கருணை காட்ட மாட்டியா'ன்ற மாரி ஒரு பாட்டை இப்பக் குடுக்கறாரு!

படிக்கறப்ப ரொம்பவே சிம்ப்பிளாப் புரிஞ்சிரும் இந்தப் பாட்டு!
ஆனா, இன்னா சொல்றாருன்னு பாத்தா.... அடேங்கப்பா! இன்னால்லாம் சொல்லிக்கீறாருன்னு மலைச்சிப் போயிருவே!

'திணியான மனோசிலை'ன்னா இன்னா?
"திணி"ன்னா கெட்டியான்னு அர்த்தம்.
'சிலை'ன்னா கல்லு
'மனோசிலை'ன்னா, என்னோட மனசு கல்லுமாரி கீது!
'திணியான மனோசிலை'ன்னா, கெட்டியான கல்லுமாரிக்கீற மனசு!
ஆரோட மனசு?
ஒம் மனசைப் பத்தி எனக்கு இன்னா தெரியும்?
அல்லாம் என்னோட மனசுதான்!

'தாள்'னா காலு.... பாதம்னும் சொல்லலாம்!

'அணி' ன்னா அள[ழ]கானன்னு பொருளு.
அணிஆர்னா ரொம்ப ரொம்ப அள[ழ]கான.
அரவிந்தம்னா தாமரை.
அரும்புன்னா மொட்டு. ஆனா, அதுவே அரும்புமதோன்னு சொன்னா, மொட்டு பூக்குமோன்னு வந்துரும்!

ஆகக்கூடி, "உனது தாள் அணியார் அரும்புமதோ"ன்னா, தாமரை போல க்கீற ஒன்னோட காலு எம்மேல மலருமோன்னு கேக்கறாரு!

கல்லுமாரி கீற என்னோட மனசுமேல, தாமரை மாரிக்கீற ஒன்னோட காலு பட்டு மலருமோன்னு மொத ரெண்டு வரியுல கேக்கறாரு!

எது மலரணும்?
காலா? இல்லாங்காட்டிக்கு.. என்னோட மனசா?
அதான் தாமரைன்னு சொல்லிட்டாரே! தாமரை மொட்டுன்னா சொன்னாரு? இல்லதானே!
அப்ப, என்னோட கல்லு மனசை பூக்க வையிப்பான்னு கெஞ்சறாரு!

கல்லு எங்கியாச்சும் பூக்குமா?
இல்லேன்னா, கல்லுலதான் எதுனாச்சும் பூக்குமா?
நெனைச்சுப் பாரு! ஒனக்கே சிரிப்பு சிரிப்பா வரும்!
இன்னாடா இவுரு? ரொம்பப் பெரிய ஆளுன்னு நெனைச்சு இவுரு பாட்டைப் படிக்கறோம்! இவுரு இன்னாடான்னா இப்பிடிக்
கூமுட்டையாட்டம் ஒரு கேள்வி கேக்கறாரேன்னு தோணும்!

ஆனாக்காண்டிக்கு, இவுரா கூமுட்டை?
நாமதான் கூமுட்டை!

அடுத்த ரெண்டு வரியுல ஒரு போடு போட்டு அப்பிடியே சாய்ச்சிடுறாரு!

அப்பிடியே படிச்சியானா, இதுல இன்னா க்கீதுன்னுதான் தோணும் ஒனக்கு!

இன்னா சொல்றாரு?
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே

மெல்லிசா, பஞ்சுமாரி கீற வள்ளியோட பாதத்தும் மேல தன்னோட தலையை வைச்சுக்கினு, 'நீ இன்னா சொல்றே வள்ளி? இப்ப நானு இன்னா பண்ணணும்ன்றே?'ன்னு கெஞ்சுறாராம் இந்த முருகன்! அதான் இந்த 'பணியா என வள்ளி பதம் பணியும்'!!
அதும் எதுனால?
அவ மேல வைச்சிருக்கற அடக்க முடியாத காதல்னாலியாம்! அதி மோகன்னு சொல்றாரு!
ஆனாக்க, அவுரு பெரிய தயாபரனாம்!
தயாபரன்னா, ரொம்பவே கருணை வைச்சிருக்கற ஆளுன்னு அர்த்தம்!

