Tuesday, October 07, 2008

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

"இது ஒரு மனிதநேய ஓலம்!"


"நிறுத்துக!"



இலங்கை அரசே.....,
கண்மூடித்தனமாய்க் கொலைகள் செய்வதை....
எண்ணிக்கை பாராமல் இனத்தை அழிப்பதை.....
மண்கேட்ட மனிதரை மண்ணுக்கே அனுப்புவதை.....
புண்பட்ட மக்களைப் பலிகடா ஆக்குவதை.....
கண்ணில் பட்ட எவரையும் புலி எனச் சுடுவதை.....
அப்பாவி மக்களை அடியோடு அழிப்பதை.....
பெற்றவர் கண்ணெதிரே தமிழ்மானம் பறிப்பதை.....
கதறக் கதறக் கழுத்தை அறுப்பதை.....
அமைதிவழி காணாமல் அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதை....
அன்புவழி புத்தன் பெயரால் அக்கிரமங்கள் செய்வதை....!


விடுதலைப் புலிகளே....,
அன்புவழி நிச்சயம் வெல்லும் ஓர்நாள்
என்பதை இன்னமும் நம்ப மறுப்பதை....


அறவழி விடுத்து மறவழி தொடரும்

ஒருநிலை வெல்லும் என நம்புவதை......


இந்திய அரசே...........,
அண்டையில் ஓர் இனப்படுகொலை நிகழ்கையில்
அக்கறையின்றி வாளாவிருப்பதை....
சொந்தத் தமிழர் செத்து மடிகையில்
ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதை
அநீதிகள் சிலபல முன்பு நிகழ்ந்தபோதிலும்
அதை மனதில் கொண்டு இப்போது வேடிக்கைபார்ப்பதை....
அகதிகளாய் வருபவரின் நிலைகண்டும்
அக்கடா என ஒதுங்கி நிற்பதை.....
வல்லரசாய் இருந்து கொண்டும் ஒரு
நல்லரசாய்ச் செயல்படச் சுணங்குவதை....!

விரைவில் நம் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல விடிவு வர எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.

இது ஒரு மனிதநேய ஓலம்!