Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3
"மனவேடன் காதல்" - 3
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************

[நாளை வரும்!]

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2
"மனவேடன் காதல்"-2
அங்கே!....

'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]