வெச கெட்டுப் போயி, தனக்குப் பிடிச்ச வள்ளியோட பாதத்துல தலையை வைச்சுக்கினு, அவ சொல்ற வேலையச் செய்யுறதுக்கு தயாரா இருந்துக்கினு கெஞ்சற ஆளு கருணைக்கடலாம்!!!!

வேடிக்கையா இல்ல ஒனக்கு?
கேட்டா சிரிப்புத்தான் வரும்!

மொத ரெண்டு வரியுல அப்பிடி முருகனைக் கெஞ்சினவரு, இப்ப கேக்கற ஆளு ஆரைன்னா, ஒரு பொம்பள காலுல தன்னோட தலையை வைச்சுக்கினு, அவளைக் கெஞ்சற ஆளு!

இன்னா சொல்றாருன்னு ஆராயணும்!

வள்ளி ஆரு?
முருகனை மட்டுமே மனசுல நெனைச்சுக்கினு, வேற ஆரையும் கிட்டக்கக் கூட அண்ட வுடாத ஒரு பொண்ணு!
முளிச்சதுலேந்து, படுக்கற வரைக்கும், அவன் நெனைப்புத்தான் அவ மனசுல!
வேற ஆரையும் கிட்டக்க நெருங்க வுடாம, அவ எத்த வைச்சு வெரட்றான்னு கொஞ்சம் யோசி!


தெனைப்புனத்தும் மேல நிக்கறா வள்ளி!
அவ கையுல கவங்[ண்]கல்லு!
தன்னோட பொருளை தொடணும்னு ஆரு வந்தாலும் கல்லால அடிச்சு வெரட்டுற பொண்ணு அது!


அப்பிடி கல்லுமாரி க்கீற மனசைப் பாத்ததும், இவுருக்கு மனசு எளகிருது!
தனக்குன்னே க்கீற பொண்ணுக்கு தன்னை வுட்டா வேற ஆரு க்கீராங்கன்னு ஒரு நெனைப்பு வந்தவொடனியே, ஓடோடி வந்து அவ காலுல தன்னோட தலையை வைச்சு, 'இப்ப நான் இன்னா பண்ணனும்னு சொல்லு தாயி'ன்னுக் கெஞ்சறாரு இந்த கந்தன்!
இதான் அவரோட கொணம்~!

தன்னை நெனைச்சு உருகினாப் போறும் அவுருக்கு!
ஓடிவந்து கெஞ்சற ஒன்னியக் கொஞ்சுவாரு அவுரு!
அத்தத்தான் இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு!

ஒன்னியத் தவுர, வேற ஆரையும் மனசுல நெனைக்காம இருந்த வள்ளிக்காவ நீ எறங்கிவந்து, அவ சொல்ற வேலையைச் செய்யறதுக்குத் தயாராக் கீறமாரி, என்னோட மனசையும் ஒன்னோட பாதத்த வைச்சு மாத்துப்பான்னு!

இப்ப சொல்லு! அவரை மட்டுமே நெனைச்சு நீ உருகினா ஒன்னோட காலுலியே வந்து வுளறதுக்கு அவுரு ரெடியா க்கீறாரு.
அத்த வுட்டுட்டு, நீ இது வேணும், அது வேணும்னு கேட்டியானா அது டுபாக்கூரா இல்லியா?' என என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டு, ஓரக்கண்ணால் சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

சாம்பு சாஸ்திரிகள் தன் கண்ணாடியைக் கழற்றித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்!
நாயர் மௌனமாக எழுந்து இப்படியும் அப்படியுமாகத் தெருவில் நடந்தான்!
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, February 10, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

கந்தரநுபூதி: 6

'சரி! முதல் அஞ்சு பாட்டுக்குச் சொல்லிட்டே! இப்ப அடுத்த பாட்டைப் படிக்கவா?' என்றேன்.

மன்னாரை இரண்டு நாட்களுக்குப் பின் பார்த்து, மீண்டும் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில், நால்வரும் கூடியிருந்தோம்!

'அதுல சொன்னதுல்லாம் நல்லாப் புரிஞ்சிருந்திச்சுன்னா, இப்ப வரபோற பாட்டு ஈஸியாப் புரியும்! எங்கே. அத்தப் படி, கேப்போம்!' என்றான் மன்னார்!

