Sunday, August 16, 2009

"இறைசெயல் தன்செயல்"

"இறைசெயல் தன்செயல்"

'இறைசெயல் தன்செயல் எப்படி உணர்வது இதனை?'

என்றொருகேள்வியை நானும்வைத்திட
எம்மவர் அருகினில் திரும்பிப் பார்த்தார்

நிகழ்வன யாவும் இறைசெயலாகும்

எம்துணையின்றியே அதுவும் நிகழும்


நீயும் நானும் இருந்திடும் நேரம்

இங்கே எதிரே எம்நலன்பேணி

அன்புடன் அன்னை அளித்திடும் உணவும்

தன்செயல்தொட்டே நிகழ்வது ஆகும்


வருபவர் நலனைக் கருத்தினில் கொண்டு

அறுசுவையமுது எமக்கெனப் படைக்க

மாலையில் தொடங்கிய பணியின் விளைவே

இங்கே எதிரில் இருந்திடும் உணவு


சோலையில் மாலையில் அமர்ந்திடும் நேரம்

எவரோ ஒருவர் குறுக்கே போவதும்

இலையது உதிர்ந்து மேலே வீழ்வதும்

எம்செயல் அதிலே ஏதும் இல்லை


சித்திரப்படமொன்று[animation movie] பார்த்திடும் நேரம்

இதுபோல் காட்சியை நினைத்துப் பார்க்கின்

இலைகள் விழுவதும் மனிதர் நடப்பதும்

இயக்குநர் ஒருவரின் ஆக்கம் அல்லவோ


நிகழ்ந்திடும் எதனையும் கருத்தினில் கொண்டு

கவனமாய் இயக்கத்தைப் புரிந்துகொண்டு

வருவதைத் தாங்கிடும் மனமிது கொண்டால்

வருத்தங்களில்லா வாழ்வும் அமையும்

வலியச்சென்று வம்புகள் செய்து

அலையும் மனதின் செயல்வழி நடந்திட

வந்திடும் வினைகளோ எந்தம் பொறுப்பு

என்பது புரிந்திட தன்செயல் அடங்கும்


கணக்குகள் வழக்குகள் எமக்குள் வேண்டாம்

பிணக்குகள் பூக்கும் அடுசெயல் வேண்டாம்

நல்லது கெட்டது என்பதும் இல்லை

நடக்கும் யாவையுமோர் கணக்கினில் நிகழும்


நிகழ்வினை நிகழ்த்திடும் இறைவன் அறிவான்

கணக்குகள் என்ன காட்சிகள் எதுவென

இகழ்ச்சியும் புகழ்ச்சியும் அவனுக்கில்லை

மகிழ்ச்சியில் ஆழ்வதன் மர்மமும் இதுவே

இறைசெயல் விளைத்திடும் அமைதியில் ஆழ்ந்து

தன்செயல் என்பதைத் தள்ளியே வைத்து

வருவன யாவையும் ஏற்றிடும் பண்பினை

அவனே அருளிட அவனை வேண்டு


என்றவர் சொல்லி என்னைப் பார்த்தார்

என்ன செய்யணும் இப்போ என்றேன்

ஒன்றும் வேண்டாம் சும்மாயிருப்பாய்

இன்னுமா புரியலை என்றே சிரித்தார்!
*********************************************

Thursday, August 13, 2009

"காட்டில் எரியும் வட்டநிலா!"

"காட்டில் எரியும் வட்டநிலா!"


பனிபொழியும் இரவுநேரம்

பாதையிலாக் காட்டுவனம்
தென்றலொன்றைத் துணையாக்கித்

தனிமரமாய் நடந்திருந்தேன்

ஆருமற்ற காட்டினிலே
வேறுசத்தம் கேட்கவில்லை

பறவைகளும் உறங்கியாச்சு

இரவுமங்கே அடர்ந்தாச்சு


காற்றலையின் சிலுசிலுப்பில்

கனிமரங்கள் இலையசைய
கிளைகளது விரிப்பினிலே
பால்நிலவின் தரிசனம்


முழுநிலவாய் ஒளிர்ந்தங்கு

பால்நிலவாய்ப் பொழிந்திருக்க

பாதைசற்றுத் தெளிவாக

நன்றியுடன் தலைநிமிர்ந்தேன்

நிலவங்கு அழுவதுபோல்

எனக்குள்ளே பிரமைதட்ட

துணுக்குற்று அதைப் பார்த்தேன்

என்மீது சிறுதூறல்


யாருமில்லாக் காட்டினிலே

எவர்க்காகப் பொழிகி்றது

வட்டநிலா வடிவழகைக்
கண்டிடவோ் ஆளில்லை


அழகினையே ரசித்திடவோ

அக்கம்பக்கம் எவருமில்லை

தண்ணொளியைப் பருகிடவோ
எவராலும் இயலவில்லை


தனிக்காட்டில் எரிகின்ற

தங்கநிலா துயரதனை

எவரறிவார் ஏதறிவார்

எவருக்குத்தான் இதுபுரியும்


எரிகின்ற வண்ணநிலா
எத்தனையோ நாட்டினிலே

அவரையெண்ணி மனம் கசிந்தேன்

நலம்வாழப் பிரார்த்தித்தேன்!


எரிகின்ற நிலாக்கள் இனி

வளமாகும் நிலை வேண்டும்

சுவரில்லாச் சித்திரங்கள்
தம்துணையைச் சேரவேண்டும்!


என்மனத்தை அறிந்தவனாய்

மனமுருகன் சிரித்திட்டான்

சுவருண்டு துணையுண்டு

நேரம்வரும் பொறு என்றான்!

ஓம்!ஓம்! என்பதுபோல்

மணியோசை காதில்விழ

பால்நிலாவைத் துணைகொண்டு

வேகமாக நடக்கலானேன்!


முருகனருள் முன்னிற்கும்!


அனைவருக்கும் ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்!



சிந்தாமணியே திருமால்மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம்

தந்து எனையாள் முருகா! தணிகாசலனே!



இதை இன்று 16 முறை சொன்னால் நல்ல பலன் தருவான் மனமுருகன்!
*********************************

Publish Post

Thursday, August 06, 2009

"காட்டுவழிக் காவலன்!"

"காட்டுவழிக் காவலன்!"


பாதை மிகக் கடினம் பக்கதுணை யாருமில்லை
ஆதரவாய்ப் பேசிடவோ அக்கம்பக்கம் யாருமில்லை

காரிருளும் கவிஞ்சாச்சு சூரியனும் மறைஞ்சாச்சு

பறவைகளின் சத்தமெல்லாம் அப்படியே அடங்கியாச்சு

ஆந்தைகள் அலறுவதும் அங்கங்கே கேட்டிருக்கு

மந்தைமாடு அத்தனையும் வீடுவழி போயாச்சு

பாதிவழி வந்திருக்கு மீதிவழி போகணுமே
ஏதுசெய்வேன் யானிங்கே எனவஞ்சி வாடுகையில்

ங்கிருந்தோ வந்தார் என்னப்பா என்றிட்டார்
மங்கிவரும் வேளையிலே செல்வதெங்கே கூறென்றார்

வந்தவனோர் கள்ளனென்று பயத்தாலே கண்மூட

கள்ளனல்ல காவலன்யான் என்னவேணும் சொல்லென்றார்

வழியில்லாக் காடுஇது வந்தவரும் தவறிடுவார்

விழிபார்த்து நடந்தாலும் வழிதப்பிப் போய்விடுவார்

எத்தனையோ பேரிங்கே இன்னமும் அலைந்திருக்க

நீயுமதில் ஒருவனாகப் போய்விடவோ சொல்லென்றார்

நம்பிக்கை மனங்கொண்டு வந்தென்றன் கையைப்பிடி
தும்பிக்கை பகவானின் துணையிருக்கும் பாரென்றார்

காட்டுவழி செல்கையிலே காலநேரம் பார்க்கவேணும்

கூட்டுவார் துணையின்றிச் செல்லுதலும் இயலாதென்றார்
அன்போடு அவர்சொன்ன மொழியங்கே எனைத்தேற்ற

அவர்தந்த கோல்பற்றி அவருடனே நடந்திட்டேன்

வழிதெரிந்த பளிங்கரைப்போல் விறுவிறுவென நடந்திட்டார்

மொழியேதும் பேசாது அவர்பின்னே யான் சென்றேன்

மணித்துளிகள் நினைவில்லை களைப்பெதுவும் தெரியவில்லை

துணிச்சலுடன் அவர்சொன்ன வழியினிலே நான் சென்றேன்

நேரம்சற்றுச் செல்லச்செல்ல வழியெல்லாம் தெளிவாச்சு

தூரம் ஏதும் தெரியாமல் நடைப்பயணம் எளிதாச்சு
வழிகாட்டும் துணையிருக்க வழியினிலே ஏதுபயம்

விழிதிறந்த பின்னாலே காட்சிக்கும் ஏது தடை!

ஒவ்வொருவர் வாழ்வினிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும்

அவரவரை வழிகாட்ட ஒருவரிங்கே வந்திடுவார்

சரியான துணையெதுவென சட்டென்று புரிந்துவிடும்

அறியாமை நீங்கிடவே அவர் எமக்குத் துணையிருப்பார்

நல்லதோர் குருநாதன் வரும்வரையில் காத்திருந்தால்

நம்பிக்கை கைகொண்டு நாமவரைத் தேடிநின்றால்

தானாக வந்திடுவார் தயவுடனே காத்திடுவார்

ஏனென்ற கேள்விக்கெல்லாம் விடையாக அருள்புரிவார்!


"குருவடி சரணம்! குருவே சரணம்!"