Friday, April 13, 2007

அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!


அழகெல்லாம் முருகனே! அருளெல்லாம் குமரனே!

அழகென்றால் குமரனே
அவனழைத்தான் என்னையே
அழைத்ததும் தெரிந்தது
அடுத்தவர் சொல்லித்தான்!

குமரன் அழைப்பு இப்படித்தான் வரும்
ஆரவாரமாக வருவதில்லை
அழைப்பதும் புரிவதில்லை
அறிந்துகொண்டால் அமைதி வரும்

அவனழைப்பை நாடி இங்கு
ஆவலுடன் எதிர்பார்த்து
அனுதினமும் காத்திருத்தல்
அதுவே முதலழகு!

நாம் பிறந்தது நம்மால் அல்ல!நம்மைப் பிறப்பித்தவர் வேறு எவரோ!அவர்கள் மகிழ்வுக்காக ஒரு சில ஆண்டுகள்! அவர்களே தெரிந்தெடுத்தோ, அல்லது நாமே தேர்ந்தெடுத்தோ நமக்கு ஒரு வாழ்வு அமைகிறது. இதுதான் நம் வாழ்வு! இது சிறப்பதும், சிறுப்பதும் இனி என் கையில்! இது சிறக்க என்னால் ஆன அத்தனையும் செய்வது....செய்தது... அடுத்த அழகு!

எனக்குத் தெரிந்தது இந்த ஒரு வாழ்வு மட்டுமே! இந்த உலகம் எனக்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. எனக்காக மட்டுமே!
இதை இப்போது அனுபவிக்கவில்லையென்றால் எப்போது அனுபவிப்பது!
மனதுக்குச் சரியென பட்ட அனைத்தையும், அடுத்தவருக்குக் கூடிய மட்டும் அதிகமாகத் தொந்தரவு கொடுக்காமல், நம்மால் இன்பம் இல்லாவிட்டாலும் துன்பம் வராதபடி பார்த்துக் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்!
பார்க்க முடிந்த மனதுக்கு இதமான அனைத்து இடங்களையும் பார்த்து விட வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படாமல்! கூட வர எவர் விருப்பப்பட்டாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு!
அதில் இருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!
அத்தனை உலகும் வண்ணக் களஞ்சியம்!"

இதுவே மூன்றாம் அழகு!
இதில் இருக்க எனக்கும் ஒரு துளி இடத்தை கொடுத்த சாயி ......!உனக்கு நன்றி!

கண் நிறைந்த மனையாள் அழகு!
கருத்தொருமித்த காதல் அழகு!
களங்கமில்லாக் குழந்தை அழகு!
கைகொடுக்கும் நண்பர் அழகு!
கபடமில்லா உறவழகு!
காலமெல்லாம் இதையளிக்கும்
கந்தனவன் மிக அழகு!
இதுவே என் நான்காம் அழகு!

"அத்தெல்லாம் சர்தாம்ப்பா! நம்மளை விட்டுட்டுட்டியே! கூடமாட எப்பவும் உங்கூட இருக்கறது நாந்தானே! ஒனக்கு எதுனாச்சும் ஒண்ணுன்னா ஒடனே வர்றது ஆரு? ஐயனைக் கூட்டிக்கிட்டு ஒனக்கு ஒதவி பண்றதுக்கு ஓடி வர்றதுக்கு என்னிய வுட்டா ஆரு இங்கே! ஒனக்கு இம்ம்புட்டு எளுதறதுக்கு ஒதவி பண்றது ஒலகத்துலியே மொத மொதலா வந்த தமிழ்தாங்கறத மறந்துறாத! நீயே என்கிட்ட எத்தினி வாட்டி சொல்லியிருக்கே! தமிழும், தமிழ்நாடும்தான் ஒனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு! அதனால கடசியா சொன்னாலும் இதான் ஒனக்கு ரொம்பவும் அழகானதுன்னு ஒன் சார்புல சொல்லிக்கறேன்"
என்கிறான் என் இனிய நண்பன் மயிலை மன்னார்!

ஷைலஜா, அன்புத்தோழி, மற்றும் என் இனிய நண்பர் ............சென்ற முறையே என்னைடம் உரிமையாக அன்புடன் கோபித்துக் கொண்ட...... சதீஷையும் அழைக்கிறேன் ... அழகு பற்றித் தொடர!

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

15 comments:

  1. அழகையே அழககச் சொல்லி விட்டீர்கள் எஸ்.கே சார்.

    இல்லாள் அழகே இனிய அழகு

    பொல்லாத் துன்பம் துரத்திடினும்

    பொறுமை கூடிய வார்த்தை அழகு

    நில்லா இவ்வுலகில் நிலை கொண்டு இருப்பது

    கல்லால் மரத்தடியானின் கருணை.