நேரத்தை வீணாக்காமல் படித்தேன்!

மகமா யைகளைந் திடவல் லபிரான்
முகமா றுமொழிந் துமொழிந் திலனே
அகமா டைமடந் தையரென் றயருஞ்
செகமா யையுணின் றுதயங் குவதே.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே.

முருகனைப் பாத்துட்டாரு! கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட்டாரு! ஆனந்தத்துல கூத்தாடினாரு! அவரைக் கட்டித் தொல்லைப் படுத்துற ரெண்டு வெலங்கையும் களட்டச் சொல்லிக் கெஞ்சினாரா? இப்ப, இத்தினியும் ஆனதுக்கப்பாலியும், மறுபடியும் பொலம்பறாரு!
இன்னான்னு?

நீ இன்னாருன்னுக் கண்டுக்கினேன்! நீயே எதுக்க வந்து, 'பேச்சையெல்லாம் வுட்டுட்டு சும்மா இருடா!'ன்னு சொன்னதியும் கேட்டேன்! ஆனாக்க, இன்னும் எனக்கு புத்தி வரலியே! அகம்னா வூடு, மாடுன்னா செல்வம்; மடந்தையர்னா பொண்ணுங்க!


இப்பிடி,இந்த வூடு, சொத்து, சொகம், அளகான பொண்ணுங்கன்னு இன்னான்னமோ மாயையுல சிக்கிக்கினு இன்னமும் அல்லாடறேனே! இதுங்கல்லாம் என்னியப் போட்டுப் பொரட்டிப் பொரட்டி எடுக்குதுங்களே! அதுலேர்ந்து வெளியே வர்றதுக்கான வளி[ழி] தெரியாமத் திண்டாடித் தெருவுல நிக்கறேனே! வுடணும்னுதான் மனசு நெனைக்குது! ஆனா, அடுத்த செகண்டே ஒரு சபலம் வந்து தட்டுது! இன்னாத்துக்காவ இத்தயெல்லாம் வுடணும்னு இன்னோரு மனசு கேக்குது! அதானே! இன்னாத்துக்குன்னு இன்னொரு கொரலு சவுண்டு வுடுது! இன்னா பண்றதுன்னே தெரியாம இப்பிடித் தத்தளிக்கிறேனேன்னு மருகறாரு!

இன்னான்னமோ மாயையெல்லாம் சும்மா பொசுக்குன்னு தம்மாத்தூண்டு நேரத்துல 'ப்பூ'ன்னு ஊதித் தள்ளற சாமியே எதுருல வந்து சொன்னாக்கூடக் கேக்காத சென்மமாப் பூட்டேனேன்னு கதறுறாரு!

அதுவும் சும்மாவா சொன்னாரு? ஒரு வாயி இல்ல; ரெண்டு வாயி இல்ல! ஆறு மொவத்துலேர்ந்தும் ஆறு வாயால அமுதமாச் சொன்னாரு! அப்பவும் கேக்க மாட்டேங்குதே இந்த மனசுன்னு கண்ணால தண்ணி வுடறாரு!

நேத்து கூட ஃபோன்ல எனக்குப் படிச்சுக் காமிச்சியே! மாணிக்கவாசகரு சொன்னத எளுதியிருக்கர்னு சொன்னியே... அதும்மாரி, ஒன்னிய நல்லா ஆசைதீரப் பாத்ததுக்கப்பாலியும், நீ ஆறுமுகமா வந்து சொன்னதக் கேட்டதுக்கப்புறமும் எனக்குப் புத்தி வரலியே.... அது இன்னா சொன்னே? ஆங்!... புன்மை... அந்தப் புன்மை என்னிய வுட்டுப் போவலியேன்னு உருகுறாரு!

எதுக்காவ இந்த எடத்துல ஆறுமுகமேன்னு சொன்னாருன்னு கெவனி !
இப்ப, ஒனக்கு இருக்கற ரெண்டு கண்ணால நீ என்னியப் பாக்க முடியுது... நான் எதுத்தாப்புல க்கீறதால!


