Thursday, February 08, 2007

நினைவுகள் இனியவையா?



நினைவுகள் இனியவையா?






இருக்கும் போது எனக்கெனவே
இனிய நினைவு தந்தவளே!
விருப்பமாய் என்னுடன் என்றும்
துணையென வந்தவளே!

நீயில்லா இந்நேரம்
இன்ப நேரம்!

காணுமிடமெங்கும் என்னுடனே
நீக்கமற நிறைந்தவளே!
வாழும் நாள் வரைக்கும்
என் நினைவில் கலந்தவளே!

நீ திரும்பும் நாள்வரைக்கும்
நான் பசியால் வாடுவேன் என
வித விதமாய் செய்து வைத்த
உணவினிலே உனைப் பார்க்கிறேன்!

உன்னன்பை அதில் கண்டு
உணவாறி முன்னறை வந்தால்
தொலைக்காட்சிப் பெட்டியினில்
உன் முகமே தெரியுதடி!

எங்கெங்கு பார்த்திடினும்
உன் முகமே தெரியுதடி
வீம்பாக உனை மறக்க
முயன்றாலும் முடியலைடி!

இருந்தபோதும் எனை நிறைத்தாய்
உன்னன்பால் எனை அணைத்தாய்
விரும்பியுனை நினைக்கின்றேன்
உனையெங்கும் பார்க்கின்றேன்!

போனாலும் இருந்தாலும்
நீயென்றும் என்னவளே!
வாணாள் முடியும்வரை
நீயென்றும் என்னவளே!

ஒரு திங்கள் எனைவிட்டு
போனதற்கே இது போல
மகிழுகிறேன் நானின்று
உனை என்றும் மறவாமல்!

என் நினைவை உன்னுடனே
எடுத்தங்கு சென்றிட்ட
உன் மனதை நானறிவேன்
நானங்கே இருப்பதினால்!

நினைவில்லா மனமிங்கே
களிப்புடனே சிரிக்கிறது!
கனவினிலும் நனவினிலும்
களித்திங்கே வாழ்கிறது!

நினைவுகள் இனியவையா?
நினைவெல்லாம் நனவாக
நிகழ்வெல்லாம் நினைவாக
நிகழ்கையிலே ஏது பிணை?

எல்லாம் சுகமே!

2 comments:

  1. //நினைவுகள் இனியவையா?
    நினைவெல்லாம் நனவாக
    நிகழ்வெல்லாம் நினைவாக
    நிகழ்கையிலே ஏது பிணை?

    எல்லாம் சுகமே! //

    எஸ்கே ஐயா,

    உவமை யற்ற, கலப்படமில்லாத கவிதை புனைய உங்களால் எப்படி முடிகிறது ?

    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது!


    //நீ திரும்பும் நாள்வரைக்கும்
    நான் பசியால் வாடுவேன் என
    வித விதமாய் செய்து வைத்த
    உணவினிலே உனைப் பார்க்கிறேன்!//

    எங்கேனும் ஊருக்குச் சென்றிருக்கிறார்களா?

    ReplyDelete