    ReplyDelete
  2. கோபம் இனிமை அன்பு என்றெல்லாம்
    பெயரிட்டு அழைத்தத்தில் எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா?:):(
    சேச்சே அழகு பற்றி எழுத சொல்லி இருக்கீங்க அழாம சமத்தா நீண்ட நாளா பூட்டியே வச்சிருந்த என் பதிவுல போயி புத்தாண்டும் அதுவுமா தூசி தட்டி எழுத ஆரம்பிக்கறேன் நன்றி விஎஸ்கே !
    ஷைலஜா

    ReplyDelete
  3. அவன் அருள் இல்லாமல் உலகில் வேறென்ன அழகு!

    மிக்க நன்றி, வல்லியம்மா!

    ReplyDelete
  4. உங்க பூ மலர்ந்து ரொம்ப நாளாச்சு!

    அந்த அழகைப் பார்க்கவில்லையே என்ற கோபம்.

    அது அளித்த இனிமை, கொடுத்த அன்பு எல்லாம் சேர்த்துதான் அழைத்திருக்கிறேன்.

    புத்தாண்டில் பூ மலரட்டும்.... அழகாக!

    ReplyDelete
  5. /கைகொடுக்கும் நண்பர் அழகு!
    கபடமில்லா உறவழகு!
    /
    அருமை-ங்க... அய்யா!

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. தென்றல் மீண்டும் இதமாக வீசுவதும் அழகுதான்!

    மிக்க நன்றி!

    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அழகு ஆறு சொல்லிட்டீங்க. ரொம்ப கவுஜ ஆகிடுமோன்னு பயந்துகிட்டே வந்தேன். பரவாயில்லை.

    இன்னிக்கு தமிழ்மணத்தில் தேவை - //கபடமில்லா உறவழகு!//

    அப்புறம் நல்ல முருகன் படம் இருக்கும் அப்படின்னு ஆசையா வந்தேன். கவுத்துட்டீங்க. :(

    ReplyDelete
  8. பலவிதமான வேலைகளை இழுத்து போட்டுகிட்டு எப்பவுமே பிஸியா இருக்கறதால, அழகை ஆரம்பிச்சவருக்கெ நாம் சொல்லச் சொன்னது அஞ்சா, ஆறான்னு மறந்து போனதுல ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கு.!!

    இல்லீங்களா கொத்ஸ்!
    :))
    அழகுக்கு சுந்தரம் என ஒரு பெயர் இருக்கு தெரியுமில்ல!

    சென்னையில் சுந்தரம்னு ஒரு இடம் இருக்குமென்பது தெரியும்தானே!
    :))

    ReplyDelete
  9. சாயி சுந்தரனின் திருவுருவப் படத்துடன் இந்த இடுகை நன்றாக இருக்கிறது எஸ்.கே. ஐயன் அழகை மீண்டும் காணும் வாய்ப்பு இந்த முறை நம் நாட்டிற்குச் செல்லும் போது கிடைக்கும் என்பதே அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்க வைக்கிறது.

    ReplyDelete
  10. சுந்தரத்தை தரிசித்து அழகைப் பருக அவன் அருளுவான்!

    நன்றி குமரன், அழைத்தமைக்கு!

    ReplyDelete
  11. அன்புள்ள எஸ்கே(யார் என்ன சொன்னாலும் நீங்கள் என்றைக்குமே எனக்கு வாலிப எஸ்கேதான். விஎஸ்கே என்றால் வயோதிகமாகத் தெரிகிறது).

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி. விரைவில் அழகைப் பேணி பாதுகாத்து பதிவிடுவேன்.

    ReplyDelete
  12. நான் சொன்னது அழகுகள் ஆறுதான். போனாப் போகட்டும். :)

    ReplyDelete
  13. Very good selections indeed. Thank you for sharing.

    ReplyDelete
  14. 5+1 என நீங்கள் சொன்னதைச் சரியாகக் கவனிக்காதது என் தவறுதான், கொத்ஸ்.

    ரசிப்பிர்கு நன்றி, தலைவி.

    அழகை அழகாய் எழுதுவதாகச் சொன்னதற்கு நன்றி, திரு. சதீஷ்.

    ReplyDelete
  15. எஸ்கே ஐயா,

    வண்ணங்களில் பதிவெழுதி எண்ணங்களைப் பதித்து இருக்கின்றீர்கள்.

    குறிப்பிட்டு சொல்லும் அழகுக்கு என குறை இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் !

    ReplyDelete