அதுவே பின்னாடியும் ஒரு மொகம்! அதுல ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அப்ப பின்னாலியும் பாக்க முடியும்!
ஆனாக்காண்டிக்கு, சைடுல பாக்க முடியாது ஒன்னால!


சரி நாலு பக்கமும் நாலு தலை...ரெண்டு ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அதுங்கூட அல்லாத்தியும் பாத்திரும்னு சொல்ல முடியாது!

ஆனா, ஆறு கோணத்துலியும் ஆரு மொகம்;;; அதுல ஒண்ணொண்னுலியும் தலா ரெண்டு ரெண்டு கண்ணு!
கணக்கு படிச்சவங்களைக் கேட்டியானா சொல்லுவாங்க....... அப்ப, மொகத்தத் திருப்பாமலியே அல்லாத்தியும் பாத்துற முடியும்! தலைக்கும் மேலே கூட பாக்க முடியும்!
அப்படிப் பாக்கறப்ப, எந்தப் பக்கத்துலேந்து மாயை வந்தாலும் நம்மளால பாக்க முடியும்!

நமக்குத்தான் அப்பிடி இல்லியே!
ஆனா முருகனுக்கு மட்டுந்தான்ஆறு மொகம், பன்னெண்டு கண்ணு!
அதுனால அவரைக் கூப்புட்டு காவலா வரச் சொல்றாரு!
யப்பா! முருகா! ஆறுமுகனே! நீதான் இந்த மாயைலேந்து என்னியக் காப்பத்தணும்னு கூப்புடறாரு!

அப்பிடி அவரே வந்து, 'தோ, பாரு! ஜாக்கிரதியா இரு'ன்னு காபந்து பண்ணினாக்கூட, தன்னோட ஆறு வாயாலியும் சொன்னாக்கூடக் கேக்க மாட்டாம, இத்தயெல்லாம் விட்டொளிக்காம, ரெண்டு பக்கமும் எரியுற குச்சிக்கு நடுவுல சிக்கிக்கின எறும்பு மாரி, இந்தப் பக்கமும் போகமுடியாம, அந்தப் பக்கமும் போகமுடியாம, இப்பிடி கெடந்து தவிக்கறேனேன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

இதுல நீ இன்னொண்ணக் கெவனிக்கணும்!

ரெண்டே ரெண்டு பேராலத்தான் இப்பிடி நேரடியா, தெகிரியமாச் சொல்லமுடியும்!


ஒண்ணு,... நெசமாவே இப்பிடி அனுபவிக்கற ஒரு ஆளால, தான் பாத்து அனுபவிச்சதெல்லாம் , இப்பிடி தன்னோட நடத்தையால மறைஞ்சு போச்சே'ன்னு அங்க மாணிக்கவாசகர் திருவாசகத்துல உருகுறாரே அதும்மாரி ஆளால!

ரெண்டாவதா,.... ஞானம் கெடச்சதுனால, தான் வேற, நீ, நானுல்லாம் வேறன்னு பிரிச்சுப் பாக்ககூட முடியாம, இந்த ஒலகத்துல க்கீற அத்தினியியுமே தானாப் பாக்கற ஆளால!


மத்தவங்க கெடந்து அல்லாடுறதக் கூட தன்னோடதா எடுத்துக்கினு, 'வாடின பயிரைப் பாத்தப்பால்லாம் நானும் வாடினேன்'ன்னு அளுதாரே ராமலிங்க சாமியாரு.. அதும்மாரி பாக்கறவங்க!

இந்த ரெண்டு பேருங்கதான் இப்பிடி எத்தயும் மறைக்காம, உண்மையைப் பேசுவாங்க!
அவங்களால மட்டுந்தான் இப்பிடில்லாம் அளமுடியும்! நாம அளுவுறதுல்லாம், 'இத்தக் குடு! அத்தக் குடு'ன்னு கேக்கறதுக்கு மட்டுந்தான்!

