Thursday, January 11, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]


"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [10]

"தேவராலும், வேறு எவராலும் நெருங்கவும் முடியா
சிவனை, இப்பூவுலகில் வாழ்ந்திடும் அடியவரோ
மிக எளிதில் அடைதலைக் கண்டு, மண்ணுலகின்
வழியாகவே இவரை அடைதல் கூடும்" என உணர்ந்து


பூதலத்தில் பிறக்காமல் நாட்களை வீணாகக்
கழிக்கிறோமே என ஏங்கி, மீண்டும், மீண்டும்
திருமாலும் இப்பூவுலகில் அவதரித்து வருகின்றார்!
நான்முகனும் அவ்வண்ணமே ஆசைப் படுகின்றார்!

[மீனாகவும், ஆமையாகவும்,வராகமாகவும், வாமனனாகவும்,
நரசிம்மமாகவும், பரசுராமனாகவும், இராமனாகவும்,
பலராமனாகவும், கண்ணனாகவும் ஒன்ப்தவதாரம் எடுத்து
பாரிதனில் மீண்டும் மீண்டும் பிறந்தும், பக்தரை உய்வித்தாலும்,
மீண்டும் ஒருமுரை கல்கியாய் அவதரிக்க

எண்ணம் கொண்டிருப்பதும் இதனாலோ! ]

மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!

திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!

அருஞ்சொற்பொருள்:

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.


[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]


"திருச்சிற்றம்பலம்"

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்


மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்


கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்


எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! [9]

[இன்றைய விளக்கம் ஜி.ரா.வுக்காக!]

விண்ணுலகில் வாழ்ந்திடும் தேவர்கள் எவரும்
மன்னவன் உன்னைக் காண விரும்பினாலும்
பூதகணங்களைத் தாண்டி வாயிலை அடைய வேண்டும்!
வாயிலில் காவலிருக்கும் நந்தியை அணுகி
முறையிட வேண்டும் முதலில் அனுமதி கேட்டு!

அவர் சென்று உள்ளே பார்த்து சிவனிருக்கும்
சூழ்நிலை கண்டறிந்து, அவரிடம் விண்ணப்பித்து
பின்னரே உள்ளே செல்ல முடியுமா, முடியாதா
என்பதைத் தீர்மானிக்க முடிந்திடும்!
இப்படி அரியதாகிய மேலான மெய்ப்பொருளே!

அப்படிப்பட்ட நீயோ எங்களை உன் அடிமையாகக்
கொண்டு எங்களை வாழச் செய்திருக்கின்றாய்!
வளமான திருத்தலமாம் திருப்பெருந்துறையினில்
வாகாய் அமர்ந்திருப்பவனே!

எப்படி அமர்ந்திருப்பினும் அடிமைகளாம் எங்களை
எப்போதும் மறவாமல் எங்களின் கண்களுக்குள்ளேயே
நின்று, காணும் பொருள்களில் எல்லாம் உன் வடிவினைக்
காட்டிக் களிப்பினை வழங்கி அருளும் தித்திக்கும் தேனே!

பரந்தாமன் அன்று பாற்கடலில் தோற்றுவித்த
ஆலகால விடத்தை யாரும் தொட அஞ்சியபோது
பரிவுடன் அதனை வாங்கி தன்னுள் செலுத்திய பின்னர்
மீண்டும் அமுதமாய்த் தோன்றியவனே!

நினைத்தாலே நெஞ்சினில் இனிப்பாய் இனிக்கும்
திருவுருவ அழகினை உடைய கரும்பே!

உன்னை விரும்பி அன்பு செய்திடும் அன்பர்கள்
எண்ணங்களில் நீக்கமற நிறைந்தவனே!

இவ்வுலகம் யாவினுள்ளும் உறையும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிராக உள்ளவ்னே!

தீதில்லா எங்கள் பெருமானே!
பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் !

முருகன் அருள் முன்நிற்கும் !!!