Thursday, July 02, 2009

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

வடமலைராயன் மனம் மிக நொந்தான்
மனம்நிறை முருகனின் உருதேடி அலைந்தான்

கள்வரன்று கொண்டுபோன சேதிகேட்டுத் துடித்தான்

மறுசிலையும் வடித்திடவே ஆணையொன்று செய்தான்


கனவிலங்கு முருகன் வந்தான்

கடலிடையே தேடென்றான்

எலுமிச்சை மிதக்குமென்றான்
எடுத்துவர அருள் கொடுத்தான்


கட்டுமரம் ஏறியங்கு வடமலையான் புறப்பட்டான்

நடுக்கடலில் நாயகனைத் தேடியங்கு அலைந்தான்

கருடனொன்று வட்டமிட அதன்பின்னே சென்றான்
கள்வரிட்ட இடத்தினிலே எலுமிச்சை மிதக்கக் கண்டான்


சிலையின் கனம் அதிகரிக்க

கட்டுமரம் தத்தளிக்க

பரிதவித்த கள்வரவர்

பொற்சிலையைக் கடலிலிட்டார்


ஆழ்கடலுள் குதித்தங்கே ஆண்டவனைக் கண்டெடுத்தான்

வாழ்கின்ற வாழ்க்கையிலே பேரருளும் சிறக்கக் கண்டான்

சூழ்ந்திருந்த கவலையெலாம் நொடிப்பொழுதில் அகன்றுவிட
மகிழ்வுடனே வடமலையான் முருகனுரு மீட்டுவந்தான்


இறையருளிருக்க ஏனிங்குகவலை

கரைசேர்க்கும் கந்தனிவன்
அலைகடலில் குளித்தபின்னர்

அலைவாயில் கோயில் கொண்டான்


திருச்செந்தூர் சந்நிதியில் தினமெல்லாம் திருவிழா

அருட்செந்தில் பதியினிலே ஆனியிலே பெருவிழா

குடமுழுக்கு காணுகிறான் கோலமயில் முருகனிவன்

ஓடிவந்து தரிசிப்போர் உள்ளமெலாம் நிறைத்திருப்பான்


வேலில்லா முருகனிவன்

கமலமலர் கையினிலே

அப்பனுக்கு அனுதினமும்

அருட்பூசை செய்கின்றான்


அலைமோதும் கடலிங்கு அரகரோகரா தினம்பாட

அலையலையாய் அடியவர்கள் அருள்முருகன் முகம்காண

சிலையாக நிற்கின்ற திருவுருவம் அருள்சொரிய

மலைபோலும் துன்பமெலாம் பொடிப்பொடியாய்த் தகர்ந்திடுமே


முருகனுக்கு அரோகரா

வேலனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா

செந்திலாண்டவனுக்கு அரகரோகரா!


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!
*********************************