இருக்கற ஒவ்வொரு செகண்டுலியும், 'எனக்கு ஒன்னோட தெரிசனத்த நீ எப்பவுமே எனக்குக் காட்டுறமாரி, என்னிய இருக்கச் செய்யுப்பா'ன்னு அளுவுறதுதான் நெசமான அளுகை!
மத்ததுல்லாம் சும்மா ...டுபாக்கூரு சமாச்சாரம்!' எனச் சற்று உணர்ச்சியுடன் சொன்னான் மயிலை மன்னார்!
இன்னவெனச் சொல்லவியலாத ஒரு மௌனம் அங்கே நிலவியது!
மன்னார் எங்களைப் பார்த்து லேசாகச் சிரித்தான்!
***********
[தொடரும்]

Read more...

Sunday, February 06, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

"கந்தர் அனுபூதி" -- 5

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூ ருரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!

'அல்லாத்தியும் தொலைச்ச நலத்தைக் குடுப்பா'ன்னு கேட்டவரு, அது இன்னான்னு அடுத்த பாட்டுல சொன்னாரு. 'சண்முகா! ஆறுமுகா!' நீதான் அது'ன்னு ஒரு குன்ஸா' சொல்லிட்டாரு' எனத் தொடங்கினான் மயிலை மன்னார்!.

இப்ப இந்தப் பாட்டுல, இப்பிடி அல்லாத்தியுமே தொலைச்சிட்டாலும், ஆரு அதுன்னு தெரிஞ்சுகிட்டாலும், அத்தச் சேரவுடாம தடுக்கற ரெண்டு கைவெலங்கைப் பத்திச் சொல்றாரு!

'எங்கிட்ட இருக்கறது அல்லாத்தியுமே ஒண்ணொண்ணா களட்டி வுட்டுட்டேனே... ஆனாக்க, ... இந்த ரெண்டு வெலங்கை மட்டும் என்னால களட்டவே முடியிலியேப்பா! இப்பிடி என்னியப் பண்ணிட்டியே! இது அடுக்குமா? சரியா? மொறையா?'ன்னு பொலம்பறாரு... இந்தப்
பாட்டுல!

அப்பிடி இன்னாது அந்த ரெண்டு வெலங்கும்? அதைத்தான் 'தளை'ன்னு சொல்றாரு!

மொதத் தளை, தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி! பொதுவா 'மாது'ன்னு சொல்லாம, 'வளைபட்ட கை மாது'ன்னு சொல்றாரு,..... கெவனி!

வளைன்னா கையுல போட்டுக்கற வளைன்னு பொதுவாப் புரியும்! ஆனாக்காண்டிக்கு, இப்ப நேத்திக்கு ஒன்னோட 'பெருசு'..அதாம்ப்பா... அடிக்கடி கொளந்தை, கொளந்தைன்னு நீ கொஞ்சுவியே அந்தப் பெருசைத்தான் சொல்றேன்!!.... அவுரு சொன்னாருன்னு ஒண்ணைப் படிச்சுக் காமிச்சியே! .......பெரியவங்க சொல்ற சொல்லுக்கு நாமளா புரிஞ்சுக்கறதுன்னு ஒரு அர்த்தம் இருக்கும்! அவங்களா சொன்னது இன்னான்னு ஒரு பொருளு இருக்கும்னு! அதே கதைதான் இங்கியும்!!

வளைன்னு இங்க சொல்றது தன்னோட அன்பால ஒன்னிய வளைச்சுப் போட்டுருக்கே... அந்தப் வூட்டுக்காரியை! அவங்கதான் 'வளை பட்ட கை மாது'! வெளங்கிச்சா? ஒன்னிய நம்பி, நீயே சதமின்னு வந்தவங்களை எப்பிடி வுடறது? நீ பாட்டுக்கு 'சர்த்தான் போம்மா'ன்னு 'டொப்'புன்னு கெளம்பிற முடியுமா? முடியாதுதானே?

சரி, இப்ப அடுத்த தளை இன்னான்னு பாப்பம்!

இவங்களைக்கூட.... வூட்டுக்காரியக் கூட, ஏதோ ஒரு ஆத்தர அவசரத்துல வுட்டுட்டுப் போறவங்க இருக்காங்க! ஆனாக்காண்டிக்கு, பெத்த மக்களை எப்பிடி வுடறது? 'அப்பா'ன்னு அது வந்து காலைக் கட்டிக்கக்கொள்ள, அப்பிடியே பாசம் பொத்துக்கினு வருதுல்ல?


