Friday, August 11, 2006

"உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!]

"உறவுக்குக் கைகொடுப்போம்!"

[தேன்கூடு போட்டிக்கல்ல!]


நல்லதைச் சொல்லுகிறேன்
நானறிந்ததைச் சொல்லுகிறேன்
நலமெனில் கொள்ளுங்கள்
நச்சுப் பேச்சுகள் வேண்டாம்!

நாசவேலைகள் நடத்தி
நாலாயிரம் பேரைக் கொல்வதென
நெஞ்சில் ஈரமில்லா வன்மத்துடன்
நயவஞ்சகத் திட்டம் தீட்டியதை
நேற்று இங்கு முறியடித்தனராம்!

செய்தியைப் படித்ததும் உறைந்து போனேன்
எய்தவன் எங்கோ இருக்க அம்பைக் கொல்வதா என!
ஒன்றுமறியா அப்பாவிகளை ஒரேயடியாய் கொல்வதா?
என்ன ஒரு வன்மம் இப்பாவிகள் நெஞ்சிலென்று!

மேலும் செய்தியைப் படிக்கலானேன்!
கண்கள் மகிழ்வாலும், வியப்பாலும் விரிந்தன!
பிடித்துக் கொடுக்க உதவியர் நம் அண்டை நாட்டவர்!
யாரை இங்கு வாய்க்கு வந்தபடி ஏசித் திரிகிறோமோ
யாரால் வன்முறை வளர்க்கப் படுகிறது என நம்புகிறோமோ
அந்த அரசுதான், பாகிஸ்தானிய அரசுதான்
இந்தப் பாதகர்களைப் பிடித்திட உதவியதாம்!

மானுடத்தின் மேலுள்ள நம்பிக்கை இன்னும் இறுகியது!
மதங்களைத் தாண்டி மனிதரும் இருக்கிறார்
என்கின்ற உண்மையும் அப்போதே வலுப்பட்டது!
நானறிந்த நல்ல நண்பர்கள்- இஸ்லாமிய நண்பர்கள்
நாள்தோறும் என்னிடம் சொல்லிவந்த மெய்யுணர்வும் புரிந்தது!

'எங்கள் மதம் வன்முறை மதமல்ல!

வன்முறையால் சாதியுங்களென குரானில் சொல்லப்படவில்லை!

மதிகெட்ட சிலபேரின் முறையற்ற செயல்களுக்கு

தினம் தினம் சாகிறோம்,.......

உயிராலும், உள்ளத்தாலும்!

இஸ்லாம் அமைதியையே விரும்புகிறது!

எங்களில் சிலர் இவருக்குத் துணைபோகும்

அவலமெமை அன்றாடம் வாட்டுகிறது'
என

அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்தமாயின!

மனமகிழ்கிறோம் என் நண்பனே!
பாகிஸ்தானிய சகோதரனே!
மனமார்ந்த நன்றி உனக்கு!
இதோ நாங்கள் கை கொடுக்கிறோம்!
வா! இருவரும் சேர்ந்து
வன்முறையில்லா புத்துலகம் படைப்போம்!

வலைப்பூவில் விஷம் தூவும்
இந்து-இஸ்லாமிய நண்பர்களே!
இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்!
பழிக்குப் பழியென, பதிவுக்குப் பதிவு என
பதிவெழுதிப் பகைக்க வேண்டாம்!
அன்பை வளர்க்க முயலுங்கள்!

மதங்களை மீறியது அன்பு!
உணர்வுகளை மீறியது உறவு!


"உறவுக்குக் கைகொடுப்போம்!
உணர்வுகளைக் கட்டி வைப்போம்!"


இன்னுமொரு பொங்கல் வாழ்த்தெனவே
பாலாவும் சொல்லட்டும் பாஸ்டனிலிருந்து!
போட்டிக்கு அனுப்ப இல்லை இது!
உள்ளதைச் சொல்ல என்றுமே நடுக்கமில்லை!


[பி.கு.: இது தேன்கூடு போட்டிக்கல்ல!]
இதைப் படிப்பவர் அனைவரும் உடனே தங்கள் பதிவில் ஒரு "பாகிஸ்தானுக்கு நன்றி"பதிவு போட்டு தமிழ்மணத்தின் முகப்பு முழுதும் ஒருநாள் முழுதும் நிரப்பச் செய்தால் மிகவும் மகிழ்வேன்!