Friday, June 09, 2006

//நீ எனக்குச் சொல்//

//நீ எனக்குச் சொல்//



உன்னுடன் இருந்த நேரங்களை
நினைத்திங்கே பார்க்கையிலே
ஒன்றெனக்குப் புரிந்தது!
நீ ஒரு யானை!!

ஆம்!
உருவத்தைக் காட்டிப்
பழிக்கிறேனெனச் சொல்லாதே!
உனக்கே தெரியும்
நீ பிடியல்ல, கொடியென்று!

இருப்பினும் உன்னை
யானையெனச் சொன்னதுவும்
ஏனென்று கேட்கிறாயா?
சொல்லுவேன் கேள்!

உன்னுடன் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

உனைப் பிரிந்து
உன்நினைவைச் சுவைக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

இப்போது சொல்!
நீயும்,யானையும்
ஒன்றன்றோ!!

இருந்தாலும்
ஆயிரம் பொன்!
மறைந்தாலும்
ஆயிரம் பொன்!

நீ உணர்வதும்
அதுதானே!!
நீ எனக்குச் சொல்!