அதுங்களுக்கு ஒண்ணுன்னா, ஒம் மனசு எப்பிடி பதறித் துடிச்சுத் தவிக்குது? அதுங்க ஒன்னிய மதிக்குதா, பாசமா க்கீதான்றதப் பத்தி, துளிக்கூடக் கவலயே படாம, 'ஐயோ! என்னோட பசங்க'ன்னு உள்ளுக்குள்ள கெடந்து அடிச்சுக்குது இல்ல? அந்த 'மக்கள்'தான் இவுரு சொல்ற ரெண்டாவது தளை!

இந்த ரெண்டு வெலங்குமேவோ, இல்லாங்காட்டிக்கு இதுல ஏதோ ஒண்ணோ, ஒரு ஆளைப் பாடாப் படுத்தி அலையவைக்குது! இன்னா நான் சொல்றது? இன்னா அப்பிடிப் பாக்கறே?' என்றான் மன்னார்!

அதில்லை மன்னார்! மனைவி, மக்களை 'அம்போ'ன்னு தவிக்கவிட்டுட்டுப் போற சில 'நல்லவங்களும்' இருக்காங்கதானே? அப்போ எப்படி இது சரியாகும்?'.... என்று இழுத்தேன்!

'ஊரு ஒலகத்துல பொதுவா க்கீற கதையைத்தான் அருணகிரியாரு சொல்றாரு! நீ சொல்றமாரி, அல்லாத்துக்குமே அங்கங்க ஒரு விதிவெலக்கு இருக்கலாம்! ஆனா, அத்த வுட்டுட்டு, பொதுவாப் பார்த்தியானா, இதான் அல்லா எடத்துலியும் நடக்கறது!

இந்த தளைங்கல்லேர்ந்து எப்பிடி வெளியே வர்றதுன்னு யோசிக்கறாரு! இம்மாம் பெரிய மாயையுல மாட்டிக்கினோமே! எப்பிடிரா தப்பிக்கறதுன்னு மயங்கிப் போயி ஒக்காந்துடறாரு!

ஒடனே உள்ளுக்குள்ள ஒரு 'பல்பு' எரியுது அவருக்கு!

ரெண்டு சமாச்சாரம் நெனைப்புக்கு வருது!
கேக்கறது ஆரை? நம்ம முருகனை!
அவுரு இன்னா பண்ணினாரு?
சூரனையும், ஒரு மலையையும் அளிச்சாருன்னு புரியுது! எப்பிடி இத்தப் பண்ணினாருன்னு ஒக்காந்து யோசிக்கறாரு!

தாரகாசுரன்னு ஒர்த்தன்! சூரனோட தம்பி!
வீரவாகுத்தேவரு தாம் போயி அளிச்சுர்றேன்னு வீராப்பாச் சொல்லிட்டு, ஒரு பெரிய படையோட அங்க போறாரு! கந்தன் சிரிச்சுக்கினே "போய்ட்டு வாப்பா! அவனைப் பார்த்து மயங்கிராதே!'ன்னு அனுப்பி வைக்கறாரு!
அங்க போனா, அந்த ராட்சசன் ஒரு பெரிய மலையா...கிரவுஞ்ச மலையா.... உருவம் எடுத்துக்கினு நிக்கறான்! அல்லாரையும் மாயமா வளைச்சுப் போட்டுர்றான்!


உள்ளார போன ஆளுங்கல்லாம், நாம எங்க க்கீறோம்னே தெரியாம மயங்கறாங்க! சுத்திச் சுத்தி வராங்க! வெளியே வர வளியே தெரியலை!
ஆரோ ஒர்த்தர், ரெண்டு பேரு மட்டும் இதுல சிக்காம தப்பிச்சு வந்து முருகன் கையுல விசயத்தச் சொல்றாங்க!
இது ஒரு கதை!

அடுத்தாப்புல, இந்த ஆணவம் புடிச்ச சூரன் !
தங்கூட இருந்த மொத்தப் பேரும் காலியானதுக்கு அப்புறமுங்கூட, தன்னோட ஆணவத்த வுடாம, தனக்குத்தான் அல்லாமுந் தெரியும்னு கிறுக்குப் புடிச்சு, மாயாரூபமா, ஒரு பெரிய மாமரமா நிக்கறான்! தன்னை ஆரும் கண்டுபுடிக்கவே முடியாதுன்னு அவன் மனசுல ஒரு நெனைப்பு!
பெரிய்ய்ய்ய்ய சூரன்ல இவன்! அதான்! பூனை கண்ண மூடிக்கினு பூலோகமே இருட்டாயிருச்சுன்னு நெனைச்சமாரி!
நம்மாளு கண்ணுலேர்ந்து எதுனாச்சும் தப்பிச்சுப் போவ முடியுமா?
இது ரெண்டாவது கதை!

இந்த ரெண்டுலியுமே இன்னா ஆச்சுன்னு யோசனை பண்றாரு அருணகிரியாரு!
ரெண்டு கேஸுலியுமே, முருகன் ஒண்ணுமே பண்ணலை!
சும்மா கையுல க்கீற வேலைத் தொட்டாரு!
அவ்ளோதான்!
மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!
அன்னிக்கு 'சிவக்குறளுக்கு' சொல்றப்ப சிவன் வில்லை எடுக்காமலியே, அம்பு வுடாமலியே, அம்மாவைப் பார்த்து லேசா சிரிக்கக்கொள்ளியே, அந்த மூணு லோகமும் எரிஞ்சு போச்சுன்னு பார்த்தோமே, அதும்மாரி, இவுரு வேலைத் தொட்டதுமே, இப்பிடில்லாம் நடந்திருச்சு!

அப்பிடியாப்பட்ட சக்தி முருகன் கைவேலுக்கு க்கீதுன்னு புரிஞ்சுபோச்சு இவுருக்கு!
அத்தயெல்லாம் பண்ணினவருக்கு, அம்மாம் பெரிய மாயாசக்தியையே ஒண்ணுமில்லாமப் பண்ணினவருக்கு, இந்தக் துக்கினியூண்டு மாயையை தொலைக்கறதா பெரிய காரியம்னு ஒரு தெம்பு வருது!

ஒடனே, அடுத்த ரெண்டு வரியுல, 'கிளைபட்டெளு[ழு] சூரரும் கிரியும் தொ[து]ளை பட்டுருவத்..... தொடு.... வேலவனே!'ன்னு கெஞ்சறாரு!

தொடு வேலவனேன்றதுல இத்தினியையும் சொல்லிட்றாரு! இதுல இன்னொரு விசேசம் இன்னான்னா, மாயை மட்டுந்தான் தொலைஞ்சுது ரெண்டு எடத்துலியும்! மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும் ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்! அதேமாரி, ஒன்னிய இந்த மாயைலேர்ந்து வெளியே கொணார்றப்போ, மத்தவங்களுக்கும் [மனைவி, மக்கள்] ஒரு கெடுதியும் வராதுன்னு சூசகமா சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு!

'இப்பப் புரியுதா? எதுனால இந்த மூணு பாட்டையும் சேர்த்தே படிக்கணும்னு சொன்னேன்னு? மொதப் பாட்டுல எனக்கு சொல்லித் தாப்பான்னு, கொஞ்சலாக் கேக்கறாரு!
ரெண்டாவது பாட்டுல இன்னாது அதுன்னு தெரிஞ்சுக்கின ஒரு சந்தோசம்!
இப்ப, இந்த மூணாவது பாட்டுல ஒரு கெஞ்சலு!

எப்பிடி முருகன்கிட்ட சரணாகதி பண்றதுன்ற அனுபூதிய இந்த மூணு பாட்டுலியும் வைச்சு சொல்லிக்கீறாரு அந்த மகாப் பெரியவரு! இத்தப் படிச்சு, அவுரு காலுல நாம வுளுந்தாலே போறாதா?' என்றான் மயிலை மன்னார்!

'அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்! வேலாயுதப் பெருமானே சரணம்! கொஞ்சிடும் மழலையின் மலர்த்தாள் சரணம்!' என்று உரத்த குரலில் சொல்லிக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!
நாங்கள் மூவரும் அதை அப்படியே திருப்பிச் சொன்னோம்!

கபாலி கோவில் மணியும் 'ஓம்! ஓம்' என்பதுபோல் ஒலித்தது!
**********
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP