Tuesday, August 15, 2006

"கண்ணன் பிறந்தான்!"

"கண்ணன் பிறந்தான்!"


வெண்ணை உண்ட கண்ணன் அன்று

அன்னை அவளிடம் "இல்லை" என்றான்

"உன்னை நம்பி ஊழியம் இல்லை!

என்னை ஏய்க்கும் திறனும் வேண்டா!

எங்கே உந்தன் வாயைக் கொஞ்சம்

நன்கே சற்று விரித்துக் காட்டென"

அன்னையவளும் அதட்டும் வேளையில்,

"இன்னே பிறவும் உலகம் காண் பார்!" என

கண்ணன் அவனும் அகல விரித்தான்!

அன்னே! அங்கே அத்தனை உலகும் தெரிந்ததம்மா!

என்னே! இவன் புகழ்! என்னே! இவன் புகழெனவே

அன்னையும் மகிழ்ந்து போற்றி வணங்கினாள்!

பின்னே அவன் பெயர் சொல்லியே நாமும்

மன்னுபிறவியும் தொலைத்திடுவோமே!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


கோவிக்காத கண்ணன் பிறந்தான்!

கோவிக்காமல் என்றும் இருப்பான்!

கீதையோடு சேர்ந்து மகிழ்வான்!

கீதம் நமக்கு இசைத்து வைப்பான்!

கோடிக்கோடி வந்தனம் செய்வோம்!

ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


[பெற்றெடுத்த துளசி தளத்துக்கு நன்றி!]