Tuesday, June 13, 2006

"விடைகொடு விடலைப் பருவமே"

நாமும்தான் முயன்று பார்ப்போமே என
தேன்கூட்டுப் போட்டியினின் தலைப்பதனை
ஒட்டியே ஒரு கவிதை புனைந்திங்கு
நானும்தான் வரைந்துள்ளேன்!
உள்ளன்பு கொண்டோரே!
ஒருவார்த்தை செப்பிடுவீர்!



"விடைகொடு விடலைப் பருவமே"


"விடைகொடு விடலைப் பருவமே"
அல்லது,
"விட்டுப் போகிறேன் விடலைப் பருவமே"
எனச் சொன்ன நாளை எண்ணி
காலச்சுவட்டில் தேடிப் பார்க்கிறேன்!

அரும்பாமல் அரும்பி நின்ற
மிருதுவான பூனை மீசையை
திரும்பத் திரும்ப சவரம் செய்து
முறுக்காக முளைத்த நாளா?

பாடம் படிக்கும் சாக்கில்
மாடிப்படியடியில் அவளறியாமல்
பதுங்கிச் சென்று ஒளிந்து நின்று
பார்ப்பதை மறந்த நாளா?

வீட்டிற்கு வந்தவுடன்
வயிற்றுக்கு என்னவென்று
விரட்டலாக தாயை வெருட்டி
வருத்தியதை நிறுத்திய நாளா?

மாலைஎனும் நேரமே மனமகிழத்தான் என்று
நாளையெலாம் வீணாகக் கழித்து நின்ற பொல்லாத
வேளையினைத் தள்ளிவிட்டு நேரத்தில் வீடுவந்து
காலலம்பி நீறணிந்து திகைக்க வைத்த நாளா?

காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?

எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!

Read more...

Friday, June 09, 2006

//நீ எனக்குச் சொல்//

//நீ எனக்குச் சொல்//



உன்னுடன் இருந்த நேரங்களை
நினைத்திங்கே பார்க்கையிலே
ஒன்றெனக்குப் புரிந்தது!
நீ ஒரு யானை!!

ஆம்!
உருவத்தைக் காட்டிப்
பழிக்கிறேனெனச் சொல்லாதே!
உனக்கே தெரியும்
நீ பிடியல்ல, கொடியென்று!

இருப்பினும் உன்னை
யானையெனச் சொன்னதுவும்
ஏனென்று கேட்கிறாயா?
சொல்லுவேன் கேள்!

உன்னுடன் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

உனைப் பிரிந்து
உன்நினைவைச் சுவைக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

இப்போது சொல்!
நீயும்,யானையும்
ஒன்றன்றோ!!

இருந்தாலும்
ஆயிரம் பொன்!
மறைந்தாலும்
ஆயிரம் பொன்!

நீ உணர்வதும்
அதுதானே!!
நீ எனக்குச் சொல்!

Read more...

Thursday, June 08, 2006

"அனுபவி ராசா அனுபவி!"

"அனுபவி ராசா அனுபவி!"

ஒரு தத்துவவாதியின் உளறல்கள்!!

கே: இந்த இருதய சம்பந்தமான பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்க உதவும் என்கிறார்களே? உண்மையா?

ப: இப்ப, ஒவ்வொருத்தரோட இதயத்துக்கும், இவ்வளவு துடிப்புதான்னு ஒரு கணக்கு பண்ணி இருக்குது! அவ்ளோதான்! சும்மனாச்சிக்கும், பயிற்சி, அது. இதுன்னு டைமை வேஸ்டு பண்ணாதே! அல்லாம் ஒரு நாளைக்குத் தேஞ்சுதான் பூடும்!
வெரசபடுத்தறேன்னு எக்ஸைஸ் பண்றது ஒண்ணும் வேலைக்கு ஆவாது!
இது எப்ப்டி இருக்குன்னா, என்னோட காரோட லைஃபை, வேகமா ஓட்றதால, ஜாஸ்தி பண்றேங்கற மாதிரித்தான்!

நெறைய நாளு உசுரோட இருக்கணுமா.... போய் நல்லாத் தூங்கு!

கே: இந்தக் கவிச்சிய வுட்டுட்டு, நெறய பழம், காய்கறில்லாம் சாப்பிடலாமா?

ப: நீ கொஞ்சம் நெதானமா யோசிக்கக் கத்துக்கணும்! இப்ப, ஒரு மாடு இன்னா சாப்டுது? புல்லும், தவிடும் , வைக்கோலும்! இதெல்லாம் இன்னா? காய்கறி! அப்ப்டீன்னா, மாட்டுக்கறின்றது, இந்தக் காய்கறிங்களை ஒரு ஸ்பெஷலான மொறையில, ஒன் ஒடம்புக்குள்ளே அனுப்பற ஒரு வித்தை. அவ்ளோதான்!

காய்கறி வேணாம்; தானியம்தான் வேணுமா? கோழிக்கறி சாப்பிடு!

கே: இந்தத் 'தண்ணீ' எல்லாம் கொறைக்கணும்னு சொல்றாங்களே.....?

ப: கூடவே கூடாது! ஒயினு பளத்துலேர்ந்து தயாராவுது! ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! பியர் கூட என்ன? பார்லிலேந்து பண்றது!

குடி மகனே... குடி!

கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!

கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே?

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா!

வந்துட்டான்... பெருசா!

நல்லா நெனப்புல வெச்சுக்கொ!
இந்த ஒடம்பு ஒரு நா கல்லறைக்குப் போகப்போவுது! அப்டி போறச்சே, நல்லா கட்டுமஸ்தா கொண்டுபோயி இன்னா லாபம்? நல்லா அனுபவி, இந்த பாடியை நல்லா யூஸ் பண்ணு! போகும்போது, 'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!

நா வர்ட்டா!

அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!

Read more...

Wednesday, June 07, 2006

வேறொன்றும் நானறியேன் பராபரமே!

வேறொன்றும் நானறியேன் பராபரமே!


பதிவொன்று போட்டிங்கு பல நாளும் ஆயாச்சு!
எதுவென்று தெரியாமல் எந்நாளும் நெனைச்சாச்சு!
இதுவா அதுவெனவே பலகாலம் யோசிச்சு
பொதுவாக ஒரு பதிவு போடவென முடிவாச்சு!

அரசியலைப் பேசயிங்கு அதிகம்பேர் இருக்கின்றார்!
சமையலைப் பற்றியோ தினமிங்கு பதிவுண்டு!
உள்குத்து வெளிக்குத்து ஓராயிரம் பதிவுண்டு!
தெள்ளுதமிழ் விளக்கம் சொல்ல குமரனும் இங்குண்டு!

கூடவே அவர் துணையாய் ஜிராவும் தினமுண்டு!
தன்வழியே போகின்ற வெட்டியானின் ஞானமுண்டு!
சுகமாகக் கவிதை சொல்ல சுகாவுடன் பலருண்டு!
பல்சுவையில் பரிமாற சுரேஷின் பதிவுமுண்டு!

யார் எங்கு போனால் எமெக்கென்னவென்றே
ஊர் ஊராய்ச் சென்றிங்கு அனவரையும் கலாய்க்கவென்றே
அனுமனின் பேர்சொல்லும் அழகான நாமக்கல்லின்
சிபியாரின் துணையின்றி தமிழிங்கே மணப்பதேது!

ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்
நானிங்கு நிற்கின்றேன் எனச் சொல்லி சதிரடிக்கும்
பொன்னான தமிழ்மகளாம் பொன்ஸாரின் தமிழ்மணக்க
நம்மையெல்லாம் நகைச்சுவையில் நிரப்பிடும் பதிவுமுண்டு!

இன்னுமிங்கு பலருண்டு, எடுத்தியம்ப நேரமில்லை!
பண்ணுகின்ற பணியதனை பாட ஒரு வாயுமில்லை!
என்னயிங்கு எழுதுவது என்றெண்ணிப் பார்க்கையிலே
ஒண்ணுமிங்கு தோணவில்லையென குசும்பாரும் சொல்லிவிட்டார்!

ஆகையினால் நண்பர்களே! நானிங்கு முடிவு செய்தேன்!
வாகாக ஒரு கருத்து என்மனதில் தோணும்வரை
சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
வேறொன்றும் நானறியேன் பராபரமே!

Read more...

Monday, May 29, 2006

தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!

தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!




தி.மு.க.== திருத்தவே முடியாத கழகம்
அ.தி.மு.க.== அறவே திருத்த முடியாத கழகம்

ஐம்பத்தைந்து ஆண்டு கால அரசியல் அநுபவம்
இருப்பினும் மாறாது இருக்கும் அரைவேக்காட்டுத்தனம்

தன் பெருமையைச் சொல்ல முடியாமல் தவித்து
அடுத்தவனை இழித்தே தான் வளர்ந்திடும் குணம்

அன்றும் மாறவில்லை; இன்றும் போகவில்லை!
என்றுமே "திருத்த முடியாத ழகம்"![தி.மு.க.]

தெரிந்தே பெயர் வைத்தார் திராவிடத் தலைவரும்
புரிந்தே செயல்படுவார் அவரின் தானைத்தலைவரும்!

அன்றும் இலவசம்! பொய்யான வாக்குறுதிகள்!
இன்றும் அதே கதைதான்! ஏமாற்றுதல் தொடர்கிறது!

அதை விடுத்த அடுத்தவரைப் பர்த்தாலோ
எதைச் சொல்லி அழுதிடுவேன் என்றெனெக்குத் தெரியவில்லை!

முறையாகத்தான் பேரும் வைத்திருக்கிறார்!
<strong>அறவே திருத்த முடியாத ழகமென்று![அ.தி.மு.க]

அவராவது பரவாயில்லை எனக்கொஞ்சம் நம்பிடலாம்!
தவறென்றால் ஒருசிறிது திருத்திட்வே முயற்சிப்பார்!

தன் தவறைத் தான் உணர மாட்டாமல்
பின் எவரும் கிடைப்பாரோ எனத் தேடி

கண் இரண்டும் போனாலும் பழுதில்லை என்று
உன் பழியை வாங்கிடவே உயிர் வளர்ப்பார் இவரிங்கு!

அவரைத் திருத்தவே முடியாதெனில்
இவரை அறவே திருத்த முடியாது!


இவ்விரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றினையே
தவறாமல் தேர்ந்தெடுக்க வைத்திடலே

தரணியினில் தமக்கிட்ட கட்டளை என
தமிழருமே திருந்தாமல் இருக்கின்றார்!

துயரமிதுத் தீராதா?
மதுரமினி வாராதா?

தமிழர் கதி இதுவெனவே
தலைவிதியும் ஆனதென்ன?

சற்றேனும் சிந்திப்பாய்!
பிறந்ததற்குப் பொருள் கொள்வாய்!

ஓ தமிழா!
ஓ தமிழா!

Read more...

Sunday, May 28, 2006

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"



தேர்தலிலே தெரிவு செய்த மக்களைப் பாராட்டி
மன்றத்தில் பேசியதால் மனமகிழும் தொண்டர்களே!

அக்கறையாய்ச் சபைக்கு வந்து
வக்கணையாய்க் கேள்விகள் கேட்டு
முக்கால் மணி நேரம் பேசியதால்
முறுவலிக்கும் கண்மணிகளே!

முதல் நாளே முறையின்றிச் சண்டையிட்டு
முழுவதுமாய் வெளியேற்றப்பட்டு இன்று
முன்னாள் முதல்வரை மன்றத்தில் வரச் செய்து
முனைப்பாகப் பேசியதால் முகம் மலர்ந்தீர் நீவிர் இன்று!

தவறான திட்டங்களை
தவறான நேரங்களில்
தவறாக அறிவித்து- இன்று
தவறான "முடிவைத்" தந்தவர்
தங்கமான உங்கள் தலைவி!

தோல்வியினைச் சரியாக நேர்கொள்ள மனமின்றி
துவண்டிருக்கும் தொண்டரையும் நினைவில் கொள்ளாமல்
துவக்க நாள் முதலே வரமாட்டேன் என்றே
துச்சமாய் அறிவித்த நும் தலைவி
தம்மக்கள் இன்று, தவறான நடத்தையினால்
தம் தொகுதி சார்பதனை மன்றத்தில் காட்டாமல்
தள்ளி வைக்கப்பட்ட நிலையினைக் கண்டவுடன்
"தளராத மனத்துடனே வேதாளம் வருதற்போலே"
தன்னிகரில்லாத் தலைவியும் சபைக்கு வர மனமிசைந்தார்!

வந்தவரைக் கண்ணியமாய்ப் பேசவிட்டு
"சொந்தமெல்லாம் இல்லாமல் தனியாக நின்றவரை"
நிந்தனைகள் செய்யாமல் ஆளுகின்ற முதல்வருமே
பாந்தமாகவே பதிலிறுத்தார்! அவருக்கு நன்றி!

பேசுகின்ற நேரத்தில்
ஏசுகின்ற குணம் விட்டு
காசு பணம் பார்க்காத
மாசற்ற நம் மக்கள்
குறை கேட்கும் குணமின்றி
நேசமாகப் பேசிடாமல்
கண்ணியமற்று நடந்திட்டார்
முன்னாள் முதல்வருமே!

முதல்வர் வருகின்ற போதினிலும்
முதல்வர் பதிலிறுக்கும் போதினிலும்
மற்றவர்கள் அமர்ந்திருக்க வேண்டுமென்பது
மற்றவருக்கு வேண்டுமெனில் மற்ந்திருக்கக் கூடும்
முன்னாள் முதல்வருக்கும் கூடுமோ?

தன் பேச்சு முடிந்தவுடன்
தன் வழியே போகாமல்
'மார்ஷல்' வந்து வெருட்டும் வரை
முறையற்ற இடத்தினிலே
தன் கருத்தை முன் வைத்து
தனிப்பேட்டி கொடுத்ததுவும்
முறை சொன்ன 'மார்ஷலையும்'
முறையின்றிப் பேசியதுவும்
முன்னாள் முதல்வர்க்கு அழகாமோ?

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்,

[நான் கருணாநிதியையும்,
பன்னீர்செல்வத்தையும்
சொல்லவில்லை!!

காமராஜரையும்,
ராஜாஜியையும்,
ஓமந்தூராரையும்
பக்தவத்சலத்தையும்,
அண்ணாத்துரையையும்
சொல்லுகின்றேன்!]

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்
முகம் சுளிக்க செய்தீரே!

மீண்டும் நீவிர் சட்டசபைக்கு
வருவதாகப் பேசுகிறார்!
அதுபோல நடந்திடவே
நானும் விரும்புகிறேன்!
கண்ணியம் காத்து
கடமையை ஆற்றிட
கவலையோடு என் வேண்டுதல்கள்!

"ஆடாதீர் தப்பாட்டம்!"

நன்றி!
வணக்கம்!

Read more...

Saturday, May 27, 2006

கருணாநிதியின் சொல்லாட்டம்!

கருணாநிதியின் சொல்லாட்டம்!


" நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல!"-- அமைச்சர் அன்பழ்கன்!!

அப்டிப் போடு.......அருவாளை!!

அடுத்தது என்ன?
எல்லோருக்கும் இலவச கலர் டிவி என்றால், அத்தனை எல்லோருக்கும் அல்ல!
ரேஷன் அரிசி 10 கிலோ இலவசம் என்றால், எல்லோருக்கும் அல்ல!

உன் நிலத்தை உன்னிடமிருந்து பிடுங்கி, அதை மேம்படுத்தல் என்ற பெயரில் கொள்ளை அடித்துப் பின் உனக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்!

நல்ல தமாசு!

Read more...

Friday, May 26, 2006

To Madhumitha

சங்கர்குமார்
ஆத்திகம்
http://aaththigam.blogspot.com
கேரி, thOLaChEri
யு.எஸ்.ஏ/India
அருண் வைத்தியநாதன்
03/08/06
சும்மாத்தான்!
நிறையவே! நல்லனவும், அல்லனவும், இன்னும் பல!
குறிபிடத்தக்க அளவில், டோண்டு, பொன் ஸ், செல்வன், குமரன், மாயவரத்தான், முகமூடி, கோவிகண்ணன், பச்சோந்தி, முத்து தமிழினி, சிவபாலன், வவ்வால் இன்னும் பலர்!!
அடங்க மறு!
சொல்லும் படியாய் ஒன்றுமில்லை!
ஆன்மீகம், இந்துமதம் பற்றி சில பதிவுகள்!

Here is the sutti

http://aaththigam.blogspot.com/2006/05/to-madhumitha.html

Read more...

Wednesday, May 24, 2006

எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!

எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!!



இலவசங்களை எதிர்பார்த்து
என்றுமே வாழ்ந்திருக்கும் ஒருகூட்டம்
எளியோரைக் காட்டி ஏமாற்றிட எண்ணுகிறது!
எத்திப் பிழைத்திடத் துடிக்கிறது.

மலம் சுமந்த நல்லோரை
மலம் தின்ன வைத்ததுவும்
கடை நிலையில் உள்ளவரைக்
கரை சேர்க்க எண்ணாமல்,

அவர் நிழலில் வாழ எண்ணி
அடுத்தவரைத் தூற்றி வந்து
எல்லா நலனும் பெற்றிட்ட எத்துக்காரர்
இடஒதுக்கீட்டை வாழ்த்துகிறார்

இவர் எண்ணம் எமக்கிங்கு புரியாதா
எதற்கிங்கு இவர் பல்லை இளிக்கின்றாரென்று
தனக்கதிலே என்ன லாபம் என்பதனை மட்டிலுமே
மன்க்கவலை படுமிவரை மன்னித்தல் தகுமோ?

சரியாகச் சொல்லுகின்றேன் கேட்டிடுவீர்!
"இட ஒதுக்கீடு வேண்டும்!!"
ஏழைகட்கும் எளியவர்க்கும்
இன வேறுபாடு இல்லாமல்!!!

எல்லாரும், எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
அல்லாரும், எளியாரும் அதிக பலன் அடைந்திடல் வேண்டும்!
இல்லாமை இல்லையெனும் நிலையிங்கே வர வேண்டும்!
பொல்லாமை செய்வரைப் புதைத்திடல் வேண்டும்!!

Read more...

Monday, May 15, 2006

நாயும் நானும்!

நண்பர் பச்சோந்தி ஒரு அழகான கவிதையைப் பதிவிட்டிருந்தார்!
அதனைப் படித்துக்கொண்டு வரும் போதே எனக்குள் எழுந்த மாற்றுக் கவிதையை அவருக்கு அனுப்பினேன்!
இப்போது உங்கள் பார்வைக்கும்!

முதலில் அவரது மூலக் கவிதை!
பின்னால் வருவது என் எண்ணம்!



நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்!!


அறியாமையின் பயத்தால் விளைந்த
அடிமை எண்ணத்தில்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்

கவனம் கலைந்த நான் வியப்புடன்
பயத்தின் பொருள் யாது என்றேன்
பயத்தின் பொருள் அடுத்தவரை
அச்சுறுத்துவதில் உண்டு என்றது அந்நாய்.

அச்சுறுத்தும் செயலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
பயம் என்பதன் பொருளும்
அச்சுறுத்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் திகைப்புடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
அடிமைப்படுவதில் உண்டு என்றது நாய்

அடிமைத்தனத்தின் சுகம்
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
அடிமைத்தனத்தின் சுகமும்
சுதந்திரத்தின் வலியும்

இது கொடுமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இது நல்லொழுக்கம்
என ஊளையிட்டது நாய்

சோர்ந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
பரிதாபம்..!
இந்தக் கொடுமையைச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அவமதிப்பும், புறக்கணிப்பும்
நிறைவென உணர வைத்தது யார்?

சிரிப்புடன் நாய் சொன்னது
நீ பேசுவது உனக்குச் சொல்லிக் கொடுத்தது.
நான் பேசுவது என் ஆன்மா அறிந்தது.
ஆனால் நீயும் நானும் வேறல்ல.
posted by Chameleon - பச்சோந்தி @ 10:57 PM

At 12:12 AM, SK said…

நாயும் நானும்!


மரியாதையின் காரணம் விளைந்த
அன்பு எண்ணத்தால்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்.

கவனம் கலைந்த வியப்புடன்
மரியாதையின் பொருள் யாது என்றேன்.
மரியாதையின் பொருள் அடுத்தவரை
அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.

அன்பு செய்தலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
மரியாதை என்பதன் பொருளும்
அன்பு செய்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.

நன்றியறிதலின் சுகம்
ஒருமுறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
நன்றியறிதலின் சுகமும்
சுதந்திரத்தின் சுவையும்.

இது அருமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இதுவே என் பெருமை
எனக் குரைத்தது என் நாய்.

வியந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
அற்புதம்!
இந்த உண்மையை இதற்குச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அன்பும், நன்றியும்
சிறந்த பண்பென
மனிதன் உணராமல் போனது ஏன்?

பரிவுடன் நாய் சொன்னது
உன் இயல்பை மறந்து
உள்தேடுதலை விட்டு
ஊதாரியாய் சுற்றுவதால்
உணர முடியாமல் போயிற்று
உனக்கு.

"அன்பு செய்!

நன்றியுடன் இரு!

உனக்கும் புரியும்!"

Read more...

Saturday, May 13, 2006

"நலம் வாழ நான் பாடுவேன்!"

"நலம் வாழ நான் பாடுவேன்!"


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொலவார்கள்!

அப்படித்தான் அரங்கேறியிருக்கிறது, தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றக் காட்சிகள்!

முதல் அர்ச்சனையே, மக்கள் தேர்ந்தெடுத்த மன்றப் பிரதிநிதிகளை 'விஷப்பாம்புகள்' என வர்ணித்த அவலம்!

அடுத்து நடந்தது, பதவியேற்பு நிகழ்ச்சிகளின் போது காவலரை அடித்து ஓட்டிய திமுக தொண்டர்களின் கண்ணியமற்ற செயல்!

திருவொற்றியூரில், பயந்தவாறே, எம் எல் ஏ/அமைச்சரின் தம்பியின் வெறிச்செயல்கள்!
[ஊர்மக்களில் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடி விட்டார்களாமே!]

மரபை மீறி, பதவியேற்பு நிகழ்ச்சியின் போதே அரசு ஆணைகளில் கையெழுத்திட்ட 'மலிவு விளம்பரம்'!

முன்னாள் முதலமைச்சர் ஒரு காரணமுமின்றி சட்டசபைக்கு வர மாட்டேன் என சொல்லியிருக்கும் கேவலம்!

மரபை மறுபடியும் மீறி, அதிமுக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத கோழை/பேடித்தனம்!

அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், சின்னஞ்சிறு பாண்டியில் தனி ஆட்சி செய்ய வேண்டி, பெரிய தமிழகத்தை விட்டுக் கொடுத்த காங்கிரஸின் பொறுப்பற்ற
குருட்டுதனம்!

இளங்கோவனின் வாக்கு பொய்க்க வேண்டுமென மட்டுமே தமிழகத்தைத் தாரை வார்த்த வாசனின் சுயநலம்!

மத்தியில் மட்டும் 12 மந்திரிகள் வேண்டும்; ஆனால் மாநிலத்தில் அதே நிலையில், "தான் மட்டுமே அரசு அமைக்க வேண்டும்" என்ற அரிப்பில் உள்ள 82 வயது தலைவரின் அராஜகத்திற்கு அடிபோகும் கழக அடிவருடிகள், கூட்டணிக் கேவலங்கள்[தலைவர்கள் எனச் சொல்ல மனம் வர மாட்டேன் என்கிறது!] இவர்களை நினைக்க மனம் குமுறுகிறது!


"மத்தியில் கூட்டாட்சி: மாநிலத்தில் நிபந்தனை அற்ற மற்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி" என்பதற்குத் துணை போன அனைவரையும் பார்த்துக் கேட்கிறேன்!...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் போல,..........!

இதெல்லாம் நடக்குமெனச் சொல்லி மாற்றம் கொடுங்கள் எனக் கேட்ட தமிழனுக்கு வாய்ப்பளிக்காத தமிழகமே!

மாற்றம் வேன்டுமென மனதார நினைத்தாலும்
மாறி மாறி இலவச அறிவுப்புகளை நம்பியே
முன்னேற்றக் கழகங்களுக்கு வாக்களித்து
ஏமாந்த தமிழகமே!

மீண்டும் ஒருமுறை
உன்னை நீ எண்ணிப்பார்!
இனியாவது வாழ,.......
சுயமரியாதையுடன் வாழ.....
நினை!

உனக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன்!
நலம் வாழ நான் பாடுவேன்!

Read more...

Thursday, May 11, 2006

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா!"

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா"!>



மத்திய அரசுப் பதவி
ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு,
மாநிலங்களில், மாறி, மாறி,
மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து
சுயமரியாதை இன்றி சுகித்து வாழும்
காங்கிரஸை துணைக்கொண்டு,
ஐந்தாம் முறையாக அரசு காணப் போகும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு
திறந்த ஒரு வாழ்த்துமடல் இதோ!!

'அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?"
எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர் அன்று!

'கூலி உயர்வு கேட்டார் அத்தான்!
குண்டடி பட்டுக் கொன்றார் அவரை'
எனக் கூவி மக்களின் அனுதாபத்தைப் பெற்று
ஆட்சியில் அமர்ந்தீர் அன்று!

"ரூபாய்க்கு மூன்று படி அரிசி" எனக்
கூசாமல் பொய் சொல்லி
குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஆட்சிக்கு வந்தீர் அன்று!

கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாய்
'நண்பர் இருவர்' உங்களுக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலமாய்
மாறி, மாறி தன்சுகம் மட்டுமே கண்டீர்கள்!

பருவம் அடைந்த பதினெட்டு வயதுப்
பாவைஅவளைப் பல பேர் சேர்ந்து
பாவியவள் கற்பை சூறையாடிய
கதைதான் நினைவுக்கு வருகிறது

'நம்மையெல்லாம் இழிவு செய்தான்
நாமதற்கு துணை நில்லோம்
நல்லதேசெய்வோம்' எனச் சொன்ன உமை
நம்பி நல்வாக்கு தந்திட்ட நலிந்தோரை - அட!
நாளெல்லாம் நினைக்க வேண்டாம்!- அவருக்கு
நலம் செய்ய மறந்திடலாமோ?!
நாடு போற்ற வேண்டாமா நல்லவரே!

நாலிருபது ஆண்டுகள்
நாநிலத்தில் இருந்து விட்டீர்!
ஈரிருபது ஆண்டுகள்
இம்மண்ணை ஆண்டு விட்டீர்!
ஓரிருபது ஆண்டுகள்
மத்தியிலும் பார்த்துவிட்டீர்!

இன்றைக்கு மீண்டும் உமை
பதினோராம் முறையாகத்
பரிவுடன் தேர்ந்தெடுத்து,
ஐந்தாம் முறையாக
ஆட்சிக் கட்டிலிலேற்றி
அழகு பார்த்து மகிழ்கிறார்
எம் இனிய தமிழ்மக்கள்
நீர் சொன்ன இலவசங்களை நம்பியே!

இத்தனைக் காலம் செய்ய மறந்ததை
இனிவரும் நாளிலேனும்
இனிதே செய்து,
இனிய தமிழகத்தை '
இன்பமுற வாழ வைக்க
இன்னுமொரு சந்தர்ப்பம்
இனிமேலும் வாய்க்காது
என்பதனை உணர்ந்து நீரும்,

நன்முறையில் ஆட்சி செய்து
நல்ல பெயரும் வாங்கி
நலமுடன் வாழ்ந்திடவே
நான் வாழ்த்துகிறேன்
நன்னாளாம் இன்று!

Read more...

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!

இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!

கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!

யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!

தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!

இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.

தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.

1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?

3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?

4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?

5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?

6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?

7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?

8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?

9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!

உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!

மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!

நன்றி.

வணக்கம்.

Read more...

Tuesday, May 09, 2006

நாளை நமதே!

சற்றே பொரும் பிள்ளாய்!

70 விழுக்காடு [சதவிகிதம்] மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் சொன்னவுடனே,
இங்கு பல பேரின் தூக்கம் போயே போச்சு!

அதிகம் பேர் வாக்களித்தால்,
ஆளும் கட்சிக்கு ஆதரவு!

'எக்ஸிட் போல்' கணக்குப்படி
எதிர்கட்சிக்கு ஆதரவு!

அதே 'எக்ஸிட் போல்' கணக்குப்படி
ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டென்றால்,
அது திமுகவிற்கும் போகும்!
எங்கள் விஜய்காந்துக்கும் போகும்!

கடலூர், திண்டிவனம் மாவட்டங்களில்,
பா.ம.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என
ஆரூடங்கள் சொல்கின்றன!

கருணாநிதியோ
மூன்று பட்டியலை வைத்துக் கொண்டு
முக்கிக் கொண்டிருக்கிராம்!

ஒன்று, திமுக மட்டுமே பெரும்பான்மை கொண்டால்!
இரண்டு, காங்கிரசும் கூட்டூக்கு வந்தால்!
மூன்று, பாமக மனம் மாறி, பங்கு கேட்டால்!

ஆனால்,
இன்னும் ஓட்டே எண்ணப்படவில்லை!
அதற்குள்,
இந்த தகவல்கள்!

வெட்கிப்போ தமிழகமே!
வெட்கி மடி தமிழனே!

உனக்கு இதுவும் வேண்டும்
இஒன்மும் வேண்டும்!

நான் முன்பே சொன்னது போல,
11-ம் தேதி வரை
நான் காத்திருப்பேன்!
உன்னைப் பார்த்திருப்பேன்!

தேமுதிக 70 சீட்டுகளுடன்!!!

மீதியை......
12-ம் தேதி பேசலாமே!




நாளை நமதே!

Read more...

Monday, May 08, 2006

podhu

நாயும், நன்றியும்!



ஒரு காட்டில், ஒரு முனிவர், தவம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாய் அவரது காலடியில் எப்போதும் அமர்ந்திருக்கும்.
அந்த நாயின் மேல் அவருக்கு ஒரு தனிப் பிரியம்!
எனென்றால், அவர் எப்போதும் அமர்ந்து தவம் செய்யும் புலித்தோலை வேறொரு முனிவரிடமிருந்து அவர் அறிய்யமல் 'திருடிக்' கொண்டு வந்து
இந்த முனிவருக்கு அளித்ததனால்,
இவருக்குக் கொள்ளைப் பிரியம் இந்த நாயினிடத்தில்!

அது மட்டுமல்ல1
இவர் வேறு வேலையாய்ப் போகும் நேரமெல்லாம்,
குளிக்க, பிச்சை எடுக்க, கடன் கழிக்க,
இப்படிப்பட்ட நேரத்திலெல்லாம், அந்த நாய் அந்தப் புலித்தோலின் மீது அமர்ந்து, வேறு யாரும் அதை எடுத்துப் போய் விடாமல் காத்திருக்கும்!

இதனாலெல்லாம் வேறு, அந்த முனிவருக்கு நாயினிடத்தில் பிரியம் வளர்ந்துகொண்டே வந்தது!

ஒருநாள், நாயைப் பார்த்துக் கேட்டார்,
'ஏ நாயே! உன் பக்தியை மெச்சினோம்!
உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள்!'

அந்த நாய் சொல்லிற்று,
அய்யா! உங்கள் கருணையே கருணை!
என்னை ஒரு நரி ஆக்குங்கள்!
அதுதான் எனக்கு வேண்டும் என்றது!

அப்படியே ஆகட்டும் என்று முனிவரும் ஒரு மந்திரம் சொல்லி, அந்த நாயை ஒரு நரியாக்கி விட்டார்!

நாயும், நரியாகி, மகிழ்ச்சியாக கொஞ்ச காலம் கழித்தது!
ஒரு புலியைப் பார்த்தவுடன்,
நரி ஓடி ஒளிந்தது!
இதைக் கண்டு வெட்கமடைந்த நரி,
முனிவரிடம் சென்று,
என்னை தயவு செய்து,
ஒரு புலியாக மாற்றிவிடுங்கள் எனக் கெஞ்சியது!

'அப்படியே ஆகுக!'
என முனிவரும் ஆசீர்வதித்தார்!
நரியும் புலியாகியது!

கொஞ்ச நாள் போனவுடன்,
புலி, ஒரு யானையைப் பார்த்தது!
ஆஹா! எவ்வளவு பெரிய உடம்பு!
நான் இப்படி ஆனால் எப்படி இருக்கும்
என நினைத்தது!

உடனே, முனிவரிடம் சென்றது!
கெஞ்சியது!
முனிவரும் மனமிரங்கி,
நீ ஒரு யானையாகக் கடவது என
வரமளித்தார்!

புலி, யானையாகி,
வனமெங்கும் அலைந்தது!
பெருமையுடன் வாழ்ந்தது!

ஒரு நாள் ஒரு சிங்கம் அந்த யானையைத் துரத்தியது!

அவ்வளவுதான்!
அந்த யானை உடனே முனிவரிடம் வந்தது!
'என்னை இப்போதே ஒரு சிங்கமாய் மாற்றுக!'
எனக் கெஞ்சியது!


முனிவரும் சிரித்துக் கொண்டே,
யானை சிங்கமாகும் மந்திரத்தைச் சொன்னார்!
யானையும் சிங்கமாயிற்று!

இப்போது அதை வெல்ல யாருமில்லை!

அந்த சிங்கம் நினைத்தது!
"என்னை வெல்ல யாருமில்லை!
ஆனால், என்னை பலமிழக்கச் செய்ய ஒருவனே உண்டு!
அவன் தான் இந்த முனிவன்!
அவனை அழித்து விட்டால்,
என்னை வெல்ல யாருமில்லை'"
என்று நினைத்து,
அந்த முனிவரின் பின்னால் வந்து,
அவர் பார்க்காத நேரம் பார்த்து,

தன் பிடரியை ஓங்கி
அவரை அடித்துக் கொல்லப்
புகுந்த வேளை,
முனிவர் தன் ஞான த்ருஷ்டியால்
அந்த நாயை ஒரு சொறிநாயாய் ஆக்கி விட்டார்!

அதோடு மட்டுமல்லாமல்,
இனி வரும் நாய்களெல்லாம்,
'நன்றி' என்பதை மறக்காத ஜீவனாய் இருக்குமென
வரமளித்து
மறைந்தார்!!


நாய்க்கு நன்றி வந்த கதை இதுதான்!

ஆகவே நாய்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்!

Read more...

podhu

நாயும், நன்றியும்!



ஒரு காட்டில், ஒரு முனிவர், தவம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாய் அவரது காலடியில் எப்போதும் அமர்ந்திருக்கும்.
அந்த நாயின் மேல் அவருக்கு ஒரு தனிப் பிரியம்!
எனென்றால், அவர் எப்போதும் அமர்ந்து தவம் செய்யும் புலித்தோலை வேறொரு முனிவரிடமிருந்து அவர் அறிய்யமல் 'திருடிக்' கொண்டு வந்து
இந்த முனிவருக்கு அளித்ததனால்,
இவருக்குக் கொள்ளைப் பிரியம் இந்த நாயினிடத்தில்!

அது மட்டுமல்ல1
இவர் வேறு வேலையாய்ப் போகும் நேரமெல்லாம்,
குளிக்க, பிச்சை எடுக்க, கடன் கழிக்க,
இப்படிப்பட்ட நேரத்திலெல்லாம், அந்த நாய் அந்தப் புலித்தோலின் மீது அமர்ந்து, வேறு யாரும் அதை எடுத்துப் போய் விடாமல் காத்திருக்கும்!

இதனாலெல்லாம் வேறு, அந்த முனிவருக்கு நாயினிடத்தில் பிரியம் வளர்ந்துகொண்டே வந்தது!

ஒருநாள், நாயைப் பார்த்துக் கேட்டார்,
'ஏ நாயே! உன் பக்தியை மெச்சினோம்!
உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள்!'

அந்த நாய் சொல்லிற்று,
அய்யா! உங்கள் கருணையே கருணை!
என்னை ஒரு நரி ஆக்குங்கள்!
அதுதான் எனக்கு வேண்டும் என்றது!

அப்படியே ஆகட்டும் என்று முனிவரும் ஒரு மந்திரம் சொல்லி, அந்த நாயை ஒரு நரியாக்கி விட்டார்!

நாயும், நரியாகி, மகிழ்ச்சியாக கொஞ்ச காலம் கழித்தது!
ஒரு புலியைப் பார்த்தவுடன்,
நரி ஓடி ஒளிந்தது!
இதைக் கண்டு வெட்கமடைந்த நரி,
முனிவரிடம் சென்று,
என்னை தயவு செய்து,
ஒரு புலியாக மாற்றிவிடுங்கள் எனக் கெஞ்சியது!

'அப்படியே ஆகுக!'
என முனிவரும் ஆசீர்வதித்தார்!
நரியும் புலியாகியது!

கொஞ்ச நாள் போனவுடன்,
புலி, ஒரு யானையைப் பார்த்தது!
ஆஹா! எவ்வளவு பெரிய உடம்பு!
நான் இப்படி ஆனால் எப்படி இருக்கும்
என நினைத்தது!

உடனே, முனிவரிடம் சென்றது!
கெஞ்சியது!
முனிவரும் மனமிரங்கி,
நீ ஒரு யானையாகக் கடவது என
வரமளித்தார்!

புலி, யானையாகி,
வனமெங்கும் அலைந்தது!
பெருமையுடன் வாழ்ந்தது!

ஒரு நாள் ஒரு சிங்கம் அந்த யானையைத் துரத்தியது!

அவ்வளவுதான்!
அந்த யானை உடனே முனிவரிடம் வந்தது!
'என்னை இப்போதே ஒரு சிங்கமாய் மாற்றுக!'
எனக் கெஞ்சியது!


முனிவரும் சிரித்துக் கொண்டே,
யானை சிங்கமாகும் மந்திரத்தைச் சொன்னார்!
யானையும் சிங்கமாயிற்று!

இப்போது அதை வெல்ல யாருமில்லை!

அந்த சிங்கம் நினைத்தது!
"என்னை வெல்ல யாருமில்லை!
ஆனால், என்னை பலமிழக்கச் செய்ய ஒருவனே உண்டு!
அவன் தான் இந்த முனிவன்!
அவனை அழித்து விட்டால்,
என்னை வெல்ல யாருமில்லை'"
என்று நினைத்து,
அந்த முனிவரின் பின்னால் வந்து,
அவர் பார்க்காத நேரம் பார்த்து,

தன் பிடரியை ஓங்கி
அவரை அடித்துக் கொல்லப்
புகுந்த வேளை,
முனிவர் தன் ஞான த்ருஷ்டியால்
அந்த நாயை ஒரு சொறிநாயாய் ஆக்கி விட்டார்!

அதோடு மட்டுமல்லாமல்,
இனி வரும் நாய்களெல்லாம்,
'நன்றி' என்பதை மறக்காத ஜீவனாய் இருக்குமென
வரமளித்து
மறைந்தார்!!


நாய்க்கு நன்றி வந்த கதை இதுதான்!

ஆகவே நாய்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்!

Read more...

Saturday, May 06, 2006

வேண்டுகோள்!

வேண்டுகோள்!


அய்யா/அம்மா,

வணக்கம்.

நாளை தேர்தல் நாள்.

யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவு செய்யும் முன் ஒரு வேண்டுகோள்!

முப்பதாண்டு காலம் மாறி, மாறி ஆட்சி செய்தும், தன் நலனைத் தவிர தமிழக நலனைக் கருத்தில் கொள்ளாத,
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதீர்கள்!

வேறு எந்த வேட்பாளருக்கு வேண்டுமானலும் போடுங்கள்1!

இந்த இரு கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் போடாதீர்கள்!

உங்கள் பிள்ளகளை நினைத்து சொல்கிறேன்.

அவர்கள் உங்களை வாழ்த்தவாவது, இவ்வுதவியினைச் செய்யுங்கள்!


வீழ்வது யாராயினும்,
வாழ்வது தமிழகமாய் இருக்கட்டும்!
நன்றி!

பி.கு. இம்மடலை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் உடனே அனுப்பி வையுங்கள்! நன்றி!

Read more...

Friday, May 05, 2006

'தேர்தல்- 2006'

ஆராச்சும் சொல்லுங்கப்பா!


இப்படி மாத்தி, மாத்தி கடைசி நிமிடம் வரை இலவசத் திட்டங்களை அறிவிச்சுக்கிட்டே இருக்காங்களே;

இந்தத் 'தேர்தல் விதிமுறை மீறல்' அப்படீன்னுல்லாம் சொல்றாங்களே,

அதுல இது வராதா??

சீக்கிரமா சொல்லுங்கப்பா!

விட்டா, தமிழ்நாட்டையே தாரை வாத்துடுவாங்க போல இருக்கே!


'எச்சிலை தனிலே
எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர் கும்பல்
[நா]ரோட்டிலே!!

கட்சி சாதி வேணாம்! - இந்தப்
பகுத்தறிவாளரைப்
பாக்காதீங்க!-
அவுகளுக்கு
ஓட்டும் போடாதீங்க!'

Read more...

arasiyal

'அலை' வீசட்டும்!
'முரசு' ஒலிக்கட்டும்!
நமது சின்னம் 'முரசு'!!
தேர்தல் நாள் மே 8-ம் தேதி!
இரு கழகங்களுக்கும் ஓய்வு கொடுப்போம்!

Read more...

Friday, April 28, 2006

வெற்றி முரசு


கேப்டன்" விஜயகாந்த்தின் பேட்டி - கோடை வெயிலுக்குச் சற்றும் சளைக்காத சூட்டுடன்....

உங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீங்க?

"என்னோட கட்சி வேட்பாளர்கள் எளிமையானவர்கள். திறமையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். இவங்க உங்க கூடவே இருந்து, உங்களில் ஒருத்தராக இருப்பாங்கன்னு மக்கள்கிட்டே பகிரங்கமாகச் சொல்லிட்டு வர்றேன். உண்மை, உழைப்பு, நேர்மை, கல்வித்தகுதி எல்லாத்தையும் கவனத்தில் வச்சேன். டாக்டர்கள், என்ஜினீயர்கள், பட்டம் பெற்றவர்கள் இப்படி பலவிதமாக களத்தில் இருக்காங்க. பெண்களுக்குப் பெரிய பங்கு இருக்கு."

மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிற ஒரு கட்சி. அதோடு தேர்தல் களத்துக்கும் வந்தாச்சு. 234 தொகுதிக்கும், வேட்பாளர், பயணம், பிரசாரம், மேடைகள், கூட்டங்கள் மலைப்பாக இருக்கு. செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?

"நான் சினிமாவில் நடிச்சு வந்ததெல்லாம், மக்கள் என்மேல் வைச்ச அன்பினால் வந்த பணம். அதையும் கட்சி நடத்த செலவழிக்கிறேன். அதுவும் பெரிய பணம் அல்ல. கட்சிக்காரர்கள் முடிந்த அளவுக்குத் தங்களுடைய பணத்தைக் கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிறாங்க. பூந்தோட்டத்திற்கு எதுக்கு சார் விளம்பரம்? நல்லது செய்கிறவங்களுக்கு ஓட்டா? நாட்டை ஏமாத்தறவங்களுக்கு ஓட்டான்னு கேக்குறேன். இதுக்கு எதுக்குப் பணம்?"

திடீர் தலைவர்னு உங்களைப் பற்றிய கிண்டல் இப்பவும் இருக்கிறதே?

"இப்படிப் பேசுறவங்களுக்கு நான் சொல்கிற அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உங்கள் மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி, நடந்த விஷயங்களை யோசிச்சுப் பாருங்க. அறிஞர்அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் முதல்வர் ஆனது திடீர் என்றுதானே?

சோனியாகாந்திதான் பிரதமர்னு நினைச்சுதானே மக்கள் ஓட்டுப்போட்டாங்க. மன்மோகன்சிங் எப்படி வந்தார்? சோனியா காந்தியே திடீர் தலைவர்தானே? அ.தி.மு.க. ஜெயிச்சு பிரச்னை வந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரே? அவர் திடீர் தலைவர் இல்லையா? இப்படி ஒவ்வொரு கட்சியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திட்டு எங்கிட்ட வாங்க. யார் தலைவன்னு நம்மளை நாமளே
சொல்லிக்கிறதில்லைங்க.. மக்கள்தான் முடிவு பண்றாங்க."

வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்குப் போயிடுவார்னு, நீங்கள் முன்பே பேட்டியில் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எப்படி இந்த அனுமானம்?

"ஒரு சின்ன கணக்குதான். வைகோவோட ம.தி.மு.க. என்பதே வாரிசு அரசியலை எதிர்க்கிறதுதான். இதைத் தாவல்னு சொல்றாங்க. அவமானப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள். அவருக்கு என்ன அவமானப்படுத்தப்படுவது புதுசா? ஏற்கெனவே தன்னை அவமானப்படுத்திட்டாங்க என்றுதானே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். நான் மக்கள்கிட்டே சொல்றது இதுதான். பாருங்க, யாராவது உங்களோட பிரச்னைக்குச் சண்டை போட்டுட்டு கூட்டணியை மாத்தி இருக்கிறார்களா? எவ்வளவு கேட்டும் என் தொகுதிக்குத் தண்ணி வரலைன்னு சொல்லிட்டு, எந்த எம்.எல்.ஏ. யாவது கட்சி மாறியிருக்காங்களா? இப்படி மாறி மாறி ஓட்டுப்போட்டு, இந்த இரண்டு துருப்பிடிச்ச கட்சிகளை ஆதரிக்கப் போறீங்களா?

வாரிசு அரசியலை நீங்க ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்க குடும்பத்து ஆட்களும் உங்க கட்சியில் பங்கெடுக்கறாங்களே?

"அமெரிக்க அதிபர் புஷ்ஷோட அப்பா யாரு? இந்திரா அம்மையார் யாரு? ராஜிவ் காந்தி யாரு? சோனியா காந்தி யாரு? ஜி.கே. வாசன் யாரு? ஒரு கட்சித்தலைவருக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அவரோட அர்ப்பணிப்பும், கட்சிக்கான உழைப்பும்தான் முக்கியமானது. ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக ஏன் வரக்கூடாது? அவர் தொடர்ந்து அந்தக் கட்சிக்காக வருஷக் கணக்காக உழைக்கிறாரே! காலங்காலமாக கட்சிக்கு உழைச்ச தி.மு.க.காரன் வயித்துல துண்டை
போட்டுட்டு, திடீர்னு புதுசாக எங்கேயிருந்தோ கொண்டு வந்து திணிக்கிறாங்க இல்லையா? அதை எதிர்க்கிறேன். மத்தபடி, எங்க வீட்டில் எனக்குச் செய்வது உதவி. பையன் பரீட்சைக்கு படிச்சா, அம்மா நாலு மணிக்கே எழுந்து டீ போட்டுக் கொடுத்து பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிறதில்லையா? அப்படித்தான் என் வீடு."

தி.மு.க., அ.தி.மு.க. பேச்சாளர்கள் உங்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க. தலைவரோ, அ.தி.மு.க. தலைவரோ அப்படி நேரடியாகத் தாக்குகிற மாதிரி தெரியவில்லையே?

"இரண்டு கழகத்தின் தலைவர்களுக்கும் என் பலம் புரிந்திருக்கிறது போல."

கடைசி வரைக்கும் அ.தி.மு.க. விற்குப் போய்விடுவீர்கள் என்று ஒரு செய்தி இருந்ததே?

"ஆரம்பத்திலிருந்து நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேன் என்று ஒரே வார்த்தையில் நின்னேன். அப்படியேதான் இப்பவும் இருக்கேன். இடையில் எல்லாக் கட்சியும் பேசிப்பார்த்தாங்க. நாங்க எங்க வேலையைப் பார்த்தோம். உளவுத்துறையும் நிறைய வேலை செய்தது."

இந்தக் கல்யாண மண்டபம் எந்த அளவில், எப்படி இருக்கு?

"விஜயகாந்த் எதிரின்னு நினைச்ச உடனே தி.மு.க. மண்டபத்தை இடிச்சு சந்தோஷப்பட பாத்தாங்க. காலம் மாறின உடனே, ஒரு புது ப்ளான் போட்டுக் கொடுத்தால் இடிக்காமல் விடுவதைப் பற்றிப் பார்க்கலாம்னு டி.ஆர்.பாலு சொன்னார். ஆனால், நான் ஒரு புது ப்ளானை இன்ஜினீயர்களை வச்சுப்போட்டு டி.ஆர். பாலுவிற்கு அனுப்பியிருக்கேன். இதுவரைக்கும் பதில் இல்லை. அனுப்பலைன்னா நீங்கதான் அனுப்பலைன்னு சொல்லிவிடுவாங்க. இதோ அனுப்பியாச்சு... பாலம் மண்டபத்துக்கு மேல போகுதா? இல்லை மண்டபத்து
மேலேயே போகுதான்னு பார்ப்போம்."

நீங்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசி. அ.தி.மு.க.வில் கூட அந்த மாதிரி விசுவாசிகள் இருக்காங்களே?

"ராமாபுரம் பக்கம் போனால் தோட்டத்தைப் பாருங்க. எப்பேர்ப்பட்ட வள்ளல்! எப்படி வாழ்ந்தது அந்த மனித மாணிக்கம்! வீடும் தோட்டமும் கவனிக்க ஆள் இல்லாமல் சிதைஞ்சு கிடக்கு. பாக்க நெஞ்சு அடைக்குது சார்... இன்னிக்கு அவர் போட்ட சாப்பாடு, வேலை, உடை, கட்சி, கௌரவம்னு வாழறவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்க உருவாக்கின கட்சி, கோடிகளில் கொண்டாட்டமாக இருக்கு. ஆனால், அவர் நடந்து வாழ்ந்த மண்? எம்.ஜி.ஆர். ஆத்மா இவர்களை மன்னிக்காது. ஜானகி அம்மா பள்ளிக்கு அப்ப 25,000 ரூபாய் கொடுத்தேன். இப்ப அவங்க கூட இல்லை. ஆனால் 50,000 ரூபாய் வருஷத்திற்குக் கொடுக்கிறேன்.
எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லி வாழறவங்க எங்கே? அந்த விசுவாசிகள் எங்கே? மறந்த அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கடவுள் கவனிச்சுக்கிட்டே இருக்கார்."

கட்சி ஆரம்பிச்சீங்க. கூட்டம் கூட்டமாக மக்கள் வர்றாங்க. தொடர் பயணம் எல்லாம் சரி. இன்னும் உங்க சின்னம் தெரியலை. தெரிய வைக்க என்ன செய்யப்போறீங்க?

"நாம நல்லது பண்ணுவோம்னு தெரிஞ்சால் மக்கள் நம்ம சின்னத்தையே தேடி வருவாங்க. மக்களுக்கு விஜயகாந்தைத் தெரியும். அவங்களுக்கு விஜயகாந்தின் சின்னத்தைத் தெரிஞ்சுக்கிறது சுலபம். ஓட்டு நல்ல ஆட்சிக்குத்தானே தவிர, பழகின சின்னத்திற்கு அல்ல. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று இரட்டை இலை கிடைச்சு ஜெயிக்கலையா? சின்னம் ரீச் ஆயிட்டால் ஜெயிக்கலாம்னா, போன
பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க. ஏன் படுதோல்வி அடைந்தது? இலை ரீச் ஆகலையா? சார், மக்களுக்கு நல்லது பண்ணினால் கொண்டாடுவாங்க நிச்சயமாக."

ஒரே வார்த்தையில் சொல்லுங்க. என்ன சொல்லி இந்த இரண்டு கட்சியையும் எதிர்க்கப்போறீங்க?

"ஊழல்தான்... இவங்க இரண்டுபேரும் பெரிசு பெரிசா ஊழல் பண்ணி, எக்கச்சக்கமாகச் சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க. கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க. அந்தப் பணத்தை எல்லாம் எண்ணி முடிக்கவே, அடுத்த ஐந்து வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கையில் கொடுங்க. நீங்க திரும்ப இறக்கிவிட முடியாத அளவுக்கு வேண்டியது எல்லாம் செய்கிறேன